Pages

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, July 14, 2020

புறநானூறு-281, 296: நோய் தீர தனிமைப்படுத்தல்(Quarantining in Sangam Period)

Image may contain: food


பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும்.


தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவன்.

மண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான்.

உடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும்? மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு.

மாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கி பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத்திலும் திமிர் இருக்க வேண்டும். ஆயினும் போர் முடிந்த பின்னர் கொடுமையாக புண்பட்ட உடல் வாடி வருந்தத்தானே செய்யும்!

அரசனைக் காப்பாற்றிய தலைவன், வீட்டில், உடல் வருத்தம் போக்கும் மருத்துவத்தில் இருக்கிறான். அவனைக்காண, பாடலை எழுதிய பெரும்புலவர் அரிசில் கிழார் வருகிறார். அரசன் பார்த்து வரச்சொன்னானோ தெரியவில்லை.

தலைவனின் மனைவி, தனது இல்லத்தின் இன்னொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது.

ஆழமான புண்கள். மருந்து போட்டிருக்கேன். ஆறவேண்டும்னா வெளியேயிருந்து தொற்று ஏதும் வந்துவிடக்கூடாது. நாமும் வெளியே போய் தொற்றிக் கொண்டு வரக்கூடாது.

வாசலின், இறவாணத்தில் வேப்ப இலைகளோடு, இரவந்தழைகளைச் செருகி வைக்கலாம். அவை வருவோருக்கு உள்ளே வரவேண்டாம் என்று செய்தியைச் சொல்லிவிடும். பேய் போன்ற வெருவிகள் (virus), பிறகிருமிகள் உள்ளே நுழையவும் விடாது.

மையென அரைத்த சாந்தினை வீட்டின் உள்ளே சுற்றி பூசிவிடுவோம். எறும்பு போன்றன ஊர்ந்து வந்து தலைவனின் புண்ணைத் தீண்டா.

தலைவனின் படுக்கையைச்சுற்றி வெண்கடுகை (ஐயவி) தூவி வைப்போம். அதைத்தாண்டி எந்தக் கிருமியும், பூச்சியும் பேயெனப் போக முடியாது.

இந்தப் பெரிய வீடு முழுதும், வெருவி போன்ற தொற்றுகளைக் (Infections) கடிந்து விரட்டுகிற/கொல்கின்ற மூலிகைப்பண்டங்களை இட்டு நறுமணப்புகை வீசச்செய்வோம் (கடிநறை).

இவை அவனின் உடலைக் காக்கும்.

கூடவே, பிள்ளைகளை விட்டு ஆம்பல் குழல்களை ஊதச்செய்வோம்! (அல்லிமலர்த் தண்டு, குழல் போல இருக்கும். அதை ஊதினால் ஓசை வரும்) பிள்ளைகள் ஊதும்போது வீடும் கலகலப்பாக இருக்கும், தலைவனின் மனதிற்கும் இதமாக இருக்கும்.

விரைவில் புண்கள் ஆறவேண்டும் என்றும், நோய்த்தொற்று புண்களைத் தீண்டி புரையோட விடக்கூடாது என்று வேண்டி, காஞ்சிப் பண் கூட்டிய பாடல்களைப் பாடுவோம்; ஒலிக்கும் மணியை அடிப்போம். பின்னர், ஆங்கு, கோட்டுயாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து இனிமையான இசையால் இல்லத்தை நிறைப்போம்.

தலைவனின் உடலில் உள்ள புண்களை மருந்தால் ஆற்றுவோம். மனதிற்கு, பாடலும் இசையும் கலகலப்பும் மருந்தாகட்டும்.

என்று அனைத்து முறைகளையும், தன் இல்லப்பெண்டிர் ஒருத்தியிடம் தலைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட புலவரான அரிசில் கிழார், "தலைவனின் வீட்டுக்குள் செல்ல வேண்டாம், சென்று மருத்துவத்திற்கு இடர் தரவேண்டாம்" என்று எண்ணி, திரும்பிப் போய்விட்டார்.

போனவர் தலைவி பேசிக்கொண்டிருந்ததை பாட்டாக எழுதி அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனாரோ என்னவோ! அரசக்குடி, அரசனின் உயிரைக் காத்த தலைவனைப் பற்றிய அந்தப்பாடலை வழிவழியாய்க் காப்பாற்றி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் நமக்கும் படிக்கத் தந்திருக்கிறது.

கொரொனா வெருவியால் உலகமே தனிப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையிலும், வேம்பைச் செருகி, வேம்புமஞ்சள் நீரில் கழுவி, நாற்புலன்களை கட்டி, வீட்டையும் பொருள்களையும் தம்மையும் தூய்மையாக்கிக் கொண்டு தனித்திருக்கும் இதே காட்சியை சங்க காலத்திலும் காணமுடிகிறது.

தனிமைப்படுத்தல் என்பதற்கு நமது தொன்மையான வாழ்வியலிலேயே இலக்கணம் உண்டு. அதைத்தான் புறம்-281ம், 296ம் சொல்கின்றன.

அதன் தொடர்ச்சியை அம்மை வார்த்த இல்லத்தில் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது தமிழ்க்குமுகம். வேம்பு, மஞ்சள், தூய்மை, கூழுணவு, மோர் போன்றவற்றோடு, மன வலுவிற்கு மாரியம்மன் தாலாட்டைப் பாடுவதுதான் தனிமைப்படுத்தப்பட்ட அம்மை மருத்துவம்.

வெண்கடுகை அகிலோடு கலந்து இல்லம் முழுதும் புகைக்க வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலேயே இன்றும் உண்டு.

காஞ்சித் திணையில், அரிசில் கிழாரின் 281ஆம் பாட்டு என்ன துறை தெரியுமா? தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன? பேய்/வெருவி ஒருத்தரை தொடாதிருக்க, தீண்டாதிருக்க, தனிமையில் இருக்க, Quarantine-ல் இருக்க ஒரு பாட்டுத்துறையே இருக்கிறதென்றால், தமிழ்க் குமுகத்தின் தொன்மத்தை அளக்க முடிந்தால் அளந்து கொள்ளுங்கள்!

புறம்-296ஐப் பற்றி விளக்கப்போவதில்லை. தொடர்பிருப்பதால், தொட்டுக்காட்டுகிறேன்.

வாகைத்திணையில் ஏறாண்முல்லைத்துறையில் பாடிய பாட்டில்,
"வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்று அவ்வே......"

"போரில் இருந்து திரும்பிய புண்பட்ட வீரர்களின் வீட்டிலெல்லாம் வேப்பந்தழையை பறிக்கவும், வெண்கடுகை இட்டு புகைக்கவும் (அகில்/சாம்பிரானி மாதிரி), காஞ்சிப்பண்னைப் பாடவுமாக இருக்கிறார்கள்; பேய்/நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க" என்பது அந்த மூன்று வரிகளின் பொருள்.

ஐயவி என்ற வெண்கடுகை, அகில் என்ற சாம்பிரானியுடன் (வேண்டுமானால் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து) வீட்டில் புகைப்பது கண்ணுக்குத் தெரியா வெருவிகள், கிருமிகள் போன்றவற்றிருந்து நமது உடலையும் மனதையும் பாதுகாக்கும் அருமருந்தென்று புறநானூறு சொல்லித்தருகிறது.

பாடல்: புறம்-281
பாடியவர்: அரிசில் கிழார் (காஞ்சித்திணை, தொடாக்காஞ்சித்துறை)
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

பொருள்:
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ = இனிமையான கனிகளைத் தரும் இரவமரத்தின் இலைகளோடு, வேப்பந் தழைகளையும் சேர்த்து வாசலில் இறவாணத்தில் செருகி.
யாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க = ஆங்கு, கோட்டு யாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து.
ஐயவி = வெண்கடுகு
கைபய = மெதுவாக கையை பெயர்த்து
மையிழுது = மை போன்ற சாந்து
இசைமணி = பூசை செய்யும் போது அடிக்கின்ற மணி போன்றது
காஞ்சி பாடி = காஞ்சிப்பண் கூட்டிய பாட்டைப் பாடி
நெடுநகர் = பெரிய வீடு
கடிநறை = நோய்விரட்டும் நறுமண புகை தரும் பொருள்
காக்கம் வம்மோ = காப்பாற்றலாம் வாம்மா
வேந்து உறு விழுமம் தாங்கிய = அரசனுக்கு ஏற்பட்ட இன்னலைத் தாங்கிய
பூம்பொறிக்கழல் = உயர்ந்த பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கழல்
நெடுந்தகை = உயர்ந்த வீரன்

அன்புடன்
நாக.இளங்கோவன்
11/சூலை/2020

புறநானூறு-263: வண்டு மேம்படூஉம்

Image may contain: one or more people, sky and outdoor



ஊருக்கு அவன் தலைவன். அறத்திலும் மறத்திலும் சிறந்தவன் அப்பொழுதெல்லாம் தலைவனாக இருக்க முடிந்தது. ஊரையும், சான்றோர் பலரையும் சிறப்பாக பேணி, புரந்து, காத்து வந்ததால் அவன் தலைவன். முல்லை நிலத்து ஊர் என்றால் காடுகள் சுற்றியிருக்கத்தானே செய்யும்!




மேளம், தவில், உடுக்கு, பறை உள்ளிட்ட முழவுக்கருவிகளில் பறை மட்டும் ஒரு வகையில் மாறுபடும். பறைக்கு ஒருபக்கம் மட்டுமே கண் இருக்கும். மறுபக்கம் வெற்றாக இருக்கும். பெரிய களிற்றின், அதாவது பெரிய ஆண் யானை, தனது பாதத்தைப் பதித்தால் வட்டம் வருமே, அதுதான் அந்தப்பறையின் அளவு. "பெருங் களிற்று அடியில் தோன்றும் ஒருகண் இரும் பறை" என்று இந்தப்பாடலாசிரியர் பறைக்கு அளவு கூறுவது வியக்கத்தக்கது.

அந்த ஒரு கண் பறையை, ஏந்திக்கொண்டு ஒருவன், காட்டுவழியே தலைவனைக் காண நடந்து வருகிறான். அவன் பாணனாக இருக்கக்கூடும். இரவலன் அவன். இரவலன் என்றால் இரந்துண்ண வருபவன் என்பது மட்டும் பொருளல்ல. ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைக் கொள்பவனும் இரவலனே. காட்டு வழியே வருவதால், விலங்குகளை பறையை முழக்கி விரட்டுவதற்காக, பாதுகாப்பிற்காக அதை ஏந்தி வருகிறான்.

ஊரை நோக்கி அவன் வருகையில்ம் பசுமையிழ்ந்த அந்தக்காட்டின் பாதையில், ஊரை விட்டு வெளிப்போகும் சான்றோராகிய இந்தப் பாடலின் ஆசிரியர் வருகிறார். இருவரும் சந்திக்கிறார்.

பாணன் கேட்கிறான்; "தலைவன் இருக்கிறானா? பார்க்கப் போகிறேன்"

சான்றோர் சற்றே தயங்குகிறார். பின்பு கூறுகிறார்:

சின்னாள் முன்னர், ஊரின் கால்நடைகளை எல்லாம் அயலூரார் வெட்சிப்போர் செய்து கவர்ந்து போயினர். மக்களின் கவலை தீர்க்க, இழப்பை நீக்க, தலைவன் கரந்தைப் படை திரட்டி ஆநிரை மீட்கச் சென்றான். கடுமையாக போரிட்டு ஆனிரையை (பசு உள்ளிட்ட கால்நடைகள்) மீட்டும் விட்டது படை. மீட்ட ஆனிரையை ஓட்டிக்கொண்டு வருகையில், வெட்சிப்படையினர் மீண்டும் திரண்டு வந்து கடுமையாக தாக்கினர்.

ஆனிரையைக் காக்கும்பொருட்டு கூடவந்த மறவர்களை முன்னால் ஆனிரையை ஓட்டிச் செல்லவைத்து, அவர்களுக்கெல்லாம் காவலாய் தலைவன் மட்டும் வெட்சிப்படையோடு போரிட்டான்.

கடுமையான போர். அவன்மேல் விழுந்த அம்புமழையில் மூழ்கினான்.
ஆயினும் பகைவரால் அவனைத்தாண்டி மீண்டும் ஆனிரையை கைப்பற்ற முடியவில்லை. வீரரொடு ஆனிரை மீண்டு ஊர் சேர்ந்தது. தலைவன் மட்டும் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தான்.

ஊரே துயரத்தில் மூழ்கியிருக்கிறது.

இன்றுதான், அவன் நினைவாக நடுகல் ஊன்றி, அதற்கு இறகுகள் சூட்டி, அவன் பெயர் பொறித்து, சான்றோரொடு ஊர்கூடி அவனை வழிபட்டு மரியாதை செய்துவிட்டு எனது ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்.

பாணனின் முகம் துயர் பட்டது.

கவனித்த சான்றோன், இதைக்கேட்ட பின்னும் நீ அவ்வூரைச் சென்று சேர்வாய் எனில், தலைவனுக்காய் சமைத்த நடுகல்லை வழிபடாமல் இருக்காதே. அவனை வழிபட்டால் இம்மண்ணில் வண்டு மேம்படும்!

சான்றோர் அறிவுரை கூறியதும் இருவரும் தம்வழியே சென்றனர்.

அது என்ன வண்டு மேம்படும்?

நடுகல்லாக நிற்கின்ற தலைவனை வழிபட்டால், இம்மண்ணில் மழை பெய்யும். மழைபெய்தால், பசுமை இழந்த இம்மண்ணில் செடி கொடி மரங்கள் துளிர்க்கும். துளிர்த்தவையெல்லாம் பூக்கும். மகரந்தங்களை தேனீக்கள் சேர்த்து வைக்கும். காடுகள் பசுமையாகி காய்க்கும், கனியும். மண்ணில் பூச்சி புழுக்கள் உயிர்பெறும். பயிர் வளம் செழிக்கும். பறவைகள் பெருகும். உணவுச்சங்கலி உயிர் பெறும். மக்களின் பசி தீரும்.

பூச்சி, புழு, தேனீ, வண்டு, பறவைகள் யாவையும் இங்கே வண்டு என்ற ஒற்றைச்சொல்லில் அடைபெற்றன. இவை மேம்படும் என்றால் நிலம் செழித்தது என்று பொருள்.

அட, இதைத்தானே நம்மாழ்வார் என்ற நமது கண்முன் வாழ்ந்த சான்றோரும் கூறினார்.

இரசாயன நஞ்சான உரம், பூச்சிக்கொல்லி, வளர்ச்சி ஊக்கி, உச்ச நஞ்சான களைக்கொல்லி என்ற இவற்றை மண்ணில் கொட்டியதால், மண் செத்தது. மண் செத்தது என்றால் நன்மை செய்யும் வண்டு, பூச்சி புழுக்கள் செத்தன என்று பொருள். பூச்சி புழுக்கள் செத்தன என்றால் காய், கனிகள் செத்தன என்று பொருள். காய், கனிகள் செத்தன என்றால் பறவைகள் செத்தன என்று பொருள். பறவைகள் செத்தன என்றால் உணவுச்சங்கிலி அறுந்தது என்று பொருள்.

