Pages

Tuesday, November 11, 2014

ஒருங்குறிக் கேடுகள் - 1


ஒருங்குறிக் கேடுகள் ஒன்றல்ல - இரண்டல்ல. பல.
அவற்றிலொன்று இந்த வரிசைச் சிக்கல்.


அன்றைய ஒருங்குறிப் புலவர்களின் ஒழுக்கமற்ற, நெறிமுறையற்ற
செயற்பாடுகளால் விளைந்த பல கேடுகளில் இது முக்கியமான ஒன்று.

கதை, கவிதை, மொக்கை போன்றவற்றை இணையத்தில் எழுதுவதற்கு
இது எந்தவிதத்திலும் தடையாக இருக்காது. ஆனால், கணிநிரல்கள்
உருவாக்கும் ஒவ்வொருவரும் இந்தக் குறைபாட்டைக் கடந்துதான்
புதுக்குகள் செய்ய முடியும். அங்கங்கு சில சுற்றுவழிகளைப் போட்டுத்தான்
அவர்கள் செய்வார்கள். அதிலும், தமிழ் நிரலியர் பலபேர் எங்கே இந்தக் குறைபாட்டைச் சொன்னால், இதற்குச் சுற்றுவழி எழுதத் தெரியவில்லை
என்று யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணி வெளியே சொல்லுவதுகூடக் கிடையாது :-) அவ்வளவு தொழிலியச் சுத்தம் :-))

இதனால், விளையும் கேடுகளைப் பார்க்கவேண்டுமானால் விக்கிப்பீடியா போன்ற பெருஞ்செயலிகளிலேயே காணலாம். விக்கிப்பீடியாவின் பகுப்பு வரிசையை அதன் செயலி எப்படிப் போடுகிறது என்று காண்பது தகும்.
https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_ta&pagefrom=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D#mw-pages

(இதுபோன்ற குறைபாடுகளை நிரல்மாற்றம் செய்யமுடியுமெனில் செய்து வெளியிட நண்பர் இரவிசங்கர் போன்றவர்கள் முயற்சி செய்யவேண்டும், இல்லாவிடில், இதுவே தமிழ் எழுத்து வரிசையாக நிலைத்துவிடக்கூடும்.
அல்லது, இச்சிக்கலை விக்கியின் மேலகத்திற்கு வலுவாக எடுத்துச் சொல்லி,
மாற்றச் சொல்லவேண்டும். அது ஒருங்குறிக் குற்றங்களை பன்னாட்டு மன்றங்களில் எடுத்துரைக்க உதவியாக இருக்கும்.)

பத்தாண்டுகளின் முன்பு ஒருங்குறிப் புலவர்கள், குறியேற்றச் சிக்கல்களின்போது கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டதன் வெளிப்பாடு இன்று நன்கு
தெரிகிறது. இன்றைய ஒருங்குறிப் புலவர்களும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். இன்றைய பின்ன சின்ன விதயத்திலும் அடிப்படை மீள்பார்வை கூடச் செய்யாமல், அதற்கான அரசு வழிமுறைகளைச் செய்யாமல், எதிர்காலச் சூழல்களைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகமும்  ஒருங்குறியைப் பேணுதற்கு எந்த நெறிகளையும், மீள்பார்வை முறைகளையும், தகுதியான குழுக்களையும் உருவாக்கவில்லை. 55 குறியீடுகளை குறியேற்றம் செய்யும் முயற்சியை வெறும் 4 மணி நேர ஆரவாரத்தோடு முடித்துக் கொண்டது த,இ.க.

அன்புடன்
நாக.இளங்கோவன்


Sunday, September 21, 2014

இந்திரா பார்த்தசாரதியின் 'சிலப்பதிகாரச் சிக்கல்கள்' கட்டுரை - ஒரு பார்வை

சிலப்பதிகாரச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை - நாக.இளங்கோவன்
வெளியீடு - மணற்கேணி ஆய்விதழ் (மே-சூன் 2014)

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற கட்டுரையை 2001ல் படித்ததன் பின்னர், “சிலப்பதிகாரச்  சிக்கல்கள்” என்ற அவரின்  கட்டுரை, பகிர்தலில் படிக்கக் கிட்டியது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவரின் சிலப்பதிகாரக் கட்டுரையைப் படிக்கும்போது, அதில் பரந்து கிடக்கும் அவரின் சிந்தனைப் பரிமாணங்கள் என்னைப் போன்ற சிலப்பதிகார வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற அந்தக் கட்டுரைக்கு அப்போது நான் எழுதியிருந்த கருத்துகள், மறுப்புகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்களிடம் இருந்து மிகப்பண்பாடுடைய மறுமொழிகளும், ஏற்பும் அஞ்சலில் வந்தன. அவரின் அந்தப் பண்பாடும், சிலப்பதிகாரத்தைப் போற்றுகின்ற சிந்தனையும், பகிர்வில் வந்த இந்தக் கட்டுரையின்பால் கருத்துரை எழுத ஆர்வத்தைத் தூண்டின.

இக்கட்டுரை வெளிப்படுத்தும் உரத்த சிந்தனைகள் அகலத்திலும் ஆழத்திலும் எண்ணிக்கையிலும் மிகுந்துள்ளன என்பேன். இச்சிந்தனைகளில் சிலபலவற்றைத் தமிழகச் சிலப்பதிகார ஆய்வு உலகம் சிந்தித்தும் வருகையில், ஆசிரியர் இ.பா அவர்களும் மிகச் செழுமையான வினாக்களாக அவற்றை எழுப்புவது வரவேற்புக்குள்ளாகிறது.

“சிலப்பதிகாரம் சமற்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று” என்ற ஆசிரியரின் அழுத்தமான சிந்தனை, 2012ல் தமிழ்த் தொல்லியற்றுறையின் மேனாள் இயக்குநர் திரு.நாகசாமி, “வடமொழியின் பஞ்சதந்திரக் கதைகளை மூலமாகக் கொண்டது சிலப்பதிகாரம்” என்று கூறியதை அடிப்படையிலேயே மறுக்கிறது. ஆசிரியரைப் போன்றே, அக்கருத்தியலை ஆதாரங்களை அடுக்கி மறுத்தது, “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற முனைவர் இராம.கியின் கட்டுரை.(http://valavu.blogspot.in/2013/02/1.html).

“பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரம் பிரபலமாக இருந்திருக்கவில்லை –அதற்கு அதன் சமணச் சார்வு காரணமாக இருந்திருக்கூடும்” – என்ற இ.பாவின் கருத்து ஆழச்சிந்திக்க வைக்கிறது. 18-19 நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக்கூடிய “கோவலன் கதை” என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலில் உள்ள செய்திகள், சிலப்பதிகாரப் பெருவழக்குத் தமிழ்நாட்டில் மிக நெடுங்காலமாக இருந்திருக்க வேண்டும் என்றே கருத வைக்கிறது. (கோவலன் கதை – சுவடிப்பதிப்பு – முனைவர் சூ.நிர்மலாதேவி – உ.த.ஆ.நி பதிப்பு). கரிகாலன் கல்லணை கட்ட மாசாத்தன் நிதி அளித்தது, பாண்டிய நாட்டில் கொடுங்கோலாட்சி நடந்தது, மாதே(த)வி கோவலனைக் கொல்ல ஆற்றில் தள்ளியது, சிவச்சார்புக்காக சொக்கர்-மீனாட்சியை முன்னிலைப் படுத்தியது போன்ற செய்திகளை அதிற்காணமுடிகிறது. “தென்னவன் மகள் கண்ணகி” என்று சிலம்பு சொல்வதை, பாண்டிமாதேவியின் ஆற்றில் விடப்பட்ட மகள் கண்ணகி என்று “கோவலன் கதை” என்ற இந்த நாட்டுப்புறக் கதை சொல்கிறது. இதுபோல, கோவலன் கர்ணகி என்ற நாட்டுப்புறக் கதையும் காணத்தக்கது. இக்கதைகளின் தன்மைகளைப் பார்க்கும் போது, செவ்விலக்கியமாக இளங்கோவடிகள் தோற்றிய சிலப்பதிகாரம், கூத்துக்கலையாக, தமிழ்நாட்டின் உள்வழக்குகளில் பலவாகத் திரிந்து நெடுங்காலம் இருந்திருக்கும் வாய்ப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. (இதனை இ.பா அவர்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.)

சிலப்பதிகார ஆசிரியர் பெயர் பற்றிய கட்டுரை ஆசிரியரின் வினாக்கள் மிக அவசியமானவை. “ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்?” என்று வினவி, சிவனின் இடப்பக்கத்துறை பெண்மையோ என்று ஐயுறும் ஆசிரியரிடம் இருந்து, “வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பெருமாளையும் தாயாரையும் வைணவர்கள் வணங்குவது பற்றிய சிந்தனையையும் நான் எதிர்பார்ப்பேன். இடப்பக்கம் உள்ள இதயத்தின் குமுறலை, அனலை ஆற்றும்பொருட்டு, பொதுவாகவே வலப்பக்க/வலக்கர எழுச்சி கொண்ட தமிழர்களின் இயல்பான செயற்பாடு இடமுலையைத் திருகியது என்ற கருத்து (சிலம்பு மடல்-27 http://nayanam.blogspot.in/2000/06/27.html ) எனக்கு இருக்கும் போதிலும், வள்ளுவம் சொல்லும் உவமமான “முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று” என்பதை ஆழ்ந்து நோக்கவும் சொல்கிறது.

“பத்தினி வழிபாடு, சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்குதல்” பற்றிய ஆசிரியரின் சிந்தனை, விரிவாக விரும்பும் எனது மற்றொரு எதிர்பார்ப்பாகும். சிலப்பதிகாரத்தின் காலம் என்ன? என்ற வினா எனக்குப் பிடித்த முக்கிய வினாவாகும்.  சிலம்பின் காலம் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 2ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு, தற்போது 2ஆம் நூற்றாண்டு என பலராலும் கருதப்படுகிறது. இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், சிலம்பின் காலத்தை தமிழக, இலங்கை வரலாறுகளை மட்டும் வைத்து அதை 2ஆம் நூற்றாண்டு என்று சொல்கையில், தமிழகத்திற்கு வடக்கே சென்று, சாதவாகன்னர்(நூற்றுவர் கன்னர்) அரசியல், மகத ஆட்சி, தக்கணப்பாதை என்ற அடிப்படைகளை ஆழமாக வைத்து “கி.மு75 என்பதே சிலப்பதிகாரத்தின் காலம்” என்று சொல்லும் “சிலம்பின் காலம்” என்ற முனைவர் இராம.கியின் நூல் இன்று பலரால் கருதப்படுகிறது. “கனகவிசயர்” என்பது கனகன் விசயன் என்ற இருவரல்ல – கனகவிசயன் என்ற ஒருவரே என்று அந்நூல் நிறுவுவது கவனிக்கத்தக்கது. இதற்கு நேர் மாறாக, முனைவர் செ.கோவிந்தன் அவர்களின் “சிலம்பின்  காலம்” என்ற நூல், காலத்தை 9ஆம் நூற்றாண்டையும் கடந்து கி.பி11ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளிவிடுகிறது. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப்பேரரசு சேரநாட்டை அழித்ததால் மனம் நொந்த இளங்கோ, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேகனையும் அவன் மனைவியையும் வைத்துக் காவியத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் செ.கோ. அதோடு, செங்குட்டுவன் இளங்கோவின் தம்பி என்கிறார் செ.கோ. இதிலிருந்து சிலப்பதிகார ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் கருதுகோள்களும், ஆதாரங்களும் நுண்ணியமாக, வலுவாக இருக்கும்போது, அதன் காலம் கி.பி2ஆம் நூற்றாண்டை முந்திச் செல்வதும், வலுவற்ற கருதுகோள்களும் ஆதாரங்களும் சிலம்பின் காலத்தை மிகப் பிந்தியதாக்குவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஆசிரியர் இ.பா அவர்களின் விரிவான காலக்கணிப்பிற்கு அவர் எடுத்துக் கொள்ளும் கருதுகோள்களும் ஆதாரங்களும் தமிழக எல்லையைக் கடந்தும் செல்ல வேண்டுமே என்பதும் எனது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

பிற்சேர்க்கைகள் பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் கருதுகோள்களும் வாசகர்களையும் ஆய்வாளர்களையும் ஈர்ப்பதாக அமைகிறது. பதிகமும், வரந்தருகாதையும் பிற்சேர்க்கை என்றாலும், அவை கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து ஆய்வுக்குட்பட்டே வருகின்றன. இளங்கோவடிகள் எப்படிச் சமணராகக் கருதப்படுகிறார் என்ற வியப்பு எனக்கு உண்டு. மிக அவசர அவசரமாக அவருக்கு மொட்டை போட்டு சிலையாகவும் மெரீனா கடற்கரையில் வைத்துவிட்டார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. 

குணவாயிற்கோட்டம் என்பது சமணக் கோயில்; அங்கு இளங்கோஅரசு துறந்தார் என்ற உரைக்காரர்களின் கருத்தே நிலைத்துவிட்டது போல. குடநாட்டுக்குக் கிழக்குக் கோட்டையாக, அரணாக, வாயிலாக இருந்ததுதான் குணவாயிற்கோட்டம். சேரத்தின் மையநாடான குடநாட்டுக்குத் தெற்கெல்லையாக கோட்டயமும், கிழக்கெல்லயாக குணவாய்க்கோட்டமும், வடக்கெல்லையாக கோட்டக்கல்லும், மேற்கெல்லையாக கடற்கரையும் இருந்திருக்கின்றன; கோட்டம்=கோட்டை/அரண் என்ற பொருளில் அரணவாயிலாக  இருந்திருக்கின்றன என்பது எனது கருத்து. குணவாயிற் கோட்டத்தை குணவாயிற்கோயிலாகக் கொண்டால், கோட்டக்கல்லை கோயிற்கல்லாகவும், கோட்டயத்தைக் கோயிலையம் என்றும் கொள்வார்களா? ஆகவே, இளங்கோ சமணத்திற்கு வலிந்து தள்ளப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. 

ஆசிரியர் இ.பா அவர்களும் இளங்கோ சமணர்தானா என்று ஐயுறுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கோட்டம், இளங்கோவின் சமணம், பிற்சேர்க்கைகள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னப்படுவது இந்தக் கோட்டம்=கோயில் என்ற கருதுகோளினாற்றான். அதொடு, அரசு துறப்பு என்பது, அரசைத் துறந்து துறவியானார் என்று ஏன் கொள்ளப்படவேண்டும்? இமயவரம்பனின் மகனான இளங்கோ, கிழக்கு வாசலின் மாதண்டநாயகனாக இருந்திருக்கிறான். பின்னர் அண்ணன் பட்டத்துக்கு வர அப்பணியை அண்ணணிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று கருத இடம் இருக்கிறது என்று நான் சொல்வேன்.

இன்னும் நிறைய கருத்துகளை, வினாக்களை உரக்கவே எழுப்புகிறார் ஆசிரியர். அவை மேலும் வாசகர்களுக்குத் தூண்டலாக அமைவது சிறப்பு. மேலும் எழுதினால் நீளும் என்பதால்,  ஒரு கருத்தோடு இக்கருத்துரையை நிறைவு செய்கிறேன். மதுரைக்காண்டம் முடிந்தவுடன் காவியத்தின் தன்மை, உணர்வு நெறி வெகுவாக மாறுவதை வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகிறது என்ற ஆசிரியரின் கருத்தோடு ஐயத்தோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. ஆசிரியர் கூறுவது போல, சிலம்பு நாடகம் மதுரையோடு முடிகிறதோ என்ற ஐயம் தோன்றினாலும், சேர அரசியலை, நாட்டை முன்னிலைப்படுத்தும் முகமாக வஞ்சிக்காண்டம் காவியத்தில் முதலில் தோன்றி அதற்குப் பின்புலமாக புகாரும், மதுரையும் வைக்கப்பட்டதோ(as flash back) என்ற சிந்தனை எனக்குண்டு. ஆசிரியர் இக்கட்டுரையில் எழுப்பியிருக்கும் வினாக்களை ஐயங்களை விரிவாக விளக்குமுகமாக நூல் இயற்றினால் அந்நூலில் அதிக ஆவலோடு நான் எதிர்பார்க்கும் கருத்து இதுவாகவே இருக்கும். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கருத்துகள், ஆய்வுகள் நூலாக மலர வாழ்த்துகள்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

Sunday, May 25, 2014

திருவாசகம் - கோகழி பற்றிய உரையாடல்

இது தமிழ்மன்றம் மடற்குழுவில், திரு.நூ.த.லோகசுந்தரம் அவர்கள் "கோகழி" என்பது கருநாடகத்தின் ஊர் என்று கருத்துச் சொன்னபோது எழுந்த உரையாடல். இதேப் போல வேறு சிலரும் சொல்கிறார்கள் என்பதாலும், இந்த உரையாட்டு மேலும் தொடரும் என்பதாலும், இங்கே இதைப் பதிவு செய்து வைக்கிறேன்,
====================================================================
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,
வணக்கம்.
தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.

1)    “கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )
 2)    தாங்கள் மேற்காட்டிய http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search
இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன்.
3)     ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது?திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!
ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத   ஊரை  சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றதுஎன்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

4)   முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.
(பார்க்க :- http://valavu.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D   )
 பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும். 

திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.] 

கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.


5)    திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும் திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.
திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.
            கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),
            கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)
            கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)
            கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை) 
            கோகழிக்கரசை (பண்டாய நான்மறை) 
இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின் திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின் திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன.  இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.
ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.  
6)    தங்களின் கூற்று:
குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ  புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில் 
குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”

எனது கருத்து:
 எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?

ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும்  இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

7)    தங்கள் கூற்று:
"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை  " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “

எனது கருத்து:
இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”

இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)
 “சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும்.  (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)
குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.
பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே. 
குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.

8)    தங்கள் கூற்று:
"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர் 
எனது கருத்து:
தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:

61....புவனியிற்  சேவடி  தீண்டினன்  காண்க             
62....சிவனென  யானுந்  தேறினன்  காண்க             
63....அவனெனை  ஆட்கொண்  டருளினன்  காண்க             
64....குவளைக்  கண்ணி  கூறன்  காண்க             
65....அவளுந்  தானும்  உடனே  காண்க             
66....பரமா  னந்தப்  பழங்கட  லதுவே             
67....கருமா  முகிலின்  தோன்றித்               
68....திருவார்  பெருந்துறை  வரையி  லேறித்              
69....திருத்தகு  மின்னொளி  திசைதிசை  விரிய             
70....ஐம்புலப்  பந்தனை  வாளர  விரிய             
71....வெந்துயர்க்  கோடை  மாத்தலை  கரப்ப             
72....நீடெழில்  தோன்றி  வாலொளி  மிளிர       

இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள்.  இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.
மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.
இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார்.  “கருமா முகிலின் தோன்றி  - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.
 வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,
நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.
ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.

9)    தங்கள் கூற்று:
மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி
     எனது கருத்து:

            மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?


ஐயா, அடியேனுக்குத் தோன்றிய மேற்கண்ட விளக்கங்களை அளித்துள்ளேன். ஓர்ந்து பார்க்க.
திருவாசகத்தை ஆய்பவர்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று, உள்ளார்ந்து உண்மையைத் தேடுநர். இரண்டு - உங்களுக்கே தெரியும்.
இரண்டாவது வகையரின் குழப்படிகள் சிக்கல்களிலேயே போய்முடியும். முதல் வகையரின் தேடல் மெல்லச் சென்றாலும் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும். தாங்கள் அறியாததல்ல. தங்களின் அன்பான மடலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மடல்-2:

அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

1)   கல்வெட்டைப் பார்த்ததில்லை.
     அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
     அதன் ஆங்கிலக் குறிபெயர்ப்பையும் பார்த்ததில்லை.
     எனது ழகர வினாவுக்கும் விடை இல்லை.

    ஆனால் அந்த ஊர்தான் கோகழி என்று தீர்ப்பை மட்டும் எழுதிவிடுகிறீர்கள். 

    இது எந்த விதத்தில் ஏற்கத் தக்கது? நான் ஏற்கமாட்டேன்.
    

2)  தங்கள் கூற்று: 
   //எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள் 
வாய் வழி ழங்கும் மொழி //

    எனது மறுமொழி:
    இது என் வினாக்களுக்குத் தொடர்பில்லாத செய்தி.

  
3) தங்கள் கூற்று:
 // கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது 
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும்  ழகரம் உண்டு
//

எனது மறுமொழி:
கன்னடத்தில் ஒரு காலம் வரை ழகர, றகரங்கள் இருந்து பின்னர் மறைந்தன. தெலுங்கில் நானறிந்தவரை ழகரம் இல்லை.
கடம்ப எழுத்துகள், அல்லே-கன்னடம், தற்காலக் கன்னடம், அல்லே-கன்னடத்தில் இராட்டிர கூடர்களின் தாக்கங்கள்,
பழங்கன்னடமான அல்லே-கன்னடம் ஏன் கன்னட-தெலுங்கு வரிவடிவமாகச் சொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஆயாமல்
வெறுமே கோகலி/ளி யை அங்கே சுட்டிக் கொண்டிருப்பதில் எந்த ஆய்வும் இருக்கமுடியாது.
4) தங்கள் கூற்று:

// கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார் //

  எனது மறுமொழி:

ஐயா, இங்கே இரண்டு செய்திகளை நான் கூறவேண்டும்.
ஒன்று - பெல்லாரிக் கோகலியைத் தாங்கள் மறுக்கவொண்ணாத ஆதாரங்களுடன் நிறுவினாற்றான் இவ் அடி பற்றி மேலும் பேச முடியும்.
அதுவரை இதைப் பேசிப்பயனில்லை.
இரண்டு - கோகலி நாட்டை ஆட்சி செய்த ஒருவரைக் குருவாகக் கொண்டவரை மாணிக்கவாசகர் குறிக்கிறார்
என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு ஐயா.
மாணிக்கவாசகரின் குரு, ஆட்சி செய்த மனிதனல்ல.
"அரு பரத்தொருவன் அவனியில் வந்து
 குரு பரனாகி அருளிய பெருமை...."   
என்று போற்றித் திருவகவலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவதைக் காண்க.
"நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன்!
 தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவபெருமான்
 தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்...."
 என்று வேசறவில் அறிவிப்பதைக் காணக.
  "அன்பராகி மற்று அருந்தவம் முயல்வார்,
  அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகாம்,
  என்பராய் நினைவார்,
     எனைப் பலர் நிற்க, "இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்?"  "
  என்று உருகி உருகி இந்தக் கேள்வியைக் கேட்பார் செத்திலாப்பத்தில். இன்னும் இது போலப் பல இடங்கள் உண்டு.
குரு, சீட உறவையும், தன்மையையும் ஆழச் சொல்லித்தருவது திருவாசகமும் தேவாரமும்.
என்னால் இப்படியான நேரடி அறிவிப்புகள் அல்லாத பல நுண்மையான குரு-சீடர் பண்புகளையும்
திருமுறைகளில் எடுத்துக் காட்ட முடியும்.
ஆகவே, மாணிக்கவாசகரைப் பற்றியும் அவரின் குரு பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல்
திருவாசக ஆய்வுகளில் புகுவார்க்கு எண்ணியது கிடைக்காது என்பதை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும்.
அருள்கூர்ந்து இப்பொருளையேனும் தாங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
5) தங்கள் கூற்று:

//

தூரம் பார்க்கவேண்டாம் என்றால் உலகம் முழும் பார்க்க எனக் கொள்வது ஏற்புடையதல்ல 
madras என்று அமெரிக்காவில் 6 இடங்கள் உள்ளன அவற்றை நாம் எப்போதாவது நாம் பேசும் madras  கொள்வோமா ? 

மேலும் அவையெல்லாம் பழங்கால( எட்டாம் நூற்றாண்டு)  ஊர்கள்  என சொல்ல நினைகின்றீர் களா?
//

எனது மறுமொழி:
 ஏன் என்பதுதான் எனது கேள்வி. மதிரையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கோகலிக்கு எந்த ஓர் ஏரணமும்
இன்றிச் செல்கையில், இன்னும் கொஞ்ச தூரம் போய் மாராட்டியத்தில் ஆயலாமே?

மாராட்டியத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. கருநாடகத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. மாராட்டியத்தில் இருந்து
வந்த இராட்டிரகூடர்கள்தான் கருநாடக-பெல்லாரியை ஆண்டார்கள் என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரச் சுட்டிகளே
சொல்கின்றன?
நான் ஏன் "இந்த இரண்டு கோகலிக்கும் தொடர்புண்டு என்று கருதக் கூடாது?" - அப்படியென்றால், கருநாடகக் கோகலியை 
பரிந்துரைப்பவர்கள் இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை என்று சொல்ல வேண்டுமல்லவா? அதுபோல மற்ற கோகலிகளுக்கும்
தொடர்பில்லை என்றும் அவற்றின் காலக்கட்டம் என்ன என்றும் அவர்கள்தான் சொல்லி நிறுவவேண்டுமே அன்று அடியேனின்
வேலை இல்லை. வெறும் ஒன்னரைப் பக்கத்தில், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று யாரும் ஆராய்ச்சி செய்து
சொல்லி விடவில்லை. அதனால் இந்தக் கருத்தைப் பரப்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டியது இது.
6) தங்கள் கருத்து:

//

மன்ன னின்  அமைச்சர் குதிரை வாங்க அனுப்ப ப பட்டார் பின்வரும் கோயில் கட்டினார் குதிரை நரியகியது 
 என்பதெல்லாம் கற்பனையில் விளைந்த புராணக்கதை அய்யா எங்காவது அவர் அமைச்சர் என திரு  வாசகத்தில் உள்சான்று உள்ளதா? 
நரி பரியாகியது  அப்பர் கூட ப்பா டுகிர்ரர் ஏனோ அவரை இனத்து புராணம் ஏதும் பாடப்படவில்லை 
வி வேக முள்ள ஆய்வாளர்   வெறும் கட்டுக்கதைகலான  புராணங்களில் நம் புவதில்லை
//
 எனது மறுமொழி:
  புராணம் என்றால் என்ன?
  புராண, நய/நயா என்பர் வடக்கே. உருதிலும், இந்தியிலும் இந்தச் சொல்லாட்சியை நிறைய கேட்டிருக்கிறேன்.
  புராண என்றால் பழையது. நயா என்றால் புதியது.
  புராணக்கதை என்றால் பழங்கதை. புராணம் என்றால் பழமை. இவ்வளவுதானே!
  மாணிக்கவாசகரே "புராண காரண!" என்பார்.
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால் - பழமை எல்லாமே கட்டுக்கதைகள் என்று கருதுகிறீர்களா?
  பழையன எலலாம் கட்டுக்கதை என்றால், வரலாறு, தொன்மம் என்ற ஒன்றையுமே ஆராய்ச்சி செய்யத் தேவையில்லையே?
  கோகழி எங்கிருக்கிறது என்று கூட நோக்க வேண்டியதில்லையே?
  பழைமை எல்லாம் கட்டுக்கதை என்றால் விவேக-ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் "புதுமைகள்" மட்டும் கட்டாத கதைகளா?
  என்ன ஐயா - ஞாயமே இல்லாமற் சொன்னால் எப்படி :-)
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால், இராமாயணம், மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகளா?
  ஏன் சிலப்பதிகாரத்தில் எத்தனையோ புராணக் கதைகள் உண்டு. அவற்றையெல்லாம் விட்டெறிந்து விடலாமா?
  மன்னிக்க - தங்களின் இந்த வாதம் ஏற்புடையது அல்ல.
  சிலப்பதிகாரத்தில் "வியன்நிலம்  ஆண்ட  ஒருதனிச்  செங்கோல்  ஒருமகன்  ஆணையின்..." 
  என்று இளங்கோவடிகள் சொல்வார். வியன்நிலம் என்பதற்கு ஒலிப்பின் அடிப்படையில்,
  வியன்னா என்றும் வரும்.

  வியன்னாவை ஆண்ட சிறந்த அரசன் ஒருவனை இளங்கோவடிகள் இங்கே குறிப்பிடுகிறார் என்று சொன்னால்
  எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கருநாடக-கோகலி ஆய்வு.
7)   தங்கள் கூற்று:
//

இங்கும் பெருந்துறை மையமாகக் கொண்ட புரானக்கதையிளிருந்து தானே பேசுகிறீர் 
நா ன்  முன்பு ஓர் மடலில் காட்டிய வரி இப்போது நினைவிற்கு வருகின்றது 
பாண்டியன் தனக்கு பரிமா விற்று 
ஈண்டுகனகம்  இசையப்பெராது 39கீ ர்த்தித் திருவகவல் 
பாண்டியனுக்கு  பரிமா விற்றார் வாங்கப்போகவில்லை 
//
    எனது மறுமொழி:
 இங்கே திருவாசகம் பற்றிய மிகத்தவறான புரிதலை தங்கள் எழுத்துகள் காட்டுகின்றன.
 மன்னன் ஆணையால் குதிரை வாங்கப் பெருந்துறை சென்றவர் மாணிக்கவாசகர். 
 மாணிக்கவாசகர் குதிரைகளை வாங்காமல் பணத்தையெல்லாம் கோயில் கட்டவும், சிவமயக்கத்திலும்
 கழித்துவிட, மதிரைக்கு அழைக்கப்பட்டு அரசனால் தண்டனைக்குள்ளாகிறார். அப்போது,
 மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டு, குதிரை வாணிகன் வேடமணிந்து, சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி
 அந்தப் பரிகளை மன்னனிடம் கொண்டுசென்று அணிவகுத்து நிற்க வைக்கிறார்.
 ஆகவே,
 பாண்டியனுக்காக பரிமா வாங்கப்போனவர் மாணிக்கவாசகர். அவர் வாங்கவில்லையதனால்
 பாண்டியனிடம் பரிமா விற்றவர் சிவபெருமான்.
 இதுதான் திருவாசகம் முழுதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 மேலும், "ஈண்டு கனகம் இசையப் பெறாது" என்றது, 
சாத்தாய் வந்த சிவனிடம் குதிரைகளைப் பெற்றுக் கொண்ட பாண்டியன்,
குதிரைகளுக்கான பணத்தைச் சிவனிடம் கொடுக்க (சிலர் அதிகப்படியான குதிரைகளுக்கு என்று சொல்வர்)
 சிவன் அதை வாங்க மறுத்து விடுகிறார். இதைத்தான் அவ்வரி சொல்கிறது.
  எப்படி வாங்குவார்?. இவர் நரிகளைத்தானே பரிகளாக்கி நாடகம் நடத்தினார் :-)
  அதுதானே அந்தத் திருவிளையாடல்? மறுநாள் எல்லாப் பரிகளும் நரியாகி ஊளையிட வைக்க இருந்தவர் பணம் வாங்குவாரா?
  அப்புறம் மதிரை மக்களுக்கெல்லாம் அடி வாங்கிக் கொடுத்தத் திருவிளையாடலுக்கும் இதுதானே அடிப்படை! 

  8) தங்கள் கூற்று:

    //   ஏறி எனும் சொல் இருக்கும் போது எப்படி எல்லையாகும்  //
   //   குடநாடு என்றால் குடகு (கர்நாடகம்) அல்ல என்கிறீர்களே மிசை என்பது உயரத்தில் உள்ள இடத்தை அல்லவே குறிக்கும்  //
  எனது மறுமொழி:

   என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஐயா,
   குட என்பதைப் பற்றி நான் விளக்கி விட்டேன். அதற்கு மேல் சொல்ல வேறொன்றுமில்லை.
   கழி, மிசை, வரை, ஏறி போன்ற சொற்கள் தங்களை வாட்டுகின்றன. கழி என்ற சொல்லை சங்க இலக்கியங்களில்
   இருங்கழி, பெருங்கழி, கொடுங்கழி, வாங்குகழி போன்ற எத்தனையோ சொல்லாட்சிகளில் "துறை" என்ற பொருளில் காணலாம்.
   அதை விரித்தல் தேவையில்லை என்றே விடுக்கிறேன்.
   வரை என்பதற்கு "இடம்" என்ற பொருளுமுண்டு. வரை என்றால் மலை என்று கருதவேண்டாம்.
   இன்னுஞ் சொல்லப்போனால் - நீங்கள் சொன்ன பொருள்களில் "மூங்கில்" என்ற பொருளைக் குறித்தீர்கள்.
   இறைவன் பெருந்துறையில் உள்ள ஒரு மூங்கிலில் ஏறி நின்று மின்னொளி காட்டினான் என்று கூடப் பொருள் கொள்ளலாமே!
   வரை என்றால் மலைதான் என்ற நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிச் சிந்தித்தால் நான் சொல்லவருவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
   இங்கே ஏறுதல் என்பது எழுதல், எழுந்தருளுதல் என்பதாகும். பத்தி இலக்கியம், மாந்தக் காதல் இலக்கியம், புற இலக்கியம் போன்ற 
   ஒவ்வொன்றிலும் பொருளின் தன்மைகளில் மாற்றம் உண்டு என்பதை நீங்கள் அறியதாவரல்ல.
   ஒருத்தன் மேல் வேலன் வந்து ஏற, வேலனாட்டம் ஆடினார் என்றால், அந்த ஆள் மேல் முருகன் ஏறியா நிற்கிறான்.
   ஏறி விளையாடு என்ற வழக்கில் பேசுகிறோமே - அங்கெல்லாம் உயரம் வருவதில்லை என்பதையும் காணவேண்டும்.

   "குடநாடதன் மிசை" என்பதை குடகு மலைக்கு மேலே என்று நீங்கள் படிக்கிறீர்கள்.
   அது அல்ல என்பதும் குட என்பதும் திசையைக் குறித்தது என்பதும், மிசை என்பது "அந்த இடத்தில்"
   என்றும் பொருளாகும்  என்பது என் கருத்து. நிலத்தில் நடக்கிறோம். நிலமிசை நடக்கிறோம் என்று சொல்வதன்
   தன்மையே அங்குப் பொருந்தும்.   "சிந்துநதியின்மிசை நிலவினிலே"  என்ற பாரதியாரின் சொற்களையும் காண்க.
   
    
   9)

 //
கொங்கு நட்டு பெருந்துறை குடாநாட்டிலிருந்து வரும் குதிரைகளின் இறக்குமதியாகும் வழியில் உள்ள ஓர் ஊர் எனல்லம் 
//
கோகழி - கருநாடக நாடு, பெருந்துறை-கொங்கு நாடு என்ற நிலையில் இருந்து நீங்கள் மாறமாட்டீர்கள். தமிழ்நாட்டில்
ஆராய்ச்சியாளர்கள் பெருகி, நல்ல ஆராய்ச்சி மன்றங்கள் உருவாகி நமக்கு நல்வழி காட்டுதல் வேண்டும்.

//

கட ல் வழி  வந்த குதிரை என எங்காவது உள்ளதா
கிடைத்தால் உள்நாட்டுக் குதிரைகளை வங்கக் கூடாதா? 
//
ம்ம்ம்ம்... நான் போய், கோச்சடையான் படம் பார்க்கப் போகிறேன். அதில் கூட குதிரைகள் அரேபியா/பெர்சியா பகுதியில் இருந்து
பெருவாரியாகக் கப்பலில் இறக்குமதியானதை ஒத்துக்கிட்டாங்களாம் :-))

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
========================================================================




Friday, May 16, 2014

தேர்தல் 2014: மோடியும் வெற்றி, பெருநிறுவனங்களும் வெற்றி!


பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக, எடுபிடிகளாகச்
செயல்பட்ட காங்கிரசு அரசின் கொள்ளைகள், நிர்வாகக் கேடுகள்,
அவர்களுடன் கூட்டணி வகித்தவர்களின் வெட்கங்கெட்டச் செயல்பாடுகள்
ஆகியவற்றால் மக்கள் வெறுப்புற்றனர் என்பது உண்மைதான்.


இயல்பாகவே, மாற்றத்தைத் தேடுபவர்களின் தாக்கம் இருந்ததும்
உண்மைதான்!

ஆனால், இவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாக உருக்கொடுப்பவர்கள்,
இந்தியாவின் பெருநிறுவன முதலாளிகளும், பன்னாட்டுப் பெருநிறுவனங்களும்தான்.

2004ல் காங்கிரசு சிறுபாண்மை ஆட்சி அமைத்த பின்னர், 2009ல் சற்று வசதியான சிறுபாண்மை ஆட்சி நடத்த உதவியாக இருந்தது, இத்தாலி சோனியாவும் பஞ்சாபு சிங்கம் மண்மோகனும், பெருநிறுவனங்களுக்கும்,
வீழ்ந்து கிடந்த அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரத்துக்கும் பேருதவியாக
இருந்ததுதான். 2009ல் காங்கிரசு ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தல் முடிவுகள் சொன்னபோது, இன்றைக்குப் பங்குச் சந்தைகள் பேரெழுச்சியாக
எழுந்ததைப்போன்றுதான் அன்றும் எழுந்தன.

கடந்த வருடத்தின்  செப்புடெம்பர், அக்குடோபர் மாதங்களே இன்றைய தேர்தல் முடிவுகளை தீர்மானித்தன. பா.ச.கவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்வைக்கப்பட்ட காலம் அது. முதலாளிகளின் முன்னார் நின்ற வேட்பாளர்கள், மோடியும், இராகுலும். இதில் முதலாளிகள் மோடியைத் தேர்ந்தெடுத்தனர்.

அன்று முதல்,  தேர்தல் களத்தில் அயராது வேலை செய்தவர்கள் முதலாளிகளே. நான் சொல்வதில் ஐயம் இருப்பின், நீங்கள் வணிக உலகின் முகமாக இருக்கும் பங்குச் சந்தை நிலவரத்தைக் காணலாம்.

கடந்த செப்புடெம்பர் துவக்கத்தில், பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு, 5100+ அளவில் வீழ்ந்து கிடந்தது.  இந்தியப் பண மதிப்பும் பாதாளத்திற்குச் சென்று 69 உரூவாயை எட்டியது.

இன்று, முதலாளிகளின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அதே நிப்டி குறியீடு 7500+ தொட்டது. டாலருக்கு எதிரான இந்திய பண மதிப்பு
உயர்ந்து 58.5ஆனது.

ஆகவே, காங்கிரசு கூட்டணியின் கொள்ளை, நிருவாகக் கோளாறுகள், விலைவாசி என்ற அனைத்தும் மோடியின் குளத்தில் நீரைச் சுரந்தன
என்றாலும், அதனை அலையாக மாற்றியவர்கள் பெருமுதலாளிகள் ஆவர்.


இந்தக் குளத்தில் இவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீன் பிடிப்பர்.

இயற்கை வளம், கனிம வளம் ஆகியவற்றைக் காப்பாற்ற எண்ணுபவர்களுக்குச் சோதனைகள் அதிகமானால் அது வியப்புக்குரியதல்ல.

அன்புடன்
நாக.இளங்கோவன்







Thursday, May 15, 2014

2019 - சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி முடிவானது!

2014-தேர்தல் நா.ம தேர்தல் முடிவைப் பார்த்ததும்,
"வருகின்ற 2019 ச.ம தேர்தலில், சிங்கங்களுடன் சேர்ந்து
மாம்பழம் புசித்து, முரசு கொட்டுவோம்" என்று தி.மு.க
முடிவு செய்திருக்கிறது.

பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட
தி.மு.கவின் புரட்சிகரத் திட்டம் இது.

தொகுதிவாரியாக, நோட்டாவைவிட மிகக் குறைவாக, சில ஆயிரம்
வாக்குகளே பெற்றிருக்கும் கை கட்சியை, ச.ம தேர்தலில்,
தி.மு.க தனது அல்லக்கையாகக் கூடக் கருதாது என்றும் முடிவெடுத்திருக்கிறது.

 அன்புடன்
நாக.இளங்கோவன்

தேர்தல்-2014: வரவேற்கப்படவேண்டிய தனிப்பெரும்பான்மை

மிகப்பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய நடுவணரசு தனிப்பெரும்பான்மையுடன் அமைகிறது. இது மிகவும்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதும்போது பா.ச.க
சுமார் 280 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. ஒரு வேளை சில
இடங்களால் பெரும்பான்மைக் குறை ஏற்பட்டாலும், அது பெரிய
விதயமாக இருக்காது.

1) கூட்டணி ஆட்சி என்ற போது பரவலான மகிழ்ச்சி இருந்த காலம் உண்டு. அது மாநில மக்களின் தேவைகளை நடுவணரசில் எடுத்து வைக்கும் என்று
வெகு எதார்த்தமாக சிந்தித்த அப்பாவி மக்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் - பெரிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்த மாநிலக் கட்சிகள், தமது மக்களின் உரிமைகளை, நலனை, மானத்தை முன்னெடுத்து வைப்பத்ற்குப் பதிலாக, பெரிய கட்சியின் எடுபிடியாக, அவர்கள் கைகளில் இருந்து சிந்தும்
எச்சிலுக்கு அலைந்த கதையைத்தான் காணமுடிந்தது.

2) இந்தியாவில் பெயர் சொல்லக்கூடிய 30 கட்சிகளேனும் இருக்கின்றன. இவற்றுள் ஒரு கட்சி பெரும்பாண்மை பெறும்போது, மீதி இருக்கும் கட்சிகள், ஆளுங்கட்சியின் தவறுகளை மிகவலுவாக எதிர்க்க முடியும். ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாமல், 15 கட்சிகளோடு கூட்டணி போடும்போது,
நடக்கும் எந்தத் தவறுகளையும், ஊழல்களையும் யாரும் தட்டிக் கேட்க முடியாமல் போனது. அனைத்து கட்சிகளும் கொள்ளையில் கூட்டணி போட்டு, இந்திய வளங்களை தங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்தன.
அப்படிக் கொண்டுபோகும் போது, சில கட்சிகளின் கைகளில் இருந்து நழுவி விழுந்தவை மாநிலங்களுக்குச் செய்த நன்மையாக அக்கட்சிகளால் சொல்லப்பட்டது.

இந்தக் கேவலமான நிலையை பா.ச.கவின் தனிப்பெரும்பான்மை மாற்றியிருக்கிறது.

பா.ச.கவின் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பது வேறு விதயம். ஆனால், அது தவறு செய்யும் வேளைகளில் தட்டிக் கேட்க, நிறைய கட்சிகள் இருக்கின்றன என்பதைத்தான் நான் மிகவும் வரவேற்கிறேன்.

ஆகவே, இதுகாறும் கூட்டணி போதையில், மாயையில் இருந்தவர்கள் மாற்றிச் சிந்திக்கத் துவங்குவார்கள் என்று கருத இடம் இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்


Tuesday, April 08, 2014

தமிழ் இணைய உலகில், தமிழ் பற்றிய உரையாடல்களில், யாராவது சிக்கலான கேள்விகளைக் கேட்டுவிட்டால், அவரை நீ என்ன முனைவரா என்று கேட்டுக் கேலி செய்வார்கள். இந்தக் கேலியை திரு.நா.கணேசன் அடிக்கடி செய்வார். என்னையே இரண்டு மூன்று முறைகள் இப்படிக் கேலி செய்திருக்கிறார். இம்முறை அதற்குப் பதில் சொன்ன பதிவுதான் இது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
=======================================================================

//

2014-04-08 20:02 GMT+05:30 N. Ganesan <naa.ganesan@gmail.com>:

............  இப்பொழுது தாங்கள் முனைவருக்கு எழுதிய ப்ராமி லிபித் தோற்றம் பற்றிய மறுமொழி கண்டேன். தாய்லாந்து மனைவியுடன்
அங்கே ஒரு வனஞ்சூழ்ந்த வீட்டில் கடைசிநாட்களில்

//

அன்னை அபிராமியைப் பார்த்து,
முனிவர் கேட்டார்!

"பிராமி.....பிராஅமீ .... எத்தனை பிராமியம்மா?" 
(இராகம் தெரியாதவர்கள் படித்துக் கொள்ளுங்கள் - தெரிந்தவர்கள் பாடிக்கொள்ளுங்கள்)

அன்னை சொன்னது:

பிராமியானது மூன்று. 

1) பிராமி
2) அசோகன் பிராமி
3) துபாசி பிராமி

இரண்டு புரியுது - இன்னொன்று? - இது முனிவர்:

"இது புரியாமல் உன் தமிழும் உன் தமிழ்நாடும் எங்கே விளங்கப்போகிறது?!" - என்பதாலும்,
எத்தனைமுறை சொன்னாலும் அது உனக்கும் தமிழ்நாட்டுக்கும் புரியப்போவதில்லை என்றாலும்
இதை ஒருமுறை சொல்லி வைக்கிறேன் என்று அன்னை சொன்னபோது முனிவருக்கு ஒன்றும்
புரியவில்லைதான்.

"துபாசியார் எல்லாம் பெரியவா - 
 அவாளை யாரும் எதும் செய்யமுடியாது .....
பொள்ளாச்சியைப் பார்க்கலையோ....."
(இங்கேயும் இராகம் புரிந்தால் போதும்...)

பொள்ளாச்சில என்ன?

ம்ம்ம்....அதுவும் தெரியாதா?

இப்பல்லாம், 
"நமோ தேநீர்க்கடை" போல,
பொள்ளாச்சியில எங்கே பார்த்தாலும் துபாசி பிராமிக்கடை"ன்னு
ஏகப்பட்ட கடைகள் திறந்திருக்காங்க.

நமோ தேநீர்க்கடை எல்லாம் சுண்டைக்காய் அளவென்றால் -
துபாசி பிராமிக்கடை ஒவ்வொன்றும் பரங்கிக்காய் அளவு இருக்கும்.

து.பி கடைகளெல்லாம் ஒன்னாச் சேர்ந்து - துபாசிகள் சங்கம்னு
ஒன்னு ஆரம்பிச்சிருக்கான்னா பார்த்துக்கோயேன்.

இவங்க பிழைப்பே, இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு,
எழுத்து, சொல், பேச்சு, வழமை எல்லாத்தையும் மாற்றி
புறத்தாருக்குப் போட்டுக் கொடுப்பதுதான். 

"புறத்தார்க்குப் புழுக்கைப்பணி செய்தவர்
 பூங்கழல்கள் சுமப்பாய் போற்றி" - என்று மந்திரித்து
ஆசிவழங்கியபின்னரே அந்தச் சங்கத்தில் சேரமுடியும்.

சரி இப்ப சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

சங்கம் இப்ப தாய்லாந்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது.

தாய்லாந்து மன்னர், வெற்றிலைபாக்கு போடும்போது
கூடவே கிரந்தத்தையும் சேர்த்துப் போடுவாராம்!

அதற்குத் தோதாக, கிரந்தத்தை வெற்றிலை பாக்குடன் 
மடித்துத் தரும் திருப்பணியை சங்கம் செய்து கொண்டிருக்கிறது.

அட கிரந்தத்தை ஏன் வெற்றிலை பாக்குல...........?

மகனே, வெற்றிலை பாக்கைக் குதப்பும்போதும் தாய்லாந்து மன்னர்
தேவாரம் பாடுறார் என்று முன்னாலேயே சங்கம் அவிழ்த்து விட்டுச்சே அறியமாட்டாயா நீ?

( என்னவோ, அபிராமி அந்தாதியை எந்த மன்னருக்குக் காவு கொடுக்கப்போகிறார்களோ
என்று நானே பயந்து போய் கிடக்கேன்.. மனசுக்குள்ளேயே அன்னை அபிராமி சொல்லிக்கொண்டாலும்
கண்களில் ஒரு சோகம் இழையோடியதை முனிவர் கவனித்தாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லைதான் )

வெற்றிலை பாக்கை குதப்பும்போது, அதுவும் மன்னர் குதப்பும்போது விதவிதமான
ஒலிகள் வருமே - அதுக்குப் போய் ஏன் கிரந்தத்தைப் பழி வாங்குறாங்க.

உண்மைதான் - "உலக ஒலிகள்" மொத்தமும், 
வாய்நிறைய வெற்றிலைபாக்கு போட்டுப் பாடினால், வரும்தான்.
ஆனாலும், இப்போது தமிழியையும் கிரந்தத்தையும் மட்டும் வெற்றிலை  பாக்கில் மடித்துத் தரும்
அருந்தமிழ்ப்பணியை மட்டும் சங்கம் மேற்கொண்டிருக்கிறது என்று அறிவாயாக!

அம்மா, தாயே, - மன்னர், அதுவும் புறநாட்டு மன்னர்,  
வெற்றிலை போட்டுக்கிட்டு தேவாரம் பாடறது அவ்வளவு தேவையா?
அதுக்கெல்லாம் தமிழை............

"மகனே - இதுதான் துபாசிகள் சங்கம்" - மேலும் மேலும் கேள்விகள் கேட்டு
என்னை பயமுறுத்தாதே. போய்த்தொலை.

போகும் முன் ஒன்று தெரிந்து கொள். "பொள்ளாச்சிக்கும் பெயர் மாற்றப் போறாங்க".

என்ன பேரம்மா?

அதை நீ தியானத்தில் கண்டு கொள்வாய்!

அம்மை சென்றதும்,  முனிவரின் ஆழ்ந்த தியானத்தில்,
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தின் பெயரில் "பொள்ளாச்சி" என்ற சொல்லை
யாரோ தார் கொண்டு அழிக்க, இன்னொருவர், "துபாசிப்பேட்டை" என்று
எழுதிக் கொண்டு இருந்தார்.
அன்புடன்
முனிவர்

Sunday, March 30, 2014

தமிழ்க் கணிமைச் சிந்தனைகள் - மடல் 1

கணி(னி)த்தமிழ் வளர்ச்சி மாநாடு (இரண்டாம்) , 30-03-14 அன்று சென்னை-மாநிலக்கல்லூரியில் நடந்தது. திசம்பர்-2012ல் முதல் மாநாட்டை நடத்திய பேரா.தெய்வசுந்தரம் அவர்கள்  தொடர்ந்து நடத்தும் இரண்டாம் மாநாடு இது.
இம்மாநாட்டில், தமிழ்க் கணிமை வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள்-திட்டம் பற்றிய ஆய்வரங்கு முனைவர் இராம.கி அவர்களின் தலைமையில் நடந்தது. தமிழியல், மொழியியல், கணியியல், பிற துறைகளைச் சார்ந்த பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.


தமிழ்க் கணிமை சார்ந்த, இரண்டு அரசுத் துறைகளின்  செயலர்களும், துறை இயக்குநர்களோடு கலந்து கொண்டு, "இம்மாநாட்டின் தீர்மானங்களை, திட்டமாக ஆக்கிக் கொடுங்கள், செயல்படுத்துகிறோம்" என்று உறுதி அளித்து
உரையாற்றினர்.

கீழ்க்கண்டவை அம்மூன்று தீர்மானங்கள்:

1.   கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்மொழித்தொழில்நுட்ப மையம் ஒன்று தமிழகத்தில் தமிழக அரசால் நிறுவப்படவேண்டும். நடுவண் அரசின் நிதிநல்கையும் அதற்குப் பெறவேண்டும்.

2.   மேற்குறிப்பிட்ட தமிழ்மொழித்தொழில்நுட்ப மையமானது தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வுநிறுவனங்களில் இயங்கும் தமிழ்மொழித்துறைகள், மொழியியல் துறைகள், கணினியியல் துறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.   மின்-வணிகம், மின்-ஆளுமை, மின்-கல்வி, மின்-நூலகம் போன்ற பல துறைகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். கணினித்தமிழின் பயன்பாட்டு எல்லை விரிவாக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையும் தகவல்தொழில்நுட்பத்துறையும் இணைந்து,  வகுத்துச் செயலாற்றவேண்டும்,

இது இம்மாநாட்டின் முக்கிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. இம்மாநாட்டை நடத்த பேரா.தெய்வசுந்தரம் கடுமையாக உழைத்து, பெருமுயற்சிகளைச் செய்திருந்தார்.

இந்த மாநாட்டின் "தமிழ்க் கணிமைக் கொள்கைகள், திட்டங்கள்" பற்றிய ஆய்வரங்கில் நான் ஆற்றிய உரை, தமிழ் அறிதியியல் (Thamizh Informatics) என்ற கணிமைத் துறை பற்றியது. அவ்வுரை அல்லது அதன் கருவை கீழே காணலாம்.

இத்தலைப்பில் ஏற்கனவே மிக விரிவாக 2 கட்டுரைகளை வேறு வேறு கருத்தரங்கங்களில் படைத்திருக்கிறேன். அவற்றின் "மிகச் சுருக்கம்", என்று இதனைக் கருதலாம்.

====================================================================

            “தரவு என்பது சொத்து” (Data is an Asset) என்ற கருத்தியல் உலகில் நிறுவப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு நிறுவனத்திற்குச் சொத்துகள் என்றால், நிலங்கள், கட்டடங்கள், பணம், மனித வளம் போன்றவை என்ற காலம் போய், தரவுகள் மிக முகன்மையான “சொத்து” என்ற நிலையைக் கணி-ஊழி வலுவாக நிறுவிவிட்டது.

            தமிழ்மொழி, “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றும் “எண்ணென்ப எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்றும் சொல்லியிருக்கிறது. உலகம், எண்ணையும் எழுத்தையும் கண்ணாக மதிக்கிறது. உலகெங்கும், அவரவர் மொழியில், சொல்லாகிய, பொருளாகிய  எண்ணும் எழுத்தும்தான் தரவாகி(data) அதில் இருந்து  தகவல்களாகப் பரவி, சொத்தாக மதிக்கப்படுகிறது.

            தமிழ்த் தரவுகள்(Thamizh Data) எனும்போது, அவை யாவை? அவற்றின் பரப்பு என்ன? – என்று பார்த்தால், அது மிகப் பெருமாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழ் மொழியின் பண்டைய, இன்றைய “ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும்” தரவாகக் கருதி அவற்றை ஏழு கூறுகளாகப் பிரிக்கலாம்.

·         மரபு இலக்கியங்கள்
o   சங்க காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான செவ்வியல் மரபு இலக்கியங்கள்
o   தொல்காப்பியம் முதல் அனைத்து இலக்கணங்கள்
o   பழந்தமிழ் உரைகள் தொடங்கி20ஆம் நூற்றாண்டு வரையிலான உரை இலக்கியங்கள்
·         தொல்பொருட் தரவுகள்
o   கல்வெட்டுகள்
o   செப்பேடுகள்
o   மண்ணேடுகள்
o   நாணயங்கள்
o   ஓவியங்கள்
o   கலங்கள் போன்ற பிற
·         ஓலைச்சுவடிகள்
o   தமிழக அரசு நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   பல்கலைக் கழக நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   பிற மாநில நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   இலண்டன், பிரான்சு போன்ற வெளிநாட்டு நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   திருக்கோயில் மடங்களில் உள்ள ஓலைகள்
·         அகராதிகள்
o   தமிழ்-தமிழ் அகராதிகள்
o   தமிழ்-பிறமொழி அகராதிகள்
o   கலைச்சொற் களஞ்சியங்கள்
o   வேர்ச்சொல் அகராதிகள்
o   துறைசார் தமிழகராதிகள்
·         ஆய்வுத் தரவுகள்
o   தாட்சுவடிகள்
o   ஆராய்ச்சி இதழ்கள் (இலக்கிய, தொல்பொருள், வரலாறு)
o   ஆராய்ச்சிப் பட்டப்  படிப்புத் தாட்கள்
o   ஆராய்ச்சி நூல்கள், மலர்கள் (இலக்கிய, தொல்பொருள், வரலாறு)
·         துறைசார் அறிவியற் தரவுகள்
o   தமிழ் அறிவியல் நூல்கள்
o    தமிழ்க் கலை நூல்கள், இலக்கியங்கள்
o   தமிழ்ப் பொறியியல் நூல்கள்,
o   சட்டம், நீதி, ஆட்சியியல் நூல்கள்
o   மருத்துவ நூல்கள், படைப்புகள்
o   தமிழ்க் கணிமை சார்ந்த படைப்புகள்
o   பிற மொழிகளில் இருந்து தமிழுக்குப் பெயர்த்த பல்துறைப் படைப்புகள்
·         பிற தரவுகள்
o   தற்காலத் தமிழ்ப் படைப்புகள் (கதை, கவிதை, பேச்சு முதலியன)
o   தற்காலக் கலைப் படைப்புகள்(திரை, நாடகம் முதலியன)
o   இணையக் குமுகத் தரவுகள் (Social network data)

இப்படித் தமிழ்த் தரவுகளின் பரப்பு மிகப் பெரியதாக குவிந்து கிடக்கிறது.
        

அவற்றின் இன்றைய நிலை என்ன?

1.        பல கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், பல்துறைகள், உள்நாடு, வெளிநாடு எனப் பலவாகப் பிரிந்து கிடக்கின்றன.
2.        தாள், ஓலை, கல்வெட்டுகள், செப்பேடுகள், படங்கள், பல்லூடகம் போன்ற பல வடிவங்களில் இருக்கின்றன.
3.        ஆங்காங்கு, சிறு சிறு திட்டுகளாக இருப்பதால் மாணவர், ஆய்வாளர், மக்கள் அணுக முடியாமலும், பயன் பெற முடியாமலும் உள்ளனர்.
4.        மின்மயமாக்கப் பட்டு இணையத்தில் கிடைக்கும் இலக்கியங்களில் பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. அது துல்லியமான படிப்புக்கும் ஆய்வுக்கும் பயன்படுவதில்லை.
5.        கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள் போன்ற தொல்பொருள்களின் மின் தடயமே காணப்படவில்லை.
6.        பழம் ஓலைச் சுவடிகளில் 25% எண்ணிக்கை, நூலகங்களில் மீட்க முடியா நிலைக்கு அழிந்து போயிருக்கின்றன.
7.        மாணவர்களின் ஆய்வுத் தாள்களும், ஆய்வாளர்களின் தாள்களும் ஒருங்கிணைப்பற்று அனைவரும் எளிதில் அணுகமுடியாமல் இருக்கின்றன.
8.        தரவுகளுக்குள் உள் தேடல், ஆய்வு செய்வதோ, ஓர் இலக்கியச் செய்திக்கும் கல்வெட்டுச் செய்திக்கும் உறவு காணுதலோ இன்று முடியவில்லை.
9.        அகராதிகளில் சிலவே இணையவழி கிடைக்கின்றன. பெரும்பாலானோர் பயன்படுத்தும் தமிழகராதி வெளிநாட்டவராலேயே மின்மயமாக்கப் பட்டிருக்கிறது. அவையும் இற்றை நிலையில் இல்லை.
10.     பிறமொழிகளுக்கு இருப்பது போன்ற அடிப்படையான எழுத்து, சொல், குறிகளுக்கான இணவு (Letter, Word & Sign Concordance)   என்ற மிக அடிப்படைத் தேவை கூட இன்னுந் தமிழுக்கு இல்லை.
11.     பிறமொழிகளுக்கு இருப்பது போன்ற மொழியியல் ஆய்வுத் தளம் இன்னும் ஏற்படவே இல்லை.
12.     கணிவழியே சொடுக்கில் எடுக்கக் கூடிய இணவு, அடைவு, எழுத்து சொல் ஆய்வுகளை எல்லாம் தமிழறிஞர்கள் இனியும் ஏன் எண்ணி எண்ணித் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

         தமிழின் இந்தச் சூழல், தமிழ்க் கல்வி, தமிழ் ஆய்வு, தமிழ்ப் பயன்பாடு, தமிழ்ப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் வளர்ச்சியின் மேல் பெருந் தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பரந்த தொன்மையும், தொடர்ந்த வளர்ச்சியும் இருக்கின்ற காரணத்தால் இவற்றிற்குத் திறன் வாய்ந்த ஒருங்கிணைப்பும் பாதுகாப்பும் அவசியமாகிறது.

            கணித்துறையில், அறிதியியல்(Informatics) என்ற உயர் கணிமை நுட்பம், பல்வேறு பொதின/வணிகத்(Business) தரவுகளையும் ஒருங்கிணைத்து, பாதுகாத்து, ஒரு நிறுவனத்தின் தொடர்ந்த கணிமைப் பயன்பாட்டுக்கும், ஆய்வு வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. அந்நுட்பத்தைத் தமிழுக்கு  உள்வாங்கி  “தமிழ் அறிதியியல்” துறையாகச் செயல்படுத்துவது தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலும்.

"தரவுகள் தகவலாக மாறுகின்றன. அத்தகவல்கள் மீண்டும் தரவாக உருவெடுக்கின்றன". இதுதான் தகவல் நுட்ப ஆளுகையின் (Information Management) அடிப்படை.

இந்த அடிப்படையில், தமிழ் மொழி சார்ந்த ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும் தரவாகக் கருதி, அவற்றை ஒருங்கிணைத்து, பாதுகாத்து, அதில் இருந்து பல செய்திகள்/தகவல்கள் பெற்று, தமிழ்க் குமுகமும், கல்வியும், ஆராய்ச்சியும் நிலைத்த பயனைப் பெறச்செய்யத் தேவையான உயர்கணிமை நுட்பம்(High-end-computing) பற்றிய பொறியியலே “தமிழ் அறிதியியல்” (Thamizh Informatics) ஆகும். இது தமிழ்க்கணிமைத் துறையில் நான்காவது துறையாக உருவெடுத்து வருகிறது.

ஒரே இலக்கியத்தைப் பத்து இணையத் தளங்கள் பத்து விதமாக, பத்துக்கணக்கான பிழைகளுடன் வெளியிடுவதால் என்ன பயன்?

இலக்கியங்களில் இருந்து பெரிதும் வேறுபட்ட அடிப்படைகளைக் கொண்ட, ஆனால், சமகால கல்வெட்டுச் செய்திகளையும் இலக்கியங்களில் வரும் செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாமல் செய்யப்படும் இணையத் தமிழ்க் கணிமையால் என்ன பயன்?

வெவ்வேறு வகையான தமிழ்த் தரவுகள் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டவை. அவற்றை நெடும்பயன் கருதி, ஒருங்கிணைத்துப் பயன்படுத்த வேண்டுமானால் “தமிழ்த் தரவொழுகு” தேவை.

தமிழ்க் கணிமை உலகில் இலக்கியம், கல்வெட்டு, சுவடிகள், அகராதிகள் போன்றவை, சிறு சிறு உதிரித் திட்டங்களாகச் செய்யப்பட்டு, திட்டுத் திட்டாக ஆங்காங்கு தேங்கிப்போய், எண்ணிய பயனை முழுமையாக விளைவிக்காமல் இருக்கிறது. அதில் இருந்து மாறி, தமிழ் அறிதியியல் அடிப்படையில் உருவாக்கப்படும் மாபெரும் தரவகமாக, தரவுக் களஞ்சியமாக, ஒருங்கிணைக்கப்பட்டால் அது பல நூற்றாண்டுகளுக்கு மின் ஊழியில் தமிழுக்குத் தேவையான அடித்தளத்தை ஏற்படுத்தும்.

தமிழ்மொழிக்கு எவ்வளவோ சிறப்புகள் இருந்தும், தொன்மை இருந்தும் உலகில் மொழிநிலையில் பின்தள்ளப்படுவதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றென்றால், அது,  மேனாடுகளில் இருக்கும் தர அளவில் நம்முடைய தரவுகளை நெறிப்படுத்தி வைக்காமையாகும்.

இதனை ஏதோ சாதாரண தரவகம் போடும் சிறுகணிமை (infant computing) முயற்சி என்று 
எண்ணிவிடவேண்டாம். பொதினக் கணிமை உலகில் திகழும், Enterprise Information Warehouse, Business Intelligence, Enterprise Content Management எனப்படும் மூன்று மிகப்பெரும் கணிமைத் துறைகளின் சங்கமம் "தமிழ் அறிதியியல்" என்ற புதிய துறையாகும்.
இம்மூன்று துறைகளின் அகண்ட, ஆழமான பல்வேறு அடிப்படைகள், தேற்றங்கள், அடவுமுறைகள், கட்டுமான விதிகளை தமிழிற்கு உள்வாங்கிச் செய்யக்கூடிய கணித்துறை ஆகும். துக்கடாத் தரவகங்களே தமிழ்க்கணிமைக்கு அதிசெயம் ஆகும். அவ்வழியிலே தொடர்ந்து கொண்டிருப்பது தமிழ்க்கணிமையில் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்தராது.

உலகக் கணிமையின் உயர்ந்த பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதே, மேற்சொன்ன தமிழ்த்தரவுகளின் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, பேணல் யாவற்றுக்கும் பொருத்தமானதாகும்.  தமிழ்த்தரவுகளை ஒருங்கிணைக்கும் முதற்படி நிலையிலேயே 50-60 டெராபைட்டுத் தரவகமாக தமிழ்த் தரவுக்களஞ்சியம் உருவெடுக்கும். அதன் வளர்ச்சி - குறைந்தது 100-200 தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து நிலைத்த தமிழ்ச் சந்தையை உருவாக்கும்.

ஆகவே, தமிழ்த் தரவுகளை, உலகியல் கணிமை முறைமைகளைக் கொண்டு, நேரிய முறையில் நெறிப் படுத்த வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது. அப்படி ஒரு முறை செய்து விட்டால், காலத்துக்கும் கவலைப் படவேண்டியதில்லை. இந்தத் தரவுக் களஞ்சியத்தின் மேல் எண்ணற்ற செயலிகளும், இணைப்புகளும் உருவாகும். கல்வியும், தமிழும் செழிக்கும் என்பதொடு, மாபெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வளமான சந்தையை ஏற்படுத்தும் திறன்வாய்ந்தது இந்தத் தமிழ் அறிதியியல் துறையாகும் என்று மீண்டும் எடுத்துக் கூறுகிறேன்.


உதிரித் திட்டங்கள் உறவு சேர்க்காது. உலகியல் நடைமுறைகளைக் கைக்கோண்டு செய்யப்படும் உயர்ந்த திட்டங்கள்தான் இன்று நமது மொழிக்கும், நமக்கும் பயனளிக்கும்.


======================================================================

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/03/14