Pages

Sunday, November 12, 2006

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.

2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.

3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.

5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.

6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.

இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.

7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.


கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, November 10, 2006

வாகரைப் படுகொலைகள்

தமிழ் ஈழத்தில், வாகரையில் மீண்டும் அப்பாவி அகதி மக்களின் மீது
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.

தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.