Pages

Monday, January 15, 2018

ஆண்டாள் - மடல் 1




ஆண்டாள் மகாகவி. இப்படித்தான் மின்னம்பலம்.காம்-ல் ஒரு பெண்கவிஞர் தனது கட்டுரையில் ஆண்டாளை அறிமுகப்படுத்துகிறார் ( https://minnambalam.com/k/2018/01/13/28 ). அப்படியே நான் தொடங்குவதுதான் சரியானது என்றெண்ணி தொடங்குகிறேன்.

சுமார் பதின்மூன்று நூற்றாண்டுகளாக, "தமிழிலக்கியங்களில் தனக்கென ஒரு மாதத்தையே ஒதுக்கிக்கொள்கிற இலக்கியத்தை படைத்து நிலைத்த கோதைநாச்சியாரை மாகவி என்று சொல்வது அவரின் சிறப்புகளில் தலையாய சிறப்பு". இவரைப்போல ஒரு மாதத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட கவிஞரைத்தேடினால் மாணிக்கவாசகரை மட்டுமே சொல்ல முடியும். சமயம், ஆன்மீகம், இறைவடிவம் என்ற இவற்றைத்தாண்டி பண்ணிசைக்கவிஞர் என்ற மாவடிவம், ஆண்டாளுக்கு இருக்கிறதென்பதை எந்தக்கவிஞர்தான் மறுப்பார்?

கலைமாமணி, கவிமாமணி, சாகித்திய அகாதமி போன்ற விருதுகளை அறிந்திராத மாகவி பாரதியார் வாழ்ந்த நூற்றாண்டில், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் உள்ளிட்ட கவிச்செல்வங்கள் வாழ்ந்த நூற்றாண்டில், அதைத்தொடரும் காலங்களில், தோன்றிய தோன்றுகின்ற கவிஞர்களில் எத்தனை கவிஞர்கள் வரலாற்றில் நிலைபெறுவார்கள் என்பதை இன்று தீர்மானித்துவிட முடியாது.

அதற்கான காலம் சில நூற்றாண்டுகளேனும் வேண்டும் என்பதையும், திருப்பாவை தேவாரம் போன்ற பண்ணார்ந்த தமிழிசைப்பாடல்களை யாத்து வரலாற்றில் நிலைத்துப்போன கவிஞர்களை வருணிப்பதற்