Pages

Wednesday, November 16, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி3

பகுதி-3 கூடங்குளமும் சேதுக்கால்வாயும்

நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு
முன்னர் சேதுக்கால்வாய் வெட்டி அதன்வழியே
கப்பல் போக்குவரத்தைப் பெருக்க அன்றைய
தமிழக அரசு முனைந்தது.

அதனை ஏற்றவர் உண்டு. ஏற்காதவரும் உண்டு.
ஏற்றவர்கள் தமிழ்நாட்டின் வளம் பெருகும் அதனாற்
செய்யலாம் என்றனர். எனக்குக் கூட ஆரம்பத்தில்
அத்திட்டத்தின்பால் ஈர்ப்பு இருந்தது; விரைவில் மறைந்தது.

ஏற்காதவர்களிடம் இரண்டு விதமான முக்கிய
காரணங்கள் இருந்தன. ஒன்று, ஈழத்திற்கும்
தமிழகத்திற்கும் குறுக்கே இராமர் கட்டியதாக
நம்பப்படுகிற பாலத்தின் ஒரு பகுதி,
இத்திட்டத்தினால் உடைபடும் என்பதால்,
சமய நம்பிக்கை அடிப்படையில் மறுப்பாளர்கள்
எழுந்தனர்.

இன்னொன்று, சுற்றுப்புறச் சூழல் கெட்டுப்
போய்விடும் என்றும், மீனவர்களின்
வாழ்வாதரம் கெடும் என்றும்,
அரணப் பாதுகாப்பு பெரிய சரவலாகி விடும்
என்றும் எழுந்தனர் பலர்.

சேதுக்கால்வாய்த் திட்டத்தினால், சூழற்சமன்
கெட்டுவிடும் என்று எழுந்தவர்கள்
என்ன சொன்னார்கள்?

அப்பகுதியில் வளரும் பவளக்கொடிகள்(Coral reef)
அழிந்து விடும்; அவை அழியலாமா? என்று
வருந்தினர்.

அரியவகை மீன்கள் அழிந்துவிடும்; அதொடு
மீன்வளம் அருகிக் குறைந்துவிடும். அது
மீனவர்களின் நலனைப் பாதிக்கும் என்று
கவலைப்பட்டனர்.

அங்கே வாழும் கடற்குதிரைகள் (Seahorses)
இல்லாமல் போய்விடும் என்றனர்.
குதிரைகளோடு கடற்பசுக்களும் காணாமற்
போய்விடும் என்று உருகினர்.

இவற்றொடு, இக்கால்வாய் வெட்டப்பட்டால்
இந்தியாவின் எதிரிக் கப்பல்கள் எளிதாக உள்ளே
வந்துவிடத் தோதாகும் என்றும், அதற்கு இடம்
கொடுக்கலாமா? தேசக்காவற்கு ஆபத்தான
விதயத்தை நாம் தொடலாமா? நமக்கு தேசப்பற்று
வேண்டாமா? என்று தேசியகீதம் பாடினர்.

சேதுக்கால்வாயை மறுத்துப் பேசிய அதே
வாய்கள் இன்று கூடங்குளத்தை ஆதரித்துப்
பேசுகின்றன என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.

தற்போது கூடங்குளத்தில் அணு உலை
மறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த உலை இயங்கினால் அப்பகுதியில்
உள்ள கடற்புறச் சூழல், கதிர்வீச்சு, பாதுகாப்பு
ஏற்பாடுகள், போக்குவரத்து
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
பாதிக்கப்பட்டு மீன்வளம் கெட்டு,
மீனவர் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும்
என்கின்றனர்.

சேதுக்கால்வாயால் மீன்வளம் கெட்டு
மீனவர் வாழ்வாதாரம் கெடும் என்றவர்கள்
கூடங்குளத்தால் மீனவர் வாழ்வாதாரம்
கெடும் என்பதை ஏன் ஏற்கமறுக்கிறார்கள்?

கூடங்குள, கல்பாக்கம் உலைகள்
எதிரிநாடுகளால் தாக்கப்படக்கூடும்
என்ற அச்சத்தில் அவற்றிற்கு அதிகப்படியான
அரணச் செலவும் காப்பு ஏற்பாடுகளும்
செய்யப்படுகின்றன.

சேதுக்கால்வாய் வெட்டினால் அது
எதிரிக்கப்பல்களை எளிதில் ஈர்க்கும்
என்று கவலைப்பட்டவர்கள், இவ்விரு
உலைகளும் எதிரிகளின் இலக்காக
ஆகிவிடுமே என்று ஏன் கவலைப்படுவதில்லை?
அப்படி இலக்கானால் எதிரியால்
மட்டுமல்லாமல் உலையாலும்
தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று
ஏன் அவர்கள் கவலைப்படவில்லை?

பரந்து விரிந்த அரபிக்கடல், வங்கத்திலிருந்து
விரியும் வங்கக் கடல் எல்லைகள் கடந்த
இந்தியப் பெருங்கடல் வழியாகவெல்லாம்
எதிரிகள் வருவதை விட, இந்தச் சிறிய
கால்வாய் வழியாக வந்துவிட்டால் என்ன
செய்வது என்று கவலைப்பட்ட தேசப்பற்றாளர்கள்
கூடங்குள உலையின் அரண முக்கியத்துவத்தை
ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள்?

பவளப்பாறைகள், பவளக்கொடிகள் என்று
கடலுக்குள் இருக்கின்ற சூழலுக்கும் கண்ணீர்
விட்டவர்கள் கதிரியக்கத்தால் மக்களுக்கு
வழிவழியாகப் பெரும் நோய்கள் ஏற்படும்
என்பதை ஏன் காதுகொடுத்தும் கேட்பதில்லை?

கடலுக்குள் வாழும் பவள சாதிக்குப் பரிந்து
வந்தவர்கள், தமிழ் நாட்டில் வாழும்
மனித சாதிக்கு ஏன் பவளக் கண்களைக்
காட்டுகிறார்கள்?

கடல்மீன்களுக்கும் வருந்தியவர்களின்
நல்லிதயங்கள் மனித உயிர்கள் என்று
வரும்போது அதை விட அதிகமாகவல்லவா
வருந்தியிருக்க வேண்டும்?

கடற்குதிரைகள், கடற்பசுக்கள்
போன்றவற்றிற்கு உருகிய நெஞ்சங்கள்
கூடங்குள மக்களுக்கு மட்டும்
கல்லாக இறுகிப் போன காரணம் என்ன?

கடலடிச் சூழற்கும் வருந்தியவர்கள்
நிலத்தின் மேலும் வாழ்கின்ற மக்களை
நீண்டகாலமும் பாதிக்கக் கூடிய
அணுசக்தியை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஆமை, நண்டு, நத்தை, மீன், பவளம்,
புழு, பூச்சிகளுக்கும் உருகியவர்களுக்கு,
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அவலங்களை
எண்ணி உருகமுடியவில்லை.

அப்படியென்றால் அவர்களின் மனதும்
நெஞ்சும் எந்திரப் பொறிதானா?
தேவைப்படும்போது பொத்தானை
அமுக்கினால் நெஞ்சு ஈரமாகி மாந்தநேயம்
பெற்று உருகுவார்கள் போல!

அன்புடன்
நாக.இளங்கோவன்