Pages

Showing posts with label திறனாய்வு. Show all posts
Showing posts with label திறனாய்வு. Show all posts

Friday, February 23, 2018

"அய்" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.

கமலகாசன் கட்சி தொடங்கியவுடன் கய்-மய்-தமிழில் கட்சிப்பெயர் வைத்து தமிழைத்தான் எடுத்தவுடன் படுகொலைசெய்துள்ளார். முகநூலில் எழுதும் முக்கால்வாசி அப்பாவித்தமிழ்மக்கள் அனைவரும் அந்தக்கேட்டை கண்டித்துவிட்டனர். ஆனாலும், தமிழக அரசு, தமிழக தமிழ்ச்சங்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள், வெளிநாட்டு தமிழ்ச்சங்கங்கள், தமிழ்வளர்ச்சித்துறை, அரசியற்கட்சிகள் என்ற யாரும் இந்த தமிழ்க்கேட்டை கண்டுகொள்ளவில்லை. இவர்களுக்கும் தமிழுக்கும் எப்பொழுதும் தொடர்பிருந்ததில்லை என்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.


1) மய்யம் என்பது ஏன் பிழையாகிறது.?

அ) கொஞ்சம் அறியை என்ற சொல்லை காண்போம்.

"நீயே அறியை சாலவெம் பெரும" என்று 11-ஆம் திருமுறையில் நான்மணிமாலை சொல்லும் .

"நீ அறியையோ?" என்று ஏரக நவரத்தினமாலை சொல்லும். அழகான சொல்லாட்சி.

கய்-மய் தமிழில் எழுதினால் "நீ அறியய்யோ?" என்று வரும். மை = மய் என்றால், யை = யய் அல்லவா!

மணி + அழகு = மணியழகு. இகரமும் அகரமும் என இரண்டு உயிர் சேர்ந்து வருவதால், யகர உடம்படுமெய் பெற்று மணியழகு என்றாகிறது என்பர் புலவர்.

அதேபோல, அறி + அய்யோ = அறியய்யோ (யகர உடம்படுமெய்) என ஆகி
அடியோடு பொருள் மாறிவிடுவதை காண்க.

ஆ) அதேபோல, சாரியை என்ற சொல்லை அனைவரும் அறிவோம்.

சந்தியா சாரியையா? என்று பகுபத இலக்கணத்தில் கேள்விகள் எழும்.
அது "சந்தியா சாரியய்யா?" என்று ஆகி சொல், பொருள் என்ற இரண்டுமே சிதைந்து போவதை காண்க.

இ) கழுதையை அறியாதவர் உண்டோ?

இது கழுதையோ! என்று இனிமேல் வியக்க முடியாது. ஏன் தெரியுமா?
கய்-மய் தமிழின் கொடுமையால், கழுதையோ என்ற சொல், கழுதய்யோ என்று மாறி, கழுது + அய்யோ என்று பிரியும். சரி தெரிந்த கழுதைதானே என்று நினைக்காதீர்கள். கழுது என்றால் பேய் என்ற பொருளுண்டு. (கழுகொடு கழுதாட என்று அருணகிரிநாதர் முத்தைத்தரு.... .பாடலில் சொல்வார்).

கய்-மய் தமிழ் கழுதையை கழுதாக, பேயாக மாற்றிவிடுவது பொருட்சிதைவல்லவா?

ஈ) பத்தன், பத்தை (பக்தர், பக்தை) - "பத்தையா வந்தாள்?" என்று கேள்வி கேட்டுவிட முடியாது. பத்தையா = பத்தய்யா! பத்தய்யா வந்தாள்? பத்து அய்யாக்கள் வந்தாள் என்று ஆகி, பொருள், திணை என்ற எல்லாமே வழுவுகின்றன.

உ) அதேபோல. "கோழி வாங்கலையா! மீனையா வாங்கினாய்?" என்று எழுதிவிட முடியாது. மீனையா = மீனய்யா! "மீனய்யா வாங்கினாய்" என்று ஆகி எந்த மொழி என்றே தெரியாமல் போகும்.

ஊ) "இது உன் தங்கையா?" என்று கேட்க முடியாது. ஏனென்றால் கய்-மய்-தமிழ்,

"இது உன் தங்கய்யா?" என்று மாற்றிவிடும். தங்கச்சியை, தங்க அய்யாவாக மாற்றிவிடும் எண்னற்ற கொடுமைகள்தான் கய்-மய்-தமிழ். சொல், பொருள், தினை, தொடர், பகுபத உறுப்பிலக்கணம், மாத்திரை, யாப்பு என்ற அனைத்தையும் வகைதொகை இல்லாமல் சிதைக்கிற வழக்கை கண்டுகொள்ளாமல் கேலியும் கிண்டலுமாய் பொழுதுகள் கழிகின்றன.

2) மய்யம் என்ற சொல்லை தவறு என்று சொல்ல ஏன் நா தடுக்கவேண்டும்? அந்த தடுமாற்றத்தை மறைக்க மையம் என்ற சொல்லே தமிழ் இல்லை - அது வடமொழி என்று உதறித்தள்ளும் பொறுப்பற்ற தன்மையை என்ன சொல்ல?!

தன்மை, தண்மை, வன்மை, மென்மை என்று எத்தனை சொற்களில் மை விகுதியாக வருகிறது. மை என்பதே தனிச்சொல்தானே? மை + அம் என்று அம் விகுதி பெற்றுவிட்டால் உடனே அது வடமொழியாகிவிடுமா?
இருக்கும் தமிழ்ச்சொல்லை எல்லாம் வடமொழி வடமொழி என்று தள்ளிவிடுவது தமிழர்களா? அல்லது வடவரா? அச்சு + அம் = அச்சம் என்பது வடமொழியா? ஐயம் என்பது வடமொழியா? தமிழம் என்பது வடமொழியா?

சிந்திக்க வேண்டாமா? நமது பொறுப்பற்ற போக்குக்கு ஒரு வரம்பு வேண்டாமா?

3) மய்யம் என்று ஏதோ எழுதிவிட்டார். இதனால் என்ன இப்ப கெட்டுப்போயிடுச்சி! இதுக்கு போய் எல்லாரும் ஏன் தவிக்கிறீங்க? - இப்படிச்சிலர்.

அ) மய்யம் என்ற சொல்லை இன்று உலகில் உள்ள 8 கோடித்தமிழரும் படித்துவிட்டனர். இனி அந்தக்கட்சியை அப்படித்தான் எழுதுவர்.

ஆ) இருபது முப்பது ஏடுகளும் அப்படித்தான் நாடோறும் எழுதும். அவர்களை பொறுத்தவரை கமலகாசனால் நாலுபேர் அதிகமாக வாங்கிப்படித்தால் வரும்படி கூடும். அவ்வளவுதான்.

இ) இருபத்தைந்து தொலைக்காட்சிகளும் அப்படி எழுதியே படங்காட்டி விட்டனர். அவர்களுக்கும் நல்ல தமிழுக்கும் தொடர்பே இருந்ததில்லை.

ஈ) சட்டப்படி கட்சிப்பெயர் பதிவாகிவிட்டது. தவறான தமிழ் சட்டமாகி அதற்கு மக்களை வாக்குப்போடவைப்பதும் பேசவைப்பதும் வல்லாண்மையன்றி வேறென்ன? ஒரு தவறான செயல், தவறான தமிழை உருவாக்கி, ஒரு 8 கோடிப்பேர் கொண்ட குடியை பயன்படுத்த வைக்கிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

கமலகாசன் தமிழறிஞர் இல்லை. அவர் செய்த தவற்றினை சுட்டிக்காட்ட வேண்டியது தமிழ் அறிவுலகிலன் கடமையல்லவா?

4) ஐ-க்கு அய்-போலியா?

இதுபற்றிய நல்ல உரையாடலை http://www.wetamizh.com/archives/1752 என்ற பதிவில் எழிலன் எழுதியுள்ளார். அதைக்காண்க.

மேலும்:

"அகர இகர ஐகாரம் ஆகும்" -- தொல்காப்பியம், மொழிமரபு-21

ஐ-என்ற கூட்டெழுத்தின் (dypthong) தோற்றத்தை கூறுகிறார் தொல்காப்பியர். ஐகாரம் இப்படி உருவாவதொடு, தமிழுக்கு தனிச்சொல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை தருவதை அறிவோம். (எனது முந்தைய மடலை காண்க). இங்கே ஐ-யை குறிலா நெடிலா என்ற ஒலி-வகைப்படுத்தாமை காணத்தக்கது. அஇ எனும் ஓசை முழு நெடிலாக எப்படி இருக்க முடியும்? ஒருவேளை ஐ குறுகியும் ஒலிக்கும் என்று சொல்ல வந்தாரா தொல்காப்பியர் என்பது தெரியவில்லை.

மய்யம் என்று எழுதிவிட்டு, மை-க்கு போலி மய் என்று சொன்னால் எப்படி?

தொல்காப்பியர் வழி பார்த்தால், மை = மஇ என்றோ, மை=மஇய் என்றுதானே இருக்கிறது. அப்படியென்றால், மையம் என்பதை மஇயம் என்றோ, மஇய்யம் என்றோதானே எழுதவேண்டும்?

மேலும்:

தமிழில் போலி இலக்கணம் என்ன சொல்கிறது?

5 வகையான போலிகளை சுட்டிக்காட்டுகிறது.

அ) முதற்போலி -- பசல் = பைசல் -- அகரம்(ப) ஐகாரமாக(பை) மாறுகிறது.
ஆ) இடைப்போலி -- அரயன் = அரையன் -- அகரம்(ர) ஐகாரமாக(ரை) மாறுகிறது.
இவற்றை நன்கு கவனிக்க. அகரம் என்பது ஐகாரமாக இருக்கலாம் என்று சொல்வதால், ஐகாரமும் அகரமாக மாறலாம் என்று சொல்லவில்லை. அகரத்திற்குதான் ஐகாரம் போலியாகிறது. காட்டாக, காலை மாலை என்பன, கால, மால என்று வந்துவிடுவதில்லை. கால என்பதும் மால என்பதும் பொருளிலேயே மாறுபடுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு போலிகளை போட்டால் பெரிய சிதைவுகள் ஏற்படுகின்றன.

அப்படியும் வலிந்து ஐகாரம் அகரமாகும் என்று சொல்வார்களெனில், போலி இலக்கணப்படி, அரையன், அரயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, அரய்யன் என்று ஆக இலக்கணம் இல்லை. மலையன், மலயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, மலய்யன் ஆக இலக்கணம் இல்லை.

இந்த இரண்டு போலிகளொடு, கடைப்போலி(பந்தல் = பந்தர்), முற்றுப்போலி (ஐந்து = அஞ்சு), முன்பின்னதாகத் தொக்க போலி (சதை = தசை) ஆகிய மூன்றுவகை போலிகள் வரும்.

இதில் முன்பின் தொக்க போலியை கூர்ந்து காண்போம்.

சதை = தசை - இங்கே பொருள் கெடாமல் ஐகாரம் எழுத்தில் மாறி அமர்ந்திருக்கிறது. அதுதான் போலி.

இதையே, கய்-மய் முறையில் எழுதினால், சதய், தசய் என ஆகிவருமல்லவா?

இப்பொழுது த-வுக்கு ச-வும், ச-வுக்கு த-வும் மாறுகின்றன. இங்கே போலி இலக்கணமே செத்துவிடுவது காண்க. த-வில் உள்ள அகரம், ச-வில் உள்ள அகரத்திற்கு எப்படி போலியாகும்?

