Pages

Sunday, February 28, 2010

எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? - ஒரு அவசரக் கருத்தரங்கம்

அழைப்பிதழ் காண்க.
சென்னையில் கலந்து கொள்ள இயன்றவர் அவசியம் கலந்து கொள்க.
எழுத்துச் சீர்திருத்த்தத்தை மறுத்து எழுச்சி ஊட்டுக..

அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5

2.5. முன்னை மாற்றங்கள்
2.5.1 கி..பி 6 ஆம் நூற்றாண்டு

பேராசிரியர் வா.செ.கு அவர்கள் “தமிழ் எழுத்துச் சீரமைப்பு”(2) என்ற கட்டுரையில் அட்டவணை-6ல் கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் அணிமைக் காலம் வரையிலான எழுத்து வடிவ மாற்றங்களைக் காட்டியிருக்கிறார்,




படம்-6: பண்டைய காலத்தில் இருந்து தமிழி எழுத்துக்களின் இயல்பான மாற்றங்கள்

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து வடிவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது தெரிகிறது. ஆனால் அதற்கு அப்புறம், இதுகாறும் தமிழ் எழுத்துக்கள் அடிப்படை வடிவத்தை அடியோடு இழக்காமல் மென்மையான வளைவுகள் கூடிய மாற்றமே அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. இவை வலிந்த சீர்திருத்தமோ அன்றி அரசானையால் ஏற்படுத்தப் பட்டதாகவோ அல்லாமல் இயல்பான கையெழுத்துப் பழக்கத்தால் ஏற்பட்ட மெல்லிய மாற்றமாகவே இருக்கின்றன.

2.5.2. கி.பி 18 ஆம் நூற்றாண்டு

6-ஆம் நூற்றாண்டிற்குப் பின் அடுத்த மாற்றம் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது. ஓலையில் இருந்து மாறி, தாளும் அச்சும் தமிழகம் நுழைந்த காலத்தில் இத்தாலிய வீரமாமுனிவர் எகர ஒகர உயிரிலும், உயிர்மெய்களிலும் இருந்த புள்ளியை எடுத்து இரட்டைக் கொம்பை உருவாக்கியிருக்கிறார். அம்மாற்றம் தமிழின் மொத்த சொற்களிலும் விழுக்காட்டளவில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. ஏனெனில் அது அடிப்படை வடிவத்தைப் பெரிதும் மாற்றவில்லை. கீழே படத்தில் காணுவது போல எகர ஒகர குறிலில் இருந்து புள்ளி எடுக்கப் பட்டது. “ஏ” ஒரு சாய்கோட்டைச் சேர்த்துக் கொண்டது.
இவ்வுயிர்களில் துவங்கும் சொற்கள் மொத்தமே 2908. இவ்வெண்ணிக்கை மொத்தச் சொற்களில் 1% அளவே இருக்கக் கூடும். ஏகார ஓகார உயிர்மெய்களுக்கு இரட்டைக் கொம்பு ஆக்கினர் என்பதால் அவ்வெழுத்துக்களை நமது அட்டவனை-3ல் அளந்து பார்த்தால் தாக்கம் பெற்ற சொற்கள் 15887 மட்டுமே. அதாவது வீரமாமுனிவர் உயிர்மெய்களில் செய்த மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கம் வெறும் 6.25% மட்டுமே. அது மெல்லிய மாற்றமாய் இருந்ததால் தமிழுலகம் நாளடைவில் பழகிக் கொண்டது.



படம்-7: வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்மை (9)
(http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511665.htm)


2.5.3. கி.பி 20 ஆம் நூற்றாண்டு


பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னால், 20 ஆம் நூற்றாண்டில், அச்சில் தமிழ் பெருகிய காலத்தில் அடுத்த மாற்றம் நிகழ்ந்தது. சில அறிஞர்களும் தந்தை பெரியாரும் ”13 தமிழ் எழுத்துகளின் வடிவ மாற்றம் தமிழின் அச்சு வடிவிற்குப் பயனளிக்கும்” என்று கருதி மற்றவரும் ஏற்குமாறு பரிந்துரைத்தனர். ஏறத்தாழ 40-50 ஆண்டுகள் இந்தக் கருத்து தமிழ் உலகில் அலசப்பட்டு, ஆங்காங்கே வெள்ளோட்டம் விடப்பட்டு, முடிவில் 1978 - இல் தமிழக அரசின் முன்முனைப்பால் அரசாணை மூலம் நடைமுறைப் பட்டது. இஃது பெரியார் சீர்திருத்தம் என்று சொல்லப் படுகிறது. பெரியார் சீர்திருத்தத்திற்கு உள்ளான உயிர்மெய்கள் பங்கு பெறும் தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.



அட்டவணை- 4: பெரியார் சீர்மையின் உயிர்மெய்கள் பங்களிக்கும் சொற்களின் எண்ணிக்கை
படம்-8: பெரியார் சீர்மையின் மெல்லிய பரவல்

தமிழிப் பரப்பில் பெரியார் சீர்திருத்தம் கிட்டத்தட்ட 4% அளவே தாக்கம் செய்ததாலும், 1960/1970களில் கற்றோர் எண்ணிக்கை தற்போதைக்கும் குறைவாய் இருந்ததாலும், மிடையங்கள்(media) இதழ்களின் எண்ணிக்கைகள் பன்மடங்கு குறைவாய் இருந்ததாலும், இந்த வடிவமாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் புழக்கத்துக்கு வந்தது. ஓரிரு எதிர்ப்பாளர்களும் நாளடைவில் இம்மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

2.5.4 முன்னை சீர்திருத்தங்கள் எழுப்பும் சிந்தனைகள்

18 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எழுத்துமாற்றத்தை இன்றைக்கு முன்வைக்கப்படும் எழுத்துமாற்றத்தோடு ஒப்பிட்டால் ஓரிரண்டு சொல்லலாம். 6.25% சொற்களில் மட்டுமே தாக்கம் செய்த வீரமாமுனிவரின் சீர்மை பெரிய சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதே போல, மொழிப் புழக்கத்தில் 4% மட்டும் தாக்கம் செய்த பெரியார் சீர்மையாலும் கூடப் பெருஞ்சிக்கல் எழவில்லை. 4% விழுக்காடு மாற்றத்திற்கு முன்னர், 18 ஆம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 250 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. இப்பொழுதோ, பெரியார் சீர்திருத்தம் முடிந்த 40 ஆண்டுகளிலேயே, இகர, ஈகார, உகர, ஊகாரச் சீர்மையால் தமிழ் மொழி/எழுத்துத் தோற்றத்தில் 59% மாற்றத்தினைச் சீர்மையாளர் ஏற்படுத்த முனைகிறார்கள். 59% தாக்கம் ஏற்படுத்தும் வடிவ மாற்றத்திற்கு, மிகச்சிறிய அளவில் மாற்றம் ஏற்படுத்திய வீரமாமுனிவரின் மாற்றமும், தந்தை பெரியாரின் மாற்றமும் ஒருபோதும் வழிகாட்டியாக இருக்கமுடியாது.