நம்மாழ்வார் 30 ஆண்டுகளாக இந்த மண் முழுக்க அலைந்து திரிந்து சொன்னது எல்லாம், "வண்டு மேம்படூஉம்" என்று, 2000-2500 ஆண்டுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்க்குமுகத்தின், இயற்கை சார்ந்த வாழ்வியல் சிந்தனை மரபுதானே!

இப்பொழுது நம்மாழ்வாரின் இந்த விழியத்தை கேட்டுப்பாருங்கள்.

https://m.youtube.com/watch?v=xehvMPJfQ30

இந்தச் சான்றோரான நம்மாழ்வார்தான் சங்கச்சான்றோரா, அல்லது அந்தச் சான்றோர்தான் இந்த நம்மாழ்வாரா? வேறுபாடு தெரியவில்லை.

இந்த மண்ணின் இயற்கையை, சூழலை, வேளாண்மையைப் பேணுகின்ற தொன்மையான சிந்தனை மரபு, அறிவர் மரபு துளிகூட அற்றுப்போகவில்லை அல்லவா?

ஆனால் செயல் மரபு?

புறம்-263: பாடலாசிரியர்: தெரியவில்லை
திணை: கரந்தை, துறை: கையறுநிலை
மூலம்:
"பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே."

சீர்பிரித்து:
பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉம் இவ் அறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பொருள்:
"பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒரு கண் இரும் பறை" = பெரிய ஆண் யானையின் பாதச்சுவடளவுள்ள வட்டத்தை/கண்ணை உடைய பறை.
"இரவல சேறியாயின்" = இரவலனே, மேலும் நீ அவ்வூர் சென்று சேர்வாயெனில்
"தொழாதனை கழிதல் ஓம்புமதி" = தொழாமையைக் கழிதலை ஓம்புவாயாக (தொழுவாய் என்று சொன்னது).
"திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து" = ஆனிரை கொள்ளை போக, அதனை மீட்டு வந்து.
"கல்லா விளையர் நீங்க நீங்கான்" = கூட வந்த போர்மறவர் நீங்கினும் தான் பின்னால் நின்று நீங்காமல் நின்று போரிட்டான்.
"வில் உமிழ் கடுங்கணை மூழ்க" = விற்கள் உமிழ்ந்த எண்ணற்ற அம்புகளில் மூழ்கினான்.
"கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே" = இன்று நடுகல்லாய் நிற்கும் தலைவன், போர்க்களத்திலே, பாய்ந்து வரும் வெள்ளம் போல வந்த பகையை தனியொருவனாய் அடைத்து நின்றான். வெற்றிக்கு காரணமானான்.

பாடலாசிரியரின் பெயரை அறியமுடியவில்லை என்றால், பாட்டின் ஓரிரு சொற்களைச் சேர்த்து பாடலாசிரியரின் பெயர்க்குறிப்பாக சொல்வர். என்னால், அப்படியொரு குறிப்பை இப்பாட்டுக்கு காணமுடியவில்லை.

வண்டு மேம்பாட்டினர் என்று சொன்னால் பொருத்தம்தானே!

அன்புடன்
நாக.இளங்கோவன்

புறநானூறு-243 - இளமை நிலையாமை

Image may contain: one or more people



நான் சிறுவனாக இருந்த அந்த இளமைக்காலம் மிக இனிமையானது. மண்ணெடுத்து நீர்சேர்த்து திண்ணியதாய்க் குழைத்து அழகழகான பெண் பொம்மைகள் செய்வேன். ஓடிப்போய் பூக்கொய்து, தொடுத்த சரமாயும், தனிப்பூவாயும் பாவைக்கு சூடி அழகு பார்ப்பேன். பாவையின் அழகு என்னை ஈர்க்கும். அது என்னோடு பேசியதும் புன்னகைத்ததும் எனக்கு மட்டுமே புரியும்.

நீராட, கூட்டமாகப் போவோம். எனது தோழச் சிறுமிகள் என்னோடு கைகோர்த்து, குளிர்ச்சியான குளத்தில் ஆடிய காலத்தில் எங்களுக்கு பால் வேறுபாடே தெரியாது. அன்பும் களிப்பும் மிகுந்து, தூய நீரைப்போல தூய்மையா யிருந்தது. அந்தச் சிறுமிகள் என்னைத் தழுவிய போது தழுவி, அவர்களோடு போட்ட ஆட்டமும் பாட்டமும், கத்தலும், கூவலும், தண்ணீரில் வீழ்ந்த போது ஒருவரோடு ஒருவர் வீழ்ந்து எழுந்த பூரிப்பும் அளவிட முடியாதது.

குளத்தங்கரையில் பழைய மருத மரம். அதன் கிளைகளில் ஒன்று குளத்து நீரை காதலித்தோ என்னவோ, குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து நீண்டு திரண்டு கிடக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தையே கல்லாத, அறியாத என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அதில் ஏறி நடந்து ஆழமான இடத்திலே, பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச் சிதறுமாறு, பொத்தென்று குதித்து அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே காட்டும் போது அடைந்த களிப்பிற்கு இணையாய் ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

கள்ளமிலா நட்பும், மகிழ்ச்சியும், கல்வி கற்றிராத அந்த இளமையின் இயற்கை எனக்குத் தந்த கொடை; அஃது வாழ்வில் என்றைக்கும் திரும்பியதே இல்லை. தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த நீண்ட தண்டை ஊன்றி நடுங்கிக்கொண்டே நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது. எனது முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன். ஆயினும் அவரின் கண்களில் துயரம் இல்லை.

இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?

புறநானூறு-243, பாடியவர் பெயரில்லை.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

முதுமையின் இயலாமையில் சங்கப்புலவர் ஒருவர் பாடிய பாடல் இஃது. நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்த, உதிர்த்த புறநானூற்றுப் பாடல்வரிகள் இவை. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை என்ற நிலையாமை தத்துவத்தை திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலே தேடும் நமக்கு புறப்பாடலிலும் படிக்க முடிவது ஆதித் தமிழுலகின் தத்துவ வாழ்விற்குச் சான்று. பொதுவியல் திணையில், கையறு நிலை துறைப்பாட்டு.

பாடியவர் பெயர் கிட்டவில்லை ஆதலால், இப்பாடலாசிரியரை, அவரின் பாடல்வரியில் உள்ள சொற்றொடரை வைத்து "தொடித்தலை விழுத்தண்டினார்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

பொருள்:
திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

அன்புடன்
நாக.இளங்கோவன்

==============================================

Friday, February 23, 2018

"அய்" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.

கமலகாசன் கட்சி தொடங்கியவுடன் கய்-மய்-தமிழில் கட்சிப்பெயர் வைத்து தமிழைத்தான் எடுத்தவுடன் படுகொலைசெய்துள்ளார். முகநூலில் எழுதும் முக்கால்வாசி அப்பாவித்தமிழ்மக்கள் அனைவரும் அந்தக்கேட்டை கண்டித்துவிட்டனர். ஆனாலும், தமிழக அரசு, தமிழக தமிழ்ச்சங்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள், வெளிநாட்டு தமிழ்ச்சங்கங்கள், தமிழ்வளர்ச்சித்துறை, அரசியற்கட்சிகள் என்ற யாரும் இந்த தமிழ்க்கேட்டை கண்டுகொள்ளவில்லை. இவர்களுக்கும் தமிழுக்கும் எப்பொழுதும் தொடர்பிருந்ததில்லை என்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.


1) மய்யம் என்பது ஏன் பிழையாகிறது.?

அ) கொஞ்சம் அறியை என்ற சொல்லை காண்போம்.

"நீயே அறியை சாலவெம் பெரும" என்று 11-ஆம் திருமுறையில் நான்மணிமாலை சொல்லும் .

"நீ அறியையோ?" என்று ஏரக நவரத்தினமாலை சொல்லும். அழகான சொல்லாட்சி.

கய்-மய் தமிழில் எழுதினால் "நீ அறியய்யோ?" என்று வரும். மை = மய் என்றால், யை = யய் அல்லவா!

மணி + அழகு = மணியழகு. இகரமும் அகரமும் என இரண்டு உயிர் சேர்ந்து வருவதால், யகர உடம்படுமெய் பெற்று மணியழகு என்றாகிறது என்பர் புலவர்.

அதேபோல, அறி + அய்யோ = அறியய்யோ (யகர உடம்படுமெய்) என ஆகி
அடியோடு பொருள் மாறிவிடுவதை காண்க.

ஆ) அதேபோல, சாரியை என்ற சொல்லை அனைவரும் அறிவோம்.

சந்தியா சாரியையா? என்று பகுபத இலக்கணத்தில் கேள்விகள் எழும்.
அது "சந்தியா சாரியய்யா?" என்று ஆகி சொல், பொருள் என்ற இரண்டுமே சிதைந்து போவதை காண்க.

இ) கழுதையை அறியாதவர் உண்டோ?

இது கழுதையோ! என்று இனிமேல் வியக்க முடியாது. ஏன் தெரியுமா?
கய்-மய் தமிழின் கொடுமையால், கழுதையோ என்ற சொல், கழுதய்யோ என்று மாறி, கழுது + அய்யோ என்று பிரியும். சரி தெரிந்த கழுதைதானே என்று நினைக்காதீர்கள். கழுது என்றால் பேய் என்ற பொருளுண்டு. (கழுகொடு கழுதாட என்று அருணகிரிநாதர் முத்தைத்தரு.... .பாடலில் சொல்வார்).

கய்-மய் தமிழ் கழுதையை கழுதாக, பேயாக மாற்றிவிடுவது பொருட்சிதைவல்லவா?

ஈ) பத்தன், பத்தை (பக்தர், பக்தை) - "பத்தையா வந்தாள்?" என்று கேள்வி கேட்டுவிட முடியாது. பத்தையா = பத்தய்யா! பத்தய்யா வந்தாள்? பத்து அய்யாக்கள் வந்தாள் என்று ஆகி, பொருள், திணை என்ற எல்லாமே வழுவுகின்றன.

உ) அதேபோல. "கோழி வாங்கலையா! மீனையா வாங்கினாய்?" என்று எழுதிவிட முடியாது. மீனையா = மீனய்யா! "மீனய்யா வாங்கினாய்" என்று ஆகி எந்த மொழி என்றே தெரியாமல் போகும்.

ஊ) "இது உன் தங்கையா?" என்று கேட்க முடியாது. ஏனென்றால் கய்-மய்-தமிழ்,

"இது உன் தங்கய்யா?" என்று மாற்றிவிடும். தங்கச்சியை, தங்க அய்யாவாக மாற்றிவிடும் எண்னற்ற கொடுமைகள்தான் கய்-மய்-தமிழ். சொல், பொருள், தினை, தொடர், பகுபத உறுப்பிலக்கணம், மாத்திரை, யாப்பு என்ற அனைத்தையும் வகைதொகை இல்லாமல் சிதைக்கிற வழக்கை கண்டுகொள்ளாமல் கேலியும் கிண்டலுமாய் பொழுதுகள் கழிகின்றன.

2) மய்யம் என்ற சொல்லை தவறு என்று சொல்ல ஏன் நா தடுக்கவேண்டும்? அந்த தடுமாற்றத்தை மறைக்க மையம் என்ற சொல்லே தமிழ் இல்லை - அது வடமொழி என்று உதறித்தள்ளும் பொறுப்பற்ற தன்மையை என்ன சொல்ல?!

தன்மை, தண்மை, வன்மை, மென்மை என்று எத்தனை சொற்களில் மை விகுதியாக வருகிறது. மை என்பதே தனிச்சொல்தானே? மை + அம் என்று அம் விகுதி பெற்றுவிட்டால் உடனே அது வடமொழியாகிவிடுமா?
இருக்கும் தமிழ்ச்சொல்லை எல்லாம் வடமொழி வடமொழி என்று தள்ளிவிடுவது தமிழர்களா? அல்லது வடவரா? அச்சு + அம் = அச்சம் என்பது வடமொழியா? ஐயம் என்பது வடமொழியா? தமிழம் என்பது வடமொழியா?

சிந்திக்க வேண்டாமா? நமது பொறுப்பற்ற போக்குக்கு ஒரு வரம்பு வேண்டாமா?

3) மய்யம் என்று ஏதோ எழுதிவிட்டார். இதனால் என்ன இப்ப கெட்டுப்போயிடுச்சி! இதுக்கு போய் எல்லாரும் ஏன் தவிக்கிறீங்க? - இப்படிச்சிலர்.

அ) மய்யம் என்ற சொல்லை இன்று உலகில் உள்ள 8 கோடித்தமிழரும் படித்துவிட்டனர். இனி அந்தக்கட்சியை அப்படித்தான் எழுதுவர்.

ஆ) இருபது முப்பது ஏடுகளும் அப்படித்தான் நாடோறும் எழுதும். அவர்களை பொறுத்தவரை கமலகாசனால் நாலுபேர் அதிகமாக வாங்கிப்படித்தால் வரும்படி கூடும். அவ்வளவுதான்.

இ) இருபத்தைந்து தொலைக்காட்சிகளும் அப்படி எழுதியே படங்காட்டி விட்டனர். அவர்களுக்கும் நல்ல தமிழுக்கும் தொடர்பே இருந்ததில்லை.

ஈ) சட்டப்படி கட்சிப்பெயர் பதிவாகிவிட்டது. தவறான தமிழ் சட்டமாகி அதற்கு மக்களை வாக்குப்போடவைப்பதும் பேசவைப்பதும் வல்லாண்மையன்றி வேறென்ன? ஒரு தவறான செயல், தவறான தமிழை உருவாக்கி, ஒரு 8 கோடிப்பேர் கொண்ட குடியை பயன்படுத்த வைக்கிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

கமலகாசன் தமிழறிஞர் இல்லை. அவர் செய்த தவற்றினை சுட்டிக்காட்ட வேண்டியது தமிழ் அறிவுலகிலன் கடமையல்லவா?

4) ஐ-க்கு அய்-போலியா?

இதுபற்றிய நல்ல உரையாடலை http://www.wetamizh.com/archives/1752 என்ற பதிவில் எழிலன் எழுதியுள்ளார். அதைக்காண்க.

மேலும்:

"அகர இகர ஐகாரம் ஆகும்" -- தொல்காப்பியம், மொழிமரபு-21

ஐ-என்ற கூட்டெழுத்தின் (dypthong) தோற்றத்தை கூறுகிறார் தொல்காப்பியர். ஐகாரம் இப்படி உருவாவதொடு, தமிழுக்கு தனிச்சொல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை தருவதை அறிவோம். (எனது முந்தைய மடலை காண்க). இங்கே ஐ-யை குறிலா நெடிலா என்ற ஒலி-வகைப்படுத்தாமை காணத்தக்கது. அஇ எனும் ஓசை முழு நெடிலாக எப்படி இருக்க முடியும்? ஒருவேளை ஐ குறுகியும் ஒலிக்கும் என்று சொல்ல வந்தாரா தொல்காப்பியர் என்பது தெரியவில்லை.

மய்யம் என்று எழுதிவிட்டு, மை-க்கு போலி மய் என்று சொன்னால் எப்படி?

