Pages

Sunday, May 25, 2014

திருவாசகம் - கோகழி பற்றிய உரையாடல்

இது தமிழ்மன்றம் மடற்குழுவில், திரு.நூ.த.லோகசுந்தரம் அவர்கள் "கோகழி" என்பது கருநாடகத்தின் ஊர் என்று கருத்துச் சொன்னபோது எழுந்த உரையாடல். இதேப் போல வேறு சிலரும் சொல்கிறார்கள் என்பதாலும், இந்த உரையாட்டு மேலும் தொடரும் என்பதாலும், இங்கே இதைப் பதிவு செய்து வைக்கிறேன்,
====================================================================
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,
வணக்கம்.
தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.

1)    “கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )
 2)    தாங்கள் மேற்காட்டிய http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search
இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன்.
3)     ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது?திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!
ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத   ஊரை  சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றதுஎன்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

4)   முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.
(பார்க்க :- http://valavu.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D   )
 பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும். 

திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.] 

கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.


5)    திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும் திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.
திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.
            கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),
            கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)
            கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)
            கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை) 
            கோகழிக்கரசை (பண்டாய நான்மறை) 
இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின் திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின் திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன.  இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.
ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.  
6)    தங்களின் கூற்று:
குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ  புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில் 
குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”

எனது கருத்து:
 எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?

ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும்  இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

7)    தங்கள் கூற்று:
"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை  " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “

எனது கருத்து:
இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”

இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)
 “சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும்.  (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)
குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.
பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே. 
குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.

8)    தங்கள் கூற்று:
"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர் 
எனது கருத்து:
தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:

61....புவனியிற்  சேவடி  தீண்டினன்  காண்க             
62....சிவனென  யானுந்  தேறினன்  காண்க             
63....அவனெனை  ஆட்கொண்  டருளினன்  காண்க             
64....குவளைக்  கண்ணி  கூறன்  காண்க             
65....அவளுந்  தானும்  உடனே  காண்க             
66....பரமா  னந்தப்  பழங்கட  லதுவே             
67....கருமா  முகிலின்  தோன்றித்               
68....திருவார்  பெருந்துறை  வரையி  லேறித்              
69....திருத்தகு  மின்னொளி  திசைதிசை  விரிய             
70....ஐம்புலப்  பந்தனை  வாளர  விரிய             
71....வெந்துயர்க்  கோடை  மாத்தலை  கரப்ப             
72....நீடெழில்  தோன்றி  வாலொளி  மிளிர       

இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள்.  இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.
மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.
இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார்.  “கருமா முகிலின் தோன்றி  - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.
 வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,
நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.
ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.

9)    தங்கள் கூற்று:
மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி
     எனது கருத்து:

            மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?


ஐயா, அடியேனுக்குத் தோன்றிய மேற்கண்ட விளக்கங்களை அளித்துள்ளேன். ஓர்ந்து பார்க்க.
திருவாசகத்தை ஆய்பவர்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று, உள்ளார்ந்து உண்மையைத் தேடுநர். இரண்டு - உங்களுக்கே தெரியும்.
இரண்டாவது வகையரின் குழப்படிகள் சிக்கல்களிலேயே போய்முடியும். முதல் வகையரின் தேடல் மெல்லச் சென்றாலும் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும். தாங்கள் அறியாததல்ல. தங்களின் அன்பான மடலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மடல்-2:

அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

1)   கல்வெட்டைப் பார்த்ததில்லை.
     அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
     அதன் ஆங்கிலக் குறிபெயர்ப்பையும் பார்த்ததில்லை.
     எனது ழகர வினாவுக்கும் விடை இல்லை.

    ஆனால் அந்த ஊர்தான் கோகழி என்று தீர்ப்பை மட்டும் எழுதிவிடுகிறீர்கள். 

    இது எந்த விதத்தில் ஏற்கத் தக்கது? நான் ஏற்கமாட்டேன்.
    

2)  தங்கள் கூற்று: 
   //எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள் 
வாய் வழி ழங்கும் மொழி //

    எனது மறுமொழி:
    இது என் வினாக்களுக்குத் தொடர்பில்லாத செய்தி.

  
3) தங்கள் கூற்று:
 // கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது 
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும்  ழகரம் உண்டு
//

எனது மறுமொழி:
கன்னடத்தில் ஒரு காலம் வரை ழகர, றகரங்கள் இருந்து பின்னர் மறைந்தன. தெலுங்கில் நானறிந்தவரை ழகரம் இல்லை.
கடம்ப எழுத்துகள், அல்லே-கன்னடம், தற்காலக் கன்னடம், அல்லே-கன்னடத்தில் இராட்டிர கூடர்களின் தாக்கங்கள்,
பழங்கன்னடமான அல்லே-கன்னடம் ஏன் கன்னட-தெலுங்கு வரிவடிவமாகச் சொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஆயாமல்
வெறுமே கோகலி/ளி யை அங்கே சுட்டிக் கொண்டிருப்பதில் எந்த ஆய்வும் இருக்கமுடியாது.
4) தங்கள் கூற்று:

// கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார் //

  எனது மறுமொழி:

ஐயா, இங்கே இரண்டு செய்திகளை நான் கூறவேண்டும்.
ஒன்று - பெல்லாரிக் கோகலியைத் தாங்கள் மறுக்கவொண்ணாத ஆதாரங்களுடன் நிறுவினாற்றான் இவ் அடி பற்றி மேலும் பேச முடியும்.
அதுவரை இதைப் பேசிப்பயனில்லை.
இரண்டு - கோகலி நாட்டை ஆட்சி செய்த ஒருவரைக் குருவாகக் கொண்டவரை மாணிக்கவாசகர் குறிக்கிறார்
என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு ஐயா.
மாணிக்கவாசகரின் குரு, ஆட்சி செய்த மனிதனல்ல.
"அரு பரத்தொருவன் அவனியில் வந்து
 குரு பரனாகி அருளிய பெருமை...."   
என்று போற்றித் திருவகவலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவதைக் காண்க.
"நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன்!
 தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவபெருமான்
 தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்...."
 என்று வேசறவில் அறிவிப்பதைக் காணக.
  "அன்பராகி மற்று அருந்தவம் முயல்வார்,
  அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகாம்,
  என்பராய் நினைவார்,
     எனைப் பலர் நிற்க, "இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்?"  "
  என்று உருகி உருகி இந்தக் கேள்வியைக் கேட்பார் செத்திலாப்பத்தில். இன்னும் இது போலப் பல இடங்கள் உண்டு.
குரு, சீட உறவையும், தன்மையையும் ஆழச் சொல்லித்தருவது திருவாசகமும் தேவாரமும்.
என்னால் இப்படியான நேரடி அறிவிப்புகள் அல்லாத பல நுண்மையான குரு-சீடர் பண்புகளையும்
திருமுறைகளில் எடுத்துக் காட்ட முடியும்.
ஆகவே, மாணிக்கவாசகரைப் பற்றியும் அவரின் குரு பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல்
திருவாசக ஆய்வுகளில் புகுவார்க்கு எண்ணியது கிடைக்காது என்பதை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும்.
அருள்கூர்ந்து இப்பொருளையேனும் தாங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
5) தங்கள் கூற்று:

//

தூரம் பார்க்கவேண்டாம் என்றால் உலகம் முழும் பார்க்க எனக் கொள்வது ஏற்புடையதல்ல 
madras என்று அமெரிக்காவில் 6 இடங்கள் உள்ளன அவற்றை நாம் எப்போதாவது நாம் பேசும் madras  கொள்வோமா ? 