இதே 20 ஆம் நூற்றாண்டில் அண்டை மாநிலமான கேரளத்தில் 1969 இல் திரு. அச்சுதமேனன் அமைச்சரவையால் மலையாள எழுத்துச் சீர்திருத்தம் அரசாணை மூலம் கொண்டு வரப்பட்டு, ஏற்கப்பட்டது. இந்த மாற்றத்துள் உகர, ஊகாரச் சீர்திருத்தமும் இருந்தது. இன்றைக்குத் தமிழில் உகர, ஊகாரச் சீர்திருத்தம் வேண்டுவோர், மலையாளத்துச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் காட்டுவர். ஆனால் மலையாளச் சீர்திருத்தம் வந்த போது, கணிவழி எழுத்துக்களை உள்ளிடும் முறை கிடையாது. வெறும் அச்செழுத்து உள்ளீடே இருந்தது. இன்றோ, தமிழியில் கணிவழி உள்ளீடு பரவலாகிப் போனது. எழுதுவது குறைந்து கொண்டே வரும் நிலையில், உகர, ஊகாரச் சீர்திருத்தம் தேவையா என்னும் கேள்வி முற்றிலும் புதிய பார்வையைக் கொடுக்கும். ஒரு காலத்தில் சரியென்று தென்பட்டது எல்லாக் காலத்தும் அப்படியே இருக்கத் தேவையில்லை. இடம், பொருள், ஏவல் பார்த்து ஒன்றை முடிவு செய்யவேண்டியது இன்றியமையாதது அல்லவா?

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:।com/2010/02/3।html"> http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html


பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html


அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4

2.4. 11 உயிர்மெய் வரிசைகளின் பயன்பாடு பற்றிய பார்வை:

தமிழில் அகரம் தவிர்த்த ஒவ்வோர் உயிர்மெய்யும் எத்தனைச் சொற்களை உருவாக்கியிருக்கின்றன அல்லது பங்களித்திருக்கின்றன என்ற புள்ளிவிவரம் கீழே அட்டவணை-3 இல் கொடுக்கப் பட்டிருக்கிறது. காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுவதாய்க் கூறுகிறது. அதைப்போன்று “கு” 10220 சொற்களிலும், “ஞூ” 2 சொற்களிலும், “ழீ” 5 சொற்களிலும் பயிலுகின்றன. இவ்வட்டவணையில் உயிரில் தொடங்கும் சொற்களும், மெய்யடக்கிய சொற்களும் கணக்கில் எடுக்கப் படவில்லை. அகர உயிர்மெய்கள் பயிலும் சொற்களை, ஒருங்குறியேற்றம் பயிலும் தேடுநிரலால் பிழையின்றி சலித்துத் தர முடியவில்லை. அதனால் அவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை. அஃகானும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. உயிர்மெய்க் குறியீடுகளை ஆயும் கோணத்தில் உருவாக்கிய இந்த அட்டவணையைச் செய்யப் பெரிதும் உதவியது சிக்காகோ பல்கலைக் கழகத்தின் உழைப்பால் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியாகும்.(8)




அட்டவணை-3: உயிர்மெய்கள் பங்களிக்கும் சொற்களின் எண்ணிக்கை

( இதுபற்றிய தொகுப்பு உயிர்மெய் சொல்வளம் என்ற கட்டுரையாக உயிர்மெய் சொல்வள அட்டவணை-2007ஐ உள்ளிட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறது;
)

இந்த அகராதியில் கடைசியாகச் சொற்கள் ஏற்றித் திருத்தப் பட்டது 19-சூலை-2007 ஆகும். கணிசமான சொற்களைக் கொண்ட இவ்வகராதி புழக்கத்தில் இருக்கும் மொத்தத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிராவிடினும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதே அறிஞர்களின் துணிபாகும். அட்டவணையில் காணும் எண்ணிக்கைகளில் கட்டுரையாளரின் தேடுபிழையும் எண்ணுப் பிழையும் 1-2% ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது. அட்டவணை-3 ஐ நோக்கிக் காணுங்கால் எண்ணற்ற தரவுகள் கிடைக்கின்றன. அந்தத் தரவுகள் தரும் செய்திகளில் முகன்மையான செய்தியினைக் கீழேயுள்ள எண்ணுப்படமாகக் காணுவோம்.



இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களின் வடிவங்கள் மாறினால், தமிழ்ச்சொற்கள் 59% மாற்றம் அடையும் எனும்போது, பெரிதும் அதிர்ந்துபோகிறோம்। இந்த மாற்றம் வந்தால், தமிழ்ச் சொற்களும் எழுத்துகளும், படிக்கவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் செய்வதில் கடும் மாற்றம் அடையும். வெறுமே மேலோட்டமாய் எண்ணுங்கால் ஏற்படாத அதிர்வு, விழுக்காட்டை உன்னும் பொழுது ஏற்படுவது தெளிவு. இவ்விழுக்காட்டைப் பார்த்தபின் நம் முன் எழும் வினா, “தமிழ் மொழி/எழுத்துப் பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட வகையில் இது போன்ற பெரும் மாற்றத்தைத் திணிப்பது வலிந்ததில்லையா?” என்பதுதான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2: http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

அன்புடன்

நாக.இளங்கோவன்



Saturday, February 27, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3

2.2 இ, ஈ, உ, ஊ வரிசைகளுள் 72 வகை குறியீடுகள் இருக்கின்றனவா?

பேரா. வா.செ.கு தன் ”தமிழ் வரிவடிவச் சீரமைப்பு”(1) என்ற கட்டுரையில் அட்டவனை-1 -இல், இகர, ஈகார, உகர, ஊகார வரிசையில் வரும் 72 உயிர்மெய் எழுத்துக்களையும் 72 குறியீடுகள் என்று சொல்லி, அவற்றை 4 குறியீடுகளாய்க் குறைப்பதே எழுத்துச் சீரமைப்பு என்று நுவல்வார். அக்கட்டுரையைப் படிக்கும் நாமும் ”72 குறியீடுகளா?” என்று துணுக்குறுவோம்.



அட்டவணை-1 இல் உள்ள எழுத்துத் தரவுகளை வகைபிரித்து, கீழே அட்டவணை 2 இல் உள்ளது போல் பட்டியலிட்டால், இகர ஈகார உகர ஊகாரங்களை 72 குறியீடுகள் என்று சொல்வது மிகைப்படுத்தல் என்பது புரியும். உண்மையில் 9 குறியீடுகளையும், அடிப்படை அகரவடிவங்களையும் வைத்தே இந்த 72 உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கப் படுகின்றன. அட்டவணை-2 என்பது “இ, ஈ, உ, ஊ” உயிர்மெய் வரிசைகளில் இருக்கும் குறியீடுகளை வடிவங்களின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது.



2.2.1 அட்டவணை-2 இன் விளக்கம்


கொக்கியும், சுழிக்கொக்கியும் இகர ஈகார உயிர்மெய்களில் அகர வடிவின் தலை அல்லது முடிப்பில் இருந்து தொங்கவோ, உயரவோ செய்கின்றன.

சுற்று, விழுது, இருக்கை என்பவை உகரக் குறியீட்டையும் கூட்டு, சுழிச்சுற்று, இருக்கைக்கால், கொண்டை என்பவை ஊகாரக் குறியீட்டையும் குறிக்கின்றன.

சுற்றுக் குறியீடு அகர உயிர்மெய்யைச் சுற்றித் தழுவி உகரம் காட்டும் குறியீடாகும். இந்த வகை எழுத்துக்கள் வடிவிலும் பயனிலும் ஒத்திருப்பது காணத்தக்கது. விழுதுக் குறியீடு அகர உயிர்மெய்யின் இறுதியில் கீழ்நோக்கி வீழும் சிறு கோடாகும். இக்கோடு அளவிலும் திசையிலும் ஒத்து இருப்பது காணத்தக்கது. இருக்கைக் குறியீடு அகர உயிர்மெய்யின் அடியில் இருக்கை போல் அமைத்து உகரம் ஆகிறது.

