Pages

Sunday, July 31, 2011

கணேச கிளியம் - தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்

நூற்பெயர்: கணேச கிளியம்
வகை: இலக்கணம் - 23ஆம் நூற்றாண்டு
"தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்" பற்றியது,
நூலாசிரியர்: நாக.இளங்கோவன்
பதிப்பாசிரியர்: தமிழ்ப்பூட்டன் கு.கே.இராமநாத சேர்வை

நூற்குறிப்பு:


இந்நூல் 23 ஆம் நூற்றாண்டில் விளங்கிய உயர்ந்த
தமிழாராய்ச்சி மரபுகளைத் தொகுக்கும் தமிழாராய்ச்சி
மரபு இலக்கண நூலாம். மெல்ல மெல்ல உருவாகி
வந்த இந்தத் தமிழாராய்ச்சி மரபு கணேசபுலவர் என்ற
தொல்பெரும் புலவரால் பெரிதும் ஓம்பப்பட்டதாகும்.
அதனாலேயே இவ்விலக்கண நூல்
கணேச கிளியம் என்று பெயர்பெற்றிருக்கிறது.

"கணேச புலவர்க்கு ஒப்பாரும் மிக்காரும்
இப்புவியிற் காண்டலரிது" என்று
புகழப்பட்ட கணேச புலவர் அடங்கோட்டு
ஆசானிடம் தமிழ் பயின்றவர். எல்லாவற்றையும்
தப்புத் தப்பாய்ச் சொல்லி அடம்பிடிக்கும்
கலையைக் கசடறக் கற்றுத் தந்த அடங்கோட்டாசாற்குக்
கடமைப்பட்டுள்ளேன் என்று
கணேசகவியில் குறிப்பிட்டுள்ளமை காண்க.

கணேசபுலவர் 23ஆம் நூற்றாண்டில் உலகில்
விளங்கிய அத்தனை மொழிகளின்
இலக்கணங்களையும் இலக்கியங்களையும்
கற்றுத் துறைபோகிய ஒரே புலவர்
என்பதால் இவரை ஊழிப்புலவர் என்றும் வழங்குவர்.

இவரிடம் எந்த மொழி இலக்கிய/இலக்கணக்
கேள்வியைக் கேட்டாலும் இமைப்பொழுதில்
அதற்குத் துல்லியமான விடையையும் அந்த
மொழி வழங்கும் நாட்டைச்
சுற்றியுள்ள 30 நாடுகளின் இலக்கியச்
சான்றுகளையும் வழங்குவார் என்பதே
இவரின் திறத்தினைப் பறைசாற்றுகின்றது.

அஃதோடு ஒவ்வொரு நாட்டிலும் அலையும்
பேய்கள் அடுத்த நாட்டில் போய்ப்பேச முடியாமை
கண்டு இரங்கி அதற்கு ஏதுவாக பேய்மொழிச் செந்தரம்
ஏற்படுத்த அயராத் உழைத்தார் என்று சொல்வார்கள்.

இதற்குத் தோதாக அம்மொழி எழுத்துக்களுக்கெல்லாம்
சீர்திருத்தம் வேண்டி மொட்டை போட்டு
முக்காடிடும் முறையைக் கண்டுபிடித்ததால்
ஆவிஎழுத்தச்சன் என்றும் பெரியோர் புகழ்கின்றனர்.

மேலும் குறிப்புகள் பாகம்-2ல் காண்க.

பதிப்பாசிரியர் குறிப்பு:

காண்டற்கரிய இவ் இலக்கண நூலின்
முதற்பாகத்தைத் தமது கடுமையான
உழைப்பினாற்றேடி இத்தமிழ் உலகிற்கு
நல்கியவர் தமிழ்ப்பூட்டன் என்று
அன்போடு அழைக்கப்படும் கு.கே.இராமநாத சேர்வை
அவர்களாவார். இவர் 25ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
பேரறிஞர்களுள் ஒருவராவார்.
அப்பெருந்தகை காலமாகிவிட்டபின்
பாகம்-2 முதல் 27வரை எங்கிருக்கென்று
கவலைப் பட்டுத் தேடியே தமிழுலகம்
இளைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

நூலாசிரியர் குறிப்பு:

நாக.இளங்கோவன், 24 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர் என்று ஒரு சாராரும், கணேசபுலவர்க்குச்
சமகாலத்தவர் என்று ஒரு சாராரும்
சொல்கின்றனர். எது எப்படியெனினும்
கணேசபுலவரும் நாக.இளங்கோவரும்
ஒருவருக்கொருவர் மாறாத அன்பு பூண்டவர்
என்பதை மட்டும் அவர்களின் பல்வேறு
மின்னஞ்சல்களில் காணக் கிடைக்கிறதென்கிறார்
அறிஞர் கெ.தோ.மீ. (மின்னஞ்சல்
என்ற சொல் "மினஞ்சா" என்ற
சமசுக்கிருதச் சொல்லில் இருந்து தமிழ் கெஞ்சி
வாங்கியது என்று தூய தமிழ்ப்புலவர்
கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது;
மினஞ்சா > மின்னஞ்சா > மின்னஞ்சல்).

இளங்கோவன், கணேசபுலவர் ஆகியோர்
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள
நகுளாச்சி என்ற பகுதியில் வாழ்ந்து
தமிழ்த் தொண்டாற்றியவர்கள் என்று ஒரு
சில பகுதிகளில் புராணக் கதை கட்டி
விடுவார்களுமுண்டு.

இளங்கோவன் என்ற பெயர் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்ற வடசொல்லில் இருந்து தமிழுக்குக்
கள்ளத்தோணியில் வந்திறங்கியது என்று
கணேசகிளிய மரபினர் மிகத்தெளிவாக
நிறுவியிருக்கின்றனர் என்பதே
இம்மரபின் புகழைச் சொல்லா நிற்கும். இந்த
நூலுக்கு உரை வகுக்க எந்த அறிஞராலும்
எந்தக் காலத்திலும் முடியவில்லை என்பதால் நூலாசிரியரின்
வழித்தோன்றலான ஆறாம் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்பவர் வேறுவழியின்றி எழுதியிருக்கின்றார் என்று
அறியமுடிகிறது. மேலும் குறிப்புகளை
பிற பாகங்களில் கண்டுகொள்க.

பாயிரம்:

இவ் இலக்கணத்தின் பெருமையறிந்த
தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக
வாழ்த்தி பன்னூறு பாயிரம் தந்ததால்
எந்தப் பாயிரத்தை முன்னே வைப்பது
என்று குழம்பியும், இலக்கணத்தை விட
பாயிரங்கள் நீண்டுவிட்டதாலும்
அடக்கம் கருதி பாயிரத்தை ஆசிரியர்
நூலோடு சேர்க்கவில்லை என்றும் அறிக.

கடவுள் வாழ்த்து:

ஆங்கிலர் பார்க்கையில் அவர் சிலுவை போற்றி!
ஆதாயம் கிடைக்கையில் பிறையே போற்றி!
அம்மை பார்த்தால் அம்பாள் போற்றி!
அக்கைக் கண்டால் சிவனே போற்றி!
தெரியாவிட்டால் சமணன் போற்றி!
தெளிவைத் துறந்தால் புத்தன் போற்றி!
தேவைப் படுகையில் பெரியார் போற்றி!
தமிழைக் கெடுக்கெனின் பேயே போற்றி போற்றி!!

தந்திரம்-1 - கணேசகுடுக்கு


நூற்பா-1:
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
குடாக்குடு குடுகுடாக் குடகுட

உரை:

கணேசகிளிய மரபினர் தமிழ் ஆராய்ச்சிக்குள்
பாயும்போது தமிழர்களின் பின்யாம
இசைக்கருவியான குடுகுடுப்பையின் ஓசை இயல்பாக
எழும். "அது ஒன்றே போதும் இந்த ஆராய்ச்சிமரபு தெய்வத்தன்மை
வாய்ந்தது என்று சொல்வதற்கு" என்று பேரறிஞர் கொ.மு.செ
கூறியிருப்பது காணத்தக்கது.

