Pages

Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Thursday, February 07, 2013

பக்சனுக்குப் பின் நிற்கின்றாய் கண்ணா!... குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!

Sri Lankan President Mahinda Rajapaksa and his wife Shiranthi Rajapaksa offer prayers at the ‘Dhwaja Sthambam’ inside the Sri Venkateswara temple complex at Tirumala on Saturday.



குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

தமிழர்க்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
தமிழர்க்குத் தெரியாமல் நின்றாலும் எமக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

பக்சனுக்குப் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா, பக்சனுக்குப் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
பொளத்த காடையர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எமக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
தமிழ் எங்கும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
தமிழ் ஈழம்  இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

சிங்களத்தில் இறங்கி பௌத்தரொடு நிறைந்து
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
தமிழ் எங்கும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா


அன்புடன்
நாக.இளங்கோவன்






Tuesday, April 26, 2011

பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2011: திராவிடந் தீது, தீய்க!

ஏமாந்தாய் பாவேந்தே! உன்னாலே யானுந்தான்!
ஏமாந்தோம் வீழ்ந்தோம்; எழுந்ததெலாந் துயரந்தான்!

ஆரியத்தை ஈதறுக்கும் பாரென்றாய்! அன்னார்
தேரிலதை ஏற்றிவிட்டுத் தானுமது வேயானார்!

மாயைதனை வேரறுத்து மூடுமென்றாய்; அதற்கோர்
நோயைத்தான் தூக்கிவிட்டுத் தோற்றே போனோம்!

கோட்டை நாற்காலி கொண்டுபோன காளையெலாம்
பேட்டைக் கொசுபோல பீடறுந்த பிணிகளப்பா!

திருடவந்த கூட்டத்தைத் தேரிலுலா விட்டதுதான்
பெருகிவந்த தமிழரையேப் போரிட்டுச் சாய்த்ததப்பா!

திறலற்ற திராவிடத்தைத் திருவென்றே பேசியதால்
திருவெல்லாந் தீர்ந்தின்று தரித்திரந்தான் தமிழப்பா!

மறமறுந்த மந்தைதனை மாண்பென்றே நம்பியதால்
உறவறுந்து தமிழழிந்து வேரழிந்து போனதப்பா!

வேரழியும் வேளையிலே வெந்நீரும் ஊற்றென்று
ஊரறிய முந்நாழி நோன்பிருந்த வஞ்சனைத்தான்,

இனமென்றும் தமிழென்றும் இன்னபிற என்றெல்லாம்
மனங்குளிரக் கூறுநிலை மருளத்தான் வைக்குதப்பா!

பணமென்றால் பிணங்கூட வாய்திறக்கும்; திறக்காமல்
பிணம்போன்றே பணங்கூட திராவிடந்தான் நடிக்குதப்பா!

பிணக்குவியல் காட்டியங்கே தில்லித்தெரு நாயிடமும்
தனக்குவியல் ஈட்டியிங்கே திராவிடந்தான் வாழுதப்பா!

ஓலமிட்டார் குருதிகொண்டு ஒருதில்லி வாசலிலே
கோலமிட்டுப் பல்லிளித்துத் திராவிடந்தாங் களிக்குதப்பா!

ஏட்டுக்குள் எழுதயின்னும் எத்தனையோ யிருந்துமுன்
பாட்டுப் பரம்பரைக்குப் பல்லுடைந்து போனதப்பா!

பல்லுடைந்து போனதனால் தமிழுடைந்து போகுமன்றோ?
தமிழுடைந்து போகுமெனின் திராவிடந்தான் இனியெதற்கு?
திராவிடந்தான் தீய்ந்திடவே தமிழியக்கம் இனிக்கிளர்க!
தமிழியக்கங் கிளர்க்கிலையேல் தமிழர்க்கிப் புவியிலையே!

அன்புடன்
நாக.இளங்கோவன்
26/04/2011

Saturday, April 24, 2010

சீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்!

கொளத்தூர் மணி அவர்கள் சரியாக ஈராண்டுக்கு முன்னர் சீமான் என்ற பெயர்
வடமொழிச் சொல் என்று கொளுத்திப் போட்டார். உடனே திராவிடப் பத்தர்கள்
அதனைப் பிடித்துக் கொண்டு தமிழ்ச் சொல் ஒன்றை வடமொழிக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கொளத்தூர் மணி அவர்களின் கருத்துக்கு எதிர்வினையாக
நான் அளித்த கீழ்க்கண்ட விளக்கம் அதிகாலை மின்னிதழிலும், கீற்று, பிரவாகம், தமிழ் உலகம், தமிழ் மன்றம் மடற்குழுக்களிலும் வந்தன.

