Pages

Saturday, February 09, 2013

மேலையெழுத்தும் தமிழெழுத்தும் – ஓர் இயலுமைத் தொடர்பு


உலகில், தொன்மையான, குறிப்பிடத்தக்க நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம் வியத்தகு மொழித்தொன்மையோடு பெருமையுறும் வகையிற் தொடர்ச்சியுங் கொண்டுள்ளது. இதை ஒப்புக்கொள்ளும் உலகத்திலோ, அதேபொழுது, தமிழிற் தனித்த ஆய்வுகள் மேற்கொள்வதைக் காண்பது அரிதாகவேயுள்ளது. மேலை உலகின் தொல்மொழி ஆய்வுகள் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கிலிருந்தே தொடங்குகின்றன. அவை ஒருபோதும் விந்தியமலையைத் தாண்டுவதேயில்லை. குறிப்பாக, நடுத்தரைக் கடற்கரையிற் தோன்றிய மொழிக்குடும்பங்களே உலகின் பெரும்பாலான மொழிகளின் மூலமொழிகளாகக் கருதப்படும் போக்கும், அதையும் தாண்டி, ”அங்கிருந்தே தமிழெழுத்துகளும் வந்தன” என்று போகிற போக்கில் மேம்போக்காகச் சொல்லும் நிலையையும், அச்சொல்லையே தலைமேற் தாங்கி எழுதும் ஒரு சில இந்திய, தமிழக ஆய்வாளர் நிலையும் எழுவது வருந்தத்தக்கதாய் உள்ளன. நமது ஆராய்ச்சிகளும், முடிபுகளும் இன்னும் ஆழவேண்டிய தேவையும், உயர்ந்த உலகத்தளங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தேவையும் இருப்பதை மறுக்க முடியாது.

            உரோம எழுத்துகளின் வரலாற்றை, உலகம், நடுத்தரைக்கடலைச் சுற்றிய நாடுகளில் அமைத்துக் கொண்டிருக்கிற சூழலில், இதில் முக்கியப் பங்குபெறும் நாடுகளாகக் காணப்படுபவை பழைய மெசபொடோமியா, எகிப்து, பொனீசியா, கிரேக்கம் ஆகியனவாகும். வணிக வல்லமையையும், பேரரசு வல்லமையையும் வரலாற்றில் காட்டிய இந்நாடுகள் தம் மொழி வல்லமையைக் காட்டுவதும், அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதும் வியத்தகு விதயமில்லை. இவ்வல்லமையின் தொடர்ந்த ஆதிக்கம் உலகின் பல மொழிகளின் தொன்மைகளை மறைப்பதொடு அவை பற்றிய கவலையற்ற தன்மையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் வீச்சுக்குத் தமிழ்மொழியும் தப்பவில்லை. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை விந்திய மலைக்கு வடக்கே விளங்க வைப்பதும், அதில் நாயகமாயிருக்கும் சமற்கிருதத்திடம் இருந்து பல்வேறு சொற்களைத் எடுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகின்ற வல்லாண்மை மொழிகள் ”சமற்கிருதத்திற்கு இத்தகை வளங்கள் எங்கிருந்து வந்தன?” என்பதைப் பற்றி சிந்திக்கவே தயங்கும் காட்சியும் உலக மொழியாய்வுக் களத்தில் காணப்படுகிறது.

மெசபொடோமியா, எகிப்து, கிரேக்கம், அரேபியா போன்ற தொன்மையான நாகரிக நாடுகள் தம் முதுகுடிகளின் காலத்திலிருந்து பேசிப் புழங்கி வளர்ந்த மொழிகளைப் பற்றி நன்கறிந்திருந்தும், அதுபற்றி விதந்துபேசாது, ”எங்கும் பேச்சு வழக்கில்லாதிருந்த சமற்கிருதத்திடமிருந்து சொற்களைக் கடன்பெற்றதாகப் பெருமைப் பட்டுக்கொள்வது”, இன்னும் வியக்கத் தக்க போக்காய்க் காணப்படுகிறது. தமிழ் மக்கள் எவ்வளவு தான் ஓங்கி உரத்துச் சொல்லி தம் மூலத்தை விளக்கினாலும், ”சமற்கிருதம் எந்த அளவிற்குத் தமிழிடம் கடன்பட்டிருக்கிறது?” என்பதைச் சொன்னாலும், உலக மொழிக்களம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையிலில்லை. இதற்குப் பல்வேறு வல்லாண்மைக் காரணங்களிருந்தும், தமிழர்கள் அதையுணர்ந்து வலுவான உலகளாவிய ஆய்வுக்களத்தை இன்னும் ஏற்படுத்தாமையும் ஒரு காரணமாகிறது. ”பரந்துபட்டுக் கிடக்கும் பொதுவான உலகத்தாரும், தில்லி அறிவுலகமும் நேர்மையுடன் இதை ஆராய்ந்து தமிழ்மொழிக்குக் கிடைக்கவேண்டிய இடத்தைப் பெற்றுத் தந்துவிடுவார்கள்” என்ற தவறான நம்பிக்கை கொண்டு, ”தமது மொழிக்கான ஆய்வுக்களத்தை மிகப் பரந்துபட்ட நிலையில் ஏற்படுத்த வேண்டிய முனைப்பைத் தமிழர்  தடுக்கிக் கொள்கிறாரோ?” என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

தொல்தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
1.      எழுத்துத் தமிழி (Alphabetic Thamizhi)
2.      படத்தமிழி (Picto-Thamizhi)[12]

இவை முறையே பிராமி, சிந்துவெளி எழுத்துகள் என்று இருவேறு கூறாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. (இக்கட்டுரையில், “தமிழி” என்ற சொல்லாட்சி எழுத்துத் தமிழியையும், ”படத்தமிழி” என்ற சொல்லாட்சி சிந்துவெளி எழுத்துகளையும் குறிக்கின்றன.  இந்தியாவில் அசோகன் பிராமியை முதலெழுத்தாகக் கூறி தமிழெழுத்தைத் தமிழ்-பிராமி என்று கூப்பிடும் வடபுலப்போக்கை மறுத்து, தமிழியே முதலெழுத்து, அசோகன் பிராமி வழியெழுத்து என்ற கொள்கையிற் இவ்விரு சொற்களும் கையாளப்படுகின்றன.) எழுத்துத்தமிழி கண்டுகொள்ளப் படாமலும், படத்தமிழி இன்னும் முழுமையாக உடைபட்டு அடையாளம் காணப்படாமலும் இருக்கின்றன. இவை ஒருபுறமிருக்கத் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கி.மு 500ஐ கடக்க முடியுமெனினும் ஏதோ ஒரு தடைக்கல்லால் கடக்க முடியாமல் அமுங்கிப் போய்க் கிடக்கின்றன. (ஆதிச்ச நல்லூர் தொல்லாய்வு முழுவீச்சுடன் இன்னும் நடைபெறாதிருக்கிறது. 2004 இல் மீண்டும் புத்துயிர் பெற்ற ஈமத்தாழிகளுக்குள் புகுந்துவந்த அந்த ஆய்வு அதற்கப்பறம் வாழிடங்களைத் தேடி விரிவு காணாது தொய்ந்து போய்க் கிடக்கிறது. இந்த நிலையில்  தமிழியின் தொன்மை வெளிவராமல் கிடப்பதில் வியப்பேதுமில்லை. தமிழக ஆய்வுகள் தொய்ந்திருக்கையில், உலக மொழி ஆராய்ச்சிகள் நடுத்தரைக்கடல் நாகரிகத்தைச் சுற்றி சமற்கிருதத்தை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டு வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுரை மேலை மொழியெழுத்துகள் தமிழியுடன் கொண்டிருந்த/கொள்ளக்கூடிய தொடர்புகளை ஆழமாக ஆராய்கிறது. குறிப்பாக இக்கட்டுரை,

1)தமிழி அகரமே உரோம-A எழுத்துக்கு மூலமாகக் கூடும் என்ற கருதுகோளை 
வைக்கிறது
2)  உரோம எழுத்து இணவுகளில் (Roman letter concordances) உள்ள இடைவெளிகள்,
சார்புத்தன்மைகளை எடுத்துரைக்கிறது
3)விவிலியம் பழைய ஏற்பாட்டில் வரும் சாலமன் பற்றிய ஆவணங்களிற்
குறிப்பிடப்படும் ஓபிர் (Ophir) என்ற இடம் எதுவாக இருக்கலாம் என்று
கருதுகோளையும் முன்வைக்கிறது.
4)அவிழ்க்கப் படாமல் (அல்லது படிக்கப் படாமல் இருக்கின்ற) எழுத்துமுறைகளின்
முகன்மையை உணர்த்துகிறது.

உரோம எழுத்து இணவுகளில் (Roman Letter Concordance) தேவையான மீள்பார்வை

            இன்றைக்கு உலகமே பயன்படுத்தும் உரோம நெடுங்கணக்கு,
1. கி.மு 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்திய சான்றுகளில் தொடங்கி,
2. கி.மு 10ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில்  உருவாகிய பொனீசிய நெடுங்கணக்கை மையமாக்கி,
3. பின்னர் கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் பொனீசியரிடம் இருந்து கிரேக்கராற் கடன்பெற்று, உயிரெழுத்துகளை உருவாக்கிச்  சேர்த்து,
4. கிரேக்க, இலத்தீன் மொழி வளர்ச்சிகளில் நிலைபெற்று,
5. கி.பி.113ல் கிடைக்கப் பெற்ற டிராசன்-தூண் கல்வெட்டுச் சான்றில் நிறைவான வடிவம் பெற்றது;
என்ற வரலாறு உலகின் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலே சொன்னதில் அழுத்திச்  சொல்லவேண்டியது: ”பொனீசிய நெடுங்கணக்கு மெய்யெழுத்துகளை மட்டும் கொண்டது. மெய்யெழுத்துகளின் அமைப்புக்கு ஏற்றவாறு உயிரொலிகளைக் கூட்டிப் படிப்பதே அவரின் வழக்கமாக இருந்தது. பொனீசியர்களின் எழுத்துமுறையை வலமிருந்து இடமாகப் படிப்பதே முறையாகும் கிரேக்கரின் எழுத்துமுறை வல-இடம், இட-வலம் என இரண்டு முறைகளிலும் இருந்திருக்கிறது. கி.மு 800ல் உயிரெழுத்துகளை நெடுங்கணக்கில் சேர்த்ததோடு, இட-வல எழுத்துமுறையையும் கிரேக்கர் நிலைநிறுத்தி உள்ளனர்.”

அட்டவனை-1: எழுத்து இணவு – A [1] (Concordance of letter A)
  
மேலையெழுத்துக்களில் இன்று காணும் முதலெழுத்து A என்பதையொட்டியதாகும். இந்த எழுத்தைப் புழங்கியதில், எகிப்தில், வாடி எல்-ஆல் (Wadi El-Hol) என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட, கி.மு2000-1800 காலத்தைச் சேர்ந்த, ஒரு கல்வெட்டு உலகத் தொல்லியற் சான்றுகளில் முகன்மை இடம் வகிக்கிறது[41]. அக்கல்வெட்டில் காளை அல்லது எருதின் முகவடிவம் கொண்ட ஒரு படவுரு உள்ளது (காண்க அட்டவணை1, முதற்பெட்டி). எகிப்திய மொழியில் Aleph என்ற சொல் காளையைக் குறிக்கும். அதுவே 2000 ஆண்டுகளில் மெல்ல மாற்றமடைந்து கி.பி 113ல் A என்ற உரோம எழுத்தாக படைக்கப்பட்டதென்று பல நூல்களும் ஆராய்ச்சிகளும்[43] சொல்கின்றன. அதேபொழுது, கி.மு 1750 ஐச் சேர்ந்த எகிப்தின் செராபிட்டுக் கல்வெட்டும்[42] காளை வடிவத்தின் மாறிய வடிவத்தையே காட்டுகிறது. இக்கல்வெட்டும் உலகின் முக்கியத் தொல்லியற் சான்றுகளில் ஒன்றாகும். 

