Pages

Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Tuesday, January 20, 2015

மாதொருபாகன் - கவுண்டருக்கு எனது கண்டனங்கள்!

பெண்ணியம் ஆணியம் என்று கட்சி கட்டமுடியாமல்
எழுந்த புதினம் என்பதால் ஆண் பெண் சமனைக் குறிக்கும்
சிவவடிவான மாதொருபாகன் என்ற பெயரைச் சூட்டினாரோ
"பெருமாள் முருகன் கவுண்டர்" என்று எண்ணத் தோன்றியது
அப்புதினத்தைப் படித்து முடித்தபோதில்.

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்,
அதிலும் கூன் குருடு செவிடு பேடு என்ற நான்கு உடல்
ஊனங்களின்றிப் பிறத்தல் அரிது என்று சொன்ன போது,
மானிட வாழ்க்கைக்கு இந்நான்கு ஊனங்களும் சற்று
கடினமாக, சரவலாக இருந்ததை, இருப்பதைப் புரிந்து
கொள்ளமுடிகிறது. பேடு என்றால் பேடிமை;
அதாவது பால் பேதித்த பெண்மை (திருநங்கை என்ற
 தற்போதைய வழக்கு). ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான மலடு (வறடு/வறடி/வறடன் என்பார் பெ.மு)
என்ற தன்மையை மானிட வாழ்க்கையின் இன்னலாகச் சான்றோர்
கொண்டதில்லை.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்குமுகத்தில்,
மணமாகிய ஓரிரு மாதங்களில் இருந்து காலம் முழுவதும்
குமுகத்தின் ஒவ்வொரு மூலையிலும் படும் வேதனைகளை,
சொல்லடிகளை, எதிர்கொள்ளும் ஆணவங்களை,
அவமானங்களை மாதொருபாகன் பதியவைத்திருக்கிறது.
ஆணும் பெண்ணும் (காளி, பொன்னா)  சமமாகப் படும்
துன்பங்களை, ஏச்சுகளை ஆங்காங்கு நடைமுறை
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்டிருந்தாலும்
ஒரே மூச்சில் படிக்கும்போது "குழந்தை குட்டி பெற்ற குமுகம்
இத்தனைக் கொடியதா? என்றெண்ண வைப்பதோடு,

"நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
 ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
 பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
 காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
 ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
 ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
 ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே..."


என்ற பட்டினத்தாரின் பாடலை நினைவுக்குக் கொண்டுவந்து,
"இந்தக் குரங்குகளுக்குத்தான் எத்தனை ஆணவம்!"
என்றும் எண்ண வைத்துவிடுகிறது.

பிள்ளைப்பேறின்றி, பல வருடங்கள், ஆணின் பாதியில்
பெண்ணும், பெண்ணின் பாதியிலே ஆணுமாய்
இனிய காதல் வாழ்க்கை வாழ்ந்த காளியும் பொன்னாவும்
பட்டினத்தார் சொன்ன குரங்குகளின் இறுக்கத்தினால்,
பொன்னா உறுதி தளர்ந்து, கணவனின் பேச்சைக் கேட்காமல்
திருவிழாச் சந்தையில் காணாக்களவு வழி
விந்துதானம் பெறப் போய்விடுகிறாள்.
அவர்களின் காதல் வாழ்க்கை சிதறிவிடுகிறது.
காதல் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறார் பெ.மு. அதை
எண்ணும்போது அவர்களின் சிதறல் வலிக்கவே செய்கிறது.
மணமாகி குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தாலும்,
 "அன்பிலாப் பெண்டிர் கையில் உண்பதே உலகில்
எல்லாவற்றிலும் கொடியது" என்ற ஔவையாரின்
சொல்லுக்குள் வாழ்பவர் எத்தனையோ பேரிருக்க,
அருமையான காதல் வாழ்க்கையை, குமுகத்தின்
அழுக்குகளால் சிதறடிக்கிறார்கள் பொன்னாவின் தாய்,
தந்தை, அண்ணன், மாமியார் (அதாவது காளியின் அம்மா).
பொன்னாவை காணாக்களவுவழிப் போக சொல்லித்தந்தோடு
மட்டுமன்றி, காளியின் தாயார் ஆசியோடு, பொன்னாவின்
தந்தை வண்டி ஓட்ட, தாய் துணைக்கு வர, அண்ணணோ
மாப்பிள்ளை காளிக்குத் தெரியாமல் அவனைச் சமாளிக்க,
திருவிழா இருட்டுக்குள் மறைந்துவிடுகிறாள்
காளியுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த பொன்னா.

இதுதான் கதை. இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பா?  கதையில்
எங்கும் அருத்தநாரீசரை இழுக்கு செய்யவில்லை. பெருமாள் முருகனின்
சொந்த சாதியான கவுண்டர்களை ஏதும் இழுக்கு செய்யவில்லை.

ஊருக்கு இழுக்கு என்று சொல்வதெல்லாம் மறைமுகக்
குற்றச்சாட்டுகளாகவே தெரிகின்றன. ஏனெனில், ஊர், மலை,
மலைக்கோயில், அதன் பிரிவாக இருக்கும் வறடிகல்,
பாவாத்தா என்ற வனதெய்வம், அந்த வனதெய்வம் இட்ட குலசாபம்
போன்றவற்றையெல்லாம் சொல்லவேண்டுமானால்
ஊர்ப்பெயரைச் சொல்லாமல் எந்த எழுத்தாளனாலும்
எழுதவே முடியாது.

காணாக்களவு பற்றிப் பேசிய போதே அவளின் கண்களில்,
திருவிழாவில் பிள்ளை வரம் கொடுக்க அலையும்
எல்லாச் சாதி சாமிகளும் வந்து போகின்றனர்.
எல்லாச் சாதி சாமிகளும் அலைகிறார்கள் என்றால்
எல்லாச் சாதிப் பெண்களும் தேடுகிறார்கள்
என்றுதான் பொருள். அதற்கு ஏன் கவுண்டர் சாதி கோவித்துக்
கொள்ள வேண்டும்?

சாதிப்பெயரைப் போடமலிருந்திருக்கலாம் என்றால்,
கதையில், கவுண்டர் தொடங்கி, பார்ப்பார், செட்டியார்,
பறையர், சாணார், சக்கிலியர், சாயபு, வெள்ளைக்காரன்
என்று பலரும், பல குடும்பங்களும் வந்து போகிறார்கள்.
கதையில் கவுண்டரான காளி, பறையர்களோடு
பறையாட்டம் ஆடுவான். குறிப்பாக கோயிற்பறையாட்டத்தில்
வல்லவனாகச் சொல்லப்படுவான். பறையாட்டம் என்பது தமிழர்களின்
பொதுவான தொன்மையான கலை என்பதற்கு இதுவும் ஒரு காட்டு. காளியின்
சிற்றப்பனாக வருபவர், திருமணம் செய்துகொள்ளாதவர்.
அவருக்குச் சமைத்துப் போடுபவன் சக்கிலிய
வகுப்புப் பையன். அதற்காக சிற்றப்பா பலராலும்
இகழப்பட்டதைக் கதை சொல்கிறது. சாணார் வகுப்பான
மண்டையனின் பிள்ளையைத் தத்துக் கேட்கிறான் காளி.
அவனும் தருகிறேன் என்று சொல்வான்;
ஆனால் மண்டையன் மனைவி மறுத்துவிடுவாள்.

காணாக்களவுக்குப் பொன்னா போனதாக வருவதால்
சாதியம் பற்றிக் கொண்டது என்று சொல்லுமளவுக்குக்
கதையில் ஏதும் சாதி இகழ்ச்சி இல்லவே இல்லை.

திருச்செங்கோட்டு கவுண்டர்கள் மட்டும் கதை
படிக்கத் தெரியாதவர்களா என்ன? அவர்களுக்கும் கதை
புரிந்திருக்கவே கூடும். ஆனால், பெ.முவே ஒரு செவ்வியில்
சொன்னதுபோல வேறு எதற்கோ பெ.மு வைப்
பிடிக்காதவர்கள், இதனை மட்டும் வெளியில் காரணமாக வைத்துத்
தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று எண்ண
இடமிருக்கிறது.

அது, சிலரின் சொந்தப் பகையாக இருக்கலாம்.

மற்றபடி, இக்கதைக்கு ஆதரவும், எதிர்ப்பும்,
ஆதரிப்பது போன்ற எதிர்ப்பும் இணையத்தில்
உலாவியதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள்
யாரும் சட்டென களத்திற்கு வராதது
"சாதி வாக்கு வங்கிக்காக மட்டுமே". திரைப்படங்களில்
எல்லாம் முடிந்ததும் காவற்துறை வருவது போல
மு.க.சாலின் வந்தார். சரி அவராவது
வந்தாரே என்று எடுத்துக் கொள்வது தகும்.

எதிர்க்கிறேன் பேர்வழி, என்று எத்தனையோ
பேர் எழுதினார்கள். அவர்கள் கதையை ஆழ்ந்து
படித்தால் அதில் சாதி, மத இகழ்வுகளுக்கு
இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால்,
என்னை வியப்படைய வைத்ததெல்லாம்,
சில தமிழ்ப்பற்றாளர்களின் "ஆரிய திராவிட" எதிர்ப்புதான்.
"இது ஆரியக் கொள்கை, அதோடு இது திராவிடர்களின்
சதி - ஆபாசம் " என்று போட்டார்களே போடு;
அவர்களெல்லாம் இந்த நூலை வருணிக்கு முன்
கொஞ்சம் மாந்தவியலையும் படிக்கவேணும்
என்றுதான் சொல்லுவேன்.

ஆரியத்தையும் திராவிடத்தையும் கிடுக்க
ஆயிரம் இருக்கையில் இதெல்லாம்
ஆரியக் கொள்கை அது இது என்றால்
இவர்களின் ஆரிய திராவிட அறிவை
நகைக்க மட்டுமே முடியும்.

தற்காலப் புதினங்கள் என்றாலே எனக்கு  அலுப்பும்
சலிப்பும் இயல்பாகவே அமைந்துவிட்டதால் நான்
இழப்பது சில இருக்கலாம்.  அதற்கு நான் வருந்தியதில்லை.
ஆனால், எப்பவாவது இதுமாதிரி படிக்கும் போதெல்லாம்
வழக்கு மொழியென்ற பெயரில், எழுத்துப் பிழை,
ஒற்றுப்பிழையோடு கெட்டவார்த்தைகளை அப்படி
அப்படியே எழுதியிருப்பதைப் பார்க்கும் போது
அருவெறுப்பே மிகுகிறது. புதினம் என்றால்,
தற்கால இலக்கியப் பதிவு என்றால்,
கீழ்த்தரமான உரையாடல்களையும், ஏசல்களையும்,
கேலிகளையும் அப்படியே
அதே சொற்களால்தான் எழுதவேண்டுமா?
ஆண் எழுத்தாளரும் பெண் எழுத்தாளரும்
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு
கெட்டவார்த்தைக் களஞ்சியத்தை
எதிர்காலத்திற்குத் தேக்கி வைக்கிறார்கள் போல.

இடக்கரடக்கல் என்பதைக்
கொஞ்சம் கூடவா பின்பற்றக்கூடாது?

எனக்குப் பிடிக்காத இந்த "இழக்கிய" எழுத்து முறையை,
பெருமாள் முருகன் கவுண்டரும் வைத்துள்ளார்.
அதனால் அதற்கு மட்டும் கவுண்டருக்கு எனது கண்டனங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, December 30, 2008

புலம்பெயர்வு இலக்கியங்களில் சிங்கையில் தோன்றிய காப்பியம் 'சங்கமம்'.

