Pages

Friday, September 21, 2012

மனநிறைவான "மென்தமிழ்" என்ற சொவ்வறை வெளியீடு!


1980களின் பிற்பகுதியில் மெல்லத் தலையைக் காட்டி,
90களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியான
சொவ்வறைகள்/சொவ்வறைச் சேவைகள் சுமார் 3,4 கோடி
உரூவாய்கள் மட்டுமே. இன்று சுமார் 30,000 கோடிக்குச்
சேவைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர்ப் பயன்பாடும்
இருக்கலாம்.

தமிழ்ச் சந்தை என்பது மிகக் குறுகிய வட்டத்தில், அளவில்
அன்றும் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

80களின் இறுதியில் வொர்டுசார், வொர்டுபெர்பெக்டு என்ற
எழுதிகள் புகழ்வாய்ந்தன. ஆங்கிலத்தில் மட்டும் எழுதமுடியும்.
இன்றும் சட்டத்துறையில் வொர்டுசார்/வொர்டுபெர்பெக்ட்
செயலிகளை விடாது வழக்குரைஞர்கள் பயன்படுத்துவது எனக்கு
வியப்பையே ஏற்படுத்துகிறது.

எழுதிகள் சந்தையை மைக்குரோசாவ்ட்டு நிறுவனம் மெல்ல
மெல்ல முழுதாக விழுங்கியது. இன்றுவரை அதன் அலுவப்
புதுக்குகள் உலகில் ஆட்சி செலுத்திவருகின்றன.

90/91/92 காலங்களில் மைக்குரோசாவ்ட்டுவின்
விண்டோசுடன் (3.0?) எம்மெசு வொர்டு செயலியைப்
பயன்படுத்தத் துவங்கியதாக என் நினவு. அப்போது
அதில் எழுத்துப் பிழை, இலக்கணத் திருத்திகள்
இணைக்கப் படவில்லை என்பதே எனது நினைவு.
விண்டோசு 95க்குப்பின்னர் அவ்வசதிகளைப்
பயன்படுத்திய நினைவு இருக்கிறது.

89-90ல் தொடங்கி 22 ஆண்டுகளாக எம்மெசு அலுவப்
புதுக்குகள் சக்கைபோடு போட்டுவருகின்றதென்றாலும்,
கவனிக்க வேண்டிய விதயம், அதுவும் உலக அரங்கில்
தத்தித் தத்தி, கட்டம் கட்டமாகவே வளர்ந்துள்ளது.

1971ல் ஆங்கில எழுத்துப்பிழை திருத்திகள்
கண்டுபிடிக்கப்பட்டுப் பெருஞ்சட்டக் கணிகளில்
பயனுக்கு வந்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில்
எழுத்துப் பிழை திருத்திகள் ஆங்கிலப் பயனர்களுக்கு
நம்பிக்கையளித்ததில்லை. ஏனெனில் மனிதக்
கண்ணுக்கு மிகச்சாதாரணமாகத்
தென்படும் பிழைகளைக் கூட ஆரம்பக்காலத்
திருத்திகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர் ஆய்வு, முயற்சி, உழைப்பு, வளர்ப்பு,
கணித்துறை வளர்ச்சி ஆகியவையே பிழை,
இலக்கணத் திருத்திகளை ஆங்கில உலகுக்கு
வ\ளர்த்துத் தந்திருக்கிறது.

இன்றைய மைக்ரோசாவ்ட்டு வொர்டுடன் பிற
புதுக்குகளிலும், ஆங்கிலப் பிழை திருத்திகள்
இருக்கின்றனவெனில், அவை 40க்கும் மேற்பட்ட
ஆண்டுகளின் தொடர் வளர்ப்பின் முதிர்ச்சியே
ஆகும்.

இதனை எண்ணிப் பார்க்கும்போது மென்தமிழ்
என்ற சொல்லெழுதியின் ஒற்றுப் பிழை,
சந்திப்பிழை, மொழிப்பிழை திருத்தியொடு,
எம்மெசு வொர்டுவில் உள்ள பல/அனைத்து
வசதிகளையும் முதல் மூச்சிலேயே பெற்றுள்ள
மென்தமிழ் என்ற செயலி மிகவும் பாராட்டப்பட
வேண்டிய ஒன்று. எனது தமிழ்ச் சிற்றறிவோடு
சிறிது நான் சோதித்துப் பார்த்தவரை எனக்கு இந்தத்
திருத்திகளில் பிழைகள் தென்படவில்லை.

20+ ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும்
கணித்துறை வெற்றுக் கூலிச்சேவைத் துறையாகவே
வளர்க்கப் பட்டிருக்கிறது. வளர்ந்துவிட்ட
பெருங்கணி நிறுவனங்களான இன்போசிசு,
அடாட்டா கன்சல்ட்டன்சி, எச்சிஎல்,
காக்னிசண்ட்டு, விப்ரோ போன்ற நிறுவனங்கள்கூட
தனது வருமானங்களை கூலி வேலைகளில் ஈட்டுகிறதே
தவிர அவற்றிடம் உலகளாவிய புதுக்குகள் பெயர்
சொல்லும் அளவிற்கு இல்லை.

இந்தக் கூலித்துறையை வைத்துத்தான் இந்தியா
ஒரு "கணி வல்லரசு" என்ற தேசியகீதங்கள்
பாடப்படுவதுண்டு.

படைக்கும் திறனற்ற நாடாக, படைப்புகளில்
கவனம் செலுத்தாத நாடாக, அப்படியே
படைத்தாலும் தேறாத புதுக்குகளைப் படைக்கின்ற
போக்கினையே இந்தியக் கணித்துறை பழக்கிக்
கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு
சொவ்வறைப் புதுக்கு, உலகளாவிய வசதிகள்
கொண்டு தமிழில் வெளிவருகிறது என்பது
மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கது. இதைச்
சொல்லும் அதே வேளையில், இது போன்று,
திருத்திகள் இல்லாது இதற்கு முன் வெளிவந்த
பதமி போன்ற புதுக்குகளையும் அந்தப்
படைப்பு முயற்சிக்காக மனமாரப் பாராட்டவே
செய்கிறேன். கூலிச்சேவை என்பதை விட
படைப்பு என்பதே வலிமையின் சான்று.

மென்தமிழ் என்ற எழுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்
தமிழ்க்கூறுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில்
ஒரு மைல்கல்.

தமிழறிஞர்களும், கணிஞர்களும் ஒருங்கிணைந்தால்
இதனையொத்த சொவ்வறைகள் தமிழில் பல்கிப் பெருகும்.

பயனர் சந்தை என்று பார்க்கும்போது, தமிழக அரசு
நிறுவனங்கள், பதிப்புலகம், மிடையங்கள்/ஊடகங்கள்,
எழுத்துலகம் ஆகியவற்றிற்கு இது மிகப்பெரிதும் உதவி
செய்யும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் தமிழ்ப்பிழைகள்
மண்டிக்கிடக்கின்றன, விளம்பர உலகிலும் தமிழ்ப் பிழைகளே
பெரிதும் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இது
மிக உதவியாக இருக்கும்.

இது தில்லிக் கணியுலகமோ, ஆங்கிலக் கணியுலகமோ
செய்த படைத்து நமது தலையில் திணித்ததல்ல.
தமிழ்நாட்டொருவரின் தனித்தமிழ்ப்படைப்பு.
கூகுளோ, மைக்குரோசாவ்ட்டுவோ செய்து, தமிழ்
வளர்ந்துவிட்டது என்று நாம் பெசிக்கொள்ளுமுன்னர்
தமிழர் ஒருவரின் தமிழ்நாட்டுத் தமிழ்ப் படைப்பு
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இதனைச் செய்தமைக்காக பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
அவர்களையும் அவரின் கணிஞர்களையும்
பாராட்டிப் பெருமையடைகிறேன். எசாரெம் பல்கலைக்கழகம்
இதனை ஆதரித்து உலகத்தரம் வாய்ந்த வெளியீட்டு விழா
செய்திருந்தது மிக உகப்பாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது.

தமிழின் கணிநுட்பப் படைப்பான இது தமிழ்நாட்டுக்குள்

மட்டுமல்லாது, கூகிள், மைக்ரோசாவ்ட்டு, ஆரக்கிள்
போன்ற நிறுவனங்களுடனும், வடநாட்டு மொழிசார்
நிறுவனங்களுடனும் கூட்டுறவு கொண்டு மிக
அகண்ட தமிழ்ச் சந்தையை உருவாக்குதற்கும்
வழிகாட்டியாக அமைந்து, மிகப்பெரிய வெற்றிகளை
ஈட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழர்கள் தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின் பிள்ளைகளுக்கும் வாங்கவேண்டிய சொவ்வறை! http://www.lingsoftsolutions.com/ என்ற தளத்தில் இச்சொவ்வறை
இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்