            கி.மு1000ன் பொனீசியர் உருவாக்கிய நெடுங்கணக்கு Aleph என்ற எழுத்தை மெய்யொலியாகக் கொண்டது. இந்த எழுத்தை பொனீசியர்கள்    என்ற வடிவத்தில் காட்டியிருக்கிறார்கள் (அட்டவனை-1, பெட்டி-3). கொம்புகளுடைய காளை முகத்திற்கும் மேலே இரண்டு வரிக்கு முன்வரும் இந்த எழுத்துருவுக்கும் அப்படி ஒரு வடிவ ஒற்றுமை சட்டென்று புலப்படுவதில்லை. காளைமுகத்தில் இருந்து இந்த வடிவம் வந்திருக்கலாம் என்ற பெருத்த ஊகம் ஆய்வாளர்களாற் சொல்லப்படுகிறதே தவிர, இடைப்பட்ட 800 ஆண்டுகளில் எப்படியான மாற்றங்கள் என்ற வடிவத்தை காளைமுகத்திலிருந்து உருவாக்கின என்பதற்கான சான்றோ, விளக்கமோ இதுவரை கண்டேனில்லை. இது சுருக்கப்பட்டக் காளைமுக வடிவம் என்றும் மூன்று கோடுகளால் எழுதுமாறு இது மாறியிருக்கிறது என்பதே விளக்கமாக உள்ளது[6].

  
அண்மையில் பழனிக்கு அருகில் பொருந்தல் என்னுமிடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது தமிழி என்னும் எழுத்து கி.மு.490க்கு ஒத்த காலத்தே முற்றிலும் பண்பட்ட நிலையில் பயன்பாடு கொண்டிருந்தது தெரியவந்தது[44]. இது முகன்மையான கண்டுபிடிப்பாகும். இதுவரை இந்தியாவிற் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளை வைத்துப் பார்த்தால், இந்தியத் துணைக்கண்டத்தில்  எழுத்துத் தமிழியின் பழம் பொறிப்பு தமிழகத்திலேயே முதன்முதலிற் கிடைத்திருக்கிறது என்ற உண்மை புலப்படும். [இன்னும் அசோகன் பிராமி முதலென்று சொல்லும் போக்கு மாறவேண்டிய காலம் வந்தாயிற்று.] இதோடு சேர்த்து மீளாய்வு செய்யப்படும் நிலையில், உறுதி செய்யப்படாத கொற்கை எழுத்துப் பொறிப்பு கி.மு.700ஐ ஒட்டிக் காணப்பட்டிருக்கிறது.  ” கொற்கை எழுத்துப் பொறிப்புகள் எந்தக் காலத்தைச் சேர்ந்து முதலிற் தோன்றின?[45]” என்பது இன்னும் ஆய்விற்குரியது. இதே கால எல்லை தான் (கி.மு.800) கிரேக்கர் பொனீசியர் எழுத்தைக் கடன்வாங்கிய காலமாகும். இதற்குச் சற்று முன்னர் தான் (கி.மு.1000) பொனீசிய எழுத்துச் சான்றுகள் எழுந்த காலமாகும். இந்நிலையில் தமிழி எழுத்தையும், பொனீசிய எழுத்தையும், கிரேக்க எழுத்தையும் ஒருபாற் கோடாது திசைபொருத்திப் பார்க்க வேண்டியது எந்த ஆய்வாளரும் செய்யக் கூடியதாகும். பொனீசியர் எழுத்தை மட்டுமே முன்னீடாகக் கொண்டு, ”பொனீசியர், எபிரேயர், கிரேக்கர், அராமிக்குகள் வழி பிராமி வந்து அதன்வழி  தமிழர் எழுத்தறிந்தார்” என்பது முன்முடிவுகளுக்கு உரியதாகும்[43][46][47]. இந்தக் கட்டுரை ”எழுத்து நகர்ச்சி தலைகீழாய் தமிழகம் – கிரேக்கம்/பொனீசியா என்றிருந்திருக்கக் கூடும்!” என்ற தேற்றத்தை முன்மொழிகிறது.

சற்று ஆழமாய்ப் பார்ப்போம். மேலே அட்டவணை-1 இல் வெவ்வேறு பெட்டிகளிற் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துககள், தமிழியில் உள்ள அகர எழுத்து வடிவத்தோடு ஒத்திருப்பதைப் பார்த்தால்  என்ற எழுத்து வடிவம் ஒருவேளை எழுத்துத் தமிழியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாகாதா என்று சிந்திக்க வைக்கிறது. வடிவியற் படி ஆராய்ந்தால், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை பெரிதும் வியக்க வைக்கிறது.  பழந்தமிழியில் இடப்பக்கம் திறந்திருக்கும் அகர எழுத்து, பொனீசியத்தில் வலப்பக்கந்திறந்திருப்பது, பொனீசியர்களின் எழுத்து முறை வலமிருந்து இடம் எழுதும் பழக்கமுடையவர்களாக இருந்ததால், தமிழியின் அகரம் வலம் இருந்து இடமாக எழுதப்பட்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கிறது. இன்னும் விளக்கமாய்ச் சொன்னால், தமிழியின் அகரத்தை தமிழ் எழுதுமுறையில் (இட-வலம்) எழுதும்போது இரண்டு சாய்கோடுகளை எழுதி, வலப்பக்கத்தில் குத்துக்கோட்டை எழுதுவது வழக்கம். அதேபோலத் தான் பொனீசியர்கள் தமிழி அகரத்தை, தமது வல-இட முறையில் எழுதும்போது, முதலில் சாய்கோடுகளை எழுதி அதற்கு இடப்பக்கத்தில் குத்துக்கோடு இட்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்து, இரண்டு கோடுகளால் எழுதுமாறு சுருங்கியதென்று கி.மு 800 கால பொனீசியக் கல்வெட்டுச் சான்றைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள் (பார்க்க: அட்டவனை-1, பெட்டி-4,5). ஒரே காலத்தைச் சேர்ந்த இந்தச் சான்றுகள், ”கி.மு.1000த்தில் அவர்கள் உருவாக்கிய Alephன், பலரால் சிறிய மாறுபாட்டோடு எழுதப்பட்ட வடிவமே அன்றி வேறில்லை” என்று புரிய வைக்கின்றன. [இதனை வரிவடிவ-வேறு (Allograph) என்று சொல்வார்கள். இவையும் தமிழி அகரத்தை வலமிருந்து இடம் எழுதிய முறையையே காட்டுகிறது.]

            பின்னர், கி.மு 800க்கும் 740க்கும் இடைப்பட்ட 60 ஆண்டுகளில் பொனீசியர்களிடம் இருந்து கிரேக்கர்கள் பெற்றுக்கொண்டு உருவாக்கிய நெடுங்கணக்கில் இவ்வெழுத்து 180 பாகை திரும்பிக் காட்சியளிக்கிறது(அட்டவனை-1, பெட்டி-6). இது ஏனென்றால், கிரேக்கர்கள், பொனீசிய நெடுங்கணக்கை எடுத்துக்கொண்டு தமது நெடுங்கணக்கை உருவாக்கியபோது (கி.மு 800-740), தமது எழுதுமுறையையும் இட-வலமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான். அதுவரை, வல-இடம், இட-வலம் என்ற இருமுறைகளையுமே பயன்படுத்தி வந்த கிரேக்கர்கள், நாளாவட்டத்தில் இட-வல முறையில் மட்டுமே நிலைத்து நிற்கும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது தமிழி எழுதுமுறையை முழுவதும் ஒத்ததாகும். ஆகவே, பொனீசிய Aleph என்பது, வல-இட தமிழி அகரமே இருக்கக்கூடும் என்று ஓர் ஏரணங் காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அதாவது, பொனீசியர்களால் கி.மு 1000ல் வல-இடமாக எழுதப்பட்டு, பின்னர் கி.மு 800-740ல் கிரேக்கர்களால் Alpha என இட-வலமாக எழுதப்பட்டது தமிழியெழுத்தின் தாக்கமாக இருக்கலாம். அடுத்த 20 ஆண்டுகளின் பின்னர், கிரேக்கத்திலும், கிரேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், (எத்துருக்கன்) 90 பாகை திரும்பி, Alpha குத்தாக நிற்கும் மாற்றத்தினைப் பெற்று இறுதியில் உரோம-A ஆக நிலைபெற்றிருக்கிறது.

படவெழுத்து என்பது ஒரு பொருளையோ, சூழலையோ, உணர்வையோ, கருத்தையோ வெளிப்படுத்துமாறு அமையும். ஈரோகிளிபிக்கின் (Hieroglyph) காளைமுகம் படவெழுத்து ஆதலால் அது குறித்த பொருள் வேறு. உயிரெழுத்து இல்லாத பொனீசியத்தில்,  Aleph என்று சொல்லப்படுகிற எழுத்தானது “Ah” என்ற நிறுத்தொலியைக் (Glottal Stop/Breathing Stop) குறித்தது. இந்த ஒலியைக் குறிப்பதற்கு, அதற்கு முன் 1000 ஆண்டுப் பழைமையான காளைமுகப் படம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது ஏரணத்தால் ஏற்குமாறில்லை. வடிவ ஒப்புமை, ஒலி ஒப்புமை, பொருள் ஒப்புமை என்ற மூன்றுமே இல்லாத ஈரோகிளிபிக்கின் காளைமுகம் எங்ஙனம் பொனீசிய நிறுத்தொலிக்குப் பகரியாகும்? “காளைமுகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன் எப்படியென்று தெரியவில்லை” என்று டேவிட் சாக்சு[6] என்பாரும் கூறுவது இக்கருத்தை உறுதி செய்கிறது.  பொனீசியர்கள், “Ah” என்ற தங்கள் நிறுத்தொலிக்கு, தமிழி அகர ஒலியமைப்பு ஒத்திருப்பதைப் பார்த்து, அவ்வெழுத்தைத் தங்கள் வல-இட எழுதுமுறைக்கு ஏற்ப எழுதி உள்வாங்கிக் கொண்டார்கள் - என்பதே சரியாகத் தோன்றுகிறது. ஆகவே,   என்ற பொனீசிய Aleph,  என்ற தமிழ் அகரத்தின் வல-இடமுறை படைப்பாகும் என்றே நான் கருதுகிறேன். பொனீசியர்கள் இதனை நிறுத்தொலியாகப் பயன்படுத்த, கிரேக்கர்கள் இட-வலமாகத் திருப்பி Alpha என்ற உயிரெழுத்தாக உள்வாங்கிக் கொண்டார்கள்.

மேலும், மிக முகன்மையாகக் கவனிக்க வேண்டியது, பொனீசியாவின் தலைநகரமாக இருந்த பிபிலோசு (Byblos) நகரில் கிடைத்த கி.மு 2000 த்தைச் சேர்ந்த 10 கல்வெட்டுகள்[7] இன்னும் படிக்கப் படாமலேயே இருக்கின்றன என்பதாகும். (பிபிலோசுக்குப் பின்னர் பொனீசியர்கள் டயர்[Tyre] நகரிற்குத் தங்கள் தலைநகரை மாற்றிக் கொண்டார்கள்). பின்னிணைப்பு-1ல், அவற்றுள் ஒரு கல்வெட்டின் படம் இடப்பட்டிருக்கிறது. அதில் ஏறத்தாழ 270க்கும் மேற்பட்ட எழுத்துகள் உள்ளன. அவற்றில் 75க்கும் மேற்பட்ட எழுத்துகள் (28%) எழுத்துத் தமிழியாகவோ, அன்றிப் படத்தமிழியாகவோ இருக்கின்றன. அவற்றுள், தமிழி அகரத்தை அப்படியே காணமுடிகிறது. எகிப்திய ஈரோகிளிப்புகளும் அதில் காணப்படுகின்றன. அதில், உரோம-B எழுத்துக்கு மூலமாகச் சொல்லப்படும் ஈரோகிளிப்பு எழுத்தும் இருக்கிறது. ஈரோகிளிப்பை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அதே கல்வெட்டில் இருக்கின்ற தமிழியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாதது எப்படிச் சரியாகும்? ஆகவே, ”இந்தப் படிக்கப்படாத கல்வெட்டுகள் ஏன் இன்னும் படிக்கப் படவில்லை?” என்பது ஒருபுறம் இருக்க, ”தமிழி அகரம் உள்ளிட்டப் பல்வேறு தமிழி எழுத்துகளைப் பொனீசியர்கள் கி.மு 2000லேயே நன்கு அறிந்திருக்கக் கூடும்” என்பதை எண்ணிப் பார்க்கலாமே? பொனீசியர்கள் உருவாக்கிய Aleph-ன் மூலத்திற்கு, எகிப்திய வாடி எல்-ஆல், செராபிட்டு கல்வெட்டுகளைச் சுட்டாமல், அதேக் காலத்தைச் சேர்ந்த பொனீசியர்களின் பிபிலோசு கல்வெட்டையேச் சுட்டி, அதிலிருக்கும் தமிழியை மேற்கோள் காட்டினால் மிகச் சரியாக இருக்கும் என்பது நம் முன்வைப்பாகும்.

அட்டவனை -2: எழுத்து இணவு – B [2] (Concordance of letter B)


            அடுத்து இரண்டாவது எழுத்திற்கு வருவோம். உரோம-B எழுத்தின் மூல எழுத்து, எகிப்திய ஈரோகிளிப்பின் சிறு-மரவீட்டுப் படத்தில் தொடங்குகிறது. இப்படம் “h” என்ற ஒலியைக் குறித்திருக்கிறது. பின்னர், அதே போன்ற படம், பொனீசியாவில்,  பொனீசியர்களின் முன்னோர்களான கானர்களின் (Cananites) கல்வெட்டில் (கி.மு 1200) காணப்பட்டிருக்கிறது. பொனீசியர்கள் அப்படத்தை “b” (bayt) என்ற ஒலியைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை இரண்டுமே Bயின் ஆதி மூலமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், பின்னிணைப்பு-1[7] காட்டும் கி.மு.2000 பொனீசியப் பிபிலோசு கல்வெட்டிலும் இந்த வடிவத்தை ஒத்த படம் இருக்கிறது (). இதன் வடிவம் கி.மு 1000ல் உருவான வடிவத்துடன் (அட்டவனை-2, பெட்டி3) பெரிதும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. பிபிலோசு கல்வெட்டு, படத்தமிழியில் இருந்து பெற்ற, இதே வடிவத்தை ஒட்டிய படவுருக்களையும் () கொண்டிருக்கிறது. இக்கல்வெட்டு படிக்கப்பட்டால் மட்டுமே, பொனீசியர்கள் உரோம-B யின் மூலத்திற்குத் தங்கள் நாட்டிலேயே கிடைத்த கல்வெட்டைச் சான்றாகக் காட்டமுடியும் என்பதொடு, இந்த மூலவடிவம் படத்தமிழியில் இருந்து வந்ததா அல்லது ஈரோகிளிப்பில் இருந்து வந்ததா என்று தெளிவாகச் சொல்லமுடியும்.
அட்டவனை -3: எழுத்து இணவு – C [3] (Concordance of letter C)




            அடுத்து, மூன்றாம் எழுத்திற்கு வருவோம். உரோம-C எழுத்திற்கு மூலமாக, கி.மு 800க்கு முன்பு ஏதும் சான்றுகள் இல்லை என்பதாக அதன் எழுத்திணவு காட்டுகிறது. கி.மு 800ச் சேர்ந்த பொனீசிய கல்வெட்டில் கண்ட படம் (அட்டவனை-3, பெட்டி4) ஒட்டகத்தைக் (gimel) குறித்ததாகவும் அதுவே உரோம-Cக்கு மூலம் என்றும் சொல்லப்பட்டிருந்த முந்தையக் கருத்தை இப்பொழுது பலரும் ஏற்பதில்லை. பல்வேறு மேலாய்வுகளுக்குப் பின்னர், ”அது ஒட்டகம் அல்ல பூமராங்கு என்று இப்போதைய அறிஞர்கள் முடிவு செய்திருக்கின்றனர்[8]. பூமராங்கின் படம் பிபிலோசு கல்வெட்டில்[7]  பல இடங்களில் காணப்படுகிறது. அந்தப் படம் படத்தமிழியிலும் இருக்கின்றது. பூமராங்கு என்னும் ஆயுதம், தமிழில் “வளைதடி”, “பாராவளை”, “வளரி”, “வட்டத்தவை” என்று பல்வேறு சொற்களால் அழைக்கப்பட்டுப் புழக்கத்தில் இருக்கிறது[9].  “புகரினர் சூழ் வட்டத்தவை” (பரிபா. 15), “பூநீர்பெய் வட்டமெறிய” (பரிபா. 21, 42) என்ற பரிபாடல் வரிகளைச் சான்றாக சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி மேற்கோள் காட்டுவது இங்கு நோக்கத்தக்கது. வளரி என்பது தமிழரின் தொன்மையான ஆயுதம் என்பர் அறிஞர். தொண்டியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு வளரியைச் சான்றாகக் காட்டுவார் மலேசிய அறிஞர் செயபாரதி[10]. வளரி பற்றிய ஆய்வு தமிழிற் பெருக வேண்டும்.

மேலும், ஆத்திரேலிய மேற்குப் பகுதியைச் சேர்ந்த பழங்குடிகள் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமராங்கைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று பல அறிஞர் சொல்லிவருகின்றனர். ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய ஈனியற் (genetics) தொடர்பு உண்டு என்று இற்றைக்கால ஆய்வுகள் காட்டுவது இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது. அண்மைய ஆய்வுகள், பூமராங்குகள் ஐரோப்பாவிலும் இருந்திருக்கின்றன என்று காட்டுகின்ற போதிலும், பல்வேறு பெயர்களிலும் வகைகளிலும் இருந்த தமிழ்ப் பூமராங்குகளின் தொன்மை கருத்தில் கொள்ளப்படவில்லை.

ஆகவே, உரோம-Cக்கு மூலமாக, பிபிலோசு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பூமராங்குக் குறியீடு படத்தமிழியைச் சேர்ந்தது என்று கொண்டு, ”வேறெந்த கல்வெட்டையும் எழுத்திணவு மூலமாகக் காட்டவில்லை” என்பதால், அதுவே பொனீசிய நெடுங்கணக்கிற்கு மூலமாக அமைந்திருக்கிறது என்று கருதுவது பொருத்தமாகும். அதொடு, கிரேக்கர்களின் இட-வல எழுதுமுறை மாற்றமும் இங்கு முக்கியம் பெறுவது கவனிக்கத்தக்கது. ஆக, இங்கேயும் தமிழியை உள்ளடக்கிய பிபிலோசு கல்வெட்டே முகன்மையுறுகிறது என்பதும், அக்கல்வெட்டு படிக்கப்படும்போது, மூலம் படத்தமிழியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டவனை -4: எழுத்து இணவு – D [4] (Concordance of letter D)

கிரேக்கர்கள் டெல்டா என்பதைக் குறிக்க இரண்டு வகையான சின்னங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  ஒன்று முக்கோண வடிவம். இன்னொன்று உரோம-D வடிவத்தை  ஒத்த சின்னம். பொனீசியர்கள் காட்டுகிற கி.மு 1000த்தைச் சேர்ந்த சின்னம் Daleth என்ற பெயரில் கதவினைக் குறித்திருக்கிறது என்றே இதுநாள்வரை வந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன் முதலெழுத்தான D ஒலியே பின்னர் உரோம-D க்கு நிலைபெற்றிருக்கிறது என்ற கருத்து ஆய்வுகளில் காணக்கிடைக்கிறது. பொனீசியர்களின் வல-இட எழுதுமுறையில் இருந்து கிரேக்கர்களிடம் நிலைபெற்ற இட-வல முறை உரோம-D எழுத்தின் வடிவத்திற்கு மூலமாக இருந்திருக்கிறது என்பதும், முக்கோண வடிவம் படத்தமிழி எழுத்துகளில் நிறையக் காணப்படுகிற படவுருவாக இருப்பதும், பிபிலோசு கல்வெட்டில் காணப்படுகிற படவுருவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இங்கும் தமிழி மேலையெழுத்துக்களுக்கு மூலமாய் இருந்திருக்கலாம்.

அட்டவனை -5: எழுத்து இணவு – E [5] (Concordance of letter E)


            அடுத்த எழுத்து உரோம E எழுத்தாகும். இந்த உரோம-E எழுத்து ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்தாகும்[11]. முந்தையக் காலத்து சினாய்ட்டிக்கு எழுத்து வகையான வாடி எல்-ஆல் கல்வெட்டில் காணப்படும் குச்சி மனிதன் படம் “he” எனப்பட்டு, அதில் உள்ள “h” ஒலியைக் குறிப்பிட்டிருக்கிறது. பொனீசியத்தின் “h” ஒலி வடிவம் மேலே அட்டவனை-5, பெட்டி3ல் இருக்கும் வடிவத்துக்கு ஆகியிருக்கிறது. இது குச்சி மனிதனின் சுருங்கிய வடிவம் என்றும் தலைப்புறம் கோடாக மாற்றி எழுதப்பட்டது என்பதாகவும் விளக்கங்கள் சொல்கின்றன. பொனிசீயர்களின் ஒலிப்பு “hey”, “hay” என்பதில் உள்ள எகரம் ஏறிய மெய்யொலியாக இருக்க, கிரேக்கர்கள் “hey” என்பதில் உள்ள உயிர் எகர ஒலியாக அமைத்தனர்.

குச்சிமனிதப் படம் வாடி எல்-ஆல் கல்வெட்டில் மட்டுமல்ல, படத்தமிழியில் பல வடிவங்களில் காணப்படுகிறது. குச்சி மனிதன் படத்தில் கண்ட வியப்பொலியே பொனீசிய, கிரேக்க ஒலிகளுக்கு மூலம் என்று இதன் ஒலிமூலத்தைக் குறிப்பிடுகின்றனர். கோடுகளை உடைய பொனீசியப் படம் படத்தமிழியிலும், பிபிலோசு எழுத்துகளிலும் காணப்படுகின்றன. இப்படியிருக்க, எகிப்திய-பொனீசியத்தில் மட்டுமே ஒலி ஒப்புமையையும், வடிவ ஒப்புமையையும் இருப்பதாகச் சொல்லப்படுவது சரியா? – என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

            எழுத்துத் தமிழியை நோக்குங்கால், தமிழ் யகர வடிவம் இன்றைய கிரேக்க-epsilon (), உரோம-E வடிவுடன் ஒப்புமை கொண்டுள்ளது. யகரம் தமிழில் அரை-உயிர் எழுத்தென்று சொல்லப்படும். யகரத்தின் தமிழி வடிவம்  ஆகும். இவ்வடிவத்தை எப்சிலானுக்கு ஒப்புமையாக எளிதில் கூறலாம். ஆயினும், படத்தமிழியின் எழுத்தும், ஒலியும் படிக்கப் படவேண்டியது முக்கியமாகிறது. கூடவே யகரச் சான்று பிறநாட்டுக் கல்வெட்டுகளில் தேடப்படவேண்டியதும் அவசியமாகிறது. உரோம-E, இ/ஈ ஒலிப்பு உள்ளிட்ட 15 வகையான ஒலிகளைக் கொண்டுள்ளதாக மொழி அறிஞர் கூறுகின்றனர்.  Ear, eat, education, they, europe, ape, pseudo, queue, pie என்ற இந்தச் சொற்கள் ஒவ்வொன்றிலும் ‘e’ யின் ஒலிப்பு மெல்லிய, வல்லிய வேறுபாடுகளைக் கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது.

அந்த ஒலிகளைக் குறிப்பிட எகிப்திய குச்சி மனிதனின் வியப்பொலி மட்டுமே மூலக் காரணம் என்பது போதுமான சான்றாக இல்லை. E என்ற எழுத்தின் உருவாக்கம், பல்வேறு ஒலிகளுக்குப் பயன்பட்டிருக்கிற அதே வேளை, அது இகர, எகர, யகர, ஐகார ஒலிப்புகளையும், சில நெடிலோசைகளையும்  உள்ளடக்கியிருக்கிறது என்பது முக்கியமானது. (கிரேக்கத்தில் நெடிலோசைகளுக்கு எழுத்துகள் உண்டு). இத்தனை உயிர் ஒலிகளை இது குறிப்பிட வேண்டுமானால்,  நுண்ணிய உயிரொலிப்பு கொண்ட ஒரு மொழியின் தாக்கமாக அது இருக்க முடியுமே தவிர, வெறும் வியப்பொலி மட்டும் கொண்ட மொழியின் தாக்கமாய் இருக்க முடியாது. நுண்ணிய உயிரொலிப்புகளைக் கொண்ட தமிழியின் அடிப்படைகளை எடுத்துக் கொண்டு, இகரத்துடன் பிற எழுத்துக்களைச் சோடியாக்கி(letter pairs), அவர்களின் சொற்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்று கருத இடமுண்டு. ஆகவே, உரோம-E யின் எகிப்திய மூலமும் பொருத்தமானது இல்லை.

மேற்சொன்ன ஐந்து எழுத்துகளைப் பார்க்கும் போது தமிழி, படத்தமிழியின் தாக்கம் செமித்திய மொழிகளில் நிறைய இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகளைப் புலப்படுகிறது. கிரேக்கர்கள் கி.மு 800-600 காலத்தில் உயிரெழுத்தை உருவாக்க தமிழி முகன்மையான பங்கு வகித்திருக்கலாம். இதற்குச் சான்றாக இருக்கும் முக்கிய எழுத்துகளான பிபிலோசு, படத்தமிழி எழுத்துகள் போன்றவை இன்னும் படிக்கப் படாமல் இருப்பது துல்லியமான எழுத்திணவு வரலாற்றை மறைக்கிறது.  வாடி எல்-ஆல், செராபிட்டு கல்வெட்டுகளை ஆராய்ந்த தொல்லியல் அறிஞர் டேர்னல் (J.Darnell) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

 “The writing indeed proved to be alphabetic. The symbols are letters closely related to those of Sinai and Canaan. The two inscriptions cannot be deciphered confidently due to the absence of word breaks and our familiarity with some of the letters. Nobody knows for sure if the writing runs left to right or right to left.”

டேர்னலின் கருத்து இதுவாகினும், பின்னர் இக்கல்வெட்டுகள், பல ஆய்வாளர்களால் மூலமாக, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பொனீசிய, கிரேக்க, உரோம நெடுங்கணக்குக்கு மூலமாகக் காட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளே துல்லியமாகப் படிக்கப் படாமல், ஊகங்களை அதிகங் கொண்டதாக இருக்கின்றன. அதே வேளையில் படிக்கப்படாத கல்வெட்டுகளும் நிறைய இருக்கின்றன. ஆகவே, சினாய், கானன் கல்வெட்டுக்கள் ஆழ்ந்து படிக்கப்படுமானால், தமிழில் இருந்து செமித்திய மொழிகள் பெற்றுக் கொண்ட தொடர்பு மேலும் வெளிவர வாய்ப்புண்டு என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.

பல்வேறு வணிக, அரசத் தொடர்புகளை இந்நாடுகள் தமிழகத்துடன் கொண்டிருந்ததற்கு சான்றுகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிலவற்றையேனும் இங்கு தொடர்ந்து காண முடியும்.

தமிழியின் இயல் பாதைகளும் பயணங்களும்

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய உலகப்படம்[14]

இந்த நிலப்படத்தில், தொன்மையான நாகரிகங்களின் முக்கிய இடங்களும், அவை தமிழோடு தொடர்பு கொள்ளக் கூடிய பாதைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. பாதை-1 என்பது தமிழர் வடநாடுகளோடு (இந்தியாவின் வடமாநிலங்களோடு) தொடர்பு கொண்ட மிக அடிப்படையான தக்கணப் பாதையாகும்[15]. இது தமிழ் நிலங்களை எல்லாம் ஒரு சரத்தில் கோர்க்கும் பாதையாகும். அது தகடூர் வழியாக மூவேந்தர் நிலத்தை நூற்றுவர் கன்னர் தலைநகரான படித்தானம், அசந்தா, எல்லோரா, அவந்தியின் தலைநகரான உஞ்சை , தொழுனை (யமுனை) ஆற்றங்கரையில் உள்ள கோசாம்பி வழியாக மகதத்தின் பாடலி/இராசகிருகத்தோடு சேர்க்கும் பாதையாகும். கி.மு.600 களில் இருந்து கி.பி.300 வரை தமிழருக்கு வணிகம் நடத்த உகந்த பாதையாக இருந்தது அதுவேயாகும். தமிழ் நிலத்தை வடபுலத்துடன் இணைக்கும் இந்தப் பாதை மூலமே முதல் தமிழ்ப் பரவல் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்தப் பாதையின் வழியாக மராட்டியத்தில் இருக்கும் சோப்பாராவையும் (இற்றை மும்பைக்கு அருகில் உள்ள துறைமுகம்), கூர்ச்சரத்தில் இருக்கும் பிருகுகச்சத்தையும் (நர்மதையாற்றின் கழிமுகத்தில் இருக்கும் பரூச்) எளிதில் அணுக முடியும். சோப்பாராவும், பிருகு கச்சமும் நூற்றுவர் கன்னரின் துறைமுகங்களாகும். கிரேக்கரின் “Periplus of the Erythrean Sea” என்ற நூலிற் பேசப்படும் துறைமுகங்களும் இவையேயாகும்.

பாதை-2 என்பது, வடபுலத்தில் சிந்துவெளியையும் வடமேற்கில் மெசபடோமியாவையும் இணைக்கும் நிலப்பாதையாகும். பாரசீக வளைகுடா வழியேயும் மெசபடோமியாவின் பாபிலோனை அடையலாம். (இது தான் பாபிரு என்று புத்த சாதகக் கதைகளில் சொல்லப்படுகிறது. பாபிலோனிற் கிடைத்த பல்வேறு ஆப்பெழுத்து முத்திரைகள் மேலகம் (Meluhha) என்றழைக்கப்பட்ட சிந்து சமவெளி பற்றிக் குறிப்பிடுகின்றன). பாபிலோனில் இருந்து பொனீசியக் கடற்கரை நகரங்களுக்குப் பொருள்கள் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள்/நகரங்களுக்குப் பெருவணிகம் நடந்திருக்கிறது. சிந்துச் சமவெளி நாகரிகத்தையும் யூப்ரடீசு-டைகிரிசு பாயும் மெசபடோமிய நாகரிகத்தையும் இணைக்கும் பாரசீகக் கடல்வழியேயும் பெருவணிகம் நடந்திருக்கிறது[16]. ஆயினும், கடலோடும் நுட்பம் முதிர்ச்சி அடைவதற்கும் முந்தைய நாகரிகம் கொண்ட இரு வெளிகளுக்குமான போக்குவரத்து நிலப்பாதை வழியாகவே முந்தி நடந்திருக்க வேண்டும். ஆகவே, தமிழியின் தொடர்பு மேற்காசியப் பகுதிகளுக்கு  நிலவழியாகவே முதலில் நிகழ்ந்திருக்கலாம். திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிராகி, குருக்கு போன்ற மொழிகள் பேசுவோர் பாக்கித்தான், பலுசித்தான் பகுதிகளில் இன்றும் இருக்கின்றார்கள். சிந்துவெளியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் படத்தமிழி எழுத்துகள் நிறைவாகப் படிக்கப்படாமல் இருப்பினும் பிராகி, குருக்கு போன்ற மொழிகளில் படத்தமிழியின் தாக்கம் இருக்கின்றது என்று அறிஞர்கள் உறுதியாகக் கருதுகின்றனர்[17]. தற்போதைய பிராகி வரிவடிவம் அரபியாக இருப்பினும் அந்த மொழி திராவிட மொழி என்பதில் உலகம் ஒத்துப் போகிறது. இம்மொழி பேசும் மக்கள் 40 இலக்கங்களுக்குள் இருந்தாலும் தமிழியின் பாதையில் இன்றும் பெரிய சான்றுகளாக நிற்கின்றனர்.

            அதைத் தொடர்ந்து, இன்றைய ஈரான் பகுதியில், மெசபொடோமியாவின் கிழக்கே, கி.மு3200-1100 காலத்தில் இலாமித்துகளின் அரசு (Elamite Kingdom) அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியும் கி.மு 6ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது. மெசபொடோமியாவிற்கு இணையாக, போட்டியா பேரரசாகவும் இது திகழ்ந்திருக்கிறது. சிந்துவெளிப் பகுதியில் இருந்து பாரசீக வளைகுடா வழியோ, நிலவழியாகவோ மெசபொடோமியாவிற்குச் சென்றால் இலாமித்து நாட்டைக் கடந்துதான் செல்ல முடியும். அப்படி முக்கியம் வாய்ந்த இலாமித்துகளின் இலாமித்து மொழியைத் தாங்கிய தொல்லியற் சான்றுகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இன்றுவரை அவை முழுமையாகப் படிக்கப் படாமல் இருக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் தொடர்ந்த  முயற்சிகள் மெல்ல  முன்னேறுகின்றன என்று சொல்லலாம்.  டேவிட் மெக் ஆல்ப்பின் அவர்களின் மொழியாய்வு[18] இலாமித்துகளின் மொழி இலாமோ-திராவிட மொழிக்குடும்பத்தைச் (Elamo-Dravidian) சார்ந்தது என்றும், “இலாமித்து வினைச்சொற்களும் திராவிட மொழிக்குடும்ப வினைச்சொற்களுக்கும் வேரில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டு இருக்கின்றன” என்றும் நிறுவுகிறது.

அறிஞர் எலாக்கு (Hallock) உருவாக்கிய இலாமிய அகராதியில் இருந்து, அயற் சொற்களை நீக்கி, தூய இலாமித்துச் சொற்களாக 270 சொற்களை எடுத்து (அதில் வினைச்சொற்கள் பெரும்பகுதி), திராவிட வேர்ச்சொல் அகராதியில்[19] உள்ள சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், 25% சொற்களின் மூலம் ஒன்றே என்று நிறுவியிருக்கிறார் டேவிட் மெக் ஆல்ப்பின். மேலும் 12% சொற்களில் தொடர்பிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தென்திராவிட மொழிக்கும் மேற்காசிய இலாமித்து மொழிக்கும் இருக்கும் தொடர்பினைக் கண்டு வியக்கும் மெக் ஆல்ப்பின், “By training, I am a dravidianist linguist; very much aware of the horrendous errors that non-Dravidianists have made using Dravidian Materials (cf. the Scandinavions and Indus Valley scripts), I have tried  to be very cautious on Elamite Materials.”, என்று சொல்வது பொருள் பொதிந்தது. இலாமித்து, அருகில் உள்ள மெசபடோமியாவின் ஆப்பெழுத்து (cuniform) வரிவடிவை ஏற்றிருந்தாலும், அதன் மொழி அமைப்பு மூன்றில் ஒரு பகுதிக்கும் மேல் தொல் தமிழ் மூலத்தைக் கொண்டிருப்பது, தமிழின் தாக்கம் வலுவாக இருக்குமளவிற்கான தொடர்பினைக் கொண்டிருந்ததையே காட்டுகிறது. மேலும், மேற்காசியப் பகுதிகளில் முக்கிய இடம் வகித்த இந்த நாடு, தமிழோடு கூடிய தொடர்பை மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிகளுக்குக் கொண்டுபோகும் முக்கிய இடமாக இருந்திருக்கிறது.

மெசபடோமிய பாபிலோன், இலாமிய சூசா, அன்சான் போன்ற நகரங்களில் இருந்தே, பாரசீக வளைகுடாவின் நீர்வழியாகவோ, சிந்து வெளிப் பகுதிகளில் இருந்து நிலவழியாகவோ போகும் பொருள்களை, சிரியா, பாலத்தீனம், பொனீசியா, பாமிரா(Palmyra) போன்ற பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் இடங்களாக இருந்திருக்கின்றன. இலாமித்து நெடுங்காலம் வலுவான நிலமாக இருந்திருந்தாலும், அதன் பழம்-இலாமியக் காலமான (கி.மு 2600-1500) மிகவும் குறிப்பிடத்தக்கக் காலமாகும். படத்தமிழியாக, அசைத்தமிழியாக செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் ஓங்கியிருந்த காலம் கி.மு2500-1900 என்பர் அறிஞர்.

பொனீசியாவின் பிபிலோசு கல்வெட்டு எழுத்துகளின் காலம் கி.மு2000 என்று பார்த்தோம்; அவற்றில் பல பழந்தமிழ் எழுத்து வரிவடிவங்கள் காணப் படுகின்றன;  அவற்றில் உள்ள உண்மைகள் தற்போது வெளிவராமல் இருக்கின்றன. பிபிலோசுக்கும் சிந்துவெளிக்கும் இடையில் உள்ள இலாமித்தின் பழம்-இலாமிய சொற்களில் 37% அளவுக்கு தமிழோடு மொழி ஒப்புமை இருக்கிறது; ஆனால், இலாமித்துக் கல்வெட்டுகளும் அதிகமாகக் கண்டுகொள்ளப் படாமல் இருக்கின்றன. இந்தப்புறம், சிந்துவெளி எழுத்துகளும் இன்னும் ஆய்வுகள் நிறைவடையாமல் இருக்கின்றன. இப்படி, சம காலத்தில் ஓங்கி இருந்த மூன்று முக்கிய இடங்களின் தொல்பொருள்கள் ஆயப்படாமல், எகிப்திய, பாபிலோனிய எழுத்துகள் மட்டுமே முன்வைக்கப்பட்டு, கிரேக்க, உரோம, பொனீசிய எழுத்துகள் ஒன்றோடொன்று தொடர்புப் படுத்தப்பட்டு, அவை இந்தை-ஈரோப்பியம் என்ற பெயரில் சமற்கிருதத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு, ஒருசார்பு உடைய ஆய்வுகளாகப் போய்க் கொண்டிருக்கின்றன. மற்றவைகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன என்ற ஐயத்தை, இப்போக்கு வலுவாக ஏற்படுத்துகிறது.

தமிழெழுத்து படவுருக்களாகத் தொடங்கி, அசையுருக்களாக வளர்ச்சியடைந்து பின்னர் அகரவரிசை எழுத்துக்களாக மாறின என்பார் இரா.மதிவாணன்[20]. ஆண்ட்ரூ இராபின்சன் தனது நூலில்[21], சிந்துவெளியை ஆராய்ந்த அறிஞர் எசு.ஆர்.இராவ் தனது நூலில்[22] குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி, சிந்துவெளி எழுத்துகளின் முகன்மையை பின்வருமாறு கூறுவார்.

“Rao postulates the eventual development of an even smaller set of signs, about 20 in all. Indeed, he assumes that the Indus script became alphabetic, and that it was the Indus Valley Civilization (or at least it’s successor culture) which invented the alphabet. Rao believes, it was then tramsmitted to Palestine in the mid 2nd Millenium B.C”.  

எசு.ஆர்.இராவ் அவர்கள், சிந்துவெளி படவுருக்கள் எழுத்துகளாக வளர்ச்சியடைந்தன என்றும், அவ்வெழுத்துகள் பாலத்தீனத்திற்கு கி.மு-2000-1500 காலத்தில் சென்றன என்றும் கூறுவது மிக முகன்மையானது. பாலத்தீனமும், பொனீசியாவும் பக்கத்துப் பக்கத்து நாடுகள் ஆகும். படிக்கப்படாமல் இருக்கும் பொனீசிய பிபிலோசு கல்வெட்டில் தமிழி வடிவங்கள் இருக்கின்றன என்பதை நோக்கும்போதும், இலாமியத்தில் மொழி ஒப்புமையை நோக்கும்போதும், தமிழ் மொழியின் பரவலும் தாக்கமும் பொனீசியாவிலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் சிந்துவெளி நாகரிகம் ஓங்கியிருந்த காலத்திலேயே, அதாவது கி.மு 2500-1900 காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணவைக்கிறது. அவையே, பொனீசிய, கிரேக்க, உரோம நெடுங்கணக்குகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கக் கூடும். மேலுள்ள நிலப்படத்தில் உள்ள பாதை-2, தமிழ் எழுத்துகளை, மொழிக்கூறுகளை மேற்காசிய, நடுத்தரைக்கடற் பகுதிகளைச் சென்றடைய வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

பாதை-3 என்பது, தமிழகத்துக்கும் மேலை உலகிற்கும் இடையிலான செங்கடற்பாதை ஆகும். கிரேக்கர்கள், பொனீசியர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள் உள்ளிட்ட நடுத்தரைக் கடலைச் சுற்றிய நாடுகள் அனைவரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த பாதை இதுவாகும். கி.மு 1000 ஆன சாலமன் காலத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றி ஐரோப்பியர் இந்தியாவிற்கு வந்தனர் என்ற கருத்துகள் நிலவினாலும், பாரசீக நீர்ப்பாதையை அறிந்திருந்த மேலை உலகத்திற்கு, அரேபியர்களால் மிக அருகில் அணுகப்பட்ட இந்தியக் கடற்கரையையும் குறிப்பாக முசிறியையும் நன்கு தெரிந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. இப்பாதை தமிழகத்தின் முசிறித் துறைமுகத்தையும் தென்பாண்டி நாட்டுத் துறைமுகங்களையும், தமிழீழத் துறைமுகங்களையும் இணைத்தது. தென்மேற்குப் பருவக் காற்றையும் வடகிழக்குப் பருவக் காற்றையும் அறிந்து கடலோடிய தமிழ் நிலங்களின் பரதவர்களையும் வணிகர்களையும் கண்டு மேலை உலகமும் இத்துறைமுகங்களைத் தேடி வணிகத்திற்கு வந்தது. முத்து, மணி, தங்கம் போன்றவை இந்திய உள்நாட்டு வணிகத்தையும், மிளகு, வெள்ளி, கார்ணலியன், செந்நீலச் சாயம் போன்ற பொருட்கள் வெளிநாட்டு வணிகத்திற்கும் தூண்டுகோல்களாய் அமைந்தன. மிகத் தொன்மையான இவ்வெளிநாட்டு வணிகப் பாதைக்கு, மேலை உலகம் மிகப் பிற்காலங்களில், அதாவது கி.மு 1ஆம் நூற்றாண்டு வாக்கில், இப்பலாசு பாதை/காற்று  என்றும் பெயரிட்டுக் கொண்டது.

பொனீசியா வணிக வல்லரசாக கி.மு 1200-300 காலங்களில் திகழ்ந்தது. கி.மு 1500க்குப் பின்னர் எகிப்தின் ஆளுமை அந்தப் பகுதியில் வற்றத் தொடங்கியது. கி.மு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (கி.மு967) இசுரேலின் அரசன் சாலமன் மெசபடோமியாவிலிருந்து எகிப்து வரை ஆண்ட பேரரசனாக இருந்திருக்கிறான். பொனிசீயாவும் இசுரேலும் வணிகப் பங்காளர்களாகவும், நேயநாடுகளாகவும் இருந்திருக்கின்றன. நடுத்தரைக் கடற் பகுதிகளில், தொலைதூரக் கடலோடும் நுட்பத்தை வளர்த்தவர்கள் பொனீசியர்களாகும். கிரேக்கர்கள், பொனீசியர்களிடம் கடன்பெற்றவைகளில் முக்கியமானவையாக இரண்டு செய்திகளை  உலகம் சொல்கிறது:

ஒன்று, பொனீசியர்களின் எழுத்துகள்,
மற்றொன்று தொலைதூரக் கடலோட்ட நுட்பம்.

பொனீசியர்கள் இந்தக் கடலோடும் நுட்பத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்பது தனியே ஆயப்படவேண்டியதாகும். பொனீசியர்கள், யூதர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், கிரேக்க-உரோமர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு வந்தது, பொனீசியர்கள் அந்தப் பகுதியில் வளர்த்து விட்ட “தொலைதூரக் கடலோடும் நுட்பத்தைக்” கைக்கொண்டேயாகும்.

கி.மு முதலாம் நூற்றாண்டு காலங்களில், கிரேக்கம், பொனீசியா, இசுரேல் ஆகிய பகுதிகளில் இருந்து முசிறிக்கு வர 90 நாள்கள் பிடித்திருக்கின்றன. எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து 5000 கி.மீ தொலைவில் உள்ள முசிறி வர 70 நாள்கள் ஆகியிருக்கின்றன. இக்காலக் கட்டம் அவர்களின் கடலோட்டத்தில் வளர்ச்சி உண்டாகிய காலமாகும்[23]. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலோடும் திறன்பெற்றிருந்த தமிழ் மூவேந்தர் நாடுகளுடன் , கி.மு 1000த்தைச் சேர்ந்த யூதப் பேரரசன் சாலமன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு உலகம் அறிந்த ஒன்றாகும்.

சாலமன் காலத்தில் நடுத்தரைக் கடற்பகுதியில் நடைபெற்ற எல்லா நாட்டு வணிகங்களிலும் பேரரசன் சாலமனுக்குப் பெரும் பங்கு கொடுத்தார்கள். அவரின் பேரரசு, யூத மாநிலமாகத் தனிச் செல்வாக்குடன் இருந்ததொடு, இசுரேலியக் குடியேற்ற நாடுகளாகப் பலவற்றை வைத்திருந்தும், யூதப் பகுதி தவிர்த்த தனது பேரரசை 12 மண்டலங்களாகப் பிரித்தும் ஆண்டிருக்கிறார். சாலமனுக்காக பலநாடுகளும் தாங்கள் வணிகஞ் செய்து சாலமனின் பங்கைக் கொடுத்துள்ளார்கள். பலநாடுகளைத் தனக்காக வணிகஞ் செய்யப் பணிக்கவும் செய்திருக்கிறார். சாலமனோடு நெருங்கிய நட்பு கொண்ட பொனீசிய அரசர் இராம்(Hiram) [25][16]  , ஓபிருக்குத்(Ophir) தன் கப்பல்களைக் காவலொடு அனுப்பி 4,50,000 பவுண்டு எடையுள்ள தங்கத்தைக் கொண்டு வந்து சாலமனிடம் ஒப்படைத்து, தனது கூலியாக 1,20,000 பவுண்டு தங்கத்தைப் பெற்றுக் கொண்ட வரலாறு, முதல் “Book of Kings” என்ற ஆவணத்தில் இருப்பதை பிரகாசு சரண் பிரசாத்து[25]  மேற்கோள் காட்டுவார்.

இது ஓபிர் என்ற இடத்தையும், சாலமனின் வணிக ஆளுமையின் தன்மையையும் செய்தியாகத் தருகிறது. “Gold Of Ophir to Beth-Horon…30 Shekels” என்ற சாலமனின் கல்வெட்டு[26]  ஓபிர் என்ற இடம் எது என்ற தேடலை ஆய்வுலகத்தில் ஏற்படுத்தி, அதன்பாலான உலகின் கருத்துகள் இன்னும் ஊகங்களாகவே இருக்கின்றன. ஓபிர் என்ற இடம் பற்றி மேலும் பார்க்கும் முன், விவிலியம்[27] கூறுகின்ற “The king had a fleet of large ‘Tarshish’ ships along with Hiram's fleet; once every three years the ‘Tarshish’ fleet came in, bringing gold, silver, ivory, apes and peacocks. என்ற முக்கியமான வாக்கியத்தையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.

ஈழநாட்டின் வடமுனை பழங்காலத்தில் பலேசிமுண்டு (அ) பழைசிமுண்டு என்று அழைக்கப் பட்டிருக்கிறது(படம் பார்க்க). தொல்பழங்காலத்தை ஆராய்ந்த பல அறிஞர்களும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மெகத்தனீசின் குறிப்புகளில் இருந்து இவ்விடத்தில் “Paleogoni” என்ற பெயரில் குடிகள் இருந்தனர் என்று பிளினி[24] கூறுகிறார். பிளினியின் குறிப்புகளில் இருந்து இந்தப் பழசிமுண்டு நகருக்கு அருகில், தெற்கு முகம் பார்த்த ஒரு பெரிய துறைமுகம், அதே பெயரிலேயே இருந்தது தெரியவருகிறது. ஈழத்தின் வடமுனையில் தமிழகம் நோக்கித் திரும்பியவாறு இருக்கும் நிலத்தில் இது இருந்திருப்பது தெரியவருகிறது. இந்தத் துறைமுகத்திற்கு அருகில் இருந்த அடுத்த துறைமுகம் தமிழகத்தின் கோடிக்கரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது (கோடிக்கரை = Coliacum). பலேசிமுண்டு பல தீவுகளால் ஆனது என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த விவரிப்பு அப்படியே இன்றைய யாழ்ப்பாணத்தை ஒத்திருக்கிறது. ஆகவே, யாழ்முனையில், கோடிக்கரை நோக்கி நீளுகின்ற நிலத்தில் பலேசிமுண்டு துறைமுகம் இருந்திருக்கிறது. (இந்தப் பலேசிமுண்டு என்பது இன்றைய பலாலி நகரத்தின் பெயரை நினைவூட்டுவது நோக்கத்தக்கது). பலேசிமுண்டு நகரத்தில், சாலமன் அவரின் முகவர்கள், வணிகர்கள், அலுவலர், ஊழியர்களுக்குத் தேவையான குடியிருப்பையும் அலுவலகத்தையும் அமைத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்தும், வடக்கே கங்கைச் சமவெளியில் இருந்து கடல்வழியாகவும், கீழைச் சீன தேயங்களில் இருந்தும் வருகின்ற பொருள்களைச் சேர்த்து வைக்கும் இடமாகவும், மேலை உலகில் இருந்து வரும் பொருள்களை இப்பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பும் இடமாகவும் இது இருந்திருக்கிறது; கொள்முதல், விற்பனை, பண்டமாற்று மையமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. மேலே பாதை-3 முசிறிக்கும், அதே பாதை சற்று கீழே இறங்கி பலேசிமுண்டுவுக்கும் வருகிறதைக் காணலாம். அதொடு, பாதை-4, பாதை-5 ஆகியவற்றை இணைக்கும் மிகப்பெரிய மையமாக இது இருந்திருக்கிறது. இதற்கு ஒப்படி என்று பெயர்.

தமிழில் ஒப்படி என்ற சொல், இரண்டு பொருள்களைத் தருகிறது. ஒன்று, “ஒதுங்கிய வளைகுடாவில் அமைந்த இயற்கைத் துறைமுகம்”[9]; இரண்டாவது பொருள், கண்காணி, மேற்பார்வையிடும் பணி, அல்லது திரட்டுப்  பணியைக் குறிக்கிறது. துறைமுகம், அதனை ஒட்டிய நகரம், நகரத்தில் மிகப்பெரிய பன்னாட்டு வணிக மையம் இருந்திருக்கிற காட்சியைக் காணமுடிகிறது. ஆகவே, பலேசிமுண்டு அரசர், தமது நாட்டில், சாலமன் கூட்டணி நாடுகளுக்குத் தேவையான, குடியிருப்பு, வணிக, நாவாய் நுட்ப வசதிகளுக்காக, ஒப்புரவின் அடிப்படையில் தனியே இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த இடம் “ஒப்படி” என்று அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றைக்கும் அடுப்படி, இரயிலடி போன்ற சொற்கள் புழக்கத்தில் உண்டு. அதைப் போன்றே இச்சொல் அமைந்திருக்கிறது.

துறைமுகம் சார்புடைய யவன, உரோம, பொனீசிய, எபிரேயர்களுக்கு அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு உகந்த மாதிரி, உள்ளூர்ப் பழக்க வழக்கங்களுக்கு ஊறு வராத வண்ணம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தனி இடத்தை ஒப்படி என்று அழைத்திருக்கிறார்கள். இந்த ஒப்படியைத்தான், சாலமன், ஓபிர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒப்படியின் திரிவாக, எபிரேய வழக்காக இந்த ஓபிர் என்ற சொல் முதன்முதலில் உருவாகியிருக்கிறது. அதற்கு முன் ஓபிர் என்ற சொல் எபிரேயத்தில் இல்லை. பிற்காலத்தில், உரோமர்கள், அதனை “ஒப்பிடம்” (Oppidum)[30][31] என்று அழைத்திருக்கிறார்கள். சீசர் இச்சொல்லை கி.மு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கியிருக்கிறார். ஒரு நாட்டின் சிறப்புக் குடியேற்றங்கள், நிருவாக வசதிகளுக்காக அமைக்கப்படும் பாதுகாப்பு கொண்ட இடங்களுக்கு ஒப்பிடம் என்ற பெயர் உரோமர்களால் வைக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் பல இடங்களிலும் ஒப்பிடங்கள் கி.மு 200க்குப் பின்னர் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அந்தச் சொல்லையே “பலேசிமுண்டு ஒப்பிடம்” (மேலுள்ள படம் பார்க்க) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறித்திருக்கின்றனர். (பலேசிமுண்டு என்ற சொல், பலேசிமுடி என்று இப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பலேசி/பழசி, முண்டு, முடி என்ற சொற்கள் தனியே ஆயத்தக்கவை). இந்த ஒப்படியில் இருந்துதான் சாலமனுக்கு நாவாய் நாவாயாகத் தங்கமும் பல்வேறு பொருள்களும் சென்றிருக்கின்றன. அவை, பல்வேறு நாடுகளில் இருந்து திரட்டப்பட்டதாகும்.

ஒப்படியில், கீழை நாடுகள், தமிழகம், ஈழம், கங்கைவெளி போன்ற இடங்களில் இருந்து திரட்டப்பட்ட பொருள்கள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை எபிரேயத்திற்குச் சென்றிருக்கின்றன. விவிலிய பழைய ஏற்பாட்டில் “once every three years the ‘Tarshish’ fleet came in, bringing gold, silver, ivory, apes and peacocks என்று குறிப்பிடப் பட்டிருப்பது மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. “சாலமன் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நாவாய்களை அனுப்பி, ஓபிரில் இருந்து செல்வம் கொண்டு வந்தான்” என்று பொருள் கொண்டு, ஒரு கடலோட்டத்திற்கு மூன்றாண்டுகள் பிடிக்கும் இடம் எதுவோ அதுதான் ஓபிர் என்று எங்கெங்கோ பலர் தேடிக்கொண்டிருக்கும் நிலை இந்தத் தவறான புரிதலால் ஏற்பட்டதுதான்.  “கங்கை வெளியைச் சார்ந்த அலகாபாத்தில் இருந்து, பொருள்கள், ஈழத்தின் (சிலோனின்) தலைநகரான பலேசிமுண்டுவிற்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பிற இடங்களுக்குச் சென்றது” என்ற  குறிப்பினை பிளினி கூறியிருக்கிறார்[51]. இக்குறிப்பு நேரடியாக கி.மு 1000 காலத்தைச் சேர்ந்த பயணத்தைக் குறிப்பிடாவிடிலும் பலேசிமுண்டுக்கும் அங்கிருந்த ஒப்படி எனப்பட்ட வர்த்தக/வணிக அமைப்பிற்கும் வலு சேர்ப்பதாக இருக்கிறது. Certain Indian commodities were imported into Babylon even in the days of Solomon c. 900 B. C. and they were known to the Greeks and others under their Indian names”   என்று கூறி, சாலமன் காலத்திலேயே தமிழகத்துடன் இருந்த தொடர்பு பற்றிக் கூறுகிறார் கௌரங்கநாத் பானர்சி[52]. மேலும்Gk. Oryza is identical with the Tamil, arisi or rice” என்று சொல்வதன் மூலம் அந்தத் தொடர்பு தமிழ் நிலங்களோடு இருந்தது உறுதியாகிறது.

சிலப்பதிகாரத்தில் “கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும், பயனறவு அறியா யவனர் இருக்கையும்” என்று இந்திரவிழவூரெடுத்த காதையில் வருகின்ற பாடல் அடிகள்(9,10)  சொல்லும் கருத்தும் இதுதான். அரேபிய நாடுகளில், தமது மக்களின் பழக்க வழக்கங்களில் இருந்து வேறுபடுகின்ற பிற நாட்டுக் குமுகத்தினருக்கு, தனியே குடியிருப்பு அமைத்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. தமது நாட்டின் சில பழக்க வழக்கக் கட்டுப்பாடுகள், அந்தக் குடியிருப்புகளில் செலுத்தப்படாது. இது பிறநாடுகளுடன் கொண்டிருந்த ஒப்புரவின் அடிப்படையில் பிறநாட்டு மக்கள் தம் நாட்டில் நீண்ட நாள்கள் இருந்து பணியாற்றும் வண்ணம் செய்யப்படும் ஏற்பாடாகும். இதைத்தான் அன்று தமிழர்கள் வெளிநாட்டாருக்குச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று இளங்கோவடிகளாரின் பாடல் வரிகள் காட்டுகின்றன. “கயவாய் மருங்கு என்றால் – துறைமுக (அ) ஆற்றுக் கழிமுகப் பகுதி; இப்பகுதியில் யவனர் இருக்கை இருக்கிறது. அது இடையறாது விழிப்புடன் இருக்கிறது. அப்பகுதி, உள்ளூர்க் குமுகத்திடம் இருந்து “தனித்து” இருத்தப்பட்டிருப்பதைத்தான் ‘காண்போர்த் தடுக்கும்’ என்ற சொல்லால் உணர்த்துகிறார் சிலம்பாசிரியர். அது ஒரு சுற்றரணுடன் கூடியதாக இருந்திருக்கலாம் என்பது கருதத்தக்கதே.

ஆகவே, Ophir என்ற இடம் பழம் யாழ்ப்பாணத்தின் பலேசிமுண்டு என்ற இடத்தில் இருந்த ஒப்படியே ஆகும். இது சாலமனால் Ophir என்ற அழைக்கப்பட்டு, பிற்காலங்களில் Oppidum என்ற இலத்தீனச் சொல்லை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பலேசிமுண்டும், ஒப்பிடமும் 18 ஆம் நூற்றாண்டு அறிஞர்களால் நிலப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. மிகப் பெரும் வணிக உறவை தமிழ்நிலங்கள் கொண்டிருந்த இந்தக் காலத்தில் பொனீசிய, கிரேக்க, எபிரேய வணிகர்கள் தமிழை நிறையப் புழங்கினார்கள். பொனீசியர்கள், கி.மு 1000ல் தமது நெடுங்கணக்கை உருவாக்கிய போது தமிழியையும் உள்வாங்கிக் கொண்டார்கள். அதன் விளைவாக தமிழி அகரம் அவர்களின் நெடுங்கணக்கில் நுழைந்தது. சாலமனுக்காக, பொனீசிய அரசர் இராம் ஒப்படிக்கு (Ophir) வந்து செல்வங்களைக் கொண்டு சென்றது[16][25]  இதே காலக்கட்டத்தில் இருக்கலாம் என்பதையும் மேலே இக்கட்டுரை காட்டுகிறது. கிரேக்கர்கள், தமிழ் உயிரெழுத்துகளை, கி.மு.800 ஆண்டு காலத்தில் தம் மொழியை மாற்றிய போது புகுத்தினார்கள். அவர்கள் பொனீசியத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ளவில்லை – தமிழியையும் உள்வாங்கிக் கொண்டார்கள் என்றும் ஓர்ந்து பார்க்கலாம். ஏற்கனவே தமிழி மேலைத்தேயத்தில் பரவியிருந்தாலும் உயிரெழுத்துகளை உணர்ந்து கிரேக்கம் உள்வாங்கிக் கொன்டது சாலமன் காலக்கட்டத்தில் மேலைதேயங்கள் தமிழகங்களோடு உறவு கொண்டிருந்த போது இருக்கலாம். தமிழ் நிலங்களில் நடந்த பெருவணிகம் மிக நெருங்கிய  மொழித் தொடர்புகளை ஏற்படுத்தியது என்பது தெளிவு.

குறிப்பு: ஓபிர் என்ற இடத்தைப் பற்றி தமிழறிஞர்களின் பிற இரண்டு கருத்துகள் இங்கு குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. ஒன்று, அது தொன்மையான உவரித் துறைமுகம் என்பதாகும். (உவரி திருச்செந்தூருக்கு அருகிலிருந்து கூடங்குளம் போகும் வழியில் இன்றுள்ளது.) உவரி என்ற சொல்லில் உள்ள தமிழ் வகரம் மேலை மொழிகளிலும் பேச்சுகளிலும் மெலிந்த பகரமாவதை (உவரி>Ophir) மொழியியல் வழியாக அவர்கள் சுட்டிக்காட்டுவர். இரண்டாவது கருத்தை கே.டி.இராசசிங்கம்[39] என்ற அறிஞர் எழுதியுள்ளார். அவரும் யாழ்முனைக்கு அருகிலேயே ஓபிர் இருந்ததாகச் சொல்கிறார். தற்போது அந்நகரம் கடலில் மூழ்கிவிட்டதாகவும் அவரின் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாகர்குலத்தின் ஒரு குடியான ஓவியர் குடி அங்கு வாழ்ந்ததென்றும் அதனாலேயே “ஓவியர் நாடு” என்பது ஓபிராக எபிரேயத்தில் திரிந்திருக்கிறதென்று அவர் வாதஞ் செய்வார். இவ்விரண்டு கருத்துகளுமே “ஒப்படி” என்ற இக்கட்டுரையின் கருத்தோடு ஒப்பாய்வு செய்யத்தக்கன என்பது எனது கருத்தாகும்..

