Pages

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, January 21, 2018

ஆண்டாள் - மடல் 2: மரபின் திரிவும் திரிவின் விளைவும்.


மால் நெறியினரின் நாலாயிரத்தின் தொகுப்பிற்கும், சிவநெறியினரின் தேவாரத்தொகுப்பிற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

தேவாரம், அதன் முதலிகள் யாத்தவாறே, தலவரிசையாக அல்லது பண்/யாப்பு வரிசையாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். முதலியின் வரலாற்றை, சிறப்புகளை சுருக்கமாக நூன்முகப்பு தாங்கியிருப்பதை காணமுடியும். சில பதிப்புகளில் முதலிகளை போற்றியோ, அல்லது சைவத்தை போற்றியோ ஓரிரு பாடல்கள் தமிழில் இருக்கும். ஆனால், நாலாயிர நூல்களை காணும்போது, தமிழிலும் சமற்கிருதத்திலும் யாக்கப்பட்ட பாடல்கள் சிலவற்றை தனியன்களாக ஆழ்வார்களின் பாடல்களுக்கு முன்னர் வைத்திருப்பர். தனியன்கள் என்பன, பாயிரம் போன்றவை என்று சொல்லத்தக்கன. பாடல்களை யாத்தவரையோ பாடல்களின் பயனையோ பாராட்டி அந்த தனியன்கள் எழுதப்பட்டிருக்கும்.

ஆழ்வார்கள் எழுதிய செந்தமிழ்களை, முதன்முதலில் சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தனியன்கள் அணிந்துரைக்கும். அதாவது முதலில் வடமரபோடு இணைக்கப்படும். பின்னர் தமிழ்த்தனியன்கள் வியந்து போற்றும்.

சிவன்கோயிலில், இறைவனின் பெயர், ஏறத்தாழ முழுமையாக சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.  மூவர் முதலிகளின் பதிகங்களை படிக்கும்போது அதில் குறிப்பிட்டிருக்கும் இறைவனின் தமிழ்ப்பெயருக்கும், பாடப்பட்ட  கோயிலின் இறைவனின் தற்போதைய சமற்கிருதப்பெயருக்கும் எந்தத்தொடர்பும் இருக்காது. காட்டாக, ஆனைக்கா அண்ணல் என்று சம்பந்தரின் பதிகம் இசைக்கும். ஆனால், சம்புகேசுரர் என்பது வழக்கில் இருக்கும். பதிகத்தின் தமிழ்மரபுக்கும் இன்றைய வழக்கிற்கும் தொடர்பறுவது காண்க. திரிபின் விளைவு இப்படித்தான் இருக்கும். சிவப்பதிகத்திற்கும் தலத்திற்குமே தொடர்பு நீங்கிவிடுகிறதென்றால், அவற்றை ஆக்கிய அந்த செந்தமிழ்மரபை, செந்தமிழ் முதலிகளை எப்படி பேணியவர்களாவோம்? அதுபோலவே மாலவன் கோயில்களிலும், குறிப்பாக திவ்விய தேசம் என்று சொல்லப்படும் கோயில்களில் பலவற்றில் இறைவன் - இறைவி பெயர்கள் அமுதம் போன்ற தமிழ்ப்பெயர்களில் இருந்தாலும், பலவற்றில் பிறமொழிப்பெயர்களில் இருப்பதை காணமுடியும்.

"இந்தத்திரிவுகள் ஏற்பட்டது எந்த நாளோ அந்த நாளிலிருந்தே செந்தமிழ் முதலிகளான தேவாரத்தை தந்த நாயன்மார்களுக்கும், நாலாயிரத்தை தந்த ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கும் இம்மண்ணில் புறக்கணிப்பு தொடங்கிவிட்டது."

வரலாற்றின் முக்கிய மைற்கல்லான அந்த 7, 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மரபின் திரிவே இல்லையா என்று சிலர் கேட்கலாம். இருந்திருக்கின்றன; ஆனால், அந்த இரு நூற்றாண்டில் மறுமலர்ந்த தமிழின் அளவு கடல்போன்றது. அந்தத்தமிழ் ஆட்சியரசிலையே திருப்பிப்போட்டது. அதற்குப்பின் அப்படியொரு செந்தமிழ் மலர்ச்சியை இன்றுவரை தமிழகம் காணவில்லை. ஆகவே, அப்படியான மலர்ச்சி, பெரிய அளவில் சிதைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் போனதை அளவீடாக கொள்தல் எளிதும் தேவையுமாகும்.

தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்திகளும், ஆழ்வார்களில் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களும், தமது பதிகத்தை முடித்து, கடைசிப்பாட்டில் (கடைக்காப்பு) தமது செந்தமிழை இறைவர்க்கு படைத்ததால் வந்த பெருமிதத்தோடு, "இந்த பத்துத்தமிழ்களை படித்தாயென்றால் நீ நல்லாயிருப்பப்பா" என்று ஆணையிட்டும், அன்போடும் அருளிய அந்த அழகை படிக்கும் ஒவ்வொருவரும் கிறங்கிப்போவது இயல்பு. தமிழில் கரைந்து போவதும் இயல்பு.

"....வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் 
விட்டுசித்தன் சொன்னமாலை பத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்கு ஆளர் தாமே"..... பெரியாழ்வார்

"நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு  அருவினை அறுதல் ஆணையே"...... ஞானசம்பந்தர்

இன்றைக்கெல்லாம், "தமிழில் பேசுவது அவமானமல்ல - அடையாளம்" என்று பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கையில், தமிழை பெருமிதத்தோடு அன்று ஓதி, அனைவரும் ஓதத்தந்த தமிழ் ஞானமரபுதான் நாயன்மார்களும் ஆழ்வார்களும். அத்தகைய தமிழ்மரபு வீரமரபுமாகும். தமிழை பெருமிதத்தோடு மக்களிடையே மறுமலர்ச்சி செய்த அந்த மரபு சிதைக்கப்பட்டு, கோயிலில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டது.

மாலவன் கோயில்களிலேனும் சிறிது தமிழுக்கு இடமுண்டு. தாயார் கோயிலிலும், மாலவன் கோயிலிலும் ஒருசில பிரபந்தப்பாடல்களையாவது சன்னதியில் பாடுவோர் உண்டு. ஆனால், சிவன் கோயில்களிலும், புகழ்பெற்ற முருகன் கோயில்களிலும், சன்னதியில் முழுமையாக தமிழ்  புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, என்று சொல்லும் அளவிற்கு அவமானப்படுத்தப்படுகிறது.

மாணிக்கவாசகர் இயற்றியிருந்தாலும், தில்லை நடராசரே தன்கைப்பட எழுதியதுதான் திருவாசகம் என்று புகழப்படும் திருவாசகத்தையும் தேவாரத்தையும் தில்லை சிற்றம்பலத்தில் பாடமுடியாது. நடராசருக்கு 20-25 அடி தொலைவில் பள்ளத்தில் நின்றுதான் பாடமுடியும்.

பிற்காலத்தில் தோன்றிய சத்தி இலக்கியத்தில் தலைசிறந்தது அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி. அந்தப்பாடல்களை அண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் பாடமுடியாது. காலபூசையை வடமொழியில் 20 நிமிடங்கள் செய்துவிட்டு, கடைசியாக "தனந்தரும் கல்விதரும்..." என்ற அந்த ஒரு பாடலை மட்டும் சன்னதியை விட்டு வெளியே வந்து, தனது தலையை சுவற்றில் வைத்து மறைத்துக்கொண்டு ஒரு சிவாச்சாரியார் பாடுவார்; அல்ல அந்த தமிழ் சிவாச்சாரியாரை பாட வெளியே அனுப்புவார்கள். பாடுபவர் தமிழ் சிவாச்சாரியார் என்பது நன்றாகத்தெரியும். ஆனால் அவரை வெளியே விரட்டி பாடச்சொல்கிற அதிகாரம் எது? என்பதை இதுவரை யாரும் அறியமுற்பட்டதில்லை.

தமிழ்க்கடவுள் முருகன் என்று வானளாவ புகழும் தமிழ்நாட்டில், (சிவனும் மாலும் எங்கோ ஆர்க்கிடிக்கில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் பிதற்றுவர். அப்பிதற்றலை விடுக), அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைகறை பூசை நடக்கிறது;  வடமறை ஓதும் வேதவிற்பன்னர்கள் சுமார் 10 பேர் நின்று ஓதுகிறார்கள். 15-20 நிமிடம் கழித்து வெளிப்புறத்தை நோக்கி கைகாட்டுகிறார்கள். வெளியே எனக்கு இடப்புறம் முருகனின் மேல் பார்வை பட்டுவிடாமல் ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்த ஓதுவார் திடீரென பாடுகிறார் -  "ஆடும் பரிவேல் அணிசேவலென...." . ஒரு நிமிடம் அவர் பாடி முடிப்பதற்காக உள்ளே சன்னதியில் பூசை காத்துக்கொண்டிருக்கவில்லை.

(தில்லையிலும் அண்ணாமலையிலும் நான் சொன்னது உண்மைதானா என்று அறிய விரும்புபவர்கள் அங்கு உச்சிகால பூசைக்கு போய்வருக. செந்தூர் பற்றியறிய வைகறையில் செல்க.)

இதுபோன்ற காட்சிகளை திருக்கழுக்குன்றத்திலும் வேறு இடங்களிலும் நேரடியாக பார்த்து மனம் குமுறியவன் நான். அதன் வலியை யாரறிவார்? ஞானசம்பந்தர் தொடங்கி பாம்பன் சுவாமிகள் வரை 1300 ஆண்டுகளில் யாக்கப்பட்ட பல்லாயிரந்தமிழும் சன்னதிக்கல்ல - வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் மட்டும்தான் என்று எண்ணும்போது வருகின்ற வலியை துடைப்பவர் இங்கு யார்? கச்சேரியில் கூட இம்மி, சல்லி, தம்பிடி என்ற அளவே தமிழிசை இருக்கின்றன என்ற உண்மையை அறியாதவர் உளரோ? எம்.எசு.சுப்புலட்சுமி, உன்னிகிருட்டிணன், நித்தியசிரீ, இளையராசா போன்றவர்கள் ஒன்றிரண்டு பாடுவதற்கு மட்டும்தான், தமிழ் ஞானமரபு, பாடல்களை படைத்ததா?

சன்னதியில் எது பாடப்படுகிறது என்பதைவிட, எது புறக்கணிக்கப்படுகிறது, எது அவமானப்படுகிறது என்று புரிந்து கொள்ள முயலுகையில், எத்தனை பேருக்கு வலிக்கிறதோ அத்தனை பேரால் மட்டுமே இந்தத்திரிவில் இருந்து தமிழ்மரபை மீட்கமுடியும்.

எனக்கு வலிக்கின்றது.

தமிழர்களின் மெய்யியல் என்பது முன்னோர் வழிபாடு மட்டுமே என்றும், குலதெய்வ, ஊர்த்தெய்வ வழிபாடுகள் என்ற எல்லாமே அவ்வழி மட்டுமே என்று சொல்பவர்கள், அக்கோயில்களில் தமிழ் வழிபாட்டையும் வழிபாட்டு முறையையும் வைத்திருக்கின்றனரா? எங்கோ ஒன்றுமிரண்டுமாக நான் படித்த நினைவுண்டு. மற்றபடி எல்லாமே மௌனமாக மணியடிப்பது மட்டும்தான்.

கருப்பண்ணசாமி என்ற தமிழ்த்தெய்வம் பெரிய, சிறிய என்பதுபோன்ற முன்னொட்டுகள், பின்னொட்டுகளோடு கூடிய மெல்லிய வேறுபாட்டில்  குத்துமதிப்பாக 400க்கும் மேற்பட்டு இருக்கின்றன. அத்தனை சாமிக்கும் ஏதும் தமிழ் வழிபாடு, வழிபாட்டு முறை இருக்கின்றனவா? ஆனால், கடந்த சில வருடங்களில் இத்தனை சாமிக்கும் சமற்கிருத வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவும் கண்ணுக்கு முன்னால் நடக்கும் மரபின் திரிவு.

"முதலிலே, தமிழ் மெய்யியல் மரபு தமிழை மீட்டெடுத்த அந்த 7,8ஆம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி சிதைக்கப்பட்டு தமிழ் திரிந்தது. அடுத்ததாக கோயில்களில் இறைவன் பெயர்கள் திரிந்தன. பின்னர் இறைவன் சன்னதியில் இருந்து தமிழ் துரத்தப்பட்டது. மெய்யியலின் பெருநெறிகளைத்தொடர்ந்து, குலதெய்வ அல்லது குலநெறியும் இன்று திரிவுறுகிறது." 

இன்னார் மட்டுமே திரித்தார் என்று ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே எத்தனை நாளைக்கு பேசிக்கொண்டிருப்போம்? அப்படியே என்றாலும், இன்னாரைத்தவிர மற்ற எல்லாரும் அதிலிருந்து தமிழை மீட்டார்கள் என்ற  செய்தியை தர தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் இல்லை இன்றைய அளவில். பேசிக்கொண்டே இருப்பது சரியா அல்லது செயற்படுவது சரியா?

சரியாக சொல்ல முற்பட்டால், 800 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் தமிழரசு இல்லை என்பதும், கடந்த 50-60 ஆண்டு அரசியலுக்கு தமிழர் மெய்யியல் இலக்கியங்களின் மேல் சிறிதும் அக்கறை இல்லை என்பதும், தமிழர் அதை விடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே நாத்திக மெய்மரபு பேசுகிறது.

இந்த நிலையில், ஆண்டாள் மீது வைரமுத்து தொடுத்த வருணனை என்பது மரபுத்திரிவின் மற்றொரு கோடி. இதனை தமிழ் ஆராய்ச்சி மரபு என்றெல்லாம் சொல்வது இட்டுக்கட்டி பேசுவது ஆகும்.

தமிழகத்தின் நாத்திக மெய்மரபும் தொன்மையானதே. ஆனால், இன்றைய காலத்தைப்போல அது அரசியலில் ஆட்சி செலுத்திய காட்சிகளை வரலாற்றில் காணமுடியவில்லை.

மேலும், கடவுள் மறுப்பு என்று வரும்போது, தமிழர்களின் சில வகுப்பாரை மட்டும் ஒடுக்கிவைத்ததால், அவர்களால் பேசப்பட்ட நாத்திகத்தை, பிறர் பேசும் நாத்திகத்தோடு சம அளவில் வைத்துப்பேசுவதே படுபாவம். ஒடுக்கப்பட்டவர்கள் பேசிய நாத்திகம், அடிவாங்கின வலியில் வந்த ஓலம்; ஆனால் பிறவகுப்பார் பேசிய நாத்திகம் அப்படியில்லை; அதை சொல்லால் குறித்தால் நன்றாக இருக்காது. மாறாக, ஒரு ஒப்பீட்டில் கோடிட்டு காட்டுவது சரியாக இருக்கும்.

"கடவுளாவது ஒன்னாவது! - வெட்டுடா அவனை" என்று சொல்லும் வெட்டுநரின் கடவுள் மறுப்புக்கும், "கடவுள் இருந்திருந்தால் என்னை காப்பாற்றியிருப்பான்" - என்று வெட்டுப்பட்டு கையறு நிலையில் அழுபவன் பேசும் கடவுள் மறுப்புக்கும் இருக்கின்ற வேறுபாடுதான் அந்த நாத்திக வேறுபாடு. இவ்வேறுபாடு இன்றும் வாட்டுகிற சூழல், தமிழும் மரபும் பெருமளவு திரிந்திருக்கிற சூழல் என்று சொல்ல வேண்டியதில்லை.

63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தில்லையில் கோயிலுக்குள் புக முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வாசலில் கொளுத்தப்பட்டார் என்பது வரலாறு சொல்லும் உண்மை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், திரைப்படங்களும் எழுத்தாளர்களும் காட்டுவது போல, நந்தனார் ஒன்றுமறியா ஏமாளியாகவோ, கோழையாகவோ  இருந்தவரல்ல. அதற்கு தீண்டாமை காரணமல்ல. தமிழ்மரபு சிதைக்கப்பட்ட போது, தமிழ் மறுக்கப்பட்டபோது, பிறமரபுகள் தமிழ்க்கோயிலை கைப்பற்றியபோது கிளர்ந்தெழுந்து தில்லையை மீட்க போராடிய போராளி அவர். அவரைப்பிடித்து கொளுத்திவிட்ட போதும், தீயினால் உடல் வேகின்ற அப்போதும் எதிரிகளை மீறி கோயிலுக்குள் ஓடி சன்னதியின் முன்பு விழுந்து வெற்றியோடு உயிர்நீத்த மாபெரும் தமிழ்ப்போராளிதான் நந்தனார். பெரியபுராணத்தில் சேக்கிழாரின் திருநாளைப்போவார் புராணத்தை கூர்ந்து படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

அதற்கு சுமார் 1 நூற்றாண்டு முன்பு, இந்தக்கிளர்வுக்கு வித்தான ஞானசம்பந்தர் தனது 16 வயதுக்குள் அவர் யாத்த செந்தமிழ்ப்பாடல்களில், சுமார் 4200 இன்றைக்கும் தேவாரமாய் நிலைத்திருக்கின்றன. (16000 பாடல்களை யாத்தார் என்று சொல்லும் நூற்குறிப்புகள் உண்டு). அவரும் அப்பரடிகளும் உருவாக்கிய தமிழ் மலர்ச்சி, கிளர்ச்சியாய் பல்லவ பாண்டிய பேரரசுகளை தமிழ்வழிக்கு திருப்பியது. அப்பேர்ப்பட்ட சம்பந்தருக்கும், அரசினரொடு மக்களின் ஆதரவை பெற்றிருந்த அந்த மாபெரும் அந்தண அடிகளாருக்கும் நந்தனாருக்கு ஏற்பட்ட அதே முடிவுதான் ஏற்பட்டது.  இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளை தேடவிரும்புவோர், கருவூர்த்தேவர் எப்படி முத்தியடைந்தார் என்று தேடுதலும் அவசியம். அந்தணரான ஞானசம்பந்தரும், இன்று ஒடுக்கப்பட்டிருக்கும் குலத்தை சேர்ந்த அன்றைய நந்தனாரும் ஒரே காரணத்திற்காக, தமிழிற்காக போராடினார்கள் என்பது உண்மைதானே? ஒரே மாதிரியான முடிவைத்தான் அவர்கள் அடைந்தார்கள். இவர்களின் முடிவுக்கு புறமரபுதான் காரணம். ஒருவரின் மறைவை துயரமானதாக இன்று பேசுகையில், இன்னொன்றை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழ்மரபின் சிதைவுதானே? திரிவுதானே?

மேலும், 13 நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் மெய்யியல் மரபு கிளர்ந்தெழுந்தபோதே இப்பெரிய வன்முறைகளை தமிழுக்கெதிரானவர்கள், தமிழ்மரபை வளரவிடாமல் தடுத்த புறமரபினர் செய்தார்கள் என்பதையும், இன்றைக்கு தமிழ்மரபு விழிப்படையும் நிலையில், மிகக்கொடூரமாக நாக்கை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்று வெறியோடு எழுந்து இந்தித்துவ மரபை இந்துமரபாக கட்டியமைக்க துடிக்கிறார்கள் என்பதும் ஒப்புநோக்கத்தக்கனதானே? 

தமிழகத்தின் நாத்திக மெய்மரபு 1949ல் திராவிட அரசியலாக மாறியபின்னர், அது பெரிய உளவியல் முரணை ஏற்படுத்தியது. பொதுக்களத்திற்கு வந்தால் கோயில், இறை ஆகியவற்றின்பால் எள்ளலை உருவாக்கிவிட்டது. அது ஒரு வித கூச்சத்தை புழக்கத்தில்  விட்டது. இந்த எள்ளல் உளவியலில் உருவானதுதான் வைரமுத்தின் கட்டுரை. தமிழக அரசியலால் தமிழர்களின் மெய்யியல் தேவைகளை நிறைவாக செய்யமுடியாததற்கு இதுவே காரணம்.

"ஒருபுறம், வடமரபு இந்தித்துவ அரசியல் செய்யும் நா.க.மூ.க (நா.க.மூ.க = நாக்கு  மூக்கு கழுத்துவெட்டி கட்சி) தான் வெறுக்கும் தமிழுக்கு, தானழித்த தமிழுக்கு உரிமையாளர்கள் போல நடித்து வாளை சுழற்றும் சூழலுக்கும், மறுபுறம் அவர்களை எதிர்ப்பதுபோல எதிர்த்து, தமிழில் உள்ள எல்லா மெய்ஞான இலக்கியங்களையும் ஆரியம் என்று சொல்லி அவர்களிடமே தூக்கித்தரும் திராவிட அரசியலுக்கும் இடையே கிடந்து தமிழின் எல்லாமே நொறுங்கி நாசமாகிப்போகின்றன" என்ற புரிதலை, அந்த ஆண்டாள் தமிழர்களுக்கு தந்திருக்கிறாள் இப்போது என்பது புன்னைகையோடு வரவேற்கத்தக்கது.

எல்லாம் நொறுங்குதல் என்றால் என்ன? மெய்யியல் மரபு, சமஉரிமை, தன்மானம், தமிழ் மொழி, தமிழர் ஒற்றுமை, பெருமிதம், இன உணர்வு என்ற எல்லாமே இன்று சிதைந்தும் திரிந்தும்தானே போயிருக்கின்றன? ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முட்டுக்கொடுத்து எத்தனை நாள் வாழ்ந்துவிடமுடியும்?

இந்தித்துவத்திற்கு எதிர்ப்பு தமிழ்த்துவத்தில் இருந்துதான் பிறக்கமுடியுமே தவிர, நாத்திகத்துவத்தில் பிறக்கமுடியவில்லை என்று உணர்த்தியதுதான் ஆண்டாள் காட்டிய தெளிவு. தமிழ்த்துவமே நாத்திகந்தான் என்று காட்டமுனைந்து இழந்துபோவதைவிட, தமிழ்த்துவத்தை அனைத்து துறைகளிலும் மீட்டெடுக்கும் அரசியல்தான் சரியான ஆயுதமாக இருக்கும்.

தொன்மமான நாத்தீக கோட்பாடுகளும் இயக்கங்களாக செயல்படுவதில் பிரச்சினையேயில்லை. அதில் பலனிருந்தால் அது குமுகத்தை சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், எப்படி "ஆன்மீக அரசியல்" என்ற ஒன்று ஆபத்தானதாக கருதப்படுகிறதோ, அதேபோல முழுமையான "நாத்தீக அரசியல்" என்ற ஒன்றும் தமிழ்க்குமுகத்துக்கு ஆபத்தானதுதான். இரண்டுமே சமகேடுடையவை என்பதை எடுத்துக்காட்டத்தான் வைரமுத்து அந்தக்கட்டுரையை எழுதினார் போலும்!?

அந்தக்கட்டுரை தமிழர் அரசியலுக்கு பொருந்தாத இரண்டு முரணரசியலின் போதாமையை வெளிக்கொணர்ந்திருக்கிறது. உள்ளே கிடந்து தவிக்கும் பெரிய தமிழ்க்குடியின் இயலாமையையும்  வெளிக்கொணர்ந்திருக்கிறது.

வைரமுத்தின் அந்த முரண்பாட்டு எழுத்துகளையும், அந்தத்திரிவின் கோணங்களையும், அவரின் கட்டுரைப்பிழைகளையும் அடுத்த மடலில் அமைதியாக ஆயமுடியும் என்ற நம்பிக்கையில் இம்மடல் இதற்கு முந்தியகால திரிவுகளையும் திரிவுகளின் விளைவுகளையும் பார்வைக்கும் நினைவுக்கும் வைக்க முனைந்திருக்கிறது.

மேலும், "அன்றைய காலச்சூழல்" என்று சொல்லாட்சி நிரம்பி வழியும் இந்த வேளையில் நான் அன்றைய காலச்சூழலையும் தொடர்ச்சியையும் சற்று தொட்டுக்காட்டவேண்டியது கடமையல்லவா?

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
21/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/1.html

Monday, January 15, 2018

ஆண்டாள் - மடல் 1




ஆண்டாள் மகாகவி. இப்படித்தான் மின்னம்பலம்.காம்-ல் ஒரு பெண்கவிஞர் தனது கட்டுரையில் ஆண்டாளை அறிமுகப்படுத்துகிறார் ( https://minnambalam.com/k/2018/01/13/28 ). அப்படியே நான் தொடங்குவதுதான் சரியானது என்றெண்ணி தொடங்குகிறேன்.

சுமார் பதின்மூன்று நூற்றாண்டுகளாக, "தமிழிலக்கியங்களில் தனக்கென ஒரு மாதத்தையே ஒதுக்கிக்கொள்கிற இலக்கியத்தை படைத்து நிலைத்த கோதைநாச்சியாரை மாகவி என்று சொல்வது அவரின் சிறப்புகளில் தலையாய சிறப்பு". இவரைப்போல ஒரு மாதத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட கவிஞரைத்தேடினால் மாணிக்கவாசகரை மட்டுமே சொல்ல முடியும். சமயம், ஆன்மீகம், இறைவடிவம் என்ற இவற்றைத்தாண்டி பண்ணிசைக்கவிஞர் என்ற மாவடிவம், ஆண்டாளுக்கு இருக்கிறதென்பதை எந்தக்கவிஞர்தான் மறுப்பார்?

கலைமாமணி, கவிமாமணி, சாகித்திய அகாதமி போன்ற விருதுகளை அறிந்திராத மாகவி பாரதியார் வாழ்ந்த நூற்றாண்டில், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் உள்ளிட்ட கவிச்செல்வங்கள் வாழ்ந்த நூற்றாண்டில், அதைத்தொடரும் காலங்களில், தோன்றிய தோன்றுகின்ற கவிஞர்களில் எத்தனை கவிஞர்கள் வரலாற்றில் நிலைபெறுவார்கள் என்பதை இன்று தீர்மானித்துவிட முடியாது.

அதற்கான காலம் சில நூற்றாண்டுகளேனும் வேண்டும் என்பதையும், திருப்பாவை தேவாரம் போன்ற பண்ணார்ந்த தமிழிசைப்பாடல்களை யாத்து வரலாற்றில் நிலைத்துப்போன கவிஞர்களை வருணிப்பதற்கு, இன்றைய அளவில், தமிழகப்பெருங்கவி, அல்லது வம்சத்து பெருங்கவி என்று ஓங்கிச்சொல்லப்படுவது மட்டுமே தகைமையை தந்துவிடுவதில்லை.

அதேபோல, ஆண்டாளின் படைப்புகளை ஆராய்ச்சி செய்பவர்கள், தற்கால பரபரப்புகளையே வாய்ப்பாகக்கொண்டு, ஆண்டாளுக்கு பருவ-உணர்வை உருவாக்கிந்தந்து, அதையே குறிக்கோளாய்க்கொண்டு ஆராய்ச்சி செய்வதையும், மிகச்சில வரிகளை மேற்கோள் காட்டி ஒரு முடிவை எடுப்பதையும் ஏற்றுக்கொண்டுவிட முடியாது. எடுத்துக்காட்டாக, https://maharasan.blogspot.in/2018/01/blog-post.html என்ற இந்தப்பதிவில் இருக்கும் சில கருத்துகளை சொல்லலாம்.

திருப்பாவையின் முதற்பாடலிலேயே, "சிறுமீர்காள்" என்று பெண்பிள்ளைகளை கூவி அழைக்கின்ற ஆண்டாள் என்ற சிறுமி, இறைவனோடு கலந்தபோது அவளுக்கு அகவை பதினைந்துதான்.

ஒரு 15 வயது சிறுமியின் ஞானவாழ்க்கையை, ஞானஉலகை புரிந்து கொள்வதில் ஏன் இன்றைய படிப்புலகிற்கு இத்தனை பெரிய தடுமாற்றம் என்று புரியவில்லை.

*யாரோ மண்டபத்தில் உட்கார்ந்து எழுதி* கோதையின் பேரை போட்டுவிட்டார்கள் என்று இராசாசியே சொன்னாலும், 3 வயதில் சிவனை பித்தன் என்று பாடிய அந்த ஞானக்குழந்தையின் நிழலில் அமர்ந்து கொன்டு அது பாடியதையே திரும்பப்பாடும் சிவநெறியாளரும் இராசாசியை ஒப்புக்கொள்ள மாட்டார். ஞானசம்பந்தரும் ஆண்டாளும் இம்மண்ணின் ஞானமரபின் வலிமையை சொல்லும் இலக்கணங்கள், குறியீடுகள்.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் ஆண்டாள் எழுதியபோது அவருக்கு 10 வயதா, 12 வயதா அல்லது 14, 15-ஆ என்று தெரியவில்லை. ஆனால், முற்போக்குகள், அந்தச்சிறுமியை, பாலியல் உணர்வுகளை மரபைத்தாண்டி வெளிக்காட்டி தன் உணர்வுகளுக்கு விடுதலை அளித்த புரட்சிக்காரியாக சித்திரிப்பதையும், நாச்சியார் திருமொழியை கொக்கோக நூலென்று சொல்வதையும், அந்தக்கால ஆணாதிக்கத்தை, பெண்ணுக்கெதிரான கட்டுப்பாடுடைகளை, தனது காம உணர்வுகளை எழுத்தில் பதித்ததன் மூலம், கட்டறுத்த, மீறிய பெண்ணியவாதி என்றெல்லாம் சொல்வதையும் எண்ணிப்பார்த்தால், அதிகமாக தலை சுற்றுகிறது; தலை என்றவொன்று ஏனிருக்கிறது என்று கூட தோன்றுகிறது.

கோதையை எண்ணும்போது, சீருடை அணிந்து பத்தாம் வகுப்பு படிக்க, பள்ளிக்கூடம் போகிற பிள்ளையொன்று நினைவுக்கு வருகிறது. அந்தப்பிள்ளை மாபெரும் படைப்பாளி, பத்தியின் அடையாளம், இறையின் இன்னொரு வடிவம் என்று பல காட்சிகளை காணத்தருகிறது. ஆனால், உள்ளங்கையை நீட்டு என்று, எல்லா பள்ளிக்கூடங்களின் (ஆத்திகம், நாத்திகம்...) இன்றைய ஆசிரியர்களும் பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்; சிலர் வரிசையாக, சிலர் கும்பலாக.

சிவநெறியை பற்றி நின்று, மால்நெறியை சிறிதும் அறியாதவனாயிருந்தாலும், பத்திமை என்பது எல்லா நெறிக்கும் பொதுமரபுதான்; அந்தப்பொதுமரபிலும், தமிழ்மரபிலும் நின்று ஓரிரு மடல்களை நான் எழுதினாலோ, அதிலேதும் பிழைத்தாலோ அன்னை ஆண்டாள் என்னைமட்டும் வெறுத்துவிடவா போகிறாள்?

(தொடரும்).

அன்புடன்
நாக.இளங்கோவன், 14/1/18

Thursday, January 04, 2018

ஆன்மீகமும் புற-ஆன்மீகமும்

:ஆன்மீகத்தை உங்களுக்கு சொல்லித்தாரேன் என்று ஒரு மராட்டிய நடிகன் கிளம்பியதும், துள்ளியெழுந்து, இது "பெரியார் மண்", "பெருங்காய மண்" என்று உளறித்தவிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் ஆன்மீக மறுப்பு என்பது நாத்திகக்களத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்பு. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றவாறே போனால் எப்படி?
எந்த ஆயுதத்துக்கு எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தி வேண்டாம்?
தமிழ்நெடுவரலாற்றில், அறியப்பட்ட நூல்களில் முதனூலான தொல்காப்பியமே ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன தெய்வம் என்ற பதிவை தாங்கியிருக்கிறது. அதன்பின்னர் முழுநூலாக நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இறைப்பாட்டாக காணக்கிடைக்கிறது. பரிபாடல், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரு நூல்களில் ஆன்மீகத்தை காணமுடியும்.
அதன்பின்னர், கண்ணப்பர், காரைக்காலம்மை, திருமூலர், நால்வர், 63 நாயன்மார்கள், ஆண்டாள் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் என பல்கிப்பெருகி, சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி என விரிந்து, பட்டினத்தடிகள், தாயுமானவர், அருணகிரி, குமரகுருபரர் என தொடர்ந்து, வள்ளலார் வரை கால நெடுகிலும் ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழகத்திற்கு இணையாக வேறொரு மாநிலத்தை மொழியை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது எனுமளவிற்கு ஆன்மீகம் இங்கே பரந்து விரிந்துதான் கிடக்கிறது.
செயினமும் பௌத்தமும் சீண்டிப்பார்த்த போது, யானை சிறு தேங்காயை இடறுவதுபோல, இடறித்தள்ளிய ஆன்மக்கோட்டை இந்த மண்.
இவை எல்லாவற்றையும் கெட்டியான போர்வையை போட்டு மூடிவிட்டு, இது பெரியார் மண், பெரியார் மண் என்று கூவுவது எவ்வளவு பெரிய அறியாமை?
இப்படி, தன்னிலையால், தமிழ்நிலையை புறந்தள்ளி பேசுவதால்தான் மாற்றானும் ஆன்மீகம் என்ற பெயரில் இங்கே கடைபோட கிளம்புகிறான்.
கெயிக்குவாடின் ஆன்மீகத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரே கேள்வி:
ஊரிலும் வீட்டிலும் குலதெய்வம் உள்ளிட்ட எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டே, வரலாற்றில் இருக்கும் முழுமையான தமிழ் ஆன்மீக அடித்தளத்தை நீங்கள் புறந்தள்ளினாலும், நீங்களே ஏற்கிற வள்ளலாருடைய மண் இந்த மண் என்பதை ஓங்கிச்சொல்வீர்களா? வள்ளலாரால் காக்கப்பட்ட மண்ணான இம்மண்ணுக்கு மராட்டியத்திலிருந்து இறக்குமதியாகும் புற-ஆன்மீகம் தேவையில்லை - போடா போ! என்று சொல்வீர்களா?
உங்கள் குறிக்கோள் நேர்மையானது என்றால், தமிழ் ஆன்மீகத்தை மறைக்காமல், புறத்தேயிருந்து உள்நுழையும் புற-ஆன்மீகத்தை தமிழ்-ஆன்மீகத்தால் மறுத்து குரல் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழ்-எதிர்-பிற என்று இருக்க முடியும். அந்தத்தமிழ், வடக்கேயிருந்து வரும் பிற பித்தலாட்ட ஆன்மீகத்தை துடைத்து எறிந்துவிடும்.
இல்லாவிடில், நீங்களும் கெட்டு, இம்மண்ணும் கெட்டு எல்லாமே நாறிப்போக வழிகாட்டிக்கொண்டே இருக்கும்.
வேண்டுமானால், உங்களுக்காக சிறிய இளக்கம் சொல்கிறேன்.
மற்ற யாரையும் உங்கள் பகுத்தறிவின்பாற்பட்டு முதன்மையாக கூறவேண்டாம்; தொன்மையை போற்றுபவரானால், முருகாற்றுப்படை செய்த நக்கீரரின் மண் இது என்று கூறுங்கள். அல்லது அண்மையை மதிப்பவரானால், "வள்ளலாரின் மண்" என்று சொல்லுங்கள். புற-ஆன்மீகரை பார்த்து நீ இதில் யாரடா? என்று கேளுங்கள்.
எது அகம், எது புறம்? என்ற வேறுபாடுகூட தெரியவில்லையெனில் எப்படி
வெல்ல முடியும்?
கூடவே இது பெரியாருடைய மண் என்று வேண்டுமானால் உங்கள் ஆசைக்கு போட்டுக்கொள்ளுங்கள். நான் குறுக்கே வரமாட்டேன்.
ஆனால் மண்ணின் ஆன்ம வரலாற்றை மொத்தமாக மண்ணால் மூட விடமாட்டேன்.
The war between "Nothing vs Everything" is absurd. So the Nothings have to learn to take up Something to fight Everything, and let them take Tamilthing.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4/1/18

Sunday, December 31, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.
பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.
14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.
அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.
தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.
மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.
இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.
96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில், ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை தீர்க்க காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?
ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.
ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?
எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!
நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான். தமிழுட்பகைகளின் திரட்சிகளே அயலவர் நுழைய இடம் கொடுக்கின்றன.
"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!
தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிக்க தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.
சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.
பார்க்கும் பெண்ணையெல்லாம் காமுறுவதற்கும், பார்க்கும் நடிகரையெல்லாம் ஆளவைப்பதற்கும் என்ன வேறுபாடு?
விதைப்பதுதானே முளைக்கும்?
இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

அன்புடன்
நாக.இளங்கோவன்
31/12/2017

Saturday, December 30, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.

பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.

14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.

அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.

தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.

மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.

இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.

96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே  ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில்,  ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை  காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?

ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.

ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?

எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!

நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான்.

"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!

தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிப்பது தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.

சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.

விதைப்பதுதானே முளைக்கும்?

இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

தமிழின் இயக்கம் இருப்பதாக தமிழியக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அதன் மனசாட்சிக்குத்தெரியும் பொய்யென்று.

Sunday, November 23, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #3/3)

நாம் செய்ய வேண்டியதென்ன?

நாமெல்லாம் எழுந்து போய் இரயில் மறியல்
செய்யப் போகிறோமா?
நாமெல்லாம் பட்டினிப் போராட்டம்
செய்ய வேண்டுமா?
நாமெல்லாம் தார்ச்சட்டியைத் தூக்கிக் கொண்டு
தெருத்தெருவாகச் சென்று தமிழ் அல்லாதவைகளை
அழிக்க வேண்டுமா?

அதெல்லாம் எதுவும் தேவையில்லை.

1) பிழைப்பிற்காக கற்ற கல்வி ஆங்கிலம்.
பிழைப்பதும் ஆங்கிலத்தால்தான்.
ஆனால் அந்த ஆங்கிலத்தை அலுவலகத்தோடு
வைத்துக் கொள்ள நம்மால் முடியாதா?

2) அலுவகம் சார்ந்த பணிகளில் தமிழுக்கு
எதிர்காலத்தில் இடம் முழுக்க இருக்கும் என்றாலும்,
தற்காலத்திலே முடியாத சூழல் தனியார் துறைகளிலும்
வெளிநாடுகளிலும் இருந்தாலும் தனிப்பட்ட
எழுத்துக்களை தமிழில் எழுத முடியாதா?

3) நமது நண்பர்கள், உறவுகளிடம்
தமிழில் பேச முடியாதா?

4) நம்மால் செய்ய முடிந்த இவற்றை நாம்
செய்யாததற்கு அரசியல்வாதிகளைத் திட்டித்
தீர்க்க வேண்டுமா? நமக்கு நேர்மை வேண்டாமா?

5) மிடையங்கள் தமிழைக் கொலை செய்கின்றன
என்பதால் நாமும் கொலை செய்ய வேண்டுமா?

6) எந்தத் தொலைக்காட்சிகளோ கேடு கெட்ட
தமிழைப் பேசினால் நமக்கென்ன?
நாம் என்ன அந்தத் தொலைக்காட்சியோடு
திரும்பப் பேசுகிறோமா? இல்லையே!!
அப்புறம் ஏன் அதைத் தடைக்கல்லாக
எடுத்துக் கொள்ள வேண்டும்?

7) எழுத்தாளர்கள் எல்லாம் செய்யும்
கலப்புத் தவறுகளை, கவிஞர்கள் செய்யும் தவறுகளை
நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

8) தமிழ் பேச சில பேருக்கு நாணமாக இருக்கிறது
இன்றையச் சூழலில். அந்த நாணத்தை அவர்கள் போக்கிக் கொள்வது எளிது.

9) கலப்புத் தமிழுக்கு ஞாயம்
கற்பிக்கிற ஆள்களையும்,
ஆங்கிலம் சரளமாகப் பேசுபவர்களையும்
நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

அவர்களிடம் சேக்சுபியரைக் கொண்டு கொடுங்கள்.
தாகூரைக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
தவிப்பார்கள் படிப்பதற்கே!

அவ்வளவு ஏன் கணித்துறையிலே இருக்கிற
சில பகட்டுப் பேர்வழிகளிடம் கொண்டு போய்
சி.யே.டேட் நூலைக் கொடுங்கள்!
பூச்சின் நூலைக் கொடுங்கள்!
எத்தனை பேரால் வேகமாகப் படிக்க முடிகிறது
பாருங்கள்? வேடிக்கையாக இருக்கும்.

ஆங்கிலத்திலும் அடிப்படைப் புலமை இல்லாமல்,
தமிழிலும் அடிப்படை இல்லாமல்
ஒரு வித பித்துக்குளித்தனத்தில்
இந்தக் குமுகம் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் மாறுவதற்கும், உணருவதற்கும்
தக்க வேளை தற்காலமே!

அதைத்தான் போரற்ற குமுக நிலையும்,
முன்னேறிய கல்வி நிலையும் காட்டுகின்றன.

"தமிழ் என்ன செய்தது என்று கேட்காதே!
தமிழுக்கு என்ன செய்தோம்? என்று எண்ணிப்பார்"!

விடையாக, நல்ல தமிழ் எழுதினேன்
என்று உள்ளம் சொல்லுமானால்
அதுவே உயர்ந்த தமிழ்ப்பணி.
அதுவே தேவையான பணியும் கூட.

நிறைவு.
நன்றி: பண்புடன் விழாக்குழுவினர் மற்றும் நண்பர் ஆசிப்

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, November 22, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி # 2


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம். கல்வி என்ற வகையிலே, கோணத்திலே பார்த்தோமானால், 1906-07ன் கணக்குப் படி இந்தியாவில் படித்தவர்கள் 2.2% பேர். ஆதாரம் நீயூயார்க் டைம்சு நாளேடு.

http://query.nytimes.com/gst/abstract.html?res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF

http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF&oref=slogin

இந்திய சராசரி புள்ளி விவரத்தையே தமிழகத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்.

2001ல் எடுக்கப் பட்ட புள்ளிக் கணக்குப் படி தமிழகத்திலே 76% பேர்.
அது தற்போதைக்கு 80% ஆகியிருக்கும்.

ஆக சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால் 2.2% ஆகவும்
தற்போது 80+ விழு. ஆகவும் இருக்கும் இந்த நிலை மிகவும்
வியத்தகு நிலை. (படம் - 2).


மொத்தம் படித்தவர்களில் 1900த்தில் 3%தான் பெண்கள். ஆனால்
இன்றைக்கெல்லாம் பள்ளித் தேர்வுகளில் பெண்களே அதிகம் தேர்வாகிறார்கள்.

1300க்கும் 1947க்கும் இடைப்பட்ட 650 ஆண்டு காலம்
மிகக் கொடுமையானது.