தொல்காப்பியர் வழி பார்த்தால், மை = மஇ என்றோ, மை=மஇய் என்றுதானே இருக்கிறது. அப்படியென்றால், மையம் என்பதை மஇயம் என்றோ, மஇய்யம் என்றோதானே எழுதவேண்டும்?

மேலும்:

தமிழில் போலி இலக்கணம் என்ன சொல்கிறது?

5 வகையான போலிகளை சுட்டிக்காட்டுகிறது.

அ) முதற்போலி -- பசல் = பைசல் -- அகரம்(ப) ஐகாரமாக(பை) மாறுகிறது.
ஆ) இடைப்போலி -- அரயன் = அரையன் -- அகரம்(ர) ஐகாரமாக(ரை) மாறுகிறது.
இவற்றை நன்கு கவனிக்க. அகரம் என்பது ஐகாரமாக இருக்கலாம் என்று சொல்வதால், ஐகாரமும் அகரமாக மாறலாம் என்று சொல்லவில்லை. அகரத்திற்குதான் ஐகாரம் போலியாகிறது. காட்டாக, காலை மாலை என்பன, கால, மால என்று வந்துவிடுவதில்லை. கால என்பதும் மால என்பதும் பொருளிலேயே மாறுபடுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு போலிகளை போட்டால் பெரிய சிதைவுகள் ஏற்படுகின்றன.

அப்படியும் வலிந்து ஐகாரம் அகரமாகும் என்று சொல்வார்களெனில், போலி இலக்கணப்படி, அரையன், அரயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, அரய்யன் என்று ஆக இலக்கணம் இல்லை. மலையன், மலயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, மலய்யன் ஆக இலக்கணம் இல்லை.

இந்த இரண்டு போலிகளொடு, கடைப்போலி(பந்தல் = பந்தர்), முற்றுப்போலி (ஐந்து = அஞ்சு), முன்பின்னதாகத் தொக்க போலி (சதை = தசை) ஆகிய மூன்றுவகை போலிகள் வரும்.

இதில் முன்பின் தொக்க போலியை கூர்ந்து காண்போம்.

சதை = தசை - இங்கே பொருள் கெடாமல் ஐகாரம் எழுத்தில் மாறி அமர்ந்திருக்கிறது. அதுதான் போலி.

இதையே, கய்-மய் முறையில் எழுதினால், சதய், தசய் என ஆகிவருமல்லவா?

இப்பொழுது த-வுக்கு ச-வும், ச-வுக்கு த-வும் மாறுகின்றன. இங்கே போலி இலக்கணமே செத்துவிடுவது காண்க. த-வில் உள்ள அகரம், ச-வில் உள்ள அகரத்திற்கு எப்படி போலியாகும்?

இலக்கணத்தையே சிதைக்கிற முறை, ஆராய்ச்சியில்லாமல் மேலோட்டமாக சொல்லப்பட்ட கய்-மய் முறை.

போலி பற்றி பார்க்க: http://www.tamilvu.org/ta/courses-degree-c021-c0211-html-c0211334-15600
மேலும்:

போலி என்று சொல்லப்படுவது போலியே இல்லை என்றாலும் போலி, போலி என்று கூவிவிற்பவர்களுக்கு செஞ்சோற்றுக்கடன் என்று ஒன்று உள்ளதாக கருதி அவர்களுக்காக ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், போலியே வாழ்வாக இருக்க முடியுமா? போலியே தமிழாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில் நண்பர் சேக்முகமது உருபோலிப்போட்டி என்ற நல்ல சொல்லாட்சியை Fancy Dress Competition என்ற நீண்ட ஆங்கிலத்தொ டருக்கு இணையான சுருக்கமான தமிழாக தந்திருந்தார். உருபோலியைப்போலவே, எழுத்துப்போலியும் ஏதோ ஓர் இடத்தில் பகட்டு எழுத்தில் வரலாமே தவிர அதுவே மொழியாகி விடக்கூடாது. வாழ்க்கை முழுதும் பகட்டு உடுப்பு, மாறுவேச உடுப்பு அணியமுடியுமா?

ஆகவே இந்த வறட்டுப்போலிகளை மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கி வீசவேண்டும்.

5) ஓர் அச்சுக்கட்டை உடைந்து போனதற்காக, சிக்கன சீலரான பெரியார் தமிழ் எழுத்துகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்று அடித்து விட்டதையும், பேரறிவை பொதித்து வைத்திருக்கும் உலகின் தொன்மையான இலக்கண நூலை யாத்த தொல்காப்பியரையும் ஒப்பிட்டு பெரியாரை தொல்காப்பியர் மாதிரி பார்ப்பது தவறு. பெரியாரின்மேல் பாசத்தை காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. அதைத்தேர்ந்து கொள்ளுங்கள். தமிழ்மொழி குறித்து அவர் சொன்னவற்றை, வெறும் ஆத்திர அவசரத்தில் எழுதியதாக கருதி கடந்து போவது நல்லது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24/02/18

Wednesday, February 14, 2018

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாக உலவுகின்றது.
மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லிலிருந்து கிளைப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மன்றுதல், மன்றித்தல் என்ற சொற்களை ஊன்றிக்காண இருக்கிறது.
மன்றுதல் என்றால், கடுமையான தண்டனை தராமல், தண்டம் கட்டச்சொல்லி விடுதல்.
பார்க்க: http://dsalsrv02.uchicago.edu/cgi-…/philologic/getobject.pl…
"மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்......"
(திருமுறை-4, பூந்துருத்தி பதிகம் - 88)
மன்றியுந் நின்ற மதிலர் என்றால் "போய்த்தொலை என்று கண்டித்து விடப்பட்ட மதிலர் போகாமல் நின்றார்" என்று பொருள். அப்படி போய்த்தொலைக என்று விட்டும் போகாமல், மல்லுக்கட்டிய மதிலரை, மாய்த்தே விடவேண்டும் என்று சினந்து மாய்த்த சிவபெருமான்" .... என்பது இங்கு பொருளாகும்.
அதேபோல,
"கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன்மலையை யோடி
வென்றித்தன் கைத்தலத்தாலெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்;
மன்றித்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே"
(திருமுறை-4, கயிலாயம் - 47 - 5)
இராவணன், பேராசை கொண்டு கயிலை மலையை பெயர்க்க, உமை அஞ்ச,
சிவபெருமான் தண்டிக்கிறார். எப்படியென்றால், தனது கால் விரலால் இராவணனை
மெல்லியதாய் ஊன்றுகிறார். அதற்கே அவன் அலறி கதறுகிறான். அதோடு போய்த்தொலை என்று விட்டுவிடுகிறார் சிவன். அப்படியில்லாமல், கடுமையாக மன்றித்தே ஆகவேண்டும் என்று கருதியிருந்தால், இராவணன் பிழைத்தே இருக்கமாட்டான் என்பது பாடலின் பொருள். இங்கு கடுமையாக என்ற மறைவுப்பொருள், பதிகத்தின் பிற பாடல்களால் பெறப்படும்.
அதாவது, கடுமையாக வெறுத்து ஒதுக்காமல், அல்லது கடுமையான தண்டனையை தராமல், மன் (=பெருமையுடைய, வலிமை மிகுந்த) என்ற அந்த உயர்ந்த பண்புடைய பெரியோராய் நின்று குறைவான தண்டனை தருதல் என்பதற்கு மன்றுதல் என்று பொருள். "கடிது ஓச்சி, மெல்ல எறிக" என்ற வள்ளுவம் இங்கே ஒத்துப்பார்க்கத்தக்கது.
மன்றாடி கேட்டுக்கொள்ளுதல் என்றால், மன்றில் (மன்றத்தில்) பொதுவில் நின்று இறைஞ்சி கேட்டு மன்றி பெறுதல்.
10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள், 5 ஆண்டாக தண்டனை குறைக்கப்படுதலுக்கும்
மன்றிப்பு, அல்லது பொதுமன்றிப்பு என்றுதானே பெயர். 5 ஆண்டாக குறைக்கப்பட்டாலும் தண்டனை தண்டனைதானே. மன்னிப்பு கொடுத்தல் என்பது குற்றத்திற்கான குறைந்த தண்டனைதானே.
ஆகவே, மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது.
மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.
வழக்கில் றி-கரம் னி-கரமாக திரிவதுண்டு. காட்டாக பன்றி = பன்னி என்று பேச்சுவழக்கில் வருவதை சொல்லலாம். என்ன பன்றான் என்ற பேச்சு வழக்கு,
என்ன பன்னான் என்று வருவதை ற-கரம் ன-கரமாக திரிவதற்கு சொல்லலாம்.
ஆகவே மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே.
மீண்டும், மன் என்று தொடங்கும் பல உயர்ந்த சொற்களை வைத்துக்கொண்டு, மன்னிப்பு அயற்சொல் என்று சொல்லவே முடியாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, January 29, 2018

ஆண்டாள் - மடல் 3. வைரமுத்தின் 10 பிழைகள்.



"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு" என்பது வள்ளுவ மரபு.  "கடிது ஓச்சி,  மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் "  என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. "சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா", என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கை சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. "நீயே முக்கண் முதல்வனும் ஆகுக" - ஆனால் உன் பாட்டு பைசாவுக்கு தேறாது என்றது நக்கீர மரபு.

இந்த தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாக காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில் தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பதற்கு, மூன்று வாரங்கள் பொறுத்திருந்தது தேவைதான்.

1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு(fiction), வருணனை(commentary), மிகையான புகழ்ச்சி  ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பது போன்றே மிகுந்து கிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.

2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்று, ஆண்டாளை புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.

3) "சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.....மக்களை நோக்கி இறங்கி வந்தது."   ---வைரமுத்து.

இது அப்பட்டமான வரலாற்று திரிப்பு.

சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றை திரிக்கிறது. இது சைவ,வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையை காட்டுகிறதா? அல்லது காழ்ப்பை காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)

4) ஆண்டாளை "கண்டெடுக்கப்பட்ட கனகம்" என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதை பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்து நின்றன என்றுதான் சொல்ல வேண்டும். "அறியாக்குலம்" என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

5)  "பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? " ------ வைரமுத்து.

வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில்,
மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளை செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையார் திலகவதியாரே, அப்பரடிகளை சமணத்திலிருந்து மீட்டு சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார். மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள் முந்திப்பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மை, திலகவதியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. 400 ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது.1300 ஆண்டுகளில் இருவரை மட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில் விழாவில் தேவையில்லாதவற்றை பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.

6) "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" --- வைரமுத்து

சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, "அம்மையே" என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால் அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார். அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர். அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள். "தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்" என்று சத்தியை பாடி, அடுத்த வரியிலேயே, "அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்....." என்பார் அபிராமி பட்டர்.

சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கி கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான்.
இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையை தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளை தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.

இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.

ஓர் உயர்ந்த உறவை பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது "என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்" என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டை காற்றில் பறக்கவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

7) "திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" --- வைரமுத்து

இதுதான் கட்டுரையில் மட்டமான இடம் என்றால் மிகையல்ல.

"பாலியல்" என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில் வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.

8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:

ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், "ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து,  ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்." (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணைய சத்தியை அழைப்பதாக சிவநெறி சொல்லும். இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள் பிறரை இறையை நோக்கிஅழைக்கின்றார்.

இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர். அந்த ஆணிவேரை வருணமும், சாதி ஏற்றத்தாழ்வும் பிடுங்கி எறிந்தன பின்னாளில். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் விடும் அழைப்புகள் (Prayer Calls) மிக உயர்ந்த நெறியினதாகும். வெறும் பெண்டிரை நோன்புக்கு அழைக்கும் பதிகங்களை இருவரும் இயற்றவில்லை. அந்த அழைப்பு வெறும் விளையாட்டல்ல. குமுகத்தை (குமுகம் = சமூகம் = Society) கட்டியமைக்க அவர்கள் பட்ட பாடு. பத்திமரபு என்பது பொதுமரபு என்று எனது முதல்மடலில் சொல்லியிருப்பதை ஒத்துக்காண்க.

எம்பாவை பாடி இறைவனைக்கூட பக்குவம் பெறவேண்டிய ஆன்மாக்களை அழைத்த மாணிக்கவாசகர், ஆத்மநாதராகவே ஆவுடையார் கோயிலில் வீற்றிருக்கிறார். அதே பணியை விண்ணவத்தில் செய்த ஆண்டாள் இறைவியாக ஆகி, வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கிறார்.

இருவருமே உருகி உருகி இறைவனை காதலித்தவர்கள். இருவருமே, இறைவனிடம் முழுச்சரணகதி அடைந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனை குருவாகக் கருதி ஐக்கியமானார். ஆண்டாள் கணவனாகவே இறைவனை வரித்துக்கொண்டார்.

திருப்பாவையின் அந்த 19ஆம் பாட்டு சொல்வது இதுதான்:

"உன் கழலடைய, உன்னோடு கலக்க உன்னை கணவனாகவே வரித்து தவமிருக்கும் எனக்கு அருள் செய்யாதிருப்பது, உன் அடியார்களையும் மறக்குமளவிற்கு, நப்பின்னை பிராட்டியார் உன்னிடம் காட்டும் அன்பிலும் காதலிலும் கரைந்து போனதனாலோ? இது சரியா?". இதுதான் அதன் பொருள். அதை பாலியல் கொச்சையாக பேசினால் எப்படி?

"கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே..." என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்வது மெய்யியலை பேசும்போது மிகவும் பொருந்தும். ஆண்டாளின் இலக்கியத்தை உணர கூர்த்த மெய்நோக்கு தேவை.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் படிக்கும் கண்கள், தங்கள் ஆராய்ச்சிகளை தாறுமாறாக அவிழ்த்துவிடுகின்றன. வைரமுத்தும் அதையே செய்திருக்கிறார். ஆண்டாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் இறைவனோடு கலக்க வேண்டும் என்ற ஒரே தவிப்புதான். அந்தத்தவிப்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், ஆண்டாளை பருவமடைந்த பெண்னாக பார்ப்பதுதான் அவர்களின் கோளாறு.
நாச்சியார் திருமொழியில் 5ஆம் பதிகத்தில் குயிலோடு பேசும் ஆண்டாளை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனின், மாணிக்கவாசகரின் குயிற்பத்தை படிக்கவேண்டும். இருவரும் குயிலை வைத்து பேசுகின்ற பேச்சு, கெஞ்சல், மிரட்டல் என்ற பலஉணர்வுகளும் ஆன்மவிடுதலைக்கு அவர்களின் தவிப்பை சொல்லும் பேரரும் பதிகங்களாகும்.

நாச்சியார் திருமொழியின் 13ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டில் ஆண்டாள் இப்படி பாடுவார்.

"கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவந்தானென்?
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே."

மானுடவாழ்வின் அல்லல்களில் இருந்து விட்டுவிடுதலையாகி முத்திபெற தவிக்கின்ற தவிப்புதான் ஆண்டாளின் தவம். இதையே, மாணிக்கவாசகர் எப்படிப்பாடுகிறார் பாருங்கள்!

"பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர் திரைபொர காமச்சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே!"