ஈற்றுச் சீரான "குடகுட" என்று நூற்பாவில்
சொல்வது குடுகுடுப்பைக்காரர்
அன்றோ மறுநாளோ பகற்பொழுதில்
வீட்டுக்கு வந்து "கழிப்புக் கழித்தல்"
செய்வதையே குறிக்கிறது என்றும், அதன்படி
தமிழாராய்ச்சியில் தப்பித் தவறி யாரும்
"இது தமிழ்ச்சொல்" என்று சொல்லிவிட்டால்
அச்சொல்லுக்கும் அவருக்கும் கழிப்புக் கழிக்கும்
மரபையே இது குறிக்கிறதென்பதை நிறுவுகிறது என்று
சீலசிறீஆர்ப்பொலா கூறியிருப்பதை அனைவரும்
ஏற்றுக்கொள்கின்றனர். இதன் இலக்கணச் சிறப்பை,
ஈற்றடியில் மெல்ல மெல்ல மெலியும் டகரத்தில்
இருந்து அறிக.

தந்திரம்-2 - க'சிகாமணி

நூற்பா-2:

அள்ளி வீசுதலா யிரமாந் தலை
யாயிரம் வீசுதற் போல!

நூற்பா-3:

அள்ளி கிள்ளி உள்ளி நள்ளி!

உரை:

நூ-2ல் அள்ளி வீசுதல் என்பது யார் என்ன
எழுதுகிறார்கள் என்பது பற்றி
அக்கறை கொள்ளாமல், குறிப்பாக 247க்குட்பட்ட
தமிழைப் பற்றிப் பேசும்போது அதைத் தாண்டி
உலகில் இருக்கும் எல்லா எழுத்துக்களைப்
பற்றியும் ஆயிரம் மின்னஞ்சல்களுக்கு அள்ளி
வீசுவதாகும்.

கோட்டை மதிலில் அம்புகள் அள்ளி வீசுதற்கு
வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை ஆழ்ந்து கவனிக்க.
அத்தன்மையது ஈதென புலவர் கூறுவர். ஆயினும்,
வலைநாட்டு வெண்ணாப்புலவர் ஒரு நுண்ணிய
வேறுபாட்டைக் குறிப்பிடுவர்.

அஃதாவது, கோட்டை மதிற்சுவரில் இருந்து எறியப்படும்
பன்மை அம்புகள் கோட்டைக்குப் புறத்தே உள்ள
எதிரிகளைப் போய்ச் சேரும் எனவும்,
கிளியமரபினர் அள்ளி வீசும் அம்புகள் கோட்டைக்கு
உள்ளுக்கே அம்புகள்எய்தும் தன்மையன என்பதுதான்
அவ்வேறுபாடு என்று கூறுவர்.

தலையாயிரம் என்று சொன்னது தமிழுலகின்
மிகத் தொன்மமான ஆயிரந்
தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்ற
கதையைக் குறிப்பதாகும். அப்படியான
வியக்கத் தக்க மரபுகளைக் கொண்ட கிளிய மரபு
தமிழாராய்ச்சியில் உயர்ந்தோங்கி நின்ற காலம்
23ஆம் நூற்றாண்டாகும். 23 என்றாலே அக்காலக்
கட்டத்தில் சிரிப்புக்குப் பெயர்போன திரைப்படங்கள்
ஓடின என்பது உள்ளுறை உவமமாக இந்நூற்பாவில்
தொக்கி நிற்கிறதென்பர் பெரும்புலவர்.

நூ-3 ஒரு சிறந்த சூத்திரம் என்று காகசாமி அவர்கள்,
நிலவில் தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த
குறிப்பில் எழுதியிருக்கிறார். அஃதாவது, அள்ளி
என்ற சொல்லுக்கு நூ-2 விளக்கம் கூற, அப்படி
அள்ளி வீசும் அஞ்சல்களில் ஏதேனும் தமிழுக்கு
இனியது என்று கண்டால், கண்டமாத்திரம் கிள்ளி விட்டுப்
பின் எறிவது என்ற உயர்ந்த மரபை தமிழ்க்குலம் போற்றியது வியக்கத்தக்கதாகும்.

இங்கே கிள்ளி என்ற சொல்லாட்சியை
இலக்கண ஆசிரியர் உருது மொழியில்
இருந்து ஒத்திக்கு வாங்கி வந்து
பயன்படுத்தியிருக்கிறார் என்று நக்கீரர்
பரம்பரையில் வந்த அத்தனைப் புலவர்களும்
பண்ணோடு புகலுவதைக் கவனிக்க.

உள்ளி என்பது, இப்படி அள்ளி கிள்ளியவற்றை
உள்ளிடுதல் என்ற வினையைக்
குறிக்கிறது. நள்ளி என்பது இப்படிச் செய்ததால்தான்
தமிழ் ஆராய்ச்சியின் தரத்தை அழிவுக்குக் கொண்டு
செல்ல ஏதுவாக பல நட்புகளை இந்த மரபு ஈட்டித்
தந்ததை விவரிப்பதாக அமைகிறது. இந்தத் தந்திரத்தின்
பயனைக் குறிக்கும் சொல்லாக நள்ளி என்ற
சொல்லை அறிஞர் கருதுவர்.

இந்த "அள்ளி கிள்ளி"யை க'சிகாமணி
தந்திரத்தின் ஒரு உத்தியாக ஆசிரியர்
நாட்டியிருக்கிறார் என்று சிலரும்,
இல்லை இல்லை ஆசிரியர் இதனைத் தனியே
ஒரு தந்திரமாக வைத்தது நாளடைவில்
ஒரு தந்திரத்தின் உள் அமையுமாறு
ஆகிவிட்டது என்று சிலரும் ஆதாரங்
காட்டுதற் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

தந்திரம்-3: கணேசமெய்

நூற்பா-4:

மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய்
மெய் மெய்
பொய்

உரை:
ஒரு பொய்யை மெய் என்று சொல்வதற்கு
கணேசகிளிய மரபினர் கையாளும் தந்திரத்தை
எடுத்தியம்புமாறு இந்நூற்பா அமைந்திருக்கிறது.
இது நூற்பாவா சித்திரகவியா என்ற பட்டிமன்றம்
இன்னும் தமிழாராய்ச்சி உலகில் ஓய்ந்தபாடில்லை.

இதைச் சித்திரகவி என்போர் மெய் என்று 27 முறை
எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இது
தமிழ் சோதிட/வானியலில் சொல்லப்பட்டிருக்கும்
27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்று அறுதியிட்டுச்
சொல்வர்.

என்னையெனின், ஒரு பொய்யை
மெய் என்று சொல்ல 27 நட்சத்திரங்களையும்
சாட்சிக்கு அழைக்கும் மெய்யியல் சார்ந்த
தெய்வீக நூற்பா என்று எல்லாச் சமயப் புலவரும்
சமயக் குரவரும் ஒத்துக் கொண்டிருப்பதே இதன்
திறன் சொல்கின்றதறிக.

27 மெய் அடுக்கினது பொய்யை மெய்யாக்கப்
புனைய வேண்டிய அழுத்தங்களக் கோடிட்டுக்
காட்டலன்றி வேறியாதுமிலை என்று
சிலர் பகுத்தறிவின் துய்ப்போடு
இயம்புதலையும் ஒப்புநோக்கல் தகுமென்க.

ஆயினும், இந்த நூற்பாவை கலைமகள் திருநாளில்
வழிபட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள்
கிளியமரபினர் என்று ஒன்பான் விழாக்குறிப்பில்
காணப்படுவதையும் உற்றுநோக்குக.

நூற்பா-5:

எழுதற்க மெய் பொய் யுரேனசுக்கு!

உரை:
எந்தக் காலத்திலும் எப்படிப் பட்ட
இடர் நேரினும் மெய்யை எழுதாதீர்கள்.
பொய் என்றால் அதனை ஆவணமாகப்
புனைந்து புதன் தொடங்கி யுரேனசு
வரை எல்லாக் கோள்களுக்கும் அனுப்பி வைக்க.

மிக எளிமையான இந்த நூற்பாவை
தமிழாராய்ச்சி மரபினர் உயிரின் மேலாகப்
போற்றிக் கடைப்பிடித்தனர் என்பது வரலாறாய்
ஓங்கி நிற்கிறது.

