Pages

Tuesday, May 18, 2010

உயர்ந்த தமிழ்ப்பணி: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்குப் பாராட்டுக்கள்!

இணையத்தால் ஆக்கப்பட்ட உயர்ந்த தமிழ்ப்பணிகளில்
ஒன்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தால்
16-மே-10 அன்று செய்யப்பட்டுள்ளது.


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில்
சொல்லப்படுகின்ற சீரழிப்பை மறுத்து சிறப்பான
மாநாடு ஒன்றினை நடத்தி பலநாட்டினரையும்,
செய்தியாளர்களையும் இணைத்து
தமிழகத்தின் கவனத்தையும்
அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்த
புதுச்சேரி வலைப்பதிவர்களுக்கு
மனமார்ந்த பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்ள தமிழ் உலகம்
கடமைப்பட்டுள்ளது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றத்தில்
பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்
நடத்திய எழுத்து மாற்ற மறுப்புக் கருத்தரங்கம்,
மலேசியாவில் திரு.சுபநற்குணன் நடத்திய
எழுத்து மாற்ற மறுப்புக் கருத்தரங்கம்,
தமிழ்மணம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற
எழுத்து மாற்ற மறுப்பு விழிப்புணர்வு
ஆகியவற்றைத் தொடர்ந்து
புதுவையினர் ஆக்கிய இந்த மாநாடு
இணையத் தமிழ் உலகின் வீச்சினை
பல படிகள் உயர்த்திக் காட்டியுள்ளது.

வலைப்பதிவர்கள் பல நூறுகளாய்ப்
பெருகியிருக்கும் இணைய உலகின்
வலைப்பதிவர்கள் அடிக்கடிக் கூட்டுகின்ற
வலைப்பதிவர் சந்திப்பு தமிழ்ப்பணிக்காகவும்
நிறைய நிகழ்ந்து, தமிழ் மொழி சிதையாமல்
காக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

மீண்டும் எனது நெஞ்சார்ந்த
பாராட்டுக்களையும் நன்றிகளையும்
நண்பர் திரு.இராச சுகுமாரனுக்கும்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தைச்
சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் உரித்தாக்குகிறேன்.

அவர்களின் தமிழ்ப்பணி மென்மேலும்
பெருகி உயர அனைவரும் வாழ்த்துவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, May 16, 2010

வஞ்சின விளக்கேற்றிக் காத்திருப்பேன்!

நெஞ்சில்
செஞ்சினம் சுமந்து

வஞ்சின
விளக்கேற்றிக்

காலத்தின் சுழற்சிக்குக்
காத்திருப்பேன்!

கருப்பு நாளல்ல

ஆரியமும் காந்தியமும்
ஆளுக்கொரு கையை
பின்னால் நின்று பிடித்துக் கொள்ள
சீனத்தின் சதிக்கண்கள்
சீரிளைமையில் குறிவைக்க
சிங்களத்தின் கத்தி பல
குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை
திராவிடத்தின்
உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.

காப்பியமாம் மணிமுடியும்
கலைந்து சரியச் சரிய
காலணிந்த சிலம்போடு
சங்கிலிகள் தளையத் தளைய
வளையாத வளையின்று
நெரிய நெரிய
நெற்றிச் சூடுமணி
எற்றி அலைய அலைய
சிந்தாமணிகள்
சிதறச் சிதற
சிந்துகின்ற குடர்க்கீழே
மேகலையோ மறைய மறைய

ஓலமிட்டுக் கதறுகிறாள்
ஓடிவரக் கூவுகிறாள்
நாதியில்லை நானிலத்தில்

பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்
ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்
பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்

சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்
சுட்டுவிழி கொட்டக் கொட்டப்
பெற்றுவிட்ட பிள்ளைகளை
உற்று உற்றுப் பார்க்கின்றாள்.

ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்
சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்
எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்
எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்
வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்
சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு
சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்
பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!

சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்
சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்
கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்
நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்
பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;
பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;
எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி
நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!
மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ
கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த
இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து
இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!
இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!

------

கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்
...நாக.இளங்கோவன்

Saturday, May 15, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு
16-05-2010 ஞாயிறு
காலை 10 முதல் மாலை 6 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................

தொடக்க நிகழ்வு
காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை

தலைமை"
திரு.இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வரவேற்பு:
திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள்,
திரட்டி

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:
முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்
திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்

நூல் வெளியீடு:
தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.
தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்

வெளியிடுபவர் :
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
முதல் படி பெறுபவர்
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம்,
(INFITT).

முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை
முதல் அமர்வு

தலைமை
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி
முன்னிலை:
திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்
திரு ம.இளங்கோ, அவர்கள்
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,

கருத்துரை:
திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,
முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்
தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,
திரு விருபா.குமரேசன் அவர்கள்
விருபா.காம், சென்னை
---------------------------------------------
உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------
பிற்பகல் அமர்வு
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை
தலைமை:
திரு.தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

முன்னிலை:
திரு.வீரமோகன் அவர்கள்
திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,
திரு.ஓவியர்,பா.மார்கண்டன் அவர்கள்

கருத்துரை:
பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,
வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா,
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,
திரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி
திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்
தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
திரு. எழில் . இளங்கோ அவர்கள்
தமிழியக்கம், விழுப்புரம்,

நிறைவு நிகழ்வு
மாநாட்டு நிறைவுரை:
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

நன்றியுரை:
திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்
புதுவை.காம்
----------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக
நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.
------------------------------------------
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasuguma...@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com
அனைவரும் வருக,

--