Pages

Sunday, May 19, 2002

கண்ணகி கோயில் - மடல் 6 - நிறைவு

கண்ணகி கோட்டத்திற்கு சென்று திரும்பியது எனக்கு இனிமையான
பயணமாக அமைந்தது. மலைவிட்டு இறங்கி திருச்சிக்கு சேரவேண்டுமானால்
சுமார் அய்ந்தரை மணி நேரப் பயணம். கம்பத்தில் நேரம் ஏறத்தாழ மாலை நாலரை ஆகிவிட்டது புறப்படும்போது.

இருப்பினும் வழியிலே திண்டுக்கல்; திண்டுக்கல்லிலே நம் அன்புக்குரிய திரு.ஞானவெட்டியான் அவர்கள்.

முதல்நாள் அவரின் அழைப்பை அடுத்து அவரோடு தொலைபேசியில் உரையாடிதும், வழியில் அவரைக் காணாமல் செல்வதில்லை என்று நினைத்திருந்தேன். திண்டுக்கல்லில் இறங்கி, அவரை தொலைபேசியில் அழைத்ததும் 15 மணித்துளிகளில் பறந்து வந்து சந்தித்தார். அன்பே உருவானவர். அன்பொழுக என்னைப் பசியாற்றி, இருந்த அந்த முக்கால் மணி நேரத்தில் என்னை மிகவும் கவர்ந்தார். அடடா, இன்னும் கொஞ்சம் முன்னால்
வந்திருந்தால் அவரின் இல்லத்திற்கே சென்றிருக்கலாம்,
இன்னும் நிறைய பேசியிருக்கலாம் என்று எண்ணினேன். (இன்னும் நல்லா சாப்பிட்டிருக்கலாம்) இணையத்திற்கு மேலும் ஒரு நல்ல நண்பர், பெரியவர் கிடைத்திருக்கிறார். அவரும், அவருடன் வந்திருந்த அவரின் மைத்துனர் அவர்களும் தமிழ் உலக நண்பர்களை நேசிக்கிறார்கள். கொஞ்ச நேரமே ஆயினும் தமிழ் உலகம் பற்றியே கதைத்து விட்டு "கட்டாயமாக அடுத்த முறை அவருக்காகவே திண்டுக்கல் வருவதாகக்" கூறி விடைபெற்று திருச்சி புறப்பட்டேன்.

பேருந்தில் ஏறுமுன் நினைத்துக் கொண்டேன். எங்கு சென்றாலும் இணைய
நண்பர்கள் யாரையாவது சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து விடுகிறது; உலகத்தில் 'இணைய வழி அறிந்த நண்பர்களை, நிறைய எழுதும் நண்பர்களை
அதிகம் சந்தித்தது அல்லது தொலைபேசியது யார்?' என்று போட்டி வைத்தால்
நாம் எளிதாக வென்றாலும் விடலாம் என்று நினைத்துக் கொண்டேன் ;-)

நண்பர்களே, இதில் சேதி என்னவென்றால், 'இணையக் குமுகாயம் விரிந்து வருகிறது; வேகம் குறைவெனினும் அதில் உறுதி தெரிகிறது; இந்த ஊடகத்தின் சிறப்பு இதன் குமுகாயமே! ஆதலின் இந்த ஊடகத்தால் தமிழ்க் குமுகாயத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியும்' என்ற எண்ணங்கள் உறுதிப் பட்டுக் கொண்டே வருகின்றன.

இவ்வூடகத்தில் கண்ணில் படும் தமிழ்ப் பிழைகள் தவிர்க்கப் படவேண்டும்.
ஏனென்றால் தமிழ்ப்பிழைகள் புதுப்பிழைகள் அல்ல!

காலகாலமாய் செய்யப் பட்டு, பழக்கப் பட்டு வந்த அதே பிழைகள்தான் இங்கும் வரக்கூடும்.அவைகள் தவிர்க்கப் பட்டால், ஏற்படக்கூடிய தாக்கம் நல்ல தாக்கமாக இருக்கும்; இல்லையெனில் பிழைகள் குலைகுலையாய்ப் பெருகும் என்பதில் அய்யமில்லை.

பகலின் வெம்மை மறைந்து இரவின் இனிமை ஆரம்பித்து விட்ட அந்த ஒன்பது
மணி இரவில் பேருந்தில் அமர்ந்து சாலையோர வேகக் காற்றில் முகத்தை வைத்து, கண்களை இருட்டில் வைத்து, நினைவுகளை மீண்டும் கண்ணகி கோட்டத்தில் விட்டபோது இருநாள் நிகழ்வுகளும், பலரோடு உரையாடியதும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன.

இராச இராச சோழன், தன் ஆட்சிக் காலத்தில் கண்ணகி கோட்டம்
வந்து, அதன் சமணத் தன்மைகளை மாற்றி, அதில் சைவ முறைகளை ஏற்படுத்தி
வைத்ததாகக் கூறப்பட்டது. குட்டுவன் கட்டிய கோட்டத்தில் இலிங்கம் இருந்ததாகத் தெரியவில்லை. யாரும் கவனிப்பார் இன்றி கிடக்கும் கோட்டத்தை, இவனாவது கவனித்தானே என்று எண்ணியபோது மனதில் மகிழ்ச்சியே நிறைந்தது. சேரநாட்டில் தெய்வமாகினாலும், சோழநாட்டுப் பெண் என்ற
அன்பில் இராசராசன் செய்தது மகிழ்ச்சியளித்தது.

அநேகமாக இது புகழ் பெற்ற , சோழப் பேரரசிற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்த சேரநாட்டு காந்தளூர்ச் சாலை போர்க்கு சென்று பெரு வெற்றி பெற்று மும்முடிச்சோழன் ஆக இராசராசன் பட்டம் கட்டித் திரும்பிய காலமாக இருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் இவன் பேரரசு பல்கிப் பரவியது.

தமிழரசியல், தமிழியம், தேசியம் என்றெல்லாம் ஆர்வப் படுபவர்கள் தவிர்க்க
முடியாத சங்கதிகள்/வரலாறுகள் இவை.

கண்ணகிக்கு அவங்கப்பா 7 யானைகளை சீதனமாகக் கொடுத்தார் திருமணம்
செய்து கொடுத்தபோது என்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ,
அவ்விடம் போய் அவரிடம் அது பற்றிச் சேதியறிய முனைந்தும் நெரிசல் காரணத்தால் அது இயலாமற் போனது.

"கோவலன் கொலையானது கேட்டு கொதித்துப் போனார்கள் பெற்றோர்கள்;
கண்ணகி மதுரையை எரித்ததும், 'நீ இங்கே சாகாதே, நேராகப் போய் சேரநாட்டில்
இப்பகுதியில் சாவு; அப்பொழுதுதான் உனக்கு புகழ் கிடைக்கும்' என்று அனுப்பி
வைத்ததே அவங்கப்பாதான்' என்றொருத்தர் கூறியபோது சற்று
அதிர்ந்து போனேன். அதோடு, 'அவுங்கெல்லாம் பணக்காரச் செட்டியாருங்கங்க;
அவுங்களே கட்டினாலும் கட்டியிருப்பாங்க கோயிலை' என்று சொன்ன போது,
எனக்கு இனம்புரியா உணர்வுகள்; சற்றே சிரிப்பு. சில நூல்களில் மற்றும்
பேச்சுவாக்கிலும், "கண்ணகியை, சாதியை வைத்து தமிழர் பலர் கண்டு கொள்ளவில்லை" என்று அறிந்திருந்தது/கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
சரி சரி நாம் நாமே! :-) என்று எண்ணிக் கொண்டு அங்கும் இங்கும் படம் எடுத்துக்
கொண்டு இருக்கையில்,

"எங்கூட்டுக் காரரும் வனக்காப்பாளர்தான் (பாரெசுடு ஆபீசர் ), ஆனால் இந்தக்
கேரளாக் காரங்க மாதிரி இல்லங்க". நிரம்ப கடுபிடி பன்றாங்க; ொம்பளைங்களுக்குன்னு இருக்கிற தெய்வம்;
அதைக் கும்பிட வந்தா இப்பிடியா நடந்துக்கறது"? என்று சொல்லி நன்கு பேசிய அந்த அம்மையார், அண்டை ஊர்க்காரர். வருசா வருசம் வரும் இவர் கண்ணகியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம்.

அப்பெண்மணியும் அவரின் அம்மாவும் (வயது 65 இருக்கும்), கண்ணகி கோயிலுக்குப் பின் இருக்கும் மண்டபத்தின் உள் மிக ஆர்வமாக சாமி கும்பிட்டனர். "இங்கதாங்க அந்த அம்மா (கண்ணகி) வந்து உட்கார்ந்து தண்ணி குடிச்சது" என்று சொன்னது சிந்தனைக்குரியது. வானவூர்தி ஏறி கோவலனுடன் விண்ணுலகம் போனாள் என்று சிலம்பு கூறுவதையும், 14 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் வந்து புங்கை மர நிழலில் நின்றவளுக்கு, அவளைக் கண்ட குறமகளிர் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்திருத்தல் வேண்டும் என்று
நாம் எண்ணுவதையும் எண்ணிப் பார்த்தால்,
பிந்தையது அந்த அம்மையாரின் நம்பிக்கையோடு ஒத்துப் போகிறது.

அதோடு, அந்த கோயிலுக்குள் இருக்கும் சுரங்கம் வழியாகத்தான் கண்ணகி
அங்கு வந்தாள் என்று அந்த அம்மையார் சொன்னபோது நம்பும்படியாக இல்லை.
இருப்பினும் அது அவரின், அந்தப்பகுதியில் வாழ்வோரின் நம்பிக்கை; அல்லது
அவர்கள் அறிந்தது.

கோட்டத்திற்கு சென்று வந்து ஏறத்தாழ 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில்,
பல நிகழ்வுகள் நினைவுகளின் ஆழத்திற்கு சென்றுவிட்டன. இருப்பினும் ஒரு முக்கியமான ஒன்றை நான் மறக்கவில்லை. அங்கு சுறுசுறுப்பாக கையில்
படக்கருவிகளுடன் நிறைய பேருடன் பேசிக் கொண்டிருக்க, ஒரு கண்ணகி
பக்தருக்குப் பொறுக்கவில்லை.

