Pages

Showing posts with label கணித்தமிழ். Show all posts
Showing posts with label கணித்தமிழ். Show all posts

Sunday, July 05, 2015

பின்ன சின்ன ஒருங்குறி - துறையறிஞர் கூட்டம் 4/7/15

பின்ன சின்ன ஒருங்குறி முன்னீட்டை ஆய்வு செய்யும் கல்வெட்டு, சுவடிகள், வரலாறு, பழங்கணிதம், நாணயம் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் ஆய்வறிஞர்களின் கூட்டம் நேற்று 4/7 அன்று சென்னைப்பல்கலையில் நடந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் இத்தனைபேரை ஒருங்கே பார்த்ததிலும்,அவர்களோடு கூட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு அமைந்ததையும் பெருமையாகக்கருதுவேன்.

55 குறியீடுகளை ஆய்வு செய்த இவ்வறிஞர்கள், அவற்றில் 18ஐ மட்டுமே நேரடியாக சரி என்று ஏற்பு வழங்கினர். சுமார் 15-17 குறியீடுகளை "பிழை" என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மீதம் உள்ள குறியீடுகளுக்கு வடிவமாற்றம் அல்லது விளக்க மாற்றம் பரிந்துரைத்துள்ளனர். கடந்த மே மாதம் ஒருங்குறியில் சேர்க்கப்படவிருந்த 55 குறியீடுகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, அதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இவ்வாய்வுக்கு வழிவகுத்தது. தமிழக அரசு இப்படிச் செய்திருக்காவிடில் கிட்டத்தட்ட 60-67% குறியீடுகள் தவறானவையாக ஒருங்குறியிற்சேர்ந்திருக்கும். 67% பிழைகள், அல்லது தவறுகள், அல்லது குறைகள் உள்ள ஒரு முன்னீட்டைத் தாங்கிப்பிடித்து, அவற்றைச் சுட்டிக்காட்டியமைக்காக எம்மை ஏளனம் செய்தவர்களும் இன்று அவற்றை ஏற்றுக்கொண்டது எமக்கு மனநிறைவான ஒன்றாகும்.

தொல்லியல் துறையின் புகழ்பெற்ற அறிஞர்களான முனைவர் நடனகாசிநாதன், முனைவர்.எசு.இராசகோபால், முனைவர் சு.இராசவேலு, முனைவர் விசய வேணுகோபால், முனைவர் பத்மாவதி அம்மையார், முனைவர் மார்க்சிய காந்தி, முனைவர் கலா சீதர், முனைவர் பாலாசி, முனைவர் கு.வெங்கடாசலம், முனைவர் சாந்தலிங்கம், முனைவர் தமிழப்பன், உள்ளிட்ட பல தொல்பொருள் அறிஞர்களோடு, பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன், திரு.மணிவண்ணன், திரு.சேம்சு உள்ளிட்ட பலரோடும் நடந்த இக்கூட்டம் மிகச்சீரிய பணியை செய்திருக்கிறது.
 
இதற்காக தமிழக அரசுக்கும், தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கும், சென்னைப்பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
 
கடந்த வருடம் செப்தெம்பர் மாதம் தொடங்கி 7/8 குறைகளைச் சுட்டிக்காட்டி குறைபாடுகளின் தன்மைகளை வெளியிட்டிருந்தேன். ஆனால் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் உத்தமம் அமைப்பும் அவற்றை ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், இன்று மணிவண்ணன் அவர்களே முன்னின்று ஏற்றுகொள்ளும் வகையில் அறிஞர்கூட்ட முடிவுகள் அமைந்தன.
 
 
 
 
 
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 

Tuesday, November 11, 2014

ஒருங்குறிக் கேடுகள் - 1


ஒருங்குறிக் கேடுகள் ஒன்றல்ல - இரண்டல்ல. பல.
அவற்றிலொன்று இந்த வரிசைச் சிக்கல்.


அன்றைய ஒருங்குறிப் புலவர்களின் ஒழுக்கமற்ற, நெறிமுறையற்ற
செயற்பாடுகளால் விளைந்த பல கேடுகளில் இது முக்கியமான ஒன்று.

கதை, கவிதை, மொக்கை போன்றவற்றை இணையத்தில் எழுதுவதற்கு
இது எந்தவிதத்திலும் தடையாக இருக்காது. ஆனால், கணிநிரல்கள்
உருவாக்கும் ஒவ்வொருவரும் இந்தக் குறைபாட்டைக் கடந்துதான்
புதுக்குகள் செய்ய முடியும். அங்கங்கு சில சுற்றுவழிகளைப் போட்டுத்தான்
அவர்கள் செய்வார்கள். அதிலும், தமிழ் நிரலியர் பலபேர் எங்கே இந்தக் குறைபாட்டைச் சொன்னால், இதற்குச் சுற்றுவழி எழுதத் தெரியவில்லை
என்று யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணி வெளியே சொல்லுவதுகூடக் கிடையாது :-) அவ்வளவு தொழிலியச் சுத்தம் :-))

இதனால், விளையும் கேடுகளைப் பார்க்கவேண்டுமானால் விக்கிப்பீடியா போன்ற பெருஞ்செயலிகளிலேயே காணலாம். விக்கிப்பீடியாவின் பகுப்பு வரிசையை அதன் செயலி எப்படிப் போடுகிறது என்று காண்பது தகும்.
https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_ta&pagefrom=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D#mw-pages

(இதுபோன்ற குறைபாடுகளை நிரல்மாற்றம் செய்யமுடியுமெனில் செய்து வெளியிட நண்பர் இரவிசங்கர் போன்றவர்கள் முயற்சி செய்யவேண்டும், இல்லாவிடில், இதுவே தமிழ் எழுத்து வரிசையாக நிலைத்துவிடக்கூடும்.
அல்லது, இச்சிக்கலை விக்கியின் மேலகத்திற்கு வலுவாக எடுத்துச் சொல்லி,
மாற்றச் சொல்லவேண்டும். அது ஒருங்குறிக் குற்றங்களை பன்னாட்டு மன்றங்களில் எடுத்துரைக்க உதவியாக இருக்கும்.)

பத்தாண்டுகளின் முன்பு ஒருங்குறிப் புலவர்கள், குறியேற்றச் சிக்கல்களின்போது கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டதன் வெளிப்பாடு இன்று நன்கு
தெரிகிறது. இன்றைய ஒருங்குறிப் புலவர்களும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். இன்றைய பின்ன சின்ன விதயத்திலும் அடிப்படை மீள்பார்வை கூடச் செய்யாமல், அதற்கான அரசு வழிமுறைகளைச் செய்யாமல், எதிர்காலச் சூழல்களைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகமும்  ஒருங்குறியைப் பேணுதற்கு எந்த நெறிகளையும், மீள்பார்வை முறைகளையும், தகுதியான குழுக்களையும் உருவாக்கவில்லை. 55 குறியீடுகளை குறியேற்றம் செய்யும் முயற்சியை வெறும் 4 மணி நேர ஆரவாரத்தோடு முடித்துக் கொண்டது த,இ.க.

அன்புடன்
நாக.இளங்கோவன்


Sunday, September 29, 2013

தமிழ் விக்கிப்பீடியா - 10 ஆண்டுகள் - தகுதியான கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) 10 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம், கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலை) மிகச் சிறப்பாக நடந்தது. 

கொண்டாடப்படவேண்டிய கொண்டாட்டம் என்ற மன நிறைவு. 

முன்னணி விக்கிப்பீடியர்கள், இணைய நண்பர்கள் என்று பலரையும் 
சந்திக்க முடிந்தது.

