Pages

Sunday, February 28, 1999

சிலம்பு மடல் 8

சிலம்பு மடல் - 8 பரத்தையின்கண் பிரிதல்!

புகார்:
அந்திமாலை:

பெண்மையை வியாபாரம் செய்யும் பரத்தையர் மரபில் பிறந்திருந்தாலும் தான் பெற்றவைகளையாவது
அதைவிடச் சிறந்த வாழ்க்கையில் வாழவைக்கவேண்டும் என்ற எண்ணம் எதுவும் தோன்றிடாமல் குலக்க
ல்வி யையே மாதவிக்கும் ஊட்டிய மாதவியின் தாயாருக்கும் ஒழுக்கமில்லை.

தான்பெற்ற அரசப்பரிசை விலை கொடுத்து வாங்கிய கோவலன் கண்ணகியின் காவலன் என்று தெரிந்தபி
றகும், அவனை நீங்கிட மாதவியும், மனதிலும் நினைத்தாளில்லை! அந்த ஒழுக்கத்தைச் சமுதாயமும்
அவளுக்கு போதித்திருக்கவில்லை!

பெருஞ்செல்வத்தின் மெத்தையில் மனைவியுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையுடன் நின்றுவிட அருமந்த க
ல்வியை அவன் கற்றான் இல்லை. அவனுக்குக் கசடறக் கற்பித்தாரும் இருந்திருக்க வில்லை!

கண்ணகியுடனான உறவில் உண்டான வாழ்க்கையெனும் நட்பிற்கு நயவஞ்சகம் செய்திடாப் பண்பையும்
அறிந்தானில்லை;

"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று" என்று வள்ளுவம் சொல்வதுபோல் பெருஞ்செல்வக் கோவலனின் பண்பில்லாக்
குற்றத்தால் அச்செல்வமும் தீவினையே விளைவித்ததன்றி நற்பயன் அளிக்கவில்லை!

கற்பின் பொருட்டாலல்லாவிடிலும் நட்பின் பொருட்டாலாவது "மிகுதிக்கண் மேற்சென்றிடிக்க" கண்ணகியும்
கோவலச்சேதி உடன் அறிந்தாளில்லை! பின்னாள் மாதவியுடன் முறிந்த பின்னர் அவனைச் சேர்த்துக் கெ
஡ண்ட கண்ணகி, முன்னாள் கோவலச்சேதி அறிந்தஉடன் அழைத்துக் கொள்ள முயன்றா ளில்லை!

தனிக்குடித்தனம் வைத்ததோடு மாசாத்துவானும், மாநாய்கனும் எம்கடமை தீர்ந்ததென்று எங்கோ போ
ய்விட்டது போல் தெரிகிறதே! நற்குடித்தனம் கோவலன் செய்திருந்தால் தனிக்குடித்தனத்தில் நுழையாப்
பெருந்தன்மையாளராக அவர்களைப் பார்த்திருக்கலாம்! ஆனால் கோவலமாதவி வாழ்விலும் இடை
ப்புகுந்து இடிக்காமையால் அறம்கற்றோராய் அவர்கள் தெரியவில்லை.

களவுக்கும் கற்புக்கும் வழி அமைத்து வகையிட்ட பெருமக்கள், பிரிவுக்கும் வகையிட்டது தமிழுக்குச் சி
றப்பெனினும், பிரிவில் ஒன்றாம் "பரத்தையின்கண் பிரிதல்", என்று தலைவன் தலைவியைப் பிரிதலுக்குப்
பெயர் சூட்டிவிட்டது பரத்தையர் குலத்தை ஏற்புடையதாக்கி, ஆணின் அதிகப்படியான தேவைக்கு நியா
யமும் கற்பித்துவிட்டார்கள்!

ஒழுக்க மீறல்களுக்கும் இலக்கணமிட்டுச் சென்றிருக்கிறார்கள்!

"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான" ( தொல்காப்பியம்)

பெண்ணுக்கு (தலைவிக்கு) மாதவிடாய்( பூப்பு) முடிந்த உடன் முதல் பன்னிரண்டு நாட்களில் தலைவன்
அவளை நீங்குதல் கூடாது! கரு உண்டாவதன் பொருட்டு!

இந்தப் பன்னிரண்டு நாட்கள் தவிர ஏனைய நாட்களில் கலந்தால் கரு ஏற்பட வாய்ப்பு இல்லை அல்லது
குறைவு என்று உடற்கூறு வழிநின்று இது எழுதப்பட்டிருக்கிறது.

மற்ற நாட்களில் பரத்தையுடன் புரள கட்டுப்பாடேதும் சொல்லப்படவில்லை.

சுயநலத்திற்காக, கற்பென்னும் சொத்தை மட்டும் பெண்ணுக்கே உரிமையாக்கிய ஆணாதிக்க சமுதாயத்
தின் ஆண்மை நீர்த்துத்தான் போயிருக்கிறது!

இரவுகளில் இணையோடு இருப்பதே இன்பம்! துணையில்லை என்றால் துன்பமே!

"கூடினார் பால்நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதவிழ்க்கும் கங்குல் பொழுது."

கூடிய நண்பரிடம் குளுமையையும், கூடாப் பகைவரிடம் கடுமையையும் காட்டும் அரசனைப்போல், இ
ரவிலே கண்ணகிக்கு வெப்பத்தையும், கோவலனைக் கூடிய மாதவிக்கு குளிர்ச்சியையும் கொடுத்தது வானி
லே முழுநிலவின் ஆட்சி!

"அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி ............"

மனிதவாழ்க்கையில் மனிதரோடு மட்டுமல்ல, மரம் செடியோடும், விலங்குகளோடும் மண்ணோடும் மண்ண
஡லான மாளிகையோடும் குச்சியாலான குடிசையோடும் உறவுகள் உண்டாகிவிடுகிறது! இதயம் இவற்றில்
இணைந்து விடுகிறது! சொந்த மண்ணை மறக்க முடிவதில்லை! சிறிது நாள் வாழ்ந்த மண்ணைப் பிரி
யமுடிவதில்லை! பழகிய மரம் செடிகொடி பூக்களையும் நினைக்கும் போது ஏங்காமல் இருக்க முடிவதில்ந
ல! வாழ்ந்த வீட்டை இழக்க முடிவதில்லை! மனிதனைச் சுற்றி இருக்கும் அசையும் அசையாப் பொருட்க
ளோடும் அதற்கு மேலாக நெருக்கத்தில் இருக்கும் மனிதரோடும் ஏற்படக் கூடிய உறவுகள் நட்பென்னும்
நல்லுணர்வை, அன்பென்னும் அருமந்த உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன! பிரிவில், துயருற்று வாடலே
நட்பையும், நேர்மையான அன்பையும், மென்மையான உணர்வுகளையும் வெளிக்காண்பிக்கிறது!

கோவலனைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணரசி, எண்ணெய் மறந்த கூந்தலுடன், அழகு நெற்றியில் திலகம் எ
ழுத மறந்து, அழகிய விழிகளில் அஞ்சனம் தீட்டாது, காதணி துறந்து, இடையில் அணியும் மேகலை நீங்கி,
காற்சிலம்பு அணியாது, அழகிய முலைகளில் குங்குமச் சாந்து பூசாமல், சுருங்கச் சொன்னால் மங்கல
அணி தவிர மற்றைய அணிகள் எதுவும் அணியாமல் வாடியிருக்கிறாள்.

நிலையாமையை அறிந்தவராய் பிணையல் பாம்புகள் போல் பின்னிப் பிணைந்துவாழ்ந்த காதல் வாழ்க்கை
மாறி 'காமத்தாலோ கலவியாலோ ஏற்படக்கூடிய சிறு வியர்வைத்துளிகள் எதுவும் இன்றி வாழ்கிறாள்'
என்று சொல்லப்படும்போது தலைவன் தலைவி பிரிதலினால் ஏற்படும் துயரத்தின் ஆழம் அளவற்றதாய்த்
தெரிகிறது.

கண்ணகி இப்படியிருக்க, மாதவி, 'கோவலன்பால் மிகுந்த ஆர்வத்துடன், விருப்பமிக்க நெஞ்சோடு
அவனுடன் இணைந்து இன்பமளித்தாள். அப்படி இன்பம் அளித்ததும் கலைந்துபோன ஆடைகளைத் தி
ருத்திக் கொண்டு மீண்டும் இன்பமளித்தாள்';

"இல்வளர் முல்லையொடு, மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி........."

