Pages

Friday, December 15, 2000

சிலம்பு மடல் 33

சிலம்பு மடல் - 33
கண்ணகியின் வரமும்! இளங்கோவடிகளின் அறிவுரையும்!

வஞ்சி: வரம்தருகாதை:

வாழ்த்திய கடவுளின் கோயிலை மும்முறை வலம்வந்து முன் நின்றான் சேரன்! அச்சமயம் கோயில்விழாவில் கலந்து கொண்ட, சிறையில் இஆருந்த விடுவிக்கப்பட்ட ஆரியர்களும், அதன் முன்னரே சிறையிருந்து விழாமுன்னிட்டு விடுவிக்கப்பட்ட பிற அரசரும், குடகுநாட்டுக் கொங்கரும், மாளவ நாட்டு மன்னரும், கடல் சூழ்ந்த ஆஇலங்கை அரசனான கயவாகு மன்னனும், 'ஒவ்வொரு வருடமும் சேரன் செய்யும் இந்த அரிய விழாவின் போது எம் நாட்டிலும் யாம் செய்வோம்; எமக்கும் வந்து அருள் செய்வாய்!' என்று வேண்ட, கண்ணகியும் 'அங்கனமே வரம் தந்தேன்' என்று கூற அனைவரும் வீட்டின்பம் பெற்றோர் போலானாராம்! ஈழ நாட்டிலே கண்ணகிக்கு கோயில் எடுத்தான் கயவாகு. இன்றும் இஆருக்கிறது.

"வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் நின்றோன் முன்னர்,
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் ஆலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட்டு ஆங்கண் ஆஇமைய வரம்பனின்
நல்நாள் செய்த நாள்அணி வேள்வியில்
வந்துஈக என்றே வணங்கினர் வேண்ட,
'தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒருகுரல்...."

சேரமன்னனுக்குக் காட்சி, சேரமகளிருக்கு அன்பழைப்பு, ஏனைய பல மன்னர்களுக்கு வரம் அளித்துப் பூரித்துப் போன கண்ணகியார், அவ்வேளை அங்கிருந்த நூலாசிரியர் இளங்கோவடிகளிடமும் பேசினாராம் தேவந்தி என்ற பெண்மணி மேல் தெய்வமாய் ஏறி நின்று! அதை அடிகளார் கூறுகிறார்,

'யானும் (ஆஇளங்கோவடிகளாகிய நானும்) கண்ணகி கோயிலுள் சென்றேன்; என் எதிரே பத்தினித் தெய்வம் தேவந்தி மேல் விளங்கித் தோன்றி, "வஞ்சியிலே, அரண்மனை அத்தாணி மண்டபத்திலே, உன் தந்தையின் அருகிலே அமர்ந்திருந்த உன்னை ஒரு நிமித்திகன் பார்த்து, அரசனாக வீற்றிருக்கும் அழகிய இலக்கணம் உனக்கு உண்டு என்று கூற, உன் அண்ணனான குட்டுவன் மனம் வருத்தமடைய, அம்மனவருத்தம் அவனுக்கு ஒழிய துறவியாய் ஆனாய்; துறவியாய் ஆகி, வீட்டுலக அரசினை ஆளும் மன்னவன் ஆனாய்" என்று என் வரலாற்றினை உரைத்தாள்' என்று.

"யானும் சென்றேன் என்எதிர் எழுந்து
தேவந்தி கைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக்
கொங்குஅவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன்செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்ஆஇடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தம்ஆஇல் ஆஇன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என்திறம் உரைத்த ஆஇமையோர் இளங்கொடி...."

கண்ணகியம்மை இஆளங்கோவடிகளாருக்கு தேவந்தி வாயிலாக உரைக்க, நமக்கும் நம்முன்னோருக்கும் பின்னோருக்கும் அழியாச் செல்வத்தை விட்டுப் போன சிலம்பரசர் இளங்கோவடிகளார், நமக்கும் சில அறிவுரைகளையும் விட்டுப் போகிறார்! ஒப்பற்ற அவை நம் பழம் பண்பாடு கூறுகிறது!

'கண்ணகித் தெய்வத்தின் சிறப்பினை விளக்கிய நல்லுரையைத் தெளிவுறக் கேட்ட மேன்மை மிக்க நல்லவர்களே! வளங் கொழிக்கும் ஆபெரிய உலகில் வாழும் மக்களே!'

"தன்திறம் உரைத்த தகைசால் நல்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!"

பிறர்க்குக் கவலையும் துன்பமும் செய்யாது நீங்குங்கள்;
தெய்வம் உண்டென உணருங்கள்;
பொய்பேசாதீர்கள்! புறங்கூறாதீர்கள்!
ஊன் உண்ணாதீர்கள்; கொலைசெய்யாதீர்கள்;
தானமிடுங்கள் தவம் செய்யுங்கள்;
செய்நன்றி என்றும் மறவாதீர்கள்;
தீயோர் நட்பை விலக்குங்கள்;
பொய்ச்சாட்சி சொல்லாதீர்கள்!
நல்லோர் அவை நாடுங்கள்;
தீயோர் அவை தப்பிப் பிழையுங்கள்!
பிறர் மனை விரும்பாதீர்கள்.
துன்பப்படும் உயிர்களுக்கு உதவி செய்யுங்கள்!
இல்லறம் விரும்புங்கள்; பாவம் புரியாதீர்!
கள், களவு, காமம், பொய், பயனில சொல்தல் ஒழியுங்கள்.

இளமையும், செல்வமும், உடலும் நிலையற்றவை! உள்ளநாள் குறையாது; உங்களை வந்து சேரக்கடவன சேராது நீங்கா! அறம் செய்யுங்கள்!!

"பரிவும் ஆடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன்ஊண் துறமின்; உயிர்க் கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு ஆகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழைஉயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
ஆளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேயத்து உறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்."

திருத்தகு நல்லீர் என்று நம்மை விளித்து நமக்கு நல்லுரைகள் கூறி, காப்பியத்தை நிறைவு செய்கிறார் இளங்கோவடிகள். என்னே ஒரு கடமை யுணர்வு!!

புறத்துறை வழி நின்று போர்த்துறைகளை செய்து முடித்து கங்கை கடந்து சென்று வென்று வந்த வேந்தன் செங்குட்டுவன் சிறப்பு கூறும் வஞ்சிக்காண்டம் நிறைவுற்றது.

"புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்குஆரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டிக்
கங்கை பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனொடு ஒருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம்முற் றிற்று."

வஞ்சிக் காண்டம் மட்டும் நிறைவுறவில்லை! நம் நெஞ்சில் என்றும் நீங்காது வாழும் கண்ணகி, கோவலன், மாதவி, பாண்டியன், பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன், புகார், மதுரை, வஞ்சி என்று பல சிறப்பினைப் படிக்கத் தந்த இந்த சிலம்புக் காப்பியமும் நிறைவு பெறுகிறது.

'தமிழ் மரபாலே கண்ணாடியில் உயர்ந்த பெரிய மலையைக் காட்டுவார் போலக் கருத்துகளைத் தோற்றுவித்து, மணிமேகலை என்னும் காப்பியத்தில் உரைக்கப்படும் பொருளுடன் தொடர்புடையதாகிய சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுப் பெற்றது'
என்று சிலம்பின் நூல் கட்டுரை உரைக்கும்போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது. நம் நெஞ்சை அள்ளிக் கொண்ட இந்த சிலப்பதிகாரம் நிறைவடைகிறது.

"......தெரிவுறு வகையால் செந்தமிழ் ஆயற்கையில்
ஆடிநல் நிழலின் நீடுஆருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்."

நிறைவு பெறும்போது இந்த காப்பியத்தை இன்னும் எத்தனை தடவை படித்தாலும் நான் அள்ளிக் கொள்ள ஆயிரமாயிரம் கருத்துக்கள் புதையலாய் கொட்டிக் கிடக்கின்றன! எத்தனை முறை படித்தாலும் என்னை அள்ளிச் செல்லும் இந்த காப்பிய மடல்களை நிறைவு செய்யும்போது என் உணர்வுகள் சற்றே அசைகின்றன.