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மானுட அல்லலில் இருந்து விடுபட தவமிருக்கும் மாணிக்கவாசகர், உன்னைப்பற்றி நின்ற அன்பர்கள் எல்லாம் வானேறிவிட, நான்மட்டும்
இங்கு சுறாமீன் போன்று தாக்குகின்ற காமத்தால் அழிந்துகொண்டிருக்கிறேனே என்று கதறுகிறார். இதைத்தான் ஆண்டாளும் "கொம்மை முலைகள் இடர்தீர" என்று குறிப்பிடுகிறார். இன்னொரு பாட்டில், "......என்னை கூவிடுவாய்! கும்பிக்கே இடுவாய்! நின் குறிப்பறியேன்" என்று அலறுவார்; இன்னொரு பாட்டில் "....நம்பி இனித்தான் நல்குதியே!' என்று அழுவார்.  அதைத்தான் ஆண்டாளும், "விடைதான் தருமேல் மிகநன்றே" என்று உருகுகிறார்.

ஆண்டாளை வெறும் தெய்வமாக புரிந்து கொண்டு போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள்தான் பெரும்பான்மை. திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் மட்டும் படித்தவர்கள் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாணிக்கவாசகரின், அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, வாழாப்பத்து, ஆனந்தமாலை, நீத்தல்விண்ணப்பம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன். அதையும் சித்பவானந்தாவின் உரையோடு சுருக்கிக்கொள்ளக்கூடாது. அவ்வுரையை தாண்டி நல்ல உரைகள் உண்டு. இவற்றோடு குறுந்தொகையையும், திருக்குறளின் இன்பத்துப்பாலையும்  ஒப்பிட்டு படிக்க வேண்டும்.  அகப்பாடல்களை படிக்க வேண்டிய முறையே இதுதான்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்காணும் வாரணமாயிரம் என்ற பதிகத்தை போன்ற ஒப்பற்ற மங்கல பதிகத்தை நான் எங்கும் படித்ததில்லை. அதில் "தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது" என்கிறார் வைரமுத்து. திருப்பித்திருப்பி படிக்கிறேன் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக அதன் 14 பதிகங்களை பார்த்தால் நாச்சியார் திருமொழி என்பது ஆண்டவனின் கழல்சேர, ஒன்றிப்போக, இம்மையின் அல்லல் நீங்கி "சும்மா இருக்கும் சுகம்" என்பாரே வள்ளலார் அதனை அடைய ஆண்டாள் என்ற 13/14 வயது மங்கையின் பரிதவிப்பு, வேண்டல், தவம், அலறல், கதறல் ஆகியவைதான் அவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்று வள்ளுவம் சொல்லவில்லையா? அவர் சொன்ன அந்த பிறவிப்பெருங்கடலின் அல்லல்களில் இருந்து தம்மை விடுதலை செய்ய வேண்டி நின்ற ஞானந்தான் ஆண்டாளின் தவம்.

ஆனால், இலக்கிய வித்துவான்களும் காலஞ்சென்ற ஞாநி உள்ளிட்ட தயார்-எழுத்தாளர்களும் (fast food writers) எங்கெங்கெல்லாம் முலை, கொங்கை, அல்குல் என்ற சொற்கள் வருகிறது என்று பார்த்து அந்த வரியை மட்டும் பிடித்துக்கொண்டு காமம், கொடூரம், கொக்கோகம் என்றெல்லாம் கருத்தெழுதி கொச்சைப்படுத்திய நாள்கள் தமிழ் அறிவுலகத்தின் அவமானமான காலம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஞாநி 15 ஆண்டுக்கு முன்பு கண்ணகியை ஏளனப்படுத்தினார். பின்பு, மாணிக்க வாசகர்; அண்மையில் ஆண்டாளை கேலிசெய்தார்.

ஏன் இந்த எழுத்துலகிற்கும், அறிவுலகிற்கும் கொங்கை, முலை, அல்குல் என்ற மூன்று சொற்களை படித்தாலே கைகால் வியர்த்து நடுங்குகின்றன என்று எனக்கு புரியவில்லை.
இந்த முறை சற்று கூடுதலாகவே இதழ்களுக்கும் நடுங்கியிருக்கின்றன. இந்த நடுக்கம் தமிழ் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்த நடுக்கம் வந்தபின்னர்தான் மருத்துவரிடம் கூட, ஆங்கிலத்தில் அதற்கான பெயர்களை சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது.

இயல்பான இம்மைவாழ்வின் அல்லல்களை நீங்கி ஆண்டவனை அடையவேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளம்மையை வைரமுத்து பார்த்தது பார்வைப்பிழை; அறிவின் குறை; ஆண்-அவம், புலமைச்செருக்கு என்ற மாயை.

அன்றைய சூழலில் பெண்களுக்கு கொடுங்கோடு என்ற ஒன்றெல்லாம் தென்படவேயில்லை.

9) "பாலியல் சொல் விடுதலை" - இந்தச்சொற்கள் வைரமுத்தின் வக்கிரத்தின் உச்சம். அதுவும் ஔவையார், வெள்ளிவீதியாரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இதைப்பேசுவது அறியாமையா?ஆணவமா? என்பது புரியவில்லை. இன்னும் எழுத எவ்வளவோ இருந்தாலும் நீளம் கருதி, பத்தோடு நிறுத்துகிறேன்.

10) தேவதாசி:

தனது முன்முடிவை நேரடியாக கூறாமல், வேறொருவரை மேற்கோள் காட்டி ஆண்டாளை அப்படி குறிப்பிடுகிறார். எத்தனை பெரிய தவறென்று தமிழ்நாடு அவருக்கு எடுத்துக்காட்டியது. பலர் கூறியவற்றை தவிர்த்து இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அ) தேவதாசி மரபு அன்றைய சூழலில் உயர்வாக கருதப்பட்டது என்று சொன்னாலும், எத்தனை தேவதாசிகளை தமிழ்நாடு வணங்கிக்கொண்டிருக்கிறது? எண்ணிப்பார்க்க வேண்டாவா? இறைவியாகக்கூட இல்லை, பரிவார தேவதைகளாகவேனும் எத்தனை தேவதாசிகள் வழிபாடு பெறுகிறார்கள்? அப்படியென்றால் அன்றைய சூழலை இழுத்து குழப்புவது சமாளிப்புதானே?

ஆ) தேவதாசி யார்?: சமயநெறிகளுக்குட்பட்ட கோயில்கள், கோயில் மண்டிலங்களில் மானகை/மேலாண்மை (Management) இருக்கத்தானே செய்யும். தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு இருக்கிற மேலாண்மைக்கூறுகளை கோயில்களிலும் காணமுடியும். நிருவாகம் (Administration), அன்றாடப்பணிகள் (Operations), மனிதவளம் (HR), நிதி (Finance), விற்பனை/வணிகம் (Sales/Rental) போன்ற அடிப்படைத்துறைகளை இன்றைக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

அதோடு, இந்தக்கோயிலுக்கு போய் வழிபட்டால் இன்ன குறை நீங்கும்; இன்னது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கேட்கிறோமே அதெல்லாம் கோயில்கள் சந்தைப்படுத்தப்பட்டதன் அடையாளங்கள். சூரிய பகவானை வழிபட இங்கே செல்க, சனிபகவானை வழிபட அங்கே செல்க, தலைவலி நீங்க இங்குமங்கும் செல்க என்றெல்லாம் இன்றும் நாம் நிறைய கேட்கிறோம். All these are nothing but Temple-Marketing-Network-Activities.  கோயில் புகழ்பெற செய்யப்பட்ட விளம்பர உத்திகளாகவே பெருமளவும் காட்சியளிக்கின்றன.

இதை ஏன் உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கலாம். திருநள்ளாறை எடுத்துக்கொள்வோம். அங்கே சனிபகவானை கும்பிட்டால் குறைகள் தீரும் என்பது நமது நம்பிக்கை. ஆனால், திருநள்ளாற்றின் பச்சைப்பதிகம் உள்ளிட்ட மூவர் பாடிய பாடல்களிலும் அப்படியொரு வழிபாட்டை தேவார முதலிகள் எழுதவேயில்லை.

மூவர் தேவாரமும் ஒவ்வொரு தலத்தின் இறைவனையும், அந்த ஊரின் இயற்கையையும் சிறப்பையும் பாடி, இந்தப்பாட்டை படி; போதும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்வார்களிடையேயும் நான் அப்படித்தான் காண்கிறேன்.

ஆனால், நிகழ்வு என்ன என்றால் அவர்கள் பாடிய பாட்டை கோயில் நிருவாகமே பாடுவதில்லை. மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்துவிட்டு அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட்டு உத்திகளைத்தான் கோயில்களில் காணமுடிகிறது.

அந்த சந்தை (Marketing) உத்திகளின் ஒருபகுதியாக கலைஞர்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டு Dedicated Event Performers ஆக ஆக்கப்பட்டார்கள். இது மனிதவள (HR) உத்தியாகவும் இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. இந்த மனிதவளத்தின் மற்றொரு பகுதியாக Operations - அதாவது அன்றாடப்பணிகளுக்கு தேவைப்பட்ட ஆள்களை சொல்லலாம். வேலைகள் செய்ய தேவைப்பட்ட ஆள்களாகவும்(Labours) தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கின்றனர்.

ஆக, தேவதாசிகள் கலைஞர்கள் ஒருவகையாகவும், பணியாள்கள் ஒருவகையாகவும் இருந்திருக்கிறார்கள். (There existed both artists and labours as devadasis. As always marketing people are paid high in the industry it is possible the artist-devdasis could have been kept in better esteem/wealth) இப்படியிருக்கையில், இறைப்பணி என்று ஒரெ முத்திரையிட்டு தேவதாசிகளை பேசுவது சரியாயிருக்காது.

இதில், ஆண்டாளை ஏப்படி தேவதாசி என்று கூறமுடியும்? மாபெரும் பிழையல்லவா? கடுஞ்சினம் வருமா இல்லையா?

Temple Marketing என்பதைப்பற்றி இறுதியாக ஒரு குறிப்பை அனைவரின் சிந்தனைக்கு எழுதி நிறைவு செய்கிறேன்.

நேர்த்திக்கடன், வேண்டிக்கொள்வது, நோன்பு/விரதம் போன்றவை தொன்மமான நாட்டார் மரபுகளிலேயே உண்டு. முருக மரபில் உண்டு. ஆனால், எங்காவது, சின்ன கருப்பு கோயிலுக்கு போனால் சுக்கிர தோசம் போகும், சுடலை மாடன் கோயிலுக்கு போனால் செவ்வாய் தோசம் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை.

இடைக்காலத்தில் எழுந்த பத்தி இயக்கமும் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப்போனால், வழிபாட்டை மிக எளிமையாக்கியது. "சும்மா இந்த பதிகத்தை படித்துவிட்டு போப்பா" என்று படிக்கச்சொல்லியது. சான்றாக தேவாரத்தை சொல்வேன்.

ஆனால் பிற்காலந்தான் அப்படியான வழக்கங்களை உருவாக்கின. குறிப்பாக, நாயக்கர் காலத்திற்குப்பின்னர், தமிழ் கோயில்களை விட்டு அதிகம் வெளியாகி, இந்த வழக்கங்கள் உருவாகின.

இது தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் அவரவர் விருப்பு. ஆனால், Temple Marketing என்பது எல்லை மீறிப்போவது கவனிக்கத்தக்கது. இதை ஆழ்ந்து பார்க்காமல், எல்லா மரபு வழிபாடுகளையும் தூற்றிக்கொண்டு, ஆன்மீகம் தொடர்பான அனைத்தையும் கேலி பேசிக்கொண்டே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்?
படிக்கச்சொல்லி நமக்குத்தந்த தூயதமிழ் இறைப்பாடல்களை படிக்க மறுத்து, ஆரியம் பூரியம் என்று தேவாரம் திருவாசகம் போன்றவைகளையும் தள்ளிவைத்துவிட்டு, காது, ஈயம் கதைகளை எத்தனை நாள் பேசிக்கொண்டிருப்போம்?

எனது முந்தைய மடலில் சுட்டிக்காட்டிய மரபின் திரிவுகளை ஒத்துப்பார்க்க வேண்டுகிறேன்.

வைரமுத்தின் அறமற்ற பத்துப்பிழைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வேறுபிற செய்திகளோடு அடுத்த மடலில் நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/2.html


Sunday, January 21, 2018

ஆண்டாள் - மடல் 2: மரபின் திரிவும் திரிவின் விளைவும்.


மால் நெறியினரின் நாலாயிரத்தின் தொகுப்பிற்கும், சிவநெறியினரின் தேவாரத்தொகுப்பிற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

தேவாரம், அதன் முதலிகள் யாத்தவாறே, தலவரிசையாக அல்லது பண்/யாப்பு வரிசையாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். முதலியின் வரலாற்றை, சிறப்புகளை சுருக்கமாக நூன்முகப்பு தாங்கியிருப்பதை காணமுடியும். சில பதிப்புகளில் முதலிகளை போற்றியோ, அல்லது சைவத்தை போற்றியோ ஓரிரு பாடல்கள் தமிழில் இருக்கும். ஆனால், நாலாயிர நூல்களை காணும்போது, தமிழிலும் சமற்கிருதத்திலும் யாக்கப்பட்ட பாடல்கள் சிலவற்றை தனியன்களாக ஆழ்வார்களின் பாடல்களுக்கு முன்னர் வைத்திருப்பர். தனியன்கள் என்பன, பாயிரம் போன்றவை என்று சொல்லத்தக்கன. பாடல்களை யாத்தவரையோ பாடல்களின் பயனையோ பாராட்டி அந்த தனியன்கள் எழுதப்பட்டிருக்கும்.

ஆழ்வார்கள் எழுதிய செந்தமிழ்களை, முதன்முதலில் சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தனியன்கள் அணிந்துரைக்கும். அதாவது முதலில் வடமரபோடு இணைக்கப்படும். பின்னர் தமிழ்த்தனியன்கள் வியந்து போற்றும்.

சிவன்கோயிலில், இறைவனின் பெயர், ஏறத்தாழ முழுமையாக சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.  மூவர் முதலிகளின் பதிகங்களை படிக்கும்போது அதில் குறிப்பிட்டிருக்கும் இறைவனின் தமிழ்ப்பெயருக்கும், பாடப்பட்ட  கோயிலின் இறைவனின் தற்போதைய சமற்கிருதப்பெயருக்கும் எந்தத்தொடர்பும் இருக்காது. காட்டாக, ஆனைக்கா அண்ணல் என்று சம்பந்தரின் பதிகம் இசைக்கும். ஆனால், சம்புகேசுரர் என்பது வழக்கில் இருக்கும். பதிகத்தின் தமிழ்மரபுக்கும் இன்றைய வழக்கிற்கும் தொடர்பறுவது காண்க. திரிபின் விளைவு இப்படித்தான் இருக்கும். சிவப்பதிகத்திற்கும் தலத்திற்குமே தொடர்பு நீங்கிவிடுகிறதென்றால், அவற்றை ஆக்கிய அந்த செந்தமிழ்மரபை, செந்தமிழ் முதலிகளை எப்படி பேணியவர்களாவோம்? அதுபோலவே மாலவன் கோயில்களிலும், குறிப்பாக திவ்விய தேசம் என்று சொல்லப்படும் கோயில்களில் பலவற்றில் இறைவன் - இறைவி பெயர்கள் அமுதம் போன்ற தமிழ்ப்பெயர்களில் இருந்தாலும், பலவற்றில் பிறமொழிப்பெயர்களில் இருப்பதை காணமுடியும்.