சொல் நேர்மை, பொருள் நேர்மை,
மொழி நேர்மை, குமுக நேர்மை,
என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
இழிவான படைப்புகளை எழுதித் தள்ளும்
எழுத்தாளர்களே அதிகமாக இருக்கின்ற
தமிழ்ச் சூழலிலே, பிறமொழி முக்கால்
தமிழ் மொழி கால் என்ற அளவிலே
அருவெறுக்கத்தக்க நடையில் வெளிவரும்
படைப்புகளுக்கு இடையே,
சிறந்த பாக்களால் சிங்கைக் கவிஞர்
பாத்தென்றல் முருகடியான்
(pathenralmurugadiyan.blogspot.com)
அவர்களால் யாக்கப்பட்ட
செந்தமிழ்க் காப்பியமான சங்கமத்தைப்
படித்த போது எல்லையில்லா
மகிழ்ச்சி அடைந்தேன்.

புலம்பெயர் தமிழரின் இலக்கியங்களில்
ஒரு சிறந்த காப்பியம் உருவாகியிருப்பது
தமிழ்க் குமுகத்திற்கு
நம்பிக்கையையும் உணர்வையும்
அளிப்பதாக இருக்கிறது.

தமிழ்க்குடியின் புலம்பெயர் வாழ்வு
பல்வகையது; அதிலே சிங்கப்பூருக்குப்
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகளின்
அமைவை, ஒரு எளிய தமிழனின்
இன்னல் மிகுந்த
வாழ்வை கருவாகக் கொண்டு
காப்பியமாக யாத்திருக்கிறார் பாத்தென்றல்.

சிங்கப்பூரில் தமிழர் வாழ்வியலை அறிய வேண்டுமா?
"இந்தாப்பிடி சங்கமம் என்ற இந்த நூலை" என்று
தமிழ் படிக்கத் தெரிந்த எந்தத் தமிழரிடமும் எடுத்துக்
கொடுத்து விடலாம். வரலாறு, அரசியல், வாழ்வியல்
என்று கோர்க்கப் பட்ட இந்த நூல் சிங்கைத் தமிழர்
வளர்த்த தமிழுக்கு மணிமகுடம்.

மாபெரும் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம்
எங்கு தொடங்கியதோ அங்கேயே சங்கமமும் தொடங்கி,
மதுரைப் பக்கம் போகாமல் மலாயா சிங்கப்பூர் பக்கம்
வந்துவிடுகிறது. ஆம் - புகாரில் தொடங்கி, சிங்கையை
நடுவமாக வைத்து மலாயாவையும் அணைத்து எழுதப்
பட்டிருக்கிறது.

செல்வமும் கல்வியும் சிறிதாகவேக் கொண்டு ஆனால்
உணர்வுகளிலும் பழைமைகளிலும் ஊறிய பெற்றோரையும்
உற்றாரையும் கொண்ட எளியனின் பிழைப்பு தேடிப் புலம்
பெயர்ந்த வாழ்வில் களிப்பும் துயரும் மாறி மாறி வந்து
இறுதியில் படிப்பவரை ஆழ்ந்த சிந்தனைக்கும் புரிதலுக்கும்
தள்ளிவிடுவது இக்காப்பியத்தின் வெற்றி!

எளிய மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய காப்பியம்
என்பதால் பல முறை காப்பிய ஆசிரியரைப்
பாராட்டத் தோன்றுகிறது. எளியரைப் பாடும்
இந்நூலால் பெருவாரியான
மக்களின் வாழ்வியலை எளிதாகப் புரிய வைக்க முடிகிறது.
புலம் பெயர்ந்த குமுகத்தின் போக்கைப் பெரிதும்
புரிந்து கொள்ள முடிகிறது.

சிறந்த தமிழ் தேனருவியாக காப்பியம் முழுமையும்
பல்வேறு பாக்களாக பல்வேறு பாவகைகளாக சீராக
ஓடி இன்பம் சேர்க்கிறது. கவிஞரின் ஆழ்ந்த நெடுங்கால
பாப்புலமையை எண்ணி வியக்க வைக்கிறது ஒவ்வொரு
பாட்டும்.

சிங்கை வரலாறு, புகார் சிறப்பு, மலாயாக் குறிப்புகள்,
சிங்கை அரசியல், தமிழ் நாட்டின் குமுக மாற்றங்கள்,
சிங்கையில் தமிழர்கள் குமுகமாக ஆகித் தமிழ்
வளர்த்தது, தமிழ் விழாக்கள் செய்தது,
சிங்கைத் தமிழரின் ஒற்றுமை வேற்றுமைகள்,
பிற இன மக்களோடு ஒப்புவித்து
தம் மக்கள் பெற வேண்டிய திறன்கள்,
சீன மலாய் மக்களின்
பழக்க வழக்கங்கள், சிங்கை வளர்ச்சியில்
தமிழர்களின் பங்களிப்பு, அளித்த பங்கிற்கேற்ப அளித்த
தமிழர்கள் பெற்றதன் அளவீடு, சிங்கையில்
தமிழ் வளர்த்த பெரியார்களின் அரும்பணிகள்,
சிங்கையைக் கட்டி வளர்த்த பெரியார்கள்,
அவர்தம் சீரிய தொண்டு,
சிங்கையின் சமய நல்லிணக்கமும்,
சட்ட/காவற் சிறப்பு, தமிழ் மொழியின்
ஏற்றமும் தாழ்வும், தத்துவம், ஆன்மீகம்,
தமிழ்ச் சமய நெறிகள், என்ற இவற்றோடு
தமிழனாய்ப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்த
ஒரு தமிழனின் தனிமனித வாழ்க்கையையும் அவன்
தமிழ்க் குமுகத்தோடு ஆற்றிய பணிகளையும், அடைந்த
சரவல்களையும் வாழ்க்கையாக கதையாகக் குழைத்துக்
கொடுத்துள்ள பாங்கு மிகப் பாராட்டத் தக்கது.

தமிழவேள் கோ.சாரங்கபாணியார் தமிழ் மக்களை
அரவணைத்து ஆற்றிய தமிழ்த் தொண்டோடு
அவர் ஆற்றிய பாங்கு, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்
ஊன்றிக் கற்க வேண்டிய ஒன்று.
அதற்கு இந்நூல் பெரும்
உதவியாக இருக்கும். அது தமிழ்ச் சங்கங்கள்
என்ற பெயரில் தமிழ்ப்பணிகள் செய்ய முனையும்
புலம் பெயர்ந்து வாழ்வோர்க்கு கூடுதல்
கல்வியாக இருக்கும்.

காப்பியத்தின் பகுதி-4 பகுதி-5 (இயற்கும்மி, ஒயிற்கும்மி)
சிங்கையில் தமிழையும் குமுகத்தையும்
வளர்த்த பாங்கினை அழகுறச் சொல்கிறது.
பிற பகுதிகளும் இயம்புகின்றன.
பாக்களின் சந்தங்கள் மதி மயக்க வைக்கின்றன.

"அள்ளிக் கொடுத்தனர் பள்ளிக்கென மக்கள்,
ஆர்வம் மிகுந்தது கல்விக்கென
அமுதத் தமிழ் அறிவைப் பெற
குமுகக் குரல் குரவையிடத்
துள்ளிக் குதித்தனர் தொல்தமிழால்"

தமிழரைப் பிடித்த பெருஞ்சழக்கான
சாதீயமும் புலம் பெயர்ந்த சான்றுகளும் நூலில்
மிகச்சரியாகப் பதிந்திருக்கிறது. கீழே ஒரு சான்று:

"பாழை விளைத்திட்ட சாதியைப் பாய்மரக் கப்பலேற்றிக்
கீழை திசைக்கெலாம் கொண்டுவந்தாரந்தக் கீழ்மையாலே
வாழை மரத்துக்குத் தாரீன்ற காய்களே கூற்றமாப் போல்
மோழை மனங்களும் ஏழை நிறங்களும் மூண்டதிங்கே!
"
(பகுதி-9)

சுவையான காதல் பாட்டுகள், வாழ்க்கை பாட்டுகளுக்கிடையே
தமிழுக்கு ஏற்பட்ட சோதனைகளை அடுக்கடுக்காய்
செருகிய பாங்கு கவிஞரின் ஆழ்ந்த புலமைக்கு
எடுத்துக் காட்டு மட்டுமல்ல, கல்வி கற்ற நேர்மையான
தமிழருக்கு இருக்கும் நேர்மையான எதிர்காலக் கவலையும்
அக்கறையும் ஆம்.

"தென் புலத்தாரைப் பெண்கள்
திருடராய்க் குரங்காய்த் தீய
வன்புலனரக்கர் போன்ற..."

"மறைகளை ஆற்றில் போட்டோம்
மண்டிய சாதித் தீயின்
குறைகளைக் களைய மாட்டோம்
*குலத்தையே குலத்தார் வெட்டும்*
பறைகளைத் தட்டிக் கொட்டிப்
பார்ப்பனர் வேதங் கேட்டோம்
உறைகளில் வைத்த வாள் போல்
உறங்கினோம் தமிழா மீட்டோம்?"

ஆழ்ந்த குமுக அக்கறையில் காப்பியத்தின்
வரிகளில் பாத்தென்றல் புயலை எழுப்புகிறார்.

"சீனரின் கோவில் சென்றால்
சீனமே வழிபாட்டோசை
ஆனதோ அரபி மண்ணில்
அதுகேட்கும் பள்ளிவாசல்
ஊனமுற்றழிந்த பாடைக்கு
உயிர்தர உழைக்குஞ் சூதர்
ஆணையில் அடங்கும் நம்மை
அடிமையாய் நினைக்கின்றாரே!.."

பகுதி-17ல் கவிஞர் புயலாகச் சுழல்கிறார். தெறிக்கிறது
அவரின் வேதனைகள்.

தமிழ்நாட்டிலே கோயில்களில் தமிழ் இல்லை;
அதற்குக் காரணமாக திராவிட தமிழ் இயக்கங்கள்
எத்தனைக் காரணங்கள் சொன்னாலும், அத்தனைக்
காரணங்களையும் தமிழ் மக்கள்
புலம் பெயர்ந்து போகையிலும் கட்டித் தூக்கிப்
போகவேண்டியதில்லையே? என்ற வினாவை இவர்தம்
கவிதை எழுப்புகிறது.

ஆம் - சிங்கையிலே 1824ல் சுமார் 500, 600 தமிழர்களே
இருந்துள்ளனர் நூலின் படி. 1860ல் சுமார் 10000 தமிழர்களே
இருந்துள்ளனர்.

இவர்கள்தான் பெருகி இன்றைக்கு
சில இலக்கங்கள் அளவில் இருக்கிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் சமைத்த
இவர்கள் ஏன் சாதிக்குள் அமிழ வேண்டும்?

இவர்கள் வேர்வை சிந்தி உழைத்து ஏன்
நஞ்சான சமற்கிருதத்தைக் கோயிலுக்குள்
கூட்டிப் போக வேண்டும்?

ஒரு புதுக் குமுகத்தைக் கட்டி எழுப்பிய தமிழர்களின்
உழைப்போடும் வேர்வையோடும் முக்கியமான மடமையும்
சேர்ந்து கொண்டதைக் காப்பியம் பண்புடன் விளக்குகிறது.
இதற்கு முற்றும் தமிழ் மக்களே காரணம் என்று தெள்ளென
விளங்க வைக்கிறது.

இப்படிக் கட்டப்படும் புதுத் தமிழ்க் குமுகங்கள் எப்படி
எதிர்காலத்தில் சரவல் படும் என்பதனையும் சிங்கையில்
தமிழர் வரலாறு கூறுகிறது.

தமிழர் விழாக்களுக்கான விடுமுறைகள் என்றால்
அது தீபாவளிக்கு ஒருநாளும் விசாக நாள் என்ற நாளுக்கும்
ஆகிப் போனதை காப்பியம் காட்டுகிறது. விசாக நாள்
என்றால் தமிழர் விழாவா என்பதனை தமிழர்கள்தான்
சிந்தித்து விடை காண வேண்டும்!

"பாதகந் தமிழுக்கென்றால் பல்லிளித்து இருந்திடாதே!
நீ தவம் செய்க நாளை நிமிர்ந்தெழும் தமிழர் வாழ்வே!"

என்ற இவ்வரிகளும் இன்ன பிற வரிகளிலும் பாவேந்தரே
நிமிர்ந்து நிற்கிறார்!

"உலவுந்தன் மதத்தை மட்டும் உயிராக நினைப்பாருண்டு
கலகத்தார் இவரே தங்கள் கட்சிக்கே மேன்மை செய்வார்"
என்ற இவ்வடிகள்,

"அவரவர் தத்தம் மதங்களே அமைவதாக
அரற்றி மலைந்தனர்..." என்று
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
அடிகளை ஒட்டி வருகின்றன.

காப்பியத்தில் காதலைப் பாடும்போதும்,
கவலையைப் பாடும் போதும், துயரைப் பாடும் போதும்,
ஏற்றத்தைப் பாடும் போதும்,
தெருவீதியைப் பாடும் போதும் எங்கும் பாத்தென்றலொடு
தமிழர் கவலையும் அவர்தம் மொழிக் கவலையும்
சூறாவளியாய் சுழன்று கொண்டே இருக்கின்றன.

தமிழ் மொழிபால் தூய அக்கறை கொண்ட
தூய தமிழ்ச் சிந்தை பாத்தென்றலுடையது.

"தெருப்பக்கம் குரைக்கின்ற நாயாகப் பேயாக
திரிகிறோம் எச்சில் உண்டு!
தென்னாட்டுச் சிவன் தந்த தென்மொழி வழிபாடு
திருக்கோவில் வாழவிலையே!"

"தேய்பிறையாக்குவார் தேன்மொழியை - மொழித்
திருடர்கள் மாற்றிடார் தம் வழியை"

"சாதிக் கலப்பை வெறுப்பவர்கள் - மொழி
பாதிக்குப் பாதிக் கலப்பவர்கள்..."

தென்றலா கவிஞர்? என என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

மறைமலையாரும் நீலாம்பிகை அம்மையாரும்
தேவநேயரும் சித்திரனாரும் பாவேந்தரும் பாரதியாரும்
அண்ணாவும் திரு.வி.கவும், பிற பெரியார்களும்
நீங்காமல் நிறைந்திருக்கிறார்கள் இந்நூலில்.
நாயன்மார்களும் அறவோர்களும் தமிழ்நெறியும்
சிறப்பிடம் பெருகிறது நூலில்.

"அருட்கவி அருணகிரியார்
அருந்தமிழ்க் குமர குருபரர்
மருட்புவி மயக்கந் தீர்த்த
மாமுனி தாயுமானார்...."

பகுதி-40ல் கற்றுணை பூட்டிய பெருமான்
கடலில் மிதந்ததை ஏத்தி செய்திருக்கும் வாதம் அருமை.

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார்
ஒரு சமணர் என்று விளம்பரம் செய்வோரை
கண்டிக்கிறார் சங்கமக் காப்பிய
ஆசிரியர். இதற்காகவே அவரைப் பல முறை
பாராட்ட வேண்டும்.

"சிலப்பதி காரத் துக்குள்
சென்றவர் பலபேர்! அந்த
அளப்பரும் அமுதம் உண்ட
அறிஞரோ சில பேர்! இன்னும்
களப்பிரர் பின்னே செல்லும்
கயமைகள் கண்கள் மூடிக்
குழப்புவார் அதையே நம்பிக்
குலக்குணம் விட்டார் கோடி!"

