Pages

Friday, December 18, 2015

தமிழோற்பலம்::மடல் 2 - ஏல் ஓர் எம்பாவாய்!

மார்கழி மாதம். வருடமுழுதும் வெய்யில், மழை என பருவங்கள்
வேறுபட்டு வருகையில், பனிக்காலத்தின் தொடக்கமான மார்கழி
மனதுக்கும் உடலுக்கும் இனிமையான மாதம் என்பது
இந்நிலவமைப்பின் இயல்பு.

ஆண்டுமுழுதும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்,
நோன்புகள் எனப்பல கொண்டாட்டங்களையும் சிறப்புகளையும் கொண்ட
குமுகம்தான் தமிழ்க்குமுகமும். அது, பத்திக்கென்று ஒதுக்கிக்கொண்
ஒருதிங்கள் மார்கழி.தமிழ்ச்சைவமும் தமிழ்வைணவமும் கொஞ்சிமகிழும்
மாதம் மார்கழி.

பத்தி எனும்போது, இல்லத்தில் வழிபாடும், கோயிலுக்குச்சென்று
இறைதெரிசன வழிபாடும் செய்வதுமே பொதுமக்களின் மரபு.

கோயிலுக்குச்சென்று செய்யும் வழிபாடுகளில், தொலைவில் இருக்கும்
கோயில்களுக்குச்செல்வதற்கு மார்கழி மாதமும், தைமாதமும்தான்
மிக உகந்த மாதங்கள். மெல்லிய இதமான குளிரடிக்கும்
இரவுகளும், உடலை வருத்தாத வெயிலடிக்கும் பகல்களும் மார்கழியில்
தொடங்குகின்றன.

இன்றைய போக்குவரத்து வளர்ச்சியில், தமிழ்நாட்டின் எந்த ஓரிடத்திற்கும்
ஒருபகற்பொழுது அல்லது இரவுப்பொழுதில் சென்றுவிடலாம். ஆனால்
பழையகாலங்களில் அப்படியில்லை. நடைப்பயணமாகவும்,
மாட்டுவண்டிப்பயணமாகவும் சில நாள்களேனும் பயணிக்கவேண்டும்.
சென்னையிலிருந்து பழனி செல்லவேண்டுமானால்,
திருச்செந்தூர் செல்லவேண்டுமானால், அல்லது அங்கிருந்து திருமலைக்கோ
காளத்திக்கோ,தணிகைமலைக்கோ வரவேண்டுமானால் ஒருவார பயணமாகிவிடும்.
ஆக, நெடுந்தொலைவு செல்லும் திருத்தலப்பயணத்திற்கு உகந்த மாதம்
மார்கழியில் தொடங்குகிறது. மாசியிலும் பங்குனியிலும் சிறிது தொடர்கிறது.

ஆகவேதான் இயல்பாகவே மார்கழி சிறப்புப்பெற்று பத்திமாதமாகிவிடுகிறது.
இன்றைக்கும் சபரிமலை செல்பவர்கள் மார்கழி,தையில்தான் நோன்பிருக்கிறார்கள்.
தைப்பூச விழாவுக்கு முருகனைக்காண தைமாதத்தில்தான் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வடக்கேயும் மார்கழிக்கு
மார்கசீசம் என்றும், தையிற்கு தைசம் என்றும் வடமொழிப்பெயர்கள் உண்டு. இந்தமாதங்களைதான் அவர்களும் திருத்தலப்பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக கருதுவதை அருத்தசாற்றத்தில் காணமுடிகிறது. அவர்களின் மார்கழியும் தையும் சிலநாள்களின் முன்னரே தொடங்கிவிடும். பத்திக்காலத்துக்கும் பருவகாலத்துக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது. கயிலாயப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அக்தோபர் முதல் மார்ச்சு மாதம்வரை
பயணம் போவதில்லை. மழை, பனிக்கடுமைகளை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, பருவகாலம்தான் மார்கழியின் சிறப்பா? அல்ல.

"இறைவனை அண்டும் ஓர் ஆன்மா, இறையின் அருமையை துய்ப்பதற்கு
இன்னொரு ஆன்மாவையும் தூண்டி தன்னோடு இறைவனைக்காண
கூட்டணி கொள்ளும் அருமையான மாதம்தான் மார்கழி". இதுதான் அதன் சிறப்பு.
இதனாலேயே மார்கழி சிறப்புப்பெறுகிறது.

ஆமாம் - மனிதகுலம், தான் இன்பமாகக்கருதுவதை தன்னோடு சேர்ந்து
பிறரும் துயக்கவேண்டி ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டுறவே மார்கழி நோன்பு.

தமிழ்ச்சிவநெறி தமிழ்க்குமுகத்தை சாதிவேறுபாடின்றி ஏற்றத்தாழ்வின்றி
கட்டியமைக்க முற்பட்டதன் பதிவுகள்தான் மார்கழிப்பத்திமை.

வைதீக நெறியைப்போல சனாதன,வருணாசிரம கருத்துகளால் இறைவழிபாட்டில்
தீண்டாமையை நுழைக்கவில்லை. வைதீகம் ஒரேக்குமுக மக்களில் ஒருபகுதியை
கோயிலுக்குள்ளே வராதே என்றது. தமிழ்ச்சிவ நெறியோ அனைவரையும்
வா வா என்றது. வந்தவர்களை கைகூப்பி அடியாராக அணைத்துக்கொண்டது.
வைதீக நெறியின் ஊடாட்டத்தால் சிவநெறியினர் சிலபல வேளைகளில்
தவறுகளைச்செய்திருக்கிறார்களன்றி, "தமிழ்ச்சிவ நெறியில்" பிழையில்லை. 

தமிழ்ச்சிவநெறியில் "அடியார்க்கூட்டு","அடியார்க்குத்தொண்டு" என்பதற்கு உயர்ந்த மதிப்புண்டு. இதில் உணரவேண்டிய ஒன்றே ஒன்று - "அடியாரும் மக்களும்" வேறு வேறு அல்ல என்பதுதான். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் பாடியதெல்லாம் இறையடியாரை ஒன்று சேர்த்து சிறந்த குகத்தை கட்டியமைக்க வேண்டித்தான்.

மார்கழியில் நாம் பாடுகின்ற திரு எம்பாவையை மாணிக்கவாசகர் அருளியது அதற்காகத்தான்.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக்கேட்டேயும்,

வாள் தடங்கண் மாதே, வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்! கிடந்தாள்! என்னே! என்னே!!

ஈதே எந்தோழி பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்!

"....திருவெம்பாவை-1

பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் ஏது? அடியையும்
முடியையும் அறியமுடியாத நீள் நெடுஞ்சோதியாய் இவ்வுலகினரின்
அகத்துக்கும் புறத்துக்கும் ஒளியாய்த்திகழும் ஈசனை, போற்றி, நாங்களெல்லாம்
பாடி மகிழ்ந்து வருகையிலேயும், மாதே, உன் மனத்தின் உறக்கம் இன்னும்
கலையாமலிருப்பது என்ன விந்தையோ? இறைவன் என்ற உண்மையையும்
உன் செவிக்கு எட்டவிடாமல் உன்னை அழுத்தியிருக்கும் மாயை என்னவோ?

ஆங்கோர் வீதியில், எமது போற்றிகளோடும் புகழ்ச்சிகளோடும், நாங்கள்
நுழைகையிலேயே, அங்கொருத்தியின் கண் மட்டுமல்ல, உள்ளமும்
ஒருங்கே விழித்துக்கொண்ட வேகத்தை எப்படி எம்மால் விவரிக்கமுடியும்?
உள்ளம் விழித்துக்கொண்டதும், அவளின் நெஞ்சில் நிறைந்த சிவனன்பு,
விழித்த கண்களில் நீராய் ததும்பியதோடு, அன்பின் மிகையால்
தொண்டையையும் அடைத்ததோ அறியோம் - ஆனால் அவள் கண்களிலும்
நெஞ்சிலும், கம்மிய குரலிலும்  சிவமே நிறைந்திருக்க, என்ன செய்கிறோம்
என்று தெரியாமலேயே புரண்டு கீழே விழுந்தாள்.விழுந்தாளெனினும், அதுவும் அவளிடமிருந்து சிவத்தை கலைக்க முடியவில்லை.

தன்னை அண்டினோரை அன்பில் கரைத்து ஆட்கொண்டுவிடுவான்  இறைன். இது அவன் தன்மை. அப்படியிருக்க, அவனை அண்டாமல் உன்னைத்தடுக்கும் மாயை என்னவென்று யாமறியோம்?

அவன் கழல்களையும் கருணையையும் ஆழ்ந்து சிந்தித்துப்பார் என் தோழி!
அம் மாமாயையில் இருந்து விடுபட்டு நீ எழுந்தோடி வந்துவிடுவாய் என் தோழி!! நாமனைவரும் ஒன்றாகிவிடுவோம் என் தோழி!!

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும்
மற்றொரு ஆன்மாவை அன்போடு தூண்டி ஈர்த்துக்கொள்ளும் குமுக
ஒற்றுமைப்பாட்டு இஃது. இறையை முன்வைத்து குமுகத்தை கட்டியெழுப்பும்
பெருநெறியாகுமிது. குலதெய்வ வழிபாடுகள் உறவுகளை உறவுசேர்க்கிறது;
சைவப்பெருநெறி குமுக மக்கள் யாவரையும் உறவு சேர்க்கிறது.

சமயநெறிகள் மக்களை  வேறுபாடின்றி வா வா என்று அழைக்கும்போது, ஒற்றுமை பெருகி ஏற்றத்தாழ்வு குறைகிறது. வாசலிலேயே நில், உள்ளே வராதே என்றபோது குமுகம் பாழ்பட்டுப்போனது.

திருவெம்பாவையின் முதற்பாடலே மனதைக்கரைத்துவிடுகின்றது. சாமிப்பாட்டு
சாமிப்பாட்டு என்றளவிலேயே பலரும் புரிந்து கொள்கின்ற திருவாசகப்பாடல்கள்
ஆழ்ந்த அகப்பாடல்கள்.அந்த அகத்தின் அளவிற்கும் அடியுமில்லை முடியுமில்லை.