சிலம்பு மடல்கள் முற்றும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-2000

சிலம்பு மடல் 32

சிலம்பு மடல் - 32 கண்ணகி கோயில்!

வஞ்சி:
நடுகல் காதை, வாழ்த்துக் காதை;

முப்பத்திரண்டு திங்கள்கள் வீட்டையும் நாட்டையும் பிரிந்து பெரும்போர் செய்து வெற்றியோடும், சிலை வடிக்க கல்லொடும் வந்த சேரப்படையினரில், போர்க்களத்திலிருந்து வாராதவர் எத்தனை பேரோ ?

மீண்டு வந்தவர் வீட்டில் எல்லாம் மகிழ்ச்சி!

மாண்டு போனவர் வீட்டில் எல்லாம் துயரம்தான் ஆஇருந்திருக்கும்; இதோ வந்துவிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலேயே பலருக்கு சில நாட்கள் கழிந்திருக்கக் கூடும்! பின்னர் புரிந்திருக்கக் கூடும்.

மீண்டு வந்த ஆடவனை அணைத்துக் கொண்ட அவன் காதலியின் கொங்கைகள், அவன் விழுப்புண்களுக்கு ஒத்தடம் கொடுக்க அவ்வாடவனுக்கு அதை விட வேறு மருந்து என்ன வேண்டும்? இணைந்த காதலர்கள் இஆன்பத்தைக் கொண்டனர்! கொடுத்தனர்!

"வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர்
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டுஎழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பகமும்
மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுஉறீஆ...."

வஞ்சி திரும்பும் வழியில், தான் அடக்கிப் பிடித்து வந்த கனகனையும் விசயனையும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொண்டு காட்டச் சொல்லியிருந்தான் நீலன் என்பானிடம் சேரன்!

அரண்மனையும், நாடும் மகிழ்ச்சியில் களித்திருக்க, அரசவையிலே மன்னன் சேரன் செங்குட்டுவன்! அவன் முன் நீலன் என்பான்! அவனுடன் வந்தவன் மறையோன் மாடலன்.

சேரனின் வெற்றியை, கனக விசயர்களை இழுத்துக் கொண்டு சோழனிடமும் பாண்டியனிடமும், நீலன் சென்று கூற, அப்போது 'எதிர்த்து நின்று போராட வலுவில்லாமல், வாளையும் வெண்கொற்றக் குடையையும் போட்டுவிட்டு சாதலுக்கு அஞ்சி தவக்கோலம் கொண்டு உயிர்தப்பி ஓடிய இஆந்த ஆரியர்களைச் சிறைபிடித்து வந்தது சேரனின் பெரிய வீரமா?' இஆல்லை என்றான் சோழன்! நான் கேட்டது இல்லை; புதிது எனக்கு என்றான் பாண்டியன்! எள்ளி நகையாடினர் இருவரும்!

சேரனுக்கு சினம் ஏற்பட்டிருக்கலாம்! ஆனால் தமிழர்கள் என்று பார்க்கும்போது, சேரனுக்கும், சோழனுக்கும், பாண்டியனுக்கும், வடநாடும் அதன் ஆரிய அரசர்களும் ஒரு துரும்பாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்ற சேதியைத்தான் தமிழர்க்கு சிலம்பு சொல்கிறது.

தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்கு ஏற்பட்டபோது சேர சோழ பாண்டியர்கள் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை! இந்நாளில் தமிழர் என்று சொல்லிக்கொள்ளவே அய்யம் கொண்ட தமிழர் போல் அந்நாள் தமிழர் இஆல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

"அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க,
நீள்அமர் அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக்
கொல்லாக் கோலத்து உயிர்உய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றுஎனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்....

அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோ ர் தம்மேல்
கொதிஅழல் சீற்றம் கொண்டோ ட் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேல் செழியன்;என்று
ஏனை மன்னர் ஆருவரும் கூறிய..."

இதை நீலன் சேரனிடம் சொல்ல, சேரன் சினம் கொண்டான்! சோழ பாண்டியர்கள்பால் வெறுப்புற்றான்! வெறுப்பு போராக ஆகிடுமோ என்று அய்யுற்று, சினம் கொண்ட சேரன் சினம் தவிர்க்க, ஆட்சிக்கு வந்து அய்ம்பது ஆண்டுகள் ஆன சேரனே, மறக்கள வேள்வியிலேயே ஆண்டுகளைக் கழித்த சேரனே, அறக்களவேள்வியினைச் செய்வாயாக! சோழ பாண்டியர்கள் மேல் சினங்கொள்ளாதே! சினந்து மீண்டும் படையெடுக்காதே! வேண்டாம் விட்டுவிடு, என்று பலவாறு எடுத்துரைத்தான் மாடலன்.

"வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந்து ஆரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை!..."

அறிவுரைகள் பல கேட்ட மன்னன் சினம் தவிர்த்து அறவேள்விகள் செய்தான்! சிறையில் இருந்த ஆரிய அரசர்களை விடுவித்தான்! அவர்களுக்குப் பரிவுடன் ஆவன செய்தான் வில்லவன் கோதை கொண்டு! சிறையில் இருந்த வேறுபல கைதிகளையும் விடுவித்தான், கண்ணகிக்கு கோயில் கண்ட விழாவினிலே!

இந்நாளிலும், சில முக்கிய விழாக்களின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப் படுவதைப்போலே!

சிற்றரசர்கள் கப்பம் கட்ட வேண்டாம் என்று அறிவித்தான், அமைச்சர் அழும்பில் வேள் கொண்டு!

இக்காப்பியத்தில் சோழநாட்டில் இந்திரவிழா வின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், சேரநாட்டில் கண்ணகி கோயில் மங்கலம் செய்தபோது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், தமிழர்களின் மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ண ஓட்டத்தை அறியத்தருகிறது.

புறம்போகும் ஆடவரை முறை செய்யாவிடின் நாட்டில் கற்பு சிறவாது என்று சோழனுக்கும், செங்கோல் தவறின் உயிர் வாழாமை நன்று என்று பாண்டியன் மூலம் உலகிற்கும், தமிழர் பால் பழிகூறின் வஞ்சினம் தீர்க்காமல், குடிகாக்கும் மன்னவன் சினம் தீராது என்பதை குட்டுவன் மூலம் வடவருக்கும் உரைக்கக் கண்ணகி காரணமானதால் தெய்வமாகிறாள்!

அத்தெய்வத்திற்குப் பத்தினிக் கோட்டம் செய்தான் சேரன்! இமமலைக் கல் கொண்டு சிலை செய்து, கோயிலெடுத்து மங்கல விழாச் செய்தான், குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக வைத்து ஆண்ட இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் பட்டத்தரசி சோழமகள் நற்சோனைக்கும் மைந்தனாகப் பிறந்த செங்குட்டுவன்.

"வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறுஎன்...."

"குமரியொடு வடஆமயத்து ஒருமொழி வைத்து உலகுஆண்ட
சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன்மகள் ஈன்ற
மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்
பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்......."

கண்ணகிக்கு கோயில் கட்டி விழாச் செய்த மறுநாள், கோயில் விழாவுக்கு வந்திருந்த மன்னர்கள் செலுத்திய காணிக்கைகளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த குட்டுவனை, தேவந்தி சிலரொடு வந்து வணங்கி, கண்ணகியின் சிறப்பு பற்றி கூறி புலம்புகிறாள்!

அப்போது சேரன் செங்குட்டுவன் வியப்புற்று, உணர்ச்சி வயமாகிறான்!

பொன்னால் சிலம்புகட்டி, கொடியாய் மேகலை புனைந்து, வளைபூட்டி, வயிரத் தோடு அணிந்து, பொன்னாலும் பிறவாலும் அணிமணி கூட்டி, மின்னெலெனக் கண்ணகியார் வானில் உயர்ந்து, சேரனுக்குத் தெரிந்தாராம்!

சிரித்த முகத்தோடு சொன்னார் சேரனிடம், 'பாண்டியன் குற்றமற்றவன்! எனக்குப் புகழ் சேர்த்ததனால் நான் அவனுக்கு மகளானேன்!' என்று.

காலகாலத்துக்கும் புகழ்சேர்த்துவிட்ட பூரிப்பு அம்மைக்கு!; சேரப் பெண்களை,'திருமுருகன் குன்றினிலே, எப்போதும் விளையாட நான் வருவேன் தோழியரே! என்னோடு வந்தாடுக' என்று அழைத்தபோது!

"என்னேஆஇகது என்னேஆஇகது என்னேஆஇகது என்னேகொல்
பொன்னஞ் சிலம்பின் புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொந்தோட்டு நாவல்அம் பொன்ஆழைசேர்
மின்னுக் கொடிஒன்று மீவிசும்பில் தோன்றுமால்....."
(வானில் கண்ணகி கண்ட சேரனின் வியப்பு)

"தென்னவன் தீதுஆலன்; தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான்; நான் அவன் தன்மகள்;
வென்வேலான் குன்றில் விளையாட்டு யான்அகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்."
(கண்ணகியம்மன் கடவுளாய் சேரனுக்கும்
பெண்களுக்கும் கூறியது)

சேரனுக்குக் காட்சிதந்து சேரமகளிரை விளையாட அழைத்தும் விட்டு, சேரன் செங்குட்டுவனை நீடுழி வாழ வாழ்த்துரைக்கிறார் கண்ணகியார்!

"ஆங்கி, நீள்நிலமன்னர் நெடுவில் பொறையன்நல்
தாள்தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ்ஒளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள், நீடூழி
செங்குட் டுவன்வாழ்க என்று."

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-2000

Saturday, December 02, 2000

சிலம்பு மடல் 31

சிலம்பு மடல் - 31 கோவல கண்ணகி சுற்றங்களின் துயர்!

வஞ்சி:
நீர்ப்படைக்காதை:

பெரும் போரிலே எதிர்த்தவர்களை அழித்து, வெற்றிக்கு உடன் நின்ற தன் படைகளுக்கு சிறப்பு செய்து, செம்மாந்த சிங்கமாய் வீற்றிருந்தான் சேரன்!

கோவலனை மதுரைப் புறஞ்சேரியில் பார்த்து உரையாடி, பின்னர் புகார் சென்று கோவல கண்ணகியர் பற்றி அவர் உற்றார் உறவினரிடம் கூறிவிட்டு, கங்கை சென்று நீராடி வரச் சென்ற மாடலன் என்ற மறையோன், கங்கைக் கரையினில் சேரனை அவன் பாசறையிலே பார்த்து வணங்கினான்; வணங்கிய தலையை நிமிர்த்திக் கொண்டே, 'மாதவியின் கானல் வரிப்பாட்டு' வடமன்னர்களின் முடியையும் வென்றது' என மாடலன் சொல்ல, மன்னன் வியந்து நகைக்க, மாடலன் தான் மதுரையிலும் புகாரிலும் கண்டன கேட்டவற்றையெல்லாம் சேரனிடம் எடுத்துச் சொன்னான்.

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!..."

(கானல் வரி)

கோவலன் காவிரியைப் போற்றிப் பாடியதில் அய்யம் கொண்ட மாதவி, சினமுற்றுக் கோவலனை அய்யம் கொள்ளச் செய்யப் பாடிய அந்த கானல்வரிப் பாட்டு, அவர்கள் உறவை முறித்து, கண்ணகியை மீண்டும் கூட வைத்து, பின்னர் கோவலனைக் கள்வனாக பழியேற்றி, அவனையே பலி கொண்டு, மதுரை அரசனைப் பலி கொண்டு, அவன் மாதரசியைப் பலி கொண்டு, அந்நாட்டையே பலி கொண்டு, நாடுகள் தாண்டி சேரத்தில் கண்ணகியையும் காவு கொண்டு, சேர அரசனைக் கொண்டு வடவாரியரையும் அழித்து, அவர்களை கூனிக் குறுகிப் போகச் செய்த வரலாற்றை நினைவூட்டுமாறு சேரனிடம் மாடலன் கூறினான்;

"வாழ்க எங்கோ! மாதவி மடந்தை
கானல் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது;......"

