Pages

Thursday, September 21, 2006

மண்வாசனை!

தென்றல் உலாவத் தென்னை சென்றேன்
தலைக்கனம் மிகுந்து சற்றும் வளையா
நெடுநெடு தென்னை என்னை நோக்க
கொடுகொடு என்றேன் தென்னந் தண்ணீர் !
இந்தாப் பிடிஎடுத் தேக்குடி என்றே
இரண்டு இளங்காய் போட்ட துகேளீர் !

பொன்நிறச் சதையால் போர்த்தியக் காயுள்
பொன்னி நதியில் திருடிய தண்ணீர் !
தாகம் தீர தண்ணீர் பருக
மேகம் மோது தென்னை விலகி
பாதை அருகே பந்தலில் குந்தி
காயைப் பாங்குடன் இருகை ஏந்தி
வாயுடன் காயின் வாயிடம் வைத்து
தானுண்ட நீரைத் தலையில் தந்த
தென்னை போற்றித் தண்ணீர் குடித்தேன் !

தென்னை பார்த்து நன்றி சொன்ன
என்னை ஈர்த்த அந்தப் படமோ
என்சிறு நாய்ந னைத்தத் தடமே;
தென்னை அடியில் ஈரமுக் கோணம் !

சிரித்துக் கொண்டே திரும்பிப் போக
எறிந்தது தென்னை இன்னொரு காயை !
சொன்னது காதில் "சொல்லாதே வெளியில்" !
பொன்னியில் திருடிய தண்ணீர் மறைக்க
என்னிடம் தந்தது சிறுகை யூட்டு !
செந்தமிழ்த் தாய்மண் வளர்ந்ததென் னையதே !

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, September 09, 2006

Can I get a LIFT? - poem (Not for Contest)

முல்லைப் பந்தரை முகர்ந்து பார்க்க
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!

கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!

இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!

வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!

மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!

பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!

பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !

அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )