Pages

Thursday, January 04, 2018

ஆன்மீகமும் புற-ஆன்மீகமும்

:ஆன்மீகத்தை உங்களுக்கு சொல்லித்தாரேன் என்று ஒரு மராட்டிய நடிகன் கிளம்பியதும், துள்ளியெழுந்து, இது "பெரியார் மண்", "பெருங்காய மண்" என்று உளறித்தவிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் ஆன்மீக மறுப்பு என்பது நாத்திகக்களத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்பு. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றவாறே போனால் எப்படி?
எந்த ஆயுதத்துக்கு எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தி வேண்டாம்?
தமிழ்நெடுவரலாற்றில், அறியப்பட்ட நூல்களில் முதனூலான தொல்காப்பியமே ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன தெய்வம் என்ற பதிவை தாங்கியிருக்கிறது. அதன்பின்னர் முழுநூலாக நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இறைப்பாட்டாக காணக்கிடைக்கிறது. பரிபாடல், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரு நூல்களில் ஆன்மீகத்தை காணமுடியும்.
அதன்பின்னர், கண்ணப்பர், காரைக்காலம்மை, திருமூலர், நால்வர், 63 நாயன்மார்கள், ஆண்டாள் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் என பல்கிப்பெருகி, சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி என விரிந்து, பட்டினத்தடிகள், தாயுமானவர், அருணகிரி, குமரகுருபரர் என தொடர்ந்து, வள்ளலார் வரை கால நெடுகிலும் ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழகத்திற்கு இணையாக வேறொரு மாநிலத்தை மொழியை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது எனுமளவிற்கு ஆன்மீகம் இங்கே பரந்து விரிந்துதான் கிடக்கிறது.
செயினமும் பௌத்தமும் சீண்டிப்பார்த்த போது, யானை சிறு தேங்காயை இடறுவதுபோல, இடறித்தள்ளிய ஆன்மக்கோட்டை இந்த மண்.
இவை எல்லாவற்றையும் கெட்டியான போர்வையை போட்டு மூடிவிட்டு, இது பெரியார் மண், பெரியார் மண் என்று கூவுவது எவ்வளவு பெரிய அறியாமை?
இப்படி, தன்னிலையால், தமிழ்நிலையை புறந்தள்ளி பேசுவதால்தான் மாற்றானும் ஆன்மீகம் என்ற பெயரில் இங்கே கடைபோட கிளம்புகிறான்.
கெயிக்குவாடின் ஆன்மீகத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரே கேள்வி:
ஊரிலும் வீட்டிலும் குலதெய்வம் உள்ளிட்ட எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டே, வரலாற்றில் இருக்கும் முழுமையான தமிழ் ஆன்மீக அடித்தளத்தை நீங்கள் புறந்தள்ளினாலும், நீங்களே ஏற்கிற வள்ளலாருடைய மண் இந்த மண் என்பதை ஓங்கிச்சொல்வீர்களா? வள்ளலாரால் காக்கப்பட்ட மண்ணான இம்மண்ணுக்கு மராட்டியத்திலிருந்து இறக்குமதியாகும் புற-ஆன்மீகம் தேவையில்லை - போடா போ! என்று சொல்வீர்களா?
உங்கள் குறிக்கோள் நேர்மையானது என்றால், தமிழ் ஆன்மீகத்தை மறைக்காமல், புறத்தேயிருந்து உள்நுழையும் புற-ஆன்மீகத்தை தமிழ்-ஆன்மீகத்தால் மறுத்து குரல் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழ்-எதிர்-பிற என்று இருக்க முடியும். அந்தத்தமிழ், வடக்கேயிருந்து வரும் பிற பித்தலாட்ட ஆன்மீகத்தை துடைத்து எறிந்துவிடும்.
இல்லாவிடில், நீங்களும் கெட்டு, இம்மண்ணும் கெட்டு எல்லாமே நாறிப்போக வழிகாட்டிக்கொண்டே இருக்கும்.
வேண்டுமானால், உங்களுக்காக சிறிய இளக்கம் சொல்கிறேன்.
மற்ற யாரையும் உங்கள் பகுத்தறிவின்பாற்பட்டு முதன்மையாக கூறவேண்டாம்; தொன்மையை போற்றுபவரானால், முருகாற்றுப்படை செய்த நக்கீரரின் மண் இது என்று கூறுங்கள். அல்லது அண்மையை மதிப்பவரானால், "வள்ளலாரின் மண்" என்று சொல்லுங்கள். புற-ஆன்மீகரை பார்த்து நீ இதில் யாரடா? என்று கேளுங்கள்.
எது அகம், எது புறம்? என்ற வேறுபாடுகூட தெரியவில்லையெனில் எப்படி
வெல்ல முடியும்?
கூடவே இது பெரியாருடைய மண் என்று வேண்டுமானால் உங்கள் ஆசைக்கு போட்டுக்கொள்ளுங்கள். நான் குறுக்கே வரமாட்டேன்.
ஆனால் மண்ணின் ஆன்ம வரலாற்றை மொத்தமாக மண்ணால் மூட விடமாட்டேன்.
The war between "Nothing vs Everything" is absurd. So the Nothings have to learn to take up Something to fight Everything, and let them take Tamilthing.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4/1/18

No comments: