Pages

Sunday, July 05, 2015

பின்ன சின்ன ஒருங்குறி - துறையறிஞர் கூட்டம் 4/7/15

பின்ன சின்ன ஒருங்குறி முன்னீட்டை ஆய்வு செய்யும் கல்வெட்டு, சுவடிகள், வரலாறு, பழங்கணிதம், நாணயம் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் ஆய்வறிஞர்களின் கூட்டம் நேற்று 4/7 அன்று சென்னைப்பல்கலையில் நடந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் இத்தனைபேரை ஒருங்கே பார்த்ததிலும்,அவர்களோடு கூட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு அமைந்ததையும் பெருமையாகக்கருதுவேன்.

55 குறியீடுகளை ஆய்வு செய்த இவ்வறிஞர்கள், அவற்றில் 18ஐ மட்டுமே நேரடியாக சரி என்று ஏற்பு வழங்கினர். சுமார் 15-17 குறியீடுகளை "பிழை" என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மீதம் உள்ள குறியீடுகளுக்கு வடிவமாற்றம் அல்லது விளக்க மாற்றம் பரிந்துரைத்துள்ளனர். கடந்த மே மாதம் ஒருங்குறியில் சேர்க்கப்படவிருந்த 55 குறியீடுகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, அதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இவ்வாய்வுக்கு வழிவகுத்தது. தமிழக அரசு இப்படிச் செய்திருக்காவிடில் கிட்டத்தட்ட 60-67% குறியீடுகள் தவறானவையாக ஒருங்குறியிற்சேர்ந்திருக்கும். 67% பிழைகள், அல்லது தவறுகள், அல்லது குறைகள் உள்ள ஒரு முன்னீட்டைத் தாங்கிப்பிடித்து, அவற்றைச் சுட்டிக்காட்டியமைக்காக எம்மை ஏளனம் செய்தவர்களும் இன்று அவற்றை ஏற்றுக்கொண்டது எமக்கு மனநிறைவான ஒன்றாகும்.

தொல்லியல் துறையின் புகழ்பெற்ற அறிஞர்களான முனைவர் நடனகாசிநாதன், முனைவர்.எசு.இராசகோபால், முனைவர் சு.இராசவேலு, முனைவர் விசய வேணுகோபால், முனைவர் பத்மாவதி அம்மையார், முனைவர் மார்க்சிய காந்தி, முனைவர் கலா சீதர், முனைவர் பாலாசி, முனைவர் கு.வெங்கடாசலம், முனைவர் சாந்தலிங்கம், முனைவர் தமிழப்பன், உள்ளிட்ட பல தொல்பொருள் அறிஞர்களோடு, பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன், திரு.மணிவண்ணன், திரு.சேம்சு உள்ளிட்ட பலரோடும் நடந்த இக்கூட்டம் மிகச்சீரிய பணியை செய்திருக்கிறது.
 
இதற்காக தமிழக அரசுக்கும், தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கும், சென்னைப்பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
 
கடந்த வருடம் செப்தெம்பர் மாதம் தொடங்கி 7/8 குறைகளைச் சுட்டிக்காட்டி குறைபாடுகளின் தன்மைகளை வெளியிட்டிருந்தேன். ஆனால் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் உத்தமம் அமைப்பும் அவற்றை ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், இன்று மணிவண்ணன் அவர்களே முன்னின்று ஏற்றுகொள்ளும் வகையில் அறிஞர்கூட்ட முடிவுகள் அமைந்தன.
 
 
 
 
 
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 

Wednesday, July 01, 2015

மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள் – ஆசிரியர் இரவிக்குமார்

மணற்கேணி இதாழாசிரியர் திரு.இரவிக்குமாரின் வேண்டுகோள்.
===================================================

வணக்கம்


மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு  ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள்  வெளிவந்துள்ளன.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .

சங்க இலக்கியச் சிறப்பிதழ்; பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ், வங்க இலக்கியச் சிறப்பிதழ், பாகிஸ்தான் இலக்கியச் சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது. 


கிரந்த யூனிகோடு பிரச்சனை; பொருந்தல் அகழ்வாய்வின் முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின் கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது.

கவிஞர் சேரன், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக்  முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும், சிவா சின்னப்பொடியின் தன்வரலாற்றுத் தொடரை வெளியிட்டும் ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது. எம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.

பெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும் நோக்கோடு மணற்கேணியின் இணையாசிரியர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில் அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறது. ஆங்கிலத்தில் வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம். ஆனால் மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரி ரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியிட்டது.
இது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொரு நிகழ்வாகும்.

திரு.இ.அண்ணாமலை, திருமதி.வீ.எஸ்.ராஜம், பேராசிரியர் செ.வை.சண்முகம், பேராசிரியர் கி.நாச்சிமுத்து, முனைவர் விஜயவேணுகோபால், எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர் கார்த்திகேயன், பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி  உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி, ஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் தொடர்ந்து பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில் அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோ, எலியா கனெட்டி, பியர் பூர்தியூ, பர்ட்டன் ஸ்டெய்ன், ரணஜித் குஹா முதலானோரின் சிந்தனைகளையும்; எதுமோன் ழாபேஸ், நிக்கனோர் பர்ரா, எதெல்பர்ட் மில்லர், அஃபூவா கூப்பர் உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியது மணற்கேணி.


தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல், இலக்கியத்தின் மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும்  மதிப்புகொண்ட நண்பர்களின் ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது.

மணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால், இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள் விரும்பினால்


மணற்கேணி புரவலர் :
மணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூ. ஐந்தாயிரம் செலுத்தவேண்டும். உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


மணற்கேணி குழாம் :

மணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம் செலுத்தவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


ஊருணி :

இந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோ, பள்ளிகளுக்கோ, படிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம். ரூ.ஆயிரம் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.


ஆண்டு சந்தா:

ரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.


தொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள் நேரடியாகவே செலுத்திவிடலாம் :

Manarkeni Publication

Overdraft account : 960114000000398
Syndicate Bank, Pondicherry Branch , IFSC Code : SYNB0009601