"இந்தத்திரிவுகள் ஏற்பட்டது எந்த நாளோ அந்த நாளிலிருந்தே செந்தமிழ் முதலிகளான தேவாரத்தை தந்த நாயன்மார்களுக்கும், நாலாயிரத்தை தந்த ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கும் இம்மண்ணில் புறக்கணிப்பு தொடங்கிவிட்டது."

வரலாற்றின் முக்கிய மைற்கல்லான அந்த 7, 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மரபின் திரிவே இல்லையா என்று சிலர் கேட்கலாம். இருந்திருக்கின்றன; ஆனால், அந்த இரு நூற்றாண்டில் மறுமலர்ந்த தமிழின் அளவு கடல்போன்றது. அந்தத்தமிழ் ஆட்சியரசிலையே திருப்பிப்போட்டது. அதற்குப்பின் அப்படியொரு செந்தமிழ் மலர்ச்சியை இன்றுவரை தமிழகம் காணவில்லை. ஆகவே, அப்படியான மலர்ச்சி, பெரிய அளவில் சிதைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் போனதை அளவீடாக கொள்தல் எளிதும் தேவையுமாகும்.

தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்திகளும், ஆழ்வார்களில் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களும், தமது பதிகத்தை முடித்து, கடைசிப்பாட்டில் (கடைக்காப்பு) தமது செந்தமிழை இறைவர்க்கு படைத்ததால் வந்த பெருமிதத்தோடு, "இந்த பத்துத்தமிழ்களை படித்தாயென்றால் நீ நல்லாயிருப்பப்பா" என்று ஆணையிட்டும், அன்போடும் அருளிய அந்த அழகை படிக்கும் ஒவ்வொருவரும் கிறங்கிப்போவது இயல்பு. தமிழில் கரைந்து போவதும் இயல்பு.

"....வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் 
விட்டுசித்தன் சொன்னமாலை பத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்கு ஆளர் தாமே"..... பெரியாழ்வார்

"நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு  அருவினை அறுதல் ஆணையே"...... ஞானசம்பந்தர்

இன்றைக்கெல்லாம், "தமிழில் பேசுவது அவமானமல்ல - அடையாளம்" என்று பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கையில், தமிழை பெருமிதத்தோடு அன்று ஓதி, அனைவரும் ஓதத்தந்த தமிழ் ஞானமரபுதான் நாயன்மார்களும் ஆழ்வார்களும். அத்தகைய தமிழ்மரபு வீரமரபுமாகும். தமிழை பெருமிதத்தோடு மக்களிடையே மறுமலர்ச்சி செய்த அந்த மரபு சிதைக்கப்பட்டு, கோயிலில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டது.

மாலவன் கோயில்களிலேனும் சிறிது தமிழுக்கு இடமுண்டு. தாயார் கோயிலிலும், மாலவன் கோயிலிலும் ஒருசில பிரபந்தப்பாடல்களையாவது சன்னதியில் பாடுவோர் உண்டு. ஆனால், சிவன் கோயில்களிலும், புகழ்பெற்ற முருகன் கோயில்களிலும், சன்னதியில் முழுமையாக தமிழ்  புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, என்று சொல்லும் அளவிற்கு அவமானப்படுத்தப்படுகிறது.

மாணிக்கவாசகர் இயற்றியிருந்தாலும், தில்லை நடராசரே தன்கைப்பட எழுதியதுதான் திருவாசகம் என்று புகழப்படும் திருவாசகத்தையும் தேவாரத்தையும் தில்லை சிற்றம்பலத்தில் பாடமுடியாது. நடராசருக்கு 20-25 அடி தொலைவில் பள்ளத்தில் நின்றுதான் பாடமுடியும்.

பிற்காலத்தில் தோன்றிய சத்தி இலக்கியத்தில் தலைசிறந்தது அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி. அந்தப்பாடல்களை அண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் பாடமுடியாது. காலபூசையை வடமொழியில் 20 நிமிடங்கள் செய்துவிட்டு, கடைசியாக "தனந்தரும் கல்விதரும்..." என்ற அந்த ஒரு பாடலை மட்டும் சன்னதியை விட்டு வெளியே வந்து, தனது தலையை சுவற்றில் வைத்து மறைத்துக்கொண்டு ஒரு சிவாச்சாரியார் பாடுவார்; அல்ல அந்த தமிழ் சிவாச்சாரியாரை பாட வெளியே அனுப்புவார்கள். பாடுபவர் தமிழ் சிவாச்சாரியார் என்பது நன்றாகத்தெரியும். ஆனால் அவரை வெளியே விரட்டி பாடச்சொல்கிற அதிகாரம் எது? என்பதை இதுவரை யாரும் அறியமுற்பட்டதில்லை.

தமிழ்க்கடவுள் முருகன் என்று வானளாவ புகழும் தமிழ்நாட்டில், (சிவனும் மாலும் எங்கோ ஆர்க்கிடிக்கில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் பிதற்றுவர். அப்பிதற்றலை விடுக), அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைகறை பூசை நடக்கிறது;  வடமறை ஓதும் வேதவிற்பன்னர்கள் சுமார் 10 பேர் நின்று ஓதுகிறார்கள். 15-20 நிமிடம் கழித்து வெளிப்புறத்தை நோக்கி கைகாட்டுகிறார்கள். வெளியே எனக்கு இடப்புறம் முருகனின் மேல் பார்வை பட்டுவிடாமல் ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்த ஓதுவார் திடீரென பாடுகிறார் -  "ஆடும் பரிவேல் அணிசேவலென...." . ஒரு நிமிடம் அவர் பாடி முடிப்பதற்காக உள்ளே சன்னதியில் பூசை காத்துக்கொண்டிருக்கவில்லை.

(தில்லையிலும் அண்ணாமலையிலும் நான் சொன்னது உண்மைதானா என்று அறிய விரும்புபவர்கள் அங்கு உச்சிகால பூசைக்கு போய்வருக. செந்தூர் பற்றியறிய வைகறையில் செல்க.)

இதுபோன்ற காட்சிகளை திருக்கழுக்குன்றத்திலும் வேறு இடங்களிலும் நேரடியாக பார்த்து மனம் குமுறியவன் நான். அதன் வலியை யாரறிவார்? ஞானசம்பந்தர் தொடங்கி பாம்பன் சுவாமிகள் வரை 1300 ஆண்டுகளில் யாக்கப்பட்ட பல்லாயிரந்தமிழும் சன்னதிக்கல்ல - வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் மட்டும்தான் என்று எண்ணும்போது வருகின்ற வலியை துடைப்பவர் இங்கு யார்? கச்சேரியில் கூட இம்மி, சல்லி, தம்பிடி என்ற அளவே தமிழிசை இருக்கின்றன என்ற உண்மையை அறியாதவர் உளரோ? எம்.எசு.சுப்புலட்சுமி, உன்னிகிருட்டிணன், நித்தியசிரீ, இளையராசா போன்றவர்கள் ஒன்றிரண்டு பாடுவதற்கு மட்டும்தான், தமிழ் ஞானமரபு, பாடல்களை படைத்ததா?

சன்னதியில் எது பாடப்படுகிறது என்பதைவிட, எது புறக்கணிக்கப்படுகிறது, எது அவமானப்படுகிறது என்று புரிந்து கொள்ள முயலுகையில், எத்தனை பேருக்கு வலிக்கிறதோ அத்தனை பேரால் மட்டுமே இந்தத்திரிவில் இருந்து தமிழ்மரபை மீட்கமுடியும்.

எனக்கு வலிக்கின்றது.

தமிழர்களின் மெய்யியல் என்பது முன்னோர் வழிபாடு மட்டுமே என்றும், குலதெய்வ, ஊர்த்தெய்வ வழிபாடுகள் என்ற எல்லாமே அவ்வழி மட்டுமே என்று சொல்பவர்கள், அக்கோயில்களில் தமிழ் வழிபாட்டையும் வழிபாட்டு முறையையும் வைத்திருக்கின்றனரா? எங்கோ ஒன்றுமிரண்டுமாக நான் படித்த நினைவுண்டு. மற்றபடி எல்லாமே மௌனமாக மணியடிப்பது மட்டும்தான்.

கருப்பண்ணசாமி என்ற தமிழ்த்தெய்வம் பெரிய, சிறிய என்பதுபோன்ற முன்னொட்டுகள், பின்னொட்டுகளோடு கூடிய மெல்லிய வேறுபாட்டில்  குத்துமதிப்பாக 400க்கும் மேற்பட்டு இருக்கின்றன. அத்தனை சாமிக்கும் ஏதும் தமிழ் வழிபாடு, வழிபாட்டு முறை இருக்கின்றனவா? ஆனால், கடந்த சில வருடங்களில் இத்தனை சாமிக்கும் சமற்கிருத வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவும் கண்ணுக்கு முன்னால் நடக்கும் மரபின் திரிவு.

"முதலிலே, தமிழ் மெய்யியல் மரபு தமிழை மீட்டெடுத்த அந்த 7,8ஆம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி சிதைக்கப்பட்டு தமிழ் திரிந்தது. அடுத்ததாக கோயில்களில் இறைவன் பெயர்கள் திரிந்தன. பின்னர் இறைவன் சன்னதியில் இருந்து தமிழ் துரத்தப்பட்டது. மெய்யியலின் பெருநெறிகளைத்தொடர்ந்து, குலதெய்வ அல்லது குலநெறியும் இன்று திரிவுறுகிறது." 

இன்னார் மட்டுமே திரித்தார் என்று ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே எத்தனை நாளைக்கு பேசிக்கொண்டிருப்போம்? அப்படியே என்றாலும், இன்னாரைத்தவிர மற்ற எல்லாரும் அதிலிருந்து தமிழை மீட்டார்கள் என்ற  செய்தியை தர தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் இல்லை இன்றைய அளவில். பேசிக்கொண்டே இருப்பது சரியா அல்லது செயற்படுவது சரியா?

சரியாக சொல்ல முற்பட்டால், 800 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் தமிழரசு இல்லை என்பதும், கடந்த 50-60 ஆண்டு அரசியலுக்கு தமிழர் மெய்யியல் இலக்கியங்களின் மேல் சிறிதும் அக்கறை இல்லை என்பதும், தமிழர் அதை விடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே நாத்திக மெய்மரபு பேசுகிறது.

இந்த நிலையில், ஆண்டாள் மீது வைரமுத்து தொடுத்த வருணனை என்பது மரபுத்திரிவின் மற்றொரு கோடி. இதனை தமிழ் ஆராய்ச்சி மரபு என்றெல்லாம் சொல்வது இட்டுக்கட்டி பேசுவது ஆகும்.

தமிழகத்தின் நாத்திக மெய்மரபும் தொன்மையானதே. ஆனால், இன்றைய காலத்தைப்போல அது அரசியலில் ஆட்சி செலுத்திய காட்சிகளை வரலாற்றில் காணமுடியவில்லை.

மேலும், கடவுள் மறுப்பு என்று வரும்போது, தமிழர்களின் சில வகுப்பாரை மட்டும் ஒடுக்கிவைத்ததால், அவர்களால் பேசப்பட்ட நாத்திகத்தை, பிறர் பேசும் நாத்திகத்தோடு சம அளவில் வைத்துப்பேசுவதே படுபாவம். ஒடுக்கப்பட்டவர்கள் பேசிய நாத்திகம், அடிவாங்கின வலியில் வந்த ஓலம்; ஆனால் பிறவகுப்பார் பேசிய நாத்திகம் அப்படியில்லை; அதை சொல்லால் குறித்தால் நன்றாக இருக்காது. மாறாக, ஒரு ஒப்பீட்டில் கோடிட்டு காட்டுவது சரியாக இருக்கும்.

"கடவுளாவது ஒன்னாவது! - வெட்டுடா அவனை" என்று சொல்லும் வெட்டுநரின் கடவுள் மறுப்புக்கும், "கடவுள் இருந்திருந்தால் என்னை காப்பாற்றியிருப்பான்" - என்று வெட்டுப்பட்டு கையறு நிலையில் அழுபவன் பேசும் கடவுள் மறுப்புக்கும் இருக்கின்ற வேறுபாடுதான் அந்த நாத்திக வேறுபாடு. இவ்வேறுபாடு இன்றும் வாட்டுகிற சூழல், தமிழும் மரபும் பெருமளவு திரிந்திருக்கிற சூழல் என்று சொல்ல வேண்டியதில்லை.

63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தில்லையில் கோயிலுக்குள் புக முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வாசலில் கொளுத்தப்பட்டார் என்பது வரலாறு சொல்லும் உண்மை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், திரைப்படங்களும் எழுத்தாளர்களும் காட்டுவது போல, நந்தனார் ஒன்றுமறியா ஏமாளியாகவோ, கோழையாகவோ  இருந்தவரல்ல. அதற்கு தீண்டாமை காரணமல்ல. தமிழ்மரபு சிதைக்கப்பட்ட போது, தமிழ் மறுக்கப்பட்டபோது, பிறமரபுகள் தமிழ்க்கோயிலை கைப்பற்றியபோது கிளர்ந்தெழுந்து தில்லையை மீட்க போராடிய போராளி அவர். அவரைப்பிடித்து கொளுத்திவிட்ட போதும், தீயினால் உடல் வேகின்ற அப்போதும் எதிரிகளை மீறி கோயிலுக்குள் ஓடி சன்னதியின் முன்பு விழுந்து வெற்றியோடு உயிர்நீத்த மாபெரும் தமிழ்ப்போராளிதான் நந்தனார். பெரியபுராணத்தில் சேக்கிழாரின் திருநாளைப்போவார் புராணத்தை கூர்ந்து படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

அதற்கு சுமார் 1 நூற்றாண்டு முன்பு, இந்தக்கிளர்வுக்கு வித்தான ஞானசம்பந்தர் தனது 16 வயதுக்குள் அவர் யாத்த செந்தமிழ்ப்பாடல்களில், சுமார் 4200 இன்றைக்கும் தேவாரமாய் நிலைத்திருக்கின்றன. (16000 பாடல்களை யாத்தார் என்று சொல்லும் நூற்குறிப்புகள் உண்டு). அவரும் அப்பரடிகளும் உருவாக்கிய தமிழ் மலர்ச்சி, கிளர்ச்சியாய் பல்லவ பாண்டிய பேரரசுகளை தமிழ்வழிக்கு திருப்பியது. அப்பேர்ப்பட்ட சம்பந்தருக்கும், அரசினரொடு மக்களின் ஆதரவை பெற்றிருந்த அந்த மாபெரும் அந்தண அடிகளாருக்கும் நந்தனாருக்கு ஏற்பட்ட அதே முடிவுதான் ஏற்பட்டது.  இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளை தேடவிரும்புவோர், கருவூர்த்தேவர் எப்படி முத்தியடைந்தார் என்று தேடுதலும் அவசியம். அந்தணரான ஞானசம்பந்தரும், இன்று ஒடுக்கப்பட்டிருக்கும் குலத்தை சேர்ந்த அன்றைய நந்தனாரும் ஒரே காரணத்திற்காக, தமிழிற்காக போராடினார்கள் என்பது உண்மைதானே? ஒரே மாதிரியான முடிவைத்தான் அவர்கள் அடைந்தார்கள். இவர்களின் முடிவுக்கு புறமரபுதான் காரணம். ஒருவரின் மறைவை துயரமானதாக இன்று பேசுகையில், இன்னொன்றை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழ்மரபின் சிதைவுதானே? திரிவுதானே?

மேலும், 13 நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் மெய்யியல் மரபு கிளர்ந்தெழுந்தபோதே இப்பெரிய வன்முறைகளை தமிழுக்கெதிரானவர்கள், தமிழ்மரபை வளரவிடாமல் தடுத்த புறமரபினர் செய்தார்கள் என்பதையும், இன்றைக்கு தமிழ்மரபு விழிப்படையும் நிலையில், மிகக்கொடூரமாக நாக்கை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்று வெறியோடு எழுந்து இந்தித்துவ மரபை இந்துமரபாக கட்டியமைக்க துடிக்கிறார்கள் என்பதும் ஒப்புநோக்கத்தக்கனதானே? 

தமிழகத்தின் நாத்திக மெய்மரபு 1949ல் திராவிட அரசியலாக மாறியபின்னர், அது பெரிய உளவியல் முரணை ஏற்படுத்தியது. பொதுக்களத்திற்கு வந்தால் கோயில், இறை ஆகியவற்றின்பால் எள்ளலை உருவாக்கிவிட்டது. அது ஒரு வித கூச்சத்தை புழக்கத்தில்  விட்டது. இந்த எள்ளல் உளவியலில் உருவானதுதான் வைரமுத்தின் கட்டுரை. தமிழக அரசியலால் தமிழர்களின் மெய்யியல் தேவைகளை நிறைவாக செய்யமுடியாததற்கு இதுவே காரணம்.

"ஒருபுறம், வடமரபு இந்தித்துவ அரசியல் செய்யும் நா.க.மூ.க (நா.க.மூ.க = நாக்கு  மூக்கு கழுத்துவெட்டி கட்சி) தான் வெறுக்கும் தமிழுக்கு, தானழித்த தமிழுக்கு உரிமையாளர்கள் போல நடித்து வாளை சுழற்றும் சூழலுக்கும், மறுபுறம் அவர்களை எதிர்ப்பதுபோல எதிர்த்து, தமிழில் உள்ள எல்லா மெய்ஞான இலக்கியங்களையும் ஆரியம் என்று சொல்லி அவர்களிடமே தூக்கித்தரும் திராவிட அரசியலுக்கும் இடையே கிடந்து தமிழின் எல்லாமே நொறுங்கி நாசமாகிப்போகின்றன" என்ற புரிதலை, அந்த ஆண்டாள் தமிழர்களுக்கு தந்திருக்கிறாள் இப்போது என்பது புன்னைகையோடு வரவேற்கத்தக்கது.

எல்லாம் நொறுங்குதல் என்றால் என்ன? மெய்யியல் மரபு, சமஉரிமை, தன்மானம், தமிழ் மொழி, தமிழர் ஒற்றுமை, பெருமிதம், இன உணர்வு என்ற எல்லாமே இன்று சிதைந்தும் திரிந்தும்தானே போயிருக்கின்றன? ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முட்டுக்கொடுத்து எத்தனை நாள் வாழ்ந்துவிடமுடியும்?

இந்தித்துவத்திற்கு எதிர்ப்பு தமிழ்த்துவத்தில் இருந்துதான் பிறக்கமுடியுமே தவிர, நாத்திகத்துவத்தில் பிறக்கமுடியவில்லை என்று உணர்த்தியதுதான் ஆண்டாள் காட்டிய தெளிவு. தமிழ்த்துவமே நாத்திகந்தான் என்று காட்டமுனைந்து இழந்துபோவதைவிட, தமிழ்த்துவத்தை அனைத்து துறைகளிலும் மீட்டெடுக்கும் அரசியல்தான் சரியான ஆயுதமாக இருக்கும்.

தொன்மமான நாத்தீக கோட்பாடுகளும் இயக்கங்களாக செயல்படுவதில் பிரச்சினையேயில்லை. அதில் பலனிருந்தால் அது குமுகத்தை சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், எப்படி "ஆன்மீக அரசியல்" என்ற ஒன்று ஆபத்தானதாக கருதப்படுகிறதோ, அதேபோல முழுமையான "நாத்தீக அரசியல்" என்ற ஒன்றும் தமிழ்க்குமுகத்துக்கு ஆபத்தானதுதான். இரண்டுமே சமகேடுடையவை என்பதை எடுத்துக்காட்டத்தான் வைரமுத்து அந்தக்கட்டுரையை எழுதினார் போலும்!?

அந்தக்கட்டுரை தமிழர் அரசியலுக்கு பொருந்தாத இரண்டு முரணரசியலின் போதாமையை வெளிக்கொணர்ந்திருக்கிறது. உள்ளே கிடந்து தவிக்கும் பெரிய தமிழ்க்குடியின் இயலாமையையும்  வெளிக்கொணர்ந்திருக்கிறது.

வைரமுத்தின் அந்த முரண்பாட்டு எழுத்துகளையும், அந்தத்திரிவின் கோணங்களையும், அவரின் கட்டுரைப்பிழைகளையும் அடுத்த மடலில் அமைதியாக ஆயமுடியும் என்ற நம்பிக்கையில் இம்மடல் இதற்கு முந்தியகால திரிவுகளையும் திரிவுகளின் விளைவுகளையும் பார்வைக்கும் நினைவுக்கும் வைக்க முனைந்திருக்கிறது.

மேலும், "அன்றைய காலச்சூழல்" என்று சொல்லாட்சி நிரம்பி வழியும் இந்த வேளையில் நான் அன்றைய காலச்சூழலையும் தொடர்ச்சியையும் சற்று தொட்டுக்காட்டவேண்டியது கடமையல்லவா?

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
21/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/1.html

Monday, January 15, 2018

ஆண்டாள் - மடல் 1




ஆண்டாள் மகாகவி. இப்படித்தான் மின்னம்பலம்.காம்-ல் ஒரு பெண்கவிஞர் தனது கட்டுரையில் ஆண்டாளை அறிமுகப்படுத்துகிறார் ( https://minnambalam.com/k/2018/01/13/28 ). அப்படியே நான் தொடங்குவதுதான் சரியானது என்றெண்ணி தொடங்குகிறேன்.

சுமார் பதின்மூன்று நூற்றாண்டுகளாக, "தமிழிலக்கியங்களில் தனக்கென ஒரு மாதத்தையே ஒதுக்கிக்கொள்கிற இலக்கியத்தை படைத்து நிலைத்த கோதைநாச்சியாரை மாகவி என்று சொல்வது அவரின் சிறப்புகளில் தலையாய சிறப்பு". இவரைப்போல ஒரு மாதத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட கவிஞரைத்தேடினால் மாணிக்கவாசகரை மட்டுமே சொல்ல முடியும். சமயம், ஆன்மீகம், இறைவடிவம் என்ற இவற்றைத்தாண்டி பண்ணிசைக்கவிஞர் என்ற மாவடிவம், ஆண்டாளுக்கு இருக்கிறதென்பதை எந்தக்கவிஞர்தான் மறுப்பார்?

கலைமாமணி, கவிமாமணி, சாகித்திய அகாதமி போன்ற விருதுகளை அறிந்திராத மாகவி பாரதியார் வாழ்ந்த நூற்றாண்டில், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் உள்ளிட்ட கவிச்செல்வங்கள் வாழ்ந்த நூற்றாண்டில், அதைத்தொடரும் காலங்களில், தோன்றிய தோன்றுகின்ற கவிஞர்களில் எத்தனை கவிஞர்கள் வரலாற்றில் நிலைபெறுவார்கள் என்பதை இன்று தீர்மானித்துவிட முடியாது.

அதற்கான காலம் சில நூற்றாண்டுகளேனும் வேண்டும் என்பதையும், திருப்பாவை தேவாரம் போன்ற பண்ணார்ந்த தமிழிசைப்பாடல்களை யாத்து வரலாற்றில் நிலைத்துப்போன கவிஞர்களை வருணிப்பதற்கு, இன்றைய அளவில், தமிழகப்பெருங்கவி, அல்லது வம்சத்து பெருங்கவி என்று ஓங்கிச்சொல்லப்படுவது மட்டுமே தகைமையை தந்துவிடுவதில்லை.

அதேபோல, ஆண்டாளின் படைப்புகளை ஆராய்ச்சி செய்பவர்கள், தற்கால பரபரப்புகளையே வாய்ப்பாகக்கொண்டு, ஆண்டாளுக்கு பருவ-உணர்வை உருவாக்கிந்தந்து, அதையே குறிக்கோளாய்க்கொண்டு ஆராய்ச்சி செய்வதையும், மிகச்சில வரிகளை மேற்கோள் காட்டி ஒரு முடிவை எடுப்பதையும் ஏற்றுக்கொண்டுவிட முடியாது. எடுத்துக்காட்டாக, https://maharasan.blogspot.in/2018/01/blog-post.html என்ற இந்தப்பதிவில் இருக்கும் சில கருத்துகளை சொல்லலாம்.

திருப்பாவையின் முதற்பாடலிலேயே, "சிறுமீர்காள்" என்று பெண்பிள்ளைகளை கூவி அழைக்கின்ற ஆண்டாள் என்ற சிறுமி, இறைவனோடு கலந்தபோது அவளுக்கு அகவை பதினைந்துதான்.

ஒரு 15 வயது சிறுமியின் ஞானவாழ்க்கையை, ஞானஉலகை புரிந்து கொள்வதில் ஏன் இன்றைய படிப்புலகிற்கு இத்தனை பெரிய தடுமாற்றம் என்று புரியவில்லை.

*யாரோ மண்டபத்தில் உட்கார்ந்து எழுதி* கோதையின் பேரை போட்டுவிட்டார்கள் என்று இராசாசியே சொன்னாலும், 3 வயதில் சிவனை பித்தன் என்று பாடிய அந்த ஞானக்குழந்தையின் நிழலில் அமர்ந்து கொன்டு அது பாடியதையே திரும்பப்பாடும் சிவநெறியாளரும் இராசாசியை ஒப்புக்கொள்ள மாட்டார். ஞானசம்பந்தரும் ஆண்டாளும் இம்மண்ணின் ஞானமரபின் வலிமையை சொல்லும் இலக்கணங்கள், குறியீடுகள்.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் ஆண்டாள் எழுதியபோது அவருக்கு 10 வயதா, 12 வயதா அல்லது 14, 15-ஆ என்று தெரியவில்லை. ஆனால், முற்போக்குகள், அந்தச்சிறுமியை, பாலியல் உணர்வுகளை மரபைத்தாண்டி வெளிக்காட்டி தன் உணர்வுகளுக்கு விடுதலை அளித்த புரட்சிக்காரியாக சித்திரிப்பதையும், நாச்சியார் திருமொழியை கொக்கோக நூலென்று சொல்வதையும், அந்தக்கால ஆணாதிக்கத்தை, பெண்ணுக்கெதிரான கட்டுப்பாடுடைகளை, தனது காம உணர்வுகளை எழுத்தில் பதித்ததன் மூலம், கட்டறுத்த, மீறிய பெண்ணியவாதி என்றெல்லாம் சொல்வதையும் எண்ணிப்பார்த்தால், அதிகமாக தலை சுற்றுகிறது; தலை என்றவொன்று ஏனிருக்கிறது என்று கூட தோன்றுகிறது.

கோதையை எண்ணும்போது, சீருடை அணிந்து பத்தாம் வகுப்பு படிக்க, பள்ளிக்கூடம் போகிற பிள்ளையொன்று நினைவுக்கு வருகிறது. அந்தப்பிள்ளை மாபெரும் படைப்பாளி, பத்தியின் அடையாளம், இறையின் இன்னொரு வடிவம் என்று பல காட்சிகளை காணத்தருகிறது. ஆனால், உள்ளங்கையை நீட்டு என்று, எல்லா பள்ளிக்கூடங்களின் (ஆத்திகம், நாத்திகம்...) இன்றைய ஆசிரியர்களும் பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்; சிலர் வரிசையாக, சிலர் கும்பலாக.

சிவநெறியை பற்றி நின்று, மால்நெறியை சிறிதும் அறியாதவனாயிருந்தாலும், பத்திமை என்பது எல்லா நெறிக்கும் பொதுமரபுதான்; அந்தப்பொதுமரபிலும், தமிழ்மரபிலும் நின்று ஓரிரு மடல்களை நான் எழுதினாலோ, அதிலேதும் பிழைத்தாலோ அன்னை ஆண்டாள் என்னைமட்டும் வெறுத்துவிடவா போகிறாள்?

(தொடரும்).