குறிப்பு: ஏல் = மீள்தல், (Reviving from a state)
                ஓர் = சிந்தி, ஆய், ஆராய்
 அன்புடன்
நாக.இளங்கோவன்
19/12/2015

Sunday, December 06, 2015

"குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?


மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி,
ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா?

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே
நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும். நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு
இது முக்கியமான காரணம். இதற்கு தீர்வு என்ன? தமிழரிடம் தீர்வு தெளிவாகவே இருந்தன.

 

மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு,
ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வாய்க்கால்களில் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும்.
இந்தக்குமிழிப்பொறியியலை புரிந்துகொள்ளவேண்டுமானால், பண்டிதர் மணி.மாறனின் "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" என்ற ஆய்வுக்கட்டுரையை படிக்கவேண்டும்.

பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் பண்டைய தமிழ்ப்பொறி "குமிழி" ஆகும். குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி
ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இந்த இடைவெளி. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும்.
கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும். ( 1:1 அல்லது M:1)

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய "நீரோடித்துளை" இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.

தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும் தூம்புக்கல்லை ( conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு. இதுவரை, குமிழி செய்வதெல்லாம் மேலைநாட்டு மதகைப்போலத்தான்.

படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே மூன்று துளைகள் இருக்கின்றன பாருங்கள், அதுதான் நமது சிறப்பு. அந்தச்சிறுதுளைகளுக்கு "சேறோடித்துளை" என்று பெயர்.

பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது என்னவாகும்? தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,
குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள் அல்லவா? ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீ சுழித்துக்கொண்டு ஓடுமல்லவா? ஏரிக்கடியில் சிறுதுளை என்றால் சுழலின் வேகத்தை கேட்கவா வேண்டும்? சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும்.

நீரோடித்துளை வழியே நீர் சுழித்தோடும் வேகத்தில், பக்கவாட்டில் உள்ள சேறோடித்துளைவழியே,
ஏரியின் அடிமட்டத்தில் இருக்கும் கலங்கியசேறு இழுபடும். இந்தச்சேறும் நீரோடு சேர்ந்து பாசனக்கால்வாய்க்குச்சென்றுவிடும்.

இந்தச்சேறு அடியிலேயே தங்கித்தங்கி வலுவடைவதாற்றான் ஏரி தூர்ந்துபோகிறது. நீரைவிட சேறு அடர்த்தியில் அதிகமென்பதால் அடியில் தங்குவது நாம் நன்கறிந்ததே. அதை அவ்வப்போது இழுத்து, தன்னியக்கமாக, இயல்பாக, நிகழ்நேரத்தில் வெளியேற்றுவதுதான் தமிழர்களின் குமிழிப்பொறியியல்.
(it is a real-time disilting system). எப்போது ஏரியிலே நீர் வற்றும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திராமல், அவ்வப்போது, தூரை வெளியேற்றிவிட்டதால் நீரும் வளமும் மிகுந்திருந்தன பண்டைய தமிழகத்தில்.

இந்த வண்டல், சேறு என்பன, வயலுக்கு உரமாகவும் பயன்பட்டன. குமிழிகள் மதகாகவும், சேறோட்டும் பொறியாகவும் பயன்பட்டன. ஆனால், மேலைநாட்டுமதகுகளில் மதிமயங்கிப்போனதால் குமிழிகளை ஒழித்துக்கட்டி புதுமை என்ற பெயரில் ஏரிகளிலும் மதகுகளை வைத்துக்கொண்டோம். விளைவு, ஏரி, குளம், கண்மாய், ஊரணி, குட்டை, ஏந்தல் போன்ற எல்லா நீர்நிலைகளும் தூரேறிப்போயின.

தூர்வாருதல் என்பதனை வருடாவருடம் செய்துகொண்டே இருக்கமுடியாது. அப்படியே செய்தாலும், ஒரு சிறு அளவிற்கு, வயலுக்கு வரப்பு வெட்டுவோமே (அல்லது சீர்படுத்தல்) அந்தளவில் பேணப்படுவதுவதாகவே இருக்கமுடியும். இன்றைக்குப்பெய்திருக்கும் மழையும், ஏரி, குளங்களை நீரால் மட்டும் நிரப்பவில்லை; சேறாலும்தான்?

இந்தச்சேற்றை எப்போது வெளியேற்றுவோம்? ஏரிகளிலும், குளங்களிலும் இருக்கும் மதகுகளை ஒழித்துவிட்டு, தமிழ்க்குமிழிகளை கட்டமைக்கவேண்டும்.

நீர்நிலைகளின், வெளிப்புறத்தை வீடுகளாலும், நிறுவனங்களாலும் கைப்பற்றினோம். நீர்நிலைகளின் அடிமட்டத்தில் இருந்த குமிழிகளை தொலைத்துக்கட்டினோம். கழிவுகளை நீர்நிலைகளில் செலுத்தினோம். நாகரிகத்தையும் இழந்தோம். தொன்ம அறிவையும் இழந்தோம். தொன்மத்தையாவது மீட்போம். இருக்கும் ஏரிகளைக்காப்போம். நமது பழம் அறிவியலை மீட்போம்.

கட்டுரை: நாக.இளங்கோவன். மூலமும், படமும்: "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" - ஆய்வுக்கட்டுரை, தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், சரசுவதிமகால் (வெளியீடும்)

Monday, November 09, 2015

தமிழோற்பலம்::மடல் 1 - பாலும் தெளிதேனும்!


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா."

பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனை புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று.

அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம்விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச்சொல்லி படையலிட்டு வணங்கி, நாம் நமது வேண்டலை அவனிடம் வைப்பதுதான் நமது வழக்கம். ஆனால், ஔவையாரோ, பாலையும் தேனையும் பாகையும் பருப்பையும் கலந்து "நான் தருவேன்" என்று கூறுகிறார். நீயெனக்கு மூன்றுதமிழைக்கொடுத்தால் உனக்கு இதனை நான் தருவேன் என்றுதான் கூறுகிறாரே தவிர, "நான் தந்தேன்" என்றோ, "இதோ தந்திருக்கிறேன்" என்றோ பாடவில்லை.

ஆனைமுகத்தனை வழிபட்டு பாடுகின்ற பாடலில் அவனுக்கு இந்த நான்கு பொருள்களை கலந்து படைக்காமல், பாடலைமட்டும் சொல்லிப்போகிறாரே ஔவையார். ஔவையாருக்கு தமிழையும் அறிவையும் ஏற்கனவே அள்ளித்தந்தவர் ஆனைமுகக்கடவுள்தானல்லவா? அப்புறம் இவருக்கு இன்னும் என்னதமிழ் வேண்டும்? அதற்கு ஏன் இவர், பால்,தேன்,பருப்பு, பாகு என்ற நான்கைத்தருவதாக சொல்கிறார்? இறைவனுக்கே ஆசை காட்டுகிறாரா? மாந்தகுலத்தின் படையல் வழிபாட்டை ஔவையும் செய்கிறாரே என்று நமக்கும் தோன்றி நம்மில் பலரும் அப்படித்தான் வழிபாடு செய்கிறோமோ?

பசுதருகின்ற பாலின் சுவையறியாதார் மண்ணில் இல்லை. தூயதேனின் சுவையையும் அறியாதார் இருக்க முடியாது. பாகு என்பது கருப்பஞ்சாற்றில் செய்யப்பட்ட வெல்லத்தை
காய்ச்சி எடுப்பது. அதன் சுவையையும் சொல்லி முடியாது. பருப்பு என்பது என்ன? சாதாரணமாக நாம் உணவில் பயன்படுத்தும் துவரம்பருப்பா? அதை காரமான உணவுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம். பாசிப்பயிறு அல்லது பச்சைப்பயிறைக்கொண்டு, கஞ்சி அல்லது பாயசமாக செய்வோம். அதை இனிப்புணவாக செய்வோம். இதுவும் தமிழ்மண்ணின்  தொன்மையான உணவு. ஆகையால் அதைத்தான் ஔவையார் பருப்பு என்கிறார். பாற்பாயசம் என்பது இன்றும் நாம் உண்ணும் இனிப்புணவு. ஆகவே, பாசிப்பயிற்றை மசித்து, பால் கலந்து, அதனுடன் தேனையும், வெல்லப்பாகினையும் சேர்த்துக்காய்ச்சிய பாற்பாயசம் எத்தனை சுவைமிகுந்ததாக இருக்கும்?

இங்கே சட்டென்று ஏனோ நமக்கு வள்ளல் பெருமான் நினைவுக்கு வந்துவிடுகிறார். வள்ளலாருக்கு  மாணிக்கவாசகர் நினைவுக்குவர, அவர் பாடுகிறார்:

"வான்கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை
 நான் பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து  பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே".

நற்கருப்பஞ்சாற்றில் இருந்துதான் பாகு எடுக்கிறார் ஔவையார். ஆக இருவருமே கருப்பஞ்சாற்றை கலந்துவிடுகின்றனர். தேன், பால், பாகு இவற்றை பருப்போடு கலக்கிறார் ஔவையார். வள்ளலாரோ, தேன், பால், கருப்பஞ்சாறு இவற்றை செழுமையான கனிகளுடன் கலக்கிறார்.

ஔவையாருக்கு பாற்பாயசம் சுவையாயிருக்கிறது. வள்ளலாருக்கோ பாற்கனி
சுவையாயிருக்கிறது. வள்ளலார் என்ன சொல்கிறார்!  "மாணிக்கவாசகப்பெருமானே, நீ எழுதிய திருவாசகத்தை நான் பாடும்பொழுது எப்படியிருக்கிறது தெரியுமா! கரும்புச்சாறு, தேன், பால் இவற்றை இனிக்கின்ற கனிகளோடு கலந்தால் எத்தனைச்சுவையாக, இனிப்பாக இருக்குமோ அப்படி இனிப்போ இனிப்பெனெ இனிக்கும் உன் திருவாசகப்பாடல்கள் என் உடலோடும் உயிரோடும் நான் பாடப்பாட கலந்து கொண்டேயிருந்தாலும், திகட்டாமல் இனிக்கின்றதையா! இத்தனைச்சுவையை எங்கிருந்து தந்தனை நீ? திகட்டாத இனிப்பாயவற்றை எப்படிப்படைத்தனை நீ? இந்தத்தமிழை எங்கிருந்து பெற்றனை நீ?" என்ற வியப்பையும் திகைப்பையும்  வெளிப்படுத்துகிறார், இறைவனிடம் இருந்து பெற்ற தமிழை, இறைவனிடம் இருந்து பெற்ற தமிழால் படித்த வள்ளலார். வள்ளலாரின் வரிகள், திருவாசக பாடல்களின் சுவை  பால்,தேன்,கரும்பு,கனி கலந்த இனிப்பை, சுவையைப்போன்றது என்று இயம்புகின்றன.

இறைவனுக்கு என்ன தேவை? அப்பரடிகள் பாடுகிறார்:

"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்,
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்.."

"குளிர்ந்த நீரிலாட்டி தூய்மை செய்வேன், ஆங்கு மணம் கமழ மலர்தூவுவேன், யாதுமுனையறிய விளக்கம் ஏற்றுவேன்; ஏற்றி, தமிழால் உன்னை போற்றிப்பாடுவேன்.
இவற்றை என்றைக்குமே நான் மறந்ததில்லையே அப்பா!"  என்று அப்பரடிகள் சொல்லும்போது, இறைவனுக்கு உண்ணத்தந்தது ஒன்றுமில்லையல்லவா?
தூய்மையும், இயற்கை மணமும், விளக்கமும், தமிழுமே அவனுக்கு தந்தாரல்லவா?
அப்பரடிகள்தான் தரவில்லை; ஆண்டவன்தான் கேட்டானா? அதற்குப்பதிற்சொல்லுவார் சுந்தரமூர்த்திகள்:

"எம்மைப்பெற்றால் ஏதும்வேண்டீர்; ஏதும் தாரீர், ஏதும் ஓதீர்...."

என்னையா இது? எம்மை படைத்தீர்; ஆட்கொண்டீர்; உம்மடியாராக அருளினீர்; எமக்கு யாவுமாய் நிற்பீர்; ஆனால், எம்மிடம் இருந்து ஒன்றும் பெற்றுக்கொள்வீர் இல்லை. உமக்குத்தேவை என்பதொன்றில்லையாதலால் யாம் உமக்குச்செய்ய எண்ணும் எவற்றுக்கும் நீர் எதனையும் தருவதுமில்லையோ?. "உனக்கு இதுதான், இப்படித்தான், இன்ன நாளில்தான்" என்று ஏதும் சொல்லவும் மாட்டீரே! என்று சுந்தரர் அன்புமீதூர, அதேவேளையில் "நம்மை ஆக்கிய நந்தலைவன் நம்மிடம் இருந்து எந்தச்சிறிய ஒன்றையும் கேட்கவேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறானே - இது இவன் தன்மை" என்று வியந்தும் வருந்தியும் சொல்வார்.

"செய்வகை அறியேன்....இது செய்க என்று அருளாய்" என்று வாதவூரர் புலம்பித்தவித்ததெல்லாம் சுந்தரரின் "ஏதும் ஓதீர்" என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கமாக அமைவதைக்காணமுடியும்.

இறைவனுக்கு, தான்படைத்த மனிதரிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏதும் இல்லை. சொல்லப்போனால், "உன்னால் எனக்குத்தர என்ன இருக்கிறது?" என்று  இறைவன் கேட்பதுபோல் தோன்றுகிறது. அப்படியே தந்தாலும், "தூய்மையையும், நறுமணத்தையும், நல்லொளியையும் தந்து தமிழால் என்னைப்பாடு - யாவருக்குமது பயனாய் அமையும்" என்றே உணர்த்துகிறான் இறைவன். தமிழாற்பாடுவது, தேனும், பாலும், கருப்பஞ்சாறும்,கனியும் கலந்த சுவையாகிறது; அல்லது தேனும், பாலும், பாகும், பருப்பும் கலந்த பாற்பாயசம் போன்ற சுவையாகிறது. தெவிட்டாத அல்லது திகட்டாத பாடல்களால் ஆனைமுகனை மேலும் பாடத்தான், இயலும் இசையும் கூத்தும் என்ற மூன்று தமிழறிவையும் செறிவையும் ஆழ ஆழ அள்ளித்தர வேண்டுகிறார் ஔவையார். அந்தப்பாடலை வரிசை மாற்றிப்படித்தால் அவரின் வேண்டல் ஒரு "ஞானவேட்கை" என்பது புரியும்.

"கோலஞ்செய்  துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
                        சங்கத்தமிழ் மூன்றும் தா;  (அவற்றைக்கொண்டு)
 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துனக்கு (அச்சுவை பொருந்திய பாடல்களாய்)
  நான் தருவேன்."

ஞானக்கடவுளான ஆனைமுகனுக்கு, ஔவைப்பிராட்டியார் நான்கு உணவுப்பொருள்களை கலந்து படையல் போடவில்லை; படையல் போட்டு பேரம் பேசவில்லை. ஆனைமுகனால் ஞானமும் தமிழும் அருளப்பெற்ற ஞானி அவர். மேலும் ஆழ்ந்த அறிவையும் செறிவையும் முத்தமிழில் தேடுகிறார்; அத்தேடலை இறைவனிடம் வைத்து வேண்டுகிறார். பருப்பொடு, பால், தேன், பாகு இவற்றை கலந்து சமைத்தால் கிட்டுகின்ற இனிப்பான சுவைதரும் "பொருள்நிறைந்த" தமிழ்ப்பாடல்களால் இறைவனைப்பாட; ஞாலம் பயனுற.

அன்புடன்
நாக.இளங்கோவன்
10/11/2015

Wednesday, November 04, 2015

நாயன்மார்களின் புடைப்புச்சிற்பங்கள் - மணற்கேணி ஆய்வுக்கட்டுரை

நாயன்மார்களின் சிற்பங்களில் உள்ள சித்திரிப்புகள்
பற்றிஅருமையானதோர் கட்டுரையை, கடந்த மணற்கேணி
இதழில் (ஆக/15) தேன்மொழி எழுதியிருக்கிறார்.
("வரலாற்றில் சைவ நாயன்மார்கள் புடைப்புச்சிற்ப சித்திரிப்புகள்:
ஒரு ஆய்வு" என்பது தலைப்பு.)

சைவம், நாயன்மார்கள், பெரியபுராணம் பற்றி பல்வேறு
கருத்துகளை சொல்லியிருந்தாலும், சித்திரிப்புகளின்
வேறுபாடுகளை  நுணுகிப்பார்த்திருக்கும் கட்டுரையாளரின் திறன்
பாராட்டுக்குரியது. பெரியபுராணத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நாயன்மார்களின் வரிசையிலேயே அமைக்கப்பட்ட
சித்திரிப்புகளை, பெரியபுராணத்தின் காலத்திற்கு
சற்றுமுன்னரும், பின்னருமாக உருவாகிய கோயில்களை
எடுத்துக்கொண்டு, அவர் ஆற்றியிருக்கும் ஆய்வு சிறப்பானது.
இதற்காகவே ஒருமுறை திருப்பனந்தாள், புரிசை, மேலக்கடம்பூர்,
தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களுக்கும் செல்லவேண்டும்
என்ற எண்ணத்தை கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பெரியபுராணத்தின் காலம் பற்றிய கேள்விக்குறியும்
சிந்திக்கவைக்கிறது.

புடைப்புச்சிற்பங்களை ஆக்கிய சிற்பிகளின் திறனை
எடுத்துக்காட்டுகிறது கட்டுரை. வாய்வழியாகவும், திருத்தொண்டர்
தொகையின் வழியாகவும் நாயன்மார்களைப்பற்றி மக்கள்
அறிந்திருந்த செய்திகளை நன்குணர்ந்து, இலக்கிய அறிவுமிக்க
சிற்பிகள் சிற்பங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பதை
கட்டுரை நுணுகிப்பார்த்து சொல்கிறது.

ஒவ்வொரு கோயிலிலுமுள்ள சிற்பங்கள் வெவ்வெறு காலத்தில்
வெவ்வெறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்
என்பதுதான் இயல்பு. அப்படிப்பார்க்கும்போது நாயன்மார்களின்
சிற்ப வடிவங்களுக்கு யாரோ  "முதன்மை வடிவம்" கொடுத்திருக்க
வேண்டும். அது யார்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இதற்கான விடையை கட்டுரையில் காணமுடியவில்லை.
எல்லா சிற்பிகளுக்கும் ஒரேமாதிரியான அடவு மனதில்
உருவாகியிருக்கும் என்று சொல்லமுடியாது. பெரும்பாலும்,
சித்திரிப்புகள் ஒன்றாக இருக்கையில், யாரோவொரு
சைவப்பெரியவரோ அல்லது மடமோ, ஒரு பெரிய சிற்பியை
வைத்து முதன்முதலில் நாயன்மார்கள் சிற்பங்களுக்கு வடிவம்
கொடுத்திருக்க வேண்டும் என்று கருத இருக்கிறது. சிற்பங்களை
ஆழ்ந்து ஆய்ந்திருக்கும் தேன்மொழி அவர்களிடம் "முதற்சிற்பி
யார்" என்பது பற்றிய கருத்துகள் இருப்பின் அறியவிழைகிறேன்.

அதேவேளையில், சிற்பங்களில் உள்ள காட்சிகளுக்கும்
பெரியபுராணம் சொல்லும் செய்திக்கும் உள்ள  முரண் பற்றியும்
இங்கே குறிப்பிடவேண்டும். கட்டுரையில், புரிசையில் உள்ள
எறிபத்த நாயனாரின் சிற்பக்காட்சியில் (படம் 10/3), இறைவன்
விடைவாகனராய் உமையோடு தெரிசனம் தருவதாக
அமைந்திருக்கிறது. ஆனால், பெரியபுராணத்தின்படி, எறிபத்த
நாயனார் புராணத்தில் "ஒளிவிசும்பில் எழுந்த ஒலியாக"
இறைவனின் காட்சி அல்லது அருள் அமைகிறது.

"கண்ணுதலருளால் வாக்குக்கிளரொளி விசும்பின்மேல்
 வந்தெழுந்தது பலருங்கேட்ப...." (47)
"இருவருமெழுந்து வானிலெழுந்தபேரொலியைப்போற்ற..." (50)
(இங்கு இருவரும் என்றது எறிபத்தரையும், புகழ்ச்சோழரையுமாம்)

பெரியபுராணத்தில் உமையொடும் விடைவாகனராய் இறுதியில்
தெரிசனந்தருவது அதிகமெனினும் மற்றும்பல வடிவங்களில்
இறைவன் எழுந்தருளுகிறான்.

ஆகவே, புரிசைச்சிற்பம், என்னுடைய சிற்றறிவுக்கு தவறான
சித்திரிப்பாகவே தென்படுகிறது. இது தவறா, சரியா என்பது
வேறுவிதயம். ஆனால், அது பெரியபுராணத்திற்கும் சிற்பங்களில்
நாயன்மார் சித்திரிப்புக்கும் உள்ள இடைவெளியை
தெளிவாகக்காட்டுகிறது.

அப்படியென்றால், பெரியபுராணத்திற்கு படிகள்/வேற்றங்கள்
(versions)உண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்றெனில், சித்திரிப்புகளில் சிற்பிகளின் புரிதல்கள், அல்லது
ஆலயமெழுப்பியவர்களின் புரிதல்களில் வேறுபாடு உண்டென
அறியமுடிகிறது.

சிவகாமியாண்டாரை பெண்மணியாக சில சித்திரிப்புகள்
காட்டுவதாக தேன்மொழி குறிப்பிடுவதொடு, மேற்சொன்ன
கருத்தையும் ஒட்டிப்பார்க்கவேண்டும். உண்மையில்,
கட்டுரைவாயிலாக, சிவகாமியாண்டாரை சித்திரித்தது பற்றி
அறிந்தது, மீண்டும் மீண்டும் சிவகாமியாண்டாரை
படிக்கத்தூண்டுகிறது.

"அரச ஆதரவு பெற்றிருந்த சைவமதத்தை மக்கள் ஆதரவு பெற்ற
மதமாக மாற்றும் முயற்சியில் இந்த நாயன்மார்கள்கதை
சித்திரிப்புகள் பங்காற்றியுள்ளன" என்ற கட்டுரையாளரின்
பார்வையும் எழுத்தும் சுருக்கமும் அழகும் நிறைந்தன. அதற்கு
அவர்  அளித்திருக்கும் சில விளக்கங்களும் ஏற்கத்தக்கவை.
குமுகத்தின் பலபிரிவுகளையும், வாழ்வியல் வேறுபாடுகளையும்
அரவனைத்தெழுந்ததாற்றான் அது  இயக்கம் எனப்பட்டது
எனக்கருதலாம். சைவத்தைப்பொறுத்தமட்டில், இந்தக்குமுக
அரவனைப்பு என்பது சேக்கிழார் காலத்திலோ, அல்லது பிற்கால
சோழ அரச ஆதரவிலோ மட்டும் நிகழ்ந்ததல்ல. சம்பந்தராலும்,
அப்பராலும் இடப்பட்டு அருமையான வித்துதான் அது.
சேக்கிழாருக்கு ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரே
விதைக்கப்பட்ட குமுகக்கட்டியல் அது என்றால் மிகையல்ல.
இதைச்சரியாக புரிந்துகொள்ள, ஞானசம்பந்தரின்
திருவானைக்கா பதிகம் (வானைக்காவில் வெண்மதி),
நமச்சிவாய பதிகம், பவனமாய்ச்சோடையாய் என்று தொடங்கும்
திருவாரூர்ப்பதிகம்போன்றவை கூர்ந்து நோக்கத்தக்கன.
அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரின் பல பாடல்களும்
குமுகக்கட்டியல் நோக்கில் பார்க்கத்தக்கன, நீள எழுதத்தக்கன.
அருமையானதொரு கட்டுரைக்கு மீண்டும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும் தேன்மொழி அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்


Thursday, October 22, 2015

Shift என்பதற்கு தமிழில்

Shift என்பதற்கு தமிழில் சொல்லென்ன என்று கேட்டிருந்தார் நண்பர் தமிழ்நாடன்.
Shift என்ற சொல், ஒரு குறிப்பிட்ட காலப்பொழுதையும், காலப்பொழுதின் மாற்றத்தையும்
தனது குணங்களாக கொண்டுள்ளது. தமிழில் பெரும்பொழுது, சிறுபொழுது என்ற
பகுப்புகள் இருப்பினும், அவை காலப்பகுப்பாக மட்டுமே காணப்படுகின்றன.
பணிக்காலத்தையும் அதன் மாற்றத்தினையும் உள்ளடக்கிய சொல்லை அவற்றிற்கு
வெளியேதான் தேடவேண்டியிருக்கிறது என்று கருதுகிறேன்.

தமிழிலே சாரி, சாரிகை என்ற சொற்கள் உண்டு. சாரி என்ற சொல்லிற்கு
மூன்று விதமான பொருள்கள் உண்டு. ஒன்று - அணி/வரிசை,
இரண்டு - பக்கம் (வலது சாரி, இடது சாரி என்ற தற்காலச்சொற்கள்.
அந்தரசாரி என்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்லுகின்றன)
மூன்று - வட்டமாக நகர்தல் (circular movement) என்று செ.ப.பேரகராதி கூறுகிறது.
காலத்தின் நகர்வு வட்டத்துள்தானே இருக்கிறது! ஒரு நிறுவனம், மூன்று Shift
ஓட்டுகிறது என்றால், அதனை 24-மணி வட்டத்துள் மூன்று சமபாகமாக (120 திகிரியில்)
பிரிக்கலாமல்லவா? ஆக, சாரி என்ற சொல் ஆழ்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று.
சாரிகை என்ற சொல்லை சேக்கிழார் பெருமான் ஆளுவார்.
"...வன்றுணை வாளேயாகச் சாரிகை மாறி வந்து
        துன்றினர் தோளுந் தாளும்..." என்று இயற்பகை நாயனார் புராணத்தில்
இயற்பகை நாயனாரின் வாளாற்றலை சிறப்பித்துச்சொல்லுவார் சேக்கிழார்.
இங்கே சாரிகை, என்பது இட-வல, வல-இட நிலைமாற்றங்களைக்குறிப்பிடுகிறது.
வலமாக நகர்ந்தவர், மின்னலைப்போல இடமாக திரும்பி வாள்வீசுதலைக்குறிப்பிடுகிறது.
சாரி என்றால் மாறுதல், கை என்பது இடத்து நிலை என்று சொல்வர் உரைகாரர்.
சாரியை என்ற கூறு புணர்ச்சியிலக்கணத்தில் வரும். ஒன்றனை
(விகுதியையோ, வேற்றுமையையோ சார்ந்துவருவதால் அது சாரியை
எனப்படுகிறது என்பர் புலவர். ஆனால், சாரியை செய்யும் வேலையைப்பார்த்தால்
அது சொல்லில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. (மரம் + ஐ = மரமை என்பது
பொருள் தராது என்பதால் அதனுடன் அத்து என்ற சாரியை சேர்த்து,
மரத்தை என்று பொருள்படவைக்கிறது. மரமை என்று இயல்பாக வரும் சொல்
பொருளுணர்த்தாது என்பதால் அத்து என்ற சாரியை சேர்ந்து சொல்லை மாற்றி
பொருளுளர்த்துகிறது, ஆகவே, சாரி என்ற சொல்லிற்கு மாற்றுந் தன்மை
உளதாகிறது.

ஆகவே, கால எல்லையையும், அதன் மாற்றத்தையும் குறிக்கின்ற ஆங்கிலச்சொல்லான
Shift என்பதனை, தமிழிலே, சாரி/ சாரிகை என்றே சொல்லலாம்.
சாரி = Shift, சாரிகை = Shift System என்று சொல்லலாம்.
ஆயினும், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஏற்படுத்தியிருக்கும் எண்ணப்பதிவுகளினால்,
சாரி என்ற சொல்லை விடுத்து சாரிகை என்பதனை மட்டும் புழக்கலாம்.
Shift, Shift System என்ற இரண்டிற்குமே சாரிகை பொருந்திவரும் சொல்லாகும்.
முதற்சாரிகை - 1st Shift
பகற்சாரிகை  - day shift
இராச்சாரிகை  - night shift
எண்மணிச்சாரிகை - 8 hour shift
பதுமணிச்சாரிகை - 10 hour shift
பன்னீர்ச்சாரிகை - 12 hour shift
நெடுஞ்சாரிகை - long shift / big shift (in driving profession or in process plants )
சிறுசாரிகை/குறுசாரிகை - small shift ( in part time jobs)
(அல்சாரிகை, எல்சாரிகை என்று சொன்னாலுந் தகும்)
புதிய அறிவியற்சொற்களுக்குத்தேவை இருக்கிறதென்றாலும்,
பல பொதுவான சொற்களை தொன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
மீட்டெடுக்க வேண்டிய சொற்கள் பல்லாயிரமாய் எண்ணிக்கையில்
கிடக்கின்றன.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, September 05, 2015

சங்க ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்

 

இன்று "சர்வ பள்ளி" ஆசிரியர் நாள் என்று ஒரே விழாக்கோலம். எனக்கு சங்கப்பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வந்தனர். கூடவே கண்ணன் பிறந்த நாள். சங்கப்பாடல்களை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களைப்பார்த்தால், கண்ணன் என்ற பெயரையோ, கண்ணன், கண்ண (கண்ணகன்) என்ற சொற்களை உள்ளடிக்கிய பெயர்களைத்தான் அதிகம் காணமுடிகிறது. என் தரவகத்தில் உள்ள ஆசிரியர்ப்பெயர்த்திரட்டு இன்னும் நிறைவடையாவிட்டாலும் சங்க, சங்க மருவிய காலப்புலவர்களின்... சுமார் 515 பெயர்கள் உள்ளன. இன்னும் சில திருத்தாமலும், கூடகுறையவோ இருக்கின்றன.  ஆயினும் இதனை tentative analysis எனலாம். இந்த எண்ணிக்கையில், 49 பெயர்கள் கண்ணனை உள் வைத்து இருக்கின்றன. (இதற்கு அடுத்தபடியாக கீர, கீரன் என்ற சொற்களை உள்ளடக்கிய பெயர்கள் 27 ஆகும்.) கிழார் என்ற பெயர் பெயரல்ல. அது அடை. அதனால் அதனை எண்ணிக்கை முதல் 5 இடத்தில் வந்தாலும் தவிர்த்துவிட்டேன். கண்ணன் என்ற பெயரைக்கொண்ட புலவர்களின் அப்பாக்களையும் கணக்கிலெடுத்தால் 60 பெயர்கள் (சுமார் 12%) வருகின்றன. கண்ணி என்ற பெயருடைய பெண்பாற்புலவர்கள் 7 பேர் வேறு இருக்கிறார்கள். இத்தனைப்பெயர்களில் கண்-ணன் ஏன் ஆட்சிசெய்கின்றான். மதுராபுரி கிருட்டிணன் எப்படி, எப்பொழுது தமிழ்நாட்டு கண்ணனானான்? என்ற கேள்வி எழவே செய்கிறது. கண்ணகியை அகண்ட கண்ணுடையவள் என்று சொல்வார்கள் (கண் + ண்+அகி?) கண்ணுக்கு, கண்ணனுக்கு சங்கத்தில் அதிக இடம் இருந்திருக்கிறது. கண்ணனுக்கும் சங்க ஆசிரியர்களுக்கும், அவர்களின் அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்.
(படத்தில் ஒட்டியிருக்கும் கண்ணன் படத்தை வரைந்தவர் கேசவ். இரவிக்குமார் முகநூலில் எடுத்தது)
அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, August 07, 2015

சீனி நைனா முகம்மது ஐயாவிற்கு முதலாண்டு நினைவஞ்சலி




மலைசியத்தின் பொங்குதமிழ் மங்கலமே,
... மணிக்கவியே  தங்குநறு மல்லிகையே
கலைமகளின் கையாழே கற்கண்டே
... கனித்தமிழின் கட்டழகுச் சுடரொளியே
தலைமொழியைத் தடமெங்கும் தழைத்ததுவே
... தனித்தமிழே தகத்தகாய என்தங்கமே
நிலையற்ற ஞாலத்தை நீங்கிடினும்
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!

துறைதோறுந் துறைதோறுந் தமிழ்தன்னைத்
... தூர்ப்பாரின் முன்னெழுந்து மார்தூக்கி
இறைக்கின்ற  நீரூற்றா   யெழுதமிழால்
... இனிமொழியை எப்பரப்பும் ஏத்திவைத்து,
குறைப்பாரைக் குறைப்பாயே கூர்மதியால்
 ...குற்றமெலாங் குனிந்திடுமே என்சொல்வேன்?
நிறைத்தாலும் நின்வாழ்வை நீநிலத்தில்
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!

படிக்குமொழி பலவெனினும் பாரிலுளோர்
... பாங்குடனே பிறப்புமொழி பேணிநிற்க,
பிடித்ததெலாம் புகுத்திடுவார் தமிழரிங்கே
 ...பொடிப்பொடியாய் எழுத்துவரி நூறிடுவார்
இடிக்குந் துணையாயிருந்து  தோள்தருவீர்;
...இங்கவரைத் தடுக்குவகை தானறிவீர்!
நொடிந்தனமே நும்பிரிவால்; பிரிந்திடினும்
 ...நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!


அருள்பொங்கும் கண்களிலே ஆர்ப்பரித்து
... அன்பொழுகும்; இறையன்பை அஃதொக்கும்!
திருநிறைந்த நெஞ்சில் தொல்  காப்பியமே
... தேனடையாய்த் திரண்டிருக்கும்! பாடுகின்ற
பொருட்செறிந்த பாட்டிலெலாந் தமிழ்நலமே
...  பொதிந்திருக்கும்!  பிழைகள்பாற் பீறிட்டு
நெருப்புமிழும்! நெருப்பைப்போல் தூயவரே
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!

இல்லார்க்கும்  இனிக்கின்ற செங்கரும்பே
... இசுலாமும் இனியதனித் தமிழும்மாய்,
நல்லார்க்கே நல்விளக்காய் நற்றமிழாய்
... நாமலர்ந்த பாவலரே, யாம்வணங்கு
தொல்காப்புப் பெரும்புலவ, ஏச்சறியா
... துய்யதமிழ்ச் சந்தனமே தண்ணொளியே
நில்லாத யாக்கைதனை நீக்கியிங்கே
... நிலைபெற்ற சீனி ஐயா நீர் வாழியவே!



                               (நானும் சீனி ஐயாவும் - 2009 கோவை செம்மொழி மாநாடு)

நீங்கா நினைவுகளுடன்
நாக.இளங்கோவன்
7/8/2015

Sunday, July 05, 2015

பின்ன சின்ன ஒருங்குறி - துறையறிஞர் கூட்டம் 4/7/15

பின்ன சின்ன ஒருங்குறி முன்னீட்டை ஆய்வு செய்யும் கல்வெட்டு, சுவடிகள், வரலாறு, பழங்கணிதம், நாணயம் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் ஆய்வறிஞர்களின் கூட்டம் நேற்று 4/7 அன்று சென்னைப்பல்கலையில் நடந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் இத்தனைபேரை ஒருங்கே பார்த்ததிலும்,அவர்களோடு கூட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு அமைந்ததையும் பெருமையாகக்கருதுவேன்.

55 குறியீடுகளை ஆய்வு செய்த இவ்வறிஞர்கள், அவற்றில் 18ஐ மட்டுமே நேரடியாக சரி என்று ஏற்பு வழங்கினர். சுமார் 15-17 குறியீடுகளை "பிழை" என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மீதம் உள்ள குறியீடுகளுக்கு வடிவமாற்றம் அல்லது விளக்க மாற்றம் பரிந்துரைத்துள்ளனர். கடந்த மே மாதம் ஒருங்குறியில் சேர்க்கப்படவிருந்த 55 குறியீடுகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, அதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இவ்வாய்வுக்கு வழிவகுத்தது. தமிழக அரசு இப்படிச் செய்திருக்காவிடில் கிட்டத்தட்ட 60-67% குறியீடுகள் தவறானவையாக ஒருங்குறியிற்சேர்ந்திருக்கும். 67% பிழைகள், அல்லது தவறுகள், அல்லது குறைகள் உள்ள ஒரு முன்னீட்டைத் தாங்கிப்பிடித்து, அவற்றைச் சுட்டிக்காட்டியமைக்காக எம்மை ஏளனம் செய்தவர்களும் இன்று அவற்றை ஏற்றுக்கொண்டது எமக்கு மனநிறைவான ஒன்றாகும்.

தொல்லியல் துறையின் புகழ்பெற்ற அறிஞர்களான முனைவர் நடனகாசிநாதன், முனைவர்.எசு.இராசகோபால், முனைவர் சு.இராசவேலு, முனைவர் விசய வேணுகோபால், முனைவர் பத்மாவதி அம்மையார், முனைவர் மார்க்சிய காந்தி, முனைவர் கலா சீதர், முனைவர் பாலாசி, முனைவர் கு.வெங்கடாசலம், முனைவர் சாந்தலிங்கம், முனைவர் தமிழப்பன், உள்ளிட்ட பல தொல்பொருள் அறிஞர்களோடு, பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன், திரு.மணிவண்ணன், திரு.சேம்சு உள்ளிட்ட பலரோடும் நடந்த இக்கூட்டம் மிகச்சீரிய பணியை செய்திருக்கிறது.
 
இதற்காக தமிழக அரசுக்கும், தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கும், சென்னைப்பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
 
கடந்த வருடம் செப்தெம்பர் மாதம் தொடங்கி 7/8 குறைகளைச் சுட்டிக்காட்டி குறைபாடுகளின் தன்மைகளை வெளியிட்டிருந்தேன். ஆனால் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் உத்தமம் அமைப்பும் அவற்றை ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், இன்று மணிவண்ணன் அவர்களே முன்னின்று ஏற்றுகொள்ளும் வகையில் அறிஞர்கூட்ட முடிவுகள் அமைந்தன.
 
 
 
 
 
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 

Wednesday, July 01, 2015

மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள் – ஆசிரியர் இரவிக்குமார்

மணற்கேணி இதாழாசிரியர் திரு.இரவிக்குமாரின் வேண்டுகோள்.
===================================================

வணக்கம்


மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு  ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள்  வெளிவந்துள்ளன.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .

சங்க இலக்கியச் சிறப்பிதழ்; பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ், வங்க இலக்கியச் சிறப்பிதழ், பாகிஸ்தான் இலக்கியச் சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது. 


கிரந்த யூனிகோடு பிரச்சனை; பொருந்தல் அகழ்வாய்வின் முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின் கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது.

கவிஞர் சேரன், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக்  முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும், சிவா சின்னப்பொடியின் தன்வரலாற்றுத் தொடரை வெளியிட்டும் ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது. எம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.

பெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும் நோக்கோடு மணற்கேணியின் இணையாசிரியர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில் அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறது. ஆங்கிலத்தில் வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம். ஆனால் மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரி ரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியிட்டது.
இது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொரு நிகழ்வாகும்.

திரு.இ.அண்ணாமலை, திருமதி.வீ.எஸ்.ராஜம், பேராசிரியர் செ.வை.சண்முகம், பேராசிரியர் கி.நாச்சிமுத்து, முனைவர் விஜயவேணுகோபால், எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர் கார்த்திகேயன், பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி  உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி, ஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் தொடர்ந்து பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில் அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோ, எலியா கனெட்டி, பியர் பூர்தியூ, பர்ட்டன் ஸ்டெய்ன், ரணஜித் குஹா முதலானோரின் சிந்தனைகளையும்; எதுமோன் ழாபேஸ், நிக்கனோர் பர்ரா, எதெல்பர்ட் மில்லர், அஃபூவா கூப்பர் உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியது மணற்கேணி.


தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல், இலக்கியத்தின் மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும்  மதிப்புகொண்ட நண்பர்களின் ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது.

மணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால், இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள் விரும்பினால்


மணற்கேணி புரவலர் :
மணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூ. ஐந்தாயிரம் செலுத்தவேண்டும். உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


மணற்கேணி குழாம் :

மணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம் செலுத்தவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


ஊருணி :

இந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோ, பள்ளிகளுக்கோ, படிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம். ரூ.ஆயிரம் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.


ஆண்டு சந்தா:

ரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.


தொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள் நேரடியாகவே செலுத்திவிடலாம் :

Manarkeni Publication

Overdraft account : 960114000000398
Syndicate Bank, Pondicherry Branch , IFSC Code : SYNB0009601
 
 


 

Thursday, May 21, 2015

தமிழுக்குச் சமயம்செய்யும் கொடை - ஒருமறுபார்வை:

தமிழ்நாட்டில் ஒரு மாயை இருக்கிறது. தமிழில்
ஒரு நூல் எழுதிவிட்டால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகவும் தொண்டாகவும் மாறிவிடுகிறது.
அதையே "இன்னமதம்" தமிழுக்குச்செய்த கொடை
என்று சொல்ல எந்த மதத்துக்காரரும் வெட்கப்படுவதில்லை.

காட்டாண்டியாக ஒலிக்கத் தொடங்கியதில் இருந்து
தமிழ் முளைத்துத் தழைத்தது. அதனை இன்றைக்கு
தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் தான் தமிழுக்குச்
செய்யும் கொடையாகவும் தன்சமயம் தமிழுக்குச்செய்த
செய்கின்ற கொடையாகவும் கருதிக்கொள்வது
வெட்கக்கேடான செயல்.

தமிழனாய்ப்பிறந்து, தமிழைக்கற்று, தமிழில்
எழுதினால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகிவிடுமா? தமிழ் என்ற ஒன்று
ஒவ்வொருவரிடம் பிச்சைப்பாத்திரத்தை
ஏந்தி நிற்கிறதா என்ன?

ஆங்கிலத்தில் நூலெழுதும் ஒவ்வொருவரும்
இப்படித்தான் ஆங்கிலத்திற்கு இன்னார் அல்லது
இன்ன மதம் செய்த கொடை என்கிறாரா? இந்தியர்கள்
பலபேர் ஆங்கிலத்தில் நுட்பநூல்கள் எழுதியுள்ளனர்.
உடனே அவற்றையெல்லாம் இந்தியர்கள் ஆங்கிலத்திற்குத்
தந்த கொடை என்கிறார்களா?

சமயவரலாற்றை எடுத்துக்கொண்டால்,
செயினம், பௌத்தம், வைதீகம், கிறித்தவம், இசலாம்
என்ற ஐந்து சமயங்களுமே வெளிநாட்டில் இருந்து
வந்தவையே. ஆரியத்தின் திசை வடக்கு என்றால்,
இவை அனைத்துமே ஆரியசமயங்கள்தான்.
(திராவிடத்தின் கண்ணுக்கு வைதீகம் மட்டுமே
ஆரியமாகத்தெரியும். அது தனிக்கதை)
இவற்றைப்பின்பற்றியவர் யாவருமே
தமிழர்கள்தான். அப்படி, தமிழரால்
எழுதப்படுகின்ற நூல், எப்படி அவர் சார்ந்த
சமயம் தமிழுக்குச் செய்த கொடையாக
மாறிவிடும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு மதம் இங்கே வருகிறதாம்.
அதைச் சிலர் பின்பற்றுகிறார்களாம்.
உடனே அம்மதம் தமிழுக்கு கொடை செய்கிறதாம்.
கொஞ்சமாவது ஏரணம் வேண்டாமா?
என்னைப்பொறுத்தவரை இதுவொரு பித்துக்குளி
சிந்தனை என்பேன். இந்தப்பித்துக்குளிப்போக்கைத்
தொடக்கியவர்களும் நாடு போற்றும் அறிஞர்கள்தான்.
இவர்கள் எழுத்து வள்ளலாக இருக்கலாம் -
ஆனால் தமிழ்மொழியை பிச்சைப்பாத்திரத்தோடு
நிற்கவைத்தவர்கள். இந்தச்சிந்தனைப்போக்கு மாறவேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, February 10, 2015

தோழர் சீமானுக்குப் பாராட்டு மடல்

முருகவேலொடு வீரத்தமிழர் முன்னணி என்ற இயக்கத்தைத்
தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டில்
தமிழ்த்தேசியச் சித்தாந்தம் தோற்றுத் தோற்றுத் துவண்டு போனதற்கு
முக்கிய காரணம், தமிழியத்தைத் தமிழ்நாட்டிற் தேடாமல், உலகில் இருக்கும்
மார்க்சியம், நாத்திகம், திராவிடம் உள்ளிட்ட பல இயங்களை
தோளிற் தூக்கிக் கொண்டு தமிழ்நாடு திரிந்ததுதான்.

தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று பேசுவோரெல்லாம் பின்பற்றுவது
தமிழ்நாட்டிற்குப் புறத்தே இருந்து வந்த "இயங்களைத்தான்".
வைதீகத்தை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்தியாவிலும் உலகத்திலும்
உள்ள எல்லா இயங்களுக்கும் காவடி தூக்கியவன் தமிழன் ஒருவனே.

உங்களையும் வீரமுன்னணியையும் கேலிபேசியிருக்கும் சுப.வீ
உள்ளிட்ட சிலரின் உளறலைப் பொருட்படுத்திவிடாதீர்கள்.
கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடப் பீடை தமிழகத்தின்
மானம், வீரம், கல்வி என்ற மூன்றையும் நாசமாக்கிவிட்டது.
1965ல் மொழிகாக்க தன்னிச்சையாய் திரண்ட தமிழ்க்குமுகம்
முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்ததே அதற்குச் சான்று.

எந்த ஒரு அரசியல் தலைவரும், அவர் இறைநம்பிக்கை
உள்ளவராயினும் தமிழ்க்கடவுளரைப் பொதுவில் பேசுவதற்கே
கூச்சப்படுகின்ற நிலையை ஏற்படுத்தியது திராவிட ஊழ்.
கடவுள் என்று வரும்போதெல்லாம் பொதுவாழ்வில் ஒரு
தாழ்வுமனப்பான்மை உண்டாகிப்போனது திராவிடம்
திட்டமிட்டுத் தீட்டிய நயவஞ்சகம்.

மனைவியை அருளாசி வாங்க கோயிலுக்கும், மடங்களுக்கும்
அனுப்பிவிட்டு, திராவிடத் தலைவர்கள் பேசிய மேடைநாத்திகத்தில்
மெய்மறந்தவர் சுப.வீ என்பதால், அவர் உங்கள் துணைவியார் பற்றி
அப்படித்தான் பேசுவார் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.

இருண்ட காலம் எனப்பட்ட வந்தேறி வடுகக் களப்பிரர் காலத்தின்
மிச்சம்தான் இந்தத் திராவிடக் காலம் என்பதை அடிக்கடி
நான் எடுத்துச் சொன்னதுண்டு. தமிழியத்தை, தமிழரின்
தொன்மையான அற்றுவிகத்தை (ஆசீவகம்) துடைத்தெறிந்தது
களப்பிரர் காலமே. களப்பிரர் காலக் கொடுமைகளினாலும்
அவர்கள் பின்பற்றிய தமிழ் மண்ணுக்கு ஒவ்வா சமயக் கொள்கையினாலும்,
செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னும் இருந்த தூய தமிழை
சமற்கிருதக் கலப்பைச் செய்து தமிழ் மொழியை நாசமாக்கியவர்களில்
முகன்மையானவர்கள் களப்பிரர்களே; இன்று ஆங்கிலத்தை வைத்து
திராவிடம் தமிழை அழிப்பது போல.

இந்த நிலையில் இருந்து தமிழ் மொழியை மீட்டு,
மறுமலர்ச்சியடையச் செய்தவர்கள் பக்தி இயக்கத்தினர்தான்.
ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பக்தி இயக்கத்திற்கு
வித்திட்டிருக்காவிடில் தமிழ் என்றோ சேர, சோழ, பாண்டிய
நாடுகளை விட்டுப் போயிருக்கும். அன்று தமிழகத்தில்
தோன்றிய பக்தி என்கிற தூயதமிழ் இயக்கம் தோற்றிய வீரமும், மானமும்தான்
பிற்காலச் சோழப்பேரரசை உருவாக்கியது.  அதேபோல இன்று நீங்கள்
தோற்றியிருக்கும் வீரத்தமிழர்  முன்னணியும் நல்லதொரு
தமிழகத்தை உருவாக்கட்டும். சோழர் அரசு உள்ளிட்ட யாவற்றையும்
திராவிடம் கேலிக்குள்ளாக்கி நம்மை இத்தனை நாள்
மயக்கத்தில் வைத்திருந்தது.

சம்பந்தரும், அப்பரும் தூயதமிழை மீட்டபோது,
தமிழியத்தை மீட்டபோது களப்பிரம் ஒருவரை
தீவைத்து எரிக்கப் பார்த்தது; இன்னொருவரை
சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்டது.
இறுதியில் தமிழியம்தான் வென்றது.
அதேபோல தமிழியத்தை மீட்க நினைப்போருக்கெல்லாம்
தீரா இடர்களையும் அடக்குமுறையையும் திராவிடம்
தொடர்ந்து தந்து கொண்டிருப்பது, அதே களப்பிரக் கலாச்சாரமாகும்.
தமிழையும் தமிழரையும் காக்க வந்த பரம்பொருள் தான்தானென
பரப்புரை செய்த திராவிடம், தமிழைக் கோயிலுக்கு
உள்ளே அனுமதிக்கவேயில்லை இன்றுவரை.

பழனி பற்றி சுப.வீ கிண்டலடிக்கிறார். அதேநேரத்தில்
"அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே
தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே!" என்று
சுப.வீ சொல்லும்போது நமக்கு இரண்டு விதயங்களைத் தெளிவாக்கி
விடுகிறார் அவரை அறியாமலேயே.
ஒன்று: பழனியின் சன்னதியில் இருந்த தமிழைத் துரத்தியடித்தவர்
வடுகரான திருமலை நாயக்கர். வடுகக் களப்பிரத்தின் பிற்காலத்
தொடர்ச்சிதான் நாயக்கர் ஆட்சி. மற்றொன்று: கோயில்களில் இருந்து,
திருமலை நாயக்கர் துரத்தியடித்த தமிழை,
கடந்த 50 ஆண்டு திராவிட அரசியல் கோயிலுக்குள் கொண்டு போகவே
இல்லை என்பது.  திராவிட அரசியல், அதே வடுகக் களப்பிரத்தின்
தொடர்ச்சி என்பதால் வெளியே வைதீகத்தைத் திட்டிக்கொண்டு,
அதேவேளையில் தமிழ் வளராமல் பார்த்துக்கொண்டது வரலாறு.

அம்பேத்கரின் பண்பாட்டுப் புரட்சியின் தேவை பற்றிய கருத்து
நல்ல கருத்து. பண்பாடு தமிழ்க்குமுகத்தை இணைக்கிற சங்கிலி.
கோயிலைப் பிடித்தவரெல்லாம் ஆட்சியைப் பிடித்த வரலாறு,
7ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் இருக்கிறது. பண்பாட்டுப்
புரட்சி என்பது அந்த 6-7-8 ஆம் நூற்றாண்டினைத் திரும்பிப்
பார்க்காமல் தமிழ்நாட்டில் உருவாக முடியாது. சுப.வீக்கு
இதெல்லாம் புரியவே புரியாது. அவரை, திருச்செந்தூர்
கோயிலுக்கு அழைத்துப் போய், கடலில் நீராட்டி, நாழிக்கிணற்றில்
குளிக்க வைத்து காலை 5.30க்கு முருகன் சன்னதியில் உட்கார
வையுங்கள். மொட்டையெல்லாம் போடத் தேவையில்லை.
அப்போது சுப.வீக்குப் புரியும் கடந்த 50 ஆண்டுகாலத்தில் எந்த மொழி
சன்னதியில் புழங்குகிறது என்றும், தமிழ் மொழி சன்னதிக்கு
வெளியே நின்று எப்படி அவமானப் படுகிறதென்றும் புரியும்.
தமிழ்க்கடவுளான முருகனுக்கு முன்னால் தமிழ் மந்திரங்கள்
ஓதப்படுவதில்லை திருச்செந்தூரில். ஒருவர் சன்னதிக்குப்
புறத்தே நின்று மறைந்து கொண்டு பாடுவார். நேராகப் பாடினால்
தீட்டு. வெறும் பார்ப்பன ஏச்சில் காலம் தள்ளிவிட்ட சுப.வீக்கு
வடுகப் பார்ப்பனீயத்திற்கும், தமிழ்ப் பார்ப்பனர்க்கும் வேறுபாடு
காணமுடியாது. அதை அறிஞர் குணாவிடம் இருந்து அவர்
கற்றுக் கொள்ளவும் தலைப்படமாட்டார். பாவாணர், குணா
போன்றவர்களையெல்லாம் தூற்றியதுதான் திராவிட வரலாறு.

கடந்த 50 ஆண்டுகளில், மிக மிகத் தேவையான பண்பாட்டுப்
புரட்சியை, தமிழன் இதுநாள்வரை நாணப்பட்ட பண்பாட்டுப் புரட்சியைத்
தயங்காமல் கையில் எடுத்திருக்கிறீர்கள். "நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணதுவாக" என்று மாணிக்கவாசகர் சொல்லுவார். இதற்காக
உங்களை மனமாரப் பாராட்டுவதோடு, இந்த முயற்சியைக் கையில்
எடுக்காமல் வேறு எவருமினி தமிழ் அரசியல் நடத்த முடியாது
என்ற நிலையும் தமிழகத்தில் உருவாக வேண்டும்.

உங்களது துணைவியாரின் தத்துவத்தை அரசியலாக்கிவிட்டீர்கள்
என்று சுப.வீ கிண்டலடிப்பது போல வேறு பலரும் செய்யக்கூடும்.
ஆனால், அவர்களுக்குச் சொல்லுங்கள், "பக்தி இயக்கம் என்ற பெயரில்
உருவான வீர இயக்கம்தான் தமிழகத்தைப் பல்லாண்டு காலம் காத்தது
என்றும், அந்த இயக்கத்தை உருவாக்கியவர்கள் சம்பந்தர் என்ற குழந்தையும்,
அப்பர் என்ற வீரத்துறவியும்தான் காரணம் என்றாலும், அவர்களுக்குத்
தூண்டுதலாக, ஆதரவாக இருந்தவர்கள் வணக்கத்துக்குரிய
பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார், அப்பரின் அக்கையாரான
திலகவதி அம்மையார் என்ற இரண்டு பெண்ணரசிகள்தான்.
அவர்களுக்கு முன்னால் இவர்கள் பேசும்
பகுத்தறிவும், மூடநம்பிக்கையும் பிழைப்பு அரசியலே தவிர
தமிழர்க்கான அரசியலாக இருக்க முடியாது.

இவற்றொடு, முருகனை முன்னிறுத்திவிட்டதால் பிள்ளையாரை
மறுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை. வாதாபியில்
இருந்து ஓர் ஆனைமுகன் வந்தார் என்பது உண்மையே ஆயினும்,
ஆனை என்பது தமிழர்களின் தொன்மையான தெய்வ வடிவம்.
அற்றுவிகத்தின் சின்னமே ஆனைதான். இன்றைக்கும் அதன்
தொடர்ச்சி தமிழகத்தில் உள்ளது. சில கோயில்களில் கொடிமரத்திற்குப்
பின்னால் நந்தி அல்லது மயில் இருக்கும் இடத்தில் ஆனையும் இருக்கின்றது.
நீங்கள் மணப்பாறை வழியே போகும்போது மணப்பாறை நல்லாண்டவர்
கோயிலில் இதனைக் காணமுடியும். சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதத்தை
ஆனைமுகன் என்று சொல்வர் அறிஞர். ஆனைமுகன் பற்றிய ஆய்வு
திராவிட அறிவுலகத்தில் மங்கிக் கிடக்கிறது. அதனால் அவசரப்பட்டு
ஆனையைத் தள்ளிவிடவேண்டாம். ஆய்வு செய்ய காலம் இருக்கிறது.
இன்றைக்கு, மிகத் தொன்மமான கருப்பண்ண சாமிக்கும் சமற்கிருத

மூலமந்திரமும், கருப்பண்ணர் காயத்திரி மந்திரமும் திரிக்கப்பட்டு
சமற்கிருதமயமாக்கல் நடைபெறுகிறது. பார்க்க https://www.facebook.com/photo.php?
fbid=10153064671917612&set=pcb.10153064720867612&type=1&theater
தமிழ்நாடு 50 ஆண்டுகாலமாக "எங்களுக்கு மதமில்லை சமயமில்லை யாதும் ஊர்
யாவரும் கேளிர் என்று உளறிக்கொண்டு"  கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து
இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தபோது அதன் கோவணம் வெளியே
தெரிந்ததைக் கவனிக்கவில்லை. அதுவே பல தமிழ் இழப்புகளுக்குக் காரணம்.
வீரத்தமிழர்முன்னணி விரைந்து கோயிலில் தமிழைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.
அங்கில்லாத தமிழ் எங்கும் வளராது. மீண்டும் உங்களுக்கும் உங்கள் அமைப்பினர்க்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்







Tuesday, January 20, 2015

மாதொருபாகன் - கவுண்டருக்கு எனது கண்டனங்கள்!

பெண்ணியம் ஆணியம் என்று கட்சி கட்டமுடியாமல்
எழுந்த புதினம் என்பதால் ஆண் பெண் சமனைக் குறிக்கும்
சிவவடிவான மாதொருபாகன் என்ற பெயரைச் சூட்டினாரோ
"பெருமாள் முருகன் கவுண்டர்" என்று எண்ணத் தோன்றியது
அப்புதினத்தைப் படித்து முடித்தபோதில்.

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்,
அதிலும் கூன் குருடு செவிடு பேடு என்ற நான்கு உடல்
ஊனங்களின்றிப் பிறத்தல் அரிது என்று சொன்ன போது,
மானிட வாழ்க்கைக்கு இந்நான்கு ஊனங்களும் சற்று
கடினமாக, சரவலாக இருந்ததை, இருப்பதைப் புரிந்து
கொள்ளமுடிகிறது. பேடு என்றால் பேடிமை;
அதாவது பால் பேதித்த பெண்மை (திருநங்கை என்ற
 தற்போதைய வழக்கு). ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான மலடு (வறடு/வறடி/வறடன் என்பார் பெ.மு)
என்ற தன்மையை மானிட வாழ்க்கையின் இன்னலாகச் சான்றோர்
கொண்டதில்லை.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்குமுகத்தில்,
மணமாகிய ஓரிரு மாதங்களில் இருந்து காலம் முழுவதும்
குமுகத்தின் ஒவ்வொரு மூலையிலும் படும் வேதனைகளை,
சொல்லடிகளை, எதிர்கொள்ளும் ஆணவங்களை,
அவமானங்களை மாதொருபாகன் பதியவைத்திருக்கிறது.
ஆணும் பெண்ணும் (காளி, பொன்னா)  சமமாகப் படும்
துன்பங்களை, ஏச்சுகளை ஆங்காங்கு நடைமுறை
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்டிருந்தாலும்
ஒரே மூச்சில் படிக்கும்போது "குழந்தை குட்டி பெற்ற குமுகம்
இத்தனைக் கொடியதா? என்றெண்ண வைப்பதோடு,

"நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
 ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
 பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
 காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
 ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
 ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
 ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே..."


என்ற பட்டினத்தாரின் பாடலை நினைவுக்குக் கொண்டுவந்து,
"இந்தக் குரங்குகளுக்குத்தான் எத்தனை ஆணவம்!"
என்றும் எண்ண வைத்துவிடுகிறது.

பிள்ளைப்பேறின்றி, பல வருடங்கள், ஆணின் பாதியில்
பெண்ணும், பெண்ணின் பாதியிலே ஆணுமாய்
இனிய காதல் வாழ்க்கை வாழ்ந்த காளியும் பொன்னாவும்
பட்டினத்தார் சொன்ன குரங்குகளின் இறுக்கத்தினால்,
பொன்னா உறுதி தளர்ந்து, கணவனின் பேச்சைக் கேட்காமல்
திருவிழாச் சந்தையில் காணாக்களவு வழி
விந்துதானம் பெறப் போய்விடுகிறாள்.
அவர்களின் காதல் வாழ்க்கை சிதறிவிடுகிறது.
காதல் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறார் பெ.மு. அதை
எண்ணும்போது அவர்களின் சிதறல் வலிக்கவே செய்கிறது.
மணமாகி குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தாலும்,
 "அன்பிலாப் பெண்டிர் கையில் உண்பதே உலகில்
எல்லாவற்றிலும் கொடியது" என்ற ஔவையாரின்
சொல்லுக்குள் வாழ்பவர் எத்தனையோ பேரிருக்க,
அருமையான காதல் வாழ்க்கையை, குமுகத்தின்
அழுக்குகளால் சிதறடிக்கிறார்கள் பொன்னாவின் தாய்,
தந்தை, அண்ணன், மாமியார் (அதாவது காளியின் அம்மா).
பொன்னாவை காணாக்களவுவழிப் போக சொல்லித்தந்தோடு
மட்டுமன்றி, காளியின் தாயார் ஆசியோடு, பொன்னாவின்
தந்தை வண்டி ஓட்ட, தாய் துணைக்கு வர, அண்ணணோ
மாப்பிள்ளை காளிக்குத் தெரியாமல் அவனைச் சமாளிக்க,
திருவிழா இருட்டுக்குள் மறைந்துவிடுகிறாள்
காளியுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த பொன்னா.

இதுதான் கதை. இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பா?  கதையில்
எங்கும் அருத்தநாரீசரை இழுக்கு செய்யவில்லை. பெருமாள் முருகனின்
சொந்த சாதியான கவுண்டர்களை ஏதும் இழுக்கு செய்யவில்லை.

ஊருக்கு இழுக்கு என்று சொல்வதெல்லாம் மறைமுகக்
குற்றச்சாட்டுகளாகவே தெரிகின்றன. ஏனெனில், ஊர், மலை,
மலைக்கோயில், அதன் பிரிவாக இருக்கும் வறடிகல்,
பாவாத்தா என்ற வனதெய்வம், அந்த வனதெய்வம் இட்ட குலசாபம்
போன்றவற்றையெல்லாம் சொல்லவேண்டுமானால்
ஊர்ப்பெயரைச் சொல்லாமல் எந்த எழுத்தாளனாலும்
எழுதவே முடியாது.

காணாக்களவு பற்றிப் பேசிய போதே அவளின் கண்களில்,
திருவிழாவில் பிள்ளை வரம் கொடுக்க அலையும்
எல்லாச் சாதி சாமிகளும் வந்து போகின்றனர்.
எல்லாச் சாதி சாமிகளும் அலைகிறார்கள் என்றால்
எல்லாச் சாதிப் பெண்களும் தேடுகிறார்கள்
என்றுதான் பொருள். அதற்கு ஏன் கவுண்டர் சாதி கோவித்துக்
கொள்ள வேண்டும்?

சாதிப்பெயரைப் போடமலிருந்திருக்கலாம் என்றால்,
கதையில், கவுண்டர் தொடங்கி, பார்ப்பார், செட்டியார்,
பறையர், சாணார், சக்கிலியர், சாயபு, வெள்ளைக்காரன்
என்று பலரும், பல குடும்பங்களும் வந்து போகிறார்கள்.
கதையில் கவுண்டரான காளி, பறையர்களோடு
பறையாட்டம் ஆடுவான். குறிப்பாக கோயிற்பறையாட்டத்தில்
வல்லவனாகச் சொல்லப்படுவான். பறையாட்டம் என்பது தமிழர்களின்
பொதுவான தொன்மையான கலை என்பதற்கு இதுவும் ஒரு காட்டு. காளியின்
சிற்றப்பனாக வருபவர், திருமணம் செய்துகொள்ளாதவர்.
அவருக்குச் சமைத்துப் போடுபவன் சக்கிலிய
வகுப்புப் பையன். அதற்காக சிற்றப்பா பலராலும்
இகழப்பட்டதைக் கதை சொல்கிறது. சாணார் வகுப்பான
மண்டையனின் பிள்ளையைத் தத்துக் கேட்கிறான் காளி.
அவனும் தருகிறேன் என்று சொல்வான்;
ஆனால் மண்டையன் மனைவி மறுத்துவிடுவாள்.

காணாக்களவுக்குப் பொன்னா போனதாக வருவதால்
சாதியம் பற்றிக் கொண்டது என்று சொல்லுமளவுக்குக்
கதையில் ஏதும் சாதி இகழ்ச்சி இல்லவே இல்லை.

திருச்செங்கோட்டு கவுண்டர்கள் மட்டும் கதை
படிக்கத் தெரியாதவர்களா என்ன? அவர்களுக்கும் கதை
புரிந்திருக்கவே கூடும். ஆனால், பெ.முவே ஒரு செவ்வியில்
சொன்னதுபோல வேறு எதற்கோ பெ.மு வைப்
பிடிக்காதவர்கள், இதனை மட்டும் வெளியில் காரணமாக வைத்துத்
தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று எண்ண
இடமிருக்கிறது.

அது, சிலரின் சொந்தப் பகையாக இருக்கலாம்.

மற்றபடி, இக்கதைக்கு ஆதரவும், எதிர்ப்பும்,
ஆதரிப்பது போன்ற எதிர்ப்பும் இணையத்தில்
உலாவியதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள்
யாரும் சட்டென களத்திற்கு வராதது
"சாதி வாக்கு வங்கிக்காக மட்டுமே". திரைப்படங்களில்
எல்லாம் முடிந்ததும் காவற்துறை வருவது போல
மு.க.சாலின் வந்தார். சரி அவராவது
வந்தாரே என்று எடுத்துக் கொள்வது தகும்.

எதிர்க்கிறேன் பேர்வழி, என்று எத்தனையோ
பேர் எழுதினார்கள். அவர்கள் கதையை ஆழ்ந்து
படித்தால் அதில் சாதி, மத இகழ்வுகளுக்கு
இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால்,
என்னை வியப்படைய வைத்ததெல்லாம்,
சில தமிழ்ப்பற்றாளர்களின் "ஆரிய திராவிட" எதிர்ப்புதான்.
"இது ஆரியக் கொள்கை, அதோடு இது திராவிடர்களின்
சதி - ஆபாசம் " என்று போட்டார்களே போடு;
அவர்களெல்லாம் இந்த நூலை வருணிக்கு முன்
கொஞ்சம் மாந்தவியலையும் படிக்கவேணும்
என்றுதான் சொல்லுவேன்.

ஆரியத்தையும் திராவிடத்தையும் கிடுக்க
ஆயிரம் இருக்கையில் இதெல்லாம்
ஆரியக் கொள்கை அது இது என்றால்
இவர்களின் ஆரிய திராவிட அறிவை
நகைக்க மட்டுமே முடியும்.

தற்காலப் புதினங்கள் என்றாலே எனக்கு  அலுப்பும்
சலிப்பும் இயல்பாகவே அமைந்துவிட்டதால் நான்
இழப்பது சில இருக்கலாம்.  அதற்கு நான் வருந்தியதில்லை.
ஆனால், எப்பவாவது இதுமாதிரி படிக்கும் போதெல்லாம்
வழக்கு மொழியென்ற பெயரில், எழுத்துப் பிழை,
ஒற்றுப்பிழையோடு கெட்டவார்த்தைகளை அப்படி
அப்படியே எழுதியிருப்பதைப் பார்க்கும் போது
அருவெறுப்பே மிகுகிறது. புதினம் என்றால்,
தற்கால இலக்கியப் பதிவு என்றால்,
கீழ்த்தரமான உரையாடல்களையும், ஏசல்களையும்,
கேலிகளையும் அப்படியே
அதே சொற்களால்தான் எழுதவேண்டுமா?
ஆண் எழுத்தாளரும் பெண் எழுத்தாளரும்
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு
கெட்டவார்த்தைக் களஞ்சியத்தை
எதிர்காலத்திற்குத் தேக்கி வைக்கிறார்கள் போல.

இடக்கரடக்கல் என்பதைக்
கொஞ்சம் கூடவா பின்பற்றக்கூடாது?

எனக்குப் பிடிக்காத இந்த "இழக்கிய" எழுத்து முறையை,
பெருமாள் முருகன் கவுண்டரும் வைத்துள்ளார்.
அதனால் அதற்கு மட்டும் கவுண்டருக்கு எனது கண்டனங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்