8 அயல்நாடுகள் அயல்மொழிகள் நம்மைத் தாக்கியிருக்கின்றன.
இப்படி அமைதியில்லா அந்தக் காலங்களில்தான்
நிலப் பண்னைத்துவம் என்று சொல்லப் படுகின்ற கிழாரியம் (feudalism),
வருணப் பிரிவினை செய்யும் சாதீயம் என்ற இரண்டும் இராகுவும் கேதுவுமாக தமிழ் நிலத்தையும் தமிழையும் இழி நிலைக்குத் தள்ளின.

ஆகவே, அந்த 2.2% விழுக்காடு கல்வி என்பது,
சாதிச் செழிப்பின், செல்வச் செழிப்பின்
கல்விச் செழிப்புதானே ஒழிய
குமுகச் செழிப்பின் வெளிப்பாடு அல்ல.

தற்போது பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு விட்டபோதிலும்,
பல குமுகத் தடைகள் உடைபட்டுப் போய், பீறிட்டுக் கிளம்பும்
மனித சக்தியின் வெளிப்பாடாய்த்தான் இன்றைய 80+% கல்வி நிலை
நமக்குத் தெரிகிறது.

2.2% படித்தவர்கள் இருந்த சூழலை விட, 80+% படித்தவர்கள்
இருக்கையில் மொழி வளம் என்பது சிறப்புற்றிருக்கத்தானே
வேண்டும்! படிப்பிற்கு தகுதி அதுவாகத்தானே இருக்க முடியும்?
படித்த குமுகாயத்திற்கு தாய்மொழியை செழிக்கச் செய்வதில்தான்
மதிப்பும், பெருமையும் கிடைக்கும், நிலைக்கும்.
(2.2% இருந்த பொழுதே நாம் 30-40 விழுக்காடு கலந்தோம்; இப்பொழுது
80% இருக்கையில் எங்களால் அதை விட அதிகமாகக் கலக்க முடியும் என்ற நிலை இருக்கிறதா? அல்லது தற்போது நிறைய பேர் பண்பட்டிருக்கிறோம்; ஆகையால் கலப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்ற நிலை இருக்கிறதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

3) மூன்றாவதாக, விடுதலைக்கு முன்னரும் பின்னரும்
மொழி நிலையைக் காண்போம்.

1714ல் அச்சில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் எனப்படும்
கிறித்துவ வேத நூல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

"சுதனாகிய சறுவேசுரனாயிருக்கிற ஏசுக்கிறீஷ்த்து
நாதரானவர் இந்தப் பூலோகத்திலே மனுஷனாய்ப் பிறந்த
விசேஷங்களையும் போதிவிச்ச ஞான உபதேசங்களையும்
செய்த அற்புதங்களையும் மனுஷருக்கு வேண்டி பாடுபட்டு
எல்லாரையும் மூண்டு ரெஷ்சித்தவத்த வானங்களையும்
உயிரோடே எழுந்திருந்து பரலோகத்திலே மகிமையாக
ஏறினத்தையும் அவருடைய சீஷர்களாகிற அப்போஷ்த்தல மார்கள் லோகமெங்கும்போய் இப்படிக்கொத்தச் சுவிவிசேஷங்களைச் சகலச்சனங்களுக்கும் பிறசங்கம் பண்ணினதையும் வெளிப்படுத்துகிறபுது
ஏற்பாட்டினுடைய முதலாம் வகுப்பாகிற அஞ்சுவேதபொஷ்தகம்
"
(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இதில் 10 வரிகளிலே 13 கலப்புச் சொற்கள்.
13/42 சொற்கள் கலப்பு: அதாவது 30%

1924ல் எழுதப்பட்ட வேதாந்த தீபிகை என்ற நூலிலே ஒரு
16வரிகளில் 31 கலப்புச் சொற்கள் இருக்கின்றன.
அதாவது, 32/72 சொற்கள் கலப்பு. இது 44.5% கலப்பு ஆகும்.

(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இந்த நூல்கள் மணிப் பிரவாளத்திலே எழுதப் பட்ட நூல்கள் அல்ல.
தமிழிலே எழுதப் பட்ட நூல்கள். மணிப்பிரவாள நூல்கள் என்றால்
இன்னும் கொடுமை - ஏறத்தாழ 70 விழுக்காடு கலப்பு.

தமிழும் சமற்கிருதமும் கலந்து எழுதுவதே உயர்ந்த செயல்
என்ற போக்கு அந்தக் கொடுங்காலத்தில் ஏற்பட்டது.
சமற்கிருத இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு
தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை எல்லாம்
சமற்கிருதம் கலந்து எழுதுவதே உயர்ந்த படிப்புக்கு அடையாளம்
என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதில் முன்னோடியாக இருந்தவர்கள்
நம்பூதிரிகள். அவர்களின் இந்தத் தீச்செயலுக்கு இரையானதுதான்
அன்றைய தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியான சேரநாடென்ற
இன்றைய கேரளம்.

மொழிக் கலப்பால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும்
ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக ஆகப்பெரிய இழப்பாக
வரலாறு வரைந்து வைத்திருப்பதெல்லாம் இந்த மலைநாடு
அந்நியமாகப் போய், ஏறத்தாழ எதிரியாகவும் போனதைத்தான்.

1440ல்தான் அவர்களின் முதல் இலக்கிய நூலான இலீலா திலகம்
வெளிவந்தது.

குறிப்பாக 1800களில் 1900களில் தமிழில் பேசுவது
நாகரிகக் குறைவாகவும், கீழ்ச்சாதியினரின் பேச்சாகவும்
கல்லாதவரின் மொழியாகவும் ஆக்கப் பட்டது.

சங்ககாலத்திலே கலப்பற்ற தூயதமிழ் இருந்த நாட்டிலே,
அதேமொழி கீழ்மொழியாக ஆக்கப் பட்ட கொடுமையை
நாம் உணர்ந்து கொள்ள நிறையவே இருக்கிறது.


மொழி மாறினால் முகவரி மாறிவிடும்! என்பதற்கு
கண்ணுக்கு முன்னே அங்கை நெல்லியாக கேரளம்
இருந்து கொண்டிருக்கையிலே, நாம் மேலும் மொழிக்கலப்பைச்
செய்வது படித்தவர்களின் செயலாக இருக்க முடியாது.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 80+% ஆகியிருக்கையில்
எழுத்தின் நிலை எப்படியுள்ளது. படித்தவர்கள் நேசிக்கும்
எழுத்தாளர் சுசாதாவின் எழுத்தில் மொழிக்கலப்பு எப்பொழுதும்
விரவியிருக்கும்.

1976ல் சுசாதாவின் கட்டுரை ஒன்றில் கமலகாசன் பற்றிய அவரின் எழுத்தைப் படித்த போது அதில் 24% விழுக்காடு ஆங்கில, சமக்கக் கலப்பு இருக்கிறதையும் காணமுடிகிறது. இதை விட அவரின் சில கதைகளில் ஆங்கிலம் கரை புரண்டு கலக்கும்.

விடுதலைக்கு முந்தைய விவிலிய, வேதாந்த நூல்களில் இரண்டு
மொழிகள் கலந்து கிடந்தன என்றால் விடுதலைக்குப் பின்னரான
தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் மும்மொழிக் கலப்பு
இருக்கிறது. தமிழ் எழுத்துக்களோடு, ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும்
வடமொழியை வடமொழியாகவும் கலக்கிற பாங்கினை அவர்
கடை பிடித்தார்.

இரு மொழிக் கலப்பு மும்மொழிக் கலப்பாக விடுதலைக்குப் பின்னர்
ஆகியிருக்கிறது என்பது உண்மை.


(சுசாதாவின் 76ஆம் ஆண்டு எழுத்து. ஆங்கிலமும், வடமொழியும்,
தமிழும் கலக்கப்படுவதைக் காண்க. சுசாதா மட்டுமல்ல
பலரும் இப்படித்தான்)

எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள், எழுத்தை ஆளாமல்
கருத்தை மற்றும் ஆண்டால் போதும் என்ற மாயையில்
விழுந்ததோடு அவர்களை வாசிக்கும் மற்றும் நேசிக்கும்
மக்களையும் அந்த மாயையில் சிக்க வைத்தது ஒரு
வருத்தமான உண்மை.

விடுதலைக்கு முன்னரும் பின்னருமான தமிழ்ச் சூழலை
குமுக அமைதி, கல்வி நிலை, மொழி நிலை என்ற மூன்று
தளங்களில் பார்க்கின்ற போது நமக்குக் காண கிடைப்பதெல்லாம்
"2300 ஆண்டுகள் வரலாற்றில் தமிழகம் சிறந்திருந்த காலத்தில்
இருந்ததைப் போன்ற ஒரு குமுக அமைதியை தற்போது
தமிழ்க் குமுகம் பெற்றிருக்கிறது. கல்வி நிலையில் மிகுந்த
ஏற்றம் பெற்றிருக்கிறது. கட்டற்ற கல்வி மற்றும் எழுத்து
சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மொழிச்
செழுமை, வளமை, தூய்மை ஆகியவற்றை இன்னும் தேடிக்
கொண்டே இருக்கிறோம்; சில நேரங்களில் அவற்றை
சாடிக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணும்படியாகவும்
சில அறிவுசீவர்களின் கருத்துக்கள் அமைகின்றன."