இந்தப் பெருவணிகத்தில், பொனீசியர்கள், அரேபியர்கள், எகிப்தியர் போன்றோர் உரோமாபுரியின் செல்வம் மிகுந்த வாழ்க்கைக்குத் தேவையான  பொருள்களைத் தரும் இடைத்தரகராகப் பெரிதும் செயல்பட்டிருக்கிறார்கள். முசிறியில், ஒப்படியில் இருந்து கொண்டு சென்ற பொருள்கள் 28 மடங்கு அதிக விலைக்கு உரோமாபுரியில் விற்கப் பட்டிருக்கின்றன என்றால் தமிழகத் தொடர்பின் வலிமையை எப்படியிருந்திருக்கும் என்பதே தமிழியின் தாக்கத்திற்குச் சான்றாகும்.  வரலாற்றில் ஈழநாடு வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது. “Ceylon continued to be the common emporium of southern commerce for upwards of two thousand years” என்று “Asiatic Researches – Appendix xi”[48] குறிப்பிடுவது, பலேசிமுண்டுவில் ஒப்படி இருந்திருக்கும் வாய்ப்பிற்கு வலு சேர்க்கிறது. Emporium என்றால் அதன் பொருள் “A market place or trading centre, particularly of an ancient city“ ஆகும்[49][50]. தமிழகம் பற்றிய செய்திகள் உலக வரலாற்று ஆய்வுகளில் இந்தியா என்ற பெயருக்குள் முடங்கிப் போகையில் சிலோன் என்கிற ஈழ நாடு பற்றிய ஆராய்ச்சிகள் தனித்து காணப்படுவது தமிழாராய்ச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கிரேக்கத்தின் பெரிய தத்துவ ஞானியான பிளேட்டோ, கிரேக்க உரோம நெடுங்கணக்கைப் பற்றிச் சொல்லும்போது, “Whenever greeks take anything from foreigners, they eventually bring it to a greater perfection” என்கிறார். ஆக, கிரேக்கர்கள் எழுத்துகளை உருவாக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர்கள் கடன்தான் வாங்கினார்கள் என்பது உலக முடிபு. பிளேட்டோவின் காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டாகும். கி.மு 8ஆம் நூற்றாண்டிலேயே எழுத்துகளைக் கிரேக்கர்கள் கடன் பெற்றுவிட்டார்கள். அக்கடன், பொனீசியர்களிடமிருந்து வாங்கியதாகவே உலகம் சொல்லிக் கொள்கிறது; தமிழிடம் பெற்றிருக்கலாமோ என்று நாம் ஐயுறுவதில் தவறுண்டா? உயிரெழுத்துகள் சென்ற பாதை செங்கடற்பாதையாகக் கூடாதா?. அதுமட்டுமல்ல பொனீசியா பற்றி மேலும் தேடினால் பல உண்மைகள் வெளிவரக் கூடும்.

”பொனீசியாவின் புகழ் பெற்ற விதயங்கள் என்னென்ன?” என்று பார்த்தால் அவற்றில் மூன்று விதயங்கள் முகன்மையாகச் சொல்லப்படுகின்றன.
1. அவர்களின் மெய்யெழுத்து நெடுங்கணக்கை உலகிற்குத் தந்தது
2. தொலைதூரக் கடலோட்டத்தை நடுத்தரைக்கடல், ஐரோப்பிய பகுதிகளுக்குக் கற்றுத் தந்தது (கி.மு.1500-1200).
3.  ”பர்ப்பிள்” என்று சொல்லப்படும் அவர்களின் செங்குவளை நிறச்சாயம்
மூன்றாவது விதயமான செங்குவளைச் சாயம், அவர்களின் அரச நிறம் என்று ஆய்வாளர் சொல்வர். அது மிக உயர்வாகக் கருதப்பட்ட நிறமாகும். அந்த நிறமுடைய உடுப்பணிந்தவர்கள் அவர்கள் குமுகாயத்திற் பெருஞ் செல்வந்தர்களாகக் கருதப்பட்டார்கள். பொனீசியாவிலும் அதன் ஆதிக்கம் மிகுந்த நாடுகளிலும், ஆங்கிலத்தில் “born with silver spoon” என்பதன் பொருள் என்னவோ, அதுவே “born in purple” என்பதற்கும் உண்டு. அந்தச் சாய ஏரணத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு பெரும் பொருளும் ஈட்டினார்கள் என்பது வரலாறு. அந்த நிற உடைகளுக்காக மற்ற நாட்டு மக்கள் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். பொனீசியர்கள் எப்படி இந்நிறத்தை உருவாக்கினார்கள் என்பதை உலகம் வியந்து சொன்னதைப் பல நூல்களிற் காணமுடிகிறது. பொனீசியப் பகுதிக் கடற்கரையில் வாழ்ந்த ஒரு வகை நத்தையில் இருந்தே இந்நிறம் உருவாக்கப் பட்டது என்றும், அந்த நத்தை இப்போது “அழிந்துவிட்ட இனம்” என்பதும் ஆய்வுலகத்தின் முடிவு. ஆனால் அதை மீளாய்வு செய்தால் நன்றாயிருக்கும்.

அந்தச் செங்குவளை (purple) நிறம் என்பது,  நீலம், சிவப்பு என்ற இரண்டு நிறங்களின் குறிப்பிட்ட வீதக் கலப்பே ஆகும். இதனை எந்த வேதியியல் மாணவரும் எளிதில் சொல்லுவர். இந்த நீலத்திற்கும் சிவப்பிற்கும் தேவையான இரண்டு மூலப்பொருள்களும் பொனீசியாவிற்குத் தமிழகத்திலிருந்தே ஏற்றுமதியாகின[38]. நீலத்திற்கு மூலப்பொருள் அவுரிச்செடியாகும் (Indigo). சிவப்பிற்கு மூலப்பொருள் தம்பலப்பூச்சி(Cochineal) என்பதாகும். சிவந்த அழகான தம்பலப் பூச்சியை ”வெல்வெட்டுப் பூச்சி” என்று பேச்சு வழக்கிற் சொல்வது தமிழகத்தில் இன்றும் இருக்கிறது. அவுரிச் செடி தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் பெருமளவு விளைந்திருக்கிறது. பிற இந்தியப் பகுதிகளில், கடப்பா, பூனா, வங்கம் ஆகிய இடங்களில் விளைந்திருக்கிறது; இவை ஒப்படிக்கு வந்து இங்கிருந்து பொனீசியா சென்றிருக்கின்றன. தம்பலப் பூச்சி தமிழகத்தின் உலர்காடுகளில் வளர்க்கப்பட்டு உலர்ந்த பூச்சிகளாக ஏற்றுமதியாயிருக்கின்றன. (தம்பலப் பூச்சி தரும் சிவப்பு நிறத்தை crimson red என்பர்). இந்த இரண்டிலும் இருந்து சாயம் இறக்கி, தக்க வீதத்தில் அவற்றைக் கலந்து உருவான செங்குவளைச் சாயம்தான் பொனீசியர்களின் புகழைப் பாடும் ”பர்ப்பிள்” நிறமாகும். ஆக, பொனீசியர்கள் கடன் கொடுத்தார்கள் என்று சொல்லும் அதே வேளையில், ”அவர்கள் எங்கிருந்து அதைப் பெற்றார்கள்?” என்ற தேடல் தமிழ்நாட்டைச் சேர்க்காமலேயே நடந்தால் எப்படி? ஊற்றுக்கண்ணைத் தேடாது போகலாமா? சாலமன் ஒப்படிக்கு பொனீசிய இராம் தலைமையிலான  வணிகப் படையை அனுப்பியது, பொனீசியாவிற்கு ஏற்கனவே இருக்கும் தமிழகத் தொடர்பின் பட்டறிவைப்[40] பயன்படுத்திக் கொள்ளவேயாகும். பொனீசிய எழுத்துகளிலும், நிறத்திலும் தமிழ் நிலங்களுக்குப் பங்குண்டு என்பதற்கு ஆழ்ந்து ஓர்ந்தால் இதுவும் சான்றாகும்.

உலகில் படிக்கப்படாத முக்கியமான எழுத்துகளில் முந்து-இலாமித்து எழுத்துகள், சிந்துவெளி எழுத்துகள் ஆகிய இரண்டொடு, உரொங்கோரொங்கோ(Rongorongo)  எழுத்தும் முக்கிய இடம் பிடிக்கின்றது. உரொங்கொரொங்கோ, ஈசுடர் தீவில் (Easter Island)  உருவான எழுத்துமுறை. ஈசுடர் தீவு, தென்னமெரிக்காவுக்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையே, பசிபிக்குப் பெருங்கடலில் இருக்கின்ற சிறிய தீவாகும். இது சிலி நாட்டின் ஆளுமையில் இருக்கும் சிறப்புப் பகுதியாகும். கீழுள்ள படம் தமிழகத்திற்கும் ஈசுடர் தீவுக்கும் உள்ள தொலைவைக் காட்டுகிறது. தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற தீவில் 24 மரப்பலகைகளில், அந்தத் தீவில் வாழ்ந்த தொல்பழங்குடி மக்களின் எழுத்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.  

அங்கே இயல்பாக ஒரு எழுத்துமுறையும் மொழியும் உருவாகியிருந்ததை அறிஞர் கண்டு வியக்கின்றனர். இது பாலிநேசிய (Polynesia) தீவுகளில் ஒன்று. இந்த மொழிக்கு “இராப்நூய்” மொழி என்று பெயர். படத்தில் உள்ள உரொங்கோரொங்கோ எழுத்துகள் அங்கு கண்டுபிடிக்கப் பட்ட எழுத்துப் பொறிப்புகள் ஒன்றில் காணப்படுவதாகும்.




 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட இப்பொறிப்புகளை ஆராய்ந்த அங்கேரி நாட்டுப் பொறியாளர் கிலாமி டி எவிசி  (Guillaume De Hevesy), இவ்வெழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளுடன் கொண்டுள்ள வடிவ ஒப்புமையைக் உலகிற்கு நிறுவிக் காட்டினார்[34].  இவ்வெழுத்துகள், தென்கிழக்கு ஆசியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்றும் எவிசி கூறுகின்றார். அதொடு, “இத்தனைத் தொலைவில் காணப்படும் இவ்வெழுத்துகள், தற்செயலாக இங்கு வந்தவை அல்ல; சிந்துவெளி எழுத்துகளும், சிந்துவெளி எழுத்துகளைக் கொன்டுள்ள உரொங்கொரொங்கோவும் இன்னும் படிக்கப் படாமல் இருக்கின்ற முந்து-இலாமித்து மொழியுடன் பொதுத் தொடர்பை வைத்துள்ளன”  என்று அழுத்தமாக எடுத்துரைக்கிறார் எவிசி. இக்கட்டுரையில், முன்னைய பகுதிகளில் முந்து-இலாமித்து மொழி வடிவ ஒப்புமை கொண்டிருக்காவிடிலும், மொழி அமைப்பில் நெருக்கமாக உள்ளதை மெக் ஆல்ப்பின் அவர்களின் ஆய்வில் கண்டோம். ஏறத்தாழ அதே கருத்தை எவிசியிடமும் காணமுடிகிறது.  கீழே உள்ள படம், சிந்துவெளி எழுத்தையும், ஈசுடர் தீவு எழுத்தையும் ஒப்பிட்டு இவை ஒரே படவுரு எழுத்துகள்தான் என்று நிறுவுகின்ற படம் ஆகும்.