விக்கிப்பீடியா என்பது ஆர்வலர்கள் உருவாக்கிய அறிவுத்தளம். ஒரு குமுகம் தன்னுள் கொண்டுள்ள தொன்மையான அறிவு, பிறரிடம் கற்ற அறிவு, உலகில் தொடர்ந்து காணுகின்ற அறிவு ஆகியவற்றைத் தனது நிகழ்கால, வருங்காலத் தலைமுறைக்காகத் தேக்கி வைக்கும் இடமே விக்கிப்பீடியா.

ஆங்கில விக்கிப்பீடியா, என்ற ஆர்வலர் உருவாக்கும் அறிவுத் தளம், பரந்த ஆங்கில உலகின் பன்னூறு நிறுவன அறிவுத் தளங்களை, மூலமாக(source), துணையாக(support material),  செம்மைக்குச் சாட்சியாகk (reference & verification) கொண்டுள்ளது. உலகின் அறிவு நிலையங்கள் உருவாக்கும் படைப்புகள், இணைய வழியே அறியக் கிடந்து, ஆர்வலர் தளமான விக்கிப்பீடியாவில் உள்ளிடுவதற்கும், உள்ளிட்டவற்றை செம்மை செய்வதற்கும், புதியன உருவாக்குவதற்கும், பல நிறுவன, பிற ஆர்வலர் தளங்களை ஒருங்கிணைக்கவும் துணையாகவும், ஆதரவாகவும் இருக்கின்றன.

இவ்வழி, தமிழ் இணைய வளர்ச்சியைப் பார்க்குங்கால், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி என்பது “ஆர்வலர் தமிழ்” வளர்ச்சி ஆகும்.

நிறுவனத் தமிழ்” என்பது, அதிகாரப்பூர்வமான கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்ற தமிழக அறிவு நிறுவனங்கள் தமது அறிவுச் செல்வங்களை இணைய வழி, பலரும் பயனடையப் படைப்பதாகும். தமிழ்நாட்டில் 15-20 பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், தனியார் கல்வியகங்கள் என்று பல்கிப் பெருகியிருக்கின்றன. அவை தமிழ் மொழி மட்டுமல்லாது பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. ஆனால், பயனுள்ள அறிவு வளங்களை எந்தக் கல்வி நிலையமும் இணையத்தில் வெளியிடுவதில்லை. தமிழ் மொழி சார்ந்த படைப்புகள் சிலவற்றை, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிடுவதைத் தவிர, அதிகாரப்பூர்வமான  நிறுவனங்கள், அதிகாரப்பூர்வமான மொழி, நுட்பம் சார்ந்த படைப்புகள் எதையும் வெளியிடுவதில்லை. ஆகவே நிறுவனத் தமிழ் என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சுழிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

இணையத் தமிழ் வளர்ச்சி என்பது, ஆர்வலர் தமிழ், நிறுவனத் தமிழ் என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று மூலமாகவும், ஆதரவாகவும், அவற்றின் செம்மைக்குச் சாட்சியாகவும் இருந்தே பல்கிப் பெருக முடியும்.

தமிழ் இணையத்தில் நிறுவனத் தமிழ் என்பது சொல்லிக் கொள்ளுமளவிற்கு இல்லையென்ற நிலையிலும், ஆர்வலர்களால், தமிழ் விக்கிப்பீடியா என்ற அறிவுத் தளம் இந்த அளவிற்குப் பெருகியிருக்கிறதென்றால் இவ்வளர்ச்சி மிகப் பெரும் சாதனை ஆகும்.

விக்கிப்பீடியர்கள் சிறந்த கட்டொழுங்குடைய தமிழ்-விக்கிக் குமுகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதே வேளையில், நிறுவனத் தமிழ் இணைய வளர்ச்சி உருவாக, இது ஓர் உந்துதலாக அமையுமானால் அதை விடச் சிறந்த பயன் வேறொன்றுமிருக்க முடியாது. ஆங்கில உலகில் நிறுவனப் படைப்புகள் பெருகிய  பின்னர்தான் ஆர்வலர் படைப்பான ஆங்கில விக்கி உருவானது. ஆனால் தமிழுக்கு இது தலைகீழ். அந்த வகையில் விக்கிப்பீடியர்களின் உழைப்பு மகத்தானது.

