Pages

Tuesday, July 26, 2005

இளையராசாவின் இசையில் திருவாசகம் - பழுது ?

தமிழக இசை உலகின் ஓவர் (icon) ஆகத் திகழ்பவர் இசைஞானி இளையராசா. அதேபோல ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் இறைத் திருப்பணிகளுக்கு நிறைய பங்களிப்பு செய்தவர் என்று சொல்லப்படுபவர். அரங்கனுக்குக் கோபுரம் எடுத்தது முதல் வெகு அண்மையில் மூகாம்பிகைக்கு அணிகள் சூட்டியது வரையிலான அவரின் கடவுள் ஈடுபாடு அனைவரும் அறிந்தது.

தலைசிறந்த தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான திருவாசகத்தை, மேற்கத்திய இசையில், பல நாட்டுத் தமிழர்களின் ஆர்வத்திலும், ஒருங்கிணைப்பிலும் இளையராசா கொண்டுவருகிறார் என்று ஈராண்டுகளாக கேள்விப் பட்டபோதெல்லாம், அது பல எதிர்பார்ப்புகளை பலருக்கும் ஏற்படுத்தியிருந்தது. எனக்கும்தான்.

கடந்த மாதம் சூன் 30 ல் முதல் நெருவட்டு வெளியிடப்பட்ட மேடையில்

தேவார திருவாசகத்திற்குத் தொடர்புடையவர்கள் நிறைய பேர் மேடையில் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஏனோ, மேடை, தேவார திருவாசக உலகில் இருந்து தொலைவில் இருந்ததாகத்தான் உணர முடிந்தது. அவரின் திருவாசக வெளியீட்டை சில நாள்களாகக் கேட்டபோது உணர்ந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

பாராட்டுதல்கள் என்றால், அவரின் முயற்சிக்கு நிச்சயம் கொடுக்கத்தான் வேண்டும். அதோடு இம்முயற்சிக்கு அடித்தளமாக இருந்த காசுபர் மற்றும் அவரோடு உழைத்தவர்களும் பாராட்டுதற்குரியவர்கள். இதற்காக செலவிட்ட நேரத்தில் இளையராசா வேறு பாடல்களுக்கு இசை அமைத்திருந்தால் நிறையவே சம்பாதித்திருக்கலாம். இதனோடு தொடர்புடையவர்கள் (குறிப்பாக திரு.காசுபர்) தத்தம் மதங்களைக் கடந்து திருவாசகத்தின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இணைந்தது, தமிழும் தமிழரும் உணர்வால் மதங்களைக் கடந்தவர்கள் என்ற உண்மையைக் காட்டியது. பல நாட்டு இசை வல்லுனர்களையும் ஒருங்கிணைத்து இதனை ஆக்கிக் காட்டிய நமது இளையராசாவை நாம் உச்சிமுகரத்தான் வேண்டும்.

நிறைகள் என்றால், பலராலும் பாமரனாலும் அறியப்பட்ட ஒரு இசைமேதை இதில் ஆர்வத்துடனும், தனது வாழ்வின் குறிக்கோள் எனவும் கொண்டு ஈடுபட்டது மிகவும்போற்றத்தக்கது. ஏனெனில், 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் பட்டி தொட்டியெல்லாம் பரவிய அய்யப்பன் பாடல்கள், 20 ஆண்டுகளில் தோன்றிய பல ஆதிபராசக்தி பாடல்கள், எல்.ஆர்.ஈசுவரி குரலில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் என பலவும் பாமரனையும் பலரையும்

எட்டியிருக்கையில் சிவ மெய்யியல் கொண்ட ஒப்பற்ற தேவார திருவாசகங்கள் பாமரனையும் படித்தவனையும் எட்டாதிருந்தது, எட்டாமலிருப்பது என்பது தமிழ்நாட்டின் வருத்து வியப்புகளில் ஒன்றாகும்.

கோயில்களில் விழாக்களில் பரவலாக ஒலிப்பவையெல்லாம் அண்மைக்கால
சாதாரணக் கவிஞர்கள் திரைப்படப் பாடல் மெட்டுகளுக்கு எழுதிய கடவுள் பாட்டுக்கள்தான். 'அப்படிப் போடு...போடு... ' என்ற மெட்டில் ஒரு அய்யப்பன் பாட்டு இருந்தால் வியப்பில்லை. அவற்றில் பல பாடல்கள் பொருத்தமில்லாமலும் வெற்று இரைச்சலாகவும் கூட இருக்கும்.

அதோடு, பலருக்கும் கந்தர் கவசம், சுப்ரபாதம், விநாயகர், துர்க்கையை போற்றும் பாடல்கள், கொஞ்சம் சிவனைபோற்றும் பாடல்கள் (எசு.பி.பியின் நமசிவாய ஒலி நாடா) அறியப்பட்டிருக்கும் அளவுக்கு திருவாசகமோ தேவாரமோ அறியப்பட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் தருமபுரம் ப.சுவாமிநாதன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பாடல்களை அற்புதமாக வெளியிட்டிருக்கிறார். திருவாசகத்தில் இருந்து சுவாமிநாதன் பாடும் குழைத்த பத்தின் 'அன்றே என்றன் ஆவியும்... ' என்ற பாடல் எலும்பைக் கரைத்து விடும்.

இதற்குக் காரணங்கள் எவையாகயிருப்பினும், தேவார திருவாசகங்கள் மிகக் குறைந்தவர்களால் மட்டுமே அறியப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. இந்நிலையில் ஒரு இசைமேதையின் குரலாலும் இசையாலும் திருவாசகம் வருகிறது என்ற எதிர்பார்ப்பு இன்பமாகவே இருந்தது.

அந்தவகையில் தேவையான ஒரு முயற்சியை தகுதியான ஒருவர் செய்தது மிகவும் போற்றத்தக்கது மற்றும் இந்த முயற்சியையே நிறையாகத்தான் நான் காண்கிறேன்.

நிறைகள் இருக்கும் அதேபோழ்து குறைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன. இளையராசா திருவாசகம் முழுவதையும் இசையோடு கொண்டுவரப் போகிறார் என்றுதான் நான் கேள்விப்பட்டது. அதனாலேயே, அவரின் முதல் வெளியீட்டில் இருக்கும் குறைகளை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது. இது ஒரு வேளை வரவிருக்கும் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தாலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு

மட்டுமே இதற்குக் காரணம்.

1) பிடித்த பத்து, அச்சப் பத்து என்ற இந்த இரண்டு பதிகங்களையும்

இளையராசா அருமையாகப் பாடியிருக்கிறார். பிடித்த பத்தில் 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.... ' என்ற பாடலில் திருவாசகத்தை இயல்பாகப் பாடும்போது உண்டாகும் அந்த மோன நிலைக்கே நம்மை கொண்டு சென்று விடுகிறார். அவரின் குரல் வளமும் நன்றாகவே உள்ளது. அதேபோலவே 'புன்புலால் யாக்கை.... ' என்ற பாடலிலும். பொற்சுண்ணத்தையும், மிக இயல்பான ஆனந்தத்தில் பாட வைத்திருக்கிறார்.

ஆயினும் அனைத்து பாடல்களிலும் மிகுந்து கிடக்கும் இசை, பாடலைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது. அம்மையே அப்பா என்று உருகு உருகு என்று உருகி, உடனே மிகையான பெருகோசையைப் போட்டு, சலனத்தையும் சலிப்பையும், பல இடங்களில் எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகிறார். ஒரு பாட்டிற்கும் மறுபாட்டிற்கும் இடையே கிடக்கும் இந்த பெருகோசைகள் கேட்போருக்கு சலனத்தையும் அந்த இலயத்தையும் எடுத்து விடுகின்றன.

பெருகோசைக்கு எதிர்ப்பு சொல்ல அல்ல; ஆனால் எந்த பாட்டில் எந்த இடத்தில் அதை வைப்பது என்று ஒன்று வேண்டும் அல்லவா ? இந்தப் பெருகோசை, மிகு ஓசை பல இடங்களிலும் இசையாக அல்லாமல் இரைச்சலாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தைத் தவிர்த்த (த்ிருப்பொற்சுண்ணத்தில் இசை பரவாயில்லை என்று சொல்லலாம்) மற்ற பாடல்களில் இருக்கும் பெரும் குறைபாடு இந்த இரைச்சல்தான். இது தேவையற்றது.

ஓரோ இசை அல்லது மேற்கத்திய இசை என்றால் இப்படித்தான் என்று
நான் நம்பத்தயாரில்லை. இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.

இலக்கண சுத்தியோடு இயல்பான பண்ணும் ஓசையும் கொண்டவை திருவாசக தேவாரப்பாடல்கள். ஒரு சில முறை இப்பாடல்களைப் படித்தாலே படிப்பவற்கு அதன் இயல்பான ஓசை அமைந்து பாட வந்துவிடும். அத்தகு பாடல்களை அதிக பக்கம் ஒரு சுருதிப் பெட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு குரல்வளமும் தமிழ்வளமும் உள்ளார் சிறப்புடன் பாடிவிடுவர்.

அவற்றிற்கு எந்த இசையும் தேவையேயில்லை. ஆயினும் பலரையும் விரைந்து
ஈர்த்து பாடல்களை நுகரத் தரும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த இசை,
பாடல்களின் தன்மைக்கேற்றவாறு அமையாமல் மிகையான அளவில் அமைந்துவிட்டதால் இசையின் வலியில் பாடல் இளைத்துப் போகிறது.

2) சிவபுராணத்தைத் தவிர்த்த (சிவபுராணத்தைப் பற்றிக் கீழே) மற்றவற்றில்
ஒரு சில பாடல்களை மட்டுமே அவர் பாடியிருக்கிறார். பொற்சுண்ணம் மற்றும்
திருக்கோத்தும்பியில் தலா 20 பாடல்கள் உண்டு. அவற்றில் முறையே 7 மற்றும் 8 பாடல்களை மட்டும் பாடியிருக்கிறார். அச்சப்பத்து யாத்திரைப்பத்து பிடித்த பத்து ஆகிவற்றில் 6 அல்லது 7 பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார்.

மீதியை யாருங்க பாடுறது ? எப்பங்க பாடுவாங்க ? பாடப்பட்டிருக்கும்

தேவார திருவாசகப் பாடல் ஒலிநாடா/நெருவட்டுகளின் குறையே அதுதான்.
ஒரு பதிகத்தை எடுத்துக் கொண்டு அதில் முதல் மற்றும் கடைசி அல்லது மேலும்
ஒரு பிடித்த பாடல் என்று மட்டுமே பாடி இருக்கின்றனர். முழுமையான தேவாரப்பதிகங்களோ அல்லது திருவாசகப் பாடல்/பதிகங்களோ (சிவபுராணம் தவிர்த்து) கொண்ட ஒலிநாடா அல்லது நெருவட்டு இருந்தால் அரிது. தேவார திருவாசகம் ஓரளவு ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதென்றால் அது தருமபுரம் ப.சுவாமிநாதனால்தான். அப்படி ஒரு குரல்வளம் மற்றும் நேர்த்தி. ஆயினும் அவரும் பதிகத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் என்ற மட்டிலேயே
நிறைய பாடியிருக்கிறார்.

இந்நிலையில் இளையராசாவிடம் எதிர்பார்த்த முக்கியமான ஒன்று இதுவே.

ஒரு தலைப்பு அல்லது பதிகம் என்று எடுத்துக் கொண்டால் அதன் அனைத்து பாடல்களையும் பாடவேண்டும். அப்பொழுதுதான் அதன் இனிமை, மென்மையும்
உண்மையும் உணரமுடியும். இல்லாவிடில் அது பெருங்குறை மட்டுமல்ல தீராக் குறையாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்தக் குறையோடு இளையராசா திருவாசகம் முழுமையையும் பாடிவிட்டதாக எண்ணிவிடல் ஆகாது.

3) பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

அச்சப்பத்தில் 'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்... ' என்பது
'புற்றில் வாளரவும் அஞ்சேன் ' என்று இருக்க வேண்டும். நெருவட்டோடு
கொடுக்கப் பட்ட கையேட்டிலும் 'வாழ் ' என்றுதான் போட்டிருக்கிறது.
பாடலில் உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.
பொற்சுண்ணத்தில் ஒரு பாடலில் 'பை அரவு அல்குன் மடந்தை.... '
என்பது 'பை அரவு அல்குல் மடந்தை.... ' என்று இருக்க வேண்டும்.

கோத்தும்பியில் 'சீயேதும் இல்லாத செய்பணிகள்... ' என்றிருப்பது
'சீயேதும் இல்லாதென் செய்பணிகள்... ' என்றிருத்தல் வேண்டும்.

யாத்திரைப்பத்தில் 'பெறுதற்கரியன் பெருமானே ' என்பது
'பெறுதற்கரியன் பெம்மானே ' என்று இருத்தல் வேண்டும்.

'மிகவோர் காலம் இனுமில்லை ' என்பது 'மிகவோர் காலம் இனியில்லை '
என்றிருக்க வேண்டும்.

சிவபுராணத்தில் 'ஓங்காரமாய் நின்ற மெய்யே! ' என்றில்லாமல்
'....மெய்யா! ' என்றிருக்க வேண்டும். 'நீள்கழல்கள் காட்டி ' என்பதில்
'காட்டி ' என்பது அளபெடுத்து வரும். பாடலில் கூட அந்த இடத்தில்
'காஅட்டி ' என்பது சாதாரண நெடிலாக வந்துவிடுகிறது.

'நாற்றத்தின் நேரியாய் ' என்பதற்கு பதில் 'ஆற்றத்தின் நேரியாய்.. '
என்றிருக்கிறது. நாற்றத்துக்கும் ஆற்றத்துக்கும் வேறுபாடு இல்லை ?

பிழைகளுள் பெரும்பிழை மற்றும் பொருள் பெருமளவு திரியும் பிழை இது.

ஒரு சில பாடல்களிலேயே என் கண்ணுக்கும் காதுக்கும் எட்டினவை
இத்தனைப் பிழைகள். நன்கு ஆய்ந்தால் மேலும் பிழைகள் இருக்கக் கூடும்.

இப்பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்டு
காலங்காலமாய் நிலைத்து வரும் பாடலைப் பாடும்போது, அதுவும்
பொருள்செலவில், நிறைய ஆள்கள் துணையுடன் பாடப்படும்போது
தகுந்த கவனம் செலுத்தப் பட்டிருக்க வேண்டும்.

இது ஆயிரம் தாமரை மொட்டுக்களும் இல்லை;
அந்தி மழையின் பொழிவும் இல்லை.

இது போன்ற பிழைகளைக் களைவதில் இளையராசா தனக்கே உரித்தான
ஞான முதிர்வுடன் இதைச் செய்யவேண்டும். தருமியாக நின்றுவிடக் கூடாது.
இப்பிழைகளுக்கு, இளையராசா பயன்படுத்தும் நூல் அல்லது நூல்களும்
காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு பதிப்பகமும் தாம் வெளியிடும்
நூலில் தம் பங்குப் பிழைகளை சேர்த்திருக்கும். திருவாசகத்தையும்
ஏகப்பட்ட பேர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இம்மாதிரிப் பணிக்கு
குறைந்தது நான்கைந்து பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஏற்கனவே
சிவப்பண்டிதமும் தமிழ்ப்பண்டிதமும் கொண்டவர்களின் பார்வைக்கும்
வைத்து பின் பாடலாக்கும் முறைமை(methodology) அல்லது செலுத்தத்தை(process) இளையராசா கையாளவேண்டும். முனையலின் (project) அளவு பெரியது. அதனால்

நூலின் தகுதியை எண்ணி அதனைத் துல்லியமாக இசைக்க எல்லா
முறைகளையும் அவர் கையாள வேண்டும்.

4) சிவபுராணம்:


அ) சிவனை வழிபடுபவர்களிடைப் பரவலாக அறியப்பட்டதும் பாடப்படுவதும்
சிவபுராணம்தான். அதில்தான் பெருந்தவறுகளைக் காணமுடிகிறது.

முக்கியமாக அதனை முதலில் இருந்து கடைசிவரை அடிமாறாமல் பாடவேண்டும்.

ஆனால், தன்னால் முடிந்த மட்டும் அதனை மாற்றிப் பார்த்திருக்கிறார் இளையராசா!

இப்படிப் பாடினால் என்ன என்று யாரும் கேட்கக் கூடும்.

அடிப்படையில் சிவபுராணம் என்பது என்ன ? சிவனின் அநாதியான, பழமையான
முறைமையைச் சொல்வது சிவபுராணம். புராணம் என்றால் அதில் முறைமை
முக்கியமல்லவா ? முறைமை என்றால் படிப்படியாக வரிசையாக ஆதி முதல் ஈறாக முடியவேண்டாமோ ? அதைத்தானே 95 அடிகளில் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

அதன் எளிமையும் முறைமையும்தானே பலரைக் கவர்ந்து பாடவைக்கிறது ?

பின்னர் அதில்போய் எல்லாவற்றையும் ஏற இறங்கச் செய்தால் எப்படி ?

பிற பாடல்களில் அப்படிச் செய்யலாம். யாத்திரைப் பத்திலோ அச்சப்பத்திலோ
பாடல்களில் வரிசையையோ அல்லது அடிகளையோ மாற்றிப் போட்டால் பொருளும் தன்மையும் ஏதும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் அங்கெல்லாம் விட்டு விட்டு எதில் மாற்றக் கூடாதோ அதில் புதுமை செய்வதாக எண்ணி அடிகளையும் பகுதிகளையும் முன் பின்னாக்கி விட்டிருக்கிறார்.

எடுத்துக் காட்டாக 'செத்திலாப் பத்தில் ' ஒரு பாடல்:

'அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
மரக்கண் என் செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறையாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே. '

(திருவாசகம் - செத்திலாப்பத்து - பாடல் 4)

எண்சீர் விருத்தமான இப்பாடலை அரை அடிகளாக வெட்டி 8 அடிகளாக ஆக்கி
ஏறத்தாழ தலைகீழாகப் படித்தால்,

'த்ிருப்பெருந்துறை மேவிய சிவனே
தென்பராய்த் துறையாய் சிவலோகா
மரக்கண், என் செவி இரும்பினும் வலிது
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
என்பராய் நினைவார்,
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்,
அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்,
எனைப்பலர் நிற்க,
இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய் ?... '

பலவரிகள் கீழிருந்து மேல் போட்டாலும் பொருள் அல்லது செய்தி
ஏதும் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதே போல ஆறாவது பாடலான
'அறுக்கிலேன் உடல் துணிபட.... ' என்ற பாடலையும் இம்மாதிரி அடிகளை
மாற்றிப் பாடுதலுக்கு காட்டாகச் சொல்லலாம்.

அதனால் சிவபுராணத்தில் இளையராசா செய்திருப்பது புதுமையாக அல்லாமல்
பெரும் அடிப்படைப் பிழையாகி விடுகிறது. நிறைய அடிகளை அல்லது பகுதிகளை ஏன் இப்படிச் செய்தது பிழை என்று எளிதாய்ச் சொல்லிவிடமுடியும் - எழுதினால் அது பெருகும். அவர் செய்திருப்பதில் ஏதும் ஏரணம் (logic) காணவியலவில்லை.

ஆகவே இளையராசாவின் சிவபுராணம் ஏற்கத்தக்கதல்ல.

ஆ) 'பொல்லாவினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன்... ' என்று தன்னடக்கத்துடன்

ஆரம்பிப்பதாக எண்ணித் தவறாக ஆரம்பித்திருக்கிறார். தனது சிறுமையில்
ஆரம்பிக்கும் முன் இறைவனின் பெருமையையைச் சொல்லி அதன் பின்
தனது சிறுமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அதற்காகத்தான்
அவனை வழுத்தி, பின்னர் போற்றி, பின்னர் அவனையே சிந்தையில் இருக்கச் செய்து அவனின் பரப்பையும் சீரையும் காட்டி/சொல்லி பின்னர் சொல்லவேண்டிய தனது சிறுமையை சொல்கிறார் மாணிக்கவாசகர். அதில் புதுமை செய்வாதாக இளையராசா செய்திருப்பது புதுமை அல்ல. அதற்கு இடமும் இதுவல்ல.

அப்படித்தன் சிறுமையைக் கூறுவதாகச் சொன்னால் எவ்வளவு சிறியவர் என்று
எப்படிச் சொல்லமுடியும் ? பெருமையைச் சொன்னால்தான் அது முடியும்.
மாணிக்கவாசகரே, எடுத்தவுடன் ஈசனை வாழ்த்தி விடவில்லை.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை வாழ்த்திப் பின்னர்தான்
நாதனை வாழ்த்துகிறார். சிவபுராணத்தில் ஒரு முறைமை இருக்கிறது.

இதையே இப்படி மாற்றினால் போற்றித் திருவகவலில் சகத்தின் உற்பத்திப்
பகுதியை எப்படிப் பாடுவார் ? திருவண்டப் பகுதியை எப்படிப் பாடுவார் ?

இ) இதிலும் இசை/மிகு ஓசை இடராக இருக்கிறது. (ஆரம்பத்திலும்

ஆங்காங்கும் 'ஆவா...ஊவா.... ' என்று பின்னனி இசை வருகிறது; அதுவும்
நிறைய. தேவைக்கும் மேல் இருக்கிறது. ஓங்காரத்தைப் பிரித்து 'ஆ ' தனியே
'ஊ ' தனியே சொல்கிறாரோ என்று கூடத் தோன்றியது.)

அழகாகப் பாடிக் கொண்டே போகையில் திடீரென்று பேரோசையில்
ஆங்கிலப் பெயர்ப்புப் பாட்டு!. பின்னனியிலும் கேட்கிறது - தனியாகவும்
கேட்கிறது. பொருந்தவில்லை.

இப்பாடலில் இளையராசாவின் குரல் அருமை. ஆங்காங்கு தாண்டித் தாண்டி
வட்டமடித்துப் பாடாமலும், பின்னாடி ஆங்கிலமும் பேரிசையும் இல்லாமலும்
தனியே இதை இவர் பாடவேண்டும். மிகச் சிறப்பாக வந்திருக்கக் கூடிய ஒன்றை
எப்படியோ தவற விட்டுவிட்டார்.

ஈ) சிவபுராணத்தில் பல அடிகள் காணாமல் போய்விட்டன. அவற்றை தவிர்த்திருக்கவே கூடாது.

'வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க... ' முதல் நான்கைந்து அடிகளைக் காணவில்லை.

வேகங்கெடாமல், இவர் எப்படி பொல்லாவினையேன் என்று உணர்ந்தார் என்று
தெரியவில்லை.

'காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே, அத்தா, மிக்காய் நின்ற... ' என்ற அடிகளும் காணவில்லை.

இன்னும் சில வரிகள் காணாமல் போயிருக்க,

சில இடங்களில் சீர்களையும் வசதிக்கேற்றவாறு விட்டுவிடுகிறார்.

'ஆற்றேன் எம் ஐயா அரனேயோ (ஓ) என்று என்று ' என்பதில்
'ஓ என்று என்று ' என்ற முக்கியமான அலறல்/கதறலை விட்டு விடுகிறார்.

அதேபோல 'அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று ' என்பதிலும்
அந்த 'ஓ என்று ' என்ற சொற்கள் மிக முக்கியம். அவற்றையும் அம்போ என்று
விட்டு விடுகிறார்.

சிவபுராணத்தின் தொடக்கத்தில் மாற்றம் செய்தவர் ஈற்றிலும்
பிழை செய்திருக்கிறார். அதன் ஈறு சொல்லும் சேதி உன்னதமானதும்
முக்கியமானதும் ஆகும்.

யார் சிவனடிக்கீழ் செல்வார் என்று சொல்லவேண்டியதைச் சொல்லாமலே
தாண்டி விடுகிறார். இது பழுது மட்டுமல்ல பாவமும் கூட என்பதனை யாரேனும்
ஒரு நேர்மையான சிவபண்டிதர் இளையராசாவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இளையராசா சிவபுராணத்தில் புதுமை புகுத்த முயன்றிருப்பதாகத் தெரிகிறது.
புதுமையை எதிர்ப்பது நோக்கமல்ல. புதுமை முயற்சியில் சரியான அணுகுமுறையும் அடிப்படையும் இல்லாததால் புதுமை தோற்றுப் போகிறது.

இப்படிப் பொருள் பிழைகள், விட்ட பிழைகள், பதிப்பு பிழைகள் எல்லாம் இருந்தால் என்ன ? - ஏதோ பாடியிருக்கிறார்; நொள்ளை சொல் சொல்வதை விட - நல்லாயிருக்கு என்று கேட்டும் கேட்காமலும் சொல்லி விட்டுப் போனால் என்ன ?

திருவாசகப் பாடல்கள் ஒப்பற்ற, கிடைத்தற்கரிய தமிழ் பக்தி இலக்கியம் ஆகும்.

ஏதோ சாதாரண பாடகர் அல்லது இசையாசிரியர் தவறுகள் செய்தால் அது மக்களிடத்தில் நிலைக்காது. ஆனால் இளையராசா தமிழ்நாடு போற்றும் பெருமைப்படும் இசை ஓவர்.

இவர் செய்யும் நன்றும் பிழையும் நிலைக்கக் கூடியது. அன்றும் இன்றும் 95 அடிகளாக இருந்த, இருக்கும் சிவபுராணம் இவரால் 80+ அடிகளாகக் குறைந்தது
என்ற இலக்கியச் சிதைவு திருவாசகத்திற்கு ஏற்படக் கூடாது. மற்ற இலக்கியங்களுக்கும்தான்.

ஒரு இலக்கியமே தலை கீழாக மாற்றப்பட்டிருக்கிறது. பொருள் சிதைந்து போய்க் கிடக்கிறது.

இதற்கு அணுகுமுறைப் பிசகு என்று சொல்லலாம். இதைப் பார்த்து நாம் இளையராசாவிற்கு எடுத்துச் சொல்லாமல் வாளாவிருத்தல் அடாத செயல். இப்படி வாளாவிருந்து விட்டு,

'அந்த கால இலக்கியங்கள் காணாமல் போய்விட்டன - நமக்கு பொறுப்பில்லை -
நாம் மோசம் - ஓலைகளை எல்லாம் கரையான் உண்டு விட்டன - யாரோ கொளுத்திட்டாங்க,- யாரோ ஆற்றிலே போடச் சொல்லிட்டாங்க - மதச் சண்டையில் காணமற் போய்விட்டது - நூலகத்தைக் கொளுத்திட்டாங்க ' என்றெல்லாம் நாம் பழங்காலச் சங்கதிகளைப் பற்றிப் புலம்பினால்,
அது எப்படிப் பொருந்தும் ?

இப்படித்தானே இலக்கிய வரலாற்றுச் சிதைவுகள் ஏற்படுகின்றன!

பரவாயில்லை - இளையராசாவின் சிவபுராணப் பிசகுகளை அப்படியே விட்டு விடலாம் என்று சொல்பவர்களுக்கு என் கேள்வியெல்லாம் இதுதான்:

'பரித்ரானாய சாதூநாம்
வினாசாய சதுசுகிர்தம்
தர்மசம்சுதா பனர்த்தாய
சம்பவாமி யுகே யுகே '

என்ற பகவத்கீதையின் பாடலை, ஏதாவது ஒரு பெரிய இசைமேதை
தலைகீழாகவோ, அல்லது சில சொற்களை விட்டு விட்டோ அல்லது
'சம்பவாமி யுகே யுகே ' க்கு பதில் 'சம்பவாமி புகே புகே ' என்று பாடினால்,
அதற்கு வைதீகர்களின் விமர்சனமும் சமக்கிருதப் பண்டிதர்களின் விமர்சனமும்
எப்படியிருக்கும் ?

இதனை அனைவரின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

இளையராசாவின் முயற்சி பாராட்டத்தக்கது - ஆனால்
அதன் விளைவு 'சிவபுராணத்தில் பழுது ';
'மற்றவற்றில் சில போக்கத்தக்க குறைகள் '.

யாரும் இந்த நெருவட்டையோ ஒலிநாடாவையோ ஓசிப்படி எடுக்காதீர்கள் -
காசு கொடுத்து நேர்மையாக வாங்குங்கள் என்ற விடப்பட்ட அந்த செவ்விய தூய்மையான வேண்டுகோள் புனிதமானது.

அதுபோல அந்த வட்டின் உள் இருக்கும் சங்கதியின்
புனிதமும் காக்கப் படல் வேண்டும்.

ஆதலின் சில வேண்டுகோள்களை இளையராசாவிற்கு வைப்பது நம் கடமையாகிறது.

இதைச் சொல்வது அவரின் மேல் உள்ள பேரன்பினால் மட்டுமே.

1) முதல் வெளியீட்டில் சிவபுராணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.

2) அதன் திருத்திய வெளியீடாக ஏனைய பாடல்களில் பிழைகளைக் களைந்து
சிவபுராணத்தை உங்கள் குரலிலும், உங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டுக் குரல்களிலும் அடிமாறாமல் கொண்டு வாருங்கள்.

3) ஆங்கில சிவபுராணத்தை தனிப்பாடலாக வையுங்கள்.

4) நீங்கள் படிக்கும் திருவாசக நூலினை மறுபரிசீலனை செய்யுங்கள். வேறு பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

5) திருவாசகத்தை உணர்ந்த நல்ல சிலரின் (ஒற்றிகளையும், துதிபாடிகளையும்
கைவிடுங்கள்) கூட்டை வைத்துக் கொள்ளுங்கள்.

மாணிக்கவாசகரே,

'என்னைக் கோதுமாட்டி, நின் குரைகழல் காட்டி,
குறிக்கொள்க என்று நின் தொண்டரின் கூட்டாய்... ' என்றுதானே வேண்டுகிறார் ?

அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: ஓவர், ஓவம் = ICON, செலுத்தம் = process, முனையல் = project,

ஏரணம் = logic ( நன்றி: valavu.blogspot.com ).

Wednesday, April 20, 2005

பாவேந்தரின் பதறல்கள்!

தமிழ் என்பதைத் தவிர நெஞ்சத்தில் மற்றோர்

குறிக்கோளுக்கு இடம் தரா நெஞ்சினர் பாவேந்தர்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான

ஏப்ரல் 21க்கும், பிறந்தநாளான ஏப்ரல் 29க்கும் இடைப்பட்ட

நாள்களில் ஒன்றேனும் தமிழ் உள்ளங்களை பாரதிதாசனை

நினைவு கூர வைத்துவிடும். இந்த வருடம் அவரின் நினைவு

வந்தபொழுது இன்றைய தமிழ், தமிழர் நிலையை 1950களோடு

ஒட்டிப் பார்க்க வைத்தது.

1950களை எண்ணும்போது பாவலரேறு பெருஞ்சித்திரனார்

என்ற அந்த மாசு மறுவற்ற தமிழ் வெள்ளத்தையும்

எண்ணிப் பார்க்க வைத்தது.

அவரை எண்ணிப் பார்க்கையிலே, அவருக்கு முந்தைய ஆயிரத்தி

சொச்சம் ஆண்டுகளுக்கு முன் (7,8,9 ஆம் நூற்றாண்டுகளில்)

தமிழ் வளர்த்த பலரையும் குறிப்பாக தேவார மூவரையும், அவர்கள்

காலத்துக்கும் முற்பட்டவர் என்று சொல்லப்படுகிற மாணிக்க

வாசகப் பெருமானையும் எண்ணிப் பார்க்க வைத்தது.

அப்பர் பெருமான் இறைவனை எண்ணி, இறையே

உனக்குப் பிடித்த நீராட்டு, மலர் அருச்சனை,

தூபம்(ஒளி/தீபம்) இவற்றை நான் செய்ய தவறியதேயில்லை;

அது மட்டுமல்ல நீ உகக்கும் தமிழிசைப் பாடலை ஆக்கவும்

பாடவும் தவறியதேயில்லை - இப்படியான எனக்கு என் வயிற்றில்

ஏற்பட்டிருக்கும் சூலை நோயை நீ போக்கியருள வேண்டும்

என்று உருகிப் பாடுவார்.

'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசைப் பாடல் மறந்தறியேன்.... '

அப்பர் பெருமான், நீர் என்பதற்கு சலம் என்ற சொல்லை

பிற மொழிக் கலப்பில்லாமல் பேணியிருப்பதுவும்,

இறைவனுக்கு ஏற்றவை பிடித்தவை

சலம், பூ, தீபம் மற்றும் தமிழ் என்று மிக இயல்பாகச்

சொல்கிறார். அது மட்டுமல்ல, தமிழ்ப் பா ஆக்கி

அதனை இறைவனிடம் பாடி தன் குறைகளையும்

போக்கிக் கொள்கிறார்.

மறைஞான ஞானமுனி சம்பந்தரும், சுந்தரரும்

இறைவனை தமிழ்ப்பாக்களால் பாடி இன்பம்

அடைவது மட்டுமல்லாமல், தாம் பயன் அடைவது

மட்டுமல்லாமல், இந்தப் பதிகத்தை ஓதுபவர்களுக்கும்

அவர்கள் பெற்ற பயன் விளையும் என்று ஆணை யிட்டுச்

சொல்லியிருக்கிறார்கள்.

'காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை

வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே '

'தானுறும் கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே '

- சம்பந்தர்

தான் பெற்ற இன்பம் மற்றோருக்கும் கிடைக்கச்

செய்வது மட்டுமல்லாமல், சுந்தர மூர்த்தி நாயனாருக்குத்

தனிச் சிறப்பே இருக்கிறது. சிவபெருமானைக் கெஞ்சுவார்,

அவரிடம் உருகுவார், நெகிழ்வார், நன்றிசொல்வார்; திடாரென்று

பிடித்து ஏசுவார், மிரட்டுவார், கடிவார், இழிவாகவும்

பேசுவார்.

'திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்

திருமேனி வருந்தவே வலைக்கின்றேன், நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா.. '

என்று சொல்லும் துணிவு சுந்தரருக்கு மட்டுமே வரும்.

இறைவனோடு அவர் காட்டாத குணங்களே கிடையாது.

இறைவனை என்ன திட்டினாலும், இறைவனும் அதைக் கேட்டுக்

கொண்டு இவர் கேட்பதையெல்லாம் கொடுத்தும் விடுவார்;

அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் என்று சிவநெறியாளர்கள்

சொல்வார்கள்.

இறந்து சாம்பராகிப் போன பெண்ணை (பூம்பாவாய்) பிழைக்க

வைத்தவர் என்று சம்பந்தரை (மயிலையில்) சிவநெறியாளர்கள்

சொல்லிப் பெருமைப்படுவார்கள். (மட்டிட்ட புன்னையங்கானல்...)

இந்த மூவர் பெருமக்களும் ஆக்கியவை அனைத்துமே

தூய தமிழ்ப் பாக்கள். ஒன்றா இரண்டா ? ஆயிரக்கணக்கான

பாடல்கள். அவற்றை சிவபெருமானும் அப்படியே

ஏற்றுக் கொண்டார்.

அதேபோலத்தான், நாம் வாழும் காலத்தில் நம் முன் வாழ்ந்து

மறைந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழகத்தில் ஆரவாரக்

கவிதைகளையும், திரைப் பாடல்களையும் இயற்றும் எல்லாக்

கவிஞர்களையும் நமக்குத் தெரியும்.

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர் யார் என்று கேட்டால்

கண்ணதாசன், வைரமுத்து, பட்டுக்கோட்டையார் போன்ற

கவிஞர்களை பலரும், பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களை

சிலரும் சொல்லக் கூடும். ஆனால் விரல் விட்டு எண்ணிவிடலாமோ

என்றளவில்தான் பவலரேறு என்ற ஒப்பற்ற பாவாணரை

தமிழகம் நினைவில் கொண்டிருக்கிறது. இவரின் தமிழ்ப்பாக்களில்

புற/அக நானூறின் செறிவும் சிந்தனையும் விரவிக் கிடக்கும்.

அப்படிப் பட்ட பாவலரேறு தம் மகள் கடுஞ் சுர நோயால்

பாதிக்கப் பட்டுக் கிடந்தபோது, சரியான மருத்துவம் அளிக்க

முடியாததோர் வறுமை நிலையில் விடிய விடிய தமிழ் அன்னையை எண்ணி

நைந்து, உருகி பா இயற்றிப் பாட (தமிழ்த்தாய் அறுபது),

ஓரிரு நாள்களில் நோய் முற்றும் நீங்கி அவரின் மகள் சாவினின்று மீண்டது.

'ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறுப் போந்து திங்கள்

நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த

தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம்

வள்ளன்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் காப்பாய்! '

'சாவாத எழிலே! வாழ்ந்து சலிக்காத தாயே! துன்பம்

மேவாத ஒலியே! எம்போல் மின்னாத தமிழர்க் கெல்லாம்

ஆவாத பொருளே! நீண்ட ஆழிசூழ் மண்ணில் என்னைக்

காவாத முதலே! பாவாற் கசிகின்றேன்; கனிவா யம்மா! '

(கனிச்சாறு - 3 - தமிழ்த்தாய் அறுபது - பெருஞ்சித்திரனார்)

தேவார மூவர்கள் சிவபெருமானை வேண்டிப் பாடினார்கள் என்றால்,

பாவலரேறு தமிழன்னையை வேண்டினார். மூவர்களையும்

பாவலரேறையும் ஒப்பிடுவது நமது நோக்கல்ல - ஆனால் ஒரு

ஒற்றுமை என்ன வெனில் இவர்கள் யாவரின் வேண்டு பொருள்

வேறாயிருப்பினும் வேண்டிய வழி தமிழ். அதனை இறைவனும்

ஏற்றுக் கொண்டான்; தமிழன்னையையே இறைவியாகக் கொள்ள

பெருஞ்சித்திரனாரின் பாவை இறைவியும் ஏற்றுக் கொண்டார்.

அத்தகைச் சிறப்பும், தமிழும் கொண்ட பெருஞ்சித்திரனார்

1950களிலே பதறினார் தமிழின் நிலை கண்டு. எதற்காகவென்றால்,

தற்போதைய ஆண்டுகளிலே, தமிழகத்திலே ஆட்சி அதிகாரத்தில்

இருக்கின்றோர் தமிழகத்தின் சட்ட மன்றத்திலே தமிழ் மொழி

காக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை எப்படி நையாண்டி

செய்கிறார்களோ, 'சைக்கிளுக்குத் ' தமிழ் தெரியுமா ?

வேட்டி கட்டினீர்களா ? என்றெல்லாம் கேட்டு எள்ளி நகையாடி

விளையாட்டுக் காண்பிக்கிறார்களோ அதேபோல 1950 களில்

சட்ட மன்றத்திலே, கங்கு கரையின்றி அக்காலத்தில்

புழங்கிய வடமொழிச் சொற்களில் சில சொல்லி

'இந்தச் சொல்லுக்குத் தமிழ் இருக்கா ?

இந்த எழுத்துக்குத் தமிழ் இருக்கா ? ' என்றெல்லாம்

தமிழைக் காக்க எழுந்தோரையெல்லாம்

கேட்டு நகையடித்தார்கள். அது மட்டுமல்ல,

மொழியாராய்ச்சியிலும் குளறுபடி.

அப்போது பதறினார் பாவலரேறு!

'பழிவாங்கிக் கொண்டார் இந்நாட்டை ஆள்வார்!

பைந்தமிழ்க்குத் தீங்கு செய்தார்; நஞ்சைச் சேர்த்தார்!

விழியற்ற அறுவர் போய் யானை கண்ட

வினைதவிர வேறென்ன ? உணர்வீர் நன்றே!....

மகிழ்ச்சி எனும் சொல்லிருக்க 'சந்தோசம் ' ஏன் ?

மக்களரசு இருக்க 'சனநாயகம் ' ஏன் ?

புகழ்ச்சி பெறும் 'புத்தகம் ' இருக்க 'புசுத்தகம் ' ஏன் ?

இகழ்ச்சி தரும் 'அட்சரம் ' ஏன் 'எழுத்து ' இருக்க ?

'இழிமலடி ' வெறுவயிறி வடவர் மூளி

புகழ்ச்சி பெறும் மங்கைக்குத் தருமாம் பிள்ளை;

பைந்தமிழ்த் தாய்க் காணையிட்டு நிற்பீர் மக்காள்! '

(கனிச்சாறு-16)

50 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழியால் வாடிய

தமிழை செழிக்கச் செய்ய பாவலரேறு போன்றோரும்

பாவேந்தர் போன்றோரும் ஆற்றிய பணிகள் ஏராளம்.

தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், வணிகம், நுட்பம்,

கலைகள் போன்ற பல்துறைகளிலும் தமிழ் மறுமலர்ச்சி

அடைய வேண்டும் என்று அவர்கள் ஆற்றிய பணிகள்

அளவிடற்கரியது.

ஆயினும், 50 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலையை

நோக்கினால், இன்றும் அந்த முயற்சிகள்

முழுமையடையாததோடு, மேலும் சீர் கெட்டுக்

கிடப்பதைத்தான் காண முடிகிறது.

இன்றும் அன்றைப் போலவே, ஆங்கிலச் சொல் கலப்பைப்

பற்றி சட்ட மன்றம் நகையாடுகிறது. எங்கு நோக்கினும்

வணிகப் பலகைகள், கல்வி, கலை, நுட்பம், இல்லம்

எல்லாவற்றிலும் தமிழ் முழுமையாக இல்லவே இல்லை.

50 ஆண்டுகள் கடந்த பின்னரும், வடமொழிக்

கலப்பும் வடசொல் புழக்கமும் பெருமளவு குறையவில்லை.

அதோடு சேர்ந்து ஆங்கிலமும் தமிழை மிதித்துக் கொண்டிருக்கும்

இக்கால கட்டம் நேர்மையாக சிந்திப்போரை பதறத்தான்

வைத்திருக்கிறது.

ஏனிந்த நிலை ? பாரதிதாசனின்

பதறல்களும் சாடல்களும் இவை:

'வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ ? அரசியல்சீர்

வாய்க்கப் பெற்றோர்

ஆணிகர்த்த பேடிகளோ ? அரும்புலவர் ஊமைகளோ ?

இல்ல றத்தை

பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ ?

பெருவாழ் வுக்கோர்

ஏணிபெற்றும் ஏறாத தமிழர் உயிர் வாழ்வதிலும்

இறத்தல் நன்றே.

மிகுகோயில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர்

விழாவெ டுப்போர்

தகுமாறு மணம்புரிவோர் கல்விதரும் கணக்காயர்

தம்மா ணாக்கர்

நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ ?

நல்வாழ்வுக்கோர்

புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர் உயிர் வாழ்வதினும்

இறத்தல் நன்றே.

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர் மாத்தமிழை மாய்ப்பதுண்டோ ?

வாய்ப்பாட் டாளர்,

இகழ்ச்சியுற நடப்பதுண்டோ ? இசைப்பாடல் ஆக்குபவர்

இழிவேன் ஏற்றார் ?

நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ ?

வாழ்வுக் கான

புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழ்ருயிர் வாழ்வதினும்

இறத்தல் நன்றே.

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும்

கூட்டம் ? தீமை

மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ ?

சொல்லாக் கத்தார்

தூற்றுமொழி ஏன்சுமந்தார் ? துண்டறிக்கையாளருமோ

தீயர் ? வாழ்வில்

ஏற்றமூற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும்

இறத்தல் நன்றே. '

--தமிழியக்கம் - பாரதிதாசன்

பாவேந்தர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின்

ஒவ்வொரு துறையினரையும் வினவுகிறார், சாடுகிறார்

சாபமும் விடுகிறார்; பாவேந்தர் வாழ்க என்று கூறிவிட்டு

அவர் கடிந்துரைத்த அத்தனை பாதகங்களையும்

தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழர்கள்.

வணிகம், அரசியல், இல்லம், அச்சகம், ஏடுகள், மிடையங்கள்,

பட்டிமன்ற, சொற்பொழிவாளர்கள், அறநிலையங்கள், புலவர்கள்

எல்லோரிடமும் இன்று நாம் காணும் குறைகளை அன்றே

கண்டவர்கள் பாவேந்தர் உள்பட பல பேர்கள்.

ஆயினும் எல்லோரும் 'தமிழ் வாழ்க ' என்று

சொல்லிவிட்டு, அந்தச் சொற்களைத் தவிர

அத்தனையையும் பிறமொழிகளில் புழங்குகிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைக் கூட

'Wish you a happy Tamil New Year ' என்று

கூறி கோமாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

துறைதோறும் ஊழல், ஒழுக்கமின்மை மற்றும் தமிழின்மை

என்ற நிலையில் தமிழர்களின் வாழ்வு நிச்சயம்

கேள்விக் குறிதான் என்பதில் அய்யமில்லை.

எது செய்யக் கூடாதோ அதை செய்வதில் வல்லவர்கள்

தமிழர்கள். அண்மையில் இவர்களின் இடக்கு முடக்கு

என்னவென்றால் கணினி உலகில், தமிழ் எழுத்துரு,

மற்றும் குறியீட்டு குளறுபடிகள்.

தமிழர்களுக்கு தமிழும் ஒழுங்காகத் தெரியாது!

அதோடு கணினியையும் ஒழுங்காகத் தெரியாது

என்று சொல்லுமளவுக்கு இவர்கள் நடந்து

கொண்டிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டித் தனமாக இவர்கள்

குறியீட்டுக் குறைகளை புறம் தள்ளிவிட்டு,

இருப்பதே போதும் என்று குறைச் சிந்தனையால் வறட்டு

வீராப்பும் பெருமையும் பேசித் திரிகிறார்கள் இன்றைய

தமிழ்க் கணினிச் சொவ்வறையாளர்கள்.

தமிழகத்திற்கு மத்திய அரசிலே சரியான பங்கில்லை,

அதுவும் கணினி தொடர்பான அடிப்படை விசயங்களில்

தமிழ்க் குறியீட்டிற்காக குரல் கொடுக்க ஆளில்லை

என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள்,

இன்று நடுவண் அரசிலே பலம் பொருந்திய அமைச்சராக

அதுவும் கணினித் துறையைக் கையில் வைத்திருக்கும்

தமிழர் ஒருவர் அமைச்சர் இருக்கையிலே கூட,

எதிர்காலம் பற்றிய செறிவான சிந்தனையைச்

செய்யாமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு

தமிழ்க் குறியீட்டை கோட்டை விட்டு, பின் ஏப்பம் விட்டு

இருக்கும் தமிழர்களைத்தான் 'ஏணிபெற்றும் ஏறாத தமிழர் '

என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறினார் போலும்!

பாவேந்தர் பாரதிதாசன் அன்று பாடினதும் பதறியதும்,

இன்றும் பாடலாகவும் பதறலாகவுமே நிலைத்து

வருங்காலத்துக்கும் பொருந்தி விடுமோ என்ற

அய்யம் இருக்கவே செய்கிறது.

தேவார மூவர்கள், பாவலரேறு, பாரதிதாசன்

போன்ற எவ்வளவோ பேர்கள் தமிழுக்கு

மறுமலர்ச்சியைக் கொடுத்தும் 'ஏணிபெற்றும்

ஏறாத தமிழர்களை ' என்ன சொல்ல ?

பாவேந்தர் தெளிவாகத்தான் அவர் பாட்டில்

சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னது போல் ஏன் என்னால் சொல்ல முடியவில்லை ?

என்ற சிந்தனையோடே, 'பித்த உலகினர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்த களிரென்னும் அவாவிடை.... ' என்ற மாணிக்கவாசகரின்

சொல்லையும் எண்ணிப் பார்க்கிறேன்.

'பித்த உலகினர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்த களிரென்னும் அவாவிடை.... ' பிழைக்காது தமிழ்

என்ற ஏக்கத்துடன் பாரதிதாசனை நினைவு கூர்கிறேன்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

20-ஏப்ரல்-2005


திண்ணையில் நாக.இளங்கோவன்