அன்புடன்
நாக.இளங்கோவன், 14/1/18

Thursday, January 04, 2018

ஆன்மீகமும் புற-ஆன்மீகமும்

:ஆன்மீகத்தை உங்களுக்கு சொல்லித்தாரேன் என்று ஒரு மராட்டிய நடிகன் கிளம்பியதும், துள்ளியெழுந்து, இது "பெரியார் மண்", "பெருங்காய மண்" என்று உளறித்தவிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் ஆன்மீக மறுப்பு என்பது நாத்திகக்களத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்பு. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றவாறே போனால் எப்படி?
எந்த ஆயுதத்துக்கு எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தி வேண்டாம்?
தமிழ்நெடுவரலாற்றில், அறியப்பட்ட நூல்களில் முதனூலான தொல்காப்பியமே ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன தெய்வம் என்ற பதிவை தாங்கியிருக்கிறது. அதன்பின்னர் முழுநூலாக நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இறைப்பாட்டாக காணக்கிடைக்கிறது. பரிபாடல், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரு நூல்களில் ஆன்மீகத்தை காணமுடியும்.
அதன்பின்னர், கண்ணப்பர், காரைக்காலம்மை, திருமூலர், நால்வர், 63 நாயன்மார்கள், ஆண்டாள் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் என பல்கிப்பெருகி, சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி என விரிந்து, பட்டினத்தடிகள், தாயுமானவர், அருணகிரி, குமரகுருபரர் என தொடர்ந்து, வள்ளலார் வரை கால நெடுகிலும் ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழகத்திற்கு இணையாக வேறொரு மாநிலத்தை மொழியை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது எனுமளவிற்கு ஆன்மீகம் இங்கே பரந்து விரிந்துதான் கிடக்கிறது.
செயினமும் பௌத்தமும் சீண்டிப்பார்த்த போது, யானை சிறு தேங்காயை இடறுவதுபோல, இடறித்தள்ளிய ஆன்மக்கோட்டை இந்த மண்.
இவை எல்லாவற்றையும் கெட்டியான போர்வையை போட்டு மூடிவிட்டு, இது பெரியார் மண், பெரியார் மண் என்று கூவுவது எவ்வளவு பெரிய அறியாமை?
இப்படி, தன்னிலையால், தமிழ்நிலையை புறந்தள்ளி பேசுவதால்தான் மாற்றானும் ஆன்மீகம் என்ற பெயரில் இங்கே கடைபோட கிளம்புகிறான்.
கெயிக்குவாடின் ஆன்மீகத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரே கேள்வி:
ஊரிலும் வீட்டிலும் குலதெய்வம் உள்ளிட்ட எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டே, வரலாற்றில் இருக்கும் முழுமையான தமிழ் ஆன்மீக அடித்தளத்தை நீங்கள் புறந்தள்ளினாலும், நீங்களே ஏற்கிற வள்ளலாருடைய மண் இந்த மண் என்பதை ஓங்கிச்சொல்வீர்களா? வள்ளலாரால் காக்கப்பட்ட மண்ணான இம்மண்ணுக்கு மராட்டியத்திலிருந்து இறக்குமதியாகும் புற-ஆன்மீகம் தேவையில்லை - போடா போ! என்று சொல்வீர்களா?
உங்கள் குறிக்கோள் நேர்மையானது என்றால், தமிழ் ஆன்மீகத்தை மறைக்காமல், புறத்தேயிருந்து உள்நுழையும் புற-ஆன்மீகத்தை தமிழ்-ஆன்மீகத்தால் மறுத்து குரல் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழ்-எதிர்-பிற என்று இருக்க முடியும். அந்தத்தமிழ், வடக்கேயிருந்து வரும் பிற பித்தலாட்ட ஆன்மீகத்தை துடைத்து எறிந்துவிடும்.
இல்லாவிடில், நீங்களும் கெட்டு, இம்மண்ணும் கெட்டு எல்லாமே நாறிப்போக வழிகாட்டிக்கொண்டே இருக்கும்.
வேண்டுமானால், உங்களுக்காக சிறிய இளக்கம் சொல்கிறேன்.
மற்ற யாரையும் உங்கள் பகுத்தறிவின்பாற்பட்டு முதன்மையாக கூறவேண்டாம்; தொன்மையை போற்றுபவரானால், முருகாற்றுப்படை செய்த நக்கீரரின் மண் இது என்று கூறுங்கள். அல்லது அண்மையை மதிப்பவரானால், "வள்ளலாரின் மண்" என்று சொல்லுங்கள். புற-ஆன்மீகரை பார்த்து நீ இதில் யாரடா? என்று கேளுங்கள்.
எது அகம், எது புறம்? என்ற வேறுபாடுகூட தெரியவில்லையெனில் எப்படி
வெல்ல முடியும்?
கூடவே இது பெரியாருடைய மண் என்று வேண்டுமானால் உங்கள் ஆசைக்கு போட்டுக்கொள்ளுங்கள். நான் குறுக்கே வரமாட்டேன்.
ஆனால் மண்ணின் ஆன்ம வரலாற்றை மொத்தமாக மண்ணால் மூட விடமாட்டேன்.
The war between "Nothing vs Everything" is absurd. So the Nothings have to learn to take up Something to fight Everything, and let them take Tamilthing.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4/1/18

Sunday, December 31, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.
பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.
14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.
அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.
தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.
மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.
இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.
96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில், ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை தீர்க்க காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?
ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.
ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?
எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!
நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான். தமிழுட்பகைகளின் திரட்சிகளே அயலவர் நுழைய இடம் கொடுக்கின்றன.
"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!
தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிக்க தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.
சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.
பார்க்கும் பெண்ணையெல்லாம் காமுறுவதற்கும், பார்க்கும் நடிகரையெல்லாம் ஆளவைப்பதற்கும் என்ன வேறுபாடு?
விதைப்பதுதானே முளைக்கும்?
இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

அன்புடன்
நாக.இளங்கோவன்
31/12/2017

Saturday, December 30, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.

பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.

14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.

அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.

தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.

மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.

இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.

96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே  ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில்,  ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை  காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?

ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.

ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?

எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!

நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான்.

"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!

தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிப்பது தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.

சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.

விதைப்பதுதானே முளைக்கும்?

இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

தமிழின் இயக்கம் இருப்பதாக தமிழியக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அதன் மனசாட்சிக்குத்தெரியும் பொய்யென்று.

Friday, November 03, 2017

ஆர்வர்டு இருக்கையும் சிந்தனைமரபுகளும்

http://www.vikatan.com/news/tamilnadu/106688-these-tamil-teachers-gave-their-one-day-salary-for-harvard-tamil-chair.html

தாம்பரத்தில் ஒரு வேதபாடசாலை இருக்கிறது. திருச்சியில் எங்கள் ஊரில் உள்ள தெலுங்கு பிராமணர்கள் இங்குதான் அவர்களின் பிள்ளைகளை வேதபாடம் படிக்க வைப்பார்கள். படிப்பு முடிந்து கொஞ்சம் பயிற்சி கிடைத்ததும் கடவுச்சீட்டை எடுத்து தயாராகிவிடுவார்கள். அமெரிக்காவில் எங்கே கோயில் கட்டுகிறார்கள் - பரத்வாசர் மடம், சங்கர மடம் அல்லது அமெரிக்காவில் இருக்கும் தெரிந்தவர்கள் வழியே அமெரிக்க கோயில்களில் அருச்சகர் பணிக்கு போவதற்கு ஆளாய் பறப்பார்கள். அப்படியும் ஓரிருவர் தவிர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த ஊரில் அவா போயிருக்கா, இந்த ஊரில் இவா போயிருக்கா - அவாளுக்கும் இவாளுக்கும் சுலோகமே சொல்லத்தெரியாது - ஆனால் அவாளுக்கெல்லாம் கிடைச்சுடுத்து - எங்க சீதரன் நன்னா படிச்சுருக்கான் - ஆனா அவனுக்கு கிடைக்க மாட்டேங்குது. நல்லவாளுக்கு காலமே இல்லை;  ம்ம்ம்ம் என்று அவர்கள் அலுத்துக்கொள்வது என்னை சிந்திக்க வைத்ததுண்டு. இங்கிருப்பது போலத்தான் அங்கும் அவர்களுக்கு வருமான முறை; கொஞ்சம் தூக்கலாக இருக்கும் அவ்வளவுதான். Jr. Archagar ஆக வேலை கிடைத்து அங்கே போய்விட்டால், தினமும் ஒரே மாதிரியான வேலை. பெயர் நட்சத்திரத்திற்கு அருச்சனை செய்வதும், இறைப்படிமங்களுக்கு செய்ய வேண்டிய தொண்டு, சிறப்பு பூசைகள், விழாக்கள் ஆகியனவற்றை தொடர்ந்து சுழற்சி முறையில் காலம் முழுக்க செய்து கொண்டிருப்பார்கள். இதைச்செய்வது அருச்சகர் மரபில் வருபவர்களின் ஈகை அல்லது தியாகம் என்று சொன்னால் மிகையன்று. தமிழ்த்துறையில் உள்ளவர்களும் பற்றாளர்களும் தமிழ் வாழ்க என்று சொல்லி பத்தியோடு அரைத்த மாவையே நிதமும் அரைக்கும் தமிழ் ஈகை, தொண்டு, தியாகத்தை போன்றதே அருச்சகர் பணியும்.

இது அருச்சகர் வேலைக்கு போவது பற்றியென்றால், அந்தக்கோயிலை கட்டுவது என்பது எப்படி என்று எண்ணிப்பார்த்தால், நம்மூரில் ஊர்க்கோயில் கட்டுவதற்கும் அமெரிக்காவில் கோயில் கட்டுவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஊர்ப்பெரியவர்கள் கூடி முடிவெடுப்பர். ஓரிருவர் பெருநிதியளிக்க, ஊரில் உள்ள எல்லாரின் பங்களிப்பும் சிறிதளவேனும் இருக்கவேண்டியது அவசியம் என்ற மரபின்படி எல்லாரிடமும் நிதி கேட்பார்கள்; எல்லாரும் நிதி அளிப்பார்கள்; செய்தியில் உள்ள தமிழாசிரியர்கள், ஒருநாள் ஊதியத்தை கொடுப்பதைப்போல.  கோயில் குடமுழுக்கு, முதல்மரியாதை, சிறப்பு வேள்விகள் எல்லாம் நடக்கும். கோயிலின் அளவைப்பொறுத்து, அரசு உயரதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் கலந்து கொண்டு, சாமியையும் கோயிலையும் ஆசீர்வதிப்பது வழமை; ஆர்வர்டு இருக்கைக்கு அரசு நிதியளித்து ஆசிகள் வழங்கியது போல.

பேராசிரியர் அரசு, முனைவர் இரவிக்குமார், திரு.ஒளிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட நேர்காணலிலும் தமிழ்மன்ற உரையாடல்களிலும் அனைவருமே ஆர்வர்டு இருக்கைக்கு ஆதரவாகவே கருத்தளித்தனர். ஆனால், 1) ஏற்றத்தாழ்வின்மை 2) ஆளுமைக்கட்டுப்பாடு என்ற இரண்டை வலியுறுத்துகிற இராசம் அம்மா, இரவிக்குமார், இராம.கி ஐயா, அடியேன் ஆகியோரின் கருத்துகளுக்கு எப்பொழுது விடைகிடைக்கும் என்பது இறைவனுக்குதான் வெளிச்சம்.

இரவிக்குமார், வெளிநாட்டார் புதுவையிலமைத்த பிரான்சிய நிறுவனத்தில் காணப்படுகிற ஊதிய/பணி ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார் என்றால், இராசம் அம்மா தமிழ்நாட்டார் முயன்று கலிபோர்னியாவில் பெர்கலியில் உருவாக்கிய இருக்கையிலும், பென்சில்வேனியாவிலும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார். நம்மூரிலும் அவர்களின் சட்டம், அவர்களூரிலும் அவர்கள் சட்டம் என்ற போக்கு நமக்கு துளியும் வருத்தமளிப்பதில்லை.

பேராசிரியர் அரசு ஒரு மதிக்கத்தக்க சிந்தனையாளர். திராவிட சிந்தனை மரபும் தனித்துவமும் கொண்டவர். Tamil Entertainers - ஐ மட்டுமே தமிழ்க்கல்வியுலகம் உருவாக்கியிருக்கிறது என்று அழுந்தச்சொல்லும் அவரும் முதலில் இருக்கையை உருவாக்குவோம் - பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றே சொல்கிறார். அவர் உரையின் சாரம் அதுதான். பலரின் கருத்தும் அதுதான்.

திராவிட ஆட்சிகளில் எத்தனையோ தமிழ்க்கல்விக்களங்களை உருவாக்கினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ஒன்றுகூட விளங்கவில்லை என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. அதாவது, சொல்லி பெருமைகொள்ளும்படியாக எதுவுமே இல்லை.

திராவிட சிந்தனைமரபு என்பது, ஆரவாரம் செய்யும், களப்பணிகளையும் திறம்பட செய்யும், கட்டடம் கட்டும், விழா எடுக்கும்; எடுத்தபின் பந்தியை போடும் - சாப்பிட்டுவிட்டு, நெற்றியில் வந்த சிறுவேர்வையை துண்டால் துடைத்துவிட்டு, வெற்றிலை பாக்கு போடும்; அப்புறம் அப்படியே தூங்கிவிடும். யாராவது இன்னுங்கொஞ்சம் செய்ங்கன்னு சொன்னால், சரி என்று, திண்ணையில் உட்கார்ந்து சீட்டாடும்.

இப்படித்தான் திராவிட சிந்தனைமரபு உருவாக்கிய திராவிட பல்கலைக்கழகம் தொடங்கி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வரை காட்சிகள் இருக்கின்றன. அதனால், வீ.டி.அரசின் கருத்துகள் அந்த சிந்தனைமரபின் தாக்கம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இப்படியே பேசி பழகிவிட்டார்கள். முதலில் கட்டடத்தை கட்டுல; அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிச்சுக்கலாம் - என்பதே இந்த சிந்தனை மரபின் போக்கு. ஆர்வர்டு இருக்கையும் இப்படித்தான் அமைகிறது என்று கருதலாம்.

ஒளிவண்ணன் பேசுவது சந்தை மரபு. அது தேவைதான். ஆனால் அடிக்கட்டமைப்பு வலுவாக இல்லாத ஒரு குமுகம் ஆர்வத்தில் செய்யும் உழைப்பு பெரிய சாதனையை கொண்டுவந்துவிடும் என்று அவர் கருதுவதை முழுமையாக நம்பமுடியவில்லை. உள்ளூரிலேயே எங்கள் தமிழ் உயர்வென்று பேசுகின்ற தமிழர்களுக்கு ஆர்வர்டில் மேடையமைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் எண்ணுவது போல நடந்தால் சரிதான்.

தமிழ்த்தேசிய சிந்தனை மரபினை பேசும் சீமானும் வெறும் அரசுநிதி வேண்டும் என்ற ஆதரவு கோரிக்கையோடு நிறுத்திக்கொண்டார். அவர்களும் மெதுவாக சிந்திக்கக்கூடும்,

தமிழியக்க, தனித்தமிழியக்க சிந்தனை மரபினரும் திராவிட சிந்தனை மரபால் மழுங்கடிக்கப்பட்டவர்கள்; சொல்லப்போனால் காயடிக்கப்பட்டவர்கள். அவர்கள் வாய் திறக்காததில் வியப்பொன்றுமில்லை. அவங்களுக்கு இன்னும் எதைப்பார்த்தாலும் வியப்பாகவே இருக்கிறது.

தமிழக அரசின் நிதிமரபு என்று ஒன்றுண்டு. தெற்காசிய நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு வருடாவருடம் படியளப்பது அந்த மரபு. அந்தமரபிலே ஆர்வர்டுக்கும் படியளந்து பெருமை சேர்த்துக்கொள்கிறது போல. தமிழக அரசின் வீட்டோ அதிகாரத்துடனான உறுப்பியம் வேண்டும் என்ற எனது கருத்திற்கு, பழனிச்சாமியின் பேத்தியை உறுப்பினராக போட்டால் என்ன செய்வது என்று கேள்வியை நண்பர் வேந்தர் வைத்தார் என்று கருதுகிறேன். பழனிச்சாமியின் பேத்தியானாலும் எனக்கு அது சரி; உலக மாகவிஞரும் தமிழ்ப்பேரறிஞருமான, முத்துவேலரின் பேத்தியாக இருந்தாலும் எனக்கு அது சரிதான். ஒருவேளை முறைகெட்டுப்போனால், இந்த உறுப்பியத்தின்வழியே அழுத்தம் கொடுக்க முடியும். ( all i need is a handle - thats all)

வடக்கத்தி மரபு என்று ஒன்றுள்ளது. அதன்படி, சமற்கிருத இருக்கைகள் தொடங்கும்போது கம்மையாக, வலுவான நிதியோடு அவை துவக்கப்படுகின்றன. அது தெளிவாக சமற்கிருதத்தை முன்வைத்து அமோகமாக ஆராய்ச்சி செய்கின்றது என்பது உண்மைதான். தமிழர்களோ நிதிவலு சற்று குறைவாக, ஆனால் பெரிய ஆரவாரத்தோடு, புனிதப்பணியாக செய்கின்ற தமிழ் இருக்கைகளும் சமற்கிருத இருக்கைகளை வழிமொழியும் இருக்கைகளாக உருவாகிவிடுகிற வாய்ப்புகளைப்பற்றி பயப்படத்தேவையில்லை என்றளவோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

இதெல்லாவற்றையும் தாண்டி, பிரபாகர மரபு என்ற ஒன்று உள்ளது. பிரபாகரத்தை சுற்றியுள்ள அரசியலை, போரை விட்டுவிடுவோம். ஆனால், பிரபாகரன் என்ற சிந்தனையாளரை சிங்களர்கூட மதிப்பார்கள். தெளிவான சிந்தனை, நிதானம், செயலுறுதி, எங்கேயும் தமிழ், தமிழரின் தாழ்வை ஏற்றுக்கொள்ளாத போர்க்குணம், பேசாமல் பேசவைப்பது, எண்ணித்துணிதல், ஆளுமை போன்ற அவர் காட்டிய சிந்தனை மரபு உயர்ந்தது என்பதை தமிழ்ப்பற்றாளர்களும், காழ்ப்பின்றி ஆயுநரும் ஒத்துக்கொள்வர். மேதகு பிரபாகரன் ஒரு கல்வித்தளத்தை, ஆய்வுத்தளத்தை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அவர் எப்படி செய்திருப்பார் என்று ஒருகணம் சிந்தித்துப்பார்க்கிறேன்.

