Pages

Monday, August 16, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-3

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகள்:
http://nayanam.blogspot.com/2010/08/1.html
http://nayanam.blogspot.com/2010/08/2.html

முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட
வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்குப்
பதிலாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும்
இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ
காரட்டு குறியையோ அல்லது டில்டா குறியையோ
போடலாம் என்று உகர ஊகார துணைக்குறியீடாக
அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர்
போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த
முன்வைப்பின் உச்சம் எனலாம்.

பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும்
எழுத்துக்களிற்குப் பல்வேறு வேடங் கட்டி
பிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து
வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ
இன்னொரு போட்டியாளர் தனது எழுத்து
வடிவ மாற்றச் சரக்கைச் சந்தையில் திணிக்கிறார்.
அமைதி ஆனந்தம் என்பார் பரிந்துரைக்கும்
வடிவ மாற்றங்களை இங்கு பகிர்கிறேன்.

இவரின் கொள்கை:"ஆங்கில மொழி எப்படி
ஒற்றைக் குறிகளாக இருக்கின்றனவோ
அதே போல தமிழ் எழுத்துக்களையும்
ஒன்று விடாமல் நசுக்கி ஓருருவாக
ஆக்கினால்தான் தமிழ் வாழும். இல்லாவிடில்
நாசமாகப் போய்விடும்” என்று சொல்வதோடு
தமிழர்களுக்கு இருக்கின்ற பிற நாட்டினருக்குப்
போற்றி பாடும் உளப்போக்கை பாங்குற
எதிரொலிக்கின்றார்.

அமைதியானந்தரின் தமிழ்ப்பற்று ஓங்கி உயர்ந்தது.
தமிழ் மொழிமட்டுமல்ல தமிழ் மண்ணில் காணக்கூடிய
விலங்குகளிடமும் அவர் கொண்டுள்ள நேயம் ஒப்பற்றது.
காங்கேயம் காளைகளின் கொம்புகளை இங்கே தமிழ்
எழுத்துக்களுக்கு வரைந்து அழகு பார்க்கிறார்.

நான் காங்கேயம் காளைகளின் கொம்பு வாகைப்
போட்டிருக்கிறார் என்று சொன்னதும் நண்பர் ஒருவர்
வெகுண்டு - உனக்குக் காங்கேயத்தைத் தாண்டி எதுவும்
தெரியாது, உண்மையில் அந்தக் கொம்புகள் சிந்துசமவெளி
கல்வெட்டுக்களில் காணப்பட்ட காளையின் கொம்பாகும்,
என்று சொன்னபோது, என்னே தமிழ்ப்பற்று என்று
வியந்துபோனேன்.

அவரின் பார்வையில் கா,ஙா,சா,ஞா, டா,ணா, தா,நா
என்ற ஆகார உயிர்மெய் வரிசை இப்படித்தான்
இருக்க வேண்டுமாம். கீழே உள்ள படத்தில் இருப்பன
தற்போது ஞா, டா, ணா முதலான எழுத்துக்களை
மாற்றும் அவர் பரிந்துரை. இதேபோல அவ்வரிசையின்
பிற எழுத்துக்களுக்கும் போட்டு விட்டிருக்கிறார்.


திராவிடக் காளையின் கொம்புகளைத் தமிழ் மொழியோடு
பிணைத்துக் களிக்கிறார் கா,ஙா,சா வரிசையில் என்றால்,
கெ, ஙெ, செ வரிசைக்கு யானையின் தும்பிக்கையை
ஒட்டி விட்டு மகிழ்கிறார் அமைதியானந்தர்.

யானை என்பது தமிழனின் தொன்மையான விலங்கு
மட்டுமல்லாது போர்த்தொழிலில் இருந்து பிச்சை
எடுக்குந்தொழில் வரை யானை தமிழனுக்குப்
பயன்படுவதை என்றென்றும் நெஞ்சில் வைக்க
இந்தச் சீர்திருத்தமாகும் என்பதே அவர்
கட்டுரைகளின் உட்பொருளாக எனக்குக்
கிடைக்கிறது.


இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது
அந்த ”ணை” என்ற எழுத்தை அவர் மாற்றுவதாகும்.
இவ்வெழுத்து பெரியாரால் மாற்றப்பட்டது இன்னும்
பலருக்கும் நினைவிருக்கும். ஏறத்தாழ அதே
எழுத்தை மீண்டும் கொண்டு வருகிறார்
அமைதியானந்தர்.

”மாற்றம் தேவைதானே! ஒரு 30 வருடத்திற்கு
முன்னே அப்படி எழுதினோம். அப்புறம் இப்படி
எழுதினோம். சரி மறுபடி அப்படியே எழுதுவோம்” –
இப்படி மாறிக்கொண்டே இருந்தால்தானே தமிழ் வாழும்.
மாற்றம் என்பது மாறாததல்லவா? என்பது
அமைதியானந்தரின் கோட்பாடு ஆகும்.


மேலே உள்ள எழுத்துக்களைக் காட்டி இதைப் படியுங்க
என்றார் ஒரு நண்பர்– நானும் சி, ஞி என்று சொன்னேன்.
அவருக்கு வந்ததே கோபம் – சி,ஞி என்பது அந்தக்காலம்;
உங்களைப்போல பழமைவாதிகளால்தான் தமிழின் வளர்ச்சி
அழிந்துபோகிறது என்றார். திகைத்து ஏனென்று கேட்டேன்.
பின்னர் சொன்னார் – “அது சி,ஞி இல்லைங்க – புதிய சே, ஞே என்றார்”.

ஆகா, தமிழ் என்னமா வளருது என்று நானும்
எண்ணியபோது, “ஐயம் இருந்தால் அமைதியானந்தரைக்
கேளுங்கள் என்று சொல்லிவிட்டு, பழமைவாதிகளிடம்
பேசினாலே தமிழ் தேய்ந்துபோகும் என்பதுபோல நகர்ந்தார்”.

புரட்சித் தமிழர்களின் புரட்சித் தமிழில் இதோ கே,ஙே,சே,ஞே.


கி,ஙி,சி,ஞி எப்படி இருக்கும் என்பதனைக் கேட்டுவிட்டால்
நம்மைப் பழமைவாதிகள் என்று சொல்வார்களோ என்று
அஞ்சி இந்த எழுத்துச் சீர்திருத்தப் படையிடம் நான்
கேட்கவேயில்லை. அதுமட்டுமல்ல அச்சத்திற்குக் காரணம்,
படை என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதாலும்.

சகலகலா வல்லவர்களான எழுத்துச் சீர்திருத்தவாதிகளின்
கலைநயத்திற்கும் அறிவியல் அறிவிற்கும் வரம்பே
கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளச் செய்தது
ஐகார உயிர்மெய்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கின்ற
மாற்றங்கள்தான்.

தமிழை கைதூக்கி விடுவதற்காக அவர்கள் செய்யும்
முயற்சிகளில் ஒன்றுதான் ஐகார வரிசை எழுத்துக்களில்
அவர்களின் கைவண்ணம். ஐகார எழுத்துக்களை
அறிவியல் முறைப்படி ஆக்கியிருக்கிறார்கள்.

ஆர்க்கிமிடிசின் நெம்புகோல் தத்துவத்தை எளிதில்
தமிழ்க் குழந்தைகள் கற்றுக் கொள்ளுமாறு
அமைத்திருக்கிறார்கள். ஐகார வரிசையின்
ஒவ்வொரு எழுத்துக்களின் அடியிலும்
ஒரு நெம்புகோலைப் போட்டுவிடுகிறார்கள்.

கீழே உள்ளவை ”கை” வரிசையாகும்.
”டை” என்ற எழுத்திற்குக் கருணை காட்டும்
அவர்களின் வடிவ மாற்றம் உற்றுக் கவனிக்கத்தக்கது.



அறிவியல் தமிழ் வளர்ப்பதென்றால் இப்படித்தான்
வளர்க்கனும் – அதற்குக் கிடைத்த இடம் தமிழ்
எழுத்துக்கள்தான். அதைவிட்டு விட்டு பேசிக் கொண்டு
இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்
சீர்திருத்தவாதிகள்.

அதுமட்டுமா? நோயாளிகள், முதியோரிடம்
நேயம் காட்டவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றவாறு
ஒளகார உயிர்மெய்வரிசைகளுக்குப் புதிய குறிகள் இடுகிறார்கள் சீர்திருத்தவாதிகள். “டெள” என்ற எழுத்தே இதற்குச் சான்று.



தமிழ் மண்ணின் காளைகள், யானைகளின்
மேல்மட்டுமா பரிவு?. பெரிய உயிரினங்களைத் தாண்டி,
நத்தை போன்ற சிறிய உயிரினங்களின்மேல் உள்ள
பரிவையும் அன்பையும் விளக்குவதாக
ஓகார வரிசை அமைகிறது.


தமிழி நெடுங்கணக்கின் 247 எழுத்துக்களில்
60 எழுத்துக்களை நீக்கிவிடவேண்டும் என்பது
உள்ளிட்ட வடிவமாற்றிகளின் பரிந்துரைகளில்
இதுவரை தப்பித்திருப்பன 18 மெய்யெழுத்துக்கள்
மட்டுமே. எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில்
பேசப்படுகின்றவற்றின் தன்மையையும்
அளவையையும் கண்டு என்ன செய்யலாம்
என்பதை வாசிப்பவர் முடிவு செய்துகொள்க.

தமிழ்நாட்டில் ஆக்கங்கள் இல்லை.
அதற்கு வாய்ப்புகளும் இல்லை.
அறிவியல் கண்டுபிடிப்புக்கள் என்று ஏதும்
இல்லை. எல்லாம் பிறநாட்டுக்
கண்டுபிடிப்புக்களின் புகழ்பாடிப் பிழைக்கும்
பிழைப்புதான். அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில்
தமிழே இல்லை. கல்விக்கூடம் முதல் சுடுகாடு
வரை ஆங்கிலத்தில்தான் பெயர்ப்பலகை இருக்கின்றன.

இந்த அழகில் எங்கே போய் அறிவியல் தமிழ் வளர்ப்பது
என்று, தமது திறமையையெல்லாம் தமிழ் எழுத்துக்கள் மேல்
காட்டுகிறார்கள் - அதற்குப் பெரியாரின் முகமூடியை
எடுத்து மாட்டிக்கொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றவுடன் ஏதோ மிகப்பெரிய
மொழியியல் சங்கதி என்று எண்ணி யாரும் விலகிப்
போகக்கூடாது. ஏனென்றால் அதில் மொழியியல், இலக்கணம்
என்று ஒன்றும் கிடையாது. ஒரு வெற்றுப் படம்.

நாம் அன்றாடம் புழங்கும் எழுத்தை ஏன் மாற்றவேண்டும்?
எதற்கு மாற்றவேண்டும்? என்று வினாவெழுப்பிச்
சிந்திக்க வேண்டும்.

நிறைவு.

அன்புடன்
நாக.இளங்கோவன்







Saturday, August 14, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-2


இக்கட்டுரையின் முந்தைய பகுதி:
http://nayanam.blogspot.com/2010/08/1.html

வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால்,
காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்
ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்
சூட்டி விடுகிறார். இது வட்மொழி அடியொற்றியது.

மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகார
உயிர்மெய் எழுத்துக்களை மாற்றி விட்டால்
கணிக்கு ஏற்றது போல தமிழை மாற்றிவிடலாம்
என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்கு
என்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறை
என்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்து
விடுவது வியப்புக்களில் ஒன்று.

உயிர்மெய் எழுத்துக்களில் 72 எழுத்துக்களை
இப்படி மாற்றிவிடலாம் என்று சிலர் கிளம்புகையில்
இன்னுஞ் சிலர் உயிரெழுத்துக்களை
எப்படியெல்லாம் மாற்றலாம் என்று சொல்கிறார்கள்
என்று கவனிப்பது மேலும் நமது தமிழறிவை
வளர்த்துவிடும் என்று நம்பலாம். இதோ பாருங்கள்,
தமிழ் உலகில் உலவுகின்ற உயிரெழுத்துக்களின்
மாற்ற வடிவங்களில் ஒன்றனை.


கா, ஙா, சா விற்கு மட்டும் கால் வாங்குவிங்களா?
உயிர் நெடில்களுக்கு வாங்க மாட்டிங்களா?
என்று வினவும் உயிரெழுத்து நெடில் மாற்ற விரும்பிகள்
மேலெ படத்தில் சொல்வது ஒருபுறமிருக்க,
இது என்ன பெரிய சீர்திருத்தம்? கால் வாங்குவதென்ன -
இ-னா ஈயன்னாவையே எப்படி மாற்றலாம் தெரியுமா?
என்றவாறு இ, ஈ எழுத்தின் வடிவத்தையே
முற்றாக மாற்றிவிடுகின்றனர் சிலர்.

மேலே படத்தில் உள்ளன தமிழின் உயிர்களான இ, ஈ என்ற
எழுத்துக்களுக்குப் பரிந்துரைக்கப் படுகிற
மாற்று வடிவங்கள். இப்படிப் பரிந்துரைப்பவர்களிடம்
போய் ஏன் மாற்றவேண்டும்?, இப்படி மாற்றினால்
என்ன பயன்? என்று கேட்டால், உடனே கேட்பவரை
“பழமைவாதிகள்” என்று சொல்லிவிட
நன்கு பயின்றிருக்கிறார்கள். இ-ஈ இப்படி என்றால்
உயிர்கள் உ, ஊ எப்படி இருக்கும்? இதோ கீழே
இருப்பதைப் போலத்தான்.

இ, ஈக்கு புது உருவம் கொடுத்தது போல
உ, ஊக்கும் புதுவடிவம் கொடுத்து இந்த
வரிவடிவச் சீரமைப்பு அவசியம் என்று
வலியுறுத்துகிறார் பொறிஞர் செ.குமார்.
இவை மட்டுமா உயிரெழுத்து வடிவ மாற்றங்கள்?
இதோ கீழே இருப்பவை பிற உயிரெழுத்துக்களின்
வடிவ மாற்றங்கள்.

இது எந்த எழுத்துக்களுக்கான புதிய வரிவடிவம்
என்று இக்கட்டுரையை படிப்பவர்கள்
கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்
என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு,
சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

ஒ, ஓ, ஒள ஆகியன கீழ்க்கண்டவாறு
காட்சியளிக்க வேண்டும். இப்படி இல்லாவிடில்
செம்மொழியான தமிழ்மொழி தமிழர்களின்
நாவில் இருந்தும் கைகளில் இருந்து
காணாது போய்விடும் என்ற அச்சத்தை
இம்முன்வைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

”ஐ” என்ற எழுத்துதான் கீழுள்ளவாறு மாற்றப்பட
வேண்டிய ஒன்றாகிறதாம்.

இவை மட்டுமா மாற்றத் துடிப்பவர்களின் மனவோட்டங்கள்?

தமிழ் மொழியில் ந, ன, ண என்று எதற்கு
மூன்று வகையான ஒலிகள்? ழ, ல, ள என்று
மூன்று ஒலிகள் எதற்கு? ர, ற என்ற இரு ஒலிகள் எதற்கு?
என்று ஆழ்ந்த புலமையோடு கேட்பதாய் எண்ணி
பலர் இவற்றைச் சீர்திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவர்கள், இப்படிக் குறைத்தால் 5 x 12 = 60
எழுத்துக்களைத் தமிழில் இருந்து குறைத்து
சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஐ = அய், ஒள = அவ்
அதனால் ஐயும் ஒளவும் தமிழி நெடுங்கணக்கில்
இருந்து நீக்கப்பட வேண்டியவை என்றும்
ஃ என்ற அஃகானை யாரும் அதிகமாகப்
பயன்படுத்துவதில்லை எனவே
கொசுறாக அதனையும் நீக்க வேண்டும்
எனவும் கொடிபிடிக்கின்ற மேதைகள் தமிழ் உலகில்
இன்று நிறைந்திருக்கிறார்கள்.

உகர ஊகார வரிசைகளுக்கு வா.செ.கு, கொடுமுடியார்
போன்றோர் சொல்வது போல புதுக்குறிகள்
போடக்கூடாது என்று, மிகுந்து போன தமிழ்ப்பற்றின்
காரணத்தால் தமிழெழுத்தான ”உ” என்ற எழுத்தையே
பயன்படுத்த வேண்டும் என்று எழுதுகிறது
மக்களோசை என்ற மலேசிய ஏடு.
அதன் கட்டுரையாளர் பரிந்துரைக்கும்
ஒரு எடுத்துக்காட்டு!

எடுத்துக்காட்டு என்ற சொல்லை இப்படி எழுத வேண்டும்.
கூண்டு என்ற சொல்லை இப்படி எழுதவேண்டும். கூ என்ற
நெடிலுக்கு மறக்காம நெடில் ஊ போட்டுவிடுவது அவரின்
சீர்மையின் சிறப்பு.
உங்களுக்கு அறிவியல் தமிழில் பற்றிருந்தால்
சீதோண்ணத்திற்குப் போடும் திகிரி உருண்டையை
ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று அறிவியல் தமிழ்
வளர்க்கச் சொல்கிறார். அறிவியல் தமிழ் எப்படியெல்லாம்
வளர்க்கலாம் என்று அவரவர் வேறு இடம் கிடைக்காமல்
தங்கள் அறிவியல் திறனை தமிழ் எழுத்துக்களில்
பாய்ச்சுகிறார்கள் இன்று
இதுவரை வந்த எழுத்து வடிவ மாற்ற முன்வைப்புக்களில் மெய்யெழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1 என்ற
19 எழுத்துக்களை ஏனோ தெரியவில்லை விட்டுவிட்டார்கள்
என்று வருந்தியோருக்கு ஆறுதலாக உகர ஊகார
உயிர்மெய்கள் எழுதுவதற்குக் குறியீடாக அந்த ஆய்தத்தையே போட்டுவிடலாம் என்பது அவர் முடிபு.

கீழே இரண்டு ஆய்தங்களைப் போட்டு நான்
எழுதியிருக்கிறேன். ஆனால் அவரின் முன்வைப்போ
தலைகீழாகப் போட்ட ஆய்தம். அதாவது தலைகீழாக
ஆய்தம் போட்டால் அது ஊகாரம். அப்படியே
நேராகப் போட்டால் அது உகரம்.

தலைகீழாக எப்படி ஆய்தத்தை எழுதுவது
என்று எனக்குத் தெரியாததால் நான்
இரண்டைப் போட்டிருக்கிறேன் என்றறிக


(மேலும் ஒரு பகுதி வரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, August 13, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-1

இன்றைக்கு இருக்கின்ற 247 தமிழ் எழுத்துக்களில்
239 எழுத்துக்களை மாற்றுவதற்கு நடக்கும்
பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்).

தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றி
உருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதி
தமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகை
தமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்
காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்
உண்டு. தீப்பெட்டிக்கு பெயர் ஒட்டும் தொழில்,
தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில்,
பீடி சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டு
பொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்று
உயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்
மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கை
குறைப்புத் தொழில் போன்று பல்வேறு கோணங்களில்
தமிழ் கூறும் மக்களிடையே புற்றீசல் போலத்
தோன்றியிருக்கிறது.

இன்றைய காலக் கட்டத்தில், தமிழ் எழுத பேசத்
தெரிந்தாலே எளிதில் தமிழ் அறிஞராகி
விடமுடிகின்ற சூழலும், எம்மெசு வேர்டு நிரலியில்
தமிழை எழுதவும் அட்டவணைகள் இடவும் தெரிந்து
விட்டால் அவர் கணிப்பேரறிஞராக
ஆகிவிட முடிகின்ற சூழலும் நிலவுவது இந்த
எழுத்துச் சீர்திருத்தத் தொழிலுக்கு மிகவும்
உதவியாக இருக்கிறது என்று சொன்னால்
மிகையல்ல.

என்ன இவன்? - எவ்வளவு பாடுபட்டுத் தமிழை
வளர்க்க முனைபவர்களின் செயலை
குடிசைத் தொழிலுக்கு ஒப்பிடுகிறானே என்று
எண்ணத் தோன்றும். 247 எழுத்துக்களில் 239
எழுத்துக்களை மாற்றத் துடிக்கின்ற பலரின்
கோணங்களையும் அவர்களின் ஆய்வுகளின்
அளவுகளையும் படிக்கும்போது குடிசைத்
தொழில்களுக்குத் தேவையான அடிப்படைச்
சிந்தனைகளைக் கூட எந்த ஒரு சீர்திருத்தத்
தாளும் கொண்டிருக்கவில்லை என்பதுவும்
வெற்று அட்டவணைகளால் நிரப்பப்பட்ட
இந்தத் தாள்களைச் செய்வதற்கும்
பீடி சுற்றுவதற்கும் பேரீச்சம்பழம் பொட்டலம்
கட்டுவதற்கும் செய்யும் வேலைக்கும்
எந்த வேறுபாடும் கிடையாது என்பதை
புரிந்து கொள்ள முடியும்.

(அதே வேளையில் எந்த ஒரு குடிசைத்
தொழிலையும் நான் இளக்காரம் செய்யவில்லை
என்பதனை வாசகர்களுக்குத் தெரிவித்துக்
கொள்கிறேன்.)

இதில் கொடுமை என்னெவென்றால் இவர்களின்
ஆராய்ச்சியற்ற எழுத்து வடிவ மாற்றங்களுக்குத்
தந்தை பெரியார் பெயரை, விளம்பரத்திற்குப்
பயன்படுத்துமாப் போல, பயன்படுத்துவதாகும்.

பெரியார் நேயர்களையும் சிந்தனையாளர்களையும்
பெரியார் பெயரைச் சொல்லி திசைதிருப்புவதே
இவர்களின் நோக்கமாக இருக்கின்றது. இதுபற்றி
விரிவாகப் பின்னர் காண்போம்.

தமிழ் எழுத்து வடிவத்தை ஏன் மாற்ற வேண்டும்,
அதற்கென்ன தேவை என்பதை வடிவமாற்ற
விரும்பிகள் ஒருவர் கூட நிறைவான
ஆராய்ச்சி செய்ததில்லை.

கற்பனைகளையும் கதைகளையும் சொல்கிறார்களே
தவிர இன்னது தேவை இன்னது சரவல்
இன்னது விளைவு இன்னது பயன் என்று
அறிவுசார் ஆராய்ச்சிகள் கொண்டாரில்லை.

இன்றைய நிலையில் தமிழ் உலகில் உலவுகின்ற
பல்வேறு வடிவ மாற்ற முனைவுகளின் தொகுப்பினை
இக்கட்டுரை (தொடர்) கொண்டுள்ளது.

இகர வரிசையில் செய்ய வேண்டிய வடிவ மாற்றத்தை எடுத்துரைக்கிறார் வா.செ.குழந்தைசாமி. மேலே படத்தில் இருப்பது போல வடிவ மாற்றம் செய்தால் குழந்தைகள் எளிதாகக் கல்வி கற்பர் என்கிறார். ஈகார வரிசைக்கும் இதே முறையில் வேறு ஒரு குறியை போட்டுவிடுகிறார் வா.செ.கு. கீழே காண்க.


என்ன இது? கி, கீ, நி, நீ எழுத்துக்களில் இருக்கும் துணைக் குறிகளை அப்படியே நகர்த்தி ஒரு மில்லி மீட்டர் தள்ளிப்போட்டுவிடுவது சீர்திருத்தமாகுமா? இதுதான் சீர்திருத்தம் என்றால் எவ்வளவோ செய்யலாமே,செய்து பெரியார் ஆகிவிடலாமே என்ற அவாவில் இன்றைக்குப் பலரும் இதனைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் வியப்பு ஏற்படுவது தவிர்க்க ஏலாதது.
உகர வரிசையில் உள்ள எழுத்துக்களை இப்படி உடைத்து இரண்டு குறிகளாக்கிப் போட்டால் ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதுவாக இருக்கும் என்று சொல்கிறார் வா.செ.கு.ஊகார வரிசையில் உள்ள எழுத்துக்களுக்கும் அதே போல வேறு ஒரு துணைக்குறியீட்டைப் போட்டு எழுதினால் காலத்திற்குத் தக்க மாற்றம் செய்த பெருமை நம்மிடம் இருக்கும். இல்லாவிடில் தமிழே இல்லாமல் போய்விடும் என்று சொல்கிறார் வா.செ.கு.

(வா.செ.கு போன்று பலர் செய்ய முனையும் மாற்றங்கள், சிதைவுகளை வரும் கட்டுரைகளில் தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்