வயிறின் வளர்ச்சியால் வளைந்து கிடந்த உடம்பு. வயிறு வரை தாடி.
இடுப்பு வரை பின்னாமல் விரித்துப் போட்டிருக்கும் தலைமயிர். வெள்ளை வேட்டி, சட்டை. (தமிழாதவனுடன் நான் இருக்கும் படத்தில் அவரின் பாதியைக் காணலாம். படங்கள் விரைவில் சிங்கை இணையத்தில் போடப்படும்). அவர் பெயர் நினைவில் இல்லை. (கொஞ்சம் கிண்டலாகச் சொன்னால் காபாலிகர் போல் இருந்தார்; கழுத்தில் அந்த மாலை இல்லை :-) )

கும்பகோண பாவேந்தர் தமிழியக்க நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது,
இவர் வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

"என்னங்க....இதெல்லாம் நம்ப வேலைதான்...
நீண்ட நாட்கள் நான் செய்த உழைப்பு;
அதனால்தான் இவ்வளவு பேர் இங்கு வருகிறார்கள்.
நானும் முன்னாடி அறக்கட்டளையில் இருந்தேன்;

கண்ணகி என் மேல சாமியா வந்து ஆடுவா!
வந்து குறி சொல்வா!.

இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன் வந்தா!"
என்று சொன்னவரை மேலும் நோண்டிவிட ;)
அவர் பாட்டுக்கு பேச ஆரம்பித்து விட்டார்.
பேசிப் பேசி இறுதியாக சொன்னார்.

"ஏன் இவ்வளவு பிரச்சினைகள்னா,
கண்ணகி மேல் தோசம் அதிகம்ங்க.
'பாண்டியன் செத்துப் போனாலும் தோசம் இவளுக்குதாங்க!'.
அதோடு, மதுரையை எரித்த தோசம் என்ன சின்னதா...?
(இரண்டு மூன்று தோசங்களைச் சொன்னார்...நினைவிலில்லை)
பிரம்மகத்தி தோசம் இவளுக்கு உண்டுங்க.... அதோடு
வெற்றி வேல் செழியன் கொன்றானே ஆயிரம் பொற்கொல்லர்கள்..
அந்த தோசமும் இவளுக்கு வந்திருச்சிங்க..'.என்று சொல்லி
சிரித்தார் பெரிதாக..... தொடர்ந்து
'இந்த தோசமெல்லாம் போனாதாங்க இவளுக்கு கோயில் அமையும்..
அதற்குதாங்க நான் போகாத கோயிலே இல்லை...
30 நாள் நோன்பிருந்து இராமேசுவரம், கும்பகோணம் என்று பல
கோயில்களுக்குப் போய் கண்ணகி மேல் உள்ள தோசத்தைக்
கழித்து நேரே இங்கு வருகிறேன்' என்று சொல்லி...
மேலும் சொல்லப் போனவரை ஒரு மாதிரியாகப் பார்த்து,
'கனகவிசயன் தலையில் வைத்து கல் கொண்டு வந்ததும் தோசம்தான்'
என்று சொன்னாலும் சொல்வாய் நீ... என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்
கொண்டு மற்ற நண்பர்களோடு சேர்ந்து அவரிடம் அவசர விடை பெற்றுக்
கொண்டு நகர்ந்தேன்.

மதுரையில் வளையல்களை உடைத்துப் போட்டு விட்டு, வைகையின்
தென்கரையில் நடந்து வந்து ஆண்டிப்பட்டிக் கணவாயில் திரும்பி
ஊர்களைக் கடந்து, இந்த நெடுவேள் குன்றத் தொடர்களில் ஏறி இறங்கி
இங்கு வந்தாள் கண்ணகி, என்று நண்பர் ஞானம் சொன்னது சரியாகவேப்
பட்டது எனக்கு.

திருச்செங்கோடு, திருச்செங்குன்றம், கொடுங்களூர் பகவதி, மாசாணிக்கரை
அம்மன், சோட்டாணிக்கரை பகவதி என்று பல கருத்துக்கள் நிலவினும்,
மதுரை, வைகை தென்கரை, ஆண்டிப்பட்டி கணவாய், பளியன்குடி, நெடுவேள்
குன்ற மலைத்தொடர் என்று வந்து வைகையின் தோற்றுவாயில்
அமைந்திருக்கும் இந்த இடம்தான், இதே இடம்தான்
குட்டுவன் கட்டிய கோட்டம் என்பதற்கு சான்றாக சிலம்பு,
" செங்குத்தான மலை உச்சியில், மூங்கில்கள் சூழ்ந்த இடத்தில்
யானையைப் போன்ற நீண்ட பாறை! அதன் உச்சியில் நீர் நிறைந்த
பல சுனைகள்...." என்று கூறுகிறது.

"மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
செங்கோட்டு உயர்வரைச் சேண்உயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை நிரம்பிய
அணிகயம் பலஉள; ஆங்குஅவை இடையது
கடிப்பகை நுண்கலும் கவிர்இதழ்க் குறுங்கலும்
இடிக்கலப்பு அன்ன இழைந்துஉகு நீரும்
உண்டுஓர் சுனை;......"
- சிலம்பு: வரம்தருகாதை:53-59

நண்பர்களே,
கண்ணகி கோட்டப் படங்களை, நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கு
அனுப்பி வைத்திருக்கிறேன். விரைவில் அவை சிங்கை இணையத்தில்
ஏற்றப்படும்.

1800 ஆண்டுகளுக்குப் பிறகு, குட்டுவன் கட்டிய கண்ணகி கோட்டம்
படங்களாக "இணையக் கண்ணகி கோட்டமாக" சிங்கை இணையத்தில்
அமையக் கூடும் என்று கருதுகிறேன். மடல்கள் நிறைவுறுகின்றன.

குட்டுவன் கட்டிய கோட்டம் இன்று
கட்டுகள் கலைந்து கல்லாய் மண்ணாய்!
உறவுகள் எல்லாம் ஊரில் இருக்க
பிரிந்து அவளோ தனியே வெளியே!
கற்பின் அரசியைக் கண்டேன் கண்டேன்!
கண்டதும் கண்களில் துளியே துளியே!
காலம் மாற்றுவேஎன், கவனம் திருப்புவேன்!
கோட்டம் மீட்டு குலமகள் போற்றுவேன்!

நிறைவு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
19/மே/02

தொடர்புடைய மற்ற சுட்டிகள்:

சிலம்பு மடல் - 32
http://nayanam.blogspot.com/2000/12/32.html

சிலம்பு மடல் - 33
http://nayanam.blogspot.com/2000/12/33.html





Monday, May 13, 2002

கண்ணகி கோயில் - மடல் 5 - நேர்காணல்

"மங்கலதேவி கண்ணகி" என்றே சிறீ பூரணகிரியில், கண்ணகி கோட்டத்தில்
இருக்கும் கண்ணகி அழைக்கப்படுகிறார். அப்பெயரிலேயே, அதாவது
"மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை" என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

இவ்வமைப்பு, கம்பம், கூடலூர் என்ற பேரூர்களையும் சேர்ந்தவர்களைக் கொண்ட பொது அமைப்பாக இயங்கி வருகிறது.

கண்ணகி கோட்டம், அதற்கான பணிகள் விழாக்கள், போராட்டம்
என்று சொன்னால் காலஞ்சென்ற திரு. கூடல் தா.இராமசுவாமி என்பார்தான்
முன்னோடியாவார். அவர் தொடங்கிய ஒரு அமைப்புதான், கண்ணகி கோயிலை
தமிழகத்தில் பேசவைத்தது. தன்னலம் கருதா, சொந்த செலவிலேயே பல
நற்பணிகளை கண்ணகி கோயிலுக்காக செய்து சுற்றுப்புறங்களும்,
ஆர்வலர்களும் வணங்கத்தக்க நற்பெயரை விட்டுச் சென்றிருக்கிறார் கூடலூரைச் சேர்ந்த தா.இராமசுவாமி அவர்கள்.

கம்பத்திற்கு, விழாவிற்கு முதல்நாளே (26/ஏப்) சென்றுவிட்டது பல வகையில்
பயனுள்ளதாக அமைந்தது.

"மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை" அமைப்பின் தலைவர் திரு.தமிழாதவன்
அவர்களை நேர்கண்டு உரையாடியவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாள்: 26/ஏப்ரல்/02
இடம்: கம்பம்.

இளங்கோ: இண்டர்நெட் என்று சொல்லப்படுகின்ற இணையத்தில்,
மடலாடு மன்றங்கள், மின்னிதழ்கள் பெருகி வருகின்றன. அங்கே தமிழ் நிறைந்து
வருகிறது. அந்த இணையத்தில் உள்ள "தமிழ் உலகம்" மடலாடு மன்றத்தின் சார்பாக தங்களிடம் நேர்காணுதலில் மகிழ்வடைகிறேன். இதனால் பன்னாட்டு தமிழர்க்கு கண்ணகி கோட்டம் பற்றி சேதிகள் சென்றடையும் எனும்போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

தமிழாதவன்: தங்களோடும் இணையத் தமிழர்களோடும்
தொடர்பு ஏற்படுவது மகிழ்ச்சி தருகிறது.

இளங்கோ: உங்கள் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டது எப்போது?
தமிழாதவன்: 1999

இளங்கோ: அதற்கு முன்னர் கண்ணகி கோட்டத்திற்காக அமைப்புகள் இல்லையா?

தமிழாதவன்: என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்?! பல ஆண்டுகளுக்கு முன்னரே,
"மங்கலதேவி கண்ணகி கோட்டச் சீரமைப்புக் குழு & அறக்கட்டளை" என்ற அமைப்பை, காலஞ்சென்ற, கூடல் திரு.தா.இராமசுவாமி அவர்கள் தொடங்கினார்.
அவர்தான் கண்ணகி கோட்டம் சார்ந்த தொண்டுகளுக்குத் தந்தையாவார். அந்த
அமைப்புதான் அனைத்து அமைப்புகளுக்கும் தாய்க்கழகமாகும்.

இளங்கோ: கூடல் இராமசுவாமி அவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

தமிழாதவன்: தன்னலம் கருதா, பொதுப்பணி ஆற்றியவர். கண்ணகி கோட்டப்

பிரச்சினைக்கு தமிழ் மன்றத்திற்கு எடுத்துப் போனவர். பல போராட்டங்கள் மற்றும் உண்ணா நோன்புகள் நடத்தி தமிழக மற்றும் கேரள அரசுகளின் கவனத்தை ஈர்த்தவர்.

இப்பகுதி மக்களின் அன்பைப் பெற்ற பண்பாளர். எங்கள் பணிகளுக்கெல்லாம்
தந்தையாய் முன்னோடியாய் இருந்து கண்ணகி கோட்டப் பணி தொடர்ந்து நடைபெறக் காரணமானவர்.

இளங்கோ: உங்கள் அமைப்பின் குறிக்கோள்கள் என்ன?
தமிழாதவன்: 1) கோட்டத்தை சீரமைத்தல்
2) சிலப்பதிகாரத்தை மக்கள் மனதில் பதித்தல்
3) நலிந்தோர்க்கு உதவுதல்
4) பளியங்குடி வழியே, தமிழகத்துக்குள் இருக்கும்
மலைவழி நடைபாதையை மேம்படுத்தி பொதுமக்கள்
கோட்டத்திற்கு சென்றுவர வழிஏற்பட, அரசையும்
ஆர்வலர்களையும் ஒன்றுபடுத்தி செயல்படுதல்.

இளங்கோ: உங்களுக்கு இப்பகுதியில் உள்ள அரசியல், குமுகாய அமைப்புகளில்
இருந்து ஆதரவு கிடைக்கிறதா?

தமிழாதவன்: இப்பகுதி மக்கள் அரசியல் வேறுபாடு இல்லாமல் கண்ணகி

கோட்டத்திற்காக ஆதரவு அளிக்கிறார்கள். அது போற்றப்படத்தக்கது. அதேபோல்
அரசியல் சார்பற்ற அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

இளங்கோ: சித்திரை விழாவைத் தவிர வேறு விழாக்கள் கண்ணகி கோட்டத்தில்
நடக்கிறதா?

தமிழாதவன்: சித்திரை முழு நிலவு நாள் விழா மட்டுமே! மதுரையில் அழகர்
ஆற்றில் இறங்கும் அதேநாளில் இவ்விழாவைக் கொண்டாடுகிறோம். முன்னாளில் இந்த விழா மூன்று நாட்கள் நடக்கும்; அது இப்பொழுது ஒன்றாகி விட்டது.

இளங்கோ: இவ்விழாவிற்கு வருவோர்களில் சாதி வேறுபாடு ஏதேனும் உண்டா!
தமிழாதவன்: இல்லை இல்லவே இல்லை!

இளங்கோ: மதங்களைக் கடந்து கண்ணகி வழிபாட்டிற்கு வருவோர்கள் உண்டா?
தமிழாதவன்: ஆம்! நாளை வாருங்கள் காட்டுகிறேன்.

இளங்கோ: எவ்வளவு பேர் சாதரணமாக விழாவிற்கு வருவார்கள்?
தமிழாதவன்: 25 முதல் 30 ஆயிரம் பேர் கடந்த வருடம் கலந்து கொண்டார்கள்.

இளங்கோ: என்ன நோக்கிற்காக இக்கோயிலுக்கு வருகிறார்கள்?
தமிழாதவன்: பெரும்பாலும் வழிபாடு. சுற்றுலா மற்றும் ஆய்வு நோக்கு. பெரும்பாலும் இப்பகுதி மக்கள் வருவார்கள். கேரள மக்களும் வருவார்கள்.
இந்த வருடம் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.
இது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

இளங்கோ: கம்பம், ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்த தேனி மாவட்டத்தில் மக்கள் தெய்வமாக கண்ணகியை
வழிபடுகிறார்கள் என்று அண்மையில் அரசியல் மேடைகளில் பேசப்பட்டதே, அது உண்மையா?

தமிழாதவன்: ஆமங்க! பலர் 40 நாள் நோன்பிருந்து வருகிறார்கள். நாளைக்குத்தான் நீங்கள் வருகிறீர்களே; பார்த்து விட்டுக் கேளுங்கள்.

இளங்கோ: சென்னையில் கண்ணகி சிலை பெயர்க்கப் பட்டு விட்டதே; அது
குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழாதவன்: சிலை பெயர்க்கப் பட்டது ஏற்றுக் கொள்ள இயலாதது. அதற்காக
நாங்கள் இங்கு போராட்டம் நடத்தினோம் (அது குறித்த புகைப்படங்களைக் காண்பித்தார்.

பி.ஆர்.ஈசுவரன் (தி.மு.க) மற்றும் அறக்கட்டளை முன்னணியினர்
செய்த போராட்டக் காட்சிகளை அப்படங்களில் காண முடிந்தது).

இளங்கோ: கண்ணகி கோயில் உள்ள இடம் திருச்செங்கோடு என்றும் திருச்செங்குன்றம் என்றும் சொல்லப்படுகிறதே? (கூறியவர்கள் முறையே அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லார் என்றும் நாட்டார்
உரைக் குறிப்பு கூறுகிறது)

தமிழாதவன்: வையைக் கரையோடு வந்த கண்ணகி, எங்கேயோ இருக்கும்
திருச்செங்கோட்டிற்கு எப்படிப் போக முடியும்?

இளங்கோ: "வென்வேலான் குன்றில் விளையாட்டு நான் அகலேன்" என்று கண்ணகி கூறியதாக சிலம்பு கூறுகிறதே; அதனால் முருகன் வாழும் மலையில்தானே சென்று சேர்ந்திருக்க வேண்டும்?

தமிழாதவன்: அட என்னங்க! இங்கேயிருந்து 17 கி.மீ கிழக்கே, "சுருளி தீர்த்தம்" என்ற அருவி உள்ளது. அங்கே சுருளி வேலப்பர் என்ற ஆண்டவனும் இருக்கிறான். சிலம்பு சொல்லும் நெடுவேள் குன்றம் அங்குதான் உள்ளது. இதை விட வேறு சான்று தேவையில்லை. சுருளி அருவிக்கு நிறைய பேருந்துகள் போகின்றன.

நீங்களும் போய் வாருங்கள். அது மட்டுமல்ல இன்னும் கொஞ்ச தொலைவு போனால் "சண்முக தீர்த்தம்" என்ற அருவியும் உண்டு.

இளங்கோ : கண்ணகிதான் மாரியம்மன் என்ற கருத்து உளதே? அது குறித்து....
தமிழாதவன் : நிச்சயம் இல்லைங்க. மாரியம்மன் என்ற கடவுளுக்கு மிகப்பிந்தியவர் கண்ணகி.

இளங்கோ: இலங்கைக் கண்டியில் உள்ள கண்ணகி கோயிலுக்கும்
முதற்கோயிலானா இந்தக் கண்ணகிக் கோயிலுக்கும் ஏதேனும் தற்போது தொடர்புண்டா?

தமிழாதன்: (சற்று யோசிக்கிறார்.) இல்லைங்க அப்படியேதும் இல்லை.
நாம் போக முடிவதே வருடத்தில் ஒரு நாள். இடிந்து பாழ் பட்டுக் கொண்டிருக்கும்
கோயிலுக்கு மனிதர்கள் போவதே ஒருநாள் மட்டும். அப்புறம் எப்படி தொடர்பு
இருக்க முடியும்?

இளங்கோ: இங்கு தொல்பொருள் ஆய்வுகள் ஏதும் நடந்ததா?
தமிழாதவன்: தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் விரிவாக ஏதும் செய்ததில்லை.

இளங்கோ: அய்யப்பன் கோயிலுக்கு அனுமதி தரும் கேரள அரசு, கண்ணகி கோயிலுக்கு ஏன் அனுமதி மறுக்கிறது?

தமிழாதவன்: (சற்று யோசனை...சற்று சிரிப்பு) அய்யப்பன் கோயில் கேரளாவில்
உள்ளது. கண்ணகி கோயில் தமிழகத்தில் அல்லவா உள்ளது!!!! அதற்கெப்படி
கேரள அரசு அனுமதி தர முடியும்? (என்று கேட்டு அர்த்தமுள்ள புன்னகை புரிந்தார். அது எனக்கு இதமாக இருந்தது)

(திரு.தமிழாதவன், கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள்தான் உள்ளது. நாம்தான் அதைக் கவனிக்காமல் குழப்பிக் கொண்டு இருக்கிறோம் என்று ஆழமாக நம்புகிறார். எண்ணுகிறார்; தமிழகம் சிறு முயற்சி எடுத்தாலே நலம் விளையும் என்று எனக்கும் அந்த உரையாடலில் பட்டது)

இளங்கோ: கண்ணகி கோயில் இங்கு மட்டுமே உள்ளது. முதற்கோயில். தமிழகம்
முழுவதும் பரவ வழியுண்டா?

தமிழாதவன்: இப்பகுதியில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பிற பகுதிகளில்
ஆங்காங்கு உள்ள தமிழர்கள்தான் செய்ய முன் வரவேண்டும்.

இளங்கோ: கேரள தமிழக எல்லை பிரிப்புக்கு முன் இந்தக் கோயிலில் வழிபாடு
இருந்ததா?

தமிழாதவன்: இந்த மக்களின் பழக்கவழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. எல்லை
பிரிப்புக்குப் பின்னர் பிரச்சினைகள் ஏற்பட விசயம் வெளியே வந்தது.

இளங்கோ: சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோயிலை நிறுவி, வழிபாட்டு முறைகளை செய்து வைத்தான். அதேபோல் சோழன் இராச இராசன் தஞ்சையில் சிவன் கோயிலை நிறுவி வழிபாட்டு முறைகள் செய்து வைத்தான். இராச இராசன் செய்து வைத்தது காலகாலமாய் நின்றது போல் கண்ணகி கோயில் வழிபாடு காலகாலமாய் நிற்கவில்லையே! இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்!

தமிழாதவன் : (புன்னகை, யோசனையோடு)...அது சைவங்க!...இதுதான் சமணம் என்று சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியுமே....என்று பல்பொருள் சிரிப்பொன்றை சிரிக்க, நானும் கண்விரித்து சிரிக்க அத்துடன் நேர்காணலை முடித்துக் கொண்டு அதே கருத்தை உரையாடிக் கொண்டிருந்தோம்.

(கண்ணகி கோயிலின் அமைப்பு சமணர் கோயில் போன்றது அல்ல. அது சமணக் கோயிலாக இருந்திருக்க முடியாது)

நான் எடுத்த முதல் நேர்காணல் இது. பக்கத்தில் கடைக்குப் போய், ஒரு 40 பக்க
குறிப்பேடு வாங்கி, கேள்விகளை முன்னரே எழுதி வைத்துக் கொண்டு அவரிடம்
அமர்ந்தேன். கேள்வி கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று; எனக்கும் பிடித்த ஒன்று; தருமிக்கும் பிடித்த ஒன்று :-) அவ்வப்போது சிலம்பு வரிகளை எடுத்தாண்டு ஆண்டு பறிமாறிக் கொண்டதால் இந்த நேர்காணல் மற்றும் உரையாடல் மிகச் சுவையாக இருந்தது எனக்கு.

தமிழாதவன் அவர்களோடு அன்றைய நாளிற்கு விடைபெற்றுக் கொண்டு
உலகத்திற்கு எழுதலாம் என்று உலவகம் சென்றால்...அய்யோ அதற்கு பதிலாக
அய்ந்து தடவை கண்ணகி கோயில் உள்ள மலையில் ஏறி இறங்கி விடலாம் :-)

அன்புடன்
நாக.இளங்கோவன்
13/மே/2002

Sunday, May 05, 2002

கண்ணகி கோயில் - மடல் 4 - வழிபாடு

காலையில் 8 மணிக்கெல்லாம் கண்ணகி கோட்டத்தை அடைந்து
தென்வாயில் வழியாக உள்ளே நுழைவதற்கு முன் கம்பத்திலும்,
நடைபாதையிலும் நிறையவே பயமுறுத்தியிருந்தனர். கேரளக் காவலர்கள்
இருக்கும்போது படம் பிடித்தால் படச்சுருள் போய் விடும்;
சமயத்தில் கருவியும் போய்விடும் என்று நிறைய
பழைய கதைகளைச் சொல்லியிருந்தனர்.

முதல்நாள் இரவு ஒரு நண்பர், ஒரு பொட்டலம் உப்பைக்
கொண்டு வந்து கொடுத்தார். எதற்கு என்ற போது, அப்பகுதியில்
அட்டைகளின் தொல்லை இருந்திருக்கிறது; அவ்வட்டைகள் இரத்தத்தை
உறிஞ்ச ஆரம்பித்தால் மரக்காக் குருதி போய்விடும் என்று சொல்லி, அதைக்
கைகளால் பிடுங்கமுடியாது; உப்புத்தூளைத் தூவினால்தான் ஆளை விடும்
என்று சொல்லிக் கொடுத்தார். அதோடு பாதைகளின் கடுமை பற்றி சற்று
மிகைப் படுத்தியே சொல்லியிருக்க நிறைய முன்சிந்தனைகளோடுதான்
செல்ல முடிந்தது.

காலையில் விரைவில் சென்று விட்டதால், கூட்டம் நிறைய சேர்ந்திருக்கவில்லை.

உள்ளிருந்த கோயில்களில் சிலர் மட்டுமே
வரிசையில் நிற்க, அதிகாலை வந்தது நல்லதாகப் போய்விட்டது
என்று நினைத்து முதலில் சிவன் கோயில் மண்டபத்தில் உள் நுழைந்தேன்.
சிறு கருவறை. மிகக் குறைந்த விளக்கு வெளிச்சம். இருப்பினும்
வழிபட்டு விட்டு , இதைப் படம் பிடிக்கவேண்டுமே என்று கேட்க
எடுத்துக்கொள்ளுங்கள் என்று தள்ளி நின்றார் பூசாரி.
நிழற்படம் எடுத்தபின் தொடர்படம் எடுக்க அச்சம் வந்து விட்டது; கருவி
போனால் என்னாவது என்று!

விரைவில் வெளிவந்து அடுத்ததாகக் கண்ணகி கோயிலில் வரிசையில்
நின்றேன். அந்நேரத்தில் சிறு வரிசைதான். விரைவில் கண்ணகி சிலையைப்
பார்க்க முடிந்தது. வழிபாட்டை என் போக்கில் செய்து விட்டு, முக்கியமாக
நோட்டம் விடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்.

தமிழ்க் கோயிலில், வாழ்ந்து நிறைவடைந்த தமிழச்சியின் கோயிலில்
கன்னடப் பூசாரி சமக்கிருதத்தில் மந்திரம் ஓதி பூசாரி சந்தனத்தை முதலில் கொடுக்க அதை நெற்றியில் அணிந்து நிமிரும் முன்னர், தன் வலது கையின் கணையாழி விரலில் திருநீறைத் தொட்டு என் நெற்றியில் பூசினார் அந்தப் பூசாரி.

எனக்குப் பூசத் தெரியாதா? அடுத்தவர் விரல் நம்மேல் படுவதா என்ற சினம் வந்தது உண்மை. ஒரு முனகலுடன் முறைத்துவிட்டு குங்குமத்தை நானே எடுத்துக் கொள்ளச் செல்ல, புரிந்து கொண்ட பூசாரி என்னைத் தடுத்து என் கையில் குங்குமத்தைக் கொடுத்தார்.

அவர் அருகில் ஒரு தமிழர் அமர்ந்து தனியே திருநீறு குங்குமம் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்க, படம் பிடிக்க வேண்டும் என்று கேட்க,
சீக்கிரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, சம்மணம் போட்டு
உட்கார்ந்து நிழற்படம் எடுத்தேன். பின்னர் மின்னல் வேகத்தில் தொடர்படக்
கருவியைச் சொடுக்கி கண்ணகி சிலையையும் கருவறையையும்
தொடர் படமாக எடுத்துக் கொண்டு, வந்த வேலையில் முக்கிய வேலை
முடிந்த மகிழ்ச்சியில் இடத்தைக் காலி செய்தேன்.

கண்ணகி சிலையைக் காண கோயிலுக்கு சென்ற எனக்கு
அங்கு ஒரு அதிர்ச்சியும் இருந்தது. கண்ணகி சிலை முழுவதும் இல்லை.
இடுப்புக்கு மேல் ஒடித்து விட்டார்கள்.
இடுப்புக்குக் கீழ் பகுதியை செவ்வாடையையும், மஞ்சளாடையையும் கட்டி,
பூமாலைகளைச் சூடி அழகு செய்திருந்தார்கள்.
முழுச் சிலையும் காணவியலாத வருத்தம் :-(

கோயிலுக்கு முன்னிருந்த சதுக்கத்தில் சமக்கிருத யாகம் நடந்து கொண்டிருந்தது.

காதைப் பொத்திக் கொண்டு அவ்விடம் நகர்ந்து ஏனைய
மண்டபங்கள் சிற்பங்கள் பார்க்கச் சென்று விட்டேன்.

ஒரு நேரத்தில் "காமாட்சியே போற்றி, மீனாட்சி போற்றி...ஈசுவரியே போற்றி.." என்ற தமிழ் மந்திரம் காதில் வந்து விழுந்தது. சிலம்பிலிருந்தே
எடுத்து ஓத நல்ல தமிழ் இருக்கையில், சமக்கிருத மந்திரமும், பிற மந்திரங்களும் ஏன் என்ற கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டே இருந்தன.

இது ஒரு புறமிருக்க, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் சார்பில்
நிகழ்ச்சி நிரல் வைத்திருந்தனர்.

அவர்களின் அன்றைய கண்ணகி வழிபாட்டு நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

பள்ளி உணர்த்தல் (காலை 5 - 5.30)
மலர் வழிபாடு
மங்கல இசை
பாற்குடம் எடுத்தல் (நிறைய பக்தர்கள் பாற்குடம் எடுத்தனர்)
மங்கல நாண் வழங்கல்
வளையல் அணிவிழா
இசை விருந்து (நாட்டுப் புறப் பாடல்கள்
- இதை நான் சரியாக கவனிக்கவில்லை )
அமுதசுரபி உணவு வழங்கல் (அவல் பிரசாதம்)
பொங்கல் வைத்தல்
(நிறைய பேர் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று
கூறியது என்னை வியக்க வைத்தது)
திருவிளக்கு வழிபாடு
பூமாரி விழா (பூப்பலி/மலர் அருச்சனை மாலை 5 - 6 மணி)

அதோடு நாள் முழுக்க அன்னதானம், நீர்மோர் வழங்கல் என்று அனைவருக்கும்
நடந்து கொண்டே இருந்தது.

நிகழ்ச்சி நிரலின் மலர் வழிபாடு, மங்கல நாண் வழங்கல், வளையல் அணியல்
போன்றவை சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு ஏற்றதாக சொல்லப்படுவனவாகவே அமைந்திருந்தது.

கண்ணகி வழிபாட்டை முறைப்படுத்திய செங்குட்டுவன்
கீழ்வருமாறு கூறுகிறான் சிலம்பில்.

"முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்...."
-சிலம்பு:நடுகல் காதை:230-234

கையோடு கொண்டு சென்ற சிலப்பதிகார நூல், ம.க.அறக்கட்டளையினரின்
நிகழ்ச்சி நிரலோடு ஒப்பிட்டுப் பார்க்க உதவியது. அங்கேயே அமர்ந்து
ஒப்பிட்டுப் பார்த்த போது எனக்கு மன நிறைவே!

நாள்தொறும் விழாச் செய்க என செங்குட்டுவன் சொன்னது மட்டும்
ஆண்டுக்கொடு முறை நடக்கிறதே என்ற வருத்தம் யாவருக்கும்
இருக்கத்தானே செய்யும்.

நேரம் ஆக ஆகக் கூட்டம் அலைமோதியது. கேரளர்களும் வந்து வழிபடும்
அந்த விழாவில் பெரும்பாலும் தமிழர்களே இருந்தனர். கடந்த வருடம் 25000 பேர் வந்தனராம். இந்த ஆண்டு
40000த்தைத் தாண்டும் என்று தமிழாதவன் கூறினார்.

கேரளப்பாதைவழியாயும், தமிழக நடைபாதை வழியாகவும் மக்கள்
அணிஅணியாய் கண்ணுக் கெட்டிய தொலைவில் வந்து கொண்டேயிருந்தனர்.

கோயில் வாசல்களில் நீண்ட வரிசை. நல்ல வேளை காலையில் விரைவில்
வந்து விட்டோ ம் என்று நினைத்துக் கொண்டேன். தமிழகக் காவற்துறையினர்
நிறைய பேர் கோவிலின் கிழக்குப் புறம் நிற்க, கோயிலின் மேற்குப் புறம்
கேரளக் காவற்துறையினர். பெண் காவலர்களும் அதிகம். காலை 8.30 மணி அளவில், மக்களைக் காட்டிலும் காவற்துறையினரே அதிகமாக இருந்தனர்.

பன்னீர் செல்வம் என்ற தமிழகக் காவற்துறை அதிகாரியைப் போய்ப் பார்த்து
படங்கள் எடுக்கலாமா என்று கேட்க அவர் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்
என்று சொல்ல, அவ்வளவுதான், நோக்கத்திற்கு கருவிகளைச் சுழற்றிக் கொண்டே இருந்தேன். கதிரவன் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி,
மேலும் இதழாளர்களும் வந்துவிட யாரோ ஒருவர் 'இவர் தினமலர் நிரூபர்;நான்
மதுரையில் பார்த்திருக்கேன்' என்று என் காதுபட என்னைப் பற்றிக் கிளப்பிவிட, நானும், அமுக்கினி என்பார்களே அதுபோல என் வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க நிறைய இளைஞர்கள் என்னைச் சுற்றி :-)

அமெரிக்கன் கல்லூரியில் தொல்பொருள் படித்த மாணவர் ஒருவர் நண்பரானார்.
இறுதி வரை என்னுடன் இருந்து மிகுந்த சிரமத்துடன் கல்வெட்டை அப்படியே
முடிந்தவரை/புரிந்தவரை வரிவரியாய் என் குறிப்பேட்டில் எழுதித்தந்தார்.

அறக்கட்டளை நண்பர் ஞானமும் நானும் அங்கு ஒரு குட்டி கூட்டமே போட்டு
கண்ணகி வரலாற்றை/சிலப்பதிகாரத்தை மக்களுக்கு சொன்னோம். நண்பர்
ஞானம் நல்ல வரலாற்று அறிவுடையவர். நீண்ட விளக்கங்கள் மற்றும் வழக்குச்
சேதிகளைக் கூறி கூட்டத்தைக் கவர்ந்து கொண்டிருந்தார்.

புகாரில் இருந்து ஒரு முதிய தமிழாசிரியர் வந்திருந்து அவரும் எங்களோடு
இணைந்து சிலம்பு பேசி இன்புற்றார். அவர் ஒரு நேரத்தில் தனியே பலரைக்
கூட்டி சிலம்புக் கதையை சொல்ல, நாங்கள் ஒரு புறம் சொல்ல
அறக்கட்டளைத் தலைவர் தமிழாதன் பலருடன் சிலம்பு பேச,
ஒரே வியப்பும் தமிழுமாய் பொழுது கடந்து கொண்டிருந்தது.

நண்பகல் வேளை கூட்டம் அலைமோதியது. அப்பொழுதுதான்
தமிழ் தேச முன்னனியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் வந்தார்.
எனக்கு ஏற்கனவே அறிமுகமான அவரோடு நிறைய கதைக்க முடிந்தது.
கண்ணகியும் இலக்கியப்பார்வையும் என்ற கையேடு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர்.

சிறந்த கையேடு என்ற சொல்லக்கூடிய நூல்.
அதுபற்றி தனியே எழுதலாம். சிறந்த பார்வை.

செயா தொலைக்காட்சியினர் தமிழாதவனை நேர்காணலுக்கு அழைக்க,
அவர் மணியரசனையும் அழைக்க, மணியரசன் என்னையும்
அழைத்துக் கொண்டு செல்ல, அப்படியே காலம் கழிந்து கொண்டு இருந்தது.

திடீரென்று ஒருவர் வந்து மணியரசனிடம் நூல் ஒன்றைக் கேட்டார்.
நீங்கள் யார் என்று கேட்டதற்கு கையில் இருந்த அட்டையைக் காட்டி
'மத்திய புலனாய்வுத் துறை' என்று சொன்னார்.

கும்பகோணத்தைச் சார்ந்த பாவேந்தரின் தமிழியக்க அமைப்பு சார்ந்தவர்களைச்
சந்தித்து பாவேந்தரையும், கண்ணகியையும் அளவளாவி மகிழ முடிந்தது.

சென்னையில் வீழ்த்தப்பட்ட சிலையால், மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்பட்டு, பலதரப்பட்டவர்கள் இந்த வருடம் கோயிலுக்கு
அதிகமாக வந்திருக்கிறார்கள் என்று தோழர் பெ.ம கருத்து தெரிவித்தபோது
தமிழாதவன் அதைச் சரியென்றார்.

அறக்கட்டளையினர் யாவரும் மஞ்சள் சட்டையும் பச்சை வேட்டியும்
அணிந்திருந்தனர். பலர் 40 நாள் நோன்பிருந்து நடந்து நேர்த்தி செய்ய
வந்திருந்தனர்.

தேனி, போடி, பெரிய குளம், ஆண்டிப்பட்டி, கம்பம், கூடலூர் போன்ற
பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் வருடா வருடம் வருகிறார்கள்.
இந்த வருடமும் காவற்துறையின் கடுபிடிகளைத் திட்டிக் கொண்டே வந்தவர்கள், போனவருடத்திற்கு இவ்வருடக் கெடுபிடிகள் மிகக்குறைவே என்று சொன்னார்கள்.

கோயிலை விட்டு வெளியே வந்து இயற்கையை மற்றும் தேக்கடி நீர்த்தேக்கத்தைப் படம் எடுக்கலாம் என்று வந்தால், கேரளக் காவலர்கள்
தடுத்து விட்டார்கள். படங்கள் கோயிலுக்குள் மட்டும்தான் எடுக்க வேண்டும்!
அதுவும் வெளிப்பகுதிகளை கோயிலுக்குள் இருந்து எடுக்கக் கூடாது என்று
அறிவுறுத்தினர்! சரி சரி என்று தலையாட்டி விட்டு நகர்ந்தேன்.

மாலை 6 மணி வரை இருத்தல் எனக்கு இயலவில்லை என்பதால் பிற்பகலில்
புறப்பட்ட என்னை நண்பர் ஞானம் சாப்பிடாமல் விடமாட்டேன் என்று
அன்னதானச் சோற்றை அள்ளி எனக்கு ஒரு தட்டில் போட்டார்.
விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்க இதற்கு முன்
அன்னதானச் சோறு வாங்கி உண்ட பழைய நினைவொன்று நினைவுக்கு வர,
அது 23 ஆண்டுகளாகி விட்டதே என்று ஒரு கணக்கும் போட்டேன்.
கோயில்களில் நிகழும் அன்னதான நிகழ்ச்சியொன்றில், என் சொந்த ஊரில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டதற்குப் பின்னர் கண்ணகி கோயிலில்தான் கைநனைத்தேன். நீர்மோரையும் எனக்கு வழங்கி விடைதந்தபோது
அவர்களுக்கும் என்பால் நல்ல அன்பு உண்டாகியிருப்பதை உணரமுடிந்தது.

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மெல்ல அசைபோட்டுக் கொண்டே
சீப்பியில் மலையில் இருந்து இறங்கினேன். நிறைய அலைச்சலால்
மிகவும் களைப்புற்று மெதுவே திண்டுக்கல்லிற்குப் பயணமானேன்; திருச்சி
செல்லும் வழியில் பெரியவர் திரு.ஞானவெட்டியானைச் சந்திப்பதற்கு!

அன்புடன்
நாக.இளங்கோவன்
05/மே/2002

கண்ணகி கோயில் - மடல் 3 - அமைப்பு

கண்ணகி கோயிலுக்கு செல்லும் பாதைகள்
மனதில் பதியவைத்த சேதிகள்,
மலரவைத்த சிந்தனைகள் அதிகம்தான்.

இளங்காலைப் பொழுதிலே சீப்பியில் இருந்திறங்கி
இடுப்பிலே கைகளைக் குத்திக் கொண்டு நின்று
வியந்து விரிந்த கண்களோடு
அகண்டு விரிந்து கிடக்கும் பசுமையான மலை உச்சியிலே
ஒருபுறம் சேரன் செங்குட்டுவன் மலைவளம் காண வந்த
சிலப்பதிகாரக் காட்சி மனதிலாட,
சாத்தனாரும் இளங்கோவடிகளும் என்னை ஆட்கொள்ள,
பாண்டியன் உயிர்துறந்ததும் தானும் உயிர்துறந்த
பாண்டிப் பெண்ணினும்,
உயிர்துறக்காது கடமை புரிந்து
சேரமண் வந்து வீழ்ந்த
சோழப்பெண்ணே சிறந்தவள் என்று சொன்ன
சேரப்பெண், சேரனின் பட்டத்தரசி வேண்மாளே என் நினைவில்
பெரிதும் நின்றாள்!

மலைக்குறவர்கள், பொங்கி வழிந்த சுனைகள்,
குன்றக்குரவை, குட்டுவன், வேண்மாள், இளங்கோவடிகளார்,
சாத்தனார், கனகவிசயன், ஈழக் கயவாகு, மாடலன்,தேவந்தி என்ற
அத்தனை பேரும் என மனதில் நிழலாட, அத்துனை பேரும் வந்தது
தமிழர்களின் உறவுக்காரி கண்ணகிக்காக என்று எண்ணியபோது
உணர்ச்சி மேலிட்டு என் கண்கள் பனித்தன.

"என்னேயிஃது என்னேயிஃது என்னேயிஃது என்னேகொல்,
பொன்னஞ் சிலம்பின் புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொன்தோட்டு நாவல்அம் பொன்னிழைசேர்
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்"

-சிலம்பு:வாழ்த்துக்காதை

செங்குட்டுவன் வியப்புற, கண்ணகி காட்சியளித்ததாக சிலம்பு கூறுமிந்த
வரிகள் என் நினைவுக்கு வந்து என்னை ஆட்கொண்டது.

கோயிலுக்கு சற்று தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன;
அங்கிருந்து ஒரு 100/200 மீட்டர் தொலைவு மெல்ல நடந்து கோயிலின்
தெற்கு வாயில் வழியே உள் நுழைந்தேன்.

கூடலூர்/குமுளி பகுதியிலிருந்து கிட்டத்தட்ட "ப" வடிவத்தில்
அமைந்திருக்கும் மலைத்தொடர்களில், மேற்குப்பகுதியில் குமுளி சார்
மலைத்தொடர்; கிழக்கே பளியன்குடியில் இருந்து வரும் மலைத்தொடர்,
அதற்கும் சற்று கிழக்கே "நெடுவேள் குன்றம்" என்ற மலைத்தொடர்.
யிவைகளை 'ப' வடிவிலிடைவெளி விட்டிணைக்கும் குறுக்கு மலைத்தொடரின் கீழ்பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி கோட்டம்.
(ஆங்கில "யு" வடிவம் என்று சொன்னாலும் பொருந்தும்.)

இந்தயிணைப்பு மலைதொடரின் தென்புறத்தில் கேரளாவைச் சேர்ந்த
தேக்கடி நீர்த்தேக்கம்; வடபுறம் தமிழகம். அதுவே எல்லை மலை;
அதாவது, கோயிலின் வடபுறத்தில் நுழைவது தமிழகப் பகுதியான
பளியன்குடியிலிருந்து வரும் பாதையில்; தென்புற நுழைவாயில்
கேரளப் பாதையிலிருந்து வந்து நுழைவது போன்று உள்ளது.
கோவிலில் சரிபாதி தமிழகப்பகுதியாயும் சரிபாதி கேரளப்பகுதியாயும்
உள்ளது என்பாரும், அல்ல அல்ல முழுவதும் தமிழக எல்லையே என்பாரும்,
அல்ல அல்ல அல்ல கேரளாவிற்கு முழுவதுமாய் தானம் செய்தாகி
விட்டது என்பாரும் அங்கே கூடிக் கிடந்தனர்.

தோராயமாக எண்ணாயிரம் சதுர அடிகள் கொண்ட பரப்பளவில்
கோட்டம் உள்ளது. வடக்கு-தெற்கு நீளமாகவும், மேற்கு-கிழக்கு
அகலமாகவும் அமைந்துள்ளது.

நுழைவாயிலிலேயே, இடிந்து சிதைந்து கிடக்கும் கோயில் மண்டபங்கள்,
மதிற்சுவர்கள் எல்லாம் பல நூற்றண்டுகளை விழுங்கிவிட்ட கதைகளைச் சொல்லின.

பராமரிப்பின்றி வளர்ந்து கிடக்கும் புல் புதர்கள்,
வருடத்தில் ஒரு நாளில் மனிதர் வர,
ஏனைய நாட்களில் காட்டு யானைகள் வந்து தங்கிப் போவதற்கான
அடையாளமாய் கோயிலின் உட்பகுதிகள்
எங்கும் நிறைந்து கிடந்த
யானைச்சாணங்கள்!

யானைத் தந்தம் களவாட வரும் கள்ளர்களுக்கும்
அவ்விடம் உறைவிடமாம்!

ஏற்கனவே சொன்னதுபோல் யிரண்டு வாயில்கள் கோயிலுக்கு!
தமிழகப் பகுதியிலிருந்து வரும் பாதையிணையும் வடக்கு வாயிலே
முதன்மை வாயில். அந்த வாயிலின் நான்கு மூலைகளில் ஓங்கி உயர்ந்த
கற்தூண்கள்! அந்த வாயிலின் முன்னால் 'தீர்த்தச் சுனை' என்ற ஒரு சின்னஞ்சிறு
குளம்; கற்களால் உள்ளமைப்பு செய்யப் பட்டுள்ள அந்தக் குளத்தில்
மழைத்தண்ணீர் தேங்கி இருந்தது.

மலையில் ஏறி வருபவர்கள் அந்த சுனையைத் தாண்டி, அதற்குமேல்
சுமார் 25 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்ணக.஢க் கோட்டத்தின்
வடக்கு வாயிலில் கால் வைக்க வேண்டும்.

கோட்டத்தின் வடக்கு வாயில் ஓங்கி உயர்ந்திருக்க, மேற்கு மதில் சுவர்
முழுமையாய் நின்று கிடக்க (வாயில் ஏதும் இல்லை மேல் புறத்தில்),
கீழ்ச்சுவரும் தென்சுவரும் அடியோடிடிந்து சிதறிக் கிடக்கின்றன.

கீழ்புறத்தில் வாயில் இருந்ததா என்பது அறியமுடியவில்லை;ஆனால்
தென்புறத்தில் படிக்கட்டு அமைப்புகளிருந்தது, வாயிலிருந்திருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது.

இந்தப் பரப்புக்குள் 6 மண்டபங்கள்.

வடக்கு வாயிலில் நுழைந்தவுடன், கிழக்குப் பார்த்து நிற்கும் மண்டபம் யிருப்பவைகளில் ஆகப் பெரியது.

வாயிலில் இருந்து பார்த்தால் அம்மண்டபத்தின் சுவர்தான் தெரியும். அதன் மூல மண்டபத்தில் சிலை ஏதுமில்லை.ஆனால் அங்கே பெயர்ந்த கற்களும் மணலும் உள்ளன.

அங்கே வந்திருந்தோர் பலர் பல விதமாகச் சொன்னார்கள். அதைப் பின்வரும்
மடல்களில் விவரிக்கின்றேன். ஆனால், பெரும்பாலோனோர் சொன்னது
பெருங்கல்லொன்று பெயர்ந்து கிடந்தவிடத்தில் சுரங்கப்பாதை உண்டென்று!.
அச்சுரங்கம் எங்கு செல்கிறது என்று சொன்னவற்றில், கூடலூரில் உள்ள
அழகர் கோயிலுக்கு செல்கிறது என்று சொன்னது நம்பும் படியாக இருந்தது.

தெற்கு வாயிலில் நுழைந்தவுடன், அதே போன்று ஆனால் அமைப்பில், வடிவில்
சிறிய, கிழக்கு பார்த்த மண்டபம். அந்த மண்டபத்தின் உள்ளே சிவலிங்கம் நந்தி
வகையறாக்கள் சிறிய சிறிய அளவிலிருந்தனர்.

அந்த மண்டபத்தின் கிழக்கே, வடக்குப் பார்த்தார் போல் சிறு மண்டபம்.
அது மங்கலீசுவரி என்ற தெய்வம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால்
அது இளங்கோவடிகளாரின் சீவசமாதி என்று பலர் அடித்து சொன்னார்கள்!

தெற்கேயும் வடக்கேயும், கிழக்கு பார்த்து நிற்கும் மண்டபங்களின்
இடையே, தெற்கு பார்த்து இருக்கும் மண்டபம்தான் கண்ணகி கோயில்!
"மங்கலதேதி கண்ணகி கோயில்" என்று அட்டையில் எழுதப்பட்ட மண்டபம்தான்
கண்ணகி கோயில்! அந்த மண்டபத்தின் வெளியே எதிர்த்தாற்போல்
ஒரு அரங்கம் போன்ற சதுர அமைப்பு.

கண்ணகி கோயில் மண்டபத்தின் மேற்புறத்தில் ஒரு மண்டபம் இருந்து இடிபட்டு தரைமட்டமாகக் கிடந்தன.

அதேபோல இளங்கோவடிகளின் சீவசமாதி என்றுசொல்லப்படும் மண்டபத்தின்
எதிர்புறமும் ஒரு தரைமட்டமாகிக் கிடக்கும் மண்டபம்.

கண்ணகி கோயில் மண்டபத்தின் மேற்புறம், மதிற்சுவரில்
ஒரு கல்வெட்டு! அந்தக் கல்வெட்டு 300/400 ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

வடக்குப்பகுதியிலிருக்கும் கிழக்கு பார்த்த மண்டபத்திலும் ஒரு கல்வெட்டு
சிதைந்து போய் படிக்க முடியாமலிருக்கிறது.

ஆக, யிடிபாடுகளுகளுக்கிடையே, யின்னும் முழுதும் யிடியாமல்
நிற்கும் 4 மண்டபங்கள், முழுதுமிடிந்தவிரண்டு மண்டபங்கள்,
சிதைந்து கிடக்கும் ஒரு அரங்கம், ஓங்கி நிற்கும் வடக்கு வாயில்,
அதன் முன்னாலிருக்கும் தீர்த்தச் சுனை, யிடிந்துமிடியாமலும்
கிடக்கும் மதிற்சுவர்கள், இரண்டு கல்வெட்டுகள்
(ஒன்று நிச்சயம் பிற்காலத்தையது) என்றயிவைதான் கண்ணகி கோட்டம்!

தொடரும் மடலில் வழிபாடு, கண்ணகி கோயிலிதுதான் என்பதற்கான
நானறிந்த வரையிலான சிலம்புச் சான்றுகள் போன்றவற்றை எழுதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
05/மே/02

கண்ணகி கோயில் - மடல் 2 - பாதை

கம்பத்திற்கு கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றில் கண்ணகிக் கோட்டம்
அமைந்துள்ளது.

இதற்கு இரண்டு பாதைகள் உள்ளன.
ஒன்று வாகனங்கள் செல்லக்கூடிய ஓரளவே கடினமான
கேரள மலைப்பாதை.

மற்றொன்று ஒற்றையடி தமிழக மலைப்பாதை.

கேரளப்பாதையில் பாதையின் கடுமையைவிட
கேரள அரசின்/காவற்துறையின் கெடுபிடிகள் மிக அதிகம்.

வருடத்தில் சித்திரை முழு நிலவின் மறுநாள்,
*மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நாள்*;
அந்த நாளில் மட்டுமே கண்ணகி கோயில் செல்ல
அனுமதி அளிக்கப்படுகிறது. 2/3 ஆண்டுகட்கு முன்னர் வரை
சித்திரை முழுநிலவு விழாவிற்காக மூன்று நாட்கள் திறப்பார்களாம்.
தற்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது.

கம்பத்திலிருந்து பேருந்தில் 17 கி.மீ தொலைவுள்ள
குமுளிக்கு செல்ல வேண்டும். குமுளி என்ற ஊர் கேரள
எல்லைக்குட்பட்டது. அங்கு சோதனைச்சாவடி உள்ளது.
சோதனைச்சாவடிக்கு அந்தப்பகுதி கேரளாவைச் சேர்ந்திருக்க (குமுளி),
தமிழக எல்லையாக கூடலூர் என்ற ஊர். இரண்டுக்கும் நடுவே ஒரு சவுக்குக் குச்சி :-)

அந்தக் குச்சிக்கு (தடுப்பு மரம்) 10/15 அடிகள் யிந்தப்புறம்,
அதாவது தமிழக எல்லைக்குள், புரட்சி நடிகர் மா.கோ.இரா அவர்களின்
திருவுருவச் சிலையை நிறுவியிருக்கின்றனர் தமிழர்கள். கேரளாவை விட்டு
தமிழகம் வந்ததற்கு நன்றி சொல்லி வால் ஆட்டியிருந்தது போல் எனக்குத் தெரிந்தது.

ஒரு காமராசருக்கோ அண்ணாவுக்கோ அங்கே நினைவு கூரப்படவில்லை.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்றாலிதுதானோ என்று நினைத்துக்
கொண்டேன்.

கம்பத்திலிருந்து கூடலூர் வழியே குமுளிக்குப் போகும்
அந்தப் பாதை மிக எழில் வாய்ந்தது. காலை 6.30 பேருந்தேறி
முக்கால் மணிநேர அந்தப் பயணம் மிகயினிமையான குளு குளுவென்ற
பயணம். நினைக்கவே நெஞ்சம் குளிர்கிறது.

மருத நிலங்கள் சூழ்ந்த கம்பத்திலிருந்து தொடங்கிய பயணம்
மெதுவே தேக்கு நிறைந்த முல்லை நிலங்களைக் கடந்து
சீராக, குறிஞ்சியும் முல்லையும் கலந்த, மலை நடுவுள்ள குமுளி நகரை
அடைகிறது.

அடிப்பகுதியில் கிடந்த மருத நிலங்களில் நெல், வாழை
போன்ற வயல்களில் கிடந்த பயிர்களின் கரும்பச்சை நிறம்
அந்நிலங்களின் வளமை கூறின. (மலையடிவார நிலங்கள்
வளமிகுந்தனவோ?! அப்படித்தான் இருக்கவேண்டும்; கொல்லிமலை
அடிவாரத்துக்கும் சென்றிருந்தேன். அங்கிருந்த நெற்பயிர்களின்
அடிக்கட்டுகள் என்னை அயரவைத்தன. அத்தனை திரட்சி மற்றும் பசுமை காவேரி ஆற்று வளம் கொண்ட எங்கள் ஊர் நெற்பயிர்கள் கூட அவற்றின் பக்கம் நிற்க ஏலாது)

வயல் வளங்களைப் பார்த்துக் கொண்டே மெதுவே மலையேறினால்,
பெரியாறு நீர்மின் நிலையம் கண்ணில் பட்டது. ஈராயிரம் அடிக்குக்
குறையாத உயரத்திலிருந்து நீரைக் குழாய்களின் வழியாக
மின் நிலையத்திற்கு வேகமாகக் கொண்டுவரும் அமைப்பைப்
பார்த்து வியந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த மரங்களின் பெயர்கள்
எனக்குத் தெரியவில்லை.

அப்பொழுது எனக்கு முனைவர் இராம.கி அவர்களின் நினைவு
வந்தது. "நம் மண்ணில் விளையும் மரங்களின் பேர்களைக் கூட
நாம் ஒழுங்காகக் கற்கவில்லை; அல்லது கற்றுக் கொடுக்கப் படவில்லை"
என்று அடிக்கடி அவர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நமது பாடங்கள்
அயல்நாட்டு மரங்களின் பெயர்களை போதிப்பதாக இருக்கிறது என்று
அதன் மேல் பழியைப் போட்டு விட்டு பயணம் தொடருகையில்,
ஆங்காங்கு பெருமரக் கிளைகளில் தொங்கிக் கிடந்த தேன்கூடுகளும்,
அந்தத் தேன்கூடுகள் மனிதர்கள் தீண்டமுடியாத அமைப்பில் இருப்பதையும்
பார்த்து, அத்தேனீக்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி விட்டு
திரும்பியபோது பக்கத்தில் அமர்ந்திருந்தவர் பீடியை பற்றைவைத்து
என் முகத்தில் வெளிவிட, கிடைத்த காலை மகிழ்ச்சி சற்று
பாதிப்புக்குள்ளானது. கீழே இறங்கி ஊதுங்களேன் என்று
நான் முறைக்க, கொஞ்சநேரந்தேன் என்று சொல்லிக் கொண்டே..ஈஈஈ என்று அவர் இளித்துவிட்டு மீண்டும் பிடிக்க, "சரி தொலை" என்று சொல்லிவிட்டு நானும் என் மூக்கைத் தூக்கி சன்னலுக்கு வெளியே வைத்து விட்டு அமைதியடைந்த சில நிமிடங்களில் குமுளி வந்து சேர்ந்தது.

விழா நாள் என்பதால் வழக்கத்திற்கு அதிகமான காக்கி சட்டைகள்.
தமிழகப் பகுதியில் தமிழகக் காவற்துறையினர்; அந்தப்பக்கம்
ஒவ்வொருவரையும் கூரிய கண்களால் பார்க்கும் கேரளர்.

எல்லைக் கோட்டைத் தாண்டிய 20/30 அடி தொலைவிலேயே
கண்ணகி கோயிலுக்கு கேரள மலைப்பாதை வழியே செல்ல உரிமம்
பெற்ற சீப்பிகள்(Jeep).

விழாவிற்காக சிறப்பு ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் நடத்தும்
வாகன வசதியாதலால், ஒவ்வொரு சீப்பியிலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் அடைத்துக் கொள்ளலாம். ஆளுக்கு 30 உரூவாய் ஒருவழிக்கு.

அந்த சீப்பியில் ஓட்டுனர்க்குப் பக்கத்தில் என்னையும் சேர்த்து நால்வர்.
பின்னால் 9 அல்லது 10 பேர்.

14 கி.மீ வனமலைப்பயணம் தொடங்கியவுடன் சிறிது தொலைவிலேயே,
பெரியாறு புலிகள் பாதுகாப்பகம் வந்தது. காவற்துறையினர் (கேரளர்)
வனக்காரணங்களுக்காகவும், பொதுப் பாதுகாப்பிற்காகவும், அரசியல்
காரணங்களுக்காகவும் நிறைய இடங்களின் சோதனை செய்தனர்.

ஒரு சாவடியில் "நிங்கள்....மலையாளம்?" என்று எங்களைப் பார்த்துக்
கேள்வி கேட்கப் பட்டபோது, ஏன்யா நம்ம ஊர்ல மட்டும் "நான்/நாம் இந்தியன்"
என்று எல்லா இடத்திலும் சொல்லி அழவேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டே "இல்லை...தமிழ்" என்று மறுமொழி சொன்னோம் அவரிடம்.

பின்னர்தான் தெரிந்தது அவர்கள் கணக்கெடுக்கிறார்கள் என்று.
கண்ணகி கோயிலுக்கு (மங்கலதேவி கோயிலுக்கு) கேரளாவில் இருந்தும்
நிறைய பேர் வருவதால் கேரளர், தமிழர் எண்ணிக்கை விவரங்களுக்காக கேட்டிருக்கக் கூடும் என்று அறிந்தேன்.

வனப்பகுதியைக் கடந்து சீப்பி குதித்துக் கொண்டும்
ஆடிக்கொண்டும் ஆட்டிக் கொண்டும், குண்டும் குழியும் நிறைந்த
ஒரு வண்டி மட்டுமே போகக் கூடிய அந்தப் பாதையில் எதிர்
புறமும் வண்டிகள் இறங்கி வர, கடப்புகள் அய்யுற வைத்தன.

மூன்று/நான்கடி பள்ளங்கள் மேடுகள் பாதைகளில் ஏராளம்.
சற்றே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க,
அப்பாதையில் ஓட்டுவதில் வல்ல கேரள ஓட்டுனர்கள் சாகசம்தான்
செய்கிறார்கள். அவர்களின் ஓட்டுந்திறன் வேகம் பற்றி அப்பகுதிகளில்
தமிழர்களுக்குப் பொறாமை அதிகம்.

சற்றே சறுக்கினாலும் ஆயிரக்கணக்கான அடிகள் செங்குத்தான
மலைப்பகுதிகள் இருக்கும் இடங்களும் நிறைய.

சாலைகள் இந்தியாவின் கேடுகளில் தலையானது. ஊர்ப்புறங்களில்
இருக்கும் சாலைகள் மோசமாயிருக்க மலைப்புறங்களில் இருக்கும் பாதைகளைக் குறைசொல்லி என்ன பயன் என்று எண்ணிக் கொண்டே மேலே மேலே செல்ல கண்ணகி கோயிலும் அங்கு சென்று குழுமிக் கொண்டிருக்கும் மக்களும் கண்ணில் தெரிய ஆரம்பிக்க, பயண பயத்திலிருந்து முகம் மீண்டும் தெளிவடைய சற்று நேரத்தில் அந்த மலையுச்சியில் இறக்கிவிட்டார்கள்.
இறங்கி சற்றே வலப்பக்கம் திரும்பிப் பார்த்தால் *தேக்கடி நீர்த்தேக்கம்* கண்ணில் படுகிறது!.

மற்றொரு பாதையான நடைபாதை, கம்பத்தில் இருந்து பளியன்குடி என்ற
ஊருக்கு கிழக்கு நோக்கி செல்கிறது. பளியன்குடியில் இருந்து
நடைவழியாக மலைகளை ஏறி இறங்கி கண்ணகி கோயிலுக்கு செல்லவேண்டும்.

இப்பாதை தமிழக எல்லைக்குள் இருந்தாலும் மிகக் கடினமான பாதை என்று
சொல்லப்படுகின்றது. இப்பாதை வழியே செல்வோர் மிகக் குறைவு.

ஆக,

1) கம்பம் --> குமுளி --> சிறீ பூரணகிரி [கேரள வாகனப் பாதை]
(சிறீ பூரணகிரி இதுதான் கண்ணகி கோயில் இருக்கும் இடத்தின் ஊர்ப் பெயர்;
இராசராசன் வைத்தானாம்)

2) கம்பம்--> பளியன்குடி --> சிறீ பூரணகிரி [தமிழக நடைபாதை]


குறிப்பு: குமுளி --> கண்ணகி கோயில் 14 கி.மீ தொலைவுள்ள மலைப்பயணம்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
05-மே-2002

Sunday, April 28, 2002

கண்ணகி கோயில் - மடல் 1

கடந்த 2000 ஆவது ஆண்டில் சிலம்பு மடல்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது, மதுரை முடித்து வஞ்சி எழுதப்போம்போது, கண்ணகி கோயிலுக்கு சென்று வந்து பின்னரே எழுத வேண்டும் என்று சில காலம் எழுதாது இருந்தேன். அப்பொழுது முயற்சிகள் மேற்கொண்டு மதுரை வரை இல்லத்தோடு சென்று விட்டு அதற்கு மேல் வெயிலில் குழதைகளோடு போக இயலாத சூழலால் திரும்பி விட்டேன். அவ்விடம் போகும் வாய்ப்பு எனக்கு ஈராண்டுகள் கழித்து இந்த விடுப்பில்தான் கிடைத்தது. வீட்டில் அனைவரும் வருகிறேன் என்று சொல்ல, கோளாறாக எல்லோரையும் "அடுத்த முறை அனைவருமாகப் போகலாம்; நான் போய் சரியாக அறிந்து வருகிறேன்" என்று கழட்டிவிட்டுவிட்டு :-) சித்திரை முழுநாளான 26-ஏப்ரல்-02 அன்று அதிகாலை, திருச்சியில் இருந்து கம்பத்திற்கு புறப்பட்டேன். கண்ணகி கோயில் இருக்கும் இடத்தில் பல மாற்றுக் கருத்துகள் இருப்பதாக உணர்ந்ததால் தனியே சென்றால்தான் அலைய முடியும் என்ற காரணமும் உண்டு.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியே பயணிக்கும் போது நண்பர், பெரியவர்
திரு.ஞானவெட்டியான் அவர்களின் நினைவு வந்தது. இருப்பினும் தொடர்புக் குறிப்புகள் ஏதும் இல்லாததால், அங்கே இறங்கி இரண்டு வெள்ளரிக்காய்களை மட்டும் வாங்கிக் கொண்டு பயணம் தொடர, வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி வழியாக பேருந்தில் கம்பம் சென்று சேர்ந்தேன். ஏறத்தாழ ஐய்ந்தரை மணி நேரப் பேருந்துப் பயணம்.

வத்தலகுண்டு வரை ஏற்கனவே சென்றுள்ளேன்; கோடை போகும்பொருட்டு. வழியில் கண்ட நஞ்சை புஞ்சை மற்றும் இயற்கை வளங்கள் என்னை மிகவும் ஆட்கொண்டது.

இத்தனை இயற்கை வளங்களைக் கொண்ட நம்மால் நம்மை, ஒழுக்கத்திலும் உணர்விலும் பொருளாதாரத்திலும் சீரமைத்துக் கொள்ளவியலவில்லையே என்ற உணர்வு ஏற்படாமல் இல்லை.

கம்பத்திற்கு மதியம் 1.30 வாக்கில் சென்று இறங்கியதும், "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர்" அழைப்பித்திருந்த சித்திரைத் திருவிழா சுவரொட்டிகள் பேருந்து நிலையம் முழுவதும்

ஒட்டிக் கிடக்க, அந்த அறக்கட்டளையின் அலுவலகமும் 10 நொடி தூரத்தில் இருக்க எனக்குத் தேவையான தொடர்புகள் அனைத்தும் உடன் கிடைத்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. உடனே அங்கு சென்று கண்ணகிக் கோயிலுக்கு எப்படிச் செல்வது என்று வினவ, அங்கு அறக்கட்டளையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் 'வாங்க வாங்க' என்று வாஞ்சையுடன் என்னை வரவேற்றது என்னால் என்றும் மறக்க இயலாது. முன் பின் அறியாதிருந்தாலும் ஒத்த கருத்துகளும் உணர்வுகளும் அரை நொடியில் உறவை ஈட்டிக் கொடுத்து விடுகின்றன.

நான் போன தோற்றத்தைப் பார்த்ததும் அவர்கள் ஏதோ நான் இதழாளன் என்று
நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. என்னைக் கேட்க, நானும் டமால் என்று "ஆமாம், தமிழ்-உலகச் சேதியாளன்" என்று சொல்ல மேலும் வரவேற்பு பலம் :-)

ஆமாம் தமிழ் உலகம் யார் வெளியிடுகிறார்கள் என்று சொல்ல, நான் இணையம் பற்றி விளக்கி, அதில் உலகம், மின்னிதழ்கள் சிங்கை இணையம் மற்றும் பல பற்றிக் கூற, அவர்கள் பார்த்த பார்வை "ஏதும் புரியாததாகவோ, அல்லது தமிழக தனியார் நிதி நிறுவனக்காரர்களைப் பார்க்கும் சந்தேகப் பார்வையாகவோ இருந்தது" :)

இணையத்தில் தமிழ் வளர்ச்சி, மின்னஞ்சல்கள் இவற்றிற்கு மிகவும் தொலை தூரத்தில் இருக்கும் பகுதியாக கம்பம் எனக்குப் பட்டது.

ஆயினும் சிறிது நேரத்தில் "ஏதோ இவனும் கோயிலுக்கு வந்திருக்கிறான்; வழி சொல்வோம்" என்றவாறு இல்லாமல் ஒரு அருமையான நட்பு மலர்ந்தது, அந்த அறக்கட்டளையின் தலைவர் தமிழாதவன் என்பவரோடும், அதன் உறுப்பினர்களோடும். அதோடு அப்பகுதியின் தி.மு.க முன்னால் ஒன்றியத் தலைவரும் கண்ணகி விழாவிற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்க, ஒரு ஏழெட்டுப் பேர் என்னோடு உரையாடினார்கள், தங்கள் வேலைகளெல்லாம் மறந்து விட்டு. இலக்கியம், சிலம்புச் சான்றுகள் குறித்து எனக்குத் தெரிந்த சிலவற்றை நான் பகிர்ந்து கொண்டது அவர்களை மேலும் உற்சாகப் படுத்த ஒரு இரண்டு மணி நேரம் அவர்கள் வேலையைக் கெடுத்து விட்டேன். என் சிலம்பு மடல் நூலொன்றை கையோடு எடுத்துச் சென்றிருந்தேன்;

அதைத் தமிழாதவனுடன் கொடுக்க, அன்று மாலைக்குள் இரண்டு மூன்று
பேர்கள் ஓரளவு படித்து விட்டுப் பாராட்டினார்கள். அனைவரும் அந்நூலை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ள உறுதி கூறி வந்தேன்.

அவர்களோடு நான் மிகவும் விரும்பும் கம்பங்கூழை குடித்தது மிகச் சுவையான ஒன்று.

எல்லாப் பேச்சுக்களும் இனிமையாக இருக்க, கண்ணகி கோயிலுக்கு இன்று
போக முடியாது, விழா நாளான நாளைதான் போக முடியும் என்று அவர்கள் சொன்ன காரணம் தமிழ் என்ற வகையில் சினத்தையும், ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டதே; திருச்சியில் மறுநாள் சில தமிழாளர்களை பார்ப்பதாக இருந்த திட்டம் வீணாகி விட்டதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

அப்புறம் என்ன செய்வது; நேரே உலவகம் ஒன்றுக்கு அறக்கட்டளை நண்பர் வழக்குரைஞர் சரவணக் குமார் இட்டுச் சென்று அறிமுகப் படுத்த, பா.தா விழா மடல்களைப் பார்க்கவும், என் அஞ்சல் ஒன்றை உலகத்திற்கு அனுப்பவும் 2,3 மணி நேரப் போராட்டம் :-(

தங்கல் ஒன்று ஏற்பாடு செய்து விட்டு அன்றைய மாலைப் பொழுதை, தமிழாதவனோடு ஒரு நேர்காணலுக்கும், பல தரப்பட்ட மக்களோடு உரையாடவும் வைத்துக் கொண்டேன்.

40 நாள் நோன்பிருந்து கண்ணகி கோயிலுக்கு நடந்து செல்லும் வழக்குரைஞர்
சரவணக்குமாரின் வழிபாட்டுணர்வு முதல் கண்ணகிக் கோயில் சம்பந்தமான உள்ளூர், உள்ளமைப்பு அரசியல் வரை ஓரளவு அறிய முடிந்த அருமையான இரண்டு நாட்கள் என்று சொன்னால் மிகையன்று.

எழுத நிறைய சேதிகள் இருப்பினும், உலவக வேலை நேரம் முடிகிறதாலும்,
சிறு தொடராக கண்ணகி கோயில் அனுபவங்களை எழுதி விடுகிறேன். நண்பர்கள் பொறுத்தருளவும். நிறைய புகைப்படங்கள் மற்றும் தொடர்படங்கள் எடுத்து வந்துள்ளேன்.

விரைவில் அவற்றை தமிழ் உலகிற்கு அறியத் தருகிறேன். நண்பர் ஞா.வெ அவர்களை வரும் வழியில் திண்டுக்கல்லில் சந்தித்தது மிக அருமையான வாய்ப்பு. அது பற்றியும் வரும் மடல்களில் எழுதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்