கூட்டுக் குறியீடானது அகர உயிர்மெய்யின் முடிவில் உகரவடிவம் ஒட்டியவாறு தனித்தன்மையுடன் விளங்குகிறது. சுழிச்சுற்று என்பது முன்னே சுற்றில் வந்தது போல் அகர உயிர்மெய்யின் நிறைகோட்டு அடிப்பகுதியில் தொடங்கிச் சுற்றிப் பின் சுழித்து முடிகிறது. இருக்கைக்கால் என்பது இருக்கையும் காலும் சேர்ந்து, இருக்கைக் குறியீட்டிற்கு நெடிலாய் அமைந்து ஊகாரம் தந்தது. கொண்டை சுழிச்சுற்றைப் போலவே தோற்றி, ஆனால் தலைப்பக்கம் சுற்றிக் கொண்டை போல அமைந்து, சுற்றுகரங்கள் சிலவற்றின் நெடிலாகி ஊகாரம் தந்தது.

அட்டவணை-2 இன் படி, இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களை உருவாக்க 9 துணைக் குறியீடுகள் தான் இன்று பயன்படுகின்றன। 18 அகர உயிர்மெய்களும், 9 குறியீடுகளும் பெருக்கி 72 எழுத்துக்கள் உருவாகின்றன. இந்நிலையில், பேரா.வா.செ.குவின் கட்டுரை ”72 குறியீடுகள்” இருப்பதாய்ச் சொல்லுவது எங்ஙனம் சரியாகும்?


२.3: மாற்றம் என்பது 14 குறியீடுகளில் இருந்து 9 குறியீடுகளா? 72 இல் இருந்து 9 ஆ?


இன்றைய நிலையில் அகர உயிர்மெய் தவிர்த்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் தமிழியில் எழுதும் போது, அந்தந்த அகர உயிர்மெய் வடிவோடு,

• 9 துணைக் குறியீடுகள் சேர்த்து இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களையும், • கால், ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு ஆகிய 4 குறியீடுகள் சேர்த்து ஆகார, எகர, ஏகார, ஐகார உயிர்மெய்களையும்,
• புதுக் குறியீடுகள் இன்றிக் மேற்சொன்ன குறியீடுகளால் ஒகர, ஓகார உயிர்மெய்களையும்,
• ஒற்றைக் கொம்போடு சிறகுக் குறியீட்டைச் சேர்த்து ஔகார உயிர்மெய்களையும்,

எழுதுகிறோம். மொத்தத்தில் (9+4+1=) 14 குறியீடுகளை, அகர உயிர்மெய் வடிவோடு சேர்த்தெழுதி எல்லா உயிர்மெய்களையும் உருவாக்குகிறோம்; இவற்றையே சிறாருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம்।



[தமிழில் 247 எழுத்துக்கள் என்பது அடிப்படையான உயிர், மெய்யெழுத்துக்களோடு, புடைப்பு எழுத்துக்களான உயிர்மெய்களையும் சேர்த்துச் சொல்வதாகும்.]

தற்போது, பேரா. வா.செ.கு.வும் அவர் கருத்தாரும் 4 குறியீடுகளில் இ-ஈ-உ-ஊ உயிர்மெய்களை எழுதலாம் என்பாராயின், கால், கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, சிறகு ஆகிய 5 குறியீடுகளுடன் புதிய 4 ஐச் சேர்ந்து 9 குறியீடுகளில் எல்லா உயிர்மெய்களையும் எழுதலாம் என்று சொல்வதாய்ப் பொருள்படும். அதாவது 14 குறியீடுகளை இவர்கள் 9 குறியீடுகள் ஆக்கமுற்படுகிறார்கள் என்றே பொருள் கொள்ள முடியும். இதை விடுத்து, (72+5) குறியீடுகளை 9 குறியீடுகள் ஆக்குவதாய் நவில்வது எங்ஙனம் சரியாகும்?