முன்னணி விக்கிப் பீடியர்கள், உள்ளிடுவதை விட, தமிழக அறிவு நிலையங்களுடனும், சிந்தனையாளர், குமுக அக்கறையாளர் மன்றங்கள் போன்றோருடன் தொடர்புகள், ஒருங்கிணைப்புகளில் அதிகக் கவனம்  செலுத்தினால், அவர்கள் இதுவரை உழைத்தவற்றைப் பல்கிப் பெருகச் செய்வதாக அமையும். இதற்கான சிந்தனைகளையும், உத்திகளையும் விக்கிப்பீடியர்களின் உரைகளில் இருந்து அறிய முடிந்தது. மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பெரிய ஆலோசனைகள் இவர்களுக்குத் தேவையிருக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், பல வாய்ப்புகளையும் ஆர்வலர்களையும் இவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் போதும்.

மீண்டும், தமிழ் விக்கிப்பீடியர்கள் வெறும் படைப்புகளை உள்ளிட்டுக் கொண்டிருக்கவில்லை – மாறாக, கட்டொழுங்குடைய குமுக மரபை, ஒழுக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தன்னலமற்ற குழு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் விக்கிப்பீடியா!

வாழ்த்துகளும் பாராட்டுகளும் நண்பர்களே!

அன்புடன்
நாக.இளங்கோவன்
29/09/2013


Saturday, December 29, 2012

எனது "தமிழ் அறிதியியல்" சொவ்வறைக்கு அனந்தகிருட்டிணன் விருது!


அன்புடையீர், நேற்று (29/12/12), சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உத்தமம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 11வது உலகத்தமிழ்
இணைய மாநாட்டில், "An Introduction to Thamizh Informatics and Thamizh Intelligence" என்ற கட்டுரையொடு, "தமிழ் அறிதியியல்" அடிப்படையிலான எனது சொவ்வறையைப்(software) பரத்தீடு செய்யும் வாய்ப்பு அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், இன்ப அதிர்ச்சியாக
இக்கட்டுரையொடு கூடிய சொவ்வறைக்கு பேரா.மு.அனந்தகிருட்டிணன்
விருது அளித்து உத்தமம் அமைப்பு பாராட்டியது பேரா.பொன்னவைக்கோ விருதளித்துப் பாராட்டினார்.

உத்தமம் அமைப்பிற்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.
http://www.ti2012.infitt.org/


அன்புடன்
நாக.இளங்கோவன்
30/12/12 சிதம்பரம்

Sunday, December 16, 2012

கணி(னி)த் தமிழ் வளர்ச்சி மாநாடு - 16-திச-2012

இலயோலா கல்லூரியில் நிகழ்ந்த இந்த ஒருநாள்
மாநாடு கணித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான
சிறந்த வெற்றிகளைப் பெறத்துவங்கியிருக்கிறது.
கணி ஊழியில் தமிழ் வளர்ச்சி என்பதும் கணித்தமிழ்
வளர்ச்சி என்பதும் வேறு வேறு அல்ல. கணித்தமிழ்
வளர்ச்சியே தமிழ்வளர்ச்சி, தமிழ்வளர்ச்சி என்பதே
கணித்தமிழ் வளர்ச்சி என்பதைத் தமிழ்க்குமுகம்
நன்கு புரிந்து கொண்டு செயல்பட்ட காட்சியே
இம்மாநாடாகும்.

