Pages

Wednesday, September 20, 2017

பெரியபுராணம்::எறிபத்த நாயனார்::பகுதி1 - மாநவமி

கருவூர். புகழ்ச்சோழநாயனார் என்று எதிர்காலம் போற்றிய புகழ்ச்சோழனின் தலைநகரம். ஆனிலையப்பரும் அலங்காரவல்லியும் எழுந்தருளியிருக்கும் திருப்பதி. இராசராசனுக்கு தோளோடு தோணின்ற கருவூரார் வாழுமிடம். எறிபத்த பூமியது.

மேகங்கள் உலாப்போகும் உயர்ந்த மதில்களும், அம்மதில்களைவிட பலவடுக்கு உயர்ந்து விண்ணை முட்டிப்பார்க்கும் மாடமாளிகைகளும், அவற்றை அரணிக்கும் கோட்டை வாயில்களில், நிறைந்த ஓசையை தரும்பொருட்டு நீதிக்கு விளக்கமாய் நெடிதுயர்ந்து நிலம் பார்த்து நிற்கும் வலிய பெரிய மணிகளும், இவற்றால் சூழப்பட்ட சோலைகள் தமது மலர்களால் ஊரெங்கும் நறுமணம் வீசுதலும், அந்நறுமணங்கமழும் தேன்சொரி மலர்கள், பெண்களின் அழகிய நெற்றியில் சுருண்டு தவழும் கூந்தலையும் சூழ்ந்துகொள்ள, அம்மமலர்களைச்சூடிய சிலபெண்டிர் தெருக்களிலே நடந்து வரும்போது விண்ணின்று இறங்கி நடந்துவரும் முழுநிலவைப்போல வருதலும், கருவூரை தேவ உலகத்தின் அழகையும் செல்வத்தையும் விட உயர்வாக காட்டிக்கொண்டிருந்தன.

இயற்கையை சூறையாடும் மணற்கொள்ளையின் தலைநகரமாய் இன்று நாம் ஆக்கிவைத்திருக்கும் அம்மாநகரத்தை, இயற்கையும் சிவமும் தமிழுமாய் எறிபத்தரொடு ஒப்பற்று விளங்கிய அந்த 11-12 நூற்றாண்டு கருவூரின் உயர்வை, சேக்கிழார் பெருமான் தீட்டி வைத்த சித்திரந்தான் இப்பாடல்.

மாமதில் மஞ்சு சூழும்
...மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
...சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
...சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும்
...சதமகன் நகரம் தாழ.
.......பெரியபுராணம்:எறிபத்தநாயனார்::3

இறைவனுக்கு பூச்சாற்றுதல் மாலைசாற்றுதல் எனும் வழக்க, காலத்தால் என்று தொடங்கியதென்று தெரியவில்லை; ஆனால், மனிதன், தான் அணிந்து மகிழும் உயர்வானவற்றை இறைவர்க்கும் இறைவிக்கும் அணிவித்தான் என்பது உண்மைதானே. அரசர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சூடிக்கொள்ளும் மாலையிலும் அடையாளப்பூ இருந்ததுதானே. "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..." என்று அப்பரடிகள் சொன்னதில், பூவிற்கு இறைவன் தருமிடம் எவ்வளவு உயர்ந்தது என்பது நாம் அறிந்ததுதானே.

இன்றெல்லாம், என்றோ பூத்த பூக்களையும் பூச்சரங்களையும் தெருவோரத்தில் வாங்கிவந்து நாட்கணக்காய் தணுப்பியில் வைத்து பாதுகாத்து நாடோறும் இறைக்கு சாற்றுவதுதான் பல வீடுகளிலும் நடப்பன. இறைவர்க்கு எப்படிப்பட்ட பூவை சாற்றவேண்டும்?

அன்றலர்ந்த புது மலர்களை சாற்ற வேண்டும் என்பர்.

அலர்ந்த மலர்களையா சூடவேண்டும்?

மலரவிருக்கும் மொட்டை,
மலர்வதற்கு முன்னர் பறித்து,
மாலையாக்கி, இறைமார்பில் சூடியதும்
அம்மொட்டு மலரவேண்டும்!

இதுதான் மலர்சூட்டும் கணக்கு. அம் மலர்மொட்டு அவிழும்போது அதுதரும் வாசம் இறைவனை சேரவேண்டும். அவனுக்கு அது பிடிக்கும்.

அதற்காகத்தான் சிவகாமியாண்டார் வைகறையில் துயிலெழுந்து அமராவதி (ஆம்பிராவதி) ஆற்றிலே நீராடி, சோலையில் இறைவனுக்கு சாற்றவேண்டிய அலங்கலுக்கு (அலங்கல் = மாலை) தேவையான மலர்களை பறித்துக்கொண்டிருந்தார். இறைவனுக்கு மட்டுமா? அலங்கல் ஆர்த்த வல்லியான அலங்காரவல்லிக்குந்தான்.

நித்தலும் அது அவர் கடன். இம்மியும் பிசகாது செய்துவரும் நெடுநாள்-தொண்டு.

கையிலே ஒரு கோல் அல்லது தண்டு. அதன் முனையிலே ஒரு வளைவு. துரட்டி என்போமில்லையா? அதைப்போல. உயரமான செடிகளிலே பூவிருந்தால் செடியை சற்று வளைத்து பூப்பறிக்கவும், பறித்த பூவை கூடையில் போட்டு, அக்கூடையை அக்கோலிலே மாட்டிவிட்டு தோலிலே சுமந்து கோயிலுக்கு செல்லவும் அக்கோல் அவருக்கு துணையாயிருந்தது.

வைகறை யுணர்ந்து போந்து
...புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
...நந்தவனத்து முன்னி
..............பெ.பு:எ.ப::9

கோலப்பூங்கூடை தன்னை
...நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங்கொண்டு
....மலர்க்கையில் தண்டுங் கொண்டங்கு
ஆலயம் அதனை நோக்கி
..............பெ.பு:எ.ப::10

இறைவனுக்கு நித்தலும் இந்த மலர்த்தொண்டினை தவறாது செய்து வந்த சிவாச்சாரிய மரபில் தோன்றிய தமிழ் அந்தணரான சிவகாமி ஆண்டார் என்ற அந்த முனிவர், பூக்கூடையை கோலில் மாட்டி தோளில் தூக்கிக்கொண்டு செல்கிறார் அலங்காரவல்லி உடனுறைகின்ற ஆன் நிலையப்பரின் திருக்கோயிலுக்கு. பொழுது புலர்வதற்குள் அதனை அலங்கல் அல்லது மாலையை ஆக்குநரிடம் கொடுத்து தானும் உதவி, மாலையாக்க வேண்டும்; இறைவர்க்கு சாற்ற வேண்டும். அம்மலர் மொட்டுகள் மலர்ந்து வாசம் போய்விடக்கூடாது; விரைகிறார்.

சோழ-வளநாட்டரசனான புகழ்ச்சோழனின் பட்டத்து யானை! பட்டத்து யானைக்கென்றே இருக்கும் தனிச்சிறப்புகளான வீரமும் வேகமும் அதற்கும் உண்டு. அதே வைகறையில் அமராவதியில் நீராடுகிறது. அரசமங்கல யானைக்கு சூட்டவேண்டிய மங்கல அணிகளையெல்லாம் சூடிவிடுகிறார்கள் பாகர்கள். அதற்குப்பூசவேண்டிய மங்கலப்பூச்சுகளும் திலகங்களும் இடப்படுகின்றன. உயர்ந்த உடுப்புகளும், விரிப்புகளும் அரசயானையை அலங்கரிக்கின்றன.
சிறிது மதநீர் அதன் கண்களில் வருகிறது. பாகர்கள் சற்று கவனத்தை அதிகரிக்கின்றனர்.

