Pages

Showing posts with label திராவிடத்துவா. Show all posts
Showing posts with label திராவிடத்துவா. Show all posts

Tuesday, April 26, 2011

பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2011: திராவிடந் தீது, தீய்க!

ஏமாந்தாய் பாவேந்தே! உன்னாலே யானுந்தான்!
ஏமாந்தோம் வீழ்ந்தோம்; எழுந்ததெலாந் துயரந்தான்!

ஆரியத்தை ஈதறுக்கும் பாரென்றாய்! அன்னார்
தேரிலதை ஏற்றிவிட்டுத் தானுமது வேயானார்!

மாயைதனை வேரறுத்து மூடுமென்றாய்; அதற்கோர்
நோயைத்தான் தூக்கிவிட்டுத் தோற்றே போனோம்!

கோட்டை நாற்காலி கொண்டுபோன காளையெலாம்
பேட்டைக் கொசுபோல பீடறுந்த பிணிகளப்பா!

திருடவந்த கூட்டத்தைத் தேரிலுலா விட்டதுதான்
பெருகிவந்த தமிழரையேப் போரிட்டுச் சாய்த்ததப்பா!

திறலற்ற திராவிடத்தைத் திருவென்றே பேசியதால்
திருவெல்லாந் தீர்ந்தின்று தரித்திரந்தான் தமிழப்பா!

மறமறுந்த மந்தைதனை மாண்பென்றே நம்பியதால்
உறவறுந்து தமிழழிந்து வேரழிந்து போனதப்பா!

வேரழியும் வேளையிலே வெந்நீரும் ஊற்றென்று
ஊரறிய முந்நாழி நோன்பிருந்த வஞ்சனைத்தான்,

இனமென்றும் தமிழென்றும் இன்னபிற என்றெல்லாம்
மனங்குளிரக் கூறுநிலை மருளத்தான் வைக்குதப்பா!

பணமென்றால் பிணங்கூட வாய்திறக்கும்; திறக்காமல்
பிணம்போன்றே பணங்கூட திராவிடந்தான் நடிக்குதப்பா!

பிணக்குவியல் காட்டியங்கே தில்லித்தெரு நாயிடமும்
தனக்குவியல் ஈட்டியிங்கே திராவிடந்தான் வாழுதப்பா!

ஓலமிட்டார் குருதிகொண்டு ஒருதில்லி வாசலிலே
கோலமிட்டுப் பல்லிளித்துத் திராவிடந்தாங் களிக்குதப்பா!

ஏட்டுக்குள் எழுதயின்னும் எத்தனையோ யிருந்துமுன்
பாட்டுப் பரம்பரைக்குப் பல்லுடைந்து போனதப்பா!

பல்லுடைந்து போனதனால் தமிழுடைந்து போகுமன்றோ?
தமிழுடைந்து போகுமெனின் திராவிடந்தான் இனியெதற்கு?
திராவிடந்தான் தீய்ந்திடவே தமிழியக்கம் இனிக்கிளர்க!
தமிழியக்கங் கிளர்க்கிலையேல் தமிழர்க்கிப் புவியிலையே!

அன்புடன்
நாக.இளங்கோவன்
26/04/2011