கற்பு வாழ்க்கையில் கண்ணகியுடன் கோவலன் இன்பம் துய்த்த போது, அவர்களிருவரும் நிலையாமையை
உணர்ந்து, பின்னிப் பிணைந்ததாய் இளங்கோவடிகள் சொல்லும் போது இருமனம் கலந்த இன்ப வாழ்க்கை
கண்முன் விரிகிறது!

ஆனால் மாதவியோடு இன்பம் துய்த்தபோது 'மாதவி இன்பம் அளித்தாள்; ஆடை திருத்தி மீண்டும்
அளித்தாள்' என்று இளங்கோவடிகள் சொல்லி, Publish Postபொருள்கொடுத்து பெறும் பரத்தையின்பத்தை, கற்பில் கி
டைத்த இன்பத்தில் இருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டிப்போயிருக்கிறார்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
28-பிப்ரவரி-1999

Wednesday, February 24, 1999

சிலம்பு மடல் 7

சிலம்பு மடல் - 7: தலைக்கோலி மாதவி!
புகார்:
அரங்கேற்றுக்காதை:

ஆடலுக்குத் தயார் செய்யப்பட்ட அரங்கத்தினுள் மாதவி தன் வலக்காலை முதலில் வைத்து
வருகிறதாக சிலம்பு சொல்கிறது.

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி"

அரசர் உள்ளிட்ட அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அளிக்கப்பட்டிருந்த/ஒதுக்கப்பட்டிருந்த
இடத்தில் அமர்ந்திருக்க இசைக்கருவியாளர் (குயிலுவமாக்கள்) முறைப்படி நிற்க மாதவி
தன்வலக்காலை முன்வைத்து மேடையேறி வலத்தூண் அருகில் சென்று நிற்கிறாள்.

இசைக்கு இலக்கணம், ஆடும் அரங்கத்திற்கு ஒரு தரம் மற்றும் முறை, இவையெல்லாம் இருக்கையிலே ந
஡ட்டியமாடப் போகிறவர் நடந்து செல்வதற்கும் ஒரு முறை (வலக்கால் முன்வைத்து) இருப்பது தவறில்லை;
ஆயினும் சிந்தித்துப் பார்க்குங்கால் தொன்று தொட்டு தமிழ் மண்ணில் வாழும் 'வலது காலை எடுத்து ந
வத்து வா, வா' என்ற மூடநம்பிக்கையாக இருக்குமோ என்றும் எண்ண வாய்ப்பிருக்கிறது.

இடத்தூண் சேரவேண்டிய ஆடி முதிர்ந்த மகளிர்க்கும் இந்நெறி பொருந்தும்; அதாவது வலக்கால்
முன்வைத்தேறி இடத்தூண் சேர்தல்;

"இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

ஆகமொத்தம் மேடையில் ஏறினால் வலக்காலை வைத்து ஏறுதல் என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்
திருக்கிறது.
(பிறந்தவுடன் மனிதனுக்கு நம் மண்ணில் போதிக்கப்படும் சில பழக்க வழக்கங்களில் வலக்கை,
இடக்கை உபயோகங்கள் மிக முக்கியமானவை. இடக்கையால் யாரிடமாவது எதையா
வது வாங்குவது அல்லது கொடுப்பது பெரும் அவமதிப்புகளில் ஒன்றாக இன்றைக்கும் கருத
ப்பட்டு வருகிறது. பிறந்தவுடனேயே கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுவிடு
கிறது!)

ஆடுகிறாள் மாதவி! அரசன் மகிழ்ந்துவிட்டான்! ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னும் பரிசாய்
பெற்றுவிட்டாள் மாதவி!; தலைக்கோலி என்ற பட்டத்தோடு சேர்த்து!

"தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள்"

மாதவியின் தாய், கூனி என்பவள் மூலமாக "ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னை விலை கொடுத்து வா
ங்குபவர் மாதவியை மணக்கலாம்" என்று அறிவிக்கிறாள்! எங்கு என்றால், பணம் படைத்த இளைஞர்
வரும் வீதியில்!

"மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு"

பல நற்குணங்களைக் கொண்ட மாதவி ஒருவேளை பன்னிரண்டு வயதில்லாமல் மேலும் அதிக வயதினள
஡க இருந்திருந்தால் தான் வியாபாரம் செய்யப்பட்டதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொ
ண்டிருப்பாளோ !?

அந்த அறிவிப்பைக் கேட்ட கோவலன் அம்மாலையை வாங்கி மாதவியொடு, கண்ணகியை மறந்து காத
ல்வாழ்க்கையின் இரண்டாவது பகுதியை ஆரம்பிக்கிறான்!

அக்காலக்கட்டத்தில் தலைவன் தலைவியைப் பிரிவதற்கு சொல்லப்பட்ட/ஏற்கப்பட்டக் காரணங்
களில் 'பரத்தையைச் சேர தலைவியைப் பிரிதல்' என்ற காரணமும் உண்டு. பொருளதிகாரத்தில்
இச்செய்தி விளக்கமாகக் காணப்படுகிறது.

ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்று இருந்த காலத்தில் இருந்து நாம் இன்று வெகுதூரம் முன்
னேறியிருக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைப் போற்றும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24-பிப்ரவரி-1999

சிலம்பு மடல் 6

சிலம்பு மடல் - 6 நாட்டிய அரங்கம்!
புகார்:
அரங்கேற்றுக்காதை:

சிறப்புடைய நாட்டியக் குழுவுடன், மாதவி நாட்டியமாடப் போகும் ஆடல் அரங்கத்தின் அமைப்பிற்கும்
இன்றைய அரங்கத்தின் அமைப்புக்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்றுசொல்லலாம். சாதாரண ந
஡டக மேடை போன்றே அமைக்கப் பட்டிருக்கிறது.

ஆயினும், இளங்கோவடிகள் இதை எடுத்துக் கூறியிருக்கும் விதம் மிக அருமை. கலை நூலாசிரியர் கூறி
யுள்ள இயல்புகளிலிருந்து வேறுபடாமல், ஏற்ற ஒரு இடத்தை அரங்கம் அமைக்கத் தேர்ந்தெடுத்து, புண்
ணிய மலைகளில் (பொதிய) ஓங்கி வளர்ந்த ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையே ஒருசாண்
நீளம்
கொண்ட மூங்கில்களைக் கொணர்ந்து, அரங்கம் அளக்கும் அளவுகோல் செய்யப்பட்டிருக்கிறது

"எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு"

அந்த அளவுகோலானது நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் பெருவிரலில் இருபத்திநான்கு அளவுகள் ந
ணளம் கொண்டது.

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக",

பெருவிரலின் நீளம் மூன்று அங்குலம் என்று கொண்டால், அளவுகோலின் நீளம் ஆறு அடி ஆகிறது.
அந்தக் கோலால் அளந்து 42 அடி அகலம் (எழுகோல்), 48அடி நீளம்(எண்கோல்), ஆடும் அரங்கத்தின்
அடிப்பலகை தரையிலிருந்து 6 அடி உயரத்தில் இருக்க, அதற்கும் உத்தரப் பலகைக்கும் இடைவெளி 24
அடி ஆக,
நாட்டிய மேடை அமைக்கப் பட்டிருக்கிறது.

"எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக"

உள்ளே வெளியே செல்ல இரண்டு வாயில்களுடனும், அனைவரும் வணங்குமாறு பூதங்களை எழுதி ஧
மல்நிலத்தில் அமைத் திருக்கின்றனர். அதோடு அரங்கத்தைத் தாங்கிநிற்கும் தூண்களின் நிழல் அரங்கி
லும், அவையிலும் விழாதவாறு நிலைவிளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

நாடக மேடையில் இன்று காண்பது போலவே திரைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேடையின் ஒ
ருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட ஒருமுகத்திரை ( எழினி = திரை), இரண்டு பக்க
மிருந்தும் நடுவை நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட இருமுகத்திரை, மேலிருந்து கீழ்வரும் கரந்துவரல்த்
திரை என்ற இம்மூவகைத் திரையும் ஆங்கு அமைக்கப் பட்டிருந்தது.

"ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்தாங்கு"

அரங்கம் அமைக்கப் பட்டது என்பதைச் சொல்ல, இடத்தேர்வு, மரம் எடுக்கப்பட்ட இடம், அளவுகோல்
செய்யப்படும்முறை நீள அகல அளவுகள், பொருத்தப்பட்ட இதர அமைப்புகள் இவைகளுடன் விளக்கியி
ருப்பது எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு எந்நாளும் விளங்குமாறு அமைத்திருப்பது, கவிஞர்க
ள், புலவர்கள் அல்லது வரலாற்றை எழுத்தில் அமைப்போர் போன்றவர்களுக்கு "காலத்தில் சிதையாத"
எழுத்துக்களை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று சொன்னால் அது
மிகையாகாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24-பிப்ரவரி-1999

Saturday, February 13, 1999

சிலம்பு மடல் 5

சிலம்பு மடல் - 5 நாட்டியக் கலை!
புகார்:
அரங்கேற்று காதை:

ஆடலை அரங்கேற்ற வந்த ஆடலரசி மாதவி தன் நாட்டியத்துக்கு
ஆடலாசிரியன், பாடலாசிரியன் இசையாசிரியன், தண்ணுமை முதல்வன் (மத்தள ஆசிரியன்), குழலாசிரியன் மற்றும் யாழாசிரியன் என்ற ஆறு முக்கிய வல்லுநர்களையும் ஏனைய உதவியாளர்களையும் துணையாகக் கொண்டிருக்கிறாள்.

இதன்மூலம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே, மூத்த தமிழான கூத்துத்தமிழ் சிறந்திருந்த நிலை, அது நடந்தவிதம், அதற்கு ஆதாரமாக இருந்த கலைமுதிர்ச்சியை அறியமுடிகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடக்கும் நாடகம், திரைப்படம் முதலியவற்றில், தொழில் நுட்ப வேறுபாடுகளைத் தவிர்த்து ஏனைய, கலைஞர்கள், சிறப்பியல்புகள் இவற்றை நோக்குங்கால் சிலம்புக்கால நாடகக் கலைக்கும் இன்றைய நிலைக்கும் வேறுபாடு ஏதும் பெரிய நிலையில் இருப்பதாகக் கருத முடியாது. அல்லது 1800 ஆண்டுகளுக்கு முன்னரே முதிர்ந்து விட்டிருந்த கலை நிலையே இன்றும் தொடர்வதாகக் கருதலாம். மூத்தக் குடியினர் என்று கூறப்படுவது இதனால்தானே!

இந்தக் காலகட்டத்தின் கூத்து முறை சிலம்புக்காலத்திலிருந்து வேறுபடாமல் இருக்கும் போது, முதிர்வு நிலை சமமாக இருக்கும் போது, அச்சிலம்புக் காலத்தைய கலை முதிர்வுக்கு முன் எத்தனைத் தமிழ் ஆண்டுகள் ஓடியிருக்கக் கூடும்? அச் சிறப்பு நிலைத் தமிழுக்கு இருக்கும்போது, தமிழின் தொன்மை கி.மு 300 அல்லது கி.பி 1 முதல் 500க்குட்பட்டது என்று நிறுவ முனைவதும் அதைப் பரப்பமுயல்வதும் சரியா
னது அல்ல அல்லவா?

இளங்கோவடிகள் இயற்றிச் சென்ற இந்தக் காப்பியம் வெறும் கதைமட்டும் கூறுவதல்ல. அந்நாள் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவையோடு, கல்விநிலையையும் கலைநிலையும் அறிவிக்கிறது.
கலைஎன்றால் அந்தக் கலையின் கூறுகள் அதன் காரணங்கள் இவற்றையும் விளக்குகிறது சிலம்பு. இசை, இயல், நாட்டியம் என்ற ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு கருவிக்கும் இலக்கணம் காட்டுவதாய் அமைகிறது
இந்தக்கவிதைகள். மாதவி தன் துணைக் கலைஞர்களோடு நாட்டிய மாடினாள் என்று கூறிவிட்டுப் போகாமல் அக்கலையின் கூறுகள் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் வரையறுத்திருப்பது சிலம்பின் சிறப்புக்களில்
ஒன்றாகும். பல கலைகளையும் கலைஞர்களையும் விவரித்திருக்கிறார்; அதில் நிகழ்ச்சியின் மூலமான ஆடல் ஆசிரியனின் சிறப்புக்கள் மட்டும் இங்கே.

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்.... "

ஆடற்கலை ஆசான் அகக் கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்துக்களையும் நன்கு அறிந்தவன்; இந்த இருகூத்துக்கள் உள்ளடக்கிய பல பகுதிகளாகிய பலகூத்துக்களை இணைக்க வல்லவன். பதினோர்
கூத்துக்களையும் (அல்லியக் கூத்து முதல் கொடுகட்டிக் கூத்து வரை என்று அறிஞர் உரைக்கிறார்), இந்தக் கூத்துக்களுக்கு உரிய பாடல்களையும், அவற்றிற்கமைந்த இசைக்கருவிகளின் கூறுகளையும், அவற்றைப் பற்றிக் கூறியுள்ள சிறந்த நூல்களின் படி விளக்கமாகத் தெரிந்தவன்(விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு..).

1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆடப்பட்ட நாட்டியம், கூத்து, இசை, கருவிகள் இவற்றிற்கு இடப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் நடந்ததென்றால், அந்த இலக்கணங்கள் தோன்ற எவ்வளவு காலம் ஆகியிருக்கக் கூடும்?

ஆடலாசிரியன் ஆடலையும் பாடலையும் தாளத்தையும் அந்த தாளவழி வரும்' தூக்குகளையும் ( இசை அல்லது தாளவகை ) இணைப்பதில் வல்லவன்! அப்படி இணைத்து ஆட்டுவிக்கு மிடத்து ( கொளுத்துங் காலை ), ஒற்றைக்கை (பிண்டி), இரட்டைக்கை (பிணையல்), எழிற்கை, தொழிற்கை என்று சொல்லப்பட்ட
நான்கு அவிநய ( அபிநயம் ) வகைகளையும் திறமையாகக் கையாளக்கூடியவன்.

கூத்து நடக்கும்போது , கூடை(ஒற்றை) க்கதியாகச் செய்த கை வார(இரட்டை)க் கதியுள் புகாமலும் வாரக்கதியாகச் செய்த கை கூடைக் கதியுள் புகாமலும், ஆடல் நிகழும்போது அவிநயம் நடக்காமலும் அவிநயம் நடக்கும்போது ஆடல் நிகழாமலும் தவிர்ப்பதில் வல்லமையும், குரவை மற்றும் வரிக் கூத்துக்கள் ஒன்றோடொன்று கலவாதவாறு பயில்விப்பவனுமே அந்த ஆடல் ஆசிரியன் ஆவான் !

அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-1999

Sunday, February 07, 1999

சிலம்பு மடல் 4

சிலம்பு மடல் - 4 மாதவி!
புகார்:
அரங்கேற்றுக் காதை:


"பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி, ..... "

அவளுக்கும் வயது பன்னிரண்டு!
ஆம்; மாதவி உலகத்துக்குக் காட்டப்பட்டதும் அவளின் பன்னிரண்டாவது வயதில்;

சுருண்ட கூந்தலில் சூடிய பூக்கள்,அழகிய தோளில் அலைந்து விளையாடும், இந்தப் பன்னிரண்டு வயதுந
டய மாதவி தன் அய்ந்தாம் அகவையில் நாட்டியம் பயிலத்துவங்கி ஏழாண்டுகள் அதைப் பிழையின்றிக்
கற்றுக் கொண்டிருக்கிறாள்! பிறப்பினில் எந்த குறைபாடும் இல்லாதவள்; அழகில் குறைவில்லா இவள்,
ஆடலிலும் பாடலிலும் சிறந்தவள்.

அரம்பையர்; அதாவது நாட்டியத்தைத் தொழிலாகக் கொண்ட, நாட்டியக் கலையில் ஒப்பில்லாச் சிறப்புப்
பெற்ற உருப்பசி என்ற மரபில் பிறந்தவள் மாதவி;

கண்ணகி பன்னிரண்டாவது வயதில் மணந்து கொண்டாள்!

மாதவியோ பன்னிரண்டாவது வயதில் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறாள்! அதாவது தன் நாட்டியத் தொழிலை ஆரம்பிக்கிறாள்!

வீரக்கழல் அணிந்த சோழ மன்னனின் முன்னே, முதன் முதலில், தான் கற்ற வித்தையை கடை விரிக்கிறாள்! தன் நாட்டியத்தை அரங்கம் ஏற்ற வருகிறாள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
07-பிப்ரவரி-1999