நாம் செய்ய வேண்டியதென்ன?

(தொடரும்)

Friday, November 21, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #1)


ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.

அதையே வெள்ளையன் எழுத்தில்
"If it is not Measured, it is not Managed" என்று
சொல்லப்படும்போது பல்வேறு துறைகளில் பணி புரியும்
நமக்கு இந்த "Manage by Metrics" என்ற சொல்லாடல்
கிளுகிளுப்பைத் தருவதாய் இருக்கும்.

"ஆகா, என்னமாச் சொன்னான்யா" என்று
நாமெல்லாம் பல தடவைகள் மெய்புளகம்
அரும்பித் ததும்பியது உண்டு!

"இந்திய விடுதலைக்கு முன்னரும்
அதற்குப் பின்னரும் தமிழ்" என்ற இந்த உரையும்
நமது நிலையை சற்று அளந்து பார்க்க உதவுமானால்
நானும் நாமும் மகிழ்ச்சியடையலாம்.

அண்மையில் கூட தமிழக முதல்வர் கலைஞர்
இந்த அளவைக்குக் காட்டாக ஒரு செய்தியைச் சொன்னார்.
"சிங்கம் ஒரு தொலைவு நடந்து போனதும்,
தான் எவ்வளவு தொலைவு
வந்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்குமாம்!"
விலங்குக்குக் கூட இந்த அளந்து பார்க்கும் குணம் இருக்கிறது
என்ற ஒரு செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.
இன்னொரு பார்வையில் சொன்னால்,
"அப்படி அளந்து பார்க்குந் தன்மை
இருப்பதால்தான் அது அரசராக,
ஆளுமையுடன் இருக்கிறது!".

அப்படியென்றால் அளந்து பார்த்தால்தான் ஆளமுடியும்
என்ற ஒரு உண்மை நமக்குப் புலப்படத்தான் செய்கிறது.
அதுமட்டுமல்ல, அண்மையில் நண்பர் எசென்.இராசா ஒரு
கூட்டத்தில் கென்யாவில் சிங்கங்களைப் பற்றித் தான்
அறிந்த செய்திகளைச் சொன்னார்.
அதில் ஒன்று சிங்கங்களுக்குத் தன்மானம்
அதிகம் உண்டு என்ற செய்தி.

ஆக, அளந்து பார்க்கும் தன்மையும், தன்மானமும்
பெருமையோடு வாழ அவசியம் என்று நாம் உறுதியாக
நம்பலாம்.

இந்தத் தலைப்பை ஒரு சிற்றுரை/கட்டுரை மூலமாக
நிறைவாகச் செய்து விட முடியுமா? என்றால்
வாய்ப்பேயில்லை என்பது உண்மை.

ஏனென்றால் அதற்கு மிகப் பல பரிமாணங்கள் உண்டு.
அத்தனையும் முடியாதெனினும் சிலவற்றை மட்டும்
இங்கே நான் எடுத்து வைக்கிறேன் நமது சிந்தனைக்காக.

1) கால, குமுகச் சூழல்
2) கல்விச் சூழல்
3) பிறமொழிகள்

என்ற இந்த மூன்று நிலைகளிலே நாம்
விடுதலைக்கு முன் காலத்தையும்
பின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்
ஆனால் நமக்கு அது
ஒரு தொடர்ச் சிந்தனையை
ஏற்படுத்தக் கூடும்.

விடுதலைக்கு முந்தைய காலத்தை பலவாறாகப்
பிரிக்கலாம். வரலாறு, இலக்கிய, அரசியல் ஆசிரியர்கள்
பலவாகப் பிரித்திருக்கிறார்கள்.

இங்கே நான் 5 போர்க் காலங்களாகப்
பிரித்துக் காட்டுகிறேன்.

போர்கள் குமுகத்தில் ஏற்படுத்தும்
தாக்கம் மிக முக்கியமானது.

சங்ககாலம் என்பது கி.மு 300க்கும் கி.பி 100க்கும்
இடைப்பட்ட காலம். என்ன இது ஆங்கிலேயர்
காலத்தைப் பேசச் சொன்னால் சங்ககாலத்திற்கு
ஓடுகிறானே என்று நீங்கள் எண்ணக் கூடும்.

இந்த 400 ஆண்டு காலம் வரலாற்றில்
நன்கு பதியப்பட்ட தமிழ் தமிழரின்
இயல்பு மாறாத உயர்ந்த
காலமாகும். அக்காலத்தை விடுத்து
தமிழ் என்று எதையும் பேசுவது
காற்றில் கத்தி வீசுவது போலவாகும்!

அந்த 400 ஆண்டுகளிலே தமிழகத்திலும்
தமிழகத்திற்காகவும் நடந்த போர்கள்,
வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆழப்
பதிவாகியிருக்கிற போர்கள் சுமார் 40.

(குறிப்பு: போர்கள் பற்றி செய்திகளுக்கு
ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டிருப்பது 
பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரின் 
"தென்னாட்டுப் போர்க்களங்கள்" என்ற
நூலை. சில போர்கள் மற்றும் செய்திகள் 
விடுபட்டுப் போயிருக்கக் கூடும் )

ஆக, கணித்துப் பார்த்தால் 400 ஆண்டுகளிலே
40 போர்கள் என்றால், 10 ஆண்டுக்கு ஒரு போர் வீதம்
நடந்திருப்பது தெரிகிறது அல்லவா?

அடுத்ததாக, கி.பி 101க்கும் கி.பி 900க்கும் இடையேயான
800 ஆண்டு காலம். 

இந்தக் காலத்தை இரண்டாவது
 போர்க்காலமாகப் பிரிக்கிறேன். 
இப்படி ஏன் நான் பிரிக்கிறேன் என்றால், 
இது சங்கம் மருவியகாலமும், 300 ஆண்டு இருண்ட
காலம் என்று சொல்லப்பட்ட 
களப்பிரர் காலமும், சோழப் பேரரசிற்கு
அடிகோலிட்ட அந்த 9 ஆம் நூற்றாண்டின் 
மத்தியப் பகுதியையும்
உள்ளிட்டதாகும். இவை முக்கியமான காலங்கள்.

இக்காலத்திலே 80 போர்கள் வரலாற்றிலே 
ஆழப் பதிந்திருக்கிறது. அதாவது 800/80 = மீண்டும் 10
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் நடந்திருக்கின்றது.

சோழப்பேரரசு 850களில் தழைக்கத் தொடங்கி 
ஏறத்தாழ 130 ஆண்டுகள் தழைப்பிற்குப் பின் பேரரசாக 
விரிந்து 300 ஆண்டுகாலம் நமக்குப் புகழ்
சேர்க்கிறது. 

ஆகவே கி.பி 901க்கும் சோழன் நலிந்த 1300க்கும்
இடைப்பட்ட காலமான அந்த 400 ஆண்டுகளை 
மூன்றாவது போர்க்காலமாகப் பிரித்துப் பார்த்தால் 
அங்கே அந்த 400 ஆண்டுகளிலே 
166 போர்கள் நிகழ்ந்துள்ளமை நமக்குக் காணக் கிடைக்கிறது. 
இது தமிழகத்தில் கொஞ்சமும், 
தமிழ் அரசு வடக்கே கங்கை, கிழக்கே கடாரம், 
மேற்கே சேரம், தெற்கே மாலத்தீவுகள் வரை 
எல்லை விரிப்பிற்கும் செய்யப் பட்டப்
போர்களின் எண்ணிக்கையாகவும் கிடக்கிறது. 
இவை தமிழர்களுக்கு
வலு சேர்த்த போர்கள் என்று எண்ணலாம்.

ஆக இந்தக் கால கட்டத்தில் 
400/160 = 2.5 ஆண்டுகளுக்கு ஒரு
போர் வீதம் நடந்திருப்பது ஒரு இன்றியமையாத 
புள்ளிவிவரம் அல்லவா?

நிரவலாக சராசரியாக 10 ஆண்டுகளுக்கு 1 போர்
என்று இருந்த போர்வீதம் திடீரென்று 2.5 ஆகக் 
குறையும் போது அதனால் குமுக கவனங்களின் 
மேல் தாக்கம் இருக்கும் அல்லவா?

நான்காவதாக, கி.பி.1301க்கும் 1750க்கும் 
இடைப்பட்ட 450 ஆண்டு காலம். 
தமிழகம் இந்தக் காலத்தைப் போல 
என்றைக்கும் அலைக்கழிக்கப் பட்டதில்லை 
என்று சொல்லக் கூடிய காலம்.

இக்காலத்தில்தான் மொகலாயர், மராட்டியர், 
தெலுங்கர், கன்னடர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், 
பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர் என்ற 8 வகையான 
கூட்டத்தின் தாக்கம் ஏற்பட்ட காலம். தமிழரசு
என்பது இல்லவே இல்லை. போதாதற்கு 
ஒய்சளர்கள் என்ற பிரிவினரும் வந்தனர்.

இக்காலத்தில் நடைபெற்ற போர்கள் 120.
சராசரியாக 3.75 ஆண்டுகளுக்கு ஒரு போர். 
இந்தப் போர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்லாது, 
இக்கூட்டங்களுக்கு இடையே நிகழ்ந்ததாகவும் 
நிறைய அமைந்திருக்கின்றன.

ஐந்தாவது போர்க்காலமாக,
1750க்குப் பின் ஏறத்தாழ இந்தியா 
பிரித்தானியரின் கீழ் அடங்கிவிட்டது;
1750க்கும் 1850க்கும் இடையேயான 
100 ஆண்டுகளில் மட்டும்
தமிழகம் 50 போர்களைக் காணுகிறது.

அதாவது 2 ஆண்டுகளுக்கு ஒரு போர் என்ற அளவில்.

1850க்குப் பின்னர் இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஓங்க
ஆரம்பித்து 1947 வரைக்கும் நீண்டது வேறு வகையினது.
அக்காலத்தினை இவ்வாய்வில் நான் விட்டு விடுகிறேன்.

ஆகவே மேற்சொன்ன இந்த 5 போர்க்காலங்களை 
ஓர்ந்து பார்க்க.

இப்பொழுது, 1947க்குப் பின்னர் தமிழகத்தை 
உள்ளிட்ட இந்தியா செய்துள்ள 
போர்கள் எத்தனை ?

பாக்கித்தானுடன் நான்கு போர்கள்,

48-49 - காசுமீரப் போர்
65 - கட்ச் போர்
71 - கிழக்கு வங்கப் போர்
99 - கார்கில் போர்

சீனாவுடன் 1 போர்
62 - இமயப் போர் / அருணாச்சலப் போர் - சீனாவுடன்

ஈழத்துடன் 1 போர்

87 - சிங்களச்சார்புப் போர்

தமிழ்நாடு இந்திய மாநிலங்களுள் ஒன்று என்பதால் இந்தியா
செய்கின்ற போர்களால் தமிழ்நாட்டு அரசியலுக்கும் பொருளியலுக்கும்
குமுகத்திற்கும் தாக்கம் உண்டு.

ஆக, விடுதலை அடைந்து இந்த 61 ஆண்டுகளிலே 
மொத்தம் 6 போர்களில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.

இங்கே சராசரிப் போர் வீதம் பார்த்தால் அது 10 என்கிறது!
Italic
கி.மு.300 இல் இருந்து இன்று வரை யில் நிகழ்ந்த 
போர்களின் வீதங்களை உற்றுப் பார்த்தால் 
அது 10-10-2.5-3.75-2-10 என்று இருக்கிறது. படம்-1 ஐக் காண்க.

இப்படத்தைப் பார்த்தால் குமுக அமைதியின் தன்மை விளங்கும்.
குமுக அமைதி என்பது ஒரு நாட்டின் பொருளியல்,
கலை, பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதது
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமக்குப் பல தரவுகள் அல்லது
செய்திகள் கிடைக்கின்றன.

அ) சங்ககாலத்தில் மொழிக் கலப்பு இல்லாமல் 
தமிழ் செழித்துச் சிறந்திருந்தது என்று சொன்னால், 
அதற்கு அப்போதிருந்த குமுக அமைதியும் ஒரு முக்கிய காரணம்

ஆ) சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த இரண்டாம் போர்க்காலத்தில்
தமிழ்நாடு சில இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த போதிலும்
மொழிச் சிதைவு திகைக்க வைக்கும் வகையில் ஏற்படவில்லை.
நன்றாகவே இருந்திருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் தமிழாகவே இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெருமை குன்றி விடவில்லை. 
அதற்குச் சான்றாக தேவார, பிரபந்த
இலக்கியங்களில் உள்ள தமிழின் செழுமையைச் சொல்லலாம்.

இ) சோழர்களின் காலத்தில் போர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருந்தது அரசியல் வலுவைக் கூட்டவே. ஆயினும்
மொழிச் சிதைவும் கலப்பும் இக்காலத்தில் ஏற்பட்டது
என்று சொல்லப்படுவதற்கு,
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம்
நடந்த குமுக அமைதியின் தன்மையும் ஒரு காரணம் என்பதைப்
புறம் தள்ளிவிடல் ஆகாது.

ஈ) 1300க்குப் பின்னரான கால கட்டங்களில் நடந்த போர்களின் வீதம்
நமக்கு சொல்வதெல்லாம் மொழியின் பேரழிவையே. இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் தமிழகத்திலும் தமிழகத்தைச் சுற்றியும்
நிகழ்ந்த போர்கள் தமிழ் மொழிச் சிதைவை, தமிழர் குமுக வேறுபாடுகளை அதிகப் படுத்திச் சீரழித்திருக்கிறதைக் காண முடிகிறது.
குன்றிய குமுக அமைதி தொடர்ந்து தமிழும் தமிழரும் கெட்டதையே
காட்டுகிறது.

இன்னொரு காரணம் என்னவென்றால் இக்கால கட்டங்களில் வலுவான தமிழ் அரசர் இல்லை. ஆளுகை முற்றிலுமாக தமிழர் அல்லாதவர்களிடம் சென்று விட்டது.

உ) சொல்ல வந்த கருத்தாக நான் இங்கு சுட்டிக் காண்பிக்க விழைவது
என்னவென்றால், "தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்த அதே
குமுக அமைதி, போரமைதி இந்திய விடுதலைக்குப் பின்னரான
தற்போதைய காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
படத்திலே, சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்களின் எண்ணிக்கையை
ஒட்டியே தற்போதைய போர்களும் எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன.
விடுதலைக்கு முன்னர் ஏறத்தாழ 1050 ஆண்டுகளில் இல்லாத
குமுக அமைதி தற்போது தமிழருக்குக் கிடைத்திருக்கிறது.

குறிப்பாக கி.பி 1300க்குப் பின்னர் போர் ஓலங்கள் 
குறைந்த அமைதியான குமுகச் செழிப்பைக் 
காண வேண்டுமானால் அதைத் தற்போதுதான் காண முடிகிறது."

பொருளியல் மற்றும் குமுகச் சூழலில் பல்வேறு சவால்களைச்
சந்திக்க வேண்டி இருந்தாலும், இந்த அமைதியான சூழலில்
நமது மொழியையும் பண்பாட்டையும் முழுமையாக மீட்டெடுக்க
வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. கடந்த பல நூறு
ஆண்டுகளில் சந்தித்த சறுக்கல்களை எல்லாம் இன்று செப்பனிட
வேண்டி உள்ளது.

அதற்குக் காலமும் துணையாயிருக்கிறது.

அதனால்தான் தமிழ்ச் சான்றோர்கள் மொழித் 
தூய்மையின் அவசியத்தையும், அதைச் செய்யவேண்டிய 
அவசரத்தையும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய தேசியத்தில் இணைந்திருக்கிற தமிழ்நாடு 
இந்தச் சூழலை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை 
என்றால், வறட்டு வாதங்களில் ஈர்க்கப் பட்டுப் 
போய்க் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் 
இக்குமுகம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத்
தேவையான வலுவை அறவே 
இழந்து போய் விடும். 

சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு சிறிய 
குமுகம் சேற்றில் புதைந்து மறைந்து போனது போல், 
தமிழ்நாட்டுக் குமுகமும் எதிர்காலத்தில்
தனது அடையாளத்தை காலமாற்றம் 
என்ற பெயரிலும், உலக மாற்றம்
என்ற பெயரிலும் புதைத்துவிட்டு 
ஏதோ ஒரு மொழியைப் பேசி
சார்புக் குமுகமாகிவிடக்கூடும்.

ஆகவே, குமுக அமைதி என்பது தமிழ் மக்களுக்கு
நிறையவே கிடைத்திருக்கிறது. அதில் ஆற்ற வேண்டிய
கடமைகள் எவ்வளவோ இருப்பினும், மொழியைக் காக்க
வேண்டிய அவசியமும் மீட்க வேண்டிய அவசியமும்
நிறையவே இருக்கிறது।


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம்।


(தொடரும்)

(15/08/2008 அன்று விடுதலை நாள் விழா ஒன்றில் 
ஆற்றிய உரையின் சாரம்/சில பகுதிகள். எழுத விட்டவையும் உண்டு.)