மக்கள், மாணவர், தமிழறிஞர், கணிநுட்பியலர்,
பிற துறை நுட்பியலர், ஊடகத்தினர், ஆர்வலர்
என்ற பல்வேறு தரப்போடு, தமிழ்நாட்டரசின்
தமிழுக்குப் பொறுப்பான அத்தனை அதிகாரிகளும்
பங்குகொண்டு நம்பிக்கையளிக்கும் செயல்திட்டங்களை
நடைமுறைப் படுத்த அணியமாக இருந்ததைக்
காணமுடிந்தது.

கணித்தமிழ் வளர்ச்சி என்பது வெறும் நுட்பியல்
பயன்பாடுகளால் மட்டுமே வளர்த்துவிடமுடியாது.
அதேபோல மொழியின் மேன்மை மட்டும்
வளர்த்துவிடமுடியாது. இரண்டும் சேர்ந்தாலும் கூட
குமுக விழிப்புணர்வும், அரசாங்கத்தின் முன்னெடுப்பும்
கைகூடும்போதுதான் உண்மையான வளர்ச்சியை
எட்டமுடியும்.

அந்த வகையில், நுட்பம், தமிழ்மொழி, குமுகம்,
அரசாங்கம் ஆகிய நான்கு நிலைகளையும்
நன்கு ஒருங்கிணைக்கும் கூரிய செயல்திட்டத்தை வைத்து
இம்மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, அது ஆற்ற
எண்ணிய பணியைத் திறம்படச் செய்ய வைத்ததற்காக
மதிப்பிற்குரிய பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களை
மனமாரப் பாராட்டவேண்டும்.

பேரா.தெய்வசுந்தரத்தின் வரவேற்புரையையடுத்து
தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர்,
முனைவர் மூ.இராசாராம் அவர்கள் மாநாட்டைத்
துவக்கி வைத்து கணித்தமிழுக்கு ஊக்கமளிக்கும்
உரையாற்றினார்.

தொடர்ந்து தொடக்கவிழாவில்,
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர்
அருள் நடராசன் அவர்களின் செறிவான உரை
மாநாட்டின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து மின்னணுக்
கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு என்ற தலைப்பில்
கருத்தரங்கு நடைபெற்றது. முனைவர் இராம.கி
அவர்களின் தலைமையில் பல்வேறு துறையினர்,
பல்வேறு கோணங்களில் கணித்தமிழ் வளர்ச்சி
பற்றி எடுத்துரைத்தனர்.
மதிய உணவு முடித்து நடந்த அமர்வு
பல்கலைக்கழகங்களின் படையெடுப்பாகவே
நடந்தது. பேரா.பொன்னவைக்கோ அவர்களின்
தலைமையில் இவ்வமர்வு சிறப்புற நிகழ்ந்தது.

நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய
தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர்
அவர்களின் உரையும், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்
கோ.விசயராகவனின் உரையும், தமிழ்நாட்டரசு செய்ய
எண்ணியிருக்கும் கணித்தமிழ் வளர்ச்சித்திட்டங்களை
எடுத்துரைப்பதாகவும், அரசின் தொலைநோக்கு
எண்ணங்களைப் பகிர்வதாகவும் இருந்தது.
அவர்களின் உறுதி மிகுந்த உரை பல்வேறு
திட்டங்களைக் கணித்தமிழ் வளர்ச்சிக்குக் கொண்டு
வரும் என்ற நம்பிக்கையை மேலும் ஊட்டியது.

அமர்வுகளில் மேடையில் பங்குபற்றிய அனைத்து
அறிஞர்கள், ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள்
கருத்துகளை மிகச்சுருக்கமாக, பல்வேறு கோணங்களில்
எடுத்து வைத்தயாவையும் மிக வலுவானவை.
தொலைநோக்குடையவை. தனியே எழுதினால் நீளும்.

எந்தத்துறையினர் பங்குபெறவில்லை?
எந்த அமைப்பினர் பங்குபெறவில்லை?
என்று தேடித்தான் பார்க்கவேன்டும் என்றளவிற்கு
மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது எனலாம்.

இந்த மாநாடு ஆகத்து மாதத்தில் இருந்து
திட்டமிடப்பட்டது. ஆக-26 அன்று பேரா.தெய்வசுந்தரம்
எழுதிய அஞ்சலில் இதற்கான பணிகள் தொடங்கின.
செபுதெம்பர் 23 அன்று சென்னையில் கருத்துரை
கேட்புக் கூட்டம் நிகழ்ந்தது.

3 மாதங்களுக்கும் மேலாக  ஏறத்தாழ 10 நாள்களுக்கு
ஒருமுறை நடந்த கலந்தாய்வுக்  கூட்டங்கள்
ஒவ்வொன்றையும் நுண்ணியமாகத்
திட்டமிட்டன.

திச-5 அன்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
கணித்தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடத்தியது
தஞ்சையில் திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
ஏற்பாடு செய்த விழிப்புணர்வு கருத்தரங்கம்,
புலவர் இறைக்குருவனார் அவர்களின்
மறைவின் துயரால் நடைபெறவில்லை.

கணித்தமிழ் வளர்ச்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும்
நோக்கத்தில் பேரா.தெய்வசுந்தரம் கடுமையாக
உழைத்து, பல துறையினரையும் திரட்டி
நன்கு கட்டமைத்திருக்கிறார். அவரோடு
தோள்நின்ற திரு.மா.பூங்குன்றன் அவர்களும்
முனைவர் மு.கண்ணன் அவர்களும் மிகுந்த
பாராட்டுக்குரியவர்கள்.

நுட்பியல், தமிழியல், மக்கள்,
மக்களின் அரசாங்கம் என்ற
நான்கும் இணைந்தாற்றான்
வெற்றியடைய முடியும்
என்பதற்கு இம்மாநாடு சான்று,

கணித்தமிழ் வளர்ச்சியைப்
பார்வையாளராக பல ஆண்டுகளாகப்
பார்த்துவரும் எனக்கு இம்மாநாடு
சென்றிருக்கும் தொலைவைப் பார்க்கும்போது
இதனை நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு
மேலும் எடுத்துச் செல்ல, தமிழ் வளர்ச்சியில்
அக்கறை கொண்ட அனைவரும் தோள்தரவேண்டும்
என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் வளர்ச்சி = கணித்தமிழ் வளர்ச்சி
என்று நிறுவிய இம்மாநாடு
கணி(னி)த் தமிழ் வளர்ச்சிப் பேரவையாக
தொடர்ந்து தமிழ்நாடு முழுக்கச் செயல்படும் என்பது
மேலும் மகிழ்ச்சியான செய்தி.

வருகின்ற ஆண்டு கணித்தமிழ் மறுமலர்ச்சி
ஆண்டாக மலரும் என்பது
கணித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பாக
சொல்லப்பட்டிருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, September 21, 2012

மனநிறைவான "மென்தமிழ்" என்ற சொவ்வறை வெளியீடு!


1980களின் பிற்பகுதியில் மெல்லத் தலையைக் காட்டி,
90களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியான
சொவ்வறைகள்/சொவ்வறைச் சேவைகள் சுமார் 3,4 கோடி
உரூவாய்கள் மட்டுமே. இன்று சுமார் 30,000 கோடிக்குச்
சேவைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர்ப் பயன்பாடும்
இருக்கலாம்.

தமிழ்ச் சந்தை என்பது மிகக் குறுகிய வட்டத்தில், அளவில்
அன்றும் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

80களின் இறுதியில் வொர்டுசார், வொர்டுபெர்பெக்டு என்ற
எழுதிகள் புகழ்வாய்ந்தன. ஆங்கிலத்தில் மட்டும் எழுதமுடியும்.
இன்றும் சட்டத்துறையில் வொர்டுசார்/வொர்டுபெர்பெக்ட்
செயலிகளை விடாது வழக்குரைஞர்கள் பயன்படுத்துவது எனக்கு
வியப்பையே ஏற்படுத்துகிறது.

எழுதிகள் சந்தையை மைக்குரோசாவ்ட்டு நிறுவனம் மெல்ல
மெல்ல முழுதாக விழுங்கியது. இன்றுவரை அதன் அலுவப்
புதுக்குகள் உலகில் ஆட்சி செலுத்திவருகின்றன.

90/91/92 காலங்களில் மைக்குரோசாவ்ட்டுவின்
விண்டோசுடன் (3.0?) எம்மெசு வொர்டு செயலியைப்
பயன்படுத்தத் துவங்கியதாக என் நினவு. அப்போது
அதில் எழுத்துப் பிழை, இலக்கணத் திருத்திகள்
இணைக்கப் படவில்லை என்பதே எனது நினைவு.
விண்டோசு 95க்குப்பின்னர் அவ்வசதிகளைப்
பயன்படுத்திய நினைவு இருக்கிறது.

89-90ல் தொடங்கி 22 ஆண்டுகளாக எம்மெசு அலுவப்
புதுக்குகள் சக்கைபோடு போட்டுவருகின்றதென்றாலும்,
கவனிக்க வேண்டிய விதயம், அதுவும் உலக அரங்கில்
தத்தித் தத்தி, கட்டம் கட்டமாகவே வளர்ந்துள்ளது.

1971ல் ஆங்கில எழுத்துப்பிழை திருத்திகள்
கண்டுபிடிக்கப்பட்டுப் பெருஞ்சட்டக் கணிகளில்
பயனுக்கு வந்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில்
எழுத்துப் பிழை திருத்திகள் ஆங்கிலப் பயனர்களுக்கு
நம்பிக்கையளித்ததில்லை. ஏனெனில் மனிதக்
கண்ணுக்கு மிகச்சாதாரணமாகத்
தென்படும் பிழைகளைக் கூட ஆரம்பக்காலத்
திருத்திகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர் ஆய்வு, முயற்சி, உழைப்பு, வளர்ப்பு,
கணித்துறை வளர்ச்சி ஆகியவையே பிழை,
இலக்கணத் திருத்திகளை ஆங்கில உலகுக்கு
வ\ளர்த்துத் தந்திருக்கிறது.

இன்றைய மைக்ரோசாவ்ட்டு வொர்டுடன் பிற
புதுக்குகளிலும், ஆங்கிலப் பிழை திருத்திகள்
இருக்கின்றனவெனில், அவை 40க்கும் மேற்பட்ட
ஆண்டுகளின் தொடர் வளர்ப்பின் முதிர்ச்சியே
ஆகும்.

இதனை எண்ணிப் பார்க்கும்போது மென்தமிழ்
என்ற சொல்லெழுதியின் ஒற்றுப் பிழை,
சந்திப்பிழை, மொழிப்பிழை திருத்தியொடு,
எம்மெசு வொர்டுவில் உள்ள பல/அனைத்து
வசதிகளையும் முதல் மூச்சிலேயே பெற்றுள்ள
மென்தமிழ் என்ற செயலி மிகவும் பாராட்டப்பட
வேண்டிய ஒன்று. எனது தமிழ்ச் சிற்றறிவோடு
சிறிது நான் சோதித்துப் பார்த்தவரை எனக்கு இந்தத்
திருத்திகளில் பிழைகள் தென்படவில்லை.

20+ ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும்
கணித்துறை வெற்றுக் கூலிச்சேவைத் துறையாகவே
வளர்க்கப் பட்டிருக்கிறது. வளர்ந்துவிட்ட
பெருங்கணி நிறுவனங்களான இன்போசிசு,
அடாட்டா கன்சல்ட்டன்சி, எச்சிஎல்,
காக்னிசண்ட்டு, விப்ரோ போன்ற நிறுவனங்கள்கூட
தனது வருமானங்களை கூலி வேலைகளில் ஈட்டுகிறதே
தவிர அவற்றிடம் உலகளாவிய புதுக்குகள் பெயர்
சொல்லும் அளவிற்கு இல்லை.

இந்தக் கூலித்துறையை வைத்துத்தான் இந்தியா
ஒரு "கணி வல்லரசு" என்ற தேசியகீதங்கள்
பாடப்படுவதுண்டு.

படைக்கும் திறனற்ற நாடாக, படைப்புகளில்
கவனம் செலுத்தாத நாடாக, அப்படியே
படைத்தாலும் தேறாத புதுக்குகளைப் படைக்கின்ற
போக்கினையே இந்தியக் கணித்துறை பழக்கிக்
கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு
சொவ்வறைப் புதுக்கு, உலகளாவிய வசதிகள்
கொண்டு தமிழில் வெளிவருகிறது என்பது
மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கது. இதைச்
சொல்லும் அதே வேளையில், இது போன்று,
திருத்திகள் இல்லாது இதற்கு முன் வெளிவந்த
பதமி போன்ற புதுக்குகளையும் அந்தப்
படைப்பு முயற்சிக்காக மனமாரப் பாராட்டவே
செய்கிறேன். கூலிச்சேவை என்பதை விட
படைப்பு என்பதே வலிமையின் சான்று.

மென்தமிழ் என்ற எழுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்
தமிழ்க்கூறுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில்
ஒரு மைல்கல்.

தமிழறிஞர்களும், கணிஞர்களும் ஒருங்கிணைந்தால்
இதனையொத்த சொவ்வறைகள் தமிழில் பல்கிப் பெருகும்.

பயனர் சந்தை என்று பார்க்கும்போது, தமிழக அரசு
நிறுவனங்கள், பதிப்புலகம், மிடையங்கள்/ஊடகங்கள்,
எழுத்துலகம் ஆகியவற்றிற்கு இது மிகப்பெரிதும் உதவி
செய்யும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் தமிழ்ப்பிழைகள்
மண்டிக்கிடக்கின்றன, விளம்பர உலகிலும் தமிழ்ப் பிழைகளே
பெரிதும் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இது
மிக உதவியாக இருக்கும்.

இது தில்லிக் கணியுலகமோ, ஆங்கிலக் கணியுலகமோ
செய்த படைத்து நமது தலையில் திணித்ததல்ல.
தமிழ்நாட்டொருவரின் தனித்தமிழ்ப்படைப்பு.
கூகுளோ, மைக்குரோசாவ்ட்டுவோ செய்து, தமிழ்
வளர்ந்துவிட்டது என்று நாம் பெசிக்கொள்ளுமுன்னர்
தமிழர் ஒருவரின் தமிழ்நாட்டுத் தமிழ்ப் படைப்பு
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இதனைச் செய்தமைக்காக பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
அவர்களையும் அவரின் கணிஞர்களையும்
பாராட்டிப் பெருமையடைகிறேன். எசாரெம் பல்கலைக்கழகம்
இதனை ஆதரித்து உலகத்தரம் வாய்ந்த வெளியீட்டு விழா
செய்திருந்தது மிக உகப்பாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது.

தமிழின் கணிநுட்பப் படைப்பான இது தமிழ்நாட்டுக்குள்

மட்டுமல்லாது, கூகிள், மைக்ரோசாவ்ட்டு, ஆரக்கிள்
போன்ற நிறுவனங்களுடனும், வடநாட்டு மொழிசார்
நிறுவனங்களுடனும் கூட்டுறவு கொண்டு மிக
அகண்ட தமிழ்ச் சந்தையை உருவாக்குதற்கும்
வழிகாட்டியாக அமைந்து, மிகப்பெரிய வெற்றிகளை
ஈட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழர்கள் தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின் பிள்ளைகளுக்கும் வாங்கவேண்டிய சொவ்வறை! http://www.lingsoftsolutions.com/ என்ற தளத்தில் இச்சொவ்வறை
இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்