யுரேனசு வரை பொய் ஆவணத்தைக்
கணேசகிளிய மரபினர் தமிழைத் தொலைக்க
ஆவணங்கள், கடிதங்கள் வழியே அனுப்பிய அந்தக் காலம்
தமிழின் பொற்காலம் மட்டுமல்ல தமிழாராய்ச்சி உலகம்
கொடிகட்டிப் பறந்த காலமாகும்.

அந்நாளை, தமிழர்கள் மறக்காமல் இருக்க
யு.மு, யு.பி (யுரேனசுக்கு முன், பின்) என்ற ஆண்டுக்
கணக்கைத் தொடங்கி இருப்பது தமிழாராய்ச்சி
மரபின் புகழைக் கூறா நிற்கும்.

தந்திரம்-4 - கணேசநகை

நூற்பா-6:

பொய்யில கேட்கின் பொய்யில கேட்டோய்
பொய்யில சொல்வான் முனைவன் அல்லன்
முனைவனுமாயின் தமிழினில் அல்லன்
தமிழினில் ஆயின் அவன் தமிழ் பொய்யேஎ!

உரை:

கணேசகிளிய மரபினரின் தமிழாராய்ச்சி
நேரத்தில் யாராவது வந்து "ஐயா, இது இப்படி
இருக்கலாங்களா" என்று சொன்னால்
"யாரது, நீ ஒரு முனைவரா?" என்று எள்ளி
நகையாட வேண்டும். அஃதாவது முனைவர்
பட்டம் பெற்றவரா? இல்லையெனில்
தள்ளிப்போ என்று சொல்லவேண்டும்.
இதுவே தமிழாராய்ச்சி தருமம் ஆகும்.

அப்படியும் ஆமாம் ஐயா நானும்
ஒரு முனைவன் என்று சொன்னால்
கானா நாட்டு பானா அறிஞர் என்ன
சொல்லியிருக்கிறார் தெரியுமா?
என்று கேட்பார்கள். தெரியும் ஐயா
என்று சொன்னால் - ஏ-ஏ-ஏ-ஏ
கானா தெரியும்னா -
உன்க்குச் சீனா நாட்டு மூனா அறிஞர்
தெரியுமா? என்று பாடிச்
சிரிப்பார்கள் கிளியமரபினர்.

அதையும் தாண்டி தெரியும் என்பதை நிறுவினால் -
"நீ தமிழில் முனைவர் பட்டம் வாங்கினியா?"
என்று முறைப்பார்கள். அரசாங்கத் தமிழ் வேலை
பார்த்தியா என்பார்கள்!

அதையும் தாண்டி ஆமாம் தமிழில்
வாங்கியிருக்கின்றேன் என்று
யாருஞ் சொன்னால் ஏற இறங்கக்
கண்ணைப் பார்ப்பார்கள். இதற்கு
நிறைய பட்டறிவும் துய்ப்பறிவும் தேவை.
(இந்தக் கண்பார்க்கும் வித்தையைக்
கற்றுக் கொள்வது கடினம். அரைகுறையாகக்
கற்றுக் கொண்டு அல்லாடும்
கிளியமரபினரைக் கண்டால் புரியும்)

கண்கள் கெஞ்சின என்றால்
ஏற்றுக்கொள்வர். மாறாக கண்களில்
தமிழோ அறிவோ தெரிந்தால்
"சீ போ - நீ பொய்" என்ற கவிதையைப்
பாடி அனுப்பிவிடுவார்கள்.

இஃது தமிழாராய்ச்சி மரபின் மிக முதிர்ந்த
நிலையைக் காட்டுகிறது என்பர் அறிஞர்.

தமிழ்நாட்டிலே தமிழ் முனைவர் பட்டம்
வாங்கியிருந்தாலும், பட்டம்
வாங்கினவருக்குத் தமிழ் தெரிந்தால்
அவரை இந்த ஆராய்ச்சி மரபு
ஏற்றுக் கொள்ளாது என்பதுதான்
இந்நூற்பாவின் உட்கருத்தாகும்.