இலக்கணத்தையே சிதைக்கிற முறை, ஆராய்ச்சியில்லாமல் மேலோட்டமாக சொல்லப்பட்ட கய்-மய் முறை.

போலி பற்றி பார்க்க: http://www.tamilvu.org/ta/courses-degree-c021-c0211-html-c0211334-15600
மேலும்:

போலி என்று சொல்லப்படுவது போலியே இல்லை என்றாலும் போலி, போலி என்று கூவிவிற்பவர்களுக்கு செஞ்சோற்றுக்கடன் என்று ஒன்று உள்ளதாக கருதி அவர்களுக்காக ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், போலியே வாழ்வாக இருக்க முடியுமா? போலியே தமிழாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில் நண்பர் சேக்முகமது உருபோலிப்போட்டி என்ற நல்ல சொல்லாட்சியை Fancy Dress Competition என்ற நீண்ட ஆங்கிலத்தொ டருக்கு இணையான சுருக்கமான தமிழாக தந்திருந்தார். உருபோலியைப்போலவே, எழுத்துப்போலியும் ஏதோ ஓர் இடத்தில் பகட்டு எழுத்தில் வரலாமே தவிர அதுவே மொழியாகி விடக்கூடாது. வாழ்க்கை முழுதும் பகட்டு உடுப்பு, மாறுவேச உடுப்பு அணியமுடியுமா?

ஆகவே இந்த வறட்டுப்போலிகளை மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கி வீசவேண்டும்.

5) ஓர் அச்சுக்கட்டை உடைந்து போனதற்காக, சிக்கன சீலரான பெரியார் தமிழ் எழுத்துகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்று அடித்து விட்டதையும், பேரறிவை பொதித்து வைத்திருக்கும் உலகின் தொன்மையான இலக்கண நூலை யாத்த தொல்காப்பியரையும் ஒப்பிட்டு பெரியாரை தொல்காப்பியர் மாதிரி பார்ப்பது தவறு. பெரியாரின்மேல் பாசத்தை காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. அதைத்தேர்ந்து கொள்ளுங்கள். தமிழ்மொழி குறித்து அவர் சொன்னவற்றை, வெறும் ஆத்திர அவசரத்தில் எழுதியதாக கருதி கடந்து போவது நல்லது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24/02/18

Wednesday, February 14, 2018

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாக உலவுகின்றது.
மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லிலிருந்து கிளைப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மன்றுதல், மன்றித்தல் என்ற சொற்களை ஊன்றிக்காண இருக்கிறது.
மன்றுதல் என்றால், கடுமையான தண்டனை தராமல், தண்டம் கட்டச்சொல்லி விடுதல்.
பார்க்க: http://dsalsrv02.uchicago.edu/cgi-…/philologic/getobject.pl…
"மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்......"
(திருமுறை-4, பூந்துருத்தி பதிகம் - 88)
மன்றியுந் நின்ற மதிலர் என்றால் "போய்த்தொலை என்று கண்டித்து விடப்பட்ட மதிலர் போகாமல் நின்றார்" என்று பொருள். அப்படி போய்த்தொலைக என்று விட்டும் போகாமல், மல்லுக்கட்டிய மதிலரை, மாய்த்தே விடவேண்டும் என்று சினந்து மாய்த்த சிவபெருமான்" .... என்பது இங்கு பொருளாகும்.
அதேபோல,
"கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன்மலையை யோடி
வென்றித்தன் கைத்தலத்தாலெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்;
மன்றித்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே"
(திருமுறை-4, கயிலாயம் - 47 - 5)
இராவணன், பேராசை கொண்டு கயிலை மலையை பெயர்க்க, உமை அஞ்ச,
சிவபெருமான் தண்டிக்கிறார். எப்படியென்றால், தனது கால் விரலால் இராவணனை
மெல்லியதாய் ஊன்றுகிறார். அதற்கே அவன் அலறி கதறுகிறான். அதோடு போய்த்தொலை என்று விட்டுவிடுகிறார் சிவன். அப்படியில்லாமல், கடுமையாக மன்றித்தே ஆகவேண்டும் என்று கருதியிருந்தால், இராவணன் பிழைத்தே இருக்கமாட்டான் என்பது பாடலின் பொருள். இங்கு கடுமையாக என்ற மறைவுப்பொருள், பதிகத்தின் பிற பாடல்களால் பெறப்படும்.
அதாவது, கடுமையாக வெறுத்து ஒதுக்காமல், அல்லது கடுமையான தண்டனையை தராமல், மன் (=பெருமையுடைய, வலிமை மிகுந்த) என்ற அந்த உயர்ந்த பண்புடைய பெரியோராய் நின்று குறைவான தண்டனை தருதல் என்பதற்கு மன்றுதல் என்று பொருள். "கடிது ஓச்சி, மெல்ல எறிக" என்ற வள்ளுவம் இங்கே ஒத்துப்பார்க்கத்தக்கது.
மன்றாடி கேட்டுக்கொள்ளுதல் என்றால், மன்றில் (மன்றத்தில்) பொதுவில் நின்று இறைஞ்சி கேட்டு மன்றி பெறுதல்.
10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள், 5 ஆண்டாக தண்டனை குறைக்கப்படுதலுக்கும்
மன்றிப்பு, அல்லது பொதுமன்றிப்பு என்றுதானே பெயர். 5 ஆண்டாக குறைக்கப்பட்டாலும் தண்டனை தண்டனைதானே. மன்னிப்பு கொடுத்தல் என்பது குற்றத்திற்கான குறைந்த தண்டனைதானே.
ஆகவே, மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது.
மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.
வழக்கில் றி-கரம் னி-கரமாக திரிவதுண்டு. காட்டாக பன்றி = பன்னி என்று பேச்சுவழக்கில் வருவதை சொல்லலாம். என்ன பன்றான் என்ற பேச்சு வழக்கு,
என்ன பன்னான் என்று வருவதை ற-கரம் ன-கரமாக திரிவதற்கு சொல்லலாம்.
ஆகவே மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே.
மீண்டும், மன் என்று தொடங்கும் பல உயர்ந்த சொற்களை வைத்துக்கொண்டு, மன்னிப்பு அயற்சொல் என்று சொல்லவே முடியாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, January 29, 2018

ஆண்டாள் - மடல் 3. வைரமுத்தின் 10 பிழைகள்.



"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு" என்பது வள்ளுவ மரபு.  "கடிது ஓச்சி,  மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் "  என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. "சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா", என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கை சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. "நீயே முக்கண் முதல்வனும் ஆகுக" - ஆனால் உன் பாட்டு பைசாவுக்கு தேறாது என்றது நக்கீர மரபு.

இந்த தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாக காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில் தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பதற்கு, மூன்று வாரங்கள் பொறுத்திருந்தது தேவைதான்.

1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு(fiction), வருணனை(commentary), மிகையான புகழ்ச்சி  ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பது போன்றே மிகுந்து கிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.

2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்று, ஆண்டாளை புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.

3) "சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.....மக்களை நோக்கி இறங்கி வந்தது."   ---வைரமுத்து.

இது அப்பட்டமான வரலாற்று திரிப்பு.

சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றை திரிக்கிறது. இது சைவ,வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையை காட்டுகிறதா? அல்லது காழ்ப்பை காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)

4) ஆண்டாளை "கண்டெடுக்கப்பட்ட கனகம்" என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதை பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்து நின்றன என்றுதான் சொல்ல வேண்டும். "அறியாக்குலம்" என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

5)  "பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? " ------ வைரமுத்து.

வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில்,
மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளை செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையார் திலகவதியாரே, அப்பரடிகளை சமணத்திலிருந்து மீட்டு சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார். மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள் முந்திப்பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மை, திலகவதியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. 400 ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது.1300 ஆண்டுகளில் இருவரை மட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில் விழாவில் தேவையில்லாதவற்றை பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.

6) "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" --- வைரமுத்து

சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, "அம்மையே" என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால் அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார். அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர். அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள். "தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்" என்று சத்தியை பாடி, அடுத்த வரியிலேயே, "அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்....." என்பார் அபிராமி பட்டர்.

சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கி கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான்.
இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையை தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளை தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.

இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.

ஓர் உயர்ந்த உறவை பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது "என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்" என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டை காற்றில் பறக்கவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

7) "திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" --- வைரமுத்து

இதுதான் கட்டுரையில் மட்டமான இடம் என்றால் மிகையல்ல.

"பாலியல்" என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில் வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.

8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:

ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், "ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து,  ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்." (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணைய சத்தியை அழைப்பதாக சிவநெறி சொல்லும். இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள் பிறரை இறையை நோக்கிஅழைக்கின்றார்.

இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர். அந்த ஆணிவேரை வருணமும், சாதி ஏற்றத்தாழ்வும் பிடுங்கி எறிந்தன பின்னாளில். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் விடும் அழைப்புகள் (Prayer Calls) மிக உயர்ந்த நெறியினதாகும். வெறும் பெண்டிரை நோன்புக்கு அழைக்கும் பதிகங்களை இருவரும் இயற்றவில்லை. அந்த அழைப்பு வெறும் விளையாட்டல்ல. குமுகத்தை (குமுகம் = சமூகம் = Society) கட்டியமைக்க அவர்கள் பட்ட பாடு. பத்திமரபு என்பது பொதுமரபு என்று எனது முதல்மடலில் சொல்லியிருப்பதை ஒத்துக்காண்க.

எம்பாவை பாடி இறைவனைக்கூட பக்குவம் பெறவேண்டிய ஆன்மாக்களை அழைத்த மாணிக்கவாசகர், ஆத்மநாதராகவே ஆவுடையார் கோயிலில் வீற்றிருக்கிறார். அதே பணியை விண்ணவத்தில் செய்த ஆண்டாள் இறைவியாக ஆகி, வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கிறார்.

இருவருமே உருகி உருகி இறைவனை காதலித்தவர்கள். இருவருமே, இறைவனிடம் முழுச்சரணகதி அடைந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனை குருவாகக் கருதி ஐக்கியமானார். ஆண்டாள் கணவனாகவே இறைவனை வரித்துக்கொண்டார்.

திருப்பாவையின் அந்த 19ஆம் பாட்டு சொல்வது இதுதான்:

"உன் கழலடைய, உன்னோடு கலக்க உன்னை கணவனாகவே வரித்து தவமிருக்கும் எனக்கு அருள் செய்யாதிருப்பது, உன் அடியார்களையும் மறக்குமளவிற்கு, நப்பின்னை பிராட்டியார் உன்னிடம் காட்டும் அன்பிலும் காதலிலும் கரைந்து போனதனாலோ? இது சரியா?". இதுதான் அதன் பொருள். அதை பாலியல் கொச்சையாக பேசினால் எப்படி?

"கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே..." என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்வது மெய்யியலை பேசும்போது மிகவும் பொருந்தும். ஆண்டாளின் இலக்கியத்தை உணர கூர்த்த மெய்நோக்கு தேவை.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் படிக்கும் கண்கள், தங்கள் ஆராய்ச்சிகளை தாறுமாறாக அவிழ்த்துவிடுகின்றன. வைரமுத்தும் அதையே செய்திருக்கிறார். ஆண்டாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் இறைவனோடு கலக்க வேண்டும் என்ற ஒரே தவிப்புதான். அந்தத்தவிப்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், ஆண்டாளை பருவமடைந்த பெண்னாக பார்ப்பதுதான் அவர்களின் கோளாறு.
நாச்சியார் திருமொழியில் 5ஆம் பதிகத்தில் குயிலோடு பேசும் ஆண்டாளை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனின், மாணிக்கவாசகரின் குயிற்பத்தை படிக்கவேண்டும். இருவரும் குயிலை வைத்து பேசுகின்ற பேச்சு, கெஞ்சல், மிரட்டல் என்ற பலஉணர்வுகளும் ஆன்மவிடுதலைக்கு அவர்களின் தவிப்பை சொல்லும் பேரரும் பதிகங்களாகும்.

நாச்சியார் திருமொழியின் 13ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டில் ஆண்டாள் இப்படி பாடுவார்.

"கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவந்தானென்?
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே."

மானுடவாழ்வின் அல்லல்களில் இருந்து விட்டுவிடுதலையாகி முத்திபெற தவிக்கின்ற தவிப்புதான் ஆண்டாளின் தவம். இதையே, மாணிக்கவாசகர் எப்படிப்பாடுகிறார் பாருங்கள்!

"பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர் திரைபொர காமச்சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே!"

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மானுட அல்லலில் இருந்து விடுபட தவமிருக்கும் மாணிக்கவாசகர், உன்னைப்பற்றி நின்ற அன்பர்கள் எல்லாம் வானேறிவிட, நான்மட்டும்
இங்கு சுறாமீன் போன்று தாக்குகின்ற காமத்தால் அழிந்துகொண்டிருக்கிறேனே என்று கதறுகிறார். இதைத்தான் ஆண்டாளும் "கொம்மை முலைகள் இடர்தீர" என்று குறிப்பிடுகிறார். இன்னொரு பாட்டில், "......என்னை கூவிடுவாய்! கும்பிக்கே இடுவாய்! நின் குறிப்பறியேன்" என்று அலறுவார்; இன்னொரு பாட்டில் "....நம்பி இனித்தான் நல்குதியே!' என்று அழுவார்.  அதைத்தான் ஆண்டாளும், "விடைதான் தருமேல் மிகநன்றே" என்று உருகுகிறார்.

ஆண்டாளை வெறும் தெய்வமாக புரிந்து கொண்டு போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள்தான் பெரும்பான்மை. திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் மட்டும் படித்தவர்கள் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாணிக்கவாசகரின், அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, வாழாப்பத்து, ஆனந்தமாலை, நீத்தல்விண்ணப்பம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன். அதையும் சித்பவானந்தாவின் உரையோடு சுருக்கிக்கொள்ளக்கூடாது. அவ்வுரையை தாண்டி நல்ல உரைகள் உண்டு. இவற்றோடு குறுந்தொகையையும், திருக்குறளின் இன்பத்துப்பாலையும்  ஒப்பிட்டு படிக்க வேண்டும்.  அகப்பாடல்களை படிக்க வேண்டிய முறையே இதுதான்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்காணும் வாரணமாயிரம் என்ற பதிகத்தை போன்ற ஒப்பற்ற மங்கல பதிகத்தை நான் எங்கும் படித்ததில்லை. அதில் "தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது" என்கிறார் வைரமுத்து. திருப்பித்திருப்பி படிக்கிறேன் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக அதன் 14 பதிகங்களை பார்த்தால் நாச்சியார் திருமொழி என்பது ஆண்டவனின் கழல்சேர, ஒன்றிப்போக, இம்மையின் அல்லல் நீங்கி "சும்மா இருக்கும் சுகம்" என்பாரே வள்ளலார் அதனை அடைய ஆண்டாள் என்ற 13/14 வயது மங்கையின் பரிதவிப்பு, வேண்டல், தவம், அலறல், கதறல் ஆகியவைதான் அவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்று வள்ளுவம் சொல்லவில்லையா? அவர் சொன்ன அந்த பிறவிப்பெருங்கடலின் அல்லல்களில் இருந்து தம்மை விடுதலை செய்ய வேண்டி நின்ற ஞானந்தான் ஆண்டாளின் தவம்.

ஆனால், இலக்கிய வித்துவான்களும் காலஞ்சென்ற ஞாநி உள்ளிட்ட தயார்-எழுத்தாளர்களும் (fast food writers) எங்கெங்கெல்லாம் முலை, கொங்கை, அல்குல் என்ற சொற்கள் வருகிறது என்று பார்த்து அந்த வரியை மட்டும் பிடித்துக்கொண்டு காமம், கொடூரம், கொக்கோகம் என்றெல்லாம் கருத்தெழுதி கொச்சைப்படுத்திய நாள்கள் தமிழ் அறிவுலகத்தின் அவமானமான காலம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஞாநி 15 ஆண்டுக்கு முன்பு கண்ணகியை ஏளனப்படுத்தினார். பின்பு, மாணிக்க வாசகர்; அண்மையில் ஆண்டாளை கேலிசெய்தார்.

ஏன் இந்த எழுத்துலகிற்கும், அறிவுலகிற்கும் கொங்கை, முலை, அல்குல் என்ற மூன்று சொற்களை படித்தாலே கைகால் வியர்த்து நடுங்குகின்றன என்று எனக்கு புரியவில்லை.
இந்த முறை சற்று கூடுதலாகவே இதழ்களுக்கும் நடுங்கியிருக்கின்றன. இந்த நடுக்கம் தமிழ் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்த நடுக்கம் வந்தபின்னர்தான் மருத்துவரிடம் கூட, ஆங்கிலத்தில் அதற்கான பெயர்களை சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது.

இயல்பான இம்மைவாழ்வின் அல்லல்களை நீங்கி ஆண்டவனை அடையவேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளம்மையை வைரமுத்து பார்த்தது பார்வைப்பிழை; அறிவின் குறை; ஆண்-அவம், புலமைச்செருக்கு என்ற மாயை.

அன்றைய சூழலில் பெண்களுக்கு கொடுங்கோடு என்ற ஒன்றெல்லாம் தென்படவேயில்லை.

9) "பாலியல் சொல் விடுதலை" - இந்தச்சொற்கள் வைரமுத்தின் வக்கிரத்தின் உச்சம். அதுவும் ஔவையார், வெள்ளிவீதியாரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இதைப்பேசுவது அறியாமையா?ஆணவமா? என்பது புரியவில்லை. இன்னும் எழுத எவ்வளவோ இருந்தாலும் நீளம் கருதி, பத்தோடு நிறுத்துகிறேன்.

10) தேவதாசி:

தனது முன்முடிவை நேரடியாக கூறாமல், வேறொருவரை மேற்கோள் காட்டி ஆண்டாளை அப்படி குறிப்பிடுகிறார். எத்தனை பெரிய தவறென்று தமிழ்நாடு அவருக்கு எடுத்துக்காட்டியது. பலர் கூறியவற்றை தவிர்த்து இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அ) தேவதாசி மரபு அன்றைய சூழலில் உயர்வாக கருதப்பட்டது என்று சொன்னாலும், எத்தனை தேவதாசிகளை தமிழ்நாடு வணங்கிக்கொண்டிருக்கிறது? எண்ணிப்பார்க்க வேண்டாவா? இறைவியாகக்கூட இல்லை, பரிவார தேவதைகளாகவேனும் எத்தனை தேவதாசிகள் வழிபாடு பெறுகிறார்கள்? அப்படியென்றால் அன்றைய சூழலை இழுத்து குழப்புவது சமாளிப்புதானே?

ஆ) தேவதாசி யார்?: சமயநெறிகளுக்குட்பட்ட கோயில்கள், கோயில் மண்டிலங்களில் மானகை/மேலாண்மை (Management) இருக்கத்தானே செய்யும். தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு இருக்கிற மேலாண்மைக்கூறுகளை கோயில்களிலும் காணமுடியும். நிருவாகம் (Administration), அன்றாடப்பணிகள் (Operations), மனிதவளம் (HR), நிதி (Finance), விற்பனை/வணிகம் (Sales/Rental) போன்ற அடிப்படைத்துறைகளை இன்றைக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

அதோடு, இந்தக்கோயிலுக்கு போய் வழிபட்டால் இன்ன குறை நீங்கும்; இன்னது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கேட்கிறோமே அதெல்லாம் கோயில்கள் சந்தைப்படுத்தப்பட்டதன் அடையாளங்கள். சூரிய பகவானை வழிபட இங்கே செல்க, சனிபகவானை வழிபட அங்கே செல்க, தலைவலி நீங்க இங்குமங்கும் செல்க என்றெல்லாம் இன்றும் நாம் நிறைய கேட்கிறோம். All these are nothing but Temple-Marketing-Network-Activities.  கோயில் புகழ்பெற செய்யப்பட்ட விளம்பர உத்திகளாகவே பெருமளவும் காட்சியளிக்கின்றன.

இதை ஏன் உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கலாம். திருநள்ளாறை எடுத்துக்கொள்வோம். அங்கே சனிபகவானை கும்பிட்டால் குறைகள் தீரும் என்பது நமது நம்பிக்கை. ஆனால், திருநள்ளாற்றின் பச்சைப்பதிகம் உள்ளிட்ட மூவர் பாடிய பாடல்களிலும் அப்படியொரு வழிபாட்டை தேவார முதலிகள் எழுதவேயில்லை.

மூவர் தேவாரமும் ஒவ்வொரு தலத்தின் இறைவனையும், அந்த ஊரின் இயற்கையையும் சிறப்பையும் பாடி, இந்தப்பாட்டை படி; போதும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்வார்களிடையேயும் நான் அப்படித்தான் காண்கிறேன்.

ஆனால், நிகழ்வு என்ன என்றால் அவர்கள் பாடிய பாட்டை கோயில் நிருவாகமே பாடுவதில்லை. மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்துவிட்டு அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட்டு உத்திகளைத்தான் கோயில்களில் காணமுடிகிறது.

அந்த சந்தை (Marketing) உத்திகளின் ஒருபகுதியாக கலைஞர்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டு Dedicated Event Performers ஆக ஆக்கப்பட்டார்கள். இது மனிதவள (HR) உத்தியாகவும் இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. இந்த மனிதவளத்தின் மற்றொரு பகுதியாக Operations - அதாவது அன்றாடப்பணிகளுக்கு தேவைப்பட்ட ஆள்களை சொல்லலாம். வேலைகள் செய்ய தேவைப்பட்ட ஆள்களாகவும்(Labours) தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கின்றனர்.

ஆக, தேவதாசிகள் கலைஞர்கள் ஒருவகையாகவும், பணியாள்கள் ஒருவகையாகவும் இருந்திருக்கிறார்கள். (There existed both artists and labours as devadasis. As always marketing people are paid high in the industry it is possible the artist-devdasis could have been kept in better esteem/wealth) இப்படியிருக்கையில், இறைப்பணி என்று ஒரெ முத்திரையிட்டு தேவதாசிகளை பேசுவது சரியாயிருக்காது.

இதில், ஆண்டாளை ஏப்படி தேவதாசி என்று கூறமுடியும்? மாபெரும் பிழையல்லவா? கடுஞ்சினம் வருமா இல்லையா?

Temple Marketing என்பதைப்பற்றி இறுதியாக ஒரு குறிப்பை அனைவரின் சிந்தனைக்கு எழுதி நிறைவு செய்கிறேன்.

நேர்த்திக்கடன், வேண்டிக்கொள்வது, நோன்பு/விரதம் போன்றவை தொன்மமான நாட்டார் மரபுகளிலேயே உண்டு. முருக மரபில் உண்டு. ஆனால், எங்காவது, சின்ன கருப்பு கோயிலுக்கு போனால் சுக்கிர தோசம் போகும், சுடலை மாடன் கோயிலுக்கு போனால் செவ்வாய் தோசம் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை.

இடைக்காலத்தில் எழுந்த பத்தி இயக்கமும் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப்போனால், வழிபாட்டை மிக எளிமையாக்கியது. "சும்மா இந்த பதிகத்தை படித்துவிட்டு போப்பா" என்று படிக்கச்சொல்லியது. சான்றாக தேவாரத்தை சொல்வேன்.

ஆனால் பிற்காலந்தான் அப்படியான வழக்கங்களை உருவாக்கின. குறிப்பாக, நாயக்கர் காலத்திற்குப்பின்னர், தமிழ் கோயில்களை விட்டு அதிகம் வெளியாகி, இந்த வழக்கங்கள் உருவாகின.

இது தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் அவரவர் விருப்பு. ஆனால், Temple Marketing என்பது எல்லை மீறிப்போவது கவனிக்கத்தக்கது. இதை ஆழ்ந்து பார்க்காமல், எல்லா மரபு வழிபாடுகளையும் தூற்றிக்கொண்டு, ஆன்மீகம் தொடர்பான அனைத்தையும் கேலி பேசிக்கொண்டே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்?
படிக்கச்சொல்லி நமக்குத்தந்த தூயதமிழ் இறைப்பாடல்களை படிக்க மறுத்து, ஆரியம் பூரியம் என்று தேவாரம் திருவாசகம் போன்றவைகளையும் தள்ளிவைத்துவிட்டு, காது, ஈயம் கதைகளை எத்தனை நாள் பேசிக்கொண்டிருப்போம்?

எனது முந்தைய மடலில் சுட்டிக்காட்டிய மரபின் திரிவுகளை ஒத்துப்பார்க்க வேண்டுகிறேன்.

வைரமுத்தின் அறமற்ற பத்துப்பிழைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வேறுபிற செய்திகளோடு அடுத்த மடலில் நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/2.html


Tuesday, January 20, 2015

மாதொருபாகன் - கவுண்டருக்கு எனது கண்டனங்கள்!

பெண்ணியம் ஆணியம் என்று கட்சி கட்டமுடியாமல்
எழுந்த புதினம் என்பதால் ஆண் பெண் சமனைக் குறிக்கும்
சிவவடிவான மாதொருபாகன் என்ற பெயரைச் சூட்டினாரோ
"பெருமாள் முருகன் கவுண்டர்" என்று எண்ணத் தோன்றியது
அப்புதினத்தைப் படித்து முடித்தபோதில்.

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்,
அதிலும் கூன் குருடு செவிடு பேடு என்ற நான்கு உடல்
ஊனங்களின்றிப் பிறத்தல் அரிது என்று சொன்ன போது,
மானிட வாழ்க்கைக்கு இந்நான்கு ஊனங்களும் சற்று
கடினமாக, சரவலாக இருந்ததை, இருப்பதைப் புரிந்து
கொள்ளமுடிகிறது. பேடு என்றால் பேடிமை;
அதாவது பால் பேதித்த பெண்மை (திருநங்கை என்ற
 தற்போதைய வழக்கு). ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான மலடு (வறடு/வறடி/வறடன் என்பார் பெ.மு)
என்ற தன்மையை மானிட வாழ்க்கையின் இன்னலாகச் சான்றோர்
கொண்டதில்லை.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்குமுகத்தில்,
மணமாகிய ஓரிரு மாதங்களில் இருந்து காலம் முழுவதும்
குமுகத்தின் ஒவ்வொரு மூலையிலும் படும் வேதனைகளை,
சொல்லடிகளை, எதிர்கொள்ளும் ஆணவங்களை,
அவமானங்களை மாதொருபாகன் பதியவைத்திருக்கிறது.
ஆணும் பெண்ணும் (காளி, பொன்னா)  சமமாகப் படும்
துன்பங்களை, ஏச்சுகளை ஆங்காங்கு நடைமுறை
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்டிருந்தாலும்
ஒரே மூச்சில் படிக்கும்போது "குழந்தை குட்டி பெற்ற குமுகம்
இத்தனைக் கொடியதா? என்றெண்ண வைப்பதோடு,

"நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
 ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
 பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
 காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
 ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
 ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
 ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே..."


என்ற பட்டினத்தாரின் பாடலை நினைவுக்குக் கொண்டுவந்து,
"இந்தக் குரங்குகளுக்குத்தான் எத்தனை ஆணவம்!"
என்றும் எண்ண வைத்துவிடுகிறது.

பிள்ளைப்பேறின்றி, பல வருடங்கள், ஆணின் பாதியில்
பெண்ணும், பெண்ணின் பாதியிலே ஆணுமாய்
இனிய காதல் வாழ்க்கை வாழ்ந்த காளியும் பொன்னாவும்
பட்டினத்தார் சொன்ன குரங்குகளின் இறுக்கத்தினால்,
பொன்னா உறுதி தளர்ந்து, கணவனின் பேச்சைக் கேட்காமல்
திருவிழாச் சந்தையில் காணாக்களவு வழி
விந்துதானம் பெறப் போய்விடுகிறாள்.
அவர்களின் காதல் வாழ்க்கை சிதறிவிடுகிறது.
காதல் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறார் பெ.மு. அதை
எண்ணும்போது அவர்களின் சிதறல் வலிக்கவே செய்கிறது.
மணமாகி குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தாலும்,
 "அன்பிலாப் பெண்டிர் கையில் உண்பதே உலகில்
எல்லாவற்றிலும் கொடியது" என்ற ஔவையாரின்
சொல்லுக்குள் வாழ்பவர் எத்தனையோ பேரிருக்க,
அருமையான காதல் வாழ்க்கையை, குமுகத்தின்
அழுக்குகளால் சிதறடிக்கிறார்கள் பொன்னாவின் தாய்,
தந்தை, அண்ணன், மாமியார் (அதாவது காளியின் அம்மா).
பொன்னாவை காணாக்களவுவழிப் போக சொல்லித்தந்தோடு
மட்டுமன்றி, காளியின் தாயார் ஆசியோடு, பொன்னாவின்
தந்தை வண்டி ஓட்ட, தாய் துணைக்கு வர, அண்ணணோ
மாப்பிள்ளை காளிக்குத் தெரியாமல் அவனைச் சமாளிக்க,
திருவிழா இருட்டுக்குள் மறைந்துவிடுகிறாள்
காளியுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த பொன்னா.

இதுதான் கதை. இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பா?  கதையில்
எங்கும் அருத்தநாரீசரை இழுக்கு செய்யவில்லை. பெருமாள் முருகனின்
சொந்த சாதியான கவுண்டர்களை ஏதும் இழுக்கு செய்யவில்லை.

ஊருக்கு இழுக்கு என்று சொல்வதெல்லாம் மறைமுகக்
குற்றச்சாட்டுகளாகவே தெரிகின்றன. ஏனெனில், ஊர், மலை,
மலைக்கோயில், அதன் பிரிவாக இருக்கும் வறடிகல்,
பாவாத்தா என்ற வனதெய்வம், அந்த வனதெய்வம் இட்ட குலசாபம்
போன்றவற்றையெல்லாம் சொல்லவேண்டுமானால்
ஊர்ப்பெயரைச் சொல்லாமல் எந்த எழுத்தாளனாலும்
எழுதவே முடியாது.

காணாக்களவு பற்றிப் பேசிய போதே அவளின் கண்களில்,
திருவிழாவில் பிள்ளை வரம் கொடுக்க அலையும்
எல்லாச் சாதி சாமிகளும் வந்து போகின்றனர்.
எல்லாச் சாதி சாமிகளும் அலைகிறார்கள் என்றால்
எல்லாச் சாதிப் பெண்களும் தேடுகிறார்கள்
என்றுதான் பொருள். அதற்கு ஏன் கவுண்டர் சாதி கோவித்துக்
கொள்ள வேண்டும்?

சாதிப்பெயரைப் போடமலிருந்திருக்கலாம் என்றால்,
கதையில், கவுண்டர் தொடங்கி, பார்ப்பார், செட்டியார்,
பறையர், சாணார், சக்கிலியர், சாயபு, வெள்ளைக்காரன்
என்று பலரும், பல குடும்பங்களும் வந்து போகிறார்கள்.
கதையில் கவுண்டரான காளி, பறையர்களோடு
பறையாட்டம் ஆடுவான். குறிப்பாக கோயிற்பறையாட்டத்தில்
வல்லவனாகச் சொல்லப்படுவான். பறையாட்டம் என்பது தமிழர்களின்
பொதுவான தொன்மையான கலை என்பதற்கு இதுவும் ஒரு காட்டு. காளியின்
சிற்றப்பனாக வருபவர், திருமணம் செய்துகொள்ளாதவர்.
அவருக்குச் சமைத்துப் போடுபவன் சக்கிலிய
வகுப்புப் பையன். அதற்காக சிற்றப்பா பலராலும்
இகழப்பட்டதைக் கதை சொல்கிறது. சாணார் வகுப்பான
மண்டையனின் பிள்ளையைத் தத்துக் கேட்கிறான் காளி.
அவனும் தருகிறேன் என்று சொல்வான்;
ஆனால் மண்டையன் மனைவி மறுத்துவிடுவாள்.

காணாக்களவுக்குப் பொன்னா போனதாக வருவதால்
சாதியம் பற்றிக் கொண்டது என்று சொல்லுமளவுக்குக்
கதையில் ஏதும் சாதி இகழ்ச்சி இல்லவே இல்லை.

திருச்செங்கோட்டு கவுண்டர்கள் மட்டும் கதை
படிக்கத் தெரியாதவர்களா என்ன? அவர்களுக்கும் கதை
புரிந்திருக்கவே கூடும். ஆனால், பெ.முவே ஒரு செவ்வியில்
சொன்னதுபோல வேறு எதற்கோ பெ.மு வைப்
பிடிக்காதவர்கள், இதனை மட்டும் வெளியில் காரணமாக வைத்துத்
தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று எண்ண
இடமிருக்கிறது.

அது, சிலரின் சொந்தப் பகையாக இருக்கலாம்.

மற்றபடி, இக்கதைக்கு ஆதரவும், எதிர்ப்பும்,
ஆதரிப்பது போன்ற எதிர்ப்பும் இணையத்தில்
உலாவியதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள்
யாரும் சட்டென களத்திற்கு வராதது
"சாதி வாக்கு வங்கிக்காக மட்டுமே". திரைப்படங்களில்
எல்லாம் முடிந்ததும் காவற்துறை வருவது போல
மு.க.சாலின் வந்தார். சரி அவராவது
வந்தாரே என்று எடுத்துக் கொள்வது தகும்.

எதிர்க்கிறேன் பேர்வழி, என்று எத்தனையோ
பேர் எழுதினார்கள். அவர்கள் கதையை ஆழ்ந்து
படித்தால் அதில் சாதி, மத இகழ்வுகளுக்கு
இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால்,
என்னை வியப்படைய வைத்ததெல்லாம்,
சில தமிழ்ப்பற்றாளர்களின் "ஆரிய திராவிட" எதிர்ப்புதான்.
"இது ஆரியக் கொள்கை, அதோடு இது திராவிடர்களின்
சதி - ஆபாசம் " என்று போட்டார்களே போடு;
அவர்களெல்லாம் இந்த நூலை வருணிக்கு முன்
கொஞ்சம் மாந்தவியலையும் படிக்கவேணும்
என்றுதான் சொல்லுவேன்.

ஆரியத்தையும் திராவிடத்தையும் கிடுக்க
ஆயிரம் இருக்கையில் இதெல்லாம்
ஆரியக் கொள்கை அது இது என்றால்
இவர்களின் ஆரிய திராவிட அறிவை
நகைக்க மட்டுமே முடியும்.

தற்காலப் புதினங்கள் என்றாலே எனக்கு  அலுப்பும்
சலிப்பும் இயல்பாகவே அமைந்துவிட்டதால் நான்
இழப்பது சில இருக்கலாம்.  அதற்கு நான் வருந்தியதில்லை.
ஆனால், எப்பவாவது இதுமாதிரி படிக்கும் போதெல்லாம்
வழக்கு மொழியென்ற பெயரில், எழுத்துப் பிழை,
ஒற்றுப்பிழையோடு கெட்டவார்த்தைகளை அப்படி
அப்படியே எழுதியிருப்பதைப் பார்க்கும் போது
அருவெறுப்பே மிகுகிறது. புதினம் என்றால்,
தற்கால இலக்கியப் பதிவு என்றால்,
கீழ்த்தரமான உரையாடல்களையும், ஏசல்களையும்,
கேலிகளையும் அப்படியே
அதே சொற்களால்தான் எழுதவேண்டுமா?
ஆண் எழுத்தாளரும் பெண் எழுத்தாளரும்
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு
கெட்டவார்த்தைக் களஞ்சியத்தை
எதிர்காலத்திற்குத் தேக்கி வைக்கிறார்கள் போல.

இடக்கரடக்கல் என்பதைக்
கொஞ்சம் கூடவா பின்பற்றக்கூடாது?

எனக்குப் பிடிக்காத இந்த "இழக்கிய" எழுத்து முறையை,
பெருமாள் முருகன் கவுண்டரும் வைத்துள்ளார்.
அதனால் அதற்கு மட்டும் கவுண்டருக்கு எனது கண்டனங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, May 25, 2014

திருவாசகம் - கோகழி பற்றிய உரையாடல்

இது தமிழ்மன்றம் மடற்குழுவில், திரு.நூ.த.லோகசுந்தரம் அவர்கள் "கோகழி" என்பது கருநாடகத்தின் ஊர் என்று கருத்துச் சொன்னபோது எழுந்த உரையாடல். இதேப் போல வேறு சிலரும் சொல்கிறார்கள் என்பதாலும், இந்த உரையாட்டு மேலும் தொடரும் என்பதாலும், இங்கே இதைப் பதிவு செய்து வைக்கிறேன்,
====================================================================
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,
வணக்கம்.
தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.

1)    “கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )
 2)    தாங்கள் மேற்காட்டிய http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search
இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன்.
3)     ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது?திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!
ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத   ஊரை  சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றதுஎன்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

4)   முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.
(பார்க்க :- http://valavu.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D   )
 பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும். 

திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.] 

கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.


5)    திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும் திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.
திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.
            கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),
            கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)
            கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)
            கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை) 
            கோகழிக்கரசை (பண்டாய நான்மறை) 
இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின் திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின் திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன.  இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.
ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.  
6)    தங்களின் கூற்று:
குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ  புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில் 
குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”

எனது கருத்து:
 எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?

ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும்  இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

7)    தங்கள் கூற்று:
"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை  " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “

எனது கருத்து:
இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”

இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)
 “சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும்.  (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)
குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.
பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே. 
குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.

8)    தங்கள் கூற்று:
"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர் 
எனது கருத்து:
தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:

61....புவனியிற்  சேவடி  தீண்டினன்  காண்க             
62....சிவனென  யானுந்  தேறினன்  காண்க             
63....அவனெனை  ஆட்கொண்  டருளினன்  காண்க             
64....குவளைக்  கண்ணி  கூறன்  காண்க             
65....அவளுந்  தானும்  உடனே  காண்க             
66....பரமா  னந்தப்  பழங்கட  லதுவே             
67....கருமா  முகிலின்  தோன்றித்               
68....திருவார்  பெருந்துறை  வரையி  லேறித்              
69....திருத்தகு  மின்னொளி  திசைதிசை  விரிய             
70....ஐம்புலப்  பந்தனை  வாளர  விரிய             
71....வெந்துயர்க்  கோடை  மாத்தலை  கரப்ப             
72....நீடெழில்  தோன்றி  வாலொளி  மிளிர       

இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள்.  இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.
மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.
இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார்.  “கருமா முகிலின் தோன்றி  - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.
 வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,
நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.
ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.

9)    தங்கள் கூற்று:
மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி
     எனது கருத்து:

            மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?


ஐயா, அடியேனுக்குத் தோன்றிய மேற்கண்ட விளக்கங்களை அளித்துள்ளேன். ஓர்ந்து பார்க்க.
திருவாசகத்தை ஆய்பவர்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று, உள்ளார்ந்து உண்மையைத் தேடுநர். இரண்டு - உங்களுக்கே தெரியும்.
இரண்டாவது வகையரின் குழப்படிகள் சிக்கல்களிலேயே போய்முடியும். முதல் வகையரின் தேடல் மெல்லச் சென்றாலும் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும். தாங்கள் அறியாததல்ல. தங்களின் அன்பான மடலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மடல்-2:

அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

1)   கல்வெட்டைப் பார்த்ததில்லை.
     அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
     அதன் ஆங்கிலக் குறிபெயர்ப்பையும் பார்த்ததில்லை.
     எனது ழகர வினாவுக்கும் விடை இல்லை.

    ஆனால் அந்த ஊர்தான் கோகழி என்று தீர்ப்பை மட்டும் எழுதிவிடுகிறீர்கள். 

    இது எந்த விதத்தில் ஏற்கத் தக்கது? நான் ஏற்கமாட்டேன்.
    

2)  தங்கள் கூற்று: 
   //எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள் 
வாய் வழி ழங்கும் மொழி //

    எனது மறுமொழி:
    இது என் வினாக்களுக்குத் தொடர்பில்லாத செய்தி.

  
3) தங்கள் கூற்று:
 // கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது 
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும்  ழகரம் உண்டு
//

எனது மறுமொழி:
கன்னடத்தில் ஒரு காலம் வரை ழகர, றகரங்கள் இருந்து பின்னர் மறைந்தன. தெலுங்கில் நானறிந்தவரை ழகரம் இல்லை.
கடம்ப எழுத்துகள், அல்லே-கன்னடம், தற்காலக் கன்னடம், அல்லே-கன்னடத்தில் இராட்டிர கூடர்களின் தாக்கங்கள்,
பழங்கன்னடமான அல்லே-கன்னடம் ஏன் கன்னட-தெலுங்கு வரிவடிவமாகச் சொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஆயாமல்
வெறுமே கோகலி/ளி யை அங்கே சுட்டிக் கொண்டிருப்பதில் எந்த ஆய்வும் இருக்கமுடியாது.
4) தங்கள் கூற்று:

// கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார் //

  எனது மறுமொழி:

ஐயா, இங்கே இரண்டு செய்திகளை நான் கூறவேண்டும்.
ஒன்று - பெல்லாரிக் கோகலியைத் தாங்கள் மறுக்கவொண்ணாத ஆதாரங்களுடன் நிறுவினாற்றான் இவ் அடி பற்றி மேலும் பேச முடியும்.
அதுவரை இதைப் பேசிப்பயனில்லை.
இரண்டு - கோகலி நாட்டை ஆட்சி செய்த ஒருவரைக் குருவாகக் கொண்டவரை மாணிக்கவாசகர் குறிக்கிறார்
என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு ஐயா.
மாணிக்கவாசகரின் குரு, ஆட்சி செய்த மனிதனல்ல.
"அரு பரத்தொருவன் அவனியில் வந்து
 குரு பரனாகி அருளிய பெருமை...."   
என்று போற்றித் திருவகவலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவதைக் காண்க.
"நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன்!
 தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவபெருமான்
 தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்...."
 என்று வேசறவில் அறிவிப்பதைக் காணக.
  "அன்பராகி மற்று அருந்தவம் முயல்வார்,
  அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகாம்,
  என்பராய் நினைவார்,
     எனைப் பலர் நிற்க, "இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்?"  "
  என்று உருகி உருகி இந்தக் கேள்வியைக் கேட்பார் செத்திலாப்பத்தில். இன்னும் இது போலப் பல இடங்கள் உண்டு.
குரு, சீட உறவையும், தன்மையையும் ஆழச் சொல்லித்தருவது திருவாசகமும் தேவாரமும்.
என்னால் இப்படியான நேரடி அறிவிப்புகள் அல்லாத பல நுண்மையான குரு-சீடர் பண்புகளையும்
திருமுறைகளில் எடுத்துக் காட்ட முடியும்.
ஆகவே, மாணிக்கவாசகரைப் பற்றியும் அவரின் குரு பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல்
திருவாசக ஆய்வுகளில் புகுவார்க்கு எண்ணியது கிடைக்காது என்பதை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும்.
அருள்கூர்ந்து இப்பொருளையேனும் தாங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
5) தங்கள் கூற்று:

//

தூரம் பார்க்கவேண்டாம் என்றால் உலகம் முழும் பார்க்க எனக் கொள்வது ஏற்புடையதல்ல 
madras என்று அமெரிக்காவில் 6 இடங்கள் உள்ளன அவற்றை நாம் எப்போதாவது நாம் பேசும் madras  கொள்வோமா ? 

மேலும் அவையெல்லாம் பழங்கால( எட்டாம் நூற்றாண்டு)  ஊர்கள்  என சொல்ல நினைகின்றீர் களா?
//

எனது மறுமொழி:
 ஏன் என்பதுதான் எனது கேள்வி. மதிரையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கோகலிக்கு எந்த ஓர் ஏரணமும்
இன்றிச் செல்கையில், இன்னும் கொஞ்ச தூரம் போய் மாராட்டியத்தில் ஆயலாமே?

மாராட்டியத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. கருநாடகத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. மாராட்டியத்தில் இருந்து
வந்த இராட்டிரகூடர்கள்தான் கருநாடக-பெல்லாரியை ஆண்டார்கள் என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரச் சுட்டிகளே
சொல்கின்றன?
நான் ஏன் "இந்த இரண்டு கோகலிக்கும் தொடர்புண்டு என்று கருதக் கூடாது?" - அப்படியென்றால், கருநாடகக் கோகலியை 
பரிந்துரைப்பவர்கள் இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை என்று சொல்ல வேண்டுமல்லவா? அதுபோல மற்ற கோகலிகளுக்கும்
தொடர்பில்லை என்றும் அவற்றின் காலக்கட்டம் என்ன என்றும் அவர்கள்தான் சொல்லி நிறுவவேண்டுமே அன்று அடியேனின்
வேலை இல்லை. வெறும் ஒன்னரைப் பக்கத்தில், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று யாரும் ஆராய்ச்சி செய்து
சொல்லி விடவில்லை. அதனால் இந்தக் கருத்தைப் பரப்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டியது இது.
6) தங்கள் கருத்து:

//

மன்ன னின்  அமைச்சர் குதிரை வாங்க அனுப்ப ப பட்டார் பின்வரும் கோயில் கட்டினார் குதிரை நரியகியது 
 என்பதெல்லாம் கற்பனையில் விளைந்த புராணக்கதை அய்யா எங்காவது அவர் அமைச்சர் என திரு  வாசகத்தில் உள்சான்று உள்ளதா? 
நரி பரியாகியது  அப்பர் கூட ப்பா டுகிர்ரர் ஏனோ அவரை இனத்து புராணம் ஏதும் பாடப்படவில்லை 
வி வேக முள்ள ஆய்வாளர்   வெறும் கட்டுக்கதைகலான  புராணங்களில் நம் புவதில்லை
//
 எனது மறுமொழி:
  புராணம் என்றால் என்ன?
  புராண, நய/நயா என்பர் வடக்கே. உருதிலும், இந்தியிலும் இந்தச் சொல்லாட்சியை நிறைய கேட்டிருக்கிறேன்.
  புராண என்றால் பழையது. நயா என்றால் புதியது.
  புராணக்கதை என்றால் பழங்கதை. புராணம் என்றால் பழமை. இவ்வளவுதானே!
  மாணிக்கவாசகரே "புராண காரண!" என்பார்.
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால் - பழமை எல்லாமே கட்டுக்கதைகள் என்று கருதுகிறீர்களா?
  பழையன எலலாம் கட்டுக்கதை என்றால், வரலாறு, தொன்மம் என்ற ஒன்றையுமே ஆராய்ச்சி செய்யத் தேவையில்லையே?
  கோகழி எங்கிருக்கிறது என்று கூட நோக்க வேண்டியதில்லையே?
  பழைமை எல்லாம் கட்டுக்கதை என்றால் விவேக-ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் "புதுமைகள்" மட்டும் கட்டாத கதைகளா?
  என்ன ஐயா - ஞாயமே இல்லாமற் சொன்னால் எப்படி :-)
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால், இராமாயணம், மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகளா?
  ஏன் சிலப்பதிகாரத்தில் எத்தனையோ புராணக் கதைகள் உண்டு. அவற்றையெல்லாம் விட்டெறிந்து விடலாமா?
  மன்னிக்க - தங்களின் இந்த வாதம் ஏற்புடையது அல்ல.
  சிலப்பதிகாரத்தில் "வியன்நிலம்  ஆண்ட  ஒருதனிச்  செங்கோல்  ஒருமகன்  ஆணையின்..." 
  என்று இளங்கோவடிகள் சொல்வார். வியன்நிலம் என்பதற்கு ஒலிப்பின் அடிப்படையில்,
  வியன்னா என்றும் வரும்.

  வியன்னாவை ஆண்ட சிறந்த அரசன் ஒருவனை இளங்கோவடிகள் இங்கே குறிப்பிடுகிறார் என்று சொன்னால்
  எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கருநாடக-கோகலி ஆய்வு.
7)   தங்கள் கூற்று:
//

இங்கும் பெருந்துறை மையமாகக் கொண்ட புரானக்கதையிளிருந்து தானே பேசுகிறீர் 
நா ன்  முன்பு ஓர் மடலில் காட்டிய வரி இப்போது நினைவிற்கு வருகின்றது 
பாண்டியன் தனக்கு பரிமா விற்று 
ஈண்டுகனகம்  இசையப்பெராது 39கீ ர்த்தித் திருவகவல் 
பாண்டியனுக்கு  பரிமா விற்றார் வாங்கப்போகவில்லை 
//
    எனது மறுமொழி:
 இங்கே திருவாசகம் பற்றிய மிகத்தவறான புரிதலை தங்கள் எழுத்துகள் காட்டுகின்றன.
 மன்னன் ஆணையால் குதிரை வாங்கப் பெருந்துறை சென்றவர் மாணிக்கவாசகர். 
 மாணிக்கவாசகர் குதிரைகளை வாங்காமல் பணத்தையெல்லாம் கோயில் கட்டவும், சிவமயக்கத்திலும்
 கழித்துவிட, மதிரைக்கு அழைக்கப்பட்டு அரசனால் தண்டனைக்குள்ளாகிறார். அப்போது,
 மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டு, குதிரை வாணிகன் வேடமணிந்து, சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி
 அந்தப் பரிகளை மன்னனிடம் கொண்டுசென்று அணிவகுத்து நிற்க வைக்கிறார்.
 ஆகவே,
 பாண்டியனுக்காக பரிமா வாங்கப்போனவர் மாணிக்கவாசகர். அவர் வாங்கவில்லையதனால்
 பாண்டியனிடம் பரிமா விற்றவர் சிவபெருமான்.
 இதுதான் திருவாசகம் முழுதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 மேலும், "ஈண்டு கனகம் இசையப் பெறாது" என்றது, 
சாத்தாய் வந்த சிவனிடம் குதிரைகளைப் பெற்றுக் கொண்ட பாண்டியன்,
குதிரைகளுக்கான பணத்தைச் சிவனிடம் கொடுக்க (சிலர் அதிகப்படியான குதிரைகளுக்கு என்று சொல்வர்)
 சிவன் அதை வாங்க மறுத்து விடுகிறார். இதைத்தான் அவ்வரி சொல்கிறது.
  எப்படி வாங்குவார்?. இவர் நரிகளைத்தானே பரிகளாக்கி நாடகம் நடத்தினார் :-)
  அதுதானே அந்தத் திருவிளையாடல்? மறுநாள் எல்லாப் பரிகளும் நரியாகி ஊளையிட வைக்க இருந்தவர் பணம் வாங்குவாரா?
  அப்புறம் மதிரை மக்களுக்கெல்லாம் அடி வாங்கிக் கொடுத்தத் திருவிளையாடலுக்கும் இதுதானே அடிப்படை! 

  8) தங்கள் கூற்று:

    //   ஏறி எனும் சொல் இருக்கும் போது எப்படி எல்லையாகும்  //
   //   குடநாடு என்றால் குடகு (கர்நாடகம்) அல்ல என்கிறீர்களே மிசை என்பது உயரத்தில் உள்ள இடத்தை அல்லவே குறிக்கும்  //
  எனது மறுமொழி:

   என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஐயா,
   குட என்பதைப் பற்றி நான் விளக்கி விட்டேன். அதற்கு மேல் சொல்ல வேறொன்றுமில்லை.
   கழி, மிசை, வரை, ஏறி போன்ற சொற்கள் தங்களை வாட்டுகின்றன. கழி என்ற சொல்லை சங்க இலக்கியங்களில்
   இருங்கழி, பெருங்கழி, கொடுங்கழி, வாங்குகழி போன்ற எத்தனையோ சொல்லாட்சிகளில் "துறை" என்ற பொருளில் காணலாம்.
   அதை விரித்தல் தேவையில்லை என்றே விடுக்கிறேன்.
   வரை என்பதற்கு "இடம்" என்ற பொருளுமுண்டு. வரை என்றால் மலை என்று கருதவேண்டாம்.
   இன்னுஞ் சொல்லப்போனால் - நீங்கள் சொன்ன பொருள்களில் "மூங்கில்" என்ற பொருளைக் குறித்தீர்கள்.
   இறைவன் பெருந்துறையில் உள்ள ஒரு மூங்கிலில் ஏறி நின்று மின்னொளி காட்டினான் என்று கூடப் பொருள் கொள்ளலாமே!
   வரை என்றால் மலைதான் என்ற நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிச் சிந்தித்தால் நான் சொல்லவருவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
   இங்கே ஏறுதல் என்பது எழுதல், எழுந்தருளுதல் என்பதாகும். பத்தி இலக்கியம், மாந்தக் காதல் இலக்கியம், புற இலக்கியம் போன்ற 
   ஒவ்வொன்றிலும் பொருளின் தன்மைகளில் மாற்றம் உண்டு என்பதை நீங்கள் அறியதாவரல்ல.
   ஒருத்தன் மேல் வேலன் வந்து ஏற, வேலனாட்டம் ஆடினார் என்றால், அந்த ஆள் மேல் முருகன் ஏறியா நிற்கிறான்.
   ஏறி விளையாடு என்ற வழக்கில் பேசுகிறோமே - அங்கெல்லாம் உயரம் வருவதில்லை என்பதையும் காணவேண்டும்.

   "குடநாடதன் மிசை" என்பதை குடகு மலைக்கு மேலே என்று நீங்கள் படிக்கிறீர்கள்.
   அது அல்ல என்பதும் குட என்பதும் திசையைக் குறித்தது என்பதும், மிசை என்பது "அந்த இடத்தில்"
   என்றும் பொருளாகும்  என்பது என் கருத்து. நிலத்தில் நடக்கிறோம். நிலமிசை நடக்கிறோம் என்று சொல்வதன்
   தன்மையே அங்குப் பொருந்தும்.   "சிந்துநதியின்மிசை நிலவினிலே"  என்ற பாரதியாரின் சொற்களையும் காண்க.
   
    
   9)

 //
கொங்கு நட்டு பெருந்துறை குடாநாட்டிலிருந்து வரும் குதிரைகளின் இறக்குமதியாகும் வழியில் உள்ள ஓர் ஊர் எனல்லம் 
//
கோகழி - கருநாடக நாடு, பெருந்துறை-கொங்கு நாடு என்ற நிலையில் இருந்து நீங்கள் மாறமாட்டீர்கள். தமிழ்நாட்டில்
ஆராய்ச்சியாளர்கள் பெருகி, நல்ல ஆராய்ச்சி மன்றங்கள் உருவாகி நமக்கு நல்வழி காட்டுதல் வேண்டும்.

//

கட ல் வழி  வந்த குதிரை என எங்காவது உள்ளதா
கிடைத்தால் உள்நாட்டுக் குதிரைகளை வங்கக் கூடாதா? 
//
ம்ம்ம்ம்... நான் போய், கோச்சடையான் படம் பார்க்கப் போகிறேன். அதில் கூட குதிரைகள் அரேபியா/பெர்சியா பகுதியில் இருந்து
பெருவாரியாகக் கப்பலில் இறக்குமதியானதை ஒத்துக்கிட்டாங்களாம் :-))

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
========================================================================




Sunday, July 31, 2011

கணேச கிளியம் - தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்

நூற்பெயர்: கணேச கிளியம்
வகை: இலக்கணம் - 23ஆம் நூற்றாண்டு
"தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்" பற்றியது,
நூலாசிரியர்: நாக.இளங்கோவன்
பதிப்பாசிரியர்: தமிழ்ப்பூட்டன் கு.கே.இராமநாத சேர்வை

நூற்குறிப்பு:


இந்நூல் 23 ஆம் நூற்றாண்டில் விளங்கிய உயர்ந்த
தமிழாராய்ச்சி மரபுகளைத் தொகுக்கும் தமிழாராய்ச்சி
மரபு இலக்கண நூலாம். மெல்ல மெல்ல உருவாகி
வந்த இந்தத் தமிழாராய்ச்சி மரபு கணேசபுலவர் என்ற
தொல்பெரும் புலவரால் பெரிதும் ஓம்பப்பட்டதாகும்.
அதனாலேயே இவ்விலக்கண நூல்
கணேச கிளியம் என்று பெயர்பெற்றிருக்கிறது.

"கணேச புலவர்க்கு ஒப்பாரும் மிக்காரும்
இப்புவியிற் காண்டலரிது" என்று
புகழப்பட்ட கணேச புலவர் அடங்கோட்டு
ஆசானிடம் தமிழ் பயின்றவர். எல்லாவற்றையும்
தப்புத் தப்பாய்ச் சொல்லி அடம்பிடிக்கும்
கலையைக் கசடறக் கற்றுத் தந்த அடங்கோட்டாசாற்குக்
கடமைப்பட்டுள்ளேன் என்று
கணேசகவியில் குறிப்பிட்டுள்ளமை காண்க.

கணேசபுலவர் 23ஆம் நூற்றாண்டில் உலகில்
விளங்கிய அத்தனை மொழிகளின்
இலக்கணங்களையும் இலக்கியங்களையும்
கற்றுத் துறைபோகிய ஒரே புலவர்
என்பதால் இவரை ஊழிப்புலவர் என்றும் வழங்குவர்.

இவரிடம் எந்த மொழி இலக்கிய/இலக்கணக்
கேள்வியைக் கேட்டாலும் இமைப்பொழுதில்
அதற்குத் துல்லியமான விடையையும் அந்த
மொழி வழங்கும் நாட்டைச்
சுற்றியுள்ள 30 நாடுகளின் இலக்கியச்
சான்றுகளையும் வழங்குவார் என்பதே
இவரின் திறத்தினைப் பறைசாற்றுகின்றது.

அஃதோடு ஒவ்வொரு நாட்டிலும் அலையும்
பேய்கள் அடுத்த நாட்டில் போய்ப்பேச முடியாமை
கண்டு இரங்கி அதற்கு ஏதுவாக பேய்மொழிச் செந்தரம்
ஏற்படுத்த அயராத் உழைத்தார் என்று சொல்வார்கள்.

இதற்குத் தோதாக அம்மொழி எழுத்துக்களுக்கெல்லாம்
சீர்திருத்தம் வேண்டி மொட்டை போட்டு
முக்காடிடும் முறையைக் கண்டுபிடித்ததால்
ஆவிஎழுத்தச்சன் என்றும் பெரியோர் புகழ்கின்றனர்.

மேலும் குறிப்புகள் பாகம்-2ல் காண்க.

பதிப்பாசிரியர் குறிப்பு:

காண்டற்கரிய இவ் இலக்கண நூலின்
முதற்பாகத்தைத் தமது கடுமையான
உழைப்பினாற்றேடி இத்தமிழ் உலகிற்கு
நல்கியவர் தமிழ்ப்பூட்டன் என்று
அன்போடு அழைக்கப்படும் கு.கே.இராமநாத சேர்வை
அவர்களாவார். இவர் 25ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
பேரறிஞர்களுள் ஒருவராவார்.
அப்பெருந்தகை காலமாகிவிட்டபின்
பாகம்-2 முதல் 27வரை எங்கிருக்கென்று
கவலைப் பட்டுத் தேடியே தமிழுலகம்
இளைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

நூலாசிரியர் குறிப்பு:

நாக.இளங்கோவன், 24 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர் என்று ஒரு சாராரும், கணேசபுலவர்க்குச்
சமகாலத்தவர் என்று ஒரு சாராரும்
சொல்கின்றனர். எது எப்படியெனினும்
கணேசபுலவரும் நாக.இளங்கோவரும்
ஒருவருக்கொருவர் மாறாத அன்பு பூண்டவர்
என்பதை மட்டும் அவர்களின் பல்வேறு
மின்னஞ்சல்களில் காணக் கிடைக்கிறதென்கிறார்
அறிஞர் கெ.தோ.மீ. (மின்னஞ்சல்
என்ற சொல் "மினஞ்சா" என்ற
சமசுக்கிருதச் சொல்லில் இருந்து தமிழ் கெஞ்சி
வாங்கியது என்று தூய தமிழ்ப்புலவர்
கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது;
மினஞ்சா > மின்னஞ்சா > மின்னஞ்சல்).

இளங்கோவன், கணேசபுலவர் ஆகியோர்
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள
நகுளாச்சி என்ற பகுதியில் வாழ்ந்து
தமிழ்த் தொண்டாற்றியவர்கள் என்று ஒரு
சில பகுதிகளில் புராணக் கதை கட்டி
விடுவார்களுமுண்டு.

இளங்கோவன் என்ற பெயர் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்ற வடசொல்லில் இருந்து தமிழுக்குக்
கள்ளத்தோணியில் வந்திறங்கியது என்று
கணேசகிளிய மரபினர் மிகத்தெளிவாக
நிறுவியிருக்கின்றனர் என்பதே
இம்மரபின் புகழைச் சொல்லா நிற்கும். இந்த
நூலுக்கு உரை வகுக்க எந்த அறிஞராலும்
எந்தக் காலத்திலும் முடியவில்லை என்பதால் நூலாசிரியரின்
வழித்தோன்றலான ஆறாம் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்பவர் வேறுவழியின்றி எழுதியிருக்கின்றார் என்று
அறியமுடிகிறது. மேலும் குறிப்புகளை
பிற பாகங்களில் கண்டுகொள்க.

பாயிரம்:

இவ் இலக்கணத்தின் பெருமையறிந்த
தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக
வாழ்த்தி பன்னூறு பாயிரம் தந்ததால்
எந்தப் பாயிரத்தை முன்னே வைப்பது
என்று குழம்பியும், இலக்கணத்தை விட
பாயிரங்கள் நீண்டுவிட்டதாலும்
அடக்கம் கருதி பாயிரத்தை ஆசிரியர்
நூலோடு சேர்க்கவில்லை என்றும் அறிக.

கடவுள் வாழ்த்து:

ஆங்கிலர் பார்க்கையில் அவர் சிலுவை போற்றி!
ஆதாயம் கிடைக்கையில் பிறையே போற்றி!
அம்மை பார்த்தால் அம்பாள் போற்றி!
அக்கைக் கண்டால் சிவனே போற்றி!
தெரியாவிட்டால் சமணன் போற்றி!
தெளிவைத் துறந்தால் புத்தன் போற்றி!
தேவைப் படுகையில் பெரியார் போற்றி!
தமிழைக் கெடுக்கெனின் பேயே போற்றி போற்றி!!

தந்திரம்-1 - கணேசகுடுக்கு


நூற்பா-1:
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
குடாக்குடு குடுகுடாக் குடகுட

உரை:

கணேசகிளிய மரபினர் தமிழ் ஆராய்ச்சிக்குள்
பாயும்போது தமிழர்களின் பின்யாம
இசைக்கருவியான குடுகுடுப்பையின் ஓசை இயல்பாக
எழும். "அது ஒன்றே போதும் இந்த ஆராய்ச்சிமரபு தெய்வத்தன்மை
வாய்ந்தது என்று சொல்வதற்கு" என்று பேரறிஞர் கொ.மு.செ
கூறியிருப்பது காணத்தக்கது.

ஈற்றுச் சீரான "குடகுட" என்று நூற்பாவில்
சொல்வது குடுகுடுப்பைக்காரர்
அன்றோ மறுநாளோ பகற்பொழுதில்
வீட்டுக்கு வந்து "கழிப்புக் கழித்தல்"
செய்வதையே குறிக்கிறது என்றும், அதன்படி
தமிழாராய்ச்சியில் தப்பித் தவறி யாரும்
"இது தமிழ்ச்சொல்" என்று சொல்லிவிட்டால்
அச்சொல்லுக்கும் அவருக்கும் கழிப்புக் கழிக்கும்
மரபையே இது குறிக்கிறதென்பதை நிறுவுகிறது என்று
சீலசிறீஆர்ப்பொலா கூறியிருப்பதை அனைவரும்
ஏற்றுக்கொள்கின்றனர். இதன் இலக்கணச் சிறப்பை,
ஈற்றடியில் மெல்ல மெல்ல மெலியும் டகரத்தில்
இருந்து அறிக.

தந்திரம்-2 - க'சிகாமணி

நூற்பா-2:

அள்ளி வீசுதலா யிரமாந் தலை
யாயிரம் வீசுதற் போல!

நூற்பா-3:

அள்ளி கிள்ளி உள்ளி நள்ளி!

உரை:

நூ-2ல் அள்ளி வீசுதல் என்பது யார் என்ன
எழுதுகிறார்கள் என்பது பற்றி
அக்கறை கொள்ளாமல், குறிப்பாக 247க்குட்பட்ட
தமிழைப் பற்றிப் பேசும்போது அதைத் தாண்டி
உலகில் இருக்கும் எல்லா எழுத்துக்களைப்
பற்றியும் ஆயிரம் மின்னஞ்சல்களுக்கு அள்ளி
வீசுவதாகும்.

கோட்டை மதிலில் அம்புகள் அள்ளி வீசுதற்கு
வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை ஆழ்ந்து கவனிக்க.
அத்தன்மையது ஈதென புலவர் கூறுவர். ஆயினும்,
வலைநாட்டு வெண்ணாப்புலவர் ஒரு நுண்ணிய
வேறுபாட்டைக் குறிப்பிடுவர்.

அஃதாவது, கோட்டை மதிற்சுவரில் இருந்து எறியப்படும்
பன்மை அம்புகள் கோட்டைக்குப் புறத்தே உள்ள
எதிரிகளைப் போய்ச் சேரும் எனவும்,
கிளியமரபினர் அள்ளி வீசும் அம்புகள் கோட்டைக்கு
உள்ளுக்கே அம்புகள்எய்தும் தன்மையன என்பதுதான்
அவ்வேறுபாடு என்று கூறுவர்.

தலையாயிரம் என்று சொன்னது தமிழுலகின்
மிகத் தொன்மமான ஆயிரந்
தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்ற
கதையைக் குறிப்பதாகும். அப்படியான
வியக்கத் தக்க மரபுகளைக் கொண்ட கிளிய மரபு
தமிழாராய்ச்சியில் உயர்ந்தோங்கி நின்ற காலம்
23ஆம் நூற்றாண்டாகும். 23 என்றாலே அக்காலக்
கட்டத்தில் சிரிப்புக்குப் பெயர்போன திரைப்படங்கள்
ஓடின என்பது உள்ளுறை உவமமாக இந்நூற்பாவில்
தொக்கி நிற்கிறதென்பர் பெரும்புலவர்.

நூ-3 ஒரு சிறந்த சூத்திரம் என்று காகசாமி அவர்கள்,
நிலவில் தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த
குறிப்பில் எழுதியிருக்கிறார். அஃதாவது, அள்ளி
என்ற சொல்லுக்கு நூ-2 விளக்கம் கூற, அப்படி
அள்ளி வீசும் அஞ்சல்களில் ஏதேனும் தமிழுக்கு
இனியது என்று கண்டால், கண்டமாத்திரம் கிள்ளி விட்டுப்
பின் எறிவது என்ற உயர்ந்த மரபை தமிழ்க்குலம் போற்றியது வியக்கத்தக்கதாகும்.

இங்கே கிள்ளி என்ற சொல்லாட்சியை
இலக்கண ஆசிரியர் உருது மொழியில்
இருந்து ஒத்திக்கு வாங்கி வந்து
பயன்படுத்தியிருக்கிறார் என்று நக்கீரர்
பரம்பரையில் வந்த அத்தனைப் புலவர்களும்
பண்ணோடு புகலுவதைக் கவனிக்க.

உள்ளி என்பது, இப்படி அள்ளி கிள்ளியவற்றை
உள்ளிடுதல் என்ற வினையைக்
குறிக்கிறது. நள்ளி என்பது இப்படிச் செய்ததால்தான்
தமிழ் ஆராய்ச்சியின் தரத்தை அழிவுக்குக் கொண்டு
செல்ல ஏதுவாக பல நட்புகளை இந்த மரபு ஈட்டித்
தந்ததை விவரிப்பதாக அமைகிறது. இந்தத் தந்திரத்தின்
பயனைக் குறிக்கும் சொல்லாக நள்ளி என்ற
சொல்லை அறிஞர் கருதுவர்.

இந்த "அள்ளி கிள்ளி"யை க'சிகாமணி
தந்திரத்தின் ஒரு உத்தியாக ஆசிரியர்
நாட்டியிருக்கிறார் என்று சிலரும்,
இல்லை இல்லை ஆசிரியர் இதனைத் தனியே
ஒரு தந்திரமாக வைத்தது நாளடைவில்
ஒரு தந்திரத்தின் உள் அமையுமாறு
ஆகிவிட்டது என்று சிலரும் ஆதாரங்
காட்டுதற் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

தந்திரம்-3: கணேசமெய்

நூற்பா-4:

மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய்
மெய் மெய்
பொய்

உரை:
ஒரு பொய்யை மெய் என்று சொல்வதற்கு
கணேசகிளிய மரபினர் கையாளும் தந்திரத்தை
எடுத்தியம்புமாறு இந்நூற்பா அமைந்திருக்கிறது.
இது நூற்பாவா சித்திரகவியா என்ற பட்டிமன்றம்
இன்னும் தமிழாராய்ச்சி உலகில் ஓய்ந்தபாடில்லை.

இதைச் சித்திரகவி என்போர் மெய் என்று 27 முறை
எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இது
தமிழ் சோதிட/வானியலில் சொல்லப்பட்டிருக்கும்
27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்று அறுதியிட்டுச்
சொல்வர்.

என்னையெனின், ஒரு பொய்யை
மெய் என்று சொல்ல 27 நட்சத்திரங்களையும்
சாட்சிக்கு அழைக்கும் மெய்யியல் சார்ந்த
தெய்வீக நூற்பா என்று எல்லாச் சமயப் புலவரும்
சமயக் குரவரும் ஒத்துக் கொண்டிருப்பதே இதன்
திறன் சொல்கின்றதறிக.

27 மெய் அடுக்கினது பொய்யை மெய்யாக்கப்
புனைய வேண்டிய அழுத்தங்களக் கோடிட்டுக்
காட்டலன்றி வேறியாதுமிலை என்று
சிலர் பகுத்தறிவின் துய்ப்போடு
இயம்புதலையும் ஒப்புநோக்கல் தகுமென்க.

ஆயினும், இந்த நூற்பாவை கலைமகள் திருநாளில்
வழிபட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள்
கிளியமரபினர் என்று ஒன்பான் விழாக்குறிப்பில்
காணப்படுவதையும் உற்றுநோக்குக.

நூற்பா-5:

எழுதற்க மெய் பொய் யுரேனசுக்கு!

உரை:
எந்தக் காலத்திலும் எப்படிப் பட்ட
இடர் நேரினும் மெய்யை எழுதாதீர்கள்.
பொய் என்றால் அதனை ஆவணமாகப்
புனைந்து புதன் தொடங்கி யுரேனசு
வரை எல்லாக் கோள்களுக்கும் அனுப்பி வைக்க.

மிக எளிமையான இந்த நூற்பாவை
தமிழாராய்ச்சி மரபினர் உயிரின் மேலாகப்
போற்றிக் கடைப்பிடித்தனர் என்பது வரலாறாய்
ஓங்கி நிற்கிறது.

யுரேனசு வரை பொய் ஆவணத்தைக்
கணேசகிளிய மரபினர் தமிழைத் தொலைக்க
ஆவணங்கள், கடிதங்கள் வழியே அனுப்பிய அந்தக் காலம்
தமிழின் பொற்காலம் மட்டுமல்ல தமிழாராய்ச்சி உலகம்
கொடிகட்டிப் பறந்த காலமாகும்.

அந்நாளை, தமிழர்கள் மறக்காமல் இருக்க
யு.மு, யு.பி (யுரேனசுக்கு முன், பின்) என்ற ஆண்டுக்
கணக்கைத் தொடங்கி இருப்பது தமிழாராய்ச்சி
மரபின் புகழைக் கூறா நிற்கும்.

தந்திரம்-4 - கணேசநகை

நூற்பா-6:

பொய்யில கேட்கின் பொய்யில கேட்டோய்
பொய்யில சொல்வான் முனைவன் அல்லன்
முனைவனுமாயின் தமிழினில் அல்லன்
தமிழினில் ஆயின் அவன் தமிழ் பொய்யேஎ!

உரை:

கணேசகிளிய மரபினரின் தமிழாராய்ச்சி
நேரத்தில் யாராவது வந்து "ஐயா, இது இப்படி
இருக்கலாங்களா" என்று சொன்னால்
"யாரது, நீ ஒரு முனைவரா?" என்று எள்ளி
நகையாட வேண்டும். அஃதாவது முனைவர்
பட்டம் பெற்றவரா? இல்லையெனில்
தள்ளிப்போ என்று சொல்லவேண்டும்.
இதுவே தமிழாராய்ச்சி தருமம் ஆகும்.

அப்படியும் ஆமாம் ஐயா நானும்
ஒரு முனைவன் என்று சொன்னால்
கானா நாட்டு பானா அறிஞர் என்ன
சொல்லியிருக்கிறார் தெரியுமா?
என்று கேட்பார்கள். தெரியும் ஐயா
என்று சொன்னால் - ஏ-ஏ-ஏ-ஏ
கானா தெரியும்னா -
உன்க்குச் சீனா நாட்டு மூனா அறிஞர்
தெரியுமா? என்று பாடிச்
சிரிப்பார்கள் கிளியமரபினர்.

அதையும் தாண்டி தெரியும் என்பதை நிறுவினால் -
"நீ தமிழில் முனைவர் பட்டம் வாங்கினியா?"
என்று முறைப்பார்கள். அரசாங்கத் தமிழ் வேலை
பார்த்தியா என்பார்கள்!

அதையும் தாண்டி ஆமாம் தமிழில்
வாங்கியிருக்கின்றேன் என்று
யாருஞ் சொன்னால் ஏற இறங்கக்
கண்ணைப் பார்ப்பார்கள். இதற்கு
நிறைய பட்டறிவும் துய்ப்பறிவும் தேவை.
(இந்தக் கண்பார்க்கும் வித்தையைக்
கற்றுக் கொள்வது கடினம். அரைகுறையாகக்
கற்றுக் கொண்டு அல்லாடும்
கிளியமரபினரைக் கண்டால் புரியும்)

கண்கள் கெஞ்சின என்றால்
ஏற்றுக்கொள்வர். மாறாக கண்களில்
தமிழோ அறிவோ தெரிந்தால்
"சீ போ - நீ பொய்" என்ற கவிதையைப்
பாடி அனுப்பிவிடுவார்கள்.

இஃது தமிழாராய்ச்சி மரபின் மிக முதிர்ந்த
நிலையைக் காட்டுகிறது என்பர் அறிஞர்.

தமிழ்நாட்டிலே தமிழ் முனைவர் பட்டம்
வாங்கியிருந்தாலும், பட்டம்
வாங்கினவருக்குத் தமிழ் தெரிந்தால்
அவரை இந்த ஆராய்ச்சி மரபு
ஏற்றுக் கொள்ளாது என்பதுதான்
இந்நூற்பாவின் உட்கருத்தாகும்.

ஏனென்றால் கிளியமரபினருக்குத் தெரியும்,
தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம்
பெறுதற்குத் தமிழே படிக்க வேண்டியதில்லை என்பது.
அதையும் மீறி தமிழ் கற்று முனைவரானவர்
உளர் என்பதும் அவர்கள் பாடு திண்டாட்டம் என்பதும்
அவரறிவர். இந்த அரிய கருத்து இந்நூற்பாவில்
இறைச்சியாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்த
புலவர்கள் இதனை எல்லாப் பல்கலைக்
கழகங்களின் பாடத்திட்டத்திலும்
சேர்த்திருக்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தியாம்.

தந்திரம்-5 - கணேசகிளியம்

நூற்பா-7:

கிளி பிடி கிளி பிடித்தக் கிளி

நூற்பா-8:

பிடிகிளிச் சொறிவளர்ச் செறிகிளி
எறியிரு தருமொரு வழி

உரை:

கிட்டற்கரிய இந்த இலக்கண நூலுக்குப்
பெயரைத் தந்த தந்திரம் இஃதென்பது
இத்தந்திரத்தின் சிறப்பு. இதில் தமிழாராய்ச்சி
செய்து எடுக்கும் முடிவுகளைப்
பற்றிய ஒரு முறை விளக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் பல முறைகள் பிற
பாகங்களில் காணப்பெறலாம்.

தமிழரின் தொன்மையான வழக்கங்களில்
ஒன்று கிளியிடம் சீட்டெடுக்கச்
சொல்லுதலாகும். இந்த முறையை ஒரு சொல்
தமிழா அல்லது சமசுக்கிருதமா
என்று கண்டறியப் பயன்படுத்தி
வெற்றி கண்டவர் கிளியமரபினர்.

"கிளி பிடி கிளி பிடித்தக் கிளி" என்றது
கிளியைத் தேர்ந்தேடுக்கும் முறையைப்
பற்றியதாகும். கொஞ்சம் விரைப்பான கிளியைப்
பிடிக்கக் கூடாதென்றும் அஞ்சும் தன்மை
கொண்ட கிளியே தமிழாராய்ச்சிக்கு
உகந்ததாகும் என்பது முக்கியமானதாகும்.

நூ-8ல் பிடிகிளி என்றது பிடித்த கிளியைக்
கூண்டுக்குள் வைத்துப் பேணுவதைச் சொன்னது.

சொறிவளர் என்றது அந்தக் கிளி
சற்று நோய்வாய்ப்பட்டுச் சொறி சிரங்கோடு
இருந்தால் சொல்லுகின்ற வினையாற்றும்
என்ற நம்பிக்கை பற்றியதாகும்.

செறிகிளி என்றது, அப்படியான கிளிக்கு,
சீட்டு எடுக்கும் கல்வியைக் கிளியமரபினர்
கற்றுத்தருவதைச் சொன்னதாகும்.

எறியிரு என்றது, கிளியின் முன்னர்
இரண்டு சீட்டுக்களை எடுத்துப் போடுவதாகும்.

தருமொரு வழி என்றது, அந்தக் கிளி
அந்த இரண்டில் ஒன்றை எடுத்துத்
தருவதைச் சொல்லியதாகும்.

முக்கியச் செயலாக, வடசொல்லா
தமிழ்ச்சொல்லா என்றறியவேண்டுமானால்
அந்தக் கிளிக்கு முன்னால் கிளிய
மரபினர் இரண்டு சீட்டுக்களைப் போடுவார்கள்.

அந்தக் கிளி எடுத்துத் தரும் சீட்டை
அப்படியே தமிழாராய்ச்சி மன்றத்தில்
படிப்பார்கள். இதுவே "கணேசகிளியம்"
எனப்படுவதாகும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய
விதயம் என்னவென்றால் அந்த இரண்டு
சீட்டுகளிலும் "வடசொல்" என்றே
எழுதிப் போட்டிருப்பார்கள்.

மேலும், ஒரு இலக்கியம் முந்தியதா
பிந்தியதா என்று கண்டுபிடிக்கவும்
இம்முறையைக் கையாளுவார்கள்.
அதற்குத் தனியே இரண்டு சீட்டுகள்
வைத்திருப்பார்கள். அந்த இரண்டு
சீட்டுகளிலும் "பிந்தியது" என்றே
எழுதித் தயாராக வைத்திருப்பார்கள்.

கணேச கிளியம் - பாகம்-1 முற்றிற்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்