 கிலாமி-டி-எவிசியின் இந்த ஆய்வு,  உலகுக்கு படத்தமிழியின் பரவலை மேலும் எடுத்துக் காட்டுகிறது. ஈசுடர் தீவுகள் எழுத்துகளில் கிட்டத்தட்ட  100 படவுருக்களில் இம்மாதிரியான ஒப்புமை இருப்பதாக எவிசியின் ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. உரொங்கோ- ரொங்கோவில் பெட்ரோகிளிப்பு போன்ற வேறும் சில மொழிக் குடும்ப எழுத்துகள் கலந்திருப்பதாக அறிஞர்கள் கருதினாலும் படத்தமிழியின் பாரிய தாக்கம் தெள்ளெனத் தெரிவதொடு, தமிழிக்கு பெட்ரோகிளிப்பு, ஆத்திரேனிசிய, பாலிநேசிய (Austranesia, Polynesia) மொழிகளோடு இருக்கக் கூடிய தொடர்புகளை ஆயவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆத்திரேனிசிய புலம்பெயர்வு (Austranesian Migration)[36] ஏறத்தாழ கி.மு 3000த்தில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது அறிஞர்களின் முடிபு. மடகாசுகர் தொடங்கி, கிழக்காக, மலேயா, தென்சீன, ஆத்திரேலிய பகுதிகளைக் கடந்து பசிபிக்குப் பெருங்கடல் தீவுகள் பலவற்றுக்கும் மக்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புலம்பெயர்ந்து வருவதை ஆத்திரனேசியப் புலம்பெயர்வு என்பர் அறிஞர். 



தென்னமெரிக்க மயன் நாகரிகத் தொடர்பை ஆராய வேண்டுமானால், அதன் அருகே இருக்கும் ஈசுடர் தீவு எழுத்துகளை ஆராய்வது அவசியமானது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தமிழ் எழுத்துகளுக்கு, மயன் நாகரிகத்திற்கு அருகில் உள்ள ஈசுடர் தீவில் என்ன வேலை? என்ற தேடலை இது உருவாக்குகிறது. முந்து-தமிழ் வள்ளுவக் கணியர்கள் உருவாக்கிய தமிழ் வானியல், ஐந்திரம்/நாள்காட்டி பற்றி அறிஞர் குணா[37] மிக விரிவாக எழுதியுள்ளார். ஆனால், அண்மையில், மயன் நாள்காட்டியைப் போல அதிகம் பேசப்பட்ட நாள்காட்டி வேறில்லை. அந்த மயன் நாகரிகத்திற்கும், ஈசுடர் தீவிற்கும் உள்ள தொடர்பை ஆழ்ந்து பார்க்கப்பட வேண்டிய தேவையை இது உருவாக்குகிறது என்றால் மிகையல்ல. ஆத்திரனேசிய புலம்பெயர்வு பற்றிய மேலாய்வு அதற்கு அடித்தளமாக அமையும் என்பது திண்ணம்.




நிறைவுரை

இக்கட்டுரை கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறது.
1)      தமிழி அகரம் பொனீசியர்களால் கைக்கொள்ளப்பட்டு நிறுத்தொலியாக பயன்பட்டிருக்கிறது. பின்னர் கிரேக்கர்கள் அதனைத் தங்கள் நெடுங்கணக்கில் உயிரெழுத்தாக சேர்த்துக் கொள்கின்றனர். இதுவே உரோம-A ஆக உருவெடுக்கிறது என்பதை நிறுவுகிறது.
2)      எகிப்திய எழுத்துகளை மூலமாகக் காட்டும், பொனீசிய, கிரேக்க எழுத்து இணவுகளில், எகிப்திய மூல எழுத்துகளுக்கும், பொனீசிய, கிரேக்க எழுத்துகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளை, மற்ற 4 உரோம எழுத்துகள் பற்றிய கருத்துகளில் காட்டுகிறது. இந்த இடைவெளிகள் மீதி எழுத்துகளின் இணவுகளிலும் இருக்கிறது என்று உணர்த்துகிறது. பல்வேறு இடங்களில், இணவுகளின் வடிவ, ஒலி, மொழி போன்ற கூறுகள் தொடர்பற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
3)      தமிழுக்கு முக்கியமான பிபிலோசு, இலாமித்து, சிந்துவெளி, உரொங்கொரொங்கோ ஆகிய மூன்று எழுத்துமுறைகளும் இன்னும் உடைக்கப் படாமல் இருப்பதையும், அதில் பொதிந்துள்ள தமிழ்க் கூறுகளையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. இவை படிக்கப்படாமல் கிடப்பது எகிப்து-பொனீசிய-சுமேரியச் சார்புடையவர்கள் கருத்தை வலிமையடையவே செய்யும். ஆகவே, இவற்றின் மேலான ஆய்வுகள் தமிழகத்தில் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
4)      தமிழ்நாட்டின் தொல்லியல் துறை, கடந்த 50 ஆண்டுகளில், 35 பேர்களால் பணியாற்றப்பட்ட நிலையில் இருந்து தேய்ந்து, இன்றைக்கு 5 பேரால் மட்டுமே பணியாற்றப் படுகிறது. இது, மாநில தொல்லியல் துறையை, நடுவண் தொல்லியல் துறையின் அஞ்சல் துறையாய் ஆக்கிவிடும் முயற்சி என்பது தெளிவு. நடுவண் துறை கண்டுபிடிக்கின்ற அல்லது புகுத்த விரும்புகிற வரலாற்றுக் கருத்துகளை மட்டும் செய்வதற்கு வசதியாக ஆக்கிக் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது. கட்டுரையில் இது பற்றிப் பேசாவிடிலும், இந்நிலை, உலக அரங்கில் தமிழ் மொழியின் தொன்மையை நிறுவப் பயன்படாது என்ற கவலை அதிகரிப்பதைப் பதிவு செய்கிறது.
5)      Ophir என்ற இடம் யாழ்ப்பாணத்தின் பலேசிமுண்டுவில் மேலைநாட்டினர்க்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட “ஒப்படி” என்ற சிறப்பிடம் (அல்லது special settlement) என்று முன்வைக்கிறது. “ஒப்படி” என்ற சொல் பிற்காலத்தில் உரோமர்களால் Oppidum (ஒப்பிடம்) என்று மாறியதை எடுத்துக் காட்டி, அவற்றிற்குச் சான்றுகளை இணைக்கிறது.
6)      உரொங்கோரொங்கோ என்ற எழுத்துமுறை சிந்துவெளி எழுத்துமுறையைச் சேர்ந்தது என்ற அறிஞர்களின் கருத்தை மேற்கோள் காட்டுவதொடு, அதன் முக்கியத்துவத்தை முன்வைக்கிறது.


பின்னிணைப்பு 1: Byblos Inscription – Undeciphered [7]
            பிபிலோசு நகரம் பொனீசியாவின் தலைநகரமாக இருந்தது. ஒரு காலத்தில் பொனீசியர்கள் தலைநகரத்தை டயர் என்ற நகரத்திற்கு மாற்றினார்கள். இன்றைய கடற்கரை லெபனான் பகுதியில் பிபிலோசு இருந்தது. கல்வெட்டுகள், பாண்டங்கள் போன்றவற்றில் இருந்து கிடைத்த எழுத்துகள் இவை[13]. இப்படத்தில் பச்சைக் குறியிட்ட சின்னங்கள் எழுத்துத் தமிழியுடனும், சிவப்புக் குறியிட்ட சின்னங்கள் படத் தமிழியுடனும் நேரடி ஒப்புமையோ அல்லது சிறு வேறுபாடோ கொண்டுள்ளன. நீலக் குறியிட்ட சின்னங்கள் தமிழிச் சின்னங்களோடு தொடர்புடையதாயிருக்க வாய்ப்புகள் உள்ளன.


பின்னிணைப்பு-2: Picto-Thamizhi a.k.a Indus Script – Undeciphered [12]
இப்பின்னிணைப்பில் உள்ள படங்கள் சிந்துவெளியில் கிடைத்த படவுருக்களின் ஒரு பகுதி மட்டுமே. இப்பகுதி, முனைவர் இரா.மதிவாணன் அவர்களின் “திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்” என்ற நூலின் 36, 37 பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இக்கட்டுரையில் சொல்லப்படும் படத்தமிழிக் குறியீடுகளிள் பல இதில் உண்டு.


சான்றாதாரங்கள்:

[1]        Chapter – “A, First and Best” – The Alphabet by David Sacks
[2]        Chapter – “B – Listed B” – The Alphabet by David Sacks
[3]        Chapter – “C of Troubles” – The Alphabet by David Sacks
[4]        Chapter – “Dependable D” – The Alphabet by David Sacks
[5]        Chapter – “Can’t Spell English without E” – The Alphabet  by David Sacks
[6]        Page-51 – The Alphabet – David Sacks
[7]        Undeciphered Byblos Inscription of BC 2000 – Page 35 - Lost Languages by Andrew Robinson – ( பின்னிணைப்பு-1 )
[8]        Page-89 – The Alphabet – David Sacks
[9]        சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (Thamizh Lexicon)
[10]      Valari - An Unique Weapon of the Tamils – Dr.S.Jayabharathi http://tamilnation.co/heritage/weapon.htm
[11]      Letter Frequency - http://en.wikipedia.org/wiki/Letter_frequency
[12]      பின்னிணைப்பு-2: Picto-Thamizhi a.k.a Indus Script – Undeciphered – pictures from the book of Dr.Ira.Madhivanan
[13]      Byblos Syllabary - http://en.wikipedia.org/wiki/Byblos_syllabary
[14]      வரலாற்றுக்கு முந்தைய (கி.மு 600-500) கால உலகப்படம் – கி.பி 1794ல் வரைந்தது http://forumancientcoins.com/Articles/Maps/images/Map_Orbis_Veteribus_Notus_1900pix.jpg  -  Map Orbis Veteribus Notus
[15]      தக்கணப்பாதை பற்றிய விளக்கங்கள் – 1) சிலம்பின் காலம் – முனைவர் இராம.கி 
2) தில்லை-3 http://valavu.blogspot.in/2006/08/3.html  முனைவர் இராம.கி
[16]      The Commerce of India – B.A.Irwing
[17]      பிராகி மொழி, மக்கள் - http://en.wikipedia.org/wiki/Brahui_people
[18]      Elamite and Dravidian: Further Evidence of Relationship – David McAlpin http://www.kavehfarrokh.com/wp-content/uploads/2009/07/elamitedravidian.pdf
[19]      Dravidian Etymological Dictionary – Burrow and Emeneau
[20]      திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்  - முனைவர் இரா.மதிவாணன்
[21]      Page-275, Lost Languages - Andrew Robinson
[22]      The Decipherment of the Indus Script (1982) – S.R.Rao
[23]      Rome and the distant East – Raoul McLaughlin
[24]      Description of Taproban – IV – Pliny – Foreign Notices, - K.A.Neelakanta Sasthri

[25]      Foreign Trade And Commerce In Ancient India -  Prakash Charan Prasad

[26]      The Gold of Ophir Inscription

[27]      1 Kings 10:22 CJB – Complete Jewish Bible

[28]   பார்க்க [14]

[29]   Map Orbis Veteribus Notus - http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/1794_Anville_Map_of_the_Ancient_World_-_Geographicus_-_AncientWorld-anville-1794.jpg

[30]      Oppidum - http://en.wikipedia.org/wiki/Oppidum

[31]      Oppidum –  சொல்விளக்கம் - Archaelogy Wordsmith -http://www.archaeologywordsmith.com/lookup.php?category=&where=headword&terms=oppidum

[32]      The Commerce of India – B.A.Irving

[33]      Rongorongo - http://en.wikipedia.org/wiki/Rongorongo

[34]      Page 220 – Lost Languages, - Andrew Robinson

[35]      Shape resemblence of Rongorongo and Indus script – Page 221 - Lost Languages, - Andrew Robinson

[36]      Austranesian Peoples - http://en.wikipedia.org/wiki/Austronesian_peoples

[37]      “வள்ளுவமும் கணியமும்” – வள்ளுவத்தின் வீழ்ச்சி, இரண்டாம் பதிப்பு – குணா

[38]      Page-58, The Commerce of India – B.A.Irving

[39]      Locating ophir-The search for El dorado, - K.T.Rajasingham http://k.t.rajasingam.tripod.com/doro.htm

[40]      Connections of Tyrians – Pg 32 - The Commerce of India – B.A.Irwing

[41]      Page-38 – The Alphabet – David Sacks
[43]      The Alphabet – David Sacks
[46]      Ancient Signs: The Alphabet & the Origins if Writing by Andis Kaulins
[47]      Pg 124, “The Tamil Alphabet” – Tamil Studies (1914) – M.Srinivasa Iyengar
[48]      Quoted by B.A Irving in “The Commerce of India” – Page 73
[51]      Quoted by B.A Irving in “The Commerce of India” – Page 85
[52]      India as known to the ancient world – Dr.Guaranganath Banerjeee

கட்டுரை நிறைவு……

 

அன்புடன்

நாக.இளங்கோவன்
nelango5@gmail.com