மொத்தமாகப் பார்த்தால்,


முதன்மைக் குறியீடுகள் = 12+18+1 (ஆய்தம்) = 31 ம்,
உயிர்மெய்க் குறியீடுகள் = 14 ம்,
சேர்த்து, தமிழில் உள்ள குறியீடுகள் 45 என்றாகும் போது, இவற்றை 107 என்று பேரா. வா.செ.கு கட்டுரை (அட்டவனை-1: தமிழ் வரிவடிவச் சீரமைப்பு) விளம்புவது ”ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்குவதாகவே” இருக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2: http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, February 26, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

எழுத்துச் சீர்மை முன்வைப்புகளில்
மறுக்கப்பட்டப் பார்வைகள்

--நாக.இளங்கோவன்

1 அறிமுகம்
1.1 எழுத்துச் சீர்மை முன்வைப்புகள்

• “ஒரு சில தமிழி எழுத்துக்களின் நிகழ்வடிவுகளை மாற்றுதலே எழுத்துச் சீர்மை” என்று பலராலும் சொல்லப்படுகிறது. [தமிழி என்ற பழஞ்சொல் இக்கட்டுரையெங்கும் தமிழெழுத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.] தமிழ் வரிவடிவச் சீரமைப்பு(1), தமிழ் எழுத்துச் சீரமைப்பு(2) என்னும் தலைப்புக்களில் சென்ற 2000, 2003 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப் பெற்ற பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் கட்டுரைகள் இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய் வடிவங்களை மாற்றுவதையே, சீர்மையாக முன்வைக்கின்றன.(1,2)

• அதே கருத்தை ஒத்து ”தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள்” என்ற தலைப்பில் முனைவர் கொடுமுடி சண்முகனின் முகன்மையான கட்டுரையும்(3) வெளிவந்தது.

• எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைக்கும் பலரும் இக்கட்டுரைகளை முன்வைத்தே பரப்புரை நிகழ்த்துகிறார்கள்.

இம் மூன்று கட்டுரை முடிபுகளையும், ஏரணங்களையும், இற்றைச் சூழலில் அலசிப் பார்த்து, ”எழுத்து வடிவ மாற்றங்கள் இனியும் தமிழி எழுத்துக்குத் தேவையா?” என்று மறுபார்வைக்குத் தூண்டுதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

2 சீர்மைக்காகச் சொல்லப்படும் ஏரணங்களும், அவற்றின் மறுபக்கங்களும்
2.1. எழுத்தின் உயரம்:

பேரா. வா.செ.குவின் கட்டுரைகளில், எழுத்துச் சீரமைப்பின் அடவுக் கோட்பாடாய் (design objective) இன்றையத் தமிழி எழுத்துகளின் உயரம் முன்வைக்கப் படுகிறது.

இளமையில் நாம் எல்லோரும் தமிழியை எழுதக் கற்கும் போது, எழுத்துப் பயிற்சிப் பொத்தகங்களில் ஒவ்வோர் எழுத்தையும், 4 கோட்டொழுங்கில், 3 பட்டைகளுக்குள், எழுதப் பழகியிருப்போம். [ஓலைகளில் கீறிய அறதப் பழங்காலத்தை இன்று எண்ண வேண்டாம்.] இந்தப் பொத்தகங்களில், எழுத்துக்களின் உடல் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள்ளும், தலைப்பகுதி முதல், இரண்டாம் கோடுகளுக்குள்ளும், அடிப்பகுதி மூன்று, நாலாம் கோடுகளுக்குள்ளும் அமையும். பொதுவாய், தமிழி எழுத்துக்கள் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள் மட்டுமே அமைவதில்லை. தங்கள் உயரங்களில் மாறுபட்டு, நாலு கோடுகளுக்கும் பரவுவது உண்டு. பேரா. வா.செ.கு அப்படிப் பரவும் எழுத்துகளைத் தனது கட்டுரையில் கீழ்க்காணும் படத்தினூடே (படம் 1) எடுத்துக் காட்டுகிறார்.


படம்-1, தமிழ் வரிவடிவச் சீரமைப்பு-வா।செ.கு


இது போன்ற ”கி,கு,ணூ” போன்ற எழுத்துக்கள் 4 கோட்டொழுங்கில் (3 பட்டைகளுக்குள்) வாராமல், 2 கோட்டொழுங்கிலேயே (ஒரு பட்டைக்குள்ளேயே) அமைந்து, கையெழுத்திலும், அச்செழுத்திலும் ஒருங்கே அமையவேண்டும் என்ற விழைவைச் சுட்டிக்காட்டி, சீர்மை வடிவுகளுக்கு பேரா.வா.செ.கு ஓர் அடவுக் கோட்பாட்டை (design objective) முன்வைப்பார்.

அதே பொழுது, இத்தகைய கோட்பாட்டை மற்ற எழுத்து மரபுகள் பின்பற்றுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது। உலகில் பெரிதும் பயன்படுவதும், சிறப்பித்துக் கூறப்படுவதுமான உரோமன் எழுத்துக்களும் இரு கோட்டொழுங்கில் அமைவதில்லை. உரோமன் கையெழுத்து வடிவங்களைக் கீழே காணும் படம்-2 ல் காணலாம். ஒரே உயரம் கொள்ளாது,
· நடுவாய் இரு கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: a,c,e),
· நடுவிருந்து உயர்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: b,d,t),
· நடுவிருந்து கீழ்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: g,j,p),
· நடு,மேல்,கீழ் என முப்பட்டைகளில் (அதாவது 4 கோடுகளில்) பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: f)

என ஒரு கலவையாய் உரோமன் எழுத்துக்கள் இருப்பதைக் காணலாம்। அதோடு, உரோமன் எழுத்துக்களில், கையால் கோர்த்தெழுதும் முறை, அச்செழுத்து முறை என இரு வடிவங்கள் உண்டு. இதை படங்கள் - 2, 3 என்பவற்றால் ஒப்பிட்டு அறியலாம். குறிப்பாக உரோமன் எழுத்துக்கள் ‘f’,’z’ ஆகியவை இருவேறாய் மாறுபட்டு எழுதப் படுவதைக் காணலாம்.




படம்-2: உரோமன் எழுத்துக்களைக் கோர்த்தெழுதும் முறையின் உயர வேறுபாடு(5)(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html)



படம்-3: உரோமன் எழுத்துக்களை அச்சு முறையின் உயர வேறுபாடு(5)
(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html

இவ்வாறு இரு கோடுகளுக்கும் மேற்பட்ட ஒழுங்கில், இயல்பான எழுத்துயர வேறுபாட்டில் எழுதுவது உரோமனில் மட்டுமல்லாது, மற்ற மரபுகளிலும் உண்டு. காட்டாக, அரபி எழுத்துகளின் வேறுபாடுகளைக் கீழே படம் - 4 இல் காணலாம்.



இப்படிப் பல்வேறு மரபுகளில் எழுத்துயர வேறுபாடுகள் இயல்பாய் ஏற்கப்படுகையில், தமிழி எழுத்து உயர வேறுபாடுகளைப் பெருங்குறையாய்ச் சொல்லி, புதிய அடவுக் கோட்பாட்டை முன்வைத்து, அதைச் சீரமைப்பு என்பது எங்ஙனம் சரியாகும்? எழுத்தின் உயரத்தை நறுக்குதல் எழுத்துச் சீர்மை ஆகுமோ?

(தொடரும்)

முந்தைய பகுதி : http://nayanam.blogspot.com/2010/02/1.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

தமிழ் நெடுங்கணக்கின் எழுத்து வடிவங்களை,
குறிப்பாக இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்
எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டும்
என்ற முன்வைப்புக்கள் 2000மாம் ஆண்டில் இருந்து
இணையத்தில் காணப்படுகின்றன.

தமிழ் இணைய மாநாடு என்று உத்தமம் அமைப்பு
(http://infitt.org) கடந்த பல வருடங்களாக
நடத்தி வருகின்ற மாநாடுகள், எழுத்துச் சீர்திருத்தச்
சார்பு கொண்ட பொருண்மை அல்லது கருத்தியல்
கொண்ட கட்டுரைகள் பலவற்றைப் படைக்க வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இந்தக் கருத்தியல்
தமிழ் இணைய உலகில் அறியப்பட்டது.

தமிழ் இணைய மாநாடுகளில் படைக்கப் பட்ட
எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புக் கட்டுரைகளுள்
குறிப்பிடத்தக்கன இவை:

கி.பி 2000:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி,
2. முனைவர் கொடுமுடி சண்முகன்,
3. திரு.வீ.கே.ஏரம்பமூர்த்தி,
4. திரு.ச.ஆ.கோபாலமூர்த்தி ஆகிய நால்வரின் கட்டுரைகளும்
(http://infitt.org/ti2000/papers/paperlist.pdf)
எழுத்துச் சீர்மையை முன்வைக்கின்றன.

கி.பி 2002:
திரு.சின்னத்துரை சிறீவாசு ஆக்கிய சீர்மை
முன்வைப்புக் கட்டுரை
(http://www.infitt.org/ti2002/papers/70SRIVAS.PDF)

கி.பி 2003:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின்
மற்றுமொரு கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf

2. முனைவர் கொடுமுடி சண்முகன் அவர்களின் முன்வைப்பு:
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf

3. திரு.சின்னத்துரை சிறீவாசு அவர்களின் கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/56_ssrivas.pdf

சீர்மையை முன்வைக்கும் இக்கட்டுரைகளைக்
கடந்த 2009ன் சூலை ஆகத்து மாதங்களில் ஆய்வு
செய்தபோது எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில்
இருக்கின்ற "மறுக்கப்பட்ட பார்வைகள்" அணிவகுத்து
நிற்பது புலனாயின.

எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில் இருக்கும்
மறுக்கப்பட்ட பார்வைகளையும், இம்முன்வைப்புகள்
செயலாக்கப்பட்டால் தமிழ்மொழி சந்திக்கக்கூடிய
பேரழிவினையும் இயன்றவரை அளவிட்டு, தொகுக்க
அஃது "எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள்" என்ற
கட்டுரையாய் ஆகியது.

கடந்த 19-செபுதெம்பர்-2009 அன்று, திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்,
"தமிழ் மேம்பாடு, கற்பித்தலில் எளிமை, சீர்மை, விரைவு"
என்ற தலைப்பில், பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,
தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய
கருத்தரங்கில் பங்குகொண்டு இக்கட்டுரையை அங்கு
படைக்க வாய்ப்பமைந்தது.

அங்கு பேராசிரியர்களும், துணைவேந்தர்களும்,
மாணவர்களும் இருந்த மன்றத்தில்
தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தம் செய்யவேண்டும்
என்ற கருத்தினை மீள்பார்வை பார்க்கச் செய்வதாய்
இக்கட்டுரை அமைந்தது.

அந்தக் கட்டுரையை இங்கே அப்படியே பதிகிறேன்.
தமிழ் இணைய உலகினர்க்கு எழுத்துச் சீர்திருத்தம்
பற்றிய கருத்தியலை மீள்பார்வை பார்க்கவும்
மறுக்கவும் இது உதவுமாயின் பெரிதும் மகிழ்வேன்.

இக்கட்டுரை தொடர்பதிவாக,
சிலபகுதிகளாகத் தொடரும்.

இது தொடர்பில் படிக்க வேண்டிய பிறரின் கட்டுரைகள்:

திரு.பெரி.சந்திரசேகரன் அவர்களின் கட்டுரை
http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கட்டுரை:
http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_31.html

பேராசிரியர் செல்வா அவர்களின் கட்டுரை:
http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html

இனி கட்டுரை அடுத்த பகுதியில்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சோதிப்பு - பிப்பிரவரி 2010

வெறுஞ் சோதனைதான் - கொஞ்சகாலம் பதிவு எழுதாமல் விட்டால் திருப்பி எழுதும்போது எல்லாம் புதிதாகத் தெரிகிறது.