புரட்டாசி அமையுவாவை (அமாவாசை) அடுத்தநாள், சத்தி வழிபாடான ஒன்பான்
திருநாளின் தொடக்கம். சத்தியின் மூன்றுவடிவங்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவருக்கும் மும்மூன்று நாள்கள் சிறப்பு செய்ததும் பெருவிழா நடப்பது வழமை. ஒன்பதாவது திதிக்கு நவமி என்று பெயர். சத்திவிழவின் நிறைவுநாளை மாநவமி என்று பெரியபுராணம் சொல்கிறது. மாநவமியை அடுத்த நாளான பத்தாந்திதியன்று இக்காலத்தைப்போன்றே அக்காலமும் பெருவிழாக்கொண்டாட்டம் இருந்தது. அதற்காக நகரமே இருநாள்கள் முன்பே, அதாவது எட்டாந்திதியான அட்டமி அன்றே திருவிழாக்கோலம் பூணத்தொடங்கியது என்றே சொல்லவேண்டும். ஒன்பான்விழவு நமது தொன்மையான சத்திவழிபாட்டின் தொடர்ச்சி என்பதுதான் பெரியபுராணத்தின் பாடல்வரிகளில் பதிவாகியிருக்கிறது.

மற்றவர் அணைய இப்பால்
...வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
...குலப்புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
...பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்ற  வெங்களிறு கோலம்
...பெருகு  மாநவமி முன்னாள்.
..............பெ.பு:எ.ப::11
(மாநவமி முன்னாள் = நவமிக்கு முந்தைய நாளான அட்டமி)

யானையும் அன்று திருநாளுக்கு தயாராகியது போல. சிவகாமியாண்டாரும் அதிகாலை பூசைக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

சற்றே மதநீர் சொரிய நடந்து வந்த யானைக்கு திணவும் குறும்பும் கூடியதால்
தெருக்களை யானை கடக்கும்போது சில இடங்களை முட்டியும் தட்டியும் வந்து கொண்டிருந்தது.

கோயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டாரின் பூக்கூடையை
பறித்து நிலத்தில் வீசிவிட்டு நகர்ந்தது. மலர்கள் மண்மேல் சிதறின.

நெடுங்காலமாக தவறாமல், சிந்தாமல், சிதறாமல் செய்துவந்த அவரின் மலர்த்தொண்டு ஒன்பான்விழவின் எட்டாம் நாளான அட்டமியன்று தடங்கிப்போனது.

இறைமேல் இருந்த அவரின் காதல் தூய்மையானது. மனம் மயங்கியது; கண்கள் கலங்கின;  நெஞ்சம் கொதித்தது அந்த எளியவரான கிழமுனிக்கு.

கையறுநிலையில் அடக்கமுடியாத அழுகையோடு, மூப்பில் துவண்ட உடலினரான அந்த முனிவர் தன்னிடம் இருந்த கோலை உயர்த்திக்கொண்டு அந்த யானையை அடிக்க ஓடியது, மழலையொன்று பிரம்பெடுத்து மலையை அடிக்க ஓடியது போல இருந்தது.

ஓடமுடியவில்லை; குழந்தை தடுக்கி கீழே விழுவது போல விழுந்தார். வல்லான் முன்னர் வாடி நிற்கும் எளியரின் கையறு நிலையில் சிவகாமியாண்டார். பொறுத்தாரில்லை; நிலத்தை அடிக்கத்தான் முடிந்தது;  அடித்தார். நிலமகளை சாட்சியாக வைத்து இறைவனிடம் முறையிட்டார்;

களியானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா சிவதா!
அளியார் அடியார் அறிவே சிவதா!
தெளிவார் அமுதே சிவதா சிவதா!
..............பெ.பு:எ.ப::16

களிப்பின் மிகையால் ஆணவம் கொண்ட ஒரு யானையின் தோலை உரித்து போர்த்தியவன்தானே சிவன்! அதை எண்ணி சிவனை அழைத்தார் போல!
சிவபெருமானின் காதில் விழுந்ததால்தான் எறிபத்தருக்கும் அது கேட்டது போல.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: