Pages

Saturday, November 25, 2000

சிலம்பு மடல் 30

சிலம்பு மடல் - 30 சேரனின் சூளுரையும் போரும்!

வஞ்சி:
கால்கோள்காதை, நீர்ப்படுகாதை:

மலைவளம் கண்டு, மாபத்தினிக்குப் படிகம் பண்ண கல்லெடுக்க, கங்கைதாண்ட முடிவு செய்த மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மீண்டு அரசவையில் வீற்றிருக்க அமைச்சர்களும் படைத்தலைவர்களும் கூடியிருக்கின்றனர்!

வடக்காண்ட மன்னர்கள் 'தமிழரசர்கள், இமயத்தில் கொடிநாட்டியது, எம்போல் திறம் வாய்ந்த அரசர்கள் இல்லாத காலத்தில்' என்று நகையாடியதை, வடதிசையிலிருந்து வந்து அரசனைப் பார்த்துப் போன முனிவர்(தாபதர்) சேரனின் காதில் போட்டுவிட, கொதித்துப் போயிருந்தான் குட்டுவன்!

படிகத்துக்குக் கல் எடுக்கப் பயணம் போகும் எண்ணத்தோடு, பாடம் புகட்டும் எண்ணமும் சேர்ந்து கொள்ள, "நமக்குப் பொருந்தா வாழ்க்கை உடைய ஆரிய அரசர்களின் பழிச்சொற்கள் எம்மை மட்டுமல்ல, எம்போன்ற சோழ, பாண்டிய அரசர்களையும் பழிப்பதாகும்; ஆதலால், வட நாட்டு மன்னர்களை வென்று அவர்கள் (கனகன் விசயன்) தலையில் வைத்து கல் கொணர்வேன்; அப்படி இல்லையென்றால் நான் குடிகாக்கும் மன்னனல்லன்; என் குடிகளுக்குப் பழிச்சொல் வாங்கித்தந்த கொடுங்கோலன் ஆவேன்!" என்று சூளுரைத்தான்!"

"உயர்ந்துஓங்கு வெண்குடை உரவோன் கூறும்:
இமயத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅகது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்;

வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கல்கொண்டு அல்லது
வறிது மீளும்என் வாய்வாள் ஆகில்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயம்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆக!...."

சேரன் சினம் கண்ட ஆசான் எழுந்து "உன்னைப் பழித்திருக்க மாட்டார்கள், சோழனையும் பாண்டியனையும் பழித்திருப்பார்கள்;
நீ சினம் கொள்ளாதே" என்று சொல்லிப் பார்த்தான்;

இதற்கிடை, அரசவை நிமித்திகன் (சோதிடன்) எழுந்து "மன்னவா! இதுதான் உனக்கு மிகநல்ல நேரம், உடனே புறப்படு! வெற்றி உனக்கே!" என்று சாத்திரம் ஓத எழுந்த மன்னன் அமரவில்லை! ஆனையிட்டான் படைகளுக்கு!

கண்ணகியை உயர்த்திப்போற்ற, கங்கைதாண்டி இமமலைக் கல்லெடுக்கப் புறப்பட்ட மன்னனின் பயணத்தின் நோக்கம் படையெடுப்பாய் மாறிப்போனது!

"ஆறுஇரு மதியினும் காருக வடிப்பயின்று
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னர்எல் லாம்நின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்குஇது முன்னிய திசைமேல்
எழுச்சிப் பாலை ஆகஎன்று ஏத்த,....."

போருக்குப் புறப்படுமுன் படைத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு விருந்தளித்தான்! பனம்பூ மாலையை கழுத்தில் அணிந்து, பூவா வஞ்சியில் (அதாவது ,மலரல்ல ஊர்ஆதலால் பூவா வஞ்சி என்றார்) பூத்த வஞ்சியை (வஞ்சிமலர்) முடியில் சூடிக்கொண்டு நாட்டோ ர் வாழ்த்த இறையை வணங்கி யானைமேலமர்ந்தான்! புறப்பட்டான்!

புறப்பட்ட மன்னனுக்குத் திருவனந்தபுரத் திருமால் கோவில் சேடத்தைக் (பிரசாதம்) கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் குடிகள்!

படைகளோடு வஞ்சி நீங்கிய மன்னன் நீலகிரிமலை சேர்ந்தனன்.
படைகளுடன் பாடிவீட்டில் தங்கியிருந்தான்!

"பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து....

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்;
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கஎன
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின்று ஏத்தக்

(ஆடக மாடம் = திருவனந்தபுரம்)

"ஆலும் புரவி அணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத்து இறுத்துஆங்கு....."

நீலகிரியில் படைகளொடு இருந்த மன்னனைப் பலர் வாழ்த்த, வாழ்த்த வந்தவர்களில் சஞ்சயன் என்பான், அரசே, 'கங்கைக்கரையாளும் நமது நட்புக்குரிய நூற்றுவர் கன்னர், கடவுள் எழுதக் கல்லை அவர்களே கொண்டு தருவதாகக் கூறியனுப்பியுள்ளனர்' என்று கூற, குட்டுவனோ, 'சஞ்சயா, ஒரு விருந்திலே ஆரிய அரசர்கள் கனகனும் விசயனும், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல், தமிழரசர்களைப் பற்றி அறியாத புதிய அரசர்களுடன் அருந்தமிழரின் ஆற்றலைப் பழித்துப் பேசியிருக்கிறார்கள்!'. அவர்களுக்குப் பாடம் புகட்டவே இப்படை செல்கிறது'; இதை நூற்றுவர் கன்னரிடம் கூறி கங்கையைக் கடக்க படகுகளைத் தயார் செய்யச் சொல் என்று ஆனையிட்டான் குட்டுவன், தமிழரைப் பழித்தோரைப் பொறுக்காமல்!

"பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம்எனச்....."

நீலகிரியை விட்டு தன் படைகளொடு நீங்கிய சேரன் செங்குட்டுவன் எந்தவிதத் தடையும் இல்லாமல் கங்கையின் தென்கரைசேர்ந்து, அங்கு நூற்றுவர் கன்னர் அளித்த ஓடங்களில் கங்கையைக் கடந்து போர்க்களம் செல்கிறான்.

அருந்தமிழர் ஆற்றலைப் பார்த்துவிடுவோமே என்று உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்ற வடதிசை வேந்தர்கள் கனக விசயருக்குத் துணையாக சேரனை எதிர்த்தனர்.

"உத்தரன், விசித்திரன், உருத்திரன்,பைரவன்,
சித்திரன்,சிங்கன்,தனுத்திரன்,சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்எனக்
கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர...."

வேட்டைக்குப் போன சிங்கம் பெரும் யானைக் கூட்டத்தைக் கண்டு ஊக்கத்துடன் பாய்வதைப் போன்று போரிட்ட சேரன் வெட்டி சாய்த்த பகைவரின் உடல்கள் கொழுப்பு நிறைந்த இரத்த ஆற்றில் மிதந்தோட, எருமை ஏறி வரும் எமன் ஓர் பகலில் உயிர்க் கூட்டம் அனைத்தையும் உண்ணுவதைப் போலக் குட்டுவன் கொன்று சாய்ப்பதை ஆரிய அரசர்கள் நன்கு உணர்ந்தனர்!

யானைகளை எருதாகப் பூட்டி, வாளைத் தார்கோலாகக் கொண்டு நெற் போரில் கடா விட்டதைப் போன்று, பகை வீரர்களை உழவாடினான் சேரன்! வடவாரிய அரசர்கள் தோற்றனர்!

வாய்ப்பேச்சாலே வீரம் காட்டி வளமிகு தமிழரை இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் அய்ம்பத்திரு தேர் வீரர்களுடன் சிறைப்பட்டனர்!

"எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய...."

"கச்சையானை க் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி, வாள்கோல் ஆக
ஆள்அழி வாங்கி அதரி திரித்த
வாள்ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தித்........."

அமைச்சனும் படைத்தலைவனுமான வில்லவன் கோதையோடு, வெற்றிவாகை சூடிய சேரன், போர் முடித்த மறவர்கள் பலரை ஏவி இமயமலையிலே கண்ணகிக்கு சிலைவடிக்கக் கல்லைப் பெயர்த்து எடுத்துக் கொண்டான்.

"வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேல் தாளைப் படைபல ஏவிப்
பொன்கோட்டு இமயத்துப் பொருஅறு பத்தினிக்
கல்கால் கொண்டனன் காவலன் ஆங்குஎன்."

உலகில் பெரும்போர்கள் 18 ஆண்டிலோ, 18 திங்களிலோ, 18 நாளிலோ முடிந்திருக்க, 18 நாழிகையிலேயே தென்தமிழ் ஆற்றல் அறியா கனகன் விசயன் என்ற இரு ஆரிய மன்னர்களுடன் நிகழ்ந்த போரை வென்றான் சேரன்! (18 ஆண்டுகள் தேவர்-அரசர் போர், 18 திங்கள் இராம-இராவணப் போர் 18 நாளில் பாண்டவ-துரியோதணர் போர் என்று விளக்கம் கிடக்கிறது)

வென்று முடித்ததும் கல் பெயர்த்து அக்கல்லை கனக விசயரின் தலைகள் சுமக்கும் படி செய்து, கங்கையிலே நீராட்டி, படைகளுடன் கங்கையின் தென்கரை சேர்கிறான் சேரன் நூற்றுவர் கன்னர் அமைத்துக் கொடுத்த பாடிவீட்டில்!

"வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்
சினவேல் முன்பின் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தம் கதிர்முடி ஏற்றிச்

செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள,

வருபெறந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரைஅகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து......."

ஆங்கு தமிழரின் வெற்றிக்குப் போரிட்டு மாண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செய்தான்; காயம்பட்டோ ருக்கும் மற்றும் அனைவருக்கும் சிறப்பு செய்தான் சேரன்!

மாவீரர்களை வணங்குதல் தமிழர் மாண்பு! தமிழர் நிலத்திலும் மனத்திலும் மாவீரர்கள் என்றும் வாழ்வர்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
25-நவம்பர்-2000

Monday, November 20, 2000

சிலம்பு மடல் 29

சிலம்பு மடல் - 29 குட்டுவனும் சாத்தனும்!
வஞ்சி:
காட்சிக்காதை:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன், வஞ்சியைத் தலைநகராய்க் கொண்ட சேரநாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன்!

அரசமாளிகையில் அரசி வேண்மாளுடனும் தம்பி இளங்கோ வுடனும் அமர்ந்திருக்கையிலே மலைவளம் காண ஆவல் கொள்கிறான் குட்டுவன்.

"...விளங்குஇல வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாள் உடன்இருந்து அருளித்
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்எனப்...."

நீலநிறப் பெருமலையின் குறுக்கிட்டோ டிய பேரியாறு திருமாலின்(நெடியோன்) கழுத்தின் ஆரமாய்க் கிடக்க, மலையிலே குரவையாடுவோர் கூட்டிய ஒலி ஒரு புறம், கொடிச்சியர் பாடிய பாடல் ஒலி ஒரு புறம்,
வேலன் ஆடிய வெறியாட்டத்தின் ஒலி ஒரு புறம்,
கூலம் உண்ண வந்த பறவைகளை மகளிர் ஓட்டும் ஒலி ஒரு புறம், தேன் கூட்டைப் பிரித்துத் தேனெடுத்த குறவர் ஒலி ஒரு புறம், அருவியில் இருந்து கொட்டும் தண் நீரின் பறையொலி ஒரு புறம், புலியுடன் யானைப் பொருதிப் பிளிரும் ஒலி ஒரு புறம்;

மேலும் இது போன்ற பல்வேறு ஒலிகளால் மலைப்புறம் மனத்தை ஆட்கொள்ள பேரிஆறு ஒதுக்கிக் குவித்த நுண்மணல் பரப்பிலே தன் துணைகளோடு குட்டுவன் ஒருங்கிருக்கிறான்.

"நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை
இடுமணல் எக்கர் இயைந்துஒருங்கு இருப்பக்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக்குறு வள்ளையும், புனத்துஎழு விளியும்
நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்
பறைஇசை அருவிப் பயம்கெழும் ஓதையும்
...............
இயங்குபடை அரவமோடு யாங்கணும் ஒலிக்க......"

மலைக்கு வந்த மன்னனைக் கண்டு போற்ற மலைக்குறவர்கள் மலைவளம் யாவையும் கொண்டுவந்தனரோ என்று எண்ணும்படியாக, யானையின் தந்தம், மான்மயிர்ச் சாமரம், தேன், சந்தனக்கட்டை, சிந்துரக்கட்டை, நீலக்கற்கள், கத்தூரி, மா, பலா, வாழை, கரும்பு, பூங்கொடிகள் செடிகள், பாக்கு, சிங்க புலி கரடி குரங்கு மான் பூனை ஆட்டுக் குட்டிகள், மாடு யானைக் கன்றுகள் கீரிப்பிள்ளை, கிளி மற்றும் இன்ன பிறவற்றை சுமந்து வந்து காணிக்கையாக குட்டுவன் முன் இட்டு வணங்கினர்!

வளமுடன் வாழ்கிறோம் நாங்கள், உன் அரச நீதி வாழ, வாழ்க நீ பன்னூறாயிரம் ஆண்டுகள் என்று போற்றி உரைத்தனர் அவனிடம் வியப்புடன்,
"வண்ணம் குழைந்து
வாடி வதங்கி
இடமுலை இழந்தவளாய்
ஆறாத்துயருடன்
அழுகை வற்றிப்போய்
வந்தபெண்ணொருத்தி
வேங்கை மர நிழலில் நின்றாள்!
நீத்தனள் தம்முயிரை!
எந்நாட்டினளோ யார்மகளோஅறியோம்!
நிந்நாட்டில் யாம் கண்டதில்லை; வியப்பு! என்று.."

"கான வேங்கைக் கீழ்ஓர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்.
எந்நாட் டாள்கொல் ? யார்மகள் கொல்லோ ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;..."

தண்டமிழ் ஆசான் சாத்தனார் சேரன் அருகிருந்தார்; அவர் நோக்கினார் மன்னன்பால்!

'தன் காற்சிலம்பை விற்க வந்த கணவனைப் பாண்டியன் தீர ஆராயத்தவறினன்; கள்வனென்று காவலர் தலைகொய்தனர்!

கோவலன் மனைவி கண்ணகி தன் காதலும் வாழ்வும் தீய்ந்து போக, கோவலன் கள்வனல்ல என்ற நீதியை சிலம்புடைத்து நிறுவினாள் பாண்டியன் முன்.

மானம்காக்க மன்னன் நெடுஞ்செழியன் மாண்டான்; மாண்ட மன்னனின் உயிரைத் தேடிக் கொண்டு சென்றது போல் கோப்பெருந்தேவியின் உயிரும் சென்றது!

கண்ணகி சூளுரைத்தாள் மதுரையை எரிப்பேன் என்றும்! மதுரையையும் எரித்தெறிந்தாள் மங்காச் சினத்துடன்.

பாண்டிய நாட்டின் கொடுங்கோலை எடுத்துரைக்க தன் சோழ நாடு திரும்பாமல், உன் சேரநாட்டுச் செங்கோலிடம் முறையிட வந்தாள் போல வந்து, வானகம் சென்று விட்டாள் மாதரசி!' என்று
சாத்தனார் சேரனிடம் கண்ணகி பற்றிக் கூற,

"மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண்தமிழ் ஆசான் சாத்தன்இகது உரைக்கும்...

கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி இறைக்குஉரைப் பனள்போல்
தன்நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள்
நின்நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று....."

சேரன் வியப்புற்றான்! வருந்தினான் பாண்டியன் மறைவு கேட்டு!

செங்கோல் தவறிய சேதி எம்போல் அரசர்க்கு எட்டும் முன் தம்முயிர்ப்பிரிந்த சேதியை சென்றடையச் செய்து உயர்ந்து விட்டான் பாண்டியன்!

கோவலத்தீர்ப்பால் வளைந்த செங்கோலை தன்னுயிர் நீக்கி நிமிர்த்தி விட்டான் பாண்டியன்! என்று கூறி, சேரன் பாண்டியனைப் போற்றிய மனிதநேயம் (அரசநேயம்?) நெஞ்சில் குறிக்கத் தக்கதாகும்! மாற்றான் தோட்ட மல்லிகையாயினும், மணம் பெற்றதல்லவா?

நல்லவனை மதிப்பது நல்லோர் பண்பு! திறமையை மதிப்பது திறமையானோர் பண்பு.

"எம்மோர் அன்ன வேந்தர்க்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்குஎன
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது...."

மாற்றரசனைப் போற்றியது மட்டுமல்ல, நாட்டிலே மழை பொய்ப்பின் அரசனுக்கு அச்சம், ஏதாகின் ஒன்றினால் மக்கள் துயருறின் அரசனுக்கு அச்சம்! குடிகளைக் காக்கும் தொழில் ஆன அரச தொழில் துன்பத்தைத் தருவதேயல்லாமல் போற்றத்தக்கதன்று என்ற ஒரு தத்துவ உண்மையை உணர்த்துகிறான் சேரன்.

"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்என...."

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரிகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

இன்று சந்திரபாபு நாயுடு, "நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்" என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம்!

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே "நான் அரசன் என்ற தொழிலாளி" என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைம் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்!

பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற அய்யத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்!

சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற அய்யம் தோன்றாமலில்லை!

மதுரையம்பதியில் நடந்தவை கேட்டு வியப்புற்ற சேரனுக்கு சிறு குழப்பம்!;

பாண்டியன் உயிரை தேடத் தன்னுயிரை அனுப்பிய கோப்பெருந்தேவி சிறந்தவளா ?

காதலனின் மானம் காக்க கடமையேற்று, பிழையாய்ப்போன நீதியை மீட்டு, மடமையில் திளைத்த பாண்டிய நாட்டை தீய்த்து
பின்னர் மாய்ந்த கண்ணகி சிறந்தவளா ?

சேரன் தன் பட்டத்தரசி வேண்மாதேவியை நோக்கினன்! சேரமாதேவியிடம் தெளிவு பெறல் கருதி, இருவரில் வியக்கத்தக்க சிறப்புடையவர் யார் என்று வினவினன்!

பெண்ணரசிகளில் பேரரசி யாரென்று சேரப் பாரரசியிடம் கேட்டான்!

தன்கணவன் உயிர்துறந்ததும் பொறுக்க முடியாது செல் எனச் சொன்னதும் சென்ற கோப்பெருந்தேவியின் உயிர் உயர்ந்தது! அவள் உயர்ந்தவள்! பெருஞ்சிறப்பு பெறட்டும் பாண்டிமாதேவி!

ஆயினும், தன் கணவனின் மானத்தைக் காத்து, மன்னவனிடம் நியாயத்தைப் போராடிவென்று, நாட்டில் மடமை அழியப் போர்தொடுத்து, காதல், வீரம், மானம் போற்றி, நம் நாடு தேடிவந்து அழியாப் புகழ் கொண்ட அந்தப் பெண்ணரசி கண்ணகி வழிபடத்தக்கவளாவாள்; என்றனள் வேண்மாள்!

சேரப்பெண் சோழப்பெண்ணைப் பாண்டிப்பெண்ணினும் வழிபடத் தக்கவளாய்த் தன் கணவனுக்குத் தெளிவுபடுத்துகிறாள்!

"காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு உறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்என,..."

தன்னரசி சொன்ன கருத்தை விரும்பி ஏற்ற சேரன், அமைச்சர் பெருமக்களைப் பார்த்தனன். அவர்கள் கருத்தும் அதாகவிருக்க, கற்புக்கரசிக்குக் கற்சிலை வடிக்கவேணும்! பொதியைக்கல் அல்லது இமயக்கல் பொருத்தமாய் இருக்கும்! பொதியைக்கல்லாயின் பொன்னியிலும், இமயக்கல்லாயின் கங்கையிலும் நீராட்டிப் படிமம் (சிலை) செய்ய வேண்டும், என்று அமைச்சர்கள் அறிவுறுத்தினர்!

பக்கம் இருக்கும் பொதியை எடுத்தல் நீள்வாள் ஏந்திய மறக்குடிக்குப் பெருமை அன்று ஆதலின் இமயம் சென்று கல் கொணர்தலே கண்ணகிக்கும் சிறப்பு; எமக்கும் சிறப்பு! என்று முடிவெடுத்தனன் மன்னன்!

"மாலைவெண்குடை மன்னவன் விரும்பி
நூல்அறி புலவரை நோக்க ஆங்குஅவர்
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்துஎன,
பொதியில் குன்றத்துக் கல்லால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்துறைப் படுத்தல்
மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று:..."

மாபத்தினிக் கடவுள் கண்ணகிக்குப் படிமம் செய்ய யான் வேண்டுவதெல்லாம் இமமலைக்கல்லொன்று. அதைப் பெறுவேன்! எதிர்ப்பவர் மறுப்பவர் யாராயினும் வெல்வேன்! இமயக்கல்லைக் கொணர்வேன்! என்று உரைத்தான் வஞ்சிக்கோன்!

அமைச்சன் வில்லவன் கோதை எழுந்தான், 'வாழ்க நீ! வெல்க நீ!' என்றான்; போற்றினான்!.

மேலும், சோழனையும், பாண்டியனையும் முன்னாள் வென்றவன் நீ!
கொங்கனர், கங்கர், கலிங்கர், கொடிய கருநாடர், வங்காளர் மற்றும் பல்வேல் கட்டியர் ஆகியோர், வட ஆரிய மன்னர்களோடு கைகூடி வந்து உன்தமிழ்ப் படையோடு போரிற்றுத் தோற்றோடியது என் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை!

பன்னூறாயிரம் ஆண்டுக்கும் முன்னரே கருநாடர்களை "கொடுங்கருநாடர்" என்று இளங்கோவடிகள் குறிப்பது கவனிக்கத்தக்கது.

கங்கை ஆற்றங்கரையில் உன்னை எதிர்த்த ஆயிரம் ஆரிய மன்னர்களை நீ ஒருவனே கொன்று குவித்ததைப் பார்த்த கூற்றுவனும் வியப்புற்றான்!

கடவுள் எழுத கல் வேண்டுமெனில் அதை மறுப்பார் இல்லை! எதிர்ப்பார் இல்லை! முடங்கல் அனுப்பி, கொண்டு வரலாம் என்றான் வில்லவன் கோதை!

வில்லவன் கோதையை அடுத்து, அமைச்சன் அழும்பில் வேள் எழுந்து, வடதிசை மன்னர்களின் ஒற்றர்கள் எப்பொழுதும் நம்நாட்டைச் சுற்றிக் கொண்டே உள்ளனர். "கல் கொணர வடதிசைப் பயணம்" என்று பறையொலித்திடு அது போதும்; அவ்வொற்றர்களே சென்று சொல்லிவிடுவர்! என்றான்.

மன்னன் சேரனும் வடதிசைப் பயணம் சென்று கல் கொணர முடிவெடுத்து வஞ்சி மாநகரம் முழுதும் அது குறித்துப் பறையொலித்து அறிவித்தான்!; படைகளையும் திரட்டினான்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
20-நவம்பர்-2000

Wednesday, November 15, 2000

சிலம்பு மடல் 28

சிலம்பு மடல் - 28 கற்பின் தெய்வமும்! குறமகளிரும்!

வஞ்சிக்காண்டம்:
குன்றக்குரவை:

இன்பம் துன்பம் காதல் நோதல்
பிரிவு முறிவு பரிவு அறிவு
நேர்மை பொய்மை கல்லாமை கயமை
மென்மை வண்மை பாசம் நேசம்
பண்பு அன்பு நாடு வீடு
வளமை வாழ்க்கை பெண்மை ஆண்மை
கற்பு நட்பு கலைகள் பிழைகள்,
இவையாவையும் இன்ன பிறவற்றையும் நெஞ்சிற்கும் சிந்தைக்குமாய் அள்ளித் தந்த புகாரையும் மதுரையையும் தாண்டி, புகாரின் நாயக நாயகியையும், மதுரையின் அரசன் அரசியையும் இழந்து விட்டு மதுரையையும் தீய்த்துவிட்டு வஞ்சிக்குள் வந்த போதும் கொஞ்சி நிற்க வைக்கிறது இந்தக் கவிப்பாட்டன் பாடிவைத்த காற்சிலம்பு!

வஞ்சி மலைக் குன்றில் வந்து மாண்ட மாபத்தினி கண்ணகியம்மாளைக் கண்ணுற்ற குறவர் குடிப் பெண்டிர் வணங்கி தெய்வமாகக் கொள்கின்றனர்!

"சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே!

நிறம்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நல்நிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!

கற்புக்கரசியாம் அந்த நல்லாளுக்குக் கோயில் கட்டி, சுற்றி மதில் எழுப்பி, வாயிலும் செய்து குறிஞ்சி நிலத்திற்கொப்பக் குறிஞ்சிப் பறை முழக்கி, கடமாக் கொம்பூதி, மணிகளை ஒலிக்கச் செய்து, குறிஞ்சிப் பண் பாடி, மணம் மிக்க அகிற்புகை ஏந்தி, மலர் கொண்டு அருச்சனை செய்து (பூப்பலி), நாடு என்றும் வற்றாது வளஞ்சுரக்க அருள் புரிய வேண்டி நிற்க முனைந்தனர் குறக்குடி மகளிர்! மாபத்தினியை வணங்கி நின்றனர்!

"தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்,
பெருமலை துஞ்சாது வளம்சுரக்க எனவே!..."

மகிழ்ந்தனர்! ஆடினர் குன்றத்திலே குரவை பாடி!

அருவி ஆடப் போன தலைவியின் ஆற்றாமையை என்ன சொல்ல?

தன் ஆடவனின் ஆளுகையில் அகப்பட்ட சிறுமலையின் கல்தீண்டி பொன்கலந்து மலர் சுமந்து ஓடிவந்த ஓர் அருவியின் வெள்ளி ஒத்த தண் நீரிலே ஆடிவிட்ட பிறமகளிரைக் கண்டு நெஞ்சு பதைக்கிறதே அவளுக்கு!

இது மகளிரின் காதலா? பொறாமையா? பொறாமையே காதலா?

"எற்றுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைக்
கல்தீண்டி வந்த புதுப்புனல்;
கல்தீண்டி வந்த புதுப்புனல், மற்றையார்
உற்று ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

என்ஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
பொன்ஆடி வந்த புதுப்புனல்;
பொன்ஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
முன்ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

யாதுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
போதுஆடி வந்த புதுப்புனல்;
போதுஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
மீதுஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே....."

அருவி அகற்றிவிட்டு சிறப்புற்ற செந்தூர், செங்கோடு, வெண்குன்றம் (சாமிமலை), ஏரகம் என்னும் இடங்களை எப்போதும் நீங்காத ஆறுமுக அழகனையும் அவன் கைவேலையும் குரவையிலே போற்றிப் பாடினர் மங்கையர்!

"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல்அன்றே
பார்இரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டுஒருநாள்
சூர்மா தடிந்த சுடர்இலைய வெள்வேலே.

அணிமுகங்கள் ஓர்ஆறும் ஈராறு கையும்
இணைஇன்றித் தான்உடையான் ஏந்தியவேல்அன்றே
பிணிமுகம்மேற் கொண்டுஅவுணர் பீடுஅழியும் வண்ணம்
மணிவிசும்பின் கோன்ஏத்த மாறுஅட்ட வெள்வேலே!..."

காமநோய் எனை வாட்ட அன்னைக்கு அது விளங்காது வேறு நோய் கொண்டேனோ என்றஞ்சி வேலனைக் கூட்டி வெறியாட்டு செய்து நோய் தீர்க்க முனைகிறாரே! இதை என்னென்று சொல்வேன்? என்று நகைக்கிறாள் தலைவி.

அன்னையின் அறியாமை எண்ணி! (முருகன் வந்த ஆடவன் மீதேறி ஆடுவதற்கு வெறியாட்டு என்று பெயர்; ஆடுபவனுக்கு வேலன் என்று பெயர்)

அன்னைக்குத்தான் என் நோய் விளங்கா அறியாமை!

ஆண்டவனுக்குமா?

வேலன் மேல் தெய்வம் வருங்கால் வேலன் அறிந்திருக்க வேண்டுமே என் நோய் என்ன வென்று?

அவனுக்கு அறிதல் இல்லாவிடினும் அவன் மேல் ஏறி வரும் ஆண்டவன் முருகனுக்காவது அறிதல் வேண்டுமே! அவனுக்கு மில்லையா ?

அப்படி முருகன் வருவானாகில் அந்த வேலனைவிடவும் அறியாமை உடையவன் ஆண்டவன் முருகன்!

எள்ளி நகையாடுகிறாள் தலைவி! அழகனைப் பாடிய வாயால் அவனை அறிவிலான் என்று எள்ளி நகையாடவும் செய்கிறாள் தலைவி!

மனதிலே காமநோய் என்றும் சொல்லவியலவில்லை! வேறுநோய் என்றும் சொல்ல மனமில்லை!

காமத்தால் தவிக்கும் உடலுக்கு காய்ச்சல் என்று சொல்லி மந்திரித்ததால் கடவுளும் நகையாகின்றார்! மடவனாகின்றார்!
காசு மட்டும் வேலனுக்கு!

"இறைவளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வருக என்றாள்.

ஆய்வளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்!
வருமாயின் வேலன் மடவன்! அவனின்
குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்!......"

ஆண்டவனைப் போற்றி அவனை நகையுமாடி. 'வள்ளிக்குறமகளின் அடிகளோடு ஆறுமுகக் கடவுளே உன் திருவடிகளையும் தொழுது நிற்கிறேன்!, என் காதலர் களவொழுக்கம் ஏதும் செய்யாது என்னைச் சேர்ந்திட அருள்செய்' என்று அவனையே வேண்டியும்நிற்கிறாள் தலைவி!

இறைவனைப் போற்றிய வாய் தூற்றுதற்கும் அஞ்சவில்லை! வேண்டுதற்கும் நாணவில்லை! அத்துனை நெருக்கம் ஆண்டவனிடம்.

ஆனால் அன்னையிடம் அஞ்சுகிறாள்! ஆடவந்த வேலனை அருவெறுக்கிறாள்!

ஆண்டவனிடம் அச்சமில்லை, ஆனால் மனிதனிடம் அச்சம் மனிதனுக்கு!

ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஆள்வரும்போது ஆண்டவனும் அந்நியனாகிறான்! அறியாதோனாகிறான்! வந்த ஆள் உண்டு கொழுப்பதுதான் உண்மை!

ஆண்டவனுக்கும் நன்மையில்லை; மடவனாகிப் போகிறான்! வேண்டிநின்றாருக்கும் நன்மையில்லை!

"குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவ!நின் அடிஇணை தொழுதேம்
துறைமிசை நினதுஇரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்; விடு பிழைமணம் எனவே!.."

அழகனைப் பாடி, கற்புக்கரசியையும் பாடி, அழகனிடம் வேண்டியதை அவளிடமும் வேண்டும் முறையினதாய் அமைத்து, இன்பமாய் நீடுழி வாழ சேரனை வாழ்த்தி குரவையை நிறைவு செய்தனர் மகளிர்!

"பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணஅணி வேண்டுதுமே!

" ......ஆனாது
உண்டு மகிழ்ந்துஆனா வைகலும் வாழியர்
வில்எ ழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே."

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-நவம்பர்-2000