மேலும் அவையெல்லாம் பழங்கால( எட்டாம் நூற்றாண்டு)  ஊர்கள்  என சொல்ல நினைகின்றீர் களா?
//

எனது மறுமொழி:
 ஏன் என்பதுதான் எனது கேள்வி. மதிரையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கோகலிக்கு எந்த ஓர் ஏரணமும்
இன்றிச் செல்கையில், இன்னும் கொஞ்ச தூரம் போய் மாராட்டியத்தில் ஆயலாமே?

மாராட்டியத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. கருநாடகத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. மாராட்டியத்தில் இருந்து
வந்த இராட்டிரகூடர்கள்தான் கருநாடக-பெல்லாரியை ஆண்டார்கள் என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரச் சுட்டிகளே
சொல்கின்றன?
நான் ஏன் "இந்த இரண்டு கோகலிக்கும் தொடர்புண்டு என்று கருதக் கூடாது?" - அப்படியென்றால், கருநாடகக் கோகலியை 
பரிந்துரைப்பவர்கள் இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை என்று சொல்ல வேண்டுமல்லவா? அதுபோல மற்ற கோகலிகளுக்கும்
தொடர்பில்லை என்றும் அவற்றின் காலக்கட்டம் என்ன என்றும் அவர்கள்தான் சொல்லி நிறுவவேண்டுமே அன்று அடியேனின்
வேலை இல்லை. வெறும் ஒன்னரைப் பக்கத்தில், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று யாரும் ஆராய்ச்சி செய்து
சொல்லி விடவில்லை. அதனால் இந்தக் கருத்தைப் பரப்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டியது இது.
6) தங்கள் கருத்து:

//

மன்ன னின்  அமைச்சர் குதிரை வாங்க அனுப்ப ப பட்டார் பின்வரும் கோயில் கட்டினார் குதிரை நரியகியது 
 என்பதெல்லாம் கற்பனையில் விளைந்த புராணக்கதை அய்யா எங்காவது அவர் அமைச்சர் என திரு  வாசகத்தில் உள்சான்று உள்ளதா? 
நரி பரியாகியது  அப்பர் கூட ப்பா டுகிர்ரர் ஏனோ அவரை இனத்து புராணம் ஏதும் பாடப்படவில்லை 
வி வேக முள்ள ஆய்வாளர்   வெறும் கட்டுக்கதைகலான  புராணங்களில் நம் புவதில்லை
//
 எனது மறுமொழி:
  புராணம் என்றால் என்ன?
  புராண, நய/நயா என்பர் வடக்கே. உருதிலும், இந்தியிலும் இந்தச் சொல்லாட்சியை நிறைய கேட்டிருக்கிறேன்.
  புராண என்றால் பழையது. நயா என்றால் புதியது.
  புராணக்கதை என்றால் பழங்கதை. புராணம் என்றால் பழமை. இவ்வளவுதானே!
  மாணிக்கவாசகரே "புராண காரண!" என்பார்.
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால் - பழமை எல்லாமே கட்டுக்கதைகள் என்று கருதுகிறீர்களா?
  பழையன எலலாம் கட்டுக்கதை என்றால், வரலாறு, தொன்மம் என்ற ஒன்றையுமே ஆராய்ச்சி செய்யத் தேவையில்லையே?
  கோகழி எங்கிருக்கிறது என்று கூட நோக்க வேண்டியதில்லையே?
  பழைமை எல்லாம் கட்டுக்கதை என்றால் விவேக-ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் "புதுமைகள்" மட்டும் கட்டாத கதைகளா?
  என்ன ஐயா - ஞாயமே இல்லாமற் சொன்னால் எப்படி :-)
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால், இராமாயணம், மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகளா?
  ஏன் சிலப்பதிகாரத்தில் எத்தனையோ புராணக் கதைகள் உண்டு. அவற்றையெல்லாம் விட்டெறிந்து விடலாமா?
  மன்னிக்க - தங்களின் இந்த வாதம் ஏற்புடையது அல்ல.
  சிலப்பதிகாரத்தில் "வியன்நிலம்  ஆண்ட  ஒருதனிச்  செங்கோல்  ஒருமகன்  ஆணையின்..." 
  என்று இளங்கோவடிகள் சொல்வார். வியன்நிலம் என்பதற்கு ஒலிப்பின் அடிப்படையில்,
  வியன்னா என்றும் வரும்.

  வியன்னாவை ஆண்ட சிறந்த அரசன் ஒருவனை இளங்கோவடிகள் இங்கே குறிப்பிடுகிறார் என்று சொன்னால்
  எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கருநாடக-கோகலி ஆய்வு.
7)   தங்கள் கூற்று:
//

இங்கும் பெருந்துறை மையமாகக் கொண்ட புரானக்கதையிளிருந்து தானே பேசுகிறீர் 
நா ன்  முன்பு ஓர் மடலில் காட்டிய வரி இப்போது நினைவிற்கு வருகின்றது 
பாண்டியன் தனக்கு பரிமா விற்று 
ஈண்டுகனகம்  இசையப்பெராது 39கீ ர்த்தித் திருவகவல் 
பாண்டியனுக்கு  பரிமா விற்றார் வாங்கப்போகவில்லை 
//
    எனது மறுமொழி:
 இங்கே திருவாசகம் பற்றிய மிகத்தவறான புரிதலை தங்கள் எழுத்துகள் காட்டுகின்றன.
 மன்னன் ஆணையால் குதிரை வாங்கப் பெருந்துறை சென்றவர் மாணிக்கவாசகர். 
 மாணிக்கவாசகர் குதிரைகளை வாங்காமல் பணத்தையெல்லாம் கோயில் கட்டவும், சிவமயக்கத்திலும்
 கழித்துவிட, மதிரைக்கு அழைக்கப்பட்டு அரசனால் தண்டனைக்குள்ளாகிறார். அப்போது,
 மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டு, குதிரை வாணிகன் வேடமணிந்து, சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி
 அந்தப் பரிகளை மன்னனிடம் கொண்டுசென்று அணிவகுத்து நிற்க வைக்கிறார்.
 ஆகவே,
 பாண்டியனுக்காக பரிமா வாங்கப்போனவர் மாணிக்கவாசகர். அவர் வாங்கவில்லையதனால்
 பாண்டியனிடம் பரிமா விற்றவர் சிவபெருமான்.
 இதுதான் திருவாசகம் முழுதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 மேலும், "ஈண்டு கனகம் இசையப் பெறாது" என்றது, 
சாத்தாய் வந்த சிவனிடம் குதிரைகளைப் பெற்றுக் கொண்ட பாண்டியன்,
குதிரைகளுக்கான பணத்தைச் சிவனிடம் கொடுக்க (சிலர் அதிகப்படியான குதிரைகளுக்கு என்று சொல்வர்)
 சிவன் அதை வாங்க மறுத்து விடுகிறார். இதைத்தான் அவ்வரி சொல்கிறது.
  எப்படி வாங்குவார்?. இவர் நரிகளைத்தானே பரிகளாக்கி நாடகம் நடத்தினார் :-)
  அதுதானே அந்தத் திருவிளையாடல்? மறுநாள் எல்லாப் பரிகளும் நரியாகி ஊளையிட வைக்க இருந்தவர் பணம் வாங்குவாரா?
  அப்புறம் மதிரை மக்களுக்கெல்லாம் அடி வாங்கிக் கொடுத்தத் திருவிளையாடலுக்கும் இதுதானே அடிப்படை! 

  8) தங்கள் கூற்று:

    //   ஏறி எனும் சொல் இருக்கும் போது எப்படி எல்லையாகும்  //
   //   குடநாடு என்றால் குடகு (கர்நாடகம்) அல்ல என்கிறீர்களே மிசை என்பது உயரத்தில் உள்ள இடத்தை அல்லவே குறிக்கும்  //
  எனது மறுமொழி:

   என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஐயா,
   குட என்பதைப் பற்றி நான் விளக்கி விட்டேன். அதற்கு மேல் சொல்ல வேறொன்றுமில்லை.
   கழி, மிசை, வரை, ஏறி போன்ற சொற்கள் தங்களை வாட்டுகின்றன. கழி என்ற சொல்லை சங்க இலக்கியங்களில்
   இருங்கழி, பெருங்கழி, கொடுங்கழி, வாங்குகழி போன்ற எத்தனையோ சொல்லாட்சிகளில் "துறை" என்ற பொருளில் காணலாம்.
   அதை விரித்தல் தேவையில்லை என்றே விடுக்கிறேன்.
   வரை என்பதற்கு "இடம்" என்ற பொருளுமுண்டு. வரை என்றால் மலை என்று கருதவேண்டாம்.
   இன்னுஞ் சொல்லப்போனால் - நீங்கள் சொன்ன பொருள்களில் "மூங்கில்" என்ற பொருளைக் குறித்தீர்கள்.
   இறைவன் பெருந்துறையில் உள்ள ஒரு மூங்கிலில் ஏறி நின்று மின்னொளி காட்டினான் என்று கூடப் பொருள் கொள்ளலாமே!
   வரை என்றால் மலைதான் என்ற நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிச் சிந்தித்தால் நான் சொல்லவருவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
   இங்கே ஏறுதல் என்பது எழுதல், எழுந்தருளுதல் என்பதாகும். பத்தி இலக்கியம், மாந்தக் காதல் இலக்கியம், புற இலக்கியம் போன்ற 
   ஒவ்வொன்றிலும் பொருளின் தன்மைகளில் மாற்றம் உண்டு என்பதை நீங்கள் அறியதாவரல்ல.
   ஒருத்தன் மேல் வேலன் வந்து ஏற, வேலனாட்டம் ஆடினார் என்றால், அந்த ஆள் மேல் முருகன் ஏறியா நிற்கிறான்.
   ஏறி விளையாடு என்ற வழக்கில் பேசுகிறோமே - அங்கெல்லாம் உயரம் வருவதில்லை என்பதையும் காணவேண்டும்.

   "குடநாடதன் மிசை" என்பதை குடகு மலைக்கு மேலே என்று நீங்கள் படிக்கிறீர்கள்.
   அது அல்ல என்பதும் குட என்பதும் திசையைக் குறித்தது என்பதும், மிசை என்பது "அந்த இடத்தில்"
   என்றும் பொருளாகும்  என்பது என் கருத்து. நிலத்தில் நடக்கிறோம். நிலமிசை நடக்கிறோம் என்று சொல்வதன்
   தன்மையே அங்குப் பொருந்தும்.   "சிந்துநதியின்மிசை நிலவினிலே"  என்ற பாரதியாரின் சொற்களையும் காண்க.
   
    
   9)

 //
கொங்கு நட்டு பெருந்துறை குடாநாட்டிலிருந்து வரும் குதிரைகளின் இறக்குமதியாகும் வழியில் உள்ள ஓர் ஊர் எனல்லம் 
//
கோகழி - கருநாடக நாடு, பெருந்துறை-கொங்கு நாடு என்ற நிலையில் இருந்து நீங்கள் மாறமாட்டீர்கள். தமிழ்நாட்டில்
ஆராய்ச்சியாளர்கள் பெருகி, நல்ல ஆராய்ச்சி மன்றங்கள் உருவாகி நமக்கு நல்வழி காட்டுதல் வேண்டும்.

//

கட ல் வழி  வந்த குதிரை என எங்காவது உள்ளதா
கிடைத்தால் உள்நாட்டுக் குதிரைகளை வங்கக் கூடாதா? 
//
ம்ம்ம்ம்... நான் போய், கோச்சடையான் படம் பார்க்கப் போகிறேன். அதில் கூட குதிரைகள் அரேபியா/பெர்சியா பகுதியில் இருந்து
பெருவாரியாகக் கப்பலில் இறக்குமதியானதை ஒத்துக்கிட்டாங்களாம் :-))

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
========================================================================




Friday, May 16, 2014

தேர்தல் 2014: மோடியும் வெற்றி, பெருநிறுவனங்களும் வெற்றி!


பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக, எடுபிடிகளாகச்
செயல்பட்ட காங்கிரசு அரசின் கொள்ளைகள், நிர்வாகக் கேடுகள்,
அவர்களுடன் கூட்டணி வகித்தவர்களின் வெட்கங்கெட்டச் செயல்பாடுகள்
ஆகியவற்றால் மக்கள் வெறுப்புற்றனர் என்பது உண்மைதான்.


இயல்பாகவே, மாற்றத்தைத் தேடுபவர்களின் தாக்கம் இருந்ததும்
உண்மைதான்!

ஆனால், இவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாக உருக்கொடுப்பவர்கள்,
இந்தியாவின் பெருநிறுவன முதலாளிகளும், பன்னாட்டுப் பெருநிறுவனங்களும்தான்.

2004ல் காங்கிரசு சிறுபாண்மை ஆட்சி அமைத்த பின்னர், 2009ல் சற்று வசதியான சிறுபாண்மை ஆட்சி நடத்த உதவியாக இருந்தது, இத்தாலி சோனியாவும் பஞ்சாபு சிங்கம் மண்மோகனும், பெருநிறுவனங்களுக்கும்,
வீழ்ந்து கிடந்த அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரத்துக்கும் பேருதவியாக
இருந்ததுதான். 2009ல் காங்கிரசு ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தல் முடிவுகள் சொன்னபோது, இன்றைக்குப் பங்குச் சந்தைகள் பேரெழுச்சியாக
எழுந்ததைப்போன்றுதான் அன்றும் எழுந்தன.

கடந்த வருடத்தின்  செப்புடெம்பர், அக்குடோபர் மாதங்களே இன்றைய தேர்தல் முடிவுகளை தீர்மானித்தன. பா.ச.கவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்வைக்கப்பட்ட காலம் அது. முதலாளிகளின் முன்னார் நின்ற வேட்பாளர்கள், மோடியும், இராகுலும். இதில் முதலாளிகள் மோடியைத் தேர்ந்தெடுத்தனர்.

அன்று முதல்,  தேர்தல் களத்தில் அயராது வேலை செய்தவர்கள் முதலாளிகளே. நான் சொல்வதில் ஐயம் இருப்பின், நீங்கள் வணிக உலகின் முகமாக இருக்கும் பங்குச் சந்தை நிலவரத்தைக் காணலாம்.

கடந்த செப்புடெம்பர் துவக்கத்தில், பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு, 5100+ அளவில் வீழ்ந்து கிடந்தது.  இந்தியப் பண மதிப்பும் பாதாளத்திற்குச் சென்று 69 உரூவாயை எட்டியது.

இன்று, முதலாளிகளின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அதே நிப்டி குறியீடு 7500+ தொட்டது. டாலருக்கு எதிரான இந்திய பண மதிப்பு
உயர்ந்து 58.5ஆனது.

ஆகவே, காங்கிரசு கூட்டணியின் கொள்ளை, நிருவாகக் கோளாறுகள், விலைவாசி என்ற அனைத்தும் மோடியின் குளத்தில் நீரைச் சுரந்தன
என்றாலும், அதனை அலையாக மாற்றியவர்கள் பெருமுதலாளிகள் ஆவர்.


இந்தக் குளத்தில் இவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீன் பிடிப்பர்.

இயற்கை வளம், கனிம வளம் ஆகியவற்றைக் காப்பாற்ற எண்ணுபவர்களுக்குச் சோதனைகள் அதிகமானால் அது வியப்புக்குரியதல்ல.

அன்புடன்
நாக.இளங்கோவன்







Thursday, May 15, 2014

2019 - சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி முடிவானது!

2014-தேர்தல் நா.ம தேர்தல் முடிவைப் பார்த்ததும்,
"வருகின்ற 2019 ச.ம தேர்தலில், சிங்கங்களுடன் சேர்ந்து
மாம்பழம் புசித்து, முரசு கொட்டுவோம்" என்று தி.மு.க
முடிவு செய்திருக்கிறது.

பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட
தி.மு.கவின் புரட்சிகரத் திட்டம் இது.

தொகுதிவாரியாக, நோட்டாவைவிட மிகக் குறைவாக, சில ஆயிரம்
வாக்குகளே பெற்றிருக்கும் கை கட்சியை, ச.ம தேர்தலில்,
தி.மு.க தனது அல்லக்கையாகக் கூடக் கருதாது என்றும் முடிவெடுத்திருக்கிறது.

 அன்புடன்
நாக.இளங்கோவன்

தேர்தல்-2014: வரவேற்கப்படவேண்டிய தனிப்பெரும்பான்மை

மிகப்பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய நடுவணரசு தனிப்பெரும்பான்மையுடன் அமைகிறது. இது மிகவும்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதும்போது பா.ச.க
சுமார் 280 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. ஒரு வேளை சில
இடங்களால் பெரும்பான்மைக் குறை ஏற்பட்டாலும், அது பெரிய
விதயமாக இருக்காது.

1) கூட்டணி ஆட்சி என்ற போது பரவலான மகிழ்ச்சி இருந்த காலம் உண்டு. அது மாநில மக்களின் தேவைகளை நடுவணரசில் எடுத்து வைக்கும் என்று
வெகு எதார்த்தமாக சிந்தித்த அப்பாவி மக்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் - பெரிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்த மாநிலக் கட்சிகள், தமது மக்களின் உரிமைகளை, நலனை, மானத்தை முன்னெடுத்து வைப்பத்ற்குப் பதிலாக, பெரிய கட்சியின் எடுபிடியாக, அவர்கள் கைகளில் இருந்து சிந்தும்
எச்சிலுக்கு அலைந்த கதையைத்தான் காணமுடிந்தது.

2) இந்தியாவில் பெயர் சொல்லக்கூடிய 30 கட்சிகளேனும் இருக்கின்றன. இவற்றுள் ஒரு கட்சி பெரும்பாண்மை பெறும்போது, மீதி இருக்கும் கட்சிகள், ஆளுங்கட்சியின் தவறுகளை மிகவலுவாக எதிர்க்க முடியும். ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாமல், 15 கட்சிகளோடு கூட்டணி போடும்போது,
நடக்கும் எந்தத் தவறுகளையும், ஊழல்களையும் யாரும் தட்டிக் கேட்க முடியாமல் போனது. அனைத்து கட்சிகளும் கொள்ளையில் கூட்டணி போட்டு, இந்திய வளங்களை தங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்தன.
அப்படிக் கொண்டுபோகும் போது, சில கட்சிகளின் கைகளில் இருந்து நழுவி விழுந்தவை மாநிலங்களுக்குச் செய்த நன்மையாக அக்கட்சிகளால் சொல்லப்பட்டது.

இந்தக் கேவலமான நிலையை பா.ச.கவின் தனிப்பெரும்பான்மை மாற்றியிருக்கிறது.

பா.ச.கவின் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பது வேறு விதயம். ஆனால், அது தவறு செய்யும் வேளைகளில் தட்டிக் கேட்க, நிறைய கட்சிகள் இருக்கின்றன என்பதைத்தான் நான் மிகவும் வரவேற்கிறேன்.

ஆகவே, இதுகாறும் கூட்டணி போதையில், மாயையில் இருந்தவர்கள் மாற்றிச் சிந்திக்கத் துவங்குவார்கள் என்று கருத இடம் இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்