அவர், 1) உலகத்தமிழ் நிலையில் தமிழறிஞர்கள், ஆசிரியர்களுக்கு வெளிநாட்டவரைவிட ஊதியத்தாழ்வு தரும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மாட்டார். 2) வெறும் துபாசிகளாக அவர்களின் நிலையை ஆக்கியிருக்க மாட்டார். 3) தனது அரசு வீட்டோ அதிகாரத்துடன் உறுப்பியம் பெறாத எந்த ஒன்றையும் தமிழ்மொழிக்காக முன்னிறுத்த மாட்டார். 4) தமிழர் தலைமையில்லாத அமைப்பை தன்னமைப்பாக கருதவே மாட்டார். 5) சிறு அமெரிக்க வெள்ளிக்கும் ஐரோப்பிய ஐரோவிற்கும் தலையாட்டும் தமிழ்ப்பணிகளை பாராட்டமாட்டார். 6) உள்நாட்டில் இருக்கும் தமிழ்க்கல்வி, ஆய்வுக்களங்கள் அழுகிப்போக விட்டிருக்க மாட்டார். 7) உருமீன் வரும்வரை காத்திருப்பார்.

இவைதான் நான் அவரிடம் கற்றுக்கொள்ள முயலும் கைமண்னளவு.

கோயில்கட்டும் பணி புனிதமானது. அதேபோல ஆர்வர்டு இருக்கை உருவாக்குவதும் புனிதமாகவே கருதுவதில் தவறில்லை. ஆனால், கோயிலில் செய்யும் பணியும் கல்வித்தளத்தில் செய்யும் பணியும் மிக மாறுபட்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளும் அதேவேளையில், கோயிலில் ஒரேசுழற்சியாக செய்யும் பணியில் கூட ஆளுமை இருக்கிறது என்பதும் அதைவிட சிறந்த ஆளுமை தமிழ் ஆய்வுத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானவையாக படுகின்றன. இருக்கையமைக்க இமைமூடாது உழைப்பவர்களை வாழ்த்துகின்ற அதேவேளை, தற்போது விட்டாலும், ஆர்வர்டிலும் பிறவெங்கும் துபாசி வேலைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி தமிழாளுமைகள் உருவாக நீங்களே வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

தொடர்புள்ள நேர்காணலின் காணொளி:
https://www.youtube.com/watch?v=zHRC0lLVECw&feature=youtu.be






















Wednesday, September 20, 2017

பெரியபுராணம்::எறிபத்த நாயனார்::பகுதி1 - மாநவமி

கருவூர். புகழ்ச்சோழநாயனார் என்று எதிர்காலம் போற்றிய புகழ்ச்சோழனின் தலைநகரம். ஆனிலையப்பரும் அலங்காரவல்லியும் எழுந்தருளியிருக்கும் திருப்பதி. இராசராசனுக்கு தோளோடு தோணின்ற கருவூரார் வாழுமிடம். எறிபத்த பூமியது.

மேகங்கள் உலாப்போகும் உயர்ந்த மதில்களும், அம்மதில்களைவிட பலவடுக்கு உயர்ந்து விண்ணை முட்டிப்பார்க்கும் மாடமாளிகைகளும், அவற்றை அரணிக்கும் கோட்டை வாயில்களில், நிறைந்த ஓசையை தரும்பொருட்டு நீதிக்கு விளக்கமாய் நெடிதுயர்ந்து நிலம் பார்த்து நிற்கும் வலிய பெரிய மணிகளும், இவற்றால் சூழப்பட்ட சோலைகள் தமது மலர்களால் ஊரெங்கும் நறுமணம் வீசுதலும், அந்நறுமணங்கமழும் தேன்சொரி மலர்கள், பெண்களின் அழகிய நெற்றியில் சுருண்டு தவழும் கூந்தலையும் சூழ்ந்துகொள்ள, அம்மமலர்களைச்சூடிய சிலபெண்டிர் தெருக்களிலே நடந்து வரும்போது விண்ணின்று இறங்கி நடந்துவரும் முழுநிலவைப்போல வருதலும், கருவூரை தேவ உலகத்தின் அழகையும் செல்வத்தையும் விட உயர்வாக காட்டிக்கொண்டிருந்தன.

இயற்கையை சூறையாடும் மணற்கொள்ளையின் தலைநகரமாய் இன்று நாம் ஆக்கிவைத்திருக்கும் அம்மாநகரத்தை, இயற்கையும் சிவமும் தமிழுமாய் எறிபத்தரொடு ஒப்பற்று விளங்கிய அந்த 11-12 நூற்றாண்டு கருவூரின் உயர்வை, சேக்கிழார் பெருமான் தீட்டி வைத்த சித்திரந்தான் இப்பாடல்.

மாமதில் மஞ்சு சூழும்
...மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
...சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
...சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும்
...சதமகன் நகரம் தாழ.
.......பெரியபுராணம்:எறிபத்தநாயனார்::3

இறைவனுக்கு பூச்சாற்றுதல் மாலைசாற்றுதல் எனும் வழக்க, காலத்தால் என்று தொடங்கியதென்று தெரியவில்லை; ஆனால், மனிதன், தான் அணிந்து மகிழும் உயர்வானவற்றை இறைவர்க்கும் இறைவிக்கும் அணிவித்தான் என்பது உண்மைதானே. அரசர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சூடிக்கொள்ளும் மாலையிலும் அடையாளப்பூ இருந்ததுதானே. "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..." என்று அப்பரடிகள் சொன்னதில், பூவிற்கு இறைவன் தருமிடம் எவ்வளவு உயர்ந்தது என்பது நாம் அறிந்ததுதானே.

இன்றெல்லாம், என்றோ பூத்த பூக்களையும் பூச்சரங்களையும் தெருவோரத்தில் வாங்கிவந்து நாட்கணக்காய் தணுப்பியில் வைத்து பாதுகாத்து நாடோறும் இறைக்கு சாற்றுவதுதான் பல வீடுகளிலும் நடப்பன. இறைவர்க்கு எப்படிப்பட்ட பூவை சாற்றவேண்டும்?

அன்றலர்ந்த புது மலர்களை சாற்ற வேண்டும் என்பர்.

அலர்ந்த மலர்களையா சூடவேண்டும்?

மலரவிருக்கும் மொட்டை,
மலர்வதற்கு முன்னர் பறித்து,
மாலையாக்கி, இறைமார்பில் சூடியதும்
அம்மொட்டு மலரவேண்டும்!

இதுதான் மலர்சூட்டும் கணக்கு. அம் மலர்மொட்டு அவிழும்போது அதுதரும் வாசம் இறைவனை சேரவேண்டும். அவனுக்கு அது பிடிக்கும்.

அதற்காகத்தான் சிவகாமியாண்டார் வைகறையில் துயிலெழுந்து அமராவதி (ஆம்பிராவதி) ஆற்றிலே நீராடி, சோலையில் இறைவனுக்கு சாற்றவேண்டிய அலங்கலுக்கு (அலங்கல் = மாலை) தேவையான மலர்களை பறித்துக்கொண்டிருந்தார். இறைவனுக்கு மட்டுமா? அலங்கல் ஆர்த்த வல்லியான அலங்காரவல்லிக்குந்தான்.

நித்தலும் அது அவர் கடன். இம்மியும் பிசகாது செய்துவரும் நெடுநாள்-தொண்டு.

கையிலே ஒரு கோல் அல்லது தண்டு. அதன் முனையிலே ஒரு வளைவு. துரட்டி என்போமில்லையா? அதைப்போல. உயரமான செடிகளிலே பூவிருந்தால் செடியை சற்று வளைத்து பூப்பறிக்கவும், பறித்த பூவை கூடையில் போட்டு, அக்கூடையை அக்கோலிலே மாட்டிவிட்டு தோலிலே சுமந்து கோயிலுக்கு செல்லவும் அக்கோல் அவருக்கு துணையாயிருந்தது.

வைகறை யுணர்ந்து போந்து
...புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
...நந்தவனத்து முன்னி
..............பெ.பு:எ.ப::9

கோலப்பூங்கூடை தன்னை
...நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங்கொண்டு
....மலர்க்கையில் தண்டுங் கொண்டங்கு
ஆலயம் அதனை நோக்கி
..............பெ.பு:எ.ப::10

இறைவனுக்கு நித்தலும் இந்த மலர்த்தொண்டினை தவறாது செய்து வந்த சிவாச்சாரிய மரபில் தோன்றிய தமிழ் அந்தணரான சிவகாமி ஆண்டார் என்ற அந்த முனிவர், பூக்கூடையை கோலில் மாட்டி தோளில் தூக்கிக்கொண்டு செல்கிறார் அலங்காரவல்லி உடனுறைகின்ற ஆன் நிலையப்பரின் திருக்கோயிலுக்கு. பொழுது புலர்வதற்குள் அதனை அலங்கல் அல்லது மாலையை ஆக்குநரிடம் கொடுத்து தானும் உதவி, மாலையாக்க வேண்டும்; இறைவர்க்கு சாற்ற வேண்டும். அம்மலர் மொட்டுகள் மலர்ந்து வாசம் போய்விடக்கூடாது; விரைகிறார்.

சோழ-வளநாட்டரசனான புகழ்ச்சோழனின் பட்டத்து யானை! பட்டத்து யானைக்கென்றே இருக்கும் தனிச்சிறப்புகளான வீரமும் வேகமும் அதற்கும் உண்டு. அதே வைகறையில் அமராவதியில் நீராடுகிறது. அரசமங்கல யானைக்கு சூட்டவேண்டிய மங்கல அணிகளையெல்லாம் சூடிவிடுகிறார்கள் பாகர்கள். அதற்குப்பூசவேண்டிய மங்கலப்பூச்சுகளும் திலகங்களும் இடப்படுகின்றன. உயர்ந்த உடுப்புகளும், விரிப்புகளும் அரசயானையை அலங்கரிக்கின்றன.
சிறிது மதநீர் அதன் கண்களில் வருகிறது. பாகர்கள் சற்று கவனத்தை அதிகரிக்கின்றனர்.

புரட்டாசி அமையுவாவை (அமாவாசை) அடுத்தநாள், சத்தி வழிபாடான ஒன்பான்
திருநாளின் தொடக்கம். சத்தியின் மூன்றுவடிவங்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவருக்கும் மும்மூன்று நாள்கள் சிறப்பு செய்ததும் பெருவிழா நடப்பது வழமை. ஒன்பதாவது திதிக்கு நவமி என்று பெயர். சத்திவிழவின் நிறைவுநாளை மாநவமி என்று பெரியபுராணம் சொல்கிறது. மாநவமியை அடுத்த நாளான பத்தாந்திதியன்று இக்காலத்தைப்போன்றே அக்காலமும் பெருவிழாக்கொண்டாட்டம் இருந்தது. அதற்காக நகரமே இருநாள்கள் முன்பே, அதாவது எட்டாந்திதியான அட்டமி அன்றே திருவிழாக்கோலம் பூணத்தொடங்கியது என்றே சொல்லவேண்டும். ஒன்பான்விழவு நமது தொன்மையான சத்திவழிபாட்டின் தொடர்ச்சி என்பதுதான் பெரியபுராணத்தின் பாடல்வரிகளில் பதிவாகியிருக்கிறது.

மற்றவர் அணைய இப்பால்
...வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
...குலப்புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
...பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்ற  வெங்களிறு கோலம்
...பெருகு  மாநவமி முன்னாள்.
..............பெ.பு:எ.ப::11
(மாநவமி முன்னாள் = நவமிக்கு முந்தைய நாளான அட்டமி)

யானையும் அன்று திருநாளுக்கு தயாராகியது போல. சிவகாமியாண்டாரும் அதிகாலை பூசைக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

சற்றே மதநீர் சொரிய நடந்து வந்த யானைக்கு திணவும் குறும்பும் கூடியதால்
தெருக்களை யானை கடக்கும்போது சில இடங்களை முட்டியும் தட்டியும் வந்து கொண்டிருந்தது.

கோயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டாரின் பூக்கூடையை
பறித்து நிலத்தில் வீசிவிட்டு நகர்ந்தது. மலர்கள் மண்மேல் சிதறின.

நெடுங்காலமாக தவறாமல், சிந்தாமல், சிதறாமல் செய்துவந்த அவரின் மலர்த்தொண்டு ஒன்பான்விழவின் எட்டாம் நாளான அட்டமியன்று தடங்கிப்போனது.

இறைமேல் இருந்த அவரின் காதல் தூய்மையானது. மனம் மயங்கியது; கண்கள் கலங்கின;  நெஞ்சம் கொதித்தது அந்த எளியவரான கிழமுனிக்கு.

கையறுநிலையில் அடக்கமுடியாத அழுகையோடு, மூப்பில் துவண்ட உடலினரான அந்த முனிவர் தன்னிடம் இருந்த கோலை உயர்த்திக்கொண்டு அந்த யானையை அடிக்க ஓடியது, மழலையொன்று பிரம்பெடுத்து மலையை அடிக்க ஓடியது போல இருந்தது.

ஓடமுடியவில்லை; குழந்தை தடுக்கி கீழே விழுவது போல விழுந்தார். வல்லான் முன்னர் வாடி நிற்கும் எளியரின் கையறு நிலையில் சிவகாமியாண்டார். பொறுத்தாரில்லை; நிலத்தை அடிக்கத்தான் முடிந்தது;  அடித்தார். நிலமகளை சாட்சியாக வைத்து இறைவனிடம் முறையிட்டார்;

களியானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா சிவதா!
அளியார் அடியார் அறிவே சிவதா!
தெளிவார் அமுதே சிவதா சிவதா!
..............பெ.பு:எ.ப::16

களிப்பின் மிகையால் ஆணவம் கொண்ட ஒரு யானையின் தோலை உரித்து போர்த்தியவன்தானே சிவன்! அதை எண்ணி சிவனை அழைத்தார் போல!
சிவபெருமானின் காதில் விழுந்ததால்தான் எறிபத்தருக்கும் அது கேட்டது போல.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்