மேலும், கண்ணகி கோவலர் துயரம் கேட்டு அவர்களின் உற்றார் உறவினரின் நிலை கூறினான்!

நெஞ்சம் பதை பதைக்கிறது!

காவுந்தி அடிகள் அடைக்கலமாய்த் தந்த கண்ணகி கோவலரைக் காக்கத் தவறினேனே!, என்று கடமை தவறியதாய் வெறுப்புற்று இடைச்சி மாதரி நடு யாமத்தில் தீக்குளித்து உயிர் நீத்தாள்!

பாண்டியன் தவறை அறிந்து சினமுற்ற காவுந்தி அய்யை அவன் உயிர் நீத்ததால் சினம் தணிந்தாலும், கோவல கண்ணகியரை என்னோடு தருவித்து தீப்பயன் விளைத்ததுவோ? என்று எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்!

"அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்,
குடையும் கோலும் பிழைத்த வோஎன
இடை இருள் யாமத்து எரிஅகம் புக்கதும்...."

"தவம்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
....
என்னோடு இவர்வினை உருத்த தோஎன
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்த்ததும்...."

கோவலன் மாய்ந்ததை சோழநாடு சென்று மாடலன் உரைக்க, அவன் தந்தை பெருஞ்செல்வச் சீமான் மாசாத்துவான் தன் செல்வத்தையெல்லாம் தானமாக அளித்துவிட்டு துறவறம் பூண்டான்!

கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி, மைந்தன் மருமகள் துயர் அறிந்து, பிரிவால் ஏங்கி ஏங்கி இன்னுயிரை விட்டார்!

மகள் கண்ணகி மருமான் கோவலன் மரணம் கண்ணகியின் தந்தை மாநாய்கனையும் முனியாய் ஆக்கியது! கோவலன் தாயார் ஏங்கி ஏங்கிச் சாக, கண்ணகியின் தாயார் சேதிகேட்ட மாத்திரம் மாண்டு போனார்!

"கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந் தானமா வான்பொருள் ஈத்துஆங்கு
.....
துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்,
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்துயிர் எய்தி இரங்கிமெய் விடவும்..."

"கண்ணகி தாதை கடவுளர் கோலத்து,
அண்ணல்அம் பெருந்தவத்து ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்துஅறம் கொள்ளவும்
தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி
நாள்விடூஉம் நல்உயிர் நீத்துமெய் விடவும்."

மாதவிக்கு சேதி கிடைத்ததும், தன் அன்னையிடம் தனக்கும் கோவலனுக்கும் பிறந்த குலக்கொழுந்து மணிமேகலையை குலத்தொழில் புரி கணிகையாய் ஆக்காதே என்று கூறிவிட்டு, தான் தன் கூந்தலைக் களைந்துவிட்டு புத்த முனிமுன் துறவறம் பூண்டாள்!

"மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நல்திறம் படர்கேன்;
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர்க் கோலம் காணாது ஒழிகஎன
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறம் கொள்ளவும்..."

அதோடு அச்சேதி கேட்டு வேறு பலரும் புகாரில் துன்புற்றச் சேதியினையும் சொன்ன மாடலனை, சேரன் பாண்டியநாட்டின் நிலை பற்றி கேட்க, பாண்டியநாட்டின் நிலையுரைத்தான் மாடலன்! சோழ நாட்டையும் பற்றியும் அறிந்து கொள்கிறான் சேரன்!

மதுரை மூதூர் தீயினால் வெந்து வீண்போன நிலையில், கொற்கையை ஆண்ட வெற்றிவேற்செழியன் என்ற அரசன், தெய்வமாய்ப் போன திருமாபத்தினியின் சீற்றம் குறைப்பதாய்க் கருதி, பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட பெருந்துயர் என்பதால், ஒரு பகற்பொழுதிலேயே ஓராயிரம் பொற்கொல்லரை உயிர்ப் பலி கொடுத்திருக்கிறான்! ஓராயிரவரைப் பலிகொடுத்த அவன், மதுரையை, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் ஆட்சி செய்திருக்கிறான்!

"கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி,
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்,...."

எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் காட்டுமிராண்டிச் செயலை வெற்றிவேல் செழியன் செய்திருக்கிறான்! கொல்லக் கயவன் கோவலனை 'மாயக்கள்ளன்', 'மந்திரக்கள்ளன்' என்று பொய் கூற, மந்திரம் மயங்கிய காவலரில் கல்லாக் களிமகன் ஒருவன் கொடுவாள் வீசிக் கோவலனைக் கொன்றதே, மடமை பூத்துக் குலுங்கிய மதுரையின் மூடநம்பிக்கையின் மொத்த விளக்கம்!

அதனால் ஏற்பட்ட தீங்கு மறைய இன்னும் ஒரு மூடச் செயலை செய்தான் வெற்றிவேல் செழியன் ஆயிரவரைக் கொன்று!

இது ஏதோ 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் பழமையில் நிகழ்ந்த பண்பாடற்ற செயல் மட்டுமல்ல!

மூடநம்பிக்கை மற்றும் முட்டாள் தொல்லைகள்!

சாதி, சமயம், கடவுள் என்ற பெயரால் இந்நாட்டை ஆட்சி செய்யும் அயோக்கிய செல்வங்கள்!

ஆண்டுகள் ஓடினாலும் அறிவேறாத, ஆத்திரமும் அகங்காரமும் நிறைந்த ஆணவ மலங்களின் அழிவுக் கொள்கைகளால் நிகழும் தீவினைகள்!

இந்த நாட்டில் அறிவு ஆட்சி செய்கிறது அல்லது செய்யும் என்று நம்பும் நன்மானிடர், '1800 ஆண்டுகட்கு முன்னாள்' பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட தீங்கொழிய 1000 பொற் கொல்லரைக் கொன்று போட்ட வெற்றிவேல் செழியனுக்கும், கி.பி 1984ல் இந்திரா காந்தி அம்மையார் சீக்கியன் ஒருவனால் கொல்லப் பட்டதற்குப் பழிதீர்க்க 3000 சீக்கியர்களைக் கொன்று போட்ட, இந்நாள் அரசியல் மற்றும் சமய வாதிகளுக்கும் என்ன வேறுபாடு கூறமுடியும் ?

காலங்களே ஓடி யிருக்கின்றன! காட்சிகள் மாறவில்லை!
படிப்பு வந்திருக்கிறது! பண்பாடு மட்டும் இல்லை!

ஆண்டுக்கேற்ற அறிவு வளர்ச்சி இன்றி, அழிவுக்குகந்த அறிவொடு வாழ நினைக்கும் அடிமாட்டுக் கூட்டமாய் இந்த மண்ணின் மாந்தர் பலர்!

பன்னூறாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாத முடச் சமூகமாய்க் கண்ணுக்குத் தெரிகிறது!

வஞ்சியை விட்டு நீங்கி முப்பத்திரண்டு திங்களில் வடநாட்டுப் படையெடுப்பை வெற்றியாய் ஆக்கிவிட்டு வஞ்சி திரும்பப் புறப்பட்ட சேரன், தனக்கு எல்லா சேதிகளையும் கூறிய மாடலன் என்ற மறையோனுக்கு தனது நிறையான அய்ம்பது துலாம் பொன் தானமாக வழங்கினான்!

மறைசெய்வோருக்கு நிறை நிறையாய் பொருள் கிடைப்பதுவும் சமுதாயத்தில் நாம் காணும் நிகழ்வு. ஆயிரமாயிரமாய் செய்தாலும் அந்த மறையால் மண்ணுக்கு வளம் சேர்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதே நாம் கண்டுகொண்டிருக்கிற சமுதாய நிகழ்வுகள்.

தன் நாடு திரும்புகிறான் சேரன்! கணவனைப் பிரிந்து 32 மாதங்கள் துயரத்துடன் காத்திருந்த வேண்மாளையும், நாட்டுக் குடிகளையும் சேர!

அன்புடன்
நாக.இளங்கோவன்
02-திசம்பர்-2000