Pages

Sunday, August 22, 1999

சிலம்பு மடல் 16

பத்துடன் ஆறு!
பத்தைப் பெற்றெடுத்த அறுபதும் காமுறும் பதினாறு!

இளந்தென்றல் வீசும் இராக்காலம்;
மீதி நிலாவை மறைத்துவிட்டு,
பாதிநிலா பார்த்து இரசிக்க
கள்ளஒளி காட்டுகின்றது காதலர்பால்:.

ஒளியுமில்லை இருளுமில்லை முற்றத்தில்;

மறைவை மறந்தவரை மறக்கடிக்கும் நிலவொளி!
நிலாவின் கள்ள விழி!

புத்தம் புது மங்கை அவள்!
காதலைக் காதலனிடம் காட்டிவிடத் துடிக்கும் மனம்;
உடலோடு ஒன்றாகத் துடிக்கும் உள்ளம்;
உள்ளத்தின் வாசலிலே நாணத்தின் காவல்,
எட்டிப்போன கால்களைக் கட்டிப்போட,
நாணிநிற்கும் நங்கை!

நாணத்திற்குதான் எத்தனை வேலை!!
தூதுபோனது தலைவனுக்கு;
"தொட்டுத் தீண்ட மாட்டாயா? "
சொன்னது அவனிடம்!

தொட்டு விடப்போகின்றேன்!
தொட மட்டுமா வந்தேன்?

அவளில் நிலைகுத்தி நிற்கும் என் கண்களின்
கட்டளைக்கு நான் காத்து நிற்பது அவளுக்குத் தெரியவேண்டாம்!
தொட்டு விடும் தூரத்தில் அவளை அள்ளி விழுங்க என் கண்களுக்கு
இயலாது போகும்;

முகத்தின் ஒவ்வொரு இடமும் அசைவது
அவள் நாணத்தால்; நானறிவேன்;
அச்சுவையை நான் பருகிவிட்டுத்தான் பக்கம் போவேன்!

கால்கள் இடும் நாணக்கோலத்தில்
என்னை எழுதுகிறாளே;

என் உடலெங்கும் குறுகுறுக்கும் அந்த இன்பத்தில்
மெல்ல மெல்ல நனைகிறேன்;

அவள் கைவிரல்கள் ஒன்றையொன்று
கட்டிப் பிடிக்கின்றன; பார்க்கிறேன் நான்!

தொடவேண்டி நின்றதால் இருந்த இன்பம்
தொட்டுவிட்டால் எனக்குக் குறைந்திடுமோ ?
இந்த இன்பத்திலேயே இருந்துவிடலாமா?
முதலின்பம் காணப்போனவள் இன்பத்தின் எல்லை
அதுவென்றே நினைக்கிறாள்.

அவளின் மனதிற்குள்
அச்சம் தோன்றியதை அவனன்றி ஆரறிவார் ?

இன்பப் பிச்சைக் கேட்டுக் கரங்களை நீட்டினான்!
பற்றிக்கொள்ள கொம்பின்றி தத்தளித்தக் காமக் கொழுந்து,
கரங்களைப் பற்றி முழுமாரில் மறைத்துக் கொண்டது முகமதனை!

முகத்தின் வியர்வை அரும்புகள் மட்டுமே
இடைவெளி கொடுத்தன அவளுக்கும் அவனுக்கும்!

முதன்முதலில் தொட்டவுடன்
அவன் நெஞ்சிற்குப் பொட்டிட்டது அவள் நெற்றி!

அக்கணமே,
அழுந்தப் பதித்தும் இன்ப அசைவுகளால்
இழுத்துக் கொண்டன குங்குமக் கோடுகள்!

இன்பம்தான் அவனுக்கு!
நெற்றிச் சுட்டியும் அழுந்திப் பதிந்தபோது;

மங்கையின் பற்குறி படுமுன்னே அவள் சூடாமணிக்கு அவசரம்
அவனைத் தீண்டிவிட!

உற்றவனின் நெஞ்சத்தில் குறிவைத்த சுட்டிமேல்
பொறாமை கொண்டாள்!

உள்ளத்தில் தோன்றும் பொறாமையை மறைத்துச்
செயலாற்றி வெற்றி கொள்வதில்தான் பெண்மைக்கு ஈடு ஏது?

மெல்ல முகத்தைத் தூக்கி மன்னவனைப் பார்த்துக் கொண்டே
தன்னைப் புனைந்திருந்தவற்றில்
சுட்டியைக் கழற்றி எட்டிப் போட்டாள்!

அவள் அவிழ்த்த முதல் ஆடை அது.
அவனுக்கு என்ன புரிந்ததோ?

சுட்டியை நீக்கியதும் ஒற்றைக் கரும்பட்டு மயிரொன்று
தென்றலின் குறும்பால் காதலன் முகத்தில் முத்தமிட்டது;

மூக்கிலும், வாயிலும், குழிவிழுந்த கன்னத்திலும், கண்களிலும்
நெருடி விட்ட அவளின் ஒற்றை மயிர், அவன் காதுக்குள்ளும்
காமக் கதை சொன்னது!

தன் காதலனை தான் முத்தமிடுமுன் இந்த மயிரும்
முந்திக் கொண்டதே? சூடாமணியைத் தூர எறிந்தது
போல் இம்மயிரை எறிய முடியாதே!
சிறிதாக சிரித்துக் கொள்கிறாள்!

அந்த மென்மையில் மதிமயங்கியவன் முனகியதைத் தவிர
வேறென்ன செய்ய முடியும்.

ஒற்றை மயிரில் மயங்கியவன் அவளின் கால் வரை கரு நதியாய்
அலைபாயும் அவள் கூந்தலை முகர, கருமேகவிளிம்புக் கதிரவன்போல்
முல்லையும் மல்லியும் அடர்ந்து கிடந்தன அவள் தலையில்.

இதே மலர்களைக் கடவுளர் சூடின் ஒரு வாசமும்,
மங்கையர் சூடின் வேறு வாசமும் வருவதேன்?
கடவுளைக் கட்டிப் பிடித்தாலும்
இத்தனை இன்பம் கிடைக்குமா?

விடைகாண முடியவில்லை அவனால்!
மயிருக்கு வாசம் உண்டோ அறியான்; ஆனால்
பெண்மையின் வாசத்தை அவனால் மறுக்க முடியுமா?

பெண்மனம் அவனுள் புதைந்து கிடக்க,
பெண்மணத்தை முகர்வதில்தான் எத்தனை இன்பம்;

எவர்தான் அதை வெறுப்பார்! தூய பெண்ணில் காமம்
உண்டாகும் போது வரும் மணத்தை அல்லது நாற்றத்தை
எந்த ஆடவன் வெறுத்திருக்கக் கூடும்; அவ்வாசமும்
மலர்களின் வாசமும் இணைந்த காதல்மேடையொன்று
களியாட்டத்துக்கு காத்திருந்தது;

கூந்தலுக்குள் விரல்கள் துளையிட்டு பின்னங்கழுத்தை
வருடி விட, தலையை மேலும் நிமிர்த்தி,கண்கள் சொருகி,
நிறத்தில் செம்பருத்திப் பூவொத்த மென் பட்டு இதழ்களை
மெல்லப் பிரித்தாள் அவளையும் அறியாமல்; இதழ்கள்
பிளந்தது இதழுக்காகத்தான்;

சீச்சீ! இது என்ன வேதனை!
என் இதழ்கள் சுவைக்கவும் வேண்டும்!
சுவைக்கப் படுதலும் வேண்டும்;
எது எனக்கு முதலில் கிடைக்கும்? இது சொர்க்கமா? நரகமா?
இத்தனைச் சிக்கலா காம வேள்வியில்?;
வெப்பப் பெருமூச்சொன்று வெளியான விநாடி
'சிவபெருமானின் பிறையை ஒட்டியது உன் நெற்றியின் அழகு!'

"பெரியோன் தருக திருநுதல் ஆகஎன;"

என்று காதலன் சொல்ல, அணைக்க வேண்டிய இதழ்கள்
உதிர்த்தவையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியபடியே இருக்க
காதலன் அவள் இதழ்களில் ஓடிய வரிகளில் காம வெள்ளத்தை
பருகுதல் வேண்டி ஆங்கு இணைகிறான்; மென்மைக்கு
வன்மைதான் பிடிக்கும் போலும்;

இவனின் கீழுதடு அவளின் மேலுதட்டைப் பருக, அவளின்
கீழுதடு அவனின் கீழுதட்டுடன் ஏதெதோ செய்ய முயன்று
தோற்றுக் கொண்டு இருந்தது;

இவனை அவள் பருக அவனை இவள் பருக நாழிகைகள்
நகர்ந்து கொண்டிருக்க, குங்குமம் மெழுகிய கொங்கைகள்
வெண்பட்டுக் கச்சையிடம் கெஞ்சிக் கிடந்தன; விடுதலை வேண்டி!

வியர்வை மொட்டுக்களால் கொங்கை விலகிய குங்குமமும்
சந்தனமும் கச்சையை நனைத்து கொங்கையின் அசைவுக்கெல்லாம்
அழகு சேர்த்துக் கொண்டிருந்தது; இருப்பினும், கொங்கையின்
இச்சைக்கு, கச்சையின் இடைஞ்சலைக் கண்ட காதலன், உதவிக்கு
தன் கரங்களைக் கொடுத்தான்; கச்சை நகர்ந்ததும் தாங்கிப் பிடித்துக்
கொண்டான் தன் கைகளினாலே!

தாங்கிப் பிடித்த கைகள் நங்கை முலைமேல் படர்ந்திருந்த
ஒற்றை வட முத்து மாலையால் தடைகளை உணர, தவித்துப் போனான்.

"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் ?"

திருமுலைகள் மேலே தொய்யில் எழுதியதோடல்லாமல்
இந்த மாலைகளையும் அணிவிப்பதுவும் ஏனோ என்று அலுத்துக்
கொள்கிறான்; என் கரங்கள் கொள்ளும் இனிமைக்கு இன்னல்
விளைவிக்கும் மாலைகளே அகன்று போங்கள் என்று அகற்றி விட்டு
முழு முலைகளிடை முகம் புதைத்தான்; கெஞ்சிய கொங்கைகள்
கொஞ்சின அவன் முகத்தோடு; கொங்கையின் கண்களும் அவனது
கண்களும் பார்த்துக் கொள்ளும் அவ்வப்போது; பார்த்தது தீர
அவனின் கண்கள் கொங்கையின் கண்களைப் பொத்தி விட்டு
விளையாடி மகிழ்ந்ததால் கொங்கைகளுக்குக் கொண்டாட்டம்!

இருகனிச்சுவையில் முக்கனிச்சுவையை இகழ்ந்து நகைத்தான்
இதயத்துள்: இருகரம் கொண்டு இருகனி மறைக்க முயன்று
தோற்றுத் துவண்டு போனான்;இருகரம் கொண்டு ஒருகனி
மறைக்கவும் இயலவில்லை அவனால்;வென்று விட்ட ஆணவம் அந்த
முலைகளுக்கு! வெற்றிக் களிப்பில் கொங்கைகள் கொஞ்சம்
இளகிவிட இருவரின் மூச்சின் வெப்பமும் வேகமும் இன்ப வேதனையின்
எல்லைகளை அகற்றிக்கொண்டே இருந்தன!

பற்களுக்கும் நகங்களுக்கும் பெருவிருந்து செய்தனர் இருவரும்;
அவள் நகங்கள் அவன் முதுகில் கோலம் போட்டபோதெல்லாம்
அவளின் வளையல்கள் இசையோடு ஆடி மகிழ்ந்தன;

மெல்லிடையாளின் இடை நோகாதிருத்தல் வேண்டி
சிரம் தூக்கி இதழோடு இதழ் பெய்து,
ஒருகரம் முலைதாங்க
மறுகரம் அவள் புறம் தீண்ட,
அரைச்சக்கரமாய் ஆகிப்போனாள் பின்னோக்கி வளைந்து;
மயிலின் முதுகைத் தடவியது போல அவளின் புறத்தை தடவியதும்
மறந்துபோயினர் அவர்களை அவர்கள்;

இடையோடு உறவாட உள்ளங்கைகள் முனைய
மேகலைதான் மெல்ல மறுத்துப் பார்த்தது:
புறத்தை பிடித்த கரம் சற்றே இறுகியதால் மேலும்
வளைந்தனள் மங்கை; மேகலையோ தெறித்துச் சிதறிட
மேகலை தாங்கிய ஆடைகளோ அகன்று போயின:
அகன்று கிடந்தாள் அகன்ற அல்குல் காட்டி!
சிரித்துக் கிடந்த பெண்மையை
வெறித்துப் பார்த்தது ஆண்மை!
வாழையொத்த தொடைகள் கொண்டாள்
வாரிவழங்கினாள் வஞ்சனையின்றி,
மாவின் சுவையையும், பலவின் சுவையையும், வாழின் சுவையையும்;
சின்னச் சின்ன அசைவுகளும் சிக்கலை ஏற்றிவிட
கால்களோடு கால்கள் பிணைந்தனர்;
கரங்களோடு கரங்கள் பிணைந்தனர்:
அப்படியே முதுகுகளிலும் கோலமிட்டன அந்த நான்கு கரங்கள்;
வியர்வை ஆறாகப் பெருகிட அதில் வழுக்கிய கரங்களும் கால்களும்
சீறிச்சினந்து பிணைந்து விழுந்தன; பிணையல் பாம்புகள் போல!!

நின்றுவிடப் போகுதுயிர், தின்று விடு இப்போதே!
கூனிவிடப் போகுமிளமைக்கு தீனியிடு இப்போதே!
வற்றிவிடும் செல்வத்தை வெட்டியெடு இப்போதே!
சுற்றிவரும் பூமி நின்று விடுமுன்னே, வற்றிவிடட்டும் காமம்!
என்றதோர் வேகம்!

அவளின் வளையின் ஓசையுடன்,
சிலம்பின் இசை சேர்ந்து,
இருவரின் முனகல் இராகத்தோடு,
இன்பத்தின் எல்லையை சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருந்தனர்
கோவலனும் கண்ணகியும்!

"தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்
22-ஆகத்து-1999
பி.கு:
...........................................................................................................................................
( புகார்க்காண்டம் முடிவுற்ற வேளை,
கம்பரசம், காமரசம் பற்றி இணையத்தில் பேச்சுவர,
சிலம்பு ரசம் பற்றியும் கருத்தெழுந்தது!
அறிஞர் அண்ணாவின் கம்பரசத்தின் நோக்கம் வேறு;
இம்மடலில் காணும் சிலம்பு ரசம் வேறு!
சிலம்புரசமாக இம்மடலை எழுதத்தூண்டிய
இணைய நண்பர்களுக்காக,
புகாரை மீண்டும் ஒருமுறை நோக்கி இம்மடலை எழுதுகிறேன்: )

அதுமட்டுமல்ல, கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும்
பற்றிப் பொய் புரட்டுகளை எழுதிப் பரப்பும் எழுத்தாளர்கள்
கண்ணகி கோவலனுடன் மனை வாழ்க்கை நடத்தவில்லை என்றும்
அதற்கு சான்றாக மாதவிக்குக் குழந்தை இருந்தது ஆனால் கண்ணகிக்கு
இல்லாததை அவர்களின் அடத்திற்கு சான்றாகக் கொள்கிறார்கள்.
சிலம்பிலேயே கண்ணகி, கோவலனின் இன்பவாழ்க்கையை
இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாவிற்கான
விளக்கவுரைதான் இது.
..........................................................................................................................................

Sunday, August 01, 1999

சிலம்பு மடல் 15

சிலம்பு மடல் - 15 சோழநாடு நீங்கி பிழைக்கப் போதல்!
புகார்:
நாடுகாண் காதை:

"பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டுமோ? பேசுதல்தான் கூடுமோ?" என்ற சொற்கள் பொய்த்திருந்தன; அங்கே கோவலனும் கண்ணகியும் சந்தித்தபோது! உணர்வுகளில் காலம் கழிக்கவில்லை;

செல்வத்தில் நடந்து, இன்பத்தில் திளைத்து, காமத்தில் புரண்டு வாழ்ந்த கோவலனுக்கு மாதவிபால் ஏற்பட்ட சந்தேகம், எத்தனை பாடத்தைக் கற்றுக் கொடுத்ததோ! வியக்க வைக்கிறது, கண்ணகியை மீண்டதும் பிழைப்பை மட்டும் அவன் நினைத்தது!

வான்நிலவும் வெப்பமாகப் பட, கணவனுடன் கலவியின்றி நலிந்து கிடந்த கண்ணகியும் அவனைக் கட்டிலுக்கு இழுத்தாளில்லை! ஒருகாற்சிலம்பெடுத்து கணவன் கை கொடுத்து உழைப்பைத் தொடங்கி வைக்கிறாள் கண்ணகி!

"வா என வந்து, இன்பம் அளித்ததும்
போ எனப் போனாள் மாதவி!"
அங்ஙனமே கண்ணகியும்
"வா என, நடந்தாள் கோவலனுடன்
வைகறையில், மதுரை தேடி!"

வா என்று சொல்லும் ஆடவன் போ என்று சொன்னாலும் போற்றி நிற்கும் பெண்களை என்ன சொல்ல?

அப் பெண்மையின் மென்மையையும் உண்மையையும் வியக்கிறேன்!

நெடுமால் வணங்கி, புத்தன் போற்றி, அத்தனைக் கோயிலையும் அவனுடன் சுற்றி புகார் நீங்குகின்றாள் கணவனுடன்! அத்தெய்வங்களை வணங்க மதங்கள் குறுக்கே நிற்கவில்லை!

அத்தனை தெய்வங்களும் "போ எனச் சொன்னதோ" !
"போய் வா என்று சொன்னதோ" ! யாருக்குத் தெரியும் ?

உற்றுப் பார்த்தனரோ புகார் வாயிலை? தெரியவில்லை! இனி பார்ப்போம் என்று நம்பித்தான் தம் மாளிகையை அந்நகரில் விட்டு விட்டு நீங்கினர்!

புகாரை நீங்கி, காவிரியின் வடகரையோடு மேற்கு நோக்கி நடக்கின்றனர்!

"குடதிசை கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்பொழில் நுழைந்து
காவதம் கடந்து கவுந்திப் பள்ளி.."

காததூரம் நடந்ததும், மதுரைக்கு இன்னும் "ஆறைங்காதம்" (முப்பது காதம்) நடக்கவேண்டியுள்ளதை எண்ணி மலைக்கிறாள் கண்ணகி! நடந்தறியா செல்வ மடந்தையின் வேதனை கண்டு துன்பச்சிரிப்பை சிந்துகிறான் கோவலன்.

ஆங்கு காவுந்தி அய்யையைக் கண்டு அடி தொழுது, அவ்வடிகளும் அவர்களுடன் புறப்பட மூவருமாய் மேற்கு நோக்கி நடக்கின்றனர்!

நாளுக்கொரு காதமாய் நடந்தனர்! நடந்தனர்! அடைந்தனர் "இருகரைப்பட்ட திருவரங்கத்தை"!

அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும், ஒரு சீரென செதுக்கிவைத்தானோ புலவன் என்று திகைக்கவைக்கும் அளவிற்கு, காவிரி வழி நெடுக இயற்கையைப் பாடி மகிழ்ச்சியூட்டுகின்றார் இளங்கோவடிகள்;

கரிகால் பெருவளத்தான் காலத்திற் பின்னான சிலப்பதிகாரத்தில் அவன் ஆக்கி வைத்த கல்லணை பற்றிய குறிப்பேதும் இவ்விடத்து இல்லாதது சிந்தனையைத் தூண்டுகிறது! காப்பிய நாயகர்கள் நடந்து வந்த காவிரியின் வடகரைப் பாதை முழுதையும் பாடி வைத்த புலவர், அரங்கத்துக்குக் கிழக்கே 15/20 மைல் தொந
லவில் காவிரியை மறித்து நிற்கும், தமிழர் பெருமை கூறும் கல்லணையை இவ்விடத்துக் குறித்து வைக்காதது சிந்திக்கச் செய்கிறது.

அரங்கம் சேர்ந்தவர் அரங்கத்தானை போற்றி அங்கிருந்த சாரணர்களைத் (முனிவர்கள்/அடிகள்) தொழுது காவிரியின் தென்கரைக்கு பரிசல்/படகு மூலம் செல்கின்றனர்.

இன்று கூட அரங்கத்துக்கு மேற்கு உள்ள ஊர்கள் பரிசல் மூலமாய் தென்கரை சேர்வதைக் காணமுடியும். (அப்பரிசல்களில் பல தடவை நான் பயணித்ததும் உண்டு!)

திருவரங்கக் காவிரிக்கரையில் அம்மா மண்டபம் என்று ஒரு இடம்
உண்டென்பதை அறியாதார் இருக்க மாட்டார் அப்பகுதி மக்கள்!
அவ்விடத்து நேர் எதிர்புறத்தில், சற்றே மேற்புறத்தில் குடமுருட்டி என்ற ஒரு ஆறு வந்து காவிரியில் கலக்கும்! அவ்வாற்றின் கீழ்க்கரை, நேரே கோழி (உறையூர்) சென்று சேர்க்கும்!

சிலம்பின் குறிப்புகள் கொண்டு பார்க்கின் கோவல, கண்ணகி, காவுந்தி ஐயை மூவரும் அவ்வழியே உறையூர் சென்று சேர்கின்றனர்.

(சாண்டில்யனின் யவனராணியிலே, கரூரில் தீயால் கால் கருகி குணம் பெற்று, உறையூர் திரும்பிய கரிகாலனும் இவ்வழியேதான் உறையூர் சென்று தன் காதலி அல்லியைச் சந்திக்கிறான்; அவன் குடமுருட்டி வரை காவிரியின் தென்கரையில் வருகிறான். என் மண் வழியே இவர்களும் போயிருக்கின்றனர் என்று நிந
னக்கும் போதெல்லாம் சிலிர்ப்பதுண்டு! அவ்வழி போகும் போதெல்லாம் இவர்களை நினைப்பதுண்டு!)

கோழி சேரும் முன்னே, காவிரி தென்கரையில் கோவல-கண்ணகியரைப் பழித்த வம்பரை காவுந்தியடிகள் நரிகளாக்குகின்றார். அது கண்டு வருந்திய கோவல-கண்ணகியர்

"நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்.."

என்று கூறுதல் சிறப்பான ஒன்றாகும். காவுந்தி அடிகள் என்ற பெண்முனிக்கு சினம் வர, சாதாரன மாந்தரான கோவல-கண்ணகி
அறம் குறிப்பிடுவது படிக்கவே அழகான ஒன்றாகும்;

அம்மையே! நெறியில் நீங்கிய அவர்கள் எங்களைப் பழிப்பது அறியாமைதான்!! அவர்களுக்கு சாபவிடை தாருங்கள் என்று இறைஞ்சுகின்றனர் அய்யையை.

பின்னர் தொடர்ந்தனர் நடையை! சேர்ந்தனர் கோழி (உறையூர்)!

சோழரின் அறனும், மறனும், ஆற்றலும், புகாரின் பண்பு மேம்பாடும், விழாச் சிறப்புக்களும் இன்பமிக்கு வாழ்ந்த சோழக் குடிமக்களின் வாழ்க்கையும், அவரின் மாண்பும், சோற்று வளமும், காவிரியின் அழகும் சிறப்பும், கலைகளில் அரங்கின் இயல்பு முதற்கொண்டு ஆடல், பாடல், கூத்து கானல்வரிகள், இசை, பண்
முதலான அனைத்தின் சிறப்பும் அமைப்பும், ஊரழகும் சிறப்பும் இங்கு சொல்லாத பலவின் தன்மைகளையும் சொல்லும் "புகார்க் காண்டம் முற்றிற்று!".

".....தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒருபரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று."

( வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

கடல் என்ற அகழியால் சூழப்பட்ட இப்பூமிக்கு மாலை போல அமைந்த காவிரிப்பூம்பட்டினம், ஞாயிறும் (கதிரவன்), திங்களும் (நிலவு) நிலைபெற்று வாழ்வதுபோல் என்றென்றும் புகழ்பெற்று நிலைப்பதாகுக!; என்றியம்பிய இளங்கோவடிகளுடன் நாமும் சேர்ந்து புகாரை, சோழமண்ணைப் போற்றுவோம்!
வாழ்த்துவோம்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
01-ஆகத்து-1999