Pages

Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Sunday, September 21, 2014

இந்திரா பார்த்தசாரதியின் 'சிலப்பதிகாரச் சிக்கல்கள்' கட்டுரை - ஒரு பார்வை

சிலப்பதிகாரச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை - நாக.இளங்கோவன்
வெளியீடு - மணற்கேணி ஆய்விதழ் (மே-சூன் 2014)

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற கட்டுரையை 2001ல் படித்ததன் பின்னர், “சிலப்பதிகாரச்  சிக்கல்கள்” என்ற அவரின்  கட்டுரை, பகிர்தலில் படிக்கக் கிட்டியது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவரின் சிலப்பதிகாரக் கட்டுரையைப் படிக்கும்போது, அதில் பரந்து கிடக்கும் அவரின் சிந்தனைப் பரிமாணங்கள் என்னைப் போன்ற சிலப்பதிகார வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற அந்தக் கட்டுரைக்கு அப்போது நான் எழுதியிருந்த கருத்துகள், மறுப்புகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்களிடம் இருந்து மிகப்பண்பாடுடைய மறுமொழிகளும், ஏற்பும் அஞ்சலில் வந்தன. அவரின் அந்தப் பண்பாடும், சிலப்பதிகாரத்தைப் போற்றுகின்ற சிந்தனையும், பகிர்வில் வந்த இந்தக் கட்டுரையின்பால் கருத்துரை எழுத ஆர்வத்தைத் தூண்டின.

இக்கட்டுரை வெளிப்படுத்தும் உரத்த சிந்தனைகள் அகலத்திலும் ஆழத்திலும் எண்ணிக்கையிலும் மிகுந்துள்ளன என்பேன். இச்சிந்தனைகளில் சிலபலவற்றைத் தமிழகச் சிலப்பதிகார ஆய்வு உலகம் சிந்தித்தும் வருகையில், ஆசிரியர் இ.பா அவர்களும் மிகச் செழுமையான வினாக்களாக அவற்றை எழுப்புவது வரவேற்புக்குள்ளாகிறது.

“சிலப்பதிகாரம் சமற்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று” என்ற ஆசிரியரின் அழுத்தமான சிந்தனை, 2012ல் தமிழ்த் தொல்லியற்றுறையின் மேனாள் இயக்குநர் திரு.நாகசாமி, “வடமொழியின் பஞ்சதந்திரக் கதைகளை மூலமாகக் கொண்டது சிலப்பதிகாரம்” என்று கூறியதை அடிப்படையிலேயே மறுக்கிறது. ஆசிரியரைப் போன்றே, அக்கருத்தியலை ஆதாரங்களை அடுக்கி மறுத்தது, “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற முனைவர் இராம.கியின் கட்டுரை.(http://valavu.blogspot.in/2013/02/1.html).

“பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரம் பிரபலமாக இருந்திருக்கவில்லை –அதற்கு அதன் சமணச் சார்வு காரணமாக இருந்திருக்கூடும்” – என்ற இ.பாவின் கருத்து ஆழச்சிந்திக்க வைக்கிறது. 18-19 நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக்கூடிய “கோவலன் கதை” என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலில் உள்ள செய்திகள், சிலப்பதிகாரப் பெருவழக்குத் தமிழ்நாட்டில் மிக நெடுங்காலமாக இருந்திருக்க வேண்டும் என்றே கருத வைக்கிறது. (கோவலன் கதை – சுவடிப்பதிப்பு – முனைவர் சூ.நிர்மலாதேவி – உ.த.ஆ.நி பதிப்பு). கரிகாலன் கல்லணை கட்ட மாசாத்தன் நிதி அளித்தது, பாண்டிய நாட்டில் கொடுங்கோலாட்சி நடந்தது, மாதே(த)வி கோவலனைக் கொல்ல ஆற்றில் தள்ளியது, சிவச்சார்புக்காக சொக்கர்-மீனாட்சியை முன்னிலைப் படுத்தியது போன்ற செய்திகளை அதிற்காணமுடிகிறது. “தென்னவன் மகள் கண்ணகி” என்று சிலம்பு சொல்வதை, பாண்டிமாதேவியின் ஆற்றில் விடப்பட்ட மகள் கண்ணகி என்று “கோவலன் கதை” என்ற இந்த நாட்டுப்புறக் கதை சொல்கிறது. இதுபோல, கோவலன் கர்ணகி என்ற நாட்டுப்புறக் கதையும் காணத்தக்கது. இக்கதைகளின் தன்மைகளைப் பார்க்கும் போது, செவ்விலக்கியமாக இளங்கோவடிகள் தோற்றிய சிலப்பதிகாரம், கூத்துக்கலையாக, தமிழ்நாட்டின் உள்வழக்குகளில் பலவாகத் திரிந்து நெடுங்காலம் இருந்திருக்கும் வாய்ப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. (இதனை இ.பா அவர்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.)

சிலப்பதிகார ஆசிரியர் பெயர் பற்றிய கட்டுரை ஆசிரியரின் வினாக்கள் மிக அவசியமானவை. “ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்?” என்று வினவி, சிவனின் இடப்பக்கத்துறை பெண்மையோ என்று ஐயுறும் ஆசிரியரிடம் இருந்து, “வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பெருமாளையும் தாயாரையும் வைணவர்கள் வணங்குவது பற்றிய சிந்தனையையும் நான் எதிர்பார்ப்பேன். இடப்பக்கம் உள்ள இதயத்தின் குமுறலை, அனலை ஆற்றும்பொருட்டு, பொதுவாகவே வலப்பக்க/வலக்கர எழுச்சி கொண்ட தமிழர்களின் இயல்பான செயற்பாடு இடமுலையைத் திருகியது என்ற கருத்து (சிலம்பு மடல்-27 http://nayanam.blogspot.in/2000/06/27.html ) எனக்கு இருக்கும் போதிலும், வள்ளுவம் சொல்லும் உவமமான “முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று” என்பதை ஆழ்ந்து நோக்கவும் சொல்கிறது.

“பத்தினி வழிபாடு, சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்குதல்” பற்றிய ஆசிரியரின் சிந்தனை, விரிவாக விரும்பும் எனது மற்றொரு எதிர்பார்ப்பாகும். சிலப்பதிகாரத்தின் காலம் என்ன? என்ற வினா எனக்குப் பிடித்த முக்கிய வினாவாகும்.  சிலம்பின் காலம் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 2ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு, தற்போது 2ஆம் நூற்றாண்டு என பலராலும் கருதப்படுகிறது. இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், சிலம்பின் காலத்தை தமிழக, இலங்கை வரலாறுகளை மட்டும் வைத்து அதை 2ஆம் நூற்றாண்டு என்று சொல்கையில், தமிழகத்திற்கு வடக்கே சென்று, சாதவாகன்னர்(நூற்றுவர் கன்னர்) அரசியல், மகத ஆட்சி, தக்கணப்பாதை என்ற அடிப்படைகளை ஆழமாக வைத்து “கி.மு75 என்பதே சிலப்பதிகாரத்தின் காலம்” என்று சொல்லும் “சிலம்பின் காலம்” என்ற முனைவர் இராம.கியின் நூல் இன்று பலரால் கருதப்படுகிறது. “கனகவிசயர்” என்பது கனகன் விசயன் என்ற இருவரல்ல – கனகவிசயன் என்ற ஒருவரே என்று அந்நூல் நிறுவுவது கவனிக்கத்தக்கது. இதற்கு நேர் மாறாக, முனைவர் செ.கோவிந்தன் அவர்களின் “சிலம்பின்  காலம்” என்ற நூல், காலத்தை 9ஆம் நூற்றாண்டையும் கடந்து கி.பி11ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளிவிடுகிறது. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப்பேரரசு சேரநாட்டை அழித்ததால் மனம் நொந்த இளங்கோ, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேகனையும் அவன் மனைவியையும் வைத்துக் காவியத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் செ.கோ. அதோடு, செங்குட்டுவன் இளங்கோவின் தம்பி என்கிறார் செ.கோ. இதிலிருந்து சிலப்பதிகார ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் கருதுகோள்களும், ஆதாரங்களும் நுண்ணியமாக, வலுவாக இருக்கும்போது, அதன் காலம் கி.பி2ஆம் நூற்றாண்டை முந்திச் செல்வதும், வலுவற்ற கருதுகோள்களும் ஆதாரங்களும் சிலம்பின் காலத்தை மிகப் பிந்தியதாக்குவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஆசிரியர் இ.பா அவர்களின் விரிவான காலக்கணிப்பிற்கு அவர் எடுத்துக் கொள்ளும் கருதுகோள்களும் ஆதாரங்களும் தமிழக எல்லையைக் கடந்தும் செல்ல வேண்டுமே என்பதும் எனது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

பிற்சேர்க்கைகள் பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் கருதுகோள்களும் வாசகர்களையும் ஆய்வாளர்களையும் ஈர்ப்பதாக அமைகிறது. பதிகமும், வரந்தருகாதையும் பிற்சேர்க்கை என்றாலும், அவை கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து ஆய்வுக்குட்பட்டே வருகின்றன. இளங்கோவடிகள் எப்படிச் சமணராகக் கருதப்படுகிறார் என்ற வியப்பு எனக்கு உண்டு. மிக அவசர அவசரமாக அவருக்கு மொட்டை போட்டு சிலையாகவும் மெரீனா கடற்கரையில் வைத்துவிட்டார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. 

குணவாயிற்கோட்டம் என்பது சமணக் கோயில்; அங்கு இளங்கோஅரசு துறந்தார் என்ற உரைக்காரர்களின் கருத்தே நிலைத்துவிட்டது போல. குடநாட்டுக்குக் கிழக்குக் கோட்டையாக, அரணாக, வாயிலாக இருந்ததுதான் குணவாயிற்கோட்டம். சேரத்தின் மையநாடான குடநாட்டுக்குத் தெற்கெல்லையாக கோட்டயமும், கிழக்கெல்லயாக குணவாய்க்கோட்டமும், வடக்கெல்லையாக கோட்டக்கல்லும், மேற்கெல்லையாக கடற்கரையும் இருந்திருக்கின்றன; கோட்டம்=கோட்டை/அரண் என்ற பொருளில் அரணவாயிலாக  இருந்திருக்கின்றன என்பது எனது கருத்து. குணவாயிற் கோட்டத்தை குணவாயிற்கோயிலாகக் கொண்டால், கோட்டக்கல்லை கோயிற்கல்லாகவும், கோட்டயத்தைக் கோயிலையம் என்றும் கொள்வார்களா? ஆகவே, இளங்கோ சமணத்திற்கு வலிந்து தள்ளப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. 

ஆசிரியர் இ.பா அவர்களும் இளங்கோ சமணர்தானா என்று ஐயுறுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கோட்டம், இளங்கோவின் சமணம், பிற்சேர்க்கைகள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னப்படுவது இந்தக் கோட்டம்=கோயில் என்ற கருதுகோளினாற்றான். அதொடு, அரசு துறப்பு என்பது, அரசைத் துறந்து துறவியானார் என்று ஏன் கொள்ளப்படவேண்டும்? இமயவரம்பனின் மகனான இளங்கோ, கிழக்கு வாசலின் மாதண்டநாயகனாக இருந்திருக்கிறான். பின்னர் அண்ணன் பட்டத்துக்கு வர அப்பணியை அண்ணணிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று கருத இடம் இருக்கிறது என்று நான் சொல்வேன்.

இன்னும் நிறைய கருத்துகளை, வினாக்களை உரக்கவே எழுப்புகிறார் ஆசிரியர். அவை மேலும் வாசகர்களுக்குத் தூண்டலாக அமைவது சிறப்பு. மேலும் எழுதினால் நீளும் என்பதால்,  ஒரு கருத்தோடு இக்கருத்துரையை நிறைவு செய்கிறேன். மதுரைக்காண்டம் முடிந்தவுடன் காவியத்தின் தன்மை, உணர்வு நெறி வெகுவாக மாறுவதை வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகிறது என்ற ஆசிரியரின் கருத்தோடு ஐயத்தோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. ஆசிரியர் கூறுவது போல, சிலம்பு நாடகம் மதுரையோடு முடிகிறதோ என்ற ஐயம் தோன்றினாலும், சேர அரசியலை, நாட்டை முன்னிலைப்படுத்தும் முகமாக வஞ்சிக்காண்டம் காவியத்தில் முதலில் தோன்றி அதற்குப் பின்புலமாக புகாரும், மதுரையும் வைக்கப்பட்டதோ(as flash back) என்ற சிந்தனை எனக்குண்டு. ஆசிரியர் இக்கட்டுரையில் எழுப்பியிருக்கும் வினாக்களை ஐயங்களை விரிவாக விளக்குமுகமாக நூல் இயற்றினால் அந்நூலில் அதிக ஆவலோடு நான் எதிர்பார்க்கும் கருத்து இதுவாகவே இருக்கும். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கருத்துகள், ஆய்வுகள் நூலாக மலர வாழ்த்துகள்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

Sunday, March 30, 2008

சிலம்பு மடல் 38

முக்கிய நகர்வுகள்:

சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் எரியுண்டதைத் தொடர்ந்து
நிகழ்ந்த சில நகர்வுகள் மிக முக்கியமானவை.
கண்ணகி பாண்டிய மன்னனை வெல்கிறாள்.
பாண்டியனும் அவன் தேவியும் வரலாற்றிலும்பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கிற மரணத்தை எய்துகிறார்கள். அதைக் கண்டபோதும் கூடகண்ணகிக்கு ஆற்றாமை தாழவில்லை. அதற்குக்காரணம் பாண்டிய அரசன் மற்றும் அரசியின்உயிர் அவளுடைய குறிக்கோள் அல்ல. தன்னுடையஉற்ற துணையின் உயிர் பிரிந்ததை அவளால்தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


கோவலன் கொலை செய்யப்பட்டதை ஒரு மாலையில்
(வியாழன் மாலை என்று சொல்லலாம்) அறிகிறாள்.
இரவில் அவன் கொலையுண்டு கிடந்ததைக் கண்டு
துடிக்கிறாள். மறுநாள் பகலில் பாண்டியனிடம்
முறையிடுகிறாள். அரசனும் அரசியும் அந்தப் பகற்போதில்
மாள்கின்றனர். அதன் பின்னரும் துயரம் தாளாமல்
மதுரையை மும்முறை வலம் வருகிறாள்.
இரவில் மதுரை தீக்கிரையாகிறது, அந்தப் பகற்போதிற்கும்
தீக்கிரையான யாமத்திற்கும் இடையேமதுரையைச்
சுற்றி மும்முறை வலம் செய்தது நடந்திருக்கக்
கூடியதே. மதுரை நகரின் இன்றையப் பரப்பு அன்றையப்
பரப்பை விட மிக அதிகமானதாகவே இருக்க முடியும்.
மதுரை எரிந்து கொண்டிருக்கும் போது நடந்த முக்கியமான
விதயங்களில் மூன்றுவிதயங்கள் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியவை.அதில் ஒன்று, மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் பேசியது. கண்ணகியிடம் சில விதயங்களைச் சொல்லி,
அவளை ஆற்றி, மதுரைத் தீயையும் அவிக்கிறது மதுராபதி அம்மன்.

"....அலமந்து
ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறை என......

.....மாபெருங் கூடல் மதுரா பதி என்பேன்;"

மற்றொன்று, பதிகத்தில் சொல்லியபடி,
சாத்தனார்அந்தக் காட்சியைக் கண்டது. மூன்றாவது விதயத்தைப்
பின்னர்க் காணலாம்.

"....மதுரை மூதூர்க்கொன்றையஞ்சடைமுடி மன்றப்பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி...."

...சிலம்பு:பதிகம்:39-43

கண்ணகியை மதுரை அம்மன் ஆற்றிய பின்னர், தீ
கோவலனின் உடலையும் உலகில் இருந்து நீக்கியிருக்கும்
என்று எண்ணியிருக்க வேண்டும். வளையல்களை
உடைத்து விட்டு, கால் போன போக்கில் மேற்திசையில்
இரண்டு வாரங்களாக நடக்கிறாள். செங்குன்றத்தில்
தெய்வமாகிறாள்.

மதுரையில் இருந்து குணக்கோட்டம் 120 கி.மீட்டர்
தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை வாடி வருந்தி,
இழந்த கணவனின் நினைவிலேயே நலிவுற்றிருந்த
நிலையில் கடக்கிறாள். மலை, புதர், பள்ளம் என்றெல்லாம்
அவள் பார்த்து நடக்கவில்லை. அதற்கு 14 நாள்கள்
ஆகியது இயல்பாகவேத் தெரிகிறது. இஃது ஒரு நகர்வு.


ஏறத்தாழ திருச்சிக்குத் தெற்கே கிடந்த தமிழகத்தை
ஆண்ட பாண்டிய அரசன் அரசியோடு இறந்து
போகிறான். இந்தச் செய்தி காற்றினும் விரைந்துபல
திசைகளையும் சென்று சேர்ந்திருக்கும் என்பது
எளிதில் நம்பக்கூடிய ஒன்று. முக்கியமாக
அந்தச்செய்தி எங்கெல்லாம் போயிருக்கும்?

நீர்ப்படைக்காதையிலும் நடுகற்காதையிலும் வெற்றிவேற்
செழியன் பற்றிய செய்தி வருகிறது. அவன் பாண்டியன்
நெடுஞ்செழியனின் வாரிசு என்றும், கொற்கையில் இருந்து
தென்பாண்டி நாட்டைக் காத்தவன் என்றும் வரலாற்று
ஆசிரியர் சொல்கின்றனர். நீர்ப்படைக் காதையில் சில
செய்திகள் முரணாக இருப்பினும், இருக்கும் செய்திகளில்
பாண்டியன் நெடுஞ்செழியன் மாள்விற்குப் பின்னர்
மதுரையை ஆட்சி செய்தவன் இவன் என்று அறிஞர்கள்
கருதுகிறார்கள்.

உரைபெறு கட்டுரையில் வெற்றிவேற்செழியன்
பற்றிசெய்தி இருந்தாலும், உரைபெறு கட்டுரை ஒரு செருகல்என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். அஃது ஒரு பதிப்புரையாக
இருந்திருக்கக் கூடும்.

கண்ணகி மதுரையை விட்டு நீங்கிச் செங்குன்றில்
தெய்வமாகியவரைக்குமான 14 நாள்களுக்குள், பாண்டியன்
மாள்வு பற்றிய செய்தி கொற்கைக்கும், வஞ்சிக்கும்,
தஞ்சைக்கும் சென்று சேர்ந்து இருக்கும். மதுரையில்
இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் இருக்கும்
கொற்கைக்குச் செய்தி ஒரு நாளில் சென்று சேர்ந்து,
அடுத்த ஓரிரு நாள்களில் வெற்றிவேல் செழியன்
மதுரைக்கு வந்திருக்க வேண்டும். அஃது ஒரு நகர்வு.

இந்த நகர்வு ஏன் முக்கியம் பெறுகிறதென்றால், செழியன்
மதுரை நோக்கி நகரவில்லை என்றால், மற்ற அரசர்கள்
அல்லது குறுநில மன்னர்கள் நகர்ந்திருப்பார்கள்!

மதுரையில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சைக்கும், சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளவஞ்சிக்கும் செய்தி போய், சோழனும் சேரனும்தலையிடுவதற்கு முன்னரே கொற்கையில் இருந்துசெழியன் மதுரைக்குச் சென்று விட்டிருக்க வேண்டும்.

சிலப்பதிகார காலம் சேரர்கள் வலுவோடு இருந்த காலம்.
காப்பியத்தின் பிற்பகுதியில் நடுகற்காதையில் பாண்டியனும்
சோழனும் செங்குட்டுவன் சீற்றமுறு வகை
நகையடிக்கின்றனர். சேர வல்லரசின் வல்லாண்மைக்கு
அஞ்சி அவர்கள் அடங்கியிருந்ததைக் காட்டும் அதே
வேளையில், அந்த அடக்கம் அதனால் மட்டும்தான்என்பதை உணர்த்துவதாகவே அஃது இருக்கிறது.

"வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று' என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை..."

"தவப் பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது' என்றனன் போர் வேல் செழியன்' என்று..."

.....சிலம்பு:நடுகற்காதை:91-95, 104-107

(சோழனும் பாண்டியனும் சொன்ன மேற்கண்ட செய்திகள்,
கங்கைப் பகுதியில் மறம் செய்தவர்கள் தவ வேயம் இட்டிருந்ததாகச்சொல்கின்றன. இன்றைய நாள்களிலும் கங்கைப் பகுதிஅரசியலில் இருந்து நாக்கை அறு, கழுத்தை வெட்டு என்று மறம் பேசுபவர்கள் தவ வேயம் பூண்டிருப்பதுக்கவனிக்கத்தக்கது!)

ஆக, மூவேந்தர்களும் ஒருவர் அயர்விற்கு மற்றவர்
காத்தே இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில்,
கண்ணகியின் மதுரையில் இருந்து
குணக்கோட்டத்தில் உள்ள செங்குன்றத்திற்கான நகர்வு,
அதன்பின்னர் செழியனின் கொற்கையில் இருந்து
மதுரைக்கான நகர்வு என்ற இரண்டையும் அடுத்த
மிக முக்கிய மூன்றாவது நகர்வு சேரன் செங்குட்டுவன்
வஞ்சியில் இருந்து குணக்கோட்டத்திற்கு நகர்ந்தது.

"மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு
ஈண்டிவஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்....."

....சிலம்பு:காட்சிக்காதை:1-9

வஞ்சி அரண்மனையிலே பட்டத்தரசி வேண்மாளுடனும்,
அவன் இளவலுடனும் இருக்கும் பொழுது, மலை காணச்
செல்வோம் என்கிறான் செங்குட்டுவன்.

"மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்..." என்று
(மஞ்சு = மேகம்) அரசன் சொல்ல அப்பொழுது என்ன தேவை?

"மலை காண்குவம்..." என்று சேரன் சொன்னது
எப்படிச் சில ஆசிரியர்களால் மலை வளம் காணப்புறப்பட்டான்
என்று சொல்லப்பட்டது?

மலை காண்குவம் என்பதும் மலை வளம் காண்குவம்
என்பதும் வேறுபடுத்திக் காட்ட முடிந்தவை.

மதுரை எரிந்த காலம் வேனிற்காலம். வெயில் தாங்காமல்
தற்போது உதகை, கோடை போன்ற இடத்திற்குச் செல்வது போல,
ஓய்வு எடுக்கச் சேரன் கிளம்பினானா?
அப்படி என்றால் அதுஒத்து வரக் கூடியதே.

ஆனால், அது ஆடிமாதம். ஆடிமாதம்; முதுவேனிற்காலம்.
சித்திரை வைகாசி இளவேனில்; ஆனி ஆடி முதுவேனில்.
வெயில் காய்ந்து ஓயும் வேளையில் இவன் தேக்கடிப் பக்கம் போய் ஓய்வெடுக்கச் சென்றான் என்பது நம்பத்தக்கது இல்லை.
மலைஇன்பம் வேண்டுமெனில் அவன் அதற்குச் சென்றிருக்க வேண்டிய காலம் சித்திரை வைகாசி. சேரன் வஞ்சியில் இருந்து புறப்பட்டுக் குணக் கோட்டம்வந்து அமைவது வரையிலான காப்பிய வருணனைகள் மயக்கம் தருபவை.

"விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம் பூங்காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்கு நீர்த்துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை
நாகந் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப"

....சிலம்பு:காட்சிக்காதை:11-23

இந்திரன் தான் மகிழ்வுற்று இருக்க 140 யோசனைகள்
பரப்பிற்கு பல வசதிகள் கொண்ட அரங்கம் அமைத்து
இயற்கையோடு தங்கியது போல செங்குட்டுவன் வந்து
இருந்தான் என்று சொல்லிப் படிப்போரை மயக்கி
விடுகிறார் அடிகளார். இந்த மயக்கத்திலே நாமும்
செங்குட்டுவன் வந்தது மலைவளம் கண்டு, குணக்கோட்ட
மக்களுக்குக் காட்சி அருளிச் செல்லவே என்று
எண்ணுகிறோம்.

ஆனால், ஒரு பேரரசன், தனது பக்கத்து நாட்டு அரசன்
தனது அரசியோடு, வியத்தகு மரணம் அடைந்து, அவனது
தலைநகரமும் தீக்கிரையாகிப் போய்க் கிடக்கையில்,
மலைவளம் கண்டு சுவைக்கவந்திருப்பானா?

மதுரையில் இருந்து வஞ்சி 260-270 கி.மீ தொலைவு.
அன்றையப் பகலில் பாண்டியன் மறைந்ததும்,
உளவுச் செய்தி காற்றெனப் பரிமிசை அதிக பக்கம்
இரண்டு நாள்களில் சேரனைச் சென்றடைந்திருக்கும்.

அன்றைய யாமத்தில் மதுரைத் தீக்கிரையாகி
அலமந்தசெய்தி அதற்கு அடுத்த நாளிற்குள்
சேரனுக்குச் சென்று சேர்ந்திருக்கும்.

இப்படி இருக்க ஒன்றுமேதெரியாதப் பச்சைக் குழந்தையாய்ச் சேரன் கிழக்குவாசலுக்கு மகிழ்வுலா வருவானா?

அத்தோடு, வஞ்சிக்குச் செய்தி கொண்டு போன
உளவாளிகளுக்குக் கண்ணகியின் வஞ்சினமும் கதையும்
அவள் உயர்வும் தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆகையால்
வஞ்சியில் இருந்து புறப்படு முன்னர்,
கண்ணகியைப் பற்றிக் குட்டுவனுக்கு எதுவுமே தெரியாது.

ஆனால், அவன் புறப்படும் முன் மதுரையில் அரசன்இறந்ததும் தீக்கிரையானதும் தெரியும். கண்ணகி தெய்வமான பின்னரே சேரன் குணக்கோட்டம் வந்திருக்கிறான் என்பது அங்கே மக்கள் அவனிடம் இந்தச்
செய்தியைச் சொல்வதை சிலம்பே சொல்கிறது.

கண்ணகியின் மறைவு மதுரை அழிவிற்குப் பதினான்கு
நாள்கள் கழித்தே. இந்தப் பதினான்கு நாள்களுக்குள்
சேரன் விதயம் அறிந்து, வஞ்சியில் இருந்து 150/160 கி,மீ
தொலைவில் இருக்கிறக் கிழக்கு வாசலுக்குப்
புறப்பட்டிருப்பான் என்பது எளிதில் நம்பக்கூடியதே.

மதுரை நேய அரசாகத்தான் இருந்திருக்கிறது.
அதனால்மாற்றார் யாரும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விடக்
கூடாது என்று கருதி வந்திருக்கலாம்!

இயல்பாகவே பக்கத்து நாட்டில் சரவல் இருக்கும் போது
அரணக் காவலை மேம்படுத்த வேண்டி வந்திருக்கலாம்!

வாய்ப்பிருந்தால், மதுரையை தனது நேரடி ஆட்சிக்குக்கொண்டு வந்துவிடலாம் என்று வந்திருக்கலாம்!

அல்லது பாண்டியர்களுக்கு உதவ வந்திருக்கலாம்!
செங்குட்டுவனின் சீற்றமிகு மறத்தினை அவனது பல்வேறு
போர்களில் சிலம்பும் பதிற்றுப் பத்தும் காட்டும்
பாடல்களில் இருந்து பார்க்கும் போது, செங்குட்டுவனின்
குணக்கோட்ட வரவு அரண வரவுதானே தவிர
மகிழ்வுலாவாக இருக்கவே முடியாது.

அப்படி இருப்பினும், அடிகளாரின் சேரனின் குணக்கோட்ட
வரவை வருணிக்கும் வரிகள் ஒரு இன்பச்சூழலைக்
காட்டுகிறதென்றால், அதுதான் காப்பியப் பண்பாடு!

காப்பியம் காட்டும் உயர் பண்பாடுகளில் இஃது ஒன்று! சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளுவதற்கானக்கரணியங்களில் இஃதும் ஒன்று என்றுதான்
சொல்லவேண்டும். அடிகளார் உயர்ந்து நிற்பது
இதனாலும்தான்.

மதுரையின் நிலை அறிந்து அவசர அவசரமாகச்
செங்குட்டுவன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றப்
படைதிரட்டி நின்றான் என்று காப்பியம்
சொல்லியிருக்குமானால், அல்லது பாண்டியன் மாள்வைத்
தொடர்ந்து மதுரையில் ஏற்பட்டப்
பெருங்கலகத்தை அடக்க சேரன் புறப்பட்டான் என்று காப்பியம் சொல்லியிருக்குமானால், சிலப்பதிகாரம், அரசியலும் போரும் மறமும் பெருத்த காப்பியமாக ஆகியிருக்கும்.

போர் முரசுகளின் ஒலியில் ஒப்பற்றப் பாண்டிய அரசனும் அரசியும்
உலகுக்கு உணர்த்திய பண்பாட்டொளியும், ஒப்பற்றக் கண்ணகியின் ஒளியும் சற்றேனும் மறைக்கப்பட்டிருக்கும். அதனாலேயே அடிகளார் அப்படிச் சொல்லவில்லை.

இந்த உயர்ந்த இலக்கியப் பண்பாடு உயர்ந்த
படைப்பாளிகளிடம் இன்றைக்கும் இருக்கிறது.
நமது குமுகத்தில் அதற்குச் சான்றாக இரண்டு
படைப்பாளர்களை/படைப்புகளைச் சொல்லலாம்.

அமரர் கல்கி தனது புகழ்பெற்ற பொன்னியின் செல்வன்
புதினத்தில் கடைசிவரை ஆதித்த கரிகாலனைக்
கொன்றவர் யார் என்று சொல்லவேயில்லை. அது ஒரு
நல்ல பண்பாட்டுக் காரணம்.

இன்னொன்றை, வீரபாண்டி கட்டபொம்மன்
திரைப்படத்திலேக் காணலாம். வெள்ளையத்
தேவன்போரில் சுடப்பட்டு மாள்வது போலக் காட்டியிருப்பார்கள்.
ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி.

வெள்ளையத் தேவன் கட்டபொம்மனைப் போல மறைந்து வாழ்கையில்,
1000 பொன் பரிசுக்கு ஆசைப்பட்ட அவனது
தாய்மாமனாலேயே வெள்ளையர்களிடம் காட்டிக்
கொடுக்கப் பட்டான்.

வரலாற்றைத் திரிப்பதுபடைப்புகளின் நோக்கம் அல்ல.
ஒரு வரலாற்றில் இருந்து எத்தனையோ படைப்புகள் வரலாம்.
ஆனால், எடுத்துக் கொள்ளப்படும் குறிக்கோள்களை மட்டும் உயர்த்தி
வைப்பதாக இருக்கும்.

அப்படித்தான் அடிகளார் காப்பியத்தை அமைத்திருக்கிறார்.

மலை காண்குவம் என்று வரும் குட்டுவன்வருகை,
வரும் அழகைப் பற்றி மட்டும் சொல்லப்படுவதால்,
அது அவன் மலை "வளம்" காணு வருகையாக நமக்குத் தெரிகிறது.

ஆயினும் அடிகளார் ஒரு குறிப்பை மட்டும் அழற்படு
காதையிலேயே கொடுத்திருக்கிறார் என்பது, மதுரை
தீக்கிரையான போது கவனிக்க வேண்டிய முக்கியமான
விதயங்களில் மூன்றாவது.

"ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக்கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந் தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப..."

"காழோர் வாதுவர் கடுந் தேர் ஊருநர்
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள.."
....சிலம்பு:அழல்:8-15

பாண்டியன் அரண்மனையில் அலுவலர்கள்
அனைவரும் செயல் நடப்பு ஏதும் அறியாது
இருக்கின்றனர்.

பல்வேறு காவற்படையினரும் தீமுகம் கண்டு
கோட்டையை விட்டு அகன்று போகின்றனர்.

குமுகத்திற்கு எந்தத் தீங்கு ஏற்பட்டாலும் அதில்
இருந்து மக்களைக் காப்பது காவலர்/படையினர்கடமை. அவர்களே வெளியேறி விடுகிறார்கள்என்றால் தலைநகரம் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றுதானே பொருள்?

அரசியலில் பிற நாட்டிற்கு இது ஏது அல்லவா?
ஆகவே, குட்டுவனின் குணக்கோட்ட வருகை
என்பது அரண வருகை. அது இன்ப உலா அல்ல.

பாண்டிய நாடு அல்லல் பட்டு இருக்கிற போது
சேர நாட்டின் கிழக்குப் பாசறையான குணக்கோட்டத்தில்
வந்து அமர்ந்த சேரன், பின்னர்ப் பாண்டிய நாட்டில்
அரசியல் குழப்பம் ஏதுமில்லை என்பதை உறுதிசெய்த பிறகே,
மதுரை அழிந்ததால் சேரநாட்டுக்கும்
பகைவரால் சரவல் வர வாய்ப்பில்லை என்று உறுதி
செய்த பின்னரே அவன் நீண்ட காலம் பிடிக்கக் கூடிய
வடநாட்டுப் படையெடுப்பு என்று முடிவை
குணக்கோட்டத்தில் எடுக்கிறான்.

வெறும் மலைவளம் காணு வருகையாக அது இருந்திருந்தால்
அங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்காது.

பதிற்றுப்பத்துக் கூறும், குட்டுவனின் மோகூர் வெற்றி உள்ளிட்ட பல வெற்றிகளில் குட்டுவனின் சீற்றமிகு போர் மற்றும் அரசியல் திறனைக்
காணும்போது செங்குட்டுவனின் குணக்கோட்ட வருகை
இன்ப உலா வருகை என்று எண்ணுவது தவறு.

முந்தைய கட்டுரைகளில் விளக்கியது போல,
அப்பேர்ப்பட்ட மறம் மிகுந்த திறன் மிகுந்த
மூத்தவன் குட்டுவன் இருக்கும் போது,
அவனுக்காக இளையவன் இளங்கோ
அரசைத் துறந்து ஈகை அல்லது தியாகம் செய்தான்
என்பது பெரும் தவறு.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, February 17, 2008

சிலம்பு மடல் 37

காப்பிய ஆசிரியரின் துறப்பு/துறவு!

காப்பிய ஆசிரியர் அரசு துறந்தார் என்றும்
அகல் இடப் பாரம் நீக்கினார் என்றும்
காப்பியம் சொல்கிறது.

"வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கிக்
கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்இடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்து
அந்தம்இல் இன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி"
...சிலம்பு:வரம்தரு காதை:173-183

தேவந்திமேல் கண்ணகி தெய்வம் எழுந்தருளிக்
காப்பிய ஆசிரியரின் சிறப்பை சொன்ன இடம் அது.

"குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு...."
...சிலம்பு:பதிகம்:1-2

காப்பிய முடிவிலும் முகப்பிலும் இருக்கும் இந்த
இரண்டு குறிப்புகள் ஆசிரியரின் துறவு/துறப்பைப்
பற்றிப் பேசுகின்றன.

பல்வேறு நூலாசிரியர்களும் செங்குட்டுவன்
அரசனாகும் பொருட்டு இளங்கோ துறவியானார்
என்றும், பெரிய ஈகையைச் செய்தார் என்றும்
சொல்கிறார்கள் இந்தக் குறிப்புகளின்
அடிப்படையில். இன்னும் சிலர் அண்ணனுக்கு
வழி விட்டு தம்பி துறவியானார் என்று கூடச்
சொல்லத் தலைப்படுகிறார்கள்.

சிலம்பாசியர் துறந்தது உண்மை. அதை மறுக்க
வாய்ப்பில்லை.

எதைத் துறந்தார்? என்றால், அரசைத் துறந்தார்
என்று தெளிவாகத் தெரிகிறது.

ஆனால்,
எந்த அரசைத் துறந்தார்?
துறவின் தன்மை எத்தகையது?
என்ற இரு வினாக்களும் முக்கியமானவை.

சிலப்பதிகாரத்தைப் படிக்கும் யாவர்க்கும்
இளங்கோ முற்றும் துறந்த சாமியார்
என்ற எண்ணத்தைத் தருகிறது. அதுவும்
சிலர் சமணர் என்று சொல்வதையும் கேட்டு
அவர் சமணச் சாமியார் அல்லது சமணத் துறவி
என்று கூறுகின்றனர். அவர் எந்த நெறியைப்
பின்பற்றினார் என்பதெல்லாம் வேறு விதயம்.

இமயவரம்பன் சேரக் கொடியை இமயத்தில்
பொறித்த சேரப் பேரரசன். அவனுக்கு
இரண்டு பிள்ளைகள்; செங்குட்டுவன் மற்றும்
அவன் தம்பி.

இந்த இரண்டு பேருமே இமயவரம்பன் அரசின்
இளவரசர்கள். ஆட்சிப் பொறுப்பில்
இமயவரம்பன். "நுந்தை தாள்நிழல் இருந்தோய்"
என்று சொல்லப்படுவதைக் காண்க.

இவர்களோடு அமர்ந்திருக்கும் போது நிமித்திகன்
என்று உரைக்காரர்களால் சொல்லப்படும் ஒருவர்
சில திருச்சொற்களைச் சொல்கிறார்.

"...அரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டு..."

இந்தச் சூழலை நன்கு கவனிக்க வேண்டும்.
இமயவரம்பன் ஆட்சியில் இருக்கிறான்.
அவனுக்குப் பிறகு பட்டத்துக்கு யார்
வரவேண்டும் என்றால் - யாரையும் அவன்
கேட்கவேண்டியதில்லை. மரபுப்படி மூத்தவன்தான்
பதவிக்கு வரவேண்டும். அவன்தான்
பட்டத்தரசனாகப் பட்டம் கட்டப் படுவான்.
இதுதான் மரபு.

இதில் இமயவரம்பன் எதற்கு நிமித்திகனைக்
கேட்க வேண்டும்? அப்படியே கேட்டிருந்தால்
என்ன கேட்டிருப்பான்?

எப்பொழுது "குட்டுவனுக்குப் பட்டம் கட்டலாம்"
என்று கேட்டிருப்பான்; கூடவே எங்கே எப்படி
என்றும் கேட்டிருக்கலாம்.

இமயவரம்பன் கேட்கும் போது கூடவே
"துறப்பது" என்பதை அறிந்த வளர்ந்த
சின்ன மகனும் அவனுக்கு மூத்தவனான
பட்டத்துக்குரிய அண்ணனையும் வைத்துக்
கொண்டு கேட்கின்றான் என்றால்
அண்ணன் தம்பிக்குள் மன இடர் வரக்கூடிய
ஒன்றைக் கேட்க மாட்டான். அந்த முதிர்ச்சி
இல்லாதவன் இமயம் வரை வெற்றி கண்ட
பேரரசனாக இருக்க மாட்டான். (ஒரு ஏழைத்
தகப்பனுக்குக் கூட இந்த முதிர்ச்சி இருக்கும்.)

அது மட்டும் அல்லாது, அரண்மனையில்
அரசனின் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை
சோதிடம் அல்லது நிமித்தம் பார்க்காமல்
இருந்திருப்பார்கள் என்று எண்ண வாய்ப்பில்லை.

அந்த அவையில் "உரை செய்தவன்" என்றுதான்
காப்பியம் கூறுகிறது. உரை செய்பவன் என்றால் யார்?

எதிர்காலம் பற்றிக் குறிப்புகள் சொல்வதில் பல
வகை உண்டு. சோதிடம், கைரேகை போன்று
பல வகைகள்.

அருள் வாக்கில் பல வகையுண்டு.

சிலம்பில் பல இடங்களில் இப்படியான இடங்கள்
உண்டு. வேட்டுவ வரியில் சாலினியாட்டம்
சொல்லப் பட்டிருக்கிறது. கொற்றவை (அம்மன்)
ஒரு பெண்ணின் மீது ஏறி ஆடி அருள்வாக்கு
சொல்வது (ஏறத்தாழ வேப்பிலையாட்டம் போல
இருக்கும்). குன்றக்குரவையில் வேலன் ஆட்டம்
(வெறியாட்டு) சொல்லப்படுகிறது. (காவடியாட்டம்
போல இருந்திருக்கக் கூடும்) வேலன் ஆட்டம்
ஆடக்கூடிய ஆடவன் மேல் முருகன் ஏறி அருள்
வாக்கு/உரை சொல்வது.

இதுவன்றி சிலம்பில் அருவுரை பேசப்படுகிறது
(அருவ உரை << அருவுரை: அருவம் << அரு;
அருவம் = அசரீரி). அதற்கும் மேலே
எல்லாவற்றுக்கும் மேலாக மீனாட்சி அம்மன்
தெய்வமே பேசுகிறது. வரம் தரு காதையில்
கண்ணகி அம்மை பேசுகிறது.

அரண்மனையில் இமயவரம்பன் முன்னிலையில்
எவ்விதமான உரைசெய்வார் இருந்திருக்க
வேண்டும்?

வேலனாட்டமும் சாலினியாட்டமும்
இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால்
காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும். அது
மட்டுமல்ல இந்த இரு ஆட்டத்திற்கும் பம்பை
உடுக்கு முதலான இன்னியக் கருவிகளை வாசித்து
வேலனையோ சாலினியையோ அழைக்க
வேண்டும். அந்தச் சூழல் இருந்ததாகத்
தெரியவில்லை.

சோதிடம் என்பது காலக் கணிதம். காலக் கணிதர்
சொல்லியிருந்தால் ஏதாவது இராசி, நட்சத்திரம்
போன்றவற்றைச் சொல்லித்தான்
சொல்லியிருப்பார். அப்படிச் சொல்லப்படவில்லை
காப்பியத்தில்.

"திருப்பொறி" என்றால் ஒரு வேளை ஏதாவது
உடம்பில் அல்லது உள்ளங்கையில் உள்ள குறியா
என்றால்? - இருக்கலாமோ என்ற எண்ணம்
வருவது இயல்பு. அந்த அடிப்படையில் கூட
பலரும் உரை எழுதியிருக்கலாம்.

ஆனால் அதுவும் இல்லை என்று ஆதரவு
தருகிறார், அப்பர் திருமூலர். 'அரைசு
வீற்றிருக்கும் திருப்பொறி'
உண்டு என்பது மந்திர முடிச்சு! அதைத்
திருமூலரால் மட்டும்தான் அவிழ்க்க முடிகிறது.

அரண்மனையிலே அரசகுரு போன்றோர்
இருப்பர். ஆன்ம, சமய நிலைகளில் அரசனுக்கு
வழிகாட்டும் நிலையில் ஞானமும் அருளும்
நிறைந்த பெரியார் இருப்பர். அப்படியான
பெரியார் ஒருவர், இமயவரம்பன் அரண்மனையில்
இருந்திருக்க வேண்டும்.

ஞானமும் அருளும் நிறைந்த அருளாளராகவே
அவர் இருந்திருக்க வேண்டும்.

இப்படியானவர்கள், பேரரசிற்கு ஞானகுருவாகவும்,
சமயகுருவாகவும், அரசகுருவாகவும் இருப்பது உண்டு.

அவரிடம் அரசியல் மற்றும் பட்டம் கட்டுவது
பற்றிய அரச ஆலோசனையின் போது அந்த
அருள் நிறைப் பெரியார், செங்குட்டுவன்
பேரரசனாக்குவது பற்றி பேசிவிட்டு,
இளங்கோவுக்கு "திருப்பொறி அரைசு
வீற்றிருக்கிறது" என்று சொல்லியிருக்க வேண்டும்.

பல நூல்கள் சொல்வது போல அது அரசாளும்
அங்க இலக்கணம் காட்டும் பொறி அல்ல.

அந்தப் பொறியானது திருப்பொறி; அது
இளங்கோவிடம் அமைந்திருக்கிறது; எப்படி
என்றால் அரைசு வீற்றிருப்பது போல.

ஓங்கிச் சிறந்த ஞானப் புலன் இளங்கோவிடம்
அமைந்திருக்கிறது என்று அவர் சொல்கிறார்.

"அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு"
என்பதை ஆழ்ந்து படித்தால் அது தரும்
பொருள் "திருப்பொறி அரைசு வீற்றிருக்கிறது"
என்றுதான் வருகிறது. அதாவது
அந்தத் திருப்புலன் என்ற ஞானப் புலன்

நாட்டையெல்லாம் ஆளும் அரசனைப் போல
ஓங்கி உயர்ந்து இவனிடம் குடி கொண்டிருக்கிறது
என்று அது சொல்கிறது.

ஐம்பொறிகள் என்றால் மெய், வாய், கண், மூக்கு,
செவி என்ற ஐந்தினைக் குறிக்கும்.

எல்லா மனிதருக்கும் இருக்கும் மேலும் ஒரு
பொறி, மனம் அல்லது சிந்தை. ஒரு சிலருக்கே
அந்த சிந்தையில் இறைவன் அருளால் பெருஞ்ஞானப்
பெருஞ்சுடராய் ஞானப்புலன் விளங்குகிறது. அந்தப்
பெருஞ்சுடரை, பெருஞ்ஞானத்தைக் கொண்ட
சிந்தையைத்தான் "திருப்பொறி" என்று கூறுகிறது
காப்பியம். அந்தத் திருப்பொறி குட்டுவன் தம்பி
இளங்கோவிடம் வீற்றிருக்கிறது, குடி
கொண்டிருக்கிறது என்பதையும், அது ஓங்கி
உயர்ந்து நிறைந்து ஆளுமை செய்கிறது
என்பதைச் சுட்டவே "அரைசு வீற்றிருக்கிறது"
என்றும் சொல்கிறார் அந்தப் பெரியார்.

பொறி என்ற புலனில், திருவைக் கூட்டி
அதை சிம்மாசனம் போட்டு இளங்கோ மேல்
அமர வைக்கிறது காப்பியம்.

இப்பொழுது பாருங்கள் எங்கப்பன் மூலன் எப்படி
பல முடிச்சுகளை அவிழ்த்து விடுகிறான் என்று!

"கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே"
...திருமந்திரம்:த1-கல்வி-பாடல்291
(பழனியப்பா பதிப்பு, யி.வரதராசனார் உரை)

விளக்கம்: "உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப்
பார்க்கும்போது, அவர்கள் கருத்தில் ஞானக்கண்
புலனாகிறது. அவர்கள் அவ்வாறு புலனாகும்
உண்மையைச் சிந்தித்து, பிறர்க்கு உரைப்பர்.
கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறருக்கு
உணர்த்தி அவர்களது ஞானக்கண்ணை
விளங்கும்படி செய்வர்".

கற்றறிவாளர் கருத்தில் ஞானக்கண் புலனாகிறது
என்று சொன்னவிடத்து, அதுதான்
கற்றறிந்த இளங்கோவின் மேல் அரைசு
வீற்றிருக்கும் திருப்பொறி என்பது
அறியப்படுகிறது.

"கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்"
என்றவிடத்து இமயவரம்பனின் அரசவைப்
பெரியாரும் ஞானக்கண் பெற்றவர் என்பதும்
தனது ஞானத்தினால் இளங்கோவின் ஞானத்தை
அறிகிறான். அந்த ஞானம் பெருஞ்சுடர்
என்று அறிகிறான். அதை உரை செய்கிறான்
என்றும் அறியப்படுகிறது. அந்த ஞானக்கண்ணை
அந்தப் பெரியார் விளங்கவும் வைத்திருப்பார்.

ஒரு பெரியாரை "உரைசெய்தவன்" என்று
காப்பியம் சொல்லுமா? என்ற கேள்விக்கு,
சொன்னவள் கண்ணகி என்ற தெய்வம். அவள்
தேவந்தி மேல் வந்து சொன்னாள். தெய்வம்
அப்படித்தான் பேசும் என்று புரிந்து கொள்ள
முடிகிறது.

"உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி"
என்று சிலம்பு சொல்லுமிடத்து, இளங்கோ
வெகுண்டான் என்று பொருள் சொல்கிறார்கள்.
உருத்து என்பதற்கு சினந்து, வெகுண்டு என்ற
பொருள் உண்டாயினும், அச்சம் என்ற ஒரு
பொருளும் உண்டு. இளங்கோ அஞ்சினான்.
அல்லது மிரட்சியாய்ப் பார்த்தான் என்று
பொருள் கொள்வதுதான் சரி. ஏனென்றால்
அவன் இளைஞன்; இளவரசன். அவனைப்போய்,
உன்னிடம் பெருஞ்சுடர் வீற்றிருக்கிறது என்று
சொன்னால் அவன் பேந்தப் பேந்த விழிப்பான்
முதலில். அந்த விழியில் வெகுளியும் மிரட்சியும்
அச்சமும்தான் இருக்கும். ஆகவே அவன்
வெகுண்டு அரசு துறந்தான் என்பது மிகத் தவறு
என்பது அறியப்படுகிறது.

"செங்குட்டுவன்தன் செல்லல் நீங்க" என்று
சொல்கிறார்களே "செல்லல்" என்றால்
மனவருத்தம் என்று பொருள் கூறுகிறார்களே
என்பதற்கு விளக்கமாக,

"செங்குட்டுவன் தன்செல் அல் நீங்க" என்று
படித்துப் பார்த்தால் விளக்கம் கிடைக்கும் என்று
சொல்ல முடிகிறது,

"செங்குட்டுவன் வழியில், அவன் அரசாளும்
வாழ்க்கையில், அவனை இருள் அண்டாதிருக்கும்
ஞான ஒளியை அவனுக்குக் காட்டி உதவும்
பொருட்டு" (அல் = இருள் எல் = ஒளி) என்று
பொருள் வருவதை அறிய முடிகிறது.

"பகல் செல் வாயில் படியோர் தம்முன்
அகல் இடப் பாரம் அகல நீக்கி"

என்ற இடத்து:

பகல்செல் வாயில் என்றால் அது குணக்
கோட்டம் என்று முந்தைய கட்டுரைகள்
விளக்குகின்றன.

"படியோர்" என்றால் பலநூல்களிலும்
அங்கிருந்த துறவிகள் என்று சொல்லப்படுகிறது.

படி என்றால் படிவம் என்ற பொருளில்
"குணவாயில் கோயில்" என்ற பழைய
கருதுகோளில் அங்கிருந்த தெய்வச் சிலைகளின்
முன்னர் "அரசு துறந்து" துறவியானார்
என்றும் சில நூல்களில் சொல்லப் படுகிறது.

ஆனால் படியோர் என்றால் அதற்குப் பொருள்
முறையானவர் என்பதே. படிவது என்பது
முறைப்படுவது. "அடியாத மாடு படியாது" என்று
சொல்வது காண்க.

அது மட்டுமல்ல,

"அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமகனார் மகளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே"
...திருமந்திரம்:த2-இலிங்கபுராணம்-பா347

"ஆதிபராசக்தியான அன்னை, மலையன் மகளாகி
முக்கணனை முறையாக அர்ச்சித்து பத்தி செலுத்தி
வழிபட்டாள்" என்பது குறுகிய விளக்கம்.
இங்கே படியார என்பது முறையாக என்று
பொருள் தருவது அறியக் கிடைக்கிறது.

"அகல்இடப் பாரம் அகல நீக்கி" என்றால்,
ஆமாம் இளங்கோ அரசைத் துறந்தான்.

இமயவரம்பனின் முடியரசின் கீழ்
அவனது இளைய மகன் இளங்கோ
குணக்கோட்டம் என்ற கிழக்கு வாசல்
நிலப்பரப்பின் மாதண்ட நாயகனாக
இருந்தான்; அந்தப் பதவியை துறந்தான்!
அந்தப் பதவியைத் துறந்து, தன் அண்ணனுக்கும்
அண்ணனின் பேரரசிற்கும் இருள் நெருங்காமல்,
இருக்க தன் ஞானப் பேரரசால் உதவ
இந்த 'இடப் பதவியை" துறந்தான்.

அதனை அவன் தந்தை, அண்ணன், ஆசான்
மற்றும் சான்றோர் போன்ற முறையானவர்கள்
(படியோர்) முன் துறந்தான்.

இளங்கோ குணக்கோட்ட மாதண்ட நாயகன்
என்றால், செங்குட்டுவன் வஞ்சி அல்லது
பிற பகுதிகளுக்கு மாதண்ட நாயகனாக
இருந்திருக்க வேண்டும்.

அரசன் ஆட்சியில் இருக்கும் போது,
தலையெடுக்கும் அவன் பிள்ளை, ஆட்சிப்
பரப்பின் முக்கிய பகுதிகளில் உள்-ஆளுமை
செலுத்துவது பழக்கம்; மரபு.

அப்படித்தான் இமயவரம்பன் ஆட்சியிலே
இருக்கும் போது, அவனின் தலையெடுத்த
பிள்ளைகளான குட்டுவனும் இளங்கோவும்
ஆளுக்கொரு முக்கிய பகுதிக்கு மாதண்ட
நாயகர்களாக இருந்திருக்க வேண்டும்.

பகல்செல் வாயிலில் அப்பதவியினைத் துறப்பதால்
அந்த உள்-அரசைத் துறப்பதனால் இளங்கோ
குணக்கோட்ட மாதண்டநாயகனாக இருந்து
பின்னர் அதைத் துறக்கின்றான், ஞானப்பேரரசை
ஆளுதற்காக.

வரலாற்றில் இதற்கு நிறைய சான்றுகள் உண்டு.
இராசராசப் பேரரசன் தன் மகன் இராசேந்திரனை
கங்க நாட்டில் அதாவது கொங்கு நாட்டிற்கு
வடக்குப் பகுதிகளின் மாதண்ட நாயகனாக்கி,
அரசைப் பாதுகாத்தான் என்பது வரலாறு.

அவன் காலத்திலேயே, சேரநாட்டை ஆண்ட
பாசுகர இரவிவர்மன்(1), அவன் மகன் இரண்டாம்
பாசுகர இரவிவர்மனை உதகையில் மாதண்ட
நாயகனாக பதவியில் வைத்திருந்தான்.

அவ்வளவு ஏன், சிலப்பதிகாரத்திலேயே,
மதுரையை ஆண்டு மடிந்த பாண்டியன்
நெடுஞ்செழியன், அவன் மகனான வெற்றி வேல்
செழியனை கொற்கையிலே அமர்த்தி
தென்பாண்டி நாட்டின் காவலனாக
வைத்திருந்தான்.

இன்றைய காலத்தில் கூட இப்படியான பழக்கம்
இருக்கிறது என்று சொல்வாரை நான் துளியும்
மறுக்க மாட்டேன்!!!

ஆகையால் காப்பியத்தின் பதிகத்தில்
சொல்லப்படுகிற "குணவாயில் கோட்டத்து அரசு
துறந்த" என்ற வரியும், வரந்தரு காதையின்
"அகல் இடப் பாரம் அகல நீக்கி" என்று
சொல்லப் படுகிற வரியும் ஒன்றாகப் பார்க்கப் பட
வேண்டியவை. அவை இளங்கோ
குனக்கோட்டத்தின் காவலனாக, மாதண்ட
நாயகனாக இருந்த பதவியைத் துறந்ததை
சொன்ன வரிகள்.

உரைசெய்த பெரியார் சொன்ன
"அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு"
என்று சொன்னது அவனை ஞானி என்று
கண்டறிந்தது.

இரண்டையும் ஒரே பார்வையில் பார்த்து துறவு குறித்து
பல நூல்களும் வேறு பொருள்களைத் தருகின்றன.
ஆகவே, காப்பிய ஆசிரியரின் துறப்பு என்பது
இதுதான்; இத்தன்மையதுதான்.

இளங்கோ ஒரு சோகத் துறவியும் அல்ல, ஈகைத்
துறவியும் அல்ல.

குட்டுவன் நாட்டு வேந்தன்.
இளங்கோ ஞானவேந்தன்.

இருவரின் சுவடுகளும் தமிழ் உலகின் அழியாப் பதிவுகள்.

இவர்கள் இரண்டு பேருமே பெரும் பேறு
பெற்றவர்கள்தான்; ஆனால் இவர்களை மகனாகப்
பெற்ற இமயவரம்பன்தான் இவர்களை விட
பெரும் பேறு பெற்றவன். பெற்றவனுக்கு
இதை விடப் பெரும் பேறு கிடைக்க முடியாது.

"சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்து
அந்தம்இல் இன்பத்து அரசுஆள் வேந்துஎன்று"

என்று சொல்லும் சிலப்பதிகார வரிகளை
மிக மேலேத்திப் பிடிக்கிறது திருமந்திரம்.
அதையும் சேர்த்தால் கட்டுரை இன்னும்
நீண்டு விடும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, February 15, 2008

சிலம்பு மடல் 36

குடமலை நாட்டிற்குக் கிழக்கே இயற்கை அன்னை
அள்ளிக் கொடுத்த செல்வம் மலைத் தொடர்கள்.
பாலக்காட்டிற்கு வடக்கேயும், பாலக்காட்டிற்குத்
தெற்கேயும் தொடரும் இந்த மலைத் தொடர்கள்
சேர மண்ணின் மேல் அனைவரும் காணக்
குவியலாய் கிடக்கும் மரகதப் புதையல்கள்.

மேகங்கள் வந்து முத்தமிட, அங்கேயே அவற்றை
இளகி வழிய வைக்கும் மரகதப் பேரழகிகள். இந்த
அழகிகளிடம் சிக்கிக் கொண்டவன் நிலத்தை
நோக்குவதேயில்லை. "சித்தர்களும் அப்படிச்
சிக்கிக் கொண்டவர்கள்தான்; முனிவர்களின்
மோனங்களும் மரகத மோகம்தான்!!". ஞானிகளும்
சொல்லித்தர மறுக்கும் இரகசியம் அது.

சேரநாட்டின் இந்தப் பேரழகிகள் ஆணவம்
மிக்கவர்கள். ஆதிக்கப் பேரழகிகளின் முன்னால்
பேரரசனும் ஒரு தூசு. மறுப்போர் உண்டு?

ஓரழகியின் ஒற்றை அசைவிற்கே ஒடுங்கிப்
போய்விடும் மாந்தருக்கு முன்னால், அணிவகுத்து
நிற்கும் அழகிகளின் ஆர்ப்பரிப்பு!

நீலவானையும் மஞ்சத்துக்கிழுக்கும் நிமிர்ந்த
முகடுகள் திமிர் பிடித்தவை. அம் முலைகளில்
சிக்கிச் சீரழிந்த மேகங்கள் எனக்குச் சொன்ன
சேதியிவை!

மேகத்தின் சோகங்கள் அத்தோடு நின்றதில்லை.

ஊருலகு எங்கேயும்
காரிருளைப் போக்குகின்ற கதிரவனை
யாரேனும் காணாமல் செய்கின்ற
மாயம் விளை மேகங்கள்,
"தாம் விடுத்தும்"
எல் செய்வானை சேரத்துள் சேர்க்காமல்
சிறைவைக்கும் பாவைகளை
செய்ய ஒன்றும் ஏலாது
வானெங்கும் ஓடோடி முறையிட்டே
வாழ்கின்ற சோகத்தைக்
காண்கின்றார் கண்பனிக்கும்.

கண்டெடுக்கச் சென்ற என்னைக்
காமுற வைத்தப் பேரழகி
சொல்பேச்சில் சொக்கிப்போய்
நானேதோ பிதற்றிடினும்
சிக்கித்தான் நிற்கின்றான் சிவந்த சூரியனும்;
சேர பூமியினை அவன் எட்டிப் பார்க்கவும்
மலைப்பாவை மனம் வைக்க வேண்டும்!

சேரநிலத்திற்கு அரணாக இருக்கும் இந்த மலைத்
தொடர்களில் இடுக்கி மாவட்டக்
கிழக்கெல்லையில் மட்டுமே 13 மலைகள்
சுமார் 2000 மீட்டர் உயரத்திற்கும்
மேலானவைகள் என்று புள்ளியியல் சொல்கிறது.

கதிரவ எழுச்சி நமக்கெல்லாம் கடலின் மேல்
என்றால் சேரநாட்டிற்கு இம்மலைகளின் மேல்தான்
உதயசூரியன். "மிக்கிளஞ் சூரியனை"
வெகு அதிகாலைக் காண வேண்டுமானால்
சேரநாட்டான் இந்த மலைகளின் இடுக்குகளைத்
தேடத்தான் வேண்டும் என்பேன்.

தேடவில்லையானால் சில நொடிகளேனும்
இந்த மலைகளின் மறைப்பு சேரனைக் காக்கத்தான்
வைக்கும்.

உயர்ந்த மலைகளுக்கு அஞ்சி, குறைவான உயரம்
உடைய அல்லது சமவெளி இடுக்குகள் வழியே
வரும் மிக்கிளஞ் சூரியனுக்கு வழியாக நிற்பதாகக்
கவிஞர் எண்ணியதால்தான்
"குணவாயில்" என்று சொல்லாட்சியைப்
பயன்படுத்தியிருக்க வேண்டும்.

கிழக்குதிக்கும் கதிரவன் குடமலை நாட்டுக்குள்
நுழையும் வாசல் "கிழக்கு வாசல்" என்ற
குணவாயில். கிழக்கு வாசலை நிலப்படங்களைப்
பார்க்கும் போது அப்படியான கருத்து
வலுப்படவே செய்கிறது.

இதை மேலும் வலுப்படுத்துவது போல்தான்
வரம்தரு காதை இப்படிச் சொல்கிறது.

"பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்இடப் பாரம் அகல நீக்கி......"
...சிலம்பு:வரம்தரு காதை:179,180

காப்பியத்தின் முகப்பு, "குணவாயில்" என்று
சொல்கிறதென்றால் காப்பியத்தின் கடைசிக்
காதையில் ஏறத்தாழ காப்பியம் நிறைவு ஆகும்
போது கண்ணகி தேவந்தி மேல் எழுந்தருளி
காப்பிய ஆசிரியரின் முந்தைக் கால நிகழ்வை
(அதாவது அவர் துறவைப் பற்றிச் சொல்லிய
இடம். இதுபற்றி மிக ஆழ்ந்து பார்க்கப்
போகிறோம்) சொன்ன இடம்.

"பகல்செல் வாயில்" என்று காப்பியம் குறிப்பது
இலக்கியச் செறிவு மிகுந்த மேலும் ஒரு
சொல்லாடல். இருள் நீக்கும் இளஞ்சூரியன்,
அதாவது பகலைச் செய்யும் இளஞ்சூரியனை
பகல் என்றே சொல்லி அந்தப் பகல்
சேரநாட்டிற்குள் செல்லும் இடத்தில் துறந்தாய்
என்று சொல்வது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

குணவாயில் என்பது நாட்டிற்குள்
எளிதில் நுழையக் கூடிய பகுதி.
இது பகல் செய்வானுக்கும் பொருந்தும்.
பகை செய்வானுக்கும் பொருந்தும்.
பகலை வரவேற்று, பகைக்கு அரணாக
இருந்ததுதான் குணவாயில் கோட்டம்.

காப்பிய முகப்பு "குணவாயில் கோட்டத்து
அரசுதுறந்து" என்று சொல்கிறது. காப்பிய முடிவு
"பகல்செல் வாயில்" அகலிடப் பாரம் நீங்கினாய்!
என்று சொல்கிறது.

இந்த இரண்டு செறிவு மிக்க வரிகள்
குணவாயில் என்பதனை கிழக்கு வாசல் என்று
உறுதி கூறுவதோடு இலக்கிய நயத்தையும் ஏத்தி
நிற்கின்றன.

"இரண்டு வரிகளும் காப்பியத்தின் இரு
முனைகளில் பொருளொத்து நிற்கின்றன."

குணவாயில், கோட்டம், என்ற இரண்டு
சொற்களும்(சீர்கள்) நாம் எடுத்துக் கொண்ட
மூன்றாவது சொல்லான (பதிகத்தின் மூன்றாவது
சொல் அல்லது காப்பியத்தின் மூன்றாவது சொல்)
"அரசுதுறந்து" என்பதன் பொருளை,
தொடர்ச்சியில் விளக்க மிக்க ஏதுவாகின்றன.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Wednesday, February 13, 2008

சிலம்பு மடல் 35

சிலம்பு மடல் - 35:

குணவாயில் கோட்டம் என்பது கிழக்கு வாசல் கோட்டை அல்லது பாசறை என்பதற்கு ஆதரவாகக் கிடைக்கும் சான்றுகளும்
ஏரணங்களுமாக நான் காண்பவை:

35.1) சேர மாநிலத்திற்கு அரண வாசல்கள் நான்கு.
ஆய்நாட்டுக்குட்பட்ட காந்தளூர்ச் சாலை தெற்கு வாசல்.
குடமலை நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் இருக்கும் உதகை மண்டலம் வடக்கு வாசல். (திசை வட கிழக்கு என்ற போதிலும்).
அதனை "முதன்மை வடக்கு வாசல்" என்றும் கூறலாம்.
மேற்கு வாசல்கள் நீண்ட அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளன. அது வஞ்சி, விழிஞம் போன்ற துறைமுக நகர்களாக அமைந்திருக்கின்றன.

இந்த மூன்று வாசல்களும் இப்படியிருக்க,
பாண்டிய சேர நாட்டு எல்லையில் மதுரைக்கு
அண்மையில் இருக்கும் இந்தக் "குணவாயில்"
கிழக்கு வாசலாக அமைகிறது.

காந்தளூர்ச்சாலை சேர நிலத்திற்கு தென்பாண்டி
நாட்டுப் பகைக்கு அரணாக அமைகிறது.

உதகை கொங்கு நாட்டு வழிப் பகைக்கு
அரணாக அமைகிறது.

கடல் வழிப் பகைக்கு மேற்கு வாசல்கள்
அரணாக அமைகின்றன.

அது போல மதுரை வழிப் பகைக்கு
அரணாக அமைவது குணவாயில் என்கின்ற
கிழக்கு வாசற் கோட்டம்.

35.2) சேர மாநில அரண் அமைப்பு 35.1ல் கண்டது போல் இருக்க, சேர மாநிலத்திற்கு உட்பட்ட குடமலை நாட்டைப் பார்த்தோமானால் வஞ்சிக்குத் தெற்கே கோட்டயம் உள்ளது. இது ஒரு கோட்டை நகரம். அரண நிலம்.

இந்தக் கோட்டையம் குடமலை நாட்டின்
தெற்கு எல்லை அரண நிலமாக இருந்திருக்க
வாய்ப்புள்ளது.

அதேபோல வஞ்சிக்கு வடக்கே மலைப்புரத்திற்கு
அருகே கோட்டக்கல் (வைத்திய சாலை புகழ்)
என்ற சிற்றூர் உள்ளது. இந்தக் கோட்டக்கல்
வெள்ளையர் காலங்களில் அரண நிலமாக
இருந்துள்ளது. இது பழங்காலத்திலும் இப்படி
இருந்திருக்கும் என்ற கருதுகோள் கொண்டால்
இது குடமலை நாட்டிற்கு வடக்கு அரண நிலமாக
அமைகிறது. கோட்டக்கல் மலைப்புரம் பழைய வள்ளுவ நாட்டுத் தலைநகராக இருந்துள்ளதால் அதற்கு ஒரு 10 கல் தொலைவில் உள்ள கோட்டக்கல் (இதற்கு வெங்காளிக் கோட்டை என்ற பெயர் இருப்பதாக அறிகிறோம்)
அரண நிலமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இன்னொரு சேதி
என்னவென்றால் இந்தக் கோட்டக்கல்லுக்கு
நேர் கிழக்கே உதகை இருக்கிறது.
ஆகவே இந்த அடிப்படையில் இது குடமலை
நாட்டின் வடக்கு வாசலாகக் கருத இடமுண்டு.

கொங்கு நாடு குடமலைநாட்டோடு சேராது குடமலை நாடு தனித்து இருக்கையில், மேற்கு வாசல் வஞ்சியாகவும், வடக்கு வாசல்
கோட்டக்கல்லாகவும், தெற்கு வாசல் கோட்டயமாகவும் இருந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், குணவாயில் என்பது கிழக்குக் கோட்டயம் ஆக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் ஏரணங்களில் ஒன்றாகப் பார்க்க வேண்டும். கோட்டயம் என்றால் கோட்டைப் பகுதி என்ற பொருளில் இந்த ஏரணத்தை ஆதரவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சேரப் பேரரசு என்பது வேறு, குடமலை நாடு
என்பது வேறு. சேரப் பேரரசு பல நாடுகளை
உள் கொண்ட பரந்த மாநிலம். குடமலை நாடு
என்பது சேரத்தின் ஆணிவேர் போன்ற நாடு.
இந்த அச்சாணியின் மேல்தான் சேரப் பேரரசு
அமைகிறது. அந்தக் குடமலை நாட்டு அரசர்கள்தான் இமயவரம்பன், செங்குட்டுவன் போன்றோர். இவர்கள் இப்பகுதியில் இருந்து சேரமாநிலத்தை ஆண்டனர் என்பது வரலாறு. அந்த அடிப்படையில் குடமலை நாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் அரண்களையும் பார்க்கவேண்டும்.

அதோடு, கோட்டக்கல், கோட்டயத்திற்கு நேர் வடக்காகவும், குணவாயிலுக்கு நேர் மேற்காகவும் இருப்பது கவனிக்கத் தக்க ஒன்று.

ஆக, குடமலை நாட்டரணாகப் பார்த்தால், மேற்குக் கடல், வடக்குக் கோட்டக்கல், தெற்குக் கோட்டயம் என்ற இவற்றோடு குணக் கோட்டமும் அமைகிறது. (இவற்றை மூன்று கோட்டயங்கள் என்று நான் சொல்வேன்).

அதுதான் "குணவாயில் கோட்டம்".

35.3) அடுத்ததாக இந்த அரண வாசல்களின்
சில முக்கிய நிகழ்வுகளைச் சான்றாகச் சொல்லவேண்டும். அது இந்த அரணக் கோட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரியச் செய்யும்.

இராசராசச் சோழன் மாநிலம் கட்டுவதற்குத் துவங்கியது எங்கே? எப்படி? என்று பார்த்தால் அந்த சூக்குமம் புரியும்.

மதுரையையும் ஆய் நாட்டுக் காந்தளூர்ச் சாலையையும் ஏறத்தாழ சம காலத்தில்
பிடிக்கிறான். காந்தளூர் அரணத்திற்கு விழிஞம் வழியே கடல்வழி சென்று தாக்கிப் பிடிக்கிறான். இப்போது சேரத்தின் தெற்குப் பகுதியும் குடமலை நாட்டின் கிழக்குப் பகுதியான மதுரையும் சோழன் கையில்.

பின்னர் உதகையில் தன் தூதனைச் சிறை செய்துவிட்டான் என்று உதகையைப் பிடிக்கிறான். உதகையைப் பிடித்ததால் கொங்கு மண்டலம்
சோழன் கையில் விழுந்து விடுகிறது. கொங்கு நாடும் கொல்லி நாடும் தம்வயமானால்தான் தொண்டை நாட்டை செம்மையாகப் பிடித்து வைத்திருக்க முடியும்.

சேரத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு என்ற இந்த மூன்று வாசற் பரப்பையும் தன்னகப் படுத்திக் கொண்ட பின்னரே இராசராசன் வஞ்சி மீது
பாய்ந்து அதனைக் கைப்பற்றி மும்முடிச் சோழனாகிறான். வடக்கே மேலும் முன்னேறி கங்க நாடு, வய நாடு, துளுநாடு போன்ற நாடுகளையும் கைப்பற்றிப் பேரரசாக்குகிறான்.

இராசராசனின் இந்தப் போர்த் தந்திரமே, குறிப்பாக காந்தளூர்ச் சாலைப் போரே அதற்குப் பின்னரான 300 ஆண்டுகால சோழப் பெரும் பேரரசிற்கு அடிகோலியது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வது கவனிக்கத் தக்கது.

இராசராசன் அரண உத்தி மேற்கண்ட நான்கு
வாசல்களையுமே முறை வைத்து திட்டமிட்டு
பதம் பார்க்கிறது என்றால், அந்த நான்கு சேர வாசல்களும் முக்கியமானவை என்றும் அரணக் கோட்டங்கள் என்பதும் அறியக் கிடைக்கிறது.
அப்படி இருக்கையில் "குணவாயில் கோட்டம்"
என்பது கீழ்த்திசைக் கோயில் என்று சொல்வது
பொருந்தவில்லை.

இந்தக் கட்டுரை குணவாயில் கோட்டம்
என்பது குடநாட்டின் "கீழரண வாசல்" என்பதனை நிறுவுகிறது; "குணவாயில் கோட்டம்" என்ற இந்தச் சொற்களின் ஆட்சி எவ்வளவு இலக்கிய அழகு மிளிற அமைக்கப் பட்டிருக்கிறது என்பதனைச் சொல்வதாகவும் மேலும் சில அரணச் சான்றுகளோடும், தொடரும் மடல் அமையும். அதோடு முக்கியமான முடிச்சொன்றை அவிழ்க்கவும் அது ஏதுவாகும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சிலம்பு மடல் 34

சிலம்பு மடல் - 34
பதிகத்தின் மேல் ஒரு பார்வை:

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்
பேருலகிற்கு சிலப்பதிகாரம் தமிழை அள்ளி
அள்ளிக் கொடுத்து வரினும் துளி கூட வற்றாமல்
அறிவுச் சுரபியாக அது பொங்கி வழிந்து
கொண்டே இருக்கிறது. இச்செந்தமிழ்க்
காப்பியத்தை ஆக்கிய அடிகள் தமிழ்
நெஞ்சங்களில் அழியா அரசோச்சி வருகிறார்.

அவர் வாழி!

பதிகம் காப்பியத்தின் முகப்பில் வைக்கப்
பட்ட காப்பியத்தின் தொகுப்பு. இலக்கண மரபு.
அதில்தான் எத்தனை மாற்றுக் கருத்துகளை
அறிஞர்கள் கூறியிருக்கின்றனர் என்று பார்க்கும்
போது வியப்பாக இருக்கிறது.

பதிகம் பிற்சேர்க்கையா?, அல்லது முரண்
கொண்ட மூலமா?, அல்லது மூலத்தில் சில
அடிகள் செருகப் பட்டனவா? என்ற மூன்று
நிலைகளிலும் நடந்திருக்கும் ஆய்வுகள் நம்மை
திகைக்க வைக்கின்றன.

பேரறிஞர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களோ
தம் ஆய்வில் பதிகம் காப்பிய ஆசிரியரால்
இயற்றப்பட்டதே இல்லை என்று பேருறுதி
காட்டுகிறார். அவர் கருத்துகளை அவ்வளவு
எளிதாக யாரும் மறுத்து விட முடியும் என்று
தோன்றவில்லை. பதிகம் குறித்த அந்த
மூன்று ஆய்வு நிலைகளிலும், ஆய்வுக்
கோணங்களிலும் தெளிவு நிலையும் உறுதி
நிலையும் இருப்பதாகத் தோன்றினாலும் பதிகம்
குறித்த மேலதிக ஆய்வுகள் ம.பொ.சி அவர்கள்
எடுத்துக் காட்டும் மூன்று வரிகளின் போக்கில்
மட்டுமே போய்க் கொண்டிருப்பது தெளிவு. அது
சரியில்லை என்ற சொல்ல முடியாது என்ற
போதிலும் பதிகத்தின் மற்ற பகுதிகள் ஆய்வு
செய்யப்படுவது குறைவாக இருக்கிறது என்று
சொல்ல முடிகிறது. அப்படியான பகுதிகள்
சிலவற்றையும் நோக்கிக் காண்பதில் இன்பம்
இருக்கவே செய்கிறது.

"குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்குக்...."
...சிலம்பு:பதிகம்:1-2

என்று துவங்கும் பதிகத்தின் முதல் அடியின் முதல்
மூன்று சீர்கள், உரையாசிரியர்களின் காப்பிய
ஆர்வத்தில் அதிகம் கவனிக்கப் படாமல்
போய்விட்டதோ என்று எண்ணத்தை
ஏற்படுத்துகிறது. ஏனெனில் அனைவருமே
"குணவாயில் கோட்டம்" என்பது
ஒரு கோயில் என்றே எண்ணி பொருள்
கொள்கின்றனர். அதற்கு உரையாசிரியர்களின்
உரையே காரணமாக இருக்கக் கூடும்.

குணவாயில் கோட்டம் என்பது குணவாயில்
என்று ஒரு கோயில் என்றும், கீழ்த்திசையில்
இருந்த ஒரு கோயில் என்றும், கிழக்கு வாசல்
என்ற கோயில் என்றும் கருத்துப் பட உள்ள
எழுத்துகளையே பல நூல்களிலும் காணமுடிகிறது.
கீழ்த்திசையில் இருந்த ஒரு கோயிலில் அரசைத்
துறந்து துறவியானார் இளங்கோவடிகள் என்றே
பொருள் எங்கனும் காணக்கிடைக்கிறது.

இதோடு சில நூலாசிரியர்கள் "கோட்டம்" என்பது
சமணர் கோயில்களுக்கான பெயர்; அதனால்
அவர் அங்கு துறவியானதால் இளங்கோவடிகள்
சமண சமயத்தைத் தழுவிய துறவிகள் என்றும்

எழுதும்போது அங்கே அவர்களின் ஆய்வினைக்
காண முடியவில்லை. இளங்கோவடிகள் எந்த
சமயத்தைச் சேர்ந்தவர் என்பது வேறு விதயம்.
ஆனால் கோட்டம் என்ற சொல் இருப்பதால்
அது சமணக் கோயில் என்று சொல்வதும் அதற்கு
மேலும் ஒரு படி சென்று அதனாலும் அவர்
சமணர் என்று சொல்வதும் முற்றிலும்
பொருத்தமற்றதாக இருக்கிறது,

கோட்டம் என்றால் என்ன? குணவாயில் என்றால்
என்ன? என்று பகுத்துப் பார்த்தோமானால்
"குணவாயில் கோட்டம்" என்றால் என்ன
என்பதற்கான விடை கிடைத்து, அது
"அரசுதுறந்து" என்பதற்கான பொருளுக்கும்
பொருள் கூட்டும்.

34.1) கோட்டம் என்றால் என்ன?

கோட்டம் என்றால் கோயில் என்று பொருள்
உண்டு. ஆனால் அது மட்டுமே பொருள் இல்லை.
கோட்டம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
"வள்ளுவர் கோட்டம்" என்று சொல்கிறோம்;
சென்னையில் உள்ள "வள்ளுவர் கோட்டம்"
என்பது வள்ளுவர் கோயிலா? இல்லையே!
திருவள்ளுவரை ஏத்தும் சிறப்பிடம். அவ்வளவே.

"கண்ணகிக் கோட்டம்" என்று சொன்னால்
அது கண்ணகிக் கோயில்!

"பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து"
சிலம்பு:நடுகல்காதை-225
என்று சிலம்பு சொல்கிறது. அங்கே பத்தினிக்
கோட்டம் என்றால் "பத்தினிக் கோயில்" என்ற
பொருள் சரியே. அதுபோல கந்த கோட்டம்
என்றால் கந்தன் கோயில்.

கோட்டம் என்பதற்கு வளைவு, சாய்வு, பகைமை
என்ற பொருள்களும் உண்டு.

"கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது"
என்பார் அப்பர் பெருமான். அரசன் தன்னைச்
சுற்றிப் பகைகள் இல்லாதிருப்பது அவனுக்குச்
சிறப்பு என்றும், அரசன் என்பவன்
சாய்ந்த/வளைந்த கோலனாக இல்லாதிருப்பது
என்றும் பொருள்கள் கூறுவர்.
அண்மையிலே அடிக்கடி அரசியலில் "சேலம்
கோட்டம்" என்று செய்திகள் வந்தன.
"சேலம் கோட்டம்", "பாலக்காடு கோட்டம்"
என்றால் என்ன?

தொடரிச் சேவையில் இந்தியப் பரப்பின்
ஒரு பிரிவு சேலத்தை தலமையாகக்
கொண்டுள்ளது. சில அல்லது பல நிலையங்களின்
தொகுப்பு அது. மண்டலங்களின் உட்பிரிவே
கோட்டம். Zone, Division என்று ஆங்கிலத்திலே
எழுதும் போது தமிழர்களுக்குத் தெளிவாகப்
புரிகின்ற உட்பிரிவுகள் அவை.

இப்பொருளை நாட்டுக்கு பொருத்திப் பார்க்க
வேண்டும். நாட்டிலும், மண்டலம், கோட்டம்,
என்ற பிரிவுகள் உண்டு.

அது மட்டுமல்ல, கோட்டம் என்பது கோட்டை
என்ற பொருளையும் அண்டி நிற்கும். அதோடு
பாசறை எண்ற பொருளும் அதற்கு உண்டு.

கோட்டம் என்பதனை இங்கே விட்டு விட்டு,
"குணவாயில்" என்றால் என்ன, எது என்று
அறியவேண்டியுள்ளது.

34.2) குணவாயில் என்றால் என்ன?

குணவாயில் என்றால் கிழக்கு வாசல். "குண"
என்பது கிழக்கு திசையைக் குறிக்கும் சொல்.
"குணவாயில்" என்றால் என்ன என்பதனை
எல்லோருமே மிகச் சரியாகச்
சொல்லியிருக்கிறார்கள். நமக்கு அதில்
மறுப்பிருக்க முடியாது. ஆனால், அது எது?
எதற்குக் கிழக்கு? எங்கே? என்பதைக்
காண்பதுதான் அவசியமாகிறது.

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் சீர் குறிக்கின்ற
"குணவாயில்" என்பது குடமலைநாட்டின் கிழக்கு
வாசல் பகுதியை. அது வெறும் திசையைக்
குறிக்கவில்லை. வஞ்சியைத் தலைநகராகக்
கொண்ட சேரப்பேரரசின் நடுப்பகுதி குடமலை
நாடு. வஞ்சி மாநகரம் மகோதை என்றும்
திருவஞ்சைக்களம் என்றும் சுந்தரமூர்த்தி
பெருமானால் திருவஞ்சைக்களப் பதிகத்தில்
(ஏழாம் திருமுறை) சொல்லப்படும் இடம்.
வரலாறு மற்றும் ஆன்மிக முக்கியம் நிறைந்த
இடம் அது.

வஞ்சி நகரப் பரப்பில் தான் கொடுங்களூர்
இருக்கிறது (புகழ்பெற்ற பகவதி அம்மன்
கோயில்). இன்றைய கொச்சியில் இருந்து
வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில்

கொடுங்களூரை உள்ளிட்ட வஞ்சிப் பரப்பு
இருக்கிறது, இங்குதான் முல்லைப் பெரியாற்றின்
கழிமுகமும் இருக்கிறது,
தேக்கடியில் உருவாகி 300 கி.மீ பாய்ந்து
வரும் பெரியாறு கடலில் கலப்பது வஞ்சி
மாநகரத்தில். சோழன் தலைநகரான புகாரில்
காவிரி கடலில் கலப்பது போல,
சேரன் தலைநகர் வஞ்சியில் அரபிக்கடலில்
பெரியாறு கலக்கிறது.

தற்போது வஞ்சியில் (தற்போதைய கொடுங்களூர்)
இருந்து தென்கிழக்காக நோக்கினால் 120-130
கி.மீ தொலைவில் தேக்கடி தெரியும். வடகிழக்காக
நோக்கினால் ஏறத்தாழ 170-180 கி.மீ தொலைவில்
உதகை தெரியும்.

கொடுங்களூரில் இருந்து கிழக்காக நேர்கோடு
போட்டால், சில திகிரிகள் வேறுபாட்டில்
மதுரை இருக்கிறது. (கொச்சியில் இருந்து நேர்
கோடு போட்டால் அது மதுரை வழியே
யாழ்ப்பானத் தீவுகளோடு போய்ச் சேரும்.)

உதகையில் இருந்து வஞ்சிக்கு நேர்கோடு வரைந்து
வஞ்சியில் இருந்து தேக்கடிக்கு கோடுபோட்டால்
இடைப்பட்ட கோணம் ஏறத்தாழ செங்கோணமாக
இருக்கின்றது.

அந்தக் கால சேரநாடு என்பது தென்கோடியில்
அனந்தபுரத்தை உள்ளிட்டு, தெற்கே நாகர்கோயில்
வரை இருந்த ஆய்வேள் நாட்டையும்
உள்ளிட்டதாகும். ஆய்நாடு சேர பாண்டிய
ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருந்திருக்கிறது.

தேக்கடி சுற்றிய பகுதி, குடமலைநாட்டின்
தலைநகரான வஞ்சியில் இருந்து தென்கிழக்காக
இருந்தாலும், குடமலை நாட்டின் தென் எல்லை
வரை இருக்கும் குடநாட்டைப் பொருத்தவரை,

தேக்கடியைச் சுற்றிய பகுதி "சரி கிழக்கு".

மேற்கு மலைத்தொடரில் இடுக்கி மாவட்டத்தில்
பல உயரமான மலை முகடுகள் உள. இதில்
வடபகுதியில் ஆனைமுடி மிக அதிக உயரம்
கொண்டது; சுமார் 2695 மீட்டர், இதுதான்
தென்னிந்தியாவின் உயரமான மலை என்று
சொல்கிறார்கள். தேக்கடிக்கு அருகில் உள்ள
செங்குன்றம் 1700 மீட்டருக்கும் மேலே உயரம்
கொண்டது.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட
மலைப்பகுதிகள் ஏற்றமும் இறக்கமும்
கொண்டவை. மதுரையில் இருந்து குடநாட்டுக்கு
வர வேண்டுமானால், இரண்டு பாதைகள் உள்ளன.

ஒன்று மதுரை-கொச்சி சாலை, இன்னொன்று
கம்பம் வழியாக வரும் மதுரை-கோட்டயம்
சாலை. இந்த இரண்டு சாலையுமே தமிழகத்து
எல்லக்குள் கம்பத்திற்கு சற்று தொலைவு வரை
ஒரே சாலையாக இருந்து பிரிந்து சிறிய
கோணத்தில் குடமலைச் சேர நாட்டுக்குள்
நுழைகின்றன.

இந்த இரு பாதைகள் சேர, பாண்டிய
நாடுகளுக்கு மிக முக்கியமானவை.

இன்றைய கேரள-தமிழக எல்லையில் இருந்து
தெற்கே தேக்கடி, வண்டிப்பெரியார், வடக்கே
தேவிகுளம், மேற்கே பேரியாறு (பெரியாறு) என்ற
கேரளப்பகுதிகளை நாம் கூர்ந்து பார்த்தால்,
அந்தப் பரப்பு குடமலை நாட்டின் "கிழக்கு வாசல்"
என்பது புரியும்.

இந்தக் கிழக்கு வாசல் அரண முக்கியத்துவம்
வாய்ந்தது.

இதைத்தான் "குணவாயில்" என்று சிலம்பின்
பதிகம் கூறுகிறது. இந்த அரண முக்கியத்துவம்
வாய்ந்த கிழக்கு வாசல் அன்றைய நாட்டுப்
பிரிப்பின் படி தனிக் கோட்டமாக (அல்லது
மண்டலமாக அல்லது வட்டமாக அல்லது
மாவட்டமாக அல்லது சிற்றரசாக) இருந்திருக்க
வேண்டும். அரண சூக்குமம் நிறைந்த பகுதி
என்பதால் இது சிறப்பு பெற்றும் இருந்திருக்க
வேண்டும். சேரப் பெரும் பாசறை இருந்திருக்க
வேண்டும்,

அதுதான் "குணவாயில் கோட்டம்".

நாம் அது ஒரு கீழ்த்திசை கோயில் என்று
எண்ணிவிட்டோம்.

தொகுப்பு:

+ குணவாயில் என்பது குடமலைச் சேர நாட்டின்
அரண முக்கியம் நிறைந்த கிழக்குப் பகுதி
+ இது குடமலைச் சேரநாட்டின் கிழக்குப் பகுதி.
சேர-பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதி.
+ இப்பகுதி, இன்றைய கேரள தமிழக எல்லைப்
பகுதியில் இருக்கும் குமுளி, செங்குன்றம்,
தேக்கடி பகுதிகளை உள்ளிட்டு, மேற்கே
வண்டிப் பெரியார் போன்ற ஆற்றங்கரை
நகரத்தைக் கொண்டதாகவும் வடக்கே
தேவிகுளம் அல்லது ஆனைமுடி
மலைத்தொடர் வரை உள்ள பகுதிகளைக்
கொண்டதாகவும் இர்ருந்திருக்க வேண்டும்.

அடுத்த கட்டுரை இவற்றிற்கு மேலும்
சான்றுகள்/ஏரணங்கள் கூட்டுவதாக அமையும் என்று கருதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
13/பிப்/2008

Thursday, December 27, 2007

கண்ணகி கோயில் - படங்கள் - 5


நன்றி: http://wikimapia.org/#lat=9.598285&lon=77.222611&z=17&l=0&m=a&v=2
மேலே உள்ள படம் விக்கிமேப்பியா வில் இருந்து எடுக்கப் பட்டது.
மேகங்களுக்குக் கீழே மலைகளும் பள்ளத்தாக்குகளும். அதில் "ப" வடிவ
மலைத்தொடரினை ஒரு மலைப்பாதை இணைக்கின்ற இடத்தில் உள்ள
அடர்த்தியான இடமே கண்ணகி கோட்டம் உள்ள இடம்.

படம்-14: வெளிப்புறம். மல முகட்டில் அமர்ந்து வழிபாட்டுக்கு
வந்த மக்கள் பசியாறி இளைப்பாறுதல். அந்த மரங்களுக்குப் பின்னர் கோட்டம்
உள்ளது.




ப்டம்-13, 12: கோட்டத்தில் இருக்கும் இரு கல்வெட்டுகள்.







படம் 11: கோட்டத்தில் உள் இருக்கும் கோயில்களுக்கும் மேற்புறச் சுவருக்கும்
இடையே உள்ள வெளி.




நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, December 25, 2007

கண்ணகி கோயில் - படங்கள் - 4

படம்-8 - கோட்டத்துக்குள் இருக்கும் சிவன் கோயிலின் கருவறை. இராசராசன் திருப்பணி செய்த போது ஏற்படுத்தப்பட்டது.



படம்-9: சிவன் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்.



தொடர்புடைய வாசிப்புக்கு:

http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html


அன்புடன்
நாக.இளங்கோவன்

கண்ணகி கோயில் - படங்கள் - 3




படம்-6 கண்ணகி சிலை இருக்கும் கருவறை. இங்கே தெரிவதுதான் குட்டுவன் கொண்டு வந்த கல்லில் செய்த படிமத்தின் மீதி. தொடர்புடைய வாசிப்புக்கு
கண்ணகி கோயில் பற்றிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

நாக.இளங்கோவன்

Sunday, December 23, 2007

கண்ணகி கோயில்

கண்ணகி கோயிலுக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் போய்வரக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது எழுதின இக்கட்டுரைகளை இப்பொழுது இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். பயணம், கோயில் நிலை, சிலப்பதிகாரம், வழிபாடு, பலரின் கருத்துகள் போன்றவற்றை சுற்றியதாக இவை இருக்கும்.

http://nayanam.blogspot.com/2002/04/1.html
http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html
http://nayanam.blogspot.com/2002/05/6.html

http://wikimapia.org/#lat=9.598153&lon=77.222284&z=17&l=0&m=a&v=2
என்ற சுட்டியில் கோயிலின் இடத்தை படத்தில் நன்கு காட்டியிருப்பதும்
பார்க்க வேண்டிய ஒன்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, May 19, 2002

கண்ணகி கோயில் - மடல் 6 - நிறைவு

கண்ணகி கோட்டத்திற்கு சென்று திரும்பியது எனக்கு இனிமையான
பயணமாக அமைந்தது. மலைவிட்டு இறங்கி திருச்சிக்கு சேரவேண்டுமானால்
சுமார் அய்ந்தரை மணி நேரப் பயணம். கம்பத்தில் நேரம் ஏறத்தாழ மாலை நாலரை ஆகிவிட்டது புறப்படும்போது.

இருப்பினும் வழியிலே திண்டுக்கல்; திண்டுக்கல்லிலே நம் அன்புக்குரிய திரு.ஞானவெட்டியான் அவர்கள்.

முதல்நாள் அவரின் அழைப்பை அடுத்து அவரோடு தொலைபேசியில் உரையாடிதும், வழியில் அவரைக் காணாமல் செல்வதில்லை என்று நினைத்திருந்தேன். திண்டுக்கல்லில் இறங்கி, அவரை தொலைபேசியில் அழைத்ததும் 15 மணித்துளிகளில் பறந்து வந்து சந்தித்தார். அன்பே உருவானவர். அன்பொழுக என்னைப் பசியாற்றி, இருந்த அந்த முக்கால் மணி நேரத்தில் என்னை மிகவும் கவர்ந்தார். அடடா, இன்னும் கொஞ்சம் முன்னால்
வந்திருந்தால் அவரின் இல்லத்திற்கே சென்றிருக்கலாம்,
இன்னும் நிறைய பேசியிருக்கலாம் என்று எண்ணினேன். (இன்னும் நல்லா சாப்பிட்டிருக்கலாம்) இணையத்திற்கு மேலும் ஒரு நல்ல நண்பர், பெரியவர் கிடைத்திருக்கிறார். அவரும், அவருடன் வந்திருந்த அவரின் மைத்துனர் அவர்களும் தமிழ் உலக நண்பர்களை நேசிக்கிறார்கள். கொஞ்ச நேரமே ஆயினும் தமிழ் உலகம் பற்றியே கதைத்து விட்டு "கட்டாயமாக அடுத்த முறை அவருக்காகவே திண்டுக்கல் வருவதாகக்" கூறி விடைபெற்று திருச்சி புறப்பட்டேன்.

பேருந்தில் ஏறுமுன் நினைத்துக் கொண்டேன். எங்கு சென்றாலும் இணைய
நண்பர்கள் யாரையாவது சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து விடுகிறது; உலகத்தில் 'இணைய வழி அறிந்த நண்பர்களை, நிறைய எழுதும் நண்பர்களை
அதிகம் சந்தித்தது அல்லது தொலைபேசியது யார்?' என்று போட்டி வைத்தால்
நாம் எளிதாக வென்றாலும் விடலாம் என்று நினைத்துக் கொண்டேன் ;-)

நண்பர்களே, இதில் சேதி என்னவென்றால், 'இணையக் குமுகாயம் விரிந்து வருகிறது; வேகம் குறைவெனினும் அதில் உறுதி தெரிகிறது; இந்த ஊடகத்தின் சிறப்பு இதன் குமுகாயமே! ஆதலின் இந்த ஊடகத்தால் தமிழ்க் குமுகாயத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியும்' என்ற எண்ணங்கள் உறுதிப் பட்டுக் கொண்டே வருகின்றன.

இவ்வூடகத்தில் கண்ணில் படும் தமிழ்ப் பிழைகள் தவிர்க்கப் படவேண்டும்.
ஏனென்றால் தமிழ்ப்பிழைகள் புதுப்பிழைகள் அல்ல!

காலகாலமாய் செய்யப் பட்டு, பழக்கப் பட்டு வந்த அதே பிழைகள்தான் இங்கும் வரக்கூடும்.அவைகள் தவிர்க்கப் பட்டால், ஏற்படக்கூடிய தாக்கம் நல்ல தாக்கமாக இருக்கும்; இல்லையெனில் பிழைகள் குலைகுலையாய்ப் பெருகும் என்பதில் அய்யமில்லை.

பகலின் வெம்மை மறைந்து இரவின் இனிமை ஆரம்பித்து விட்ட அந்த ஒன்பது
மணி இரவில் பேருந்தில் அமர்ந்து சாலையோர வேகக் காற்றில் முகத்தை வைத்து, கண்களை இருட்டில் வைத்து, நினைவுகளை மீண்டும் கண்ணகி கோட்டத்தில் விட்டபோது இருநாள் நிகழ்வுகளும், பலரோடு உரையாடியதும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன.

இராச இராச சோழன், தன் ஆட்சிக் காலத்தில் கண்ணகி கோட்டம்
வந்து, அதன் சமணத் தன்மைகளை மாற்றி, அதில் சைவ முறைகளை ஏற்படுத்தி
வைத்ததாகக் கூறப்பட்டது. குட்டுவன் கட்டிய கோட்டத்தில் இலிங்கம் இருந்ததாகத் தெரியவில்லை. யாரும் கவனிப்பார் இன்றி கிடக்கும் கோட்டத்தை, இவனாவது கவனித்தானே என்று எண்ணியபோது மனதில் மகிழ்ச்சியே நிறைந்தது. சேரநாட்டில் தெய்வமாகினாலும், சோழநாட்டுப் பெண் என்ற
அன்பில் இராசராசன் செய்தது மகிழ்ச்சியளித்தது.

அநேகமாக இது புகழ் பெற்ற , சோழப் பேரரசிற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்த சேரநாட்டு காந்தளூர்ச் சாலை போர்க்கு சென்று பெரு வெற்றி பெற்று மும்முடிச்சோழன் ஆக இராசராசன் பட்டம் கட்டித் திரும்பிய காலமாக இருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் இவன் பேரரசு பல்கிப் பரவியது.

தமிழரசியல், தமிழியம், தேசியம் என்றெல்லாம் ஆர்வப் படுபவர்கள் தவிர்க்க
முடியாத சங்கதிகள்/வரலாறுகள் இவை.

கண்ணகிக்கு அவங்கப்பா 7 யானைகளை சீதனமாகக் கொடுத்தார் திருமணம்
செய்து கொடுத்தபோது என்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ,
அவ்விடம் போய் அவரிடம் அது பற்றிச் சேதியறிய முனைந்தும் நெரிசல் காரணத்தால் அது இயலாமற் போனது.

"கோவலன் கொலையானது கேட்டு கொதித்துப் போனார்கள் பெற்றோர்கள்;
கண்ணகி மதுரையை எரித்ததும், 'நீ இங்கே சாகாதே, நேராகப் போய் சேரநாட்டில்
இப்பகுதியில் சாவு; அப்பொழுதுதான் உனக்கு புகழ் கிடைக்கும்' என்று அனுப்பி
வைத்ததே அவங்கப்பாதான்' என்றொருத்தர் கூறியபோது சற்று
அதிர்ந்து போனேன். அதோடு, 'அவுங்கெல்லாம் பணக்காரச் செட்டியாருங்கங்க;
அவுங்களே கட்டினாலும் கட்டியிருப்பாங்க கோயிலை' என்று சொன்ன போது,
எனக்கு இனம்புரியா உணர்வுகள்; சற்றே சிரிப்பு. சில நூல்களில் மற்றும்
பேச்சுவாக்கிலும், "கண்ணகியை, சாதியை வைத்து தமிழர் பலர் கண்டு கொள்ளவில்லை" என்று அறிந்திருந்தது/கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
சரி சரி நாம் நாமே! :-) என்று எண்ணிக் கொண்டு அங்கும் இங்கும் படம் எடுத்துக்
கொண்டு இருக்கையில்,

"எங்கூட்டுக் காரரும் வனக்காப்பாளர்தான் (பாரெசுடு ஆபீசர் ), ஆனால் இந்தக்
கேரளாக் காரங்க மாதிரி இல்லங்க". நிரம்ப கடுபிடி பன்றாங்க; ொம்பளைங்களுக்குன்னு இருக்கிற தெய்வம்;
அதைக் கும்பிட வந்தா இப்பிடியா நடந்துக்கறது"? என்று சொல்லி நன்கு பேசிய அந்த அம்மையார், அண்டை ஊர்க்காரர். வருசா வருசம் வரும் இவர் கண்ணகியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம்.

அப்பெண்மணியும் அவரின் அம்மாவும் (வயது 65 இருக்கும்), கண்ணகி கோயிலுக்குப் பின் இருக்கும் மண்டபத்தின் உள் மிக ஆர்வமாக சாமி கும்பிட்டனர். "இங்கதாங்க அந்த அம்மா (கண்ணகி) வந்து உட்கார்ந்து தண்ணி குடிச்சது" என்று சொன்னது சிந்தனைக்குரியது. வானவூர்தி ஏறி கோவலனுடன் விண்ணுலகம் போனாள் என்று சிலம்பு கூறுவதையும், 14 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் வந்து புங்கை மர நிழலில் நின்றவளுக்கு, அவளைக் கண்ட குறமகளிர் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்திருத்தல் வேண்டும் என்று
நாம் எண்ணுவதையும் எண்ணிப் பார்த்தால்,
பிந்தையது அந்த அம்மையாரின் நம்பிக்கையோடு ஒத்துப் போகிறது.

அதோடு, அந்த கோயிலுக்குள் இருக்கும் சுரங்கம் வழியாகத்தான் கண்ணகி
அங்கு வந்தாள் என்று அந்த அம்மையார் சொன்னபோது நம்பும்படியாக இல்லை.
இருப்பினும் அது அவரின், அந்தப்பகுதியில் வாழ்வோரின் நம்பிக்கை; அல்லது
அவர்கள் அறிந்தது.

கோட்டத்திற்கு சென்று வந்து ஏறத்தாழ 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில்,
பல நிகழ்வுகள் நினைவுகளின் ஆழத்திற்கு சென்றுவிட்டன. இருப்பினும் ஒரு முக்கியமான ஒன்றை நான் மறக்கவில்லை. அங்கு சுறுசுறுப்பாக கையில்
படக்கருவிகளுடன் நிறைய பேருடன் பேசிக் கொண்டிருக்க, ஒரு கண்ணகி
பக்தருக்குப் பொறுக்கவில்லை.

வயிறின் வளர்ச்சியால் வளைந்து கிடந்த உடம்பு. வயிறு வரை தாடி.
இடுப்பு வரை பின்னாமல் விரித்துப் போட்டிருக்கும் தலைமயிர். வெள்ளை வேட்டி, சட்டை. (தமிழாதவனுடன் நான் இருக்கும் படத்தில் அவரின் பாதியைக் காணலாம். படங்கள் விரைவில் சிங்கை இணையத்தில் போடப்படும்). அவர் பெயர் நினைவில் இல்லை. (கொஞ்சம் கிண்டலாகச் சொன்னால் காபாலிகர் போல் இருந்தார்; கழுத்தில் அந்த மாலை இல்லை :-) )

கும்பகோண பாவேந்தர் தமிழியக்க நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது,
இவர் வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

"என்னங்க....இதெல்லாம் நம்ப வேலைதான்...
நீண்ட நாட்கள் நான் செய்த உழைப்பு;
அதனால்தான் இவ்வளவு பேர் இங்கு வருகிறார்கள்.
நானும் முன்னாடி அறக்கட்டளையில் இருந்தேன்;

கண்ணகி என் மேல சாமியா வந்து ஆடுவா!
வந்து குறி சொல்வா!.

இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன் வந்தா!"
என்று சொன்னவரை மேலும் நோண்டிவிட ;)
அவர் பாட்டுக்கு பேச ஆரம்பித்து விட்டார்.
பேசிப் பேசி இறுதியாக சொன்னார்.

"ஏன் இவ்வளவு பிரச்சினைகள்னா,
கண்ணகி மேல் தோசம் அதிகம்ங்க.
'பாண்டியன் செத்துப் போனாலும் தோசம் இவளுக்குதாங்க!'.
அதோடு, மதுரையை எரித்த தோசம் என்ன சின்னதா...?
(இரண்டு மூன்று தோசங்களைச் சொன்னார்...நினைவிலில்லை)
பிரம்மகத்தி தோசம் இவளுக்கு உண்டுங்க.... அதோடு
வெற்றி வேல் செழியன் கொன்றானே ஆயிரம் பொற்கொல்லர்கள்..
அந்த தோசமும் இவளுக்கு வந்திருச்சிங்க..'.என்று சொல்லி
சிரித்தார் பெரிதாக..... தொடர்ந்து
'இந்த தோசமெல்லாம் போனாதாங்க இவளுக்கு கோயில் அமையும்..
அதற்குதாங்க நான் போகாத கோயிலே இல்லை...
30 நாள் நோன்பிருந்து இராமேசுவரம், கும்பகோணம் என்று பல
கோயில்களுக்குப் போய் கண்ணகி மேல் உள்ள தோசத்தைக்
கழித்து நேரே இங்கு வருகிறேன்' என்று சொல்லி...
மேலும் சொல்லப் போனவரை ஒரு மாதிரியாகப் பார்த்து,
'கனகவிசயன் தலையில் வைத்து கல் கொண்டு வந்ததும் தோசம்தான்'
என்று சொன்னாலும் சொல்வாய் நீ... என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்
கொண்டு மற்ற நண்பர்களோடு சேர்ந்து அவரிடம் அவசர விடை பெற்றுக்
கொண்டு நகர்ந்தேன்.

மதுரையில் வளையல்களை உடைத்துப் போட்டு விட்டு, வைகையின்
தென்கரையில் நடந்து வந்து ஆண்டிப்பட்டிக் கணவாயில் திரும்பி
ஊர்களைக் கடந்து, இந்த நெடுவேள் குன்றத் தொடர்களில் ஏறி இறங்கி
இங்கு வந்தாள் கண்ணகி, என்று நண்பர் ஞானம் சொன்னது சரியாகவேப்
பட்டது எனக்கு.

திருச்செங்கோடு, திருச்செங்குன்றம், கொடுங்களூர் பகவதி, மாசாணிக்கரை
அம்மன், சோட்டாணிக்கரை பகவதி என்று பல கருத்துக்கள் நிலவினும்,
மதுரை, வைகை தென்கரை, ஆண்டிப்பட்டி கணவாய், பளியன்குடி, நெடுவேள்
குன்ற மலைத்தொடர் என்று வந்து வைகையின் தோற்றுவாயில்
அமைந்திருக்கும் இந்த இடம்தான், இதே இடம்தான்
குட்டுவன் கட்டிய கோட்டம் என்பதற்கு சான்றாக சிலம்பு,
" செங்குத்தான மலை உச்சியில், மூங்கில்கள் சூழ்ந்த இடத்தில்
யானையைப் போன்ற நீண்ட பாறை! அதன் உச்சியில் நீர் நிறைந்த
பல சுனைகள்...." என்று கூறுகிறது.

"மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
செங்கோட்டு உயர்வரைச் சேண்உயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை நிரம்பிய
அணிகயம் பலஉள; ஆங்குஅவை இடையது
கடிப்பகை நுண்கலும் கவிர்இதழ்க் குறுங்கலும்
இடிக்கலப்பு அன்ன இழைந்துஉகு நீரும்
உண்டுஓர் சுனை;......"
- சிலம்பு: வரம்தருகாதை:53-59

நண்பர்களே,
கண்ணகி கோட்டப் படங்களை, நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கு
அனுப்பி வைத்திருக்கிறேன். விரைவில் அவை சிங்கை இணையத்தில்
ஏற்றப்படும்.

1800 ஆண்டுகளுக்குப் பிறகு, குட்டுவன் கட்டிய கண்ணகி கோட்டம்
படங்களாக "இணையக் கண்ணகி கோட்டமாக" சிங்கை இணையத்தில்
அமையக் கூடும் என்று கருதுகிறேன். மடல்கள் நிறைவுறுகின்றன.

குட்டுவன் கட்டிய கோட்டம் இன்று
கட்டுகள் கலைந்து கல்லாய் மண்ணாய்!
உறவுகள் எல்லாம் ஊரில் இருக்க
பிரிந்து அவளோ தனியே வெளியே!
கற்பின் அரசியைக் கண்டேன் கண்டேன்!
கண்டதும் கண்களில் துளியே துளியே!
காலம் மாற்றுவேஎன், கவனம் திருப்புவேன்!
கோட்டம் மீட்டு குலமகள் போற்றுவேன்!

நிறைவு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
19/மே/02

தொடர்புடைய மற்ற சுட்டிகள்:

சிலம்பு மடல் - 32
http://nayanam.blogspot.com/2000/12/32.html

சிலம்பு மடல் - 33
http://nayanam.blogspot.com/2000/12/33.html





Monday, May 13, 2002

கண்ணகி கோயில் - மடல் 5 - நேர்காணல்

"மங்கலதேவி கண்ணகி" என்றே சிறீ பூரணகிரியில், கண்ணகி கோட்டத்தில்
இருக்கும் கண்ணகி அழைக்கப்படுகிறார். அப்பெயரிலேயே, அதாவது
"மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை" என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

இவ்வமைப்பு, கம்பம், கூடலூர் என்ற பேரூர்களையும் சேர்ந்தவர்களைக் கொண்ட பொது அமைப்பாக இயங்கி வருகிறது.

கண்ணகி கோட்டம், அதற்கான பணிகள் விழாக்கள், போராட்டம்
என்று சொன்னால் காலஞ்சென்ற திரு. கூடல் தா.இராமசுவாமி என்பார்தான்
முன்னோடியாவார். அவர் தொடங்கிய ஒரு அமைப்புதான், கண்ணகி கோயிலை
தமிழகத்தில் பேசவைத்தது. தன்னலம் கருதா, சொந்த செலவிலேயே பல
நற்பணிகளை கண்ணகி கோயிலுக்காக செய்து சுற்றுப்புறங்களும்,
ஆர்வலர்களும் வணங்கத்தக்க நற்பெயரை விட்டுச் சென்றிருக்கிறார் கூடலூரைச் சேர்ந்த தா.இராமசுவாமி அவர்கள்.

கம்பத்திற்கு, விழாவிற்கு முதல்நாளே (26/ஏப்) சென்றுவிட்டது பல வகையில்
பயனுள்ளதாக அமைந்தது.

"மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை" அமைப்பின் தலைவர் திரு.தமிழாதவன்
அவர்களை நேர்கண்டு உரையாடியவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாள்: 26/ஏப்ரல்/02
இடம்: கம்பம்.

இளங்கோ: இண்டர்நெட் என்று சொல்லப்படுகின்ற இணையத்தில்,
மடலாடு மன்றங்கள், மின்னிதழ்கள் பெருகி வருகின்றன. அங்கே தமிழ் நிறைந்து
வருகிறது. அந்த இணையத்தில் உள்ள "தமிழ் உலகம்" மடலாடு மன்றத்தின் சார்பாக தங்களிடம் நேர்காணுதலில் மகிழ்வடைகிறேன். இதனால் பன்னாட்டு தமிழர்க்கு கண்ணகி கோட்டம் பற்றி சேதிகள் சென்றடையும் எனும்போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

தமிழாதவன்: தங்களோடும் இணையத் தமிழர்களோடும்
தொடர்பு ஏற்படுவது மகிழ்ச்சி தருகிறது.

இளங்கோ: உங்கள் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டது எப்போது?
தமிழாதவன்: 1999

இளங்கோ: அதற்கு முன்னர் கண்ணகி கோட்டத்திற்காக அமைப்புகள் இல்லையா?

தமிழாதவன்: என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்?! பல ஆண்டுகளுக்கு முன்னரே,
"மங்கலதேவி கண்ணகி கோட்டச் சீரமைப்புக் குழு & அறக்கட்டளை" என்ற அமைப்பை, காலஞ்சென்ற, கூடல் திரு.தா.இராமசுவாமி அவர்கள் தொடங்கினார்.
அவர்தான் கண்ணகி கோட்டம் சார்ந்த தொண்டுகளுக்குத் தந்தையாவார். அந்த
அமைப்புதான் அனைத்து அமைப்புகளுக்கும் தாய்க்கழகமாகும்.

இளங்கோ: கூடல் இராமசுவாமி அவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

தமிழாதவன்: தன்னலம் கருதா, பொதுப்பணி ஆற்றியவர். கண்ணகி கோட்டப்

பிரச்சினைக்கு தமிழ் மன்றத்திற்கு எடுத்துப் போனவர். பல போராட்டங்கள் மற்றும் உண்ணா நோன்புகள் நடத்தி தமிழக மற்றும் கேரள அரசுகளின் கவனத்தை ஈர்த்தவர்.

இப்பகுதி மக்களின் அன்பைப் பெற்ற பண்பாளர். எங்கள் பணிகளுக்கெல்லாம்
தந்தையாய் முன்னோடியாய் இருந்து கண்ணகி கோட்டப் பணி தொடர்ந்து நடைபெறக் காரணமானவர்.

இளங்கோ: உங்கள் அமைப்பின் குறிக்கோள்கள் என்ன?
தமிழாதவன்: 1) கோட்டத்தை சீரமைத்தல்
2) சிலப்பதிகாரத்தை மக்கள் மனதில் பதித்தல்
3) நலிந்தோர்க்கு உதவுதல்
4) பளியங்குடி வழியே, தமிழகத்துக்குள் இருக்கும்
மலைவழி நடைபாதையை மேம்படுத்தி பொதுமக்கள்
கோட்டத்திற்கு சென்றுவர வழிஏற்பட, அரசையும்
ஆர்வலர்களையும் ஒன்றுபடுத்தி செயல்படுதல்.

இளங்கோ: உங்களுக்கு இப்பகுதியில் உள்ள அரசியல், குமுகாய அமைப்புகளில்
இருந்து ஆதரவு கிடைக்கிறதா?

தமிழாதவன்: இப்பகுதி மக்கள் அரசியல் வேறுபாடு இல்லாமல் கண்ணகி

கோட்டத்திற்காக ஆதரவு அளிக்கிறார்கள். அது போற்றப்படத்தக்கது. அதேபோல்
அரசியல் சார்பற்ற அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

இளங்கோ: சித்திரை விழாவைத் தவிர வேறு விழாக்கள் கண்ணகி கோட்டத்தில்
நடக்கிறதா?

தமிழாதவன்: சித்திரை முழு நிலவு நாள் விழா மட்டுமே! மதுரையில் அழகர்
ஆற்றில் இறங்கும் அதேநாளில் இவ்விழாவைக் கொண்டாடுகிறோம். முன்னாளில் இந்த விழா மூன்று நாட்கள் நடக்கும்; அது இப்பொழுது ஒன்றாகி விட்டது.

இளங்கோ: இவ்விழாவிற்கு வருவோர்களில் சாதி வேறுபாடு ஏதேனும் உண்டா!
தமிழாதவன்: இல்லை இல்லவே இல்லை!

இளங்கோ: மதங்களைக் கடந்து கண்ணகி வழிபாட்டிற்கு வருவோர்கள் உண்டா?
தமிழாதவன்: ஆம்! நாளை வாருங்கள் காட்டுகிறேன்.

இளங்கோ: எவ்வளவு பேர் சாதரணமாக விழாவிற்கு வருவார்கள்?
தமிழாதவன்: 25 முதல் 30 ஆயிரம் பேர் கடந்த வருடம் கலந்து கொண்டார்கள்.

இளங்கோ: என்ன நோக்கிற்காக இக்கோயிலுக்கு வருகிறார்கள்?
தமிழாதவன்: பெரும்பாலும் வழிபாடு. சுற்றுலா மற்றும் ஆய்வு நோக்கு. பெரும்பாலும் இப்பகுதி மக்கள் வருவார்கள். கேரள மக்களும் வருவார்கள்.
இந்த வருடம் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.
இது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

இளங்கோ: கம்பம், ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்த தேனி மாவட்டத்தில் மக்கள் தெய்வமாக கண்ணகியை
வழிபடுகிறார்கள் என்று அண்மையில் அரசியல் மேடைகளில் பேசப்பட்டதே, அது உண்மையா?

தமிழாதவன்: ஆமங்க! பலர் 40 நாள் நோன்பிருந்து வருகிறார்கள். நாளைக்குத்தான் நீங்கள் வருகிறீர்களே; பார்த்து விட்டுக் கேளுங்கள்.

இளங்கோ: சென்னையில் கண்ணகி சிலை பெயர்க்கப் பட்டு விட்டதே; அது
குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழாதவன்: சிலை பெயர்க்கப் பட்டது ஏற்றுக் கொள்ள இயலாதது. அதற்காக
நாங்கள் இங்கு போராட்டம் நடத்தினோம் (அது குறித்த புகைப்படங்களைக் காண்பித்தார்.

பி.ஆர்.ஈசுவரன் (தி.மு.க) மற்றும் அறக்கட்டளை முன்னணியினர்
செய்த போராட்டக் காட்சிகளை அப்படங்களில் காண முடிந்தது).

இளங்கோ: கண்ணகி கோயில் உள்ள இடம் திருச்செங்கோடு என்றும் திருச்செங்குன்றம் என்றும் சொல்லப்படுகிறதே? (கூறியவர்கள் முறையே அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லார் என்றும் நாட்டார்
உரைக் குறிப்பு கூறுகிறது)

தமிழாதவன்: வையைக் கரையோடு வந்த கண்ணகி, எங்கேயோ இருக்கும்
திருச்செங்கோட்டிற்கு எப்படிப் போக முடியும்?

இளங்கோ: "வென்வேலான் குன்றில் விளையாட்டு நான் அகலேன்" என்று கண்ணகி கூறியதாக சிலம்பு கூறுகிறதே; அதனால் முருகன் வாழும் மலையில்தானே சென்று சேர்ந்திருக்க வேண்டும்?

தமிழாதவன்: அட என்னங்க! இங்கேயிருந்து 17 கி.மீ கிழக்கே, "சுருளி தீர்த்தம்" என்ற அருவி உள்ளது. அங்கே சுருளி வேலப்பர் என்ற ஆண்டவனும் இருக்கிறான். சிலம்பு சொல்லும் நெடுவேள் குன்றம் அங்குதான் உள்ளது. இதை விட வேறு சான்று தேவையில்லை. சுருளி அருவிக்கு நிறைய பேருந்துகள் போகின்றன.

நீங்களும் போய் வாருங்கள். அது மட்டுமல்ல இன்னும் கொஞ்ச தொலைவு போனால் "சண்முக தீர்த்தம்" என்ற அருவியும் உண்டு.

இளங்கோ : கண்ணகிதான் மாரியம்மன் என்ற கருத்து உளதே? அது குறித்து....
தமிழாதவன் : நிச்சயம் இல்லைங்க. மாரியம்மன் என்ற கடவுளுக்கு மிகப்பிந்தியவர் கண்ணகி.

இளங்கோ: இலங்கைக் கண்டியில் உள்ள கண்ணகி கோயிலுக்கும்
முதற்கோயிலானா இந்தக் கண்ணகிக் கோயிலுக்கும் ஏதேனும் தற்போது தொடர்புண்டா?

தமிழாதன்: (சற்று யோசிக்கிறார்.) இல்லைங்க அப்படியேதும் இல்லை.
நாம் போக முடிவதே வருடத்தில் ஒரு நாள். இடிந்து பாழ் பட்டுக் கொண்டிருக்கும்
கோயிலுக்கு மனிதர்கள் போவதே ஒருநாள் மட்டும். அப்புறம் எப்படி தொடர்பு
இருக்க முடியும்?

இளங்கோ: இங்கு தொல்பொருள் ஆய்வுகள் ஏதும் நடந்ததா?
தமிழாதவன்: தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் விரிவாக ஏதும் செய்ததில்லை.

இளங்கோ: அய்யப்பன் கோயிலுக்கு அனுமதி தரும் கேரள அரசு, கண்ணகி கோயிலுக்கு ஏன் அனுமதி மறுக்கிறது?

தமிழாதவன்: (சற்று யோசனை...சற்று சிரிப்பு) அய்யப்பன் கோயில் கேரளாவில்
உள்ளது. கண்ணகி கோயில் தமிழகத்தில் அல்லவா உள்ளது!!!! அதற்கெப்படி
கேரள அரசு அனுமதி தர முடியும்? (என்று கேட்டு அர்த்தமுள்ள புன்னகை புரிந்தார். அது எனக்கு இதமாக இருந்தது)

(திரு.தமிழாதவன், கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள்தான் உள்ளது. நாம்தான் அதைக் கவனிக்காமல் குழப்பிக் கொண்டு இருக்கிறோம் என்று ஆழமாக நம்புகிறார். எண்ணுகிறார்; தமிழகம் சிறு முயற்சி எடுத்தாலே நலம் விளையும் என்று எனக்கும் அந்த உரையாடலில் பட்டது)

இளங்கோ: கண்ணகி கோயில் இங்கு மட்டுமே உள்ளது. முதற்கோயில். தமிழகம்
முழுவதும் பரவ வழியுண்டா?

தமிழாதவன்: இப்பகுதியில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பிற பகுதிகளில்
ஆங்காங்கு உள்ள தமிழர்கள்தான் செய்ய முன் வரவேண்டும்.

இளங்கோ: கேரள தமிழக எல்லை பிரிப்புக்கு முன் இந்தக் கோயிலில் வழிபாடு
இருந்ததா?

தமிழாதவன்: இந்த மக்களின் பழக்கவழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. எல்லை
பிரிப்புக்குப் பின்னர் பிரச்சினைகள் ஏற்பட விசயம் வெளியே வந்தது.

இளங்கோ: சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோயிலை நிறுவி, வழிபாட்டு முறைகளை செய்து வைத்தான். அதேபோல் சோழன் இராச இராசன் தஞ்சையில் சிவன் கோயிலை நிறுவி வழிபாட்டு முறைகள் செய்து வைத்தான். இராச இராசன் செய்து வைத்தது காலகாலமாய் நின்றது போல் கண்ணகி கோயில் வழிபாடு காலகாலமாய் நிற்கவில்லையே! இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்!

தமிழாதவன் : (புன்னகை, யோசனையோடு)...அது சைவங்க!...இதுதான் சமணம் என்று சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியுமே....என்று பல்பொருள் சிரிப்பொன்றை சிரிக்க, நானும் கண்விரித்து சிரிக்க அத்துடன் நேர்காணலை முடித்துக் கொண்டு அதே கருத்தை உரையாடிக் கொண்டிருந்தோம்.

(கண்ணகி கோயிலின் அமைப்பு சமணர் கோயில் போன்றது அல்ல. அது சமணக் கோயிலாக இருந்திருக்க முடியாது)

நான் எடுத்த முதல் நேர்காணல் இது. பக்கத்தில் கடைக்குப் போய், ஒரு 40 பக்க
குறிப்பேடு வாங்கி, கேள்விகளை முன்னரே எழுதி வைத்துக் கொண்டு அவரிடம்
அமர்ந்தேன். கேள்வி கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று; எனக்கும் பிடித்த ஒன்று; தருமிக்கும் பிடித்த ஒன்று :-) அவ்வப்போது சிலம்பு வரிகளை எடுத்தாண்டு ஆண்டு பறிமாறிக் கொண்டதால் இந்த நேர்காணல் மற்றும் உரையாடல் மிகச் சுவையாக இருந்தது எனக்கு.

தமிழாதவன் அவர்களோடு அன்றைய நாளிற்கு விடைபெற்றுக் கொண்டு
உலகத்திற்கு எழுதலாம் என்று உலவகம் சென்றால்...அய்யோ அதற்கு பதிலாக
அய்ந்து தடவை கண்ணகி கோயில் உள்ள மலையில் ஏறி இறங்கி விடலாம் :-)

அன்புடன்
நாக.இளங்கோவன்
13/மே/2002