சீமான் என்பது தமிழ்ச் சொல்லே!
சீ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இலக்கியங்களில்
நுண்ணிய பொருளில் பயிலும் ஒரு அருமையான சொல்.
அவற்றுள் "திரு" என்பதுவும் "தூய்மை ஆக்கல்" என்பதுவும் "கூராக்குதல்"
என்பதுவும் உண்டு.
============================
9. சீ cī : (page 1471)
தூயதாக்குதல். (சூடா.) 5. cf. siv. To sharpen; கூர்மையாகச் சீவுதல்.
கணிச்சிபோற் கோடு சீஇ (கலித். 101).
சீ&sup5; cī
, < šrī. n. 1. Lakṣmī; இலக்குமி. சீத னங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந்.
8). 2. Light, brilliancy; ஒளி. சீவனசத்துருச்
====================================பார்க்க - செ.ப.பே.அ
சீர், சீரங்கம், சீதனம், சீவகம் (சீ அகம்), சீதை, சீதம் போன்ற பல சொற்கள்
இன்றும் பெருவலமாகப் புழக்கத்தில் உள்ளன.
சீ என்ற எழுத்திற்கு நேர், கூர், தூய என்ற பொருள்கள் இருப்பதால்தான் சீதை
என்ற சொல்லுக்கு நேரானவள், நேர்மையானவள், உறுதியானவள் என்றெல்லாம்
பொருள்களுண்டு. தமிழில் இருந்து வடக்கே சென்ற சொற்களில் இதுவும் ஒன்று
என்று அறிஞர் சொல்லுவர். இந்தியில் சீதா என்றால் நேராக, நேரான என்று
பொருள்.
(அதுபோல சீதம் என்ற சொல் வடசொல் அல்ல. அது ஒரு அருமையான
தமிழ்ச் சொல். சீதம், சீம்பால், சீக்கை, சீசீ போன்ற சொற்களைத் தனியே எழுத
வேண்டும். )
மான் என்பது ஒரு உயர்தகையைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல். பெயர்
விகுதி என்றும் சொல்லுவர்.
பெருமான், அம்மான், எம்மான், அதியமான், தொண்டைமான், சேரமான்,
மலையமான், மருமான் போன்ற சொற்களில் பயிலும் மான் என்ற பின்னொட்டு
மிகத் தொன்மையானது.
மான் என்றால் மகன் என்ற பொருளும் உண்டு. (மலையாளிகள் மோன்,
மோனே என்று சொல்லுதல் நோக்கத்தக்கது)
==========================================
98. வேண்மான் vēṇ-māṉ : (page 3825)
அந்துவஞ் செள்ளை (பதிற்றுப். 9-ஆம் பதி.).
வேண்மான் vēṇ-māṉ
, n. < வேள் + மான்². Male member of Vēḷir-tribe; வேளிர் குலத்து மகன்.
நன்னன் வேண்மான் (அகநா. 97).
வேண vēṇa
==========================================செ.ப.பே.அ
ஆகவே, சீமான் என்றால்
நேர்மையானவன், தூய்மையானவன், உயர்ந்த குடிமகன், ஈரநெஞ்சினன்
நன்மகன் என்ற அருமையான பொருள்களே கிடைக்கின்றன. இன்னும் பொருத்தமாகச்
சொல்லவேண்டுமானால் "திருமகன்" என்பது சரியான பொருளாக இருக்கும்
ஆகவே, சீமான் என்பது எளிமையான உயர்ந்த தமிழ்ச் சொல்லன்றி வடமொழிச் சொல் இல்லவே
இல்லை. உயர்ந்த பணிகள் செய்யும் மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்கள்
இச்சொல்லை வடமொழி என்று சொல்வதற்குத் திராவிட பக்தி காரணமாகிவிடக் கூடாது. "சீ"
சிறீயாக விட்டு விட்டுப்
பின்னர் சீ என்று புழங்குதலை வடசொல் என்றால் யாருக்கு இழப்பு?
அன்புடன்
நாக.இளங்கோவன்
=======================================================================================
இந்த உரையாடலை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.

திராவிடம் எதை எடுத்தாலும் வடமொழி வடமொழி என்று தமிழ்ச்சொற்களையும் வடமொழிக்கு வாரிக் கொடுத்தது வரலாறு. அப்படி வாரிக்கொடுத்தத் தமிழ்ச்சொற்களையும் மீட்டெடுக்க வேண்டிய கடமை தமிழர்க்கு உண்டு.

அன்புடன்
நாக.இளங்கோவன்