Pages

Monday, February 28, 2000

சிலம்பு மடல் 25

சிலம்பு மடல் - 25 பூவின் புலம்பல்! புயலாய் எழுதல்!
மதுரை:
ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:

இடைச்சி மாதரி வீட்டில், உறையிட்ட பால் உறையவில்லை; உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை; ஆடுகள் சோர்ந்து கிடக்கின்றன; எருதுகளின் கண்களில் கண்ணீர்! பசுக்கள் நடுக்கத்துடன் கதறுகின்றன! அவைகளின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்கின்றன!

துயற்குறிகளாய் தெரிந்தது மாதரிக்கு; பதறுகிறாள்! என்னவென்று புரியவில்லை!

"குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின்
மடக்கண்நீர் சோரும்; வருவதுஒன்று. உண்டு

உறிநிறு வெண்ணெய் உருகா உருகும்
மறி,தெறித்து ஆடா; வருவதுஒன்று உண்டு

நான்முலை ஆயம் நடுங்குபு நின்றுஇரங்கும்
மான்மணி வீழும்; வருவதுஒன்று உண்டு;"

தன் ஆடுமாடுகளுக்கு என்ன துயரமோ ? அவை அறிந்தவை என்னவோ? என்று கலங்குகிறாள் மாதரி; அவளின் மக்களும்தான்! அவைகளை மகிழ்விக்கும் கூத்தை ஆடிப்பாட மகளையும் மற்ற மகளிரையும் அழைக்கிறாள்!

"மனம் மயங்காதே, மண்ணின் மாதர்க்கு
அணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில்
வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்,
என்றாள், கறவை கன்றுதுயர் நீங்குக எனவே!"

இடையர் குலத்துக் கடவுளாக சொல்லப்படுபவன் கண்ணன்;துயற்குறிகளாகக் கருதப்பட்ட மாடு கன்றுகளின் துயர் நீங்க, உற்சாகம் பெற, கண்ணன் தன் இளம்பருவத்தில் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை ஆடுகின்றனர் மாதரி சார்ந்த மகளிர் ஏழ்வர்;

சில ஆண்டுகளுக்கு முன்னர், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டால் பசு அதிகம் பால் கறக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது; அது சோதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி சொன்னது; ஒரு வேளை அது உண்மை என்றால் மாடு கன்றுகளுக்கு இடையர் குல மகளிர் குரைவையாடி மகிழ்வூட்டும் நிகழ்ச்சி, மாட்டுப் பொங்கலின் போது ஏற்படுத்தப்படும் ஒலிகள் மற்றும் மாடு கன்றுகளைப் போற்றுதல் போன்றவை அக்கால்நடைகளின் உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்து பவையாக இருக்கக் கூடும்!

"நாராயணா என்னா நா என்ன நாவே?"

என்ற கேள்வியோடு குரவைக் கூத்து நிறைவு பெற, துயர்களை நாராயணனிடம் விட்டுவிட்டு மாதரி நீராடப் போகிறாள்!

ஓடி வருகிறாள் ஒரு மங்கை! கோவலத்துயர் அறிந்தவள் அவள்!
கண்ணகியைக் கண்டு துயரைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள்!

"....ஓர் ஊர்அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்ஆடாள் சொல்ஆடாள் நின்றாள்!

தன்னைப்பார்த்து ஒரு நங்கை நாஅசைக்கா துயர முகம் தாங்கி நிற்கிறாள் என்றால், வெளிப் போன தன் கணவனுக்கு தீங்கு நேர்ந்திருக்குமோ என்று பதறுகிறாள் கண்ணகி! அந்நங்கையாலும் உடன் சொல்லஇயலவில்லை!

"எல்லாவோ!
காதலன் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்...
நண்பகல் போதே நடுக்குநோய் கைம்மிகும்...
தஞ்சமோ தோழீ! தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோதோழீ!"

கண்ணகி:

தோழீ! கணவன் வரக் காண்கிலேன் நடுக்குற்றேன்; அயலார் கூறியது உளவோ? உரைப்பாய்!

தோழி:

'அரசியின் அழகு மிக்க சிலம்பொன்றைக் கவர்ந்த கள்வன் கோவலன் என்று.....'

கண்ணகி:

என்று......?

தோழி:

'ஊர்க்காவலர் கோவலனைக் கொலை செய்யக் கருதினர்.....!'

"அரைசுஉறை கோயில் அணிஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-

கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-

குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே!

எனக்கேட்டு, அதிர்ந்தாள், அழுதாள், விழுந்தாள் கண்ணகி."

துயர்ச்செய்தியை முடிவாய்ச் சொல்லாமல் சற்று இழுத்தே சொன்னாள் தோழி! இருப்பினும் "சாகவில்லை" என்று, தோழி கூறவில்லை!

அவளின் முகக்குறிகள் கோவலன் மாண்டுவிட்டதை, கண்ணகிக்குப் புரியவைத்துவிட்டது! கண்கள் குளமானது!

கண்ணனைய கணவரே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று குமுறினாள் கண்ணகி!

"பொங்கி எழுந்தாள், விழுந்தாள்..
செங்கண் சிவப்ப அழுதாள்;தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்துஏங்கி மாழ்குவாள்;

தான் தந்த சிலம்பைக் கொண்டு சென்ற கோவலன் கள்வனென்று கொலையுறுவதா? அதிர்கிறாள்!

அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!

அவளின் நெஞ்சத்து மன்றம் பாண்டியனைப் பழித்தது.

சமுதாயத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு நாட்டின் அரசன்தான் முதலில் பதில் சொல்லவேண்டும்!

பாண்டியன் செய்த தவறினால் பறிகொடுத்தேன் என்கணவனை; 'அறக்கடவுள் என்ற அறிவற்றோய்!' நீயும் இருக்கிறாயா? நான் அவலம் கொண்டு அழிந்துபோவேன் என்று நினைத்தாயா ? மாட்டேன்! என்று பாண்டியனையும் அறக்கடவுளையும் பழித்தாள்; சூளுரைத்தாள்!

காப்பியத்தில் தென்றலாய்க் குளிர்ந்தவள் ஈங்கு தீமை கண்டு தீயாய்க் கொதிக்கிறாள்!

முற்பிறப்பின் பாவம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!

முன்வினை என்று எண்ணி கண்ணீர் மட்டும் சிந்தி மாரடித்து ஒப்பாரி அழுது அடங்கிப் போகவில்லை!

கணவனே போய்விட்டான்; இனி என்ன என்று பின்னால் நின்றாள் இல்லை!

அறக்கடவுளையும் 'அறிவற்றோய்' என்று அதட்டி தீமையை எதிர்த்து சூளுரைத்ததால் அவள் பெண்குலத்தின் திலகம் ஆகிறாள்!

"மன்னவன் தவறுஇழைப்ப
அன்பனை இழந்தேன்யான்; அவலம் கொண்டு அழிவலோ?

மன்னவன் தவறுஇழைப்ப
அறன்என்னும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?

தென்னவன் தவறுஇழைப்ப
இம்மையும் இசைஒரீஇ இனைந்துஏங்கி அழிவலோ?"

போற்றா ஒழுக்கம் புரிந்தவன் கோவலன் ஆயினும் மாற்றா உள்ளம் படைத்த மனவுறுதி மங்கை நல்லாள் கண்ணகிக்கு!

காதலெனும் நட்பால் நடந்துவந்தவள்! அன்பால் அவனைக் கரைத்தவள்!

நெஞ்சத்தின் நேர்மை பொங்கி, வஞ்சத்தை வீழ்த்திட உறுதி பூண்டது!

அருகில் உள்ள அனைவரும் அவளின் நிலை கண்டு வருந்த, அறத்தினையும், பாண்டியனையும் பழித்த கண்ணகி, கதிரவனையும் கேள்வி கேட்டாள்!

"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"

எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை! இவள் நிலை கண்டு வருந்தி, சுற்றி நின்ற மக்கட் கூட்டத்திலிருந்து இருக்கவேண்டும்! அந்தக்குரல் கூறிய செய்தி "உன் கணவன் கள்வனல்ல; கள்வன் என்று கூறிய இவ்வூர் நெருப்பிற்கு உணவாகும் என்று!"

அநியாயங்களைப் பார்த்து 'நாசமாகப் போகட்டும் இந்த ஊர்' என்று சொல்வதைப் போல!

ஒரு ஊரினையே அழிந்து போகச் சொல்லவேண்டுமானால் அந்த ஊரில் பேதமையும் குறைகளும் நிறைந்து இருக்கவேண்டும்!

"கள்வனோ அல்லன் கருங்கயல்கண் மாதராய்!
ஒள்எரி உண்ணும்இவ் வூர் என்றது ஒருகுரல்"

அதற்குமேலும் அங்கு நின்றாள் இல்லை! மற்றொரு சிலம்பைக் கையில் எடுத்தாள்; நடந்தாள் மதுரை மாநகருக்குள்;

அச்சிலம்பை அனைவரிடமும் காட்டி, நகருள் மகளிர் நோக்கி விளக்கம் சொல்லி நியாயம் கேட்டாள்;

'விலைமிக்க என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டு என் கணவனையும் கொலை செய்தான் பாண்டியன்' என்றாள்!

பாண்டியன் நீதி தவறினான் என்று மட்டும் கண்ணகி முதலில் பொங்கி எழவில்லை! பாண்டியன் தன் சிலம்பை திருடிவிட்டான் என்றும் அய்யப்படுகிறாள்! குற்றஞ்சொல்கிறாள்!!

ஏனெனில் அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!

"பட்டேன் படாத துயரம், படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதுஒன்று;

கள்வனோ அல்லன் கணவன் என் கால்சிலம்பு
கொள்ளும் விலைபொருட்டால் கொன்றாரே ஈதுஒன்று!..."

ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் அன்பர் செத்து விடும்போது வாழ்க்கையும் முடிந்துதான் போகிறது;

நேர்மையான நெஞ்சம், மாறா உள்ளம் படைத்த உறுதியான நெஞ்சம்;

காதலன் பால் அன்பு மழை பொழிந்து அவன்மேல் பூங்கொடியாய்ப் படர்ந்தவள்;

மதுரையம்பதியென்ற அறியா நாட்டில்
அநீதியால் விழைந்த அன்பின் சாவால்,
துக்கம் பெருகி,
உள்ளம் உலர்ந்து,
வண்ணச் சீறடி வன்மை கொள்ள,
அரற்றிப் புலம்பிப் புயலாய் மாறி,
தெருவெங்கும் தன்கதை கூறி,
இனியாள் விழியோ இமையாதாகி,
இமையா விழிகள் ஆறாய் பெய்ய,
அறவோன் அவனையும் அதட்டி,
அரசன் தனையும் பழித்து,
செம்பொன் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி,
சூளுரைத்து,
போர் தொடுக்க, சீறிச் சினந்து நடந்து வரும்
பெண்ணரசி கண்ணகியைக்
கண்ட மதுரை மக்கள் மயங்கினர்;

உணர்ந்தனர் உள்ளத்தால் உயர்ந்தவள் என்று!

கணவன் இறந்தமைக்காகப் புலம்பியும், அவன் அநீதியால் இறந்தமைக்காகச் சீறிச் சினந்து வந்தவள் கண்டு தெய்வமோ என்று அஞ்சினர்!

பெருமை மிக்க பாண்டியநாடு நீதி தவறிவிட்டதோ? இது ஏனோ என்று வருந்தினர்.

சிலர் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்டினர் கண்ணகிக்கு!;

"களையாத துன்பம் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது; இது என் கொல்?

..தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்?
..தண்குடை வெம்மை விளைத்தது; இது என்கொல்?

செம்பொன் சிலம்புஒன்று கைஏந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இது என்கொல்?

ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இது என்கொல்?

என்பன சொல்லி இனைந்துஏங்கி அரற்றவும்
மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட........"

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, February 20, 2000

சிலம்பு மடல் 24

சிலம்பு மடல் - 24 கோவலனைக் கொன்றது யாது?
மதுரை:
கொலைக்களக் காதை:

வெள்ளை மலரொன்றைக் கிள்ளிச் சேற்றில் போட்டு, சற்றே மிதித்து காலெடுத்ததும் அம்மலரின் இதழ்கள் ஒன்றிரண்டு, நைந்து போயினும், மெல்ல அசையும். அப்படியே சில சிறு அசைவுகளோடு அமைதியானான் கோவலன்! இல்லை இல்லை!! அமைதியானது கோவலனின் உடலும் தலையும்.

உயிர் இருக்கும் வரை உடலும் மனமும் போட்டி போட்டு அலையும். உயிர் பறந்தபின்னே இரண்டும் ஒரே நேரத்தில் ஓய்ந்து விடுகின்றன!

"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."

பாண்டியனைத் தீராப் பழிக்கு ஆளாக்கி விட்டது கோவலனின் உயிரா ?

பாண்டியன் அரச கடமையைச் சரியாய் செய்தான்; காவற்துறைக்கு கட்டளையிட்டான்.

காவற்துறையும் கடமையைச் செய்தனர்: ஆயினும் அவர்களுள் ஒரு களிமகன்.

"கற்கக் கசடற!"
"நிற்க அதற்குத் தக!"

கல்லாமை அல்லது கற்றதன் பின் நில்லாமை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பிசகினாலும் விளைவது தீங்கே!

அதைத்தான் "கல்லாக் களிமகன்" என்ற இரண்டே சீர்களில் ஆசிரியர் விளம்பியுள்ளார்!

அவன் கல்லாதது யாது? அரச காவலனாயிருப்பவன் சிறிது கல்வி கற்றேயிருப்பான்.

ஆனால் அந்தக் கல்வி மந்திரத்திடம் மண்டியிட்டுவிட்டது!

அரசனும் கல்வி கேள்விகளில் சிறந்தவனே! அக்கல்வியும் கேள்வியும் மந்திரத்து முன்னே கேள்விக் குறியாகிப் போனது!

அரசனாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை! அவன் ஆளாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை!

அரசன் முதல் கடைநிலை ஊழியன் வரை மூடத்தனம் என்ற முக்காட்டுக்குள் பதிந்து போனவர்கள்!

சில ஆயிரம் அல்லது பல நூறாண்டுகட்கு முன்னர் மட்டும்தான் என்றில்லை!

இன்றும்தான்!

இலிங்க, விபூதி வித்தை மடத்தில் சிலர் கொல்லப்படுகின்றனர்; யாரும் காரணம் அறியார்! மந்திரத்துக்கு முன்னே காவற்துறை கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.

நூறு கோடி மாந்தருக்கு முதன்மையானவர்; அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்!

ஆயினும் அந்த மந்திர தந்திர வித்தைகளில் மயங்கி, ஆங்கு சென்று மந்திரவாதி முன் மண்டியிட்டு நிற்பதை நாம் வாழும் இந்தக் காலத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

பலகோடி மக்களுக்கு முதல்வர்! ஆட்சிப் போட்டியில் வெற்றிபெற வேள்வி நடத்துகிறார்.

ஊர் ஊராய்ப் போய் யாகவேள்வி செய்கிறார். வெற்றி பெற்றால் மீண்டும் வேள்வி! தோல்வி அடைந்தால் அதற்கும் வேள்வி!

மந்திரத்துக் கென்றே ஒரு மொழி; அம்மொழியின் சிறப்பே அதன் ஒலியாம்! சொல்கிறார் மனிதர், சோவென்று மழை பொழிந்தாற்போல்! மொட்டைப்பேச்சுக்கு மண்டையாட்டவே பெருங்கூட்டம்!

வேள்விக்கு வெண்சாமரம்; கேள்விக்கு கொடுவாள்!

குளத்தில் குளித்தெழுந்தால் ஒருவருக்கு புண்ணியமாம்! குளித்தெழுந்ததும், எழாதவர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு!

மந்திரம் மந்திரம் மந்திரம்; சமுதாயம் சீரழிய தந்திரம்!

இன்றல்ல நேற்றல்ல! சில ஆயிரம் ஆண்டுகளாக!

கல்வி என்பது அறியாமை என்ற இருளகற்றும் அறம்! அக்கல்வியைக் கற்றாலும், அதற்தகு இந்த தமிழ்க் குலம் நிற்றல் இல்லை பன்னூறாண்டுகளாக.

ஆதலின்தான் அன்றும் இன்றும் சமுதாயத்திற்கு கற்ற கல்வி பயன்படாமல் செப்படி வித்தைகளை நம்பி சீரழிந்து வருகிறது. செப்படி வித்தைகளே ஆன்மீகமாய் காட்டப்பட்டிருக்கிறது.

சிலையொன்று பால் குடிக்கிறது என்று செப்படி வித்தைக்காரன் ஒருவன் சொல்ல, இதையும் மதவியாபாரிகள் ஏற்றம் செய்ய இழிந்த மக்கள் கூட்டம், அலை அலையாய் சாரி சாரியாய், இரவு பகலாய், ஒரு நாடல்ல, உலக வாழ் அத்தனை நாடுகளிலும் மெத்தப் படித்தவர்கள் அனைவரும் அச்சிலைக்குப் பால் ஊட்டினார்கள்.

பால் ஊட்டி விட்டு ஒவ்வொருவரும் கோழி திருடியவர்போல் "சிலை பால் குடித்ததா இல்லையா" என்பதைத் தெளிவாய் சொல்ல இயலாமல் தலை சொறிந்த நின்ற காட்சி மிகப் பரிதாபம்!

அறிவு நிரம்ப பெற்றவர்கள் இந்திய விஞ்ஞானிகள்! ஆராய்ந்து சொன்னார்கள் அறிவியல் காரணங்களை. ஆனால் மத விவகாரங்களில் விஞ்ஞானிகள் தலையிடக் கூடாது என்று கொதித்து எழுந்தது செப்படிக் கூட்டம்! தேம்பி நின்றது விஞ்ஞானம்! இக் கூட்டத்திற்கு முகப்பாய் நின்றவர் தேர்தல் புரட்சி செய்த மெத்தப் படித்த அறிவாளி!

எங்கே போகிறது இந்த சமுதாயம்? கல்வியின் பயனை செப்படி வித்தைகள் மறைக்கின்றன, கால காலமாய்! இதை ஆராய்ந்து பார் என்று சொன்னவர்கள் பழிக்கப் படுகிறார்கள் நாட்டில்!

கல்வி கற்றும் பயனில்லா இந்த நிலைமையைத்தான் தெளிந்து நாலடிகளார் சொல்கிறார்:

"பொன் கலத்திலே அமுதை வைத்தாலும், நாய் அதை உண்டு விட்டு தெருவோர எச்சில் இலையை நக்கிப்பார்த்து மகிழ்வுறும்" அப்படிப்பட்டதுதான் இந்த கீழான மனிதர் பெறும் கல்வியும். இக்கல்வி கற்றோரால் சமுதாயத்துக்கு விளையும் பயனும் கீழானதே!

"பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்-அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்."
-- நாலடியார்

கல்வி என்ற பொன்கல அமுதை வயிறு நிரம்ப உண்டு விட்டு மெல்ல நழுவிப் போய், தெருவில் கிடக்கும் நரகல்களான மந்திரம் மாயம் செப்படி வித்தைகளில் மனம் தோய்ந்து நாலடி சொன்ன நாய் போல வாழ்வதே இந்த சமுதாயத்தின் கற்ற மிகப் பெரும்பாலானோர் நிலை! இவர்களால் விளையும் தீங்குதான் அன்று கோவலனைக் கொலை செய்தது!

வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தான், 'ஒருவன் நுண்ணிய நூல்கள் எத்தனை கற்றாலும் அவனிடம் வழிவழி பிறப்பொடு வந்த உண்மை அறிவே மேம்பட்டு நிற்கும்' என்கிறார். இச்சமுதாயம் ஆழக்கற்றது அறிவுக்கு ஒவ்வாததைத்தான்!

அதனால்தான், கற்ற சமுதாயமும் மந்திரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கிறது.

"நுண்ணிய நூற்பல கற்பினும், மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்"
-- குறள்

அதுவே இன்றும், வேள்வி, ஊழல், காட்டுமிராண்டித்தனம், அசுத்தம், கொளுத்தல்கள், சண்டைகள் அனைவற்றிலும் பொன்னான காலங்கள் வீணாகப் போவதற்குக் காரணம்!

சிலம்பிலே பாண்டியன் உள்ளிட்ட சமுதாயத்தை எந்த மந்திர மாயங்கள் மயக்கி வைத்திருந்தனவோ, அதே நிலைதான் இன்றைய சமுதாயத்துள்ளும்!

கடுகளவும் மாற்றமில்லை!

தமிழகத்திலே, யாரும் யாரையும் கொளுத்தச் சொல்லவில்லை! சொல்லியிருக்க மாட்டார்கள்! ஆனால் கொளுத்தப்பட்டனர் சில கல்லூரிப் பெண்மணிகள்!

அன்றந்தக் காவலக் கல்லாக் களிமகன், பாண்டியனுக்கு சினம் தீர்த்து நற்பெயர் பெற கோவலன் குறுக்கே கொடுவாள் எறிந்தான்! ஆராயா அறிவிலி!

இன்றும் அரசாண்டு அதை இழந்தவர்க்கு ஆபத்தோ என்று அஞ்சி அவர்தம் நற்பெயர் பெற கொளுத்திவிட்டனர் சிலரை!

அதே கோழையிலக்கணம்!

அச்சம், கொந்தளிக்கும் குறு மதி! சுயநலச் சூத்திரம்!

இந்த நிலையிலேயே பல நூறாண்டுகளை கழித்துவிட்டு புலம்பி நிற்கும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம்!

சில நூறே ஆண்டுகள்தான் நிலம் கண்டுபிடிக்கப் பட்டு! ஆயினும் அடிப்படை மனித வாழ்வு நிரம்பி நிற்கும் அமெரிக்கப் பெரு நாடு!

சில பத்தே ஆண்டுமுன்தான்! தீக்குண்டால் சீரழிந்தது சிறுநாடு யப்பான்! ஆனால் இன்று ?

ஆனால் பல நூறு/ஆயிரம் ஆண்டுகளைப் பார்த்துவிட்டும் பாழ்பட்டு கிடப்பது இத்தமிழ்நாடு!

மந்திரமருந்து, செப்படி வித்தை, மத/சாதி மாயங்கள் பால் பற்றும் பயமும்; அதைத் தாண்ட நெஞ்சுறுதி இல்லா கோழை நாடாக, தமிழ்த்திருநாடு!

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் அதன் நெஞ்சில் வாளால் கீறிவிட்டு புதைத்த வீர சமுதாயம், மூடத்தனத்தின் அடிநக்கி வாழ்வது இழுக்கல்லவா?

சுத்த கையாலாகாத கோழைச் சமுதாயமாய் ஆகிப்போனது தமிழ்ச்சமுதாயம்!

இதைத்தான் வெகு தெளிவாக சிலம்பாசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார்!

அவர் வெறுமே, "பாண்டியன் தேரான் ஆகி" என்று சொல்லி விடவில்லை!

"வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."

இவ்விடத்து இதன் உட்கருத்து "ஊழ் வினை" அதாவது முற்பிறப்பில் செய்த பாவம் என்று கொள்வது பொருந்தாது!

இப்பிறப்பின் அவனின் பாவம் என்றால் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணை நாடியதுதான்!

வேறொரு பெண்ணையும் நாடுவோர்க் கெல்லாம் கொலைபடுதல்தான் வினை விளைவிக்கும் பயன் என்றால் பெரும்பாலான ஆடவர் அதற்காகவே வாழ்விழந்திருக்கவேண்டும்! பரத்தமை இலக்கணமும் வாழ்ந்திருக்காது!

ஆனால் வள்ளுவ வழி ஊழைப் பார்த்தால் இளங்கோவடிகள் பாண்டியனைத் தேரான் என்றது தெளிவாகும்!

ஊழ் என்றால் உலகியற்கை! அதற்கொரு அதிகாரம் குறளிலே!

ஒன்றை இழக்கச் செய்தற்குரிய உலக இயற்கை உண்டாகும்போது அது அறியாமையில் ஆழ்த்தும்! பெருகச் செய்யும் உலக இயற்கை உண்டாகும் போது அறிவைப் அகலமாக்கும்!

"பேதைப் படுத்தும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
--குறள்

இழக்கச் செய்யும் ஊழ் (உலக இயற்கை) சமுதாயத்தில் பெருகியதால் அறியாமை பெருகியது! அதாவது மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகள் பெருகின. அதனால் கோவலன் கொலையுண்டான்!

ஆகவே, பாண்டியன் நீதி தவறவில்லை! ஆனால் நீதி தேவன் மயக்கமுற்றான் மந்திரம் என்ற வார்த்தௌ முன்பு! அந்த மயக்கம் அவனுக்கு மட்டுமல்ல!

அவன் காலத்து அத்தனை நிலைகளிலும் மந்திர மாய மயக்கம்! இந்நாளைப் போலவே!!

அன்புடன்
நாக.இளங்கோவன்
20-பிப்ரவரி-2000

Sunday, February 13, 2000

சிலம்பு மடல் 23

சிலம்பு மடல் - 23 கொல்லன் சதியும்! பாண்டியன் மதியும்!
மதுரை:
கொலைக்களக் காதை:

காசு வரும் கண்ணகியின் காற்சிலம்பால் என்று சாவு வரும் திசை நோக்கி, சிந்தித்துக் காத்திருந்தான் கோவலன்;

அந்தப்புரம்:
அழகுப் பெண்டிர் அணிவகுக்கும்
அரசனின் ஆசைக் குடில்!

வகைவகையாய்ப் பெண்கள்!

அரசனின் ஆசையை அவ்வப்போது தீர்த்துவிட
எப்போதும் காத்திருக்கும் பெண்மந்தை!

அரச மண்டபம்:
அந்த ஆசையை அரசனுக்கு உருவாக்கும்
ஆடல்மேடை! அமைச்சரவையும் அங்கே!!

அந்த மேடையிலே பாண்டியன் நெடுஞ்செழியன்!

ஆடல் அரசிகளின் முட்டியவைகளின் வெட்டுதல்களைக் களித்துக் கொண்டே முட்டாதவைகளில் முயங்க மோகித் திருந்தானோ? என்று முகங்கோணுகிறாள் கோப்பெருந்தேவி!

பெண் பல ஆடவரை நினைத்தால் அருவருக்கும் சமுதாயத்தில், ஆடவன் எத்தனைப் பெண்டிருடன் சுற்றி விட்டு வந்தாலும் அவனைச் சிறு முனகலுடன் ஏற்றுக் கொண்டு விட்டு, கற்பென்ற காரணம் சொல்லும், முதுகெலும்பில்லா மூடப் பெண்களில் கோப்பெருந்தேவியும் ஒருத்தி!

ஒருவேளை பாண்டியன் மோகித்திருந்தானானால் அவனை அருவருத்து விட்டா இருக்கப் போகிறாள் ?

ஆடவனின் அளவுக்கும் அதிகமான ஆசையை அனுமதித்து விட்ட சமுதாயத்தில் கண்ணகி போன்ற பலருள் அவளும் ஒருத்திதான்!

தொலைக்காட்சியோ திரைப்படமோ இல்லாத காலத்தில் நேரடியாகவே கலைக்காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலை;

ஆடிய பெண்மணிகளின் அழகின் மேல் தேவி பொறாமைப் பட்டிருக்கவேண்டும்! தலை நோவென்று உள்கோபம் மறைத்து பாதியில் எழுந்து சென்று விட்டாள்.

பொய்க்கோபம் காட்டியிருந்தாள்!

பாண்டியன் ஏதும் தவறு செய்திருக்க மாட்டான் என்றுதான் கருதமுடிகிறது. அரசியின் மனம் வருந்துதலை அறிந்த உடனே அச்சமடைந்த பாண்டியன், தேவியோடு அன்பால் மலர்ந்த காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும்!

தேவியின் மனமுணர்ந்து சிறு அச்சமும் வருத்தமும் அவனுக்கேற்பட சற்றே குழப்பத்துடன் அவளிடம் தேடி நடக்கிறான்; அமைச்சரவை நீங்கி!

சிறு குழப்பம்தான்; தேவியிடம் அன்பைச் சொல்ல விரைகிறான்!

மன்னனின் விரைந்த கால்களின் வேகம் குறைத்தது கொல்லக்கயவன் வீழ்ந்து வணங்கி அவனைப் போற்றியது!

"ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதல் தேவி கூடாது ஏக,
சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புஉடைவாயில் கடைகாண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி!......."

மன்னா!

"அரசியாரின் சிலம்பொன்றைத் திருடியவன் யார் என்று கண்டுபிடித்தேன்!

கன்னக்கோலில்லை; குத்தும் கோலுமில்லை! மந்திரம் போட்டு காவலரை மயக்கி அரசியாரின் காற்சிலம்பை கவர்ந்தான் அக்கள்வன்!

இப்பொழுது அவனை என் இல்லத்தில் இருத்தியிருக்கிறேன்" என்றான் அந்தக் கொல்லக்கயவன்.

முதல் தகவல் அறிக்கையை அரசனிடம் சமர்ப்பிக்கிறான் கொல்லன்.

"கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்
துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயில் உறுத்துக்
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்என் பேர்ஊர்க் காவலர்க் கரந்துஎன்
சில்லைக் குடில் அகத்துஇருந் தோன்என...."

என்னடா உலகம் இது ?

மந்திரம் ஒன்றால் ,அரண்மனை வாயில்தோறும், வாசல்தோறும், வீதிதோறும் நிற்கும் காவலரை மயக்கி, அரசமாதேவியைச் சுற்றி இருக்கும் பெண்டிர் கூட்டத்தையும் மயக்கி, அரசியையும் மயக்கி, ஆங்கொரு சிலம்பைத் திருட முடியுமா? என்று
அரசன் நினைத்தானில்லை!

"மந்திரத்தால் இவ்வளவு முடியும் என்றால், அரசன் எதற்கு?
மந்திரவாதி போதுமே!

நாட்டைக் காக்க காவல் எதற்கு? எலுமிச்சையைக் கட்டி மந்திரம் போட்டு ஊரெல்லையில் வைத்துவிட்டால் பகைவர் வராமல் போய்விடுவரே!

நாடுபிடிக்க படைகள் எதற்கு? நான்கு மந்திரவாதிகள் போதுமே!"

அரசன் இதையெல்லாம் சிந்தித்தான் இல்லை!

கோழைகளின் பிழைப்பு மந்திரம்! அதையும் உணர்ந்தான் இல்லை.

ஆனால், பாண்டியன் கடமையிலிருந்து சிறிதும் தவறினான் இல்லை! இல்லவே இல்லை!!

மன்னவன் இல்லத் திருட்டாயினும், குடிகளிடம் களவு நடந்தாலும்
அதை ஆராய அதற்கென்ற காவலர் துறை இருக்கிறது!

இன்று பிரதமர் அல்லது அமைச்சர்களின் இல்லத்தில் களவு போனால், அதையும் காவல்துறையும் நீதித்துறையும்தான் ஆராய்கின்றன! ஆராயவேண்டும்; ஆராயமுடியும்.

பிரதமரோ அமைச்சரோ அந்த முதல் தகவல் அறிக்கையின் பால் ஆராயச் சென்றால் அது நகைப்புக்குரியது! அவ்வாறு அவர்கள் செய்தால் எத்தனைக் குற்றங்களுக்கு முறையான தீர்ப்பளிக்க முடியும்?

இதனை இதனால் இவன் செய்யும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடுதலே அரசனின் அல்லது தலைவனின் வேலை!

அதன்படியே பாண்டியனும் காவலரை அழைத்து விசாரிக்கச் சொல்கிறான்; விசாரனையில் தவறு கோவலனுடையது என்றால் அவனைக் கொல்லச் சொல்கிறான்!

இதில் யாதொரு பிழையும் பாண்டியனிடம் இல்லை! அவன் கடமையைத்தான் அவன் செய்தான்,

"ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்குஎன..."

கொல்லன் தன் வேலை எளிதில் முடிந்தது என்று அகமகிழ்ந்தான்;
காவலர்களை அழைத்துக் கொண்டு இல்லம் வந்து, சாவு வலை இறுகி வருவதை உணராத கோவலனைக் காட்டினான்;

கோவலனிடம் இருந்த சிலம்பைக் காவலரிடம் காட்டி இதுவே அரசியின் சிலம்பு என்று நம்பவைக்க முயன்றான், காவலர்களை தனியே அழைத்துச் சென்று!

வெட்டுதற்குக் கட்டப்பட்டிருக்கும் ஆட்டின் நிலையிலேயே கண்முன் நடப்பவைகளை அறியாதவனாய் கோவலன் சலனமில்லாமல் இருந்தான் அப்பொழுது!

காவலர் தலைவன் அவன் வேலையை முறைப்படியேதான் செய்தான்! கொல்லன் சொன்னதை உடனே நம்பி விடவில்லை;

இவனைப் பார்த்தால் களவு செய்பவன் போல் தெரியவில்லை என்றான் காவலர் தலைவன்!

காவல் பல கடந்து கடுங் களவு செய்பவர்களுக்குரிய தோற்றம் இல்லை என்று உணர்கிறான் காவலன்!

மேலும் ஆராய முற்படுகிறான்; ஆராய்கிறான்;

அவன் அனுபவம் சரியே!

செல்வச் சீமானாக வணிக குலத்தில் பிறந்தவன் வாழ்ந்த சூழலே வேறு. இடையர் தெருவில் நடந்த போது காளை ஒன்று சீறி எதிர் வருதல் துற்குறி என்று அவன் அறிந்திருக்க வில்லை;

காரணம் அச்சூழலே, அதாவது ஆடுமாடுகள் அலையும் இடையர் தெருக்களே அவன் அறியாதது என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார். அவனுக்குக் கள்ளத் தோற்றம் இல்லாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை! ஆயினும் நல்ல தோற்றம் கொண்டவர் எல்லாம் கள்ளர்கள் இல்லை என்று கொள்ள முடியாது.

"இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்
கொலைப்படு மகன்அலன் என்று கூறும்........"

ஆராய்ந்து தெளிதல் என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் ஆனால் கோழைகள் வாழ்வு கொடியேற வாய்ப்பே இல்லை! அதையும் கோழைகளும் நயவஞ்சகரும் நன்கு அறிந்தே இருப்பர்!

அடுத்தவர் வாழ்வை கெடுத்து வாழ்பவர்க்கும், மதம் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்த்து வாழ்வு செய்பவர்க்கும் இது பொருந்தும்.

எங்கே தீர ஆராயந்து விடுவரோ என்று அஞ்சினான் அந்தக் கொல்லக் கயவன்; ஆங்கு குழப்பினான் காவலர்களை;

காவலர்களை எள்ளி நகையாடினான்;

மந்திரத்தின் மகிமை அறியாதாராய் இருக்கிறீரே! இப்படிப்பட்ட கள்வர்கள் மந்திரத்தால் மருந்து வைத்துத் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்பதை அறியாத நீங்கள் காவலரா என்று இகழ் நகை செய்தான் கொல்லன், காவலரைப் பார்த்து!

இத்தகு மந்திரக் கள்வர்கள் இந்திரனின் மார்பில் அணியும் ஆரத்தினையும் கவர்ந்துவிடும் வல்லவர்கள் என்று வஞ்சக மொழி பகன்றான்!

ஆதாரமாக, கண்டறியப்படா களவுகள் சிலவற்றை எடுத்துக் கூறினான்; மந்திரத்தால் தந்திரமாக நடந்ததென்று அடித்துக் கூறினான்.

மனிதனின் அறிவுக்கெட்டாத அனைத்தும் மந்திரமாகவும் மாயமாகவும் தெரிகிறதல்லவா! அம்மந்திரங்களும் மாயங்களும் அறிவிலார்க்குப் பிழைப்புக் கருவிகளாகி விடுகின்றன.

அறிவு வளர்ந்த சமுதாயமே ஆக்கங்களை உலகில் ஏற்படுத்தக் காண்கிறோம். அறிவு கெட்ட சமுதாயம் மந்திரத்திலும் மாயங்களிலும் மனதைப் பறி கொடுத்து தேம்பி நிற்பதை இன்றளவும் நாம் கண்டு கொண்டே இருக்கிறோம்!

இளைய காவலருள் ஒருவனும் மந்திரக் களவொன்று குறித்து கதை ஒன்று சொன்னான்; அவன் தன்னால் பிடிக்க இயலாத கள்வன் ஒருவனை மந்திர மருந்துக் கள்வன் என்று சொல்லிக் கொண்டு தன் இயலாமையை தனக்குள் தேக்கிக் கொண்டவன்:

மந்திரம் என்ற சொல்லிடம் பயந்த அவன், அரசனிடமும் பயந்தான்; இவனைக் கொல்வதே அரசனின் சினத்தில் இருந்து காக்கும் என்று கருத்துக் கூறினான்.

அறிவற்ற கோழைகள் அனைத்திற்கும் பயந்தவர்கள் அல்லவா ?

காவலர் தலைவனின் மனம் மாறவில்லை!

அனைவரின் கூற்றையும் ஆராய்ந்து கொண்டே இருந்தான்!

இதுகாறும் கோவலனிடம் குற்றம் பற்றி ஒரு வார்த்தையும் யாரும் கேட்கவில்லை!

நடக்கும் கருத்துப் பறிமாற்றங்கள் சற்று தூரத்திலேயே நடக்கின்றன. காற்சிலம்பை மதிப்பிடுகிறார்கள் என்றே கோவலன் கருதியிருக்க வேண்டும்.

ஆனால், மந்திரத்தின்பால் இருந்த மயக்கத்தால், நம்பிக்கையால்,
ஆராயும் அறிவற்றவர்களிடம் இருக்கும் உணர்வு உந்தலினால், காவலர்களுள் "கல்லாக் களிமகன்" ஒருவன், மூடநம்பிக்கைப் பற்றினால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவசரப்பட்டான்;

மூடநம்பிக்கையால் ஆத்திரம் வந்ததும் அடுத்தவன் குடலை உருவ நினைத்த காட்டு மிராண்டி அந்தக் "கல்லாக் களிமகன்".

காவலர் தலைவனின் ஆணைக்கும் காத்திருக்கவில்லை! உருவிய வாளுடன் ஓடிப் பாய்ந்தான் கோவலன் மேல்!

கோவலனின் குறுக்கே கொடுவாள் எறிந்தான்!

சற்றே வளர்ந்து விட்ட பூஞ்செடி தன் உச்சியில் மலர்ந்த ஒற்றை வெண் பூவோடு காற்றடிக்கும் திசையெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதைப் போல, கோவலன் சலனமுற்று வாழ்ந்தவன்.

தற்போது மனமும் குற்றமற்று விடியல் நோக்கி அமைதியாக சிந்தித்துக் காத்திருந்தது, காற்சிலம்பிற்கு காசு வரும் என்று!

ஆனால் வந்தது வாள் அவன் உடலின் குறுக்கே! கோவலனின் தலை சற்றுத் தள்ளி வீழ்ந்தது!

"அரிதுஇவர் செய்தி அலைக்கு வேந்தனும்
உரியதுஒன்று உரைமின் உறுபடை யீர்எனக்
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்; விலங்குஊடு அறுத்தது."

வெள்ளை ரோசா மலருக்கு, தன்னைக் கொய்யப் போவது எப்படி தெரியாதோ அப்படியே கோவலன் நிலை.

கொய்யப்பட்டதும் கோவலனின் தலை சேற்றில் விழுந்த மலராய் குருதிச் சேற்றில் நனைந்தது.

"புண்உமிழ் குருதி பொழிந்துஉடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்."

கொல்லன் கயவன்; பொய்சொன்னான்!

பாண்டியன் ஆராய்ந்து கொல்ல காவலரை ஏவி கடமை செய்தான்!

காவலர் தலைவன் ஆராய்ந்தான்!

கல்லாக் காவலக் களிமகன் ஒருவன் தலைவனின் ஆணையும் இன்றி உணர்வுகளின் உந்துதலில், அவசரத்தில் கொலை செய்தான்!

இப்படியிருக்க இளங்கோவடிகள்
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி...."
என்று, பாண்டியன் தீர ஆராயாததை தெளிவிக்கிறார். பாண்டியனின் பிழை எங்கே? எங்ஙனம்?

ஆராய்வதில் தவறா? இல்லை யென்றால் வேறுயாது? விடை காண்போம்!

காரணமறியாமலேயே உடல் வேறு தலை வேறாகி சில துள்ளல்களோடு குருதிச் சேற்றில் குளிர்ந்து போனான் கோவலன்.

கழுத்து அறுபடும் போது அவன் அறத்தை நினைத்தானா? அல்லது வஞ்சக மறத்தை வெறுத்தானா?

கண்களில் நின்றவள் கண்ணகியா? மாதவியா? இருவருமா? தந்தை தாய் சுற்றம் நினைத்தானா ?

சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டில் மறைந்த கோவலனின் நேர்மைக்கு சாட்சி சொல்ல இருக்கும் இரண்டே மகளிர், என்றும் வாழும் காவிரியும் வையையும் ஆவர்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000

சிலம்பு மடல் 22

சிலம்பு மடல் - 22 கண்ணகியின் கடைசி மனையறம்!
மதுரை:
கொலைக்களக் காதை:

அடைக்கலம் தந்த இடைச்சியின் சிறு வீட்டில், அவள் அளித்த காய்கறிகளைக் கொண்டு, வியர்க்க விறு விறுக்க தன் கண்ணாளனுக்கு உணவு செய்கிறாள் கண்ணகி, பல காலங்களுக்குப் பின்னர்!

மாதவியிடம் இருந்து மீண்டு வந்தும், கடமை கருதி உடன் நாடு நீங்கினரே அல்லாமல் வீடு வாழ்ந்தார் அல்ல!

அவளின் கடைசிச் சமையலை உண்ணத்தான் உயிர் வாழ்ந்தானோ கோவலன்? கடைசிச் சோறைக் காலம் தாழ்த்தி உண்ணத்தான் காதங்கள் பல கடந்து மதுரையம்பதி சேர்ந்தானோ?

செல்வச் சீமான் தன் கடைசி நாட்களை நாடோ டிக் கழித்திருக்கிறான் காதல் மனைவியுடன்! கடைசி நாளில் மனைவியின் கையால் தன் வாய்க்கு விருந்தளிக்கிறான்!

சிறு வெள்ளைப் பனம் பாயொன்றை சாணம் மெழுகிய தரையில் போட்டு அமரச்செய்தாள் அவனை! தூய நீரில் அவன் கால் அடிகளை துடைத்து விட்டு சற்றே தரைக்கு தண்ணீர் தெளிக்கிறாள்!; நடக்கப் போகும் கோவல-கண்ணகியின் மரணத்தை எண்ணி அஞ்சி மயக்கமுற்றுக் கிடந்த நிலமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புதல் போல!

ஈனா வாழையின் குருத்தொன்றை விரித்துப் போட்டு அன்னமிட்டாள்! அமுதென்று உண்டான்!

அவன் உணவுண்ணும் அழகில் ஆயர்பாடிக் கண்ணணைக் கண்டனர் இடைச்சி மாதரியும் அவள் மகள் ஐயையும்;

கோவலன் மனதிலே ஒரு அமைதி!

இழக்கப்போகும் தலைக்கு, இழந்த வாழ்க்கை திரும்பிய நிம்மதி!

"சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்குஒழிப் பனள்போல்
தண் ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து,
அமுதம் உண்க அடிகள் ஈங்கு'என......"

உண்ட இடத்தை சுத்தம் செய்து, வெற்றிலை நீட்டிய கண்ணகியின் கரத்தைப் பற்றி மெல்ல இழுத்து அணைத்துக் கொள்கிறான்!

பல காலம் முன்னர் படுத்துப் புரண்டிருந்தாலும், அப்பொழுது அணைத்துக் கொண்டபோது அரைவினாடி புதுமை நினைவு!

அடுத்த அரை வினாடியில் பல ஆண்டுகளை வாழ்ந்துவிட்ட உணர்வு!

அதற்கு மேல் பொறுக்கவில்லை கோவலனுக்குத் தான் செய்த குற்றங்கள்!

பருக்கைக் கற்கள் குத்திய வண்ணச் சீறடியின் வண்ண மாற்றத்தைக் கண்டு இரங்குகிறான்!

சாகப்போகுமுன் பாவக்கணக்கு சொன்னான் கண்ணகியிடம்; கண்கள் பனிக்க!

என் பெற்றோருக்கு, துயர் தந்தேன்! பரத்தமை சேர்ந்தேன்! பயனில் பேசுவர் சேர்ந்தேன்! ஏளனப்பட்டேன்! இகழ நடந்தேன்! பெரியோர் சொல் மறந்தேன்! சிறு வயதேயாயினும் அறிவிற் சிறந்த உனைத் தவிக்கவிட்டேன்! தத்தளித்தாய்! அதைத் தாங்கமுடியவில்லை இப்போது எனக்கு! புறப்படு என்றதும் புறப்பட்டாயே என் உயிரே, உனையாப் பிரிந்தேன்!?

குற்ற உணர்வினால் குறுகிப் போனான்! நாளைய கதி அறியாது,
நற்கதி வேண்டி ஏங்கினான்!

நிரந்தரமாய்ப் பிரிகையிலே, இடையிலே பிரிந்ததை எண்ணி வருந்தினான்!

அனைவருக்கும் துன்பம் தந்த போற்றா ஒழுக்கம் செய்தீராயினும் (உங்கள் சொல்) மாறா உள்ளம் படைத்த வாழ்க்கையை உடையவள் நான் ஆதலால் உங்களுடன் உடன் புறப்பட்டேன் என்றாள் செல்வக் கொழுந்து!

"போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றுஎழுந் தனன்யான் என்றுஅவள் கூற..."

மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

என்று, அன்று மனையறம் புகுந்த போது அவளைப் போற்றிய கோவலன் இன்று மரணம் புகும்போதும் போற்றுகிறான் அவளை!

"பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய் நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!...."

பெண்ணின்பத்திற்காகப் பேரலைச்சல் அலைந்தவன் கண்ணின் மணியாளின் காதலிலும் கற்பிலும் காலம் கடந்து கரைந்து கடைசி முறையாக அவள் மெய் முழுவதையும் தழுவிக் கொண்டு கண்ணகியின் காற்சிலம்பொன்றைக் கடன் பெறுகிறான்; காலமுழு காதல் வாழ்க்கைக்குப் பொருள் ஈட்ட!

"என்னோடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகஎனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ......."

இல்லம் தாண்டி தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான்! காளையொன்று பாய்ந்து வந்தது தீயகுறி என்பதை அறிந்திருக்காதவனாய் நடையைத் தொடர்கிறான்! கண்ணகிக்கும் அவனுக்கும் இடைவெளி தூரமாக ஆகிக்கொண்டேயிருக்க, அது நிரந்தர இடைவெளி என்று அறியாது, இருவரின் கண்களில் இருந்து இருவரும் மறைய, பல வீதிகளைக் கடந்து பொற்கொல்லர் வீதியில் நுழைந்தான்!

பல நுட்பங்கள் சமைக்கும் பொற்கொல்லர்கள் ஆங்காங்கிருக்க பலர் முன்னும் பின்னும் வர இவனோ 'சட்டை' அணிந்து துலாம் தூக்கி நடந்த கொல்லனைப் பார்த்து, அவனை அனுகுகிறான்!

மேலங்கி அணிந்திருந்ததாலேயே அவனை அரசனால் சிறப்புப் பெற்றவன் என்று எண்ணுகிறான்! ஏமாளி ஆகிறான்!

அயலூராரை அறியாத அப்பாவி!

'சட்டை' அல்லது மேலங்கி போட்டு நடந்தாலே அரசனால் மதிக்கத் தக்கவன் என்று இருந்த காலம் போலும்! ஏனைய கொல்லர்கள் மேலங்கி இல்லாதிருந்திருக்க வேண்டும்!

"நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவன்எனப் பொருந்திக்...."

பார்வையில் தோற்றான் கோவலன்!

நல் மக்களைப் போன்றே இருப்பர் கயவர்! அவர்களைப் போல நல் மக்கள் தோற்றத்தில் இருப்பவரை யாம் கண்டதில்லை என்று
திருவள்ளுவரே அஞ்சி ஒதுங்கிப் போகிறார்!

கயவரைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடும் திறன் சொல்லவில்லை குறள்!

ஆனால்
"மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"
என்று கூறிவிட்டு வள்ளுவம் வாய்மூடிக் கொள்கிறது!

கோவலன் என்ன செய்வான் பாவம்!

ஒரு காற்சிலம்பை மட்டும் விற்று தொழில் செய்து பொருளீட்டலாம் என்று ஒரு பெருந்தனக்காரன் நினைக்கிறான் என்றால் அச்சிலம்பு பொருள் மதிப்பு மிக்கதாக இருக்கவேண்டும்!

ஆடைப்பகட்டைப் பார்த்தவுடன் தன் மனையாளின் விலைமதிப்பு மிக்க சிலம்பை விற்க சரியான ஆள் என்று நினைத்தான்! ஏமாந்து விட்டான்;

தனக்கு ஒரு குறை உண்டானால் அதனைப் போக்கிட, தன்னை விற்று விடுவர் கயவர் என்று எழுத வள்ளுவர் எத்தனைக் கயவரிடம் ஏமாந்தாரோ தெரியவில்லை! அதனால்தான்

"எற்றிற் குரியவர் கயவர் ? ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து"

என்று எழுதிவைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்! இக்கொல்லக் கயவனும் அங்ஙனமே! தான் பாண்டியன் மனையில் சிலம்பு திருடிய சேதி வெளியாகாமல் இருக்க (அல்லது வெளியாகும் முன்), அதற்கொப்பாக இருந்த கண்ணகி சிலம்பைக் காட்டி, காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டான்!

பாண்டியன் பட்டத்தரசிக்கல்லது வேறு யாருக்கும் பொருத்தமுடையதல்ல இச்சிலம்பு; ஆதலில் என் இல்லத்தில் காத்திருப்பீர்! காட்டி வருவேன் வேந்தனிடம், என்று கூறி கோவலனை தன் இல்லத்தருகே இருக்கச் செய்கிறான்!

இவனும் அவன் குடிலருகே இருந்த தேவகோட்ட மதிலுக்குள்
சென்று தங்கினான்!

பொருள் தேடவந்தவன் அமைதியாகக் காத்திருந்தான்; சாவு வந்து கொண்டிருப்பதை எப்படி அறிவான் ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000