ஏனென்றால் கிளியமரபினருக்குத் தெரியும்,
தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம்
பெறுதற்குத் தமிழே படிக்க வேண்டியதில்லை என்பது.
அதையும் மீறி தமிழ் கற்று முனைவரானவர்
உளர் என்பதும் அவர்கள் பாடு திண்டாட்டம் என்பதும்
அவரறிவர். இந்த அரிய கருத்து இந்நூற்பாவில்
இறைச்சியாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்த
புலவர்கள் இதனை எல்லாப் பல்கலைக்
கழகங்களின் பாடத்திட்டத்திலும்
சேர்த்திருக்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தியாம்.

தந்திரம்-5 - கணேசகிளியம்

நூற்பா-7:

கிளி பிடி கிளி பிடித்தக் கிளி

நூற்பா-8:

பிடிகிளிச் சொறிவளர்ச் செறிகிளி
எறியிரு தருமொரு வழி

உரை:

கிட்டற்கரிய இந்த இலக்கண நூலுக்குப்
பெயரைத் தந்த தந்திரம் இஃதென்பது
இத்தந்திரத்தின் சிறப்பு. இதில் தமிழாராய்ச்சி
செய்து எடுக்கும் முடிவுகளைப்
பற்றிய ஒரு முறை விளக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் பல முறைகள் பிற
பாகங்களில் காணப்பெறலாம்.

தமிழரின் தொன்மையான வழக்கங்களில்
ஒன்று கிளியிடம் சீட்டெடுக்கச்
சொல்லுதலாகும். இந்த முறையை ஒரு சொல்
தமிழா அல்லது சமசுக்கிருதமா
என்று கண்டறியப் பயன்படுத்தி
வெற்றி கண்டவர் கிளியமரபினர்.

"கிளி பிடி கிளி பிடித்தக் கிளி" என்றது
கிளியைத் தேர்ந்தேடுக்கும் முறையைப்
பற்றியதாகும். கொஞ்சம் விரைப்பான கிளியைப்
பிடிக்கக் கூடாதென்றும் அஞ்சும் தன்மை
கொண்ட கிளியே தமிழாராய்ச்சிக்கு
உகந்ததாகும் என்பது முக்கியமானதாகும்.

நூ-8ல் பிடிகிளி என்றது பிடித்த கிளியைக்
கூண்டுக்குள் வைத்துப் பேணுவதைச் சொன்னது.

சொறிவளர் என்றது அந்தக் கிளி
சற்று நோய்வாய்ப்பட்டுச் சொறி சிரங்கோடு
இருந்தால் சொல்லுகின்ற வினையாற்றும்
என்ற நம்பிக்கை பற்றியதாகும்.

செறிகிளி என்றது, அப்படியான கிளிக்கு,
சீட்டு எடுக்கும் கல்வியைக் கிளியமரபினர்
கற்றுத்தருவதைச் சொன்னதாகும்.

எறியிரு என்றது, கிளியின் முன்னர்
இரண்டு சீட்டுக்களை எடுத்துப் போடுவதாகும்.

தருமொரு வழி என்றது, அந்தக் கிளி
அந்த இரண்டில் ஒன்றை எடுத்துத்
தருவதைச் சொல்லியதாகும்.

முக்கியச் செயலாக, வடசொல்லா
தமிழ்ச்சொல்லா என்றறியவேண்டுமானால்
அந்தக் கிளிக்கு முன்னால் கிளிய
மரபினர் இரண்டு சீட்டுக்களைப் போடுவார்கள்.

அந்தக் கிளி எடுத்துத் தரும் சீட்டை
அப்படியே தமிழாராய்ச்சி மன்றத்தில்
படிப்பார்கள். இதுவே "கணேசகிளியம்"
எனப்படுவதாகும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய
விதயம் என்னவென்றால் அந்த இரண்டு
சீட்டுகளிலும் "வடசொல்" என்றே
எழுதிப் போட்டிருப்பார்கள்.

மேலும், ஒரு இலக்கியம் முந்தியதா
பிந்தியதா என்று கண்டுபிடிக்கவும்
இம்முறையைக் கையாளுவார்கள்.
அதற்குத் தனியே இரண்டு சீட்டுகள்
வைத்திருப்பார்கள். அந்த இரண்டு
சீட்டுகளிலும் "பிந்தியது" என்றே
எழுதித் தயாராக வைத்திருப்பார்கள்.

கணேச கிளியம் - பாகம்-1 முற்றிற்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்