காப்பியமெங்கும் தமிழர்களிலே இருக்கும்
சிறுமதியாளர் வளைந்து நெளிந்து நத்திப் பிழைத்து,
எப்படித் தமிழுக்கும் இனத்திற்கும்
தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதனை ஆங்காங்கு
பல காட்டுகளோடு விவரிக்கிறார்.
எல்லா தமிழ் நிலங்களுக்கும் இது மிகப் பொருந்தும்.

"நல்ல தமிழில் பெயரிருந்தாலும்
கொல்ல நினைப்பது உன் குலத்தானே"

"அன்று வந்தவர் அருந்தமிழ் காத்தனர்
இன்று வந்து அவர் இனம் மொழி கொல்கின்றனர்"

"சீனர்களின் கடை முகப்பில் செழுந்தமிழும் எழுதுகிறார்
மானமில்லாத் தமிழர் பலர் மருந்தளவும் தமிழ் எழுதார்"

காப்பிய நாயகனான செந்தில் என்ற தமிழுணர்வு குன்றாத
ஒரு எளிய தமிழனின் வாழ்வு இன்னல் மேல் இன்னலுறும்;
வளர்ச்சியும் தளர்ச்சியும் காணும்; அவன் சிங்கை வருவது
முதல் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் காட்டிக் காட்டிக்
கடைசியில் கண்ணையும் மூடிவைக்கும் காப்பியத்தில் தொட்ட
இடமெல்லாம் தென்றலும் புயலுமாய் தமிழ் நடம் புரிகிறது.

மொழிப்பற்று உடையவருக்குத்தான் சிறந்த நாட்டுப்பற்று
இருக்கும். தமிழ் மொழிப் பற்றோடு சிங்கப்பூர் என்ற தனது
தாய்நாட்டின் மீதும், தாய்த்தமிழ் நாட்டின் மீதும் கவிஞர்
பேரன்பு பொழிந்து உறவுகள், காதல், மணம், படிப்பு,
வேலை, மகிழ்ச்சி, துயர், தொண்டு, அறம்,
தத்துவம், இறை, தமிழ், அரசு, நாடு, இனம்,
சட்டம் என்ற பலவற்றையும் பாடி, கீழ்பட்டிருக்கும்
உலக வாழ் தமிழ்க் குமுகத்தை நோக்கி அடிப்படை
வினாக்களை வைத்துக் குமுறுகிறார் இறுதியில்.

"சீரிலங்கை நாட்டில் எங்கள்
செந்தமிழர் கொல்லப் பட்டால்
ஓரிரங்கல் உரை ஏன் இல்லை?...."

"ஒரு பத்துக் கோடி மக்கள்
உலகத்தில் இருந்தும் கூட
ஒரு பற்றும் இல்லார் போன்றும்
உணர்வற்றும் எழுச்சியற்றும்
மறுவுற்ற மந்தையாக மாய்வதுமேன்...?"

தமிழறியாரும், தரங்கெட்ட தமிழரும் குமுகத்தின்
முன்னணியில் இருந்தால் அந்தக் குமுகத்தின்
மொழியுணர்வும், இனவுணர்வும் நீர்த்துப் போகும்;
அதுவே தமிழ்க்குடிகளுக்கு உலகெங்கும் நடந்து
வருகிறது. காப்பிய நாயகனோடு கவலையோடும்
இந்தக் கவலையோடும் காப்பியம் நிறைவுறுகிறது.

ஒவ்வொரு தமிழரும் இந்த உயர்ந்த படைப்பினைப்
படிக்க வேண்டும்; தமிழ் உணர்வூட்டும் இந்நூலை
பலருக்கும் அளிக்கவும் வேண்டும். புலம் பெயர்ந்த
மக்களின் நூலகங்கள் இதனை ஏற்றி வைக்க வேண்டும்.

பொத்தகத்தில் காணும் நூல் கிடைக்குமிடங்கள்:
தென்றல் பதிப்பகம், சிங்கப்பூர். தொ.பேசி 68996319
தமிழ்நிலம், சென்னை. தொ.பேசி 94444 40449
திரு.அருகோ, சென்னை. தொ.பேசி 2472 1009

அன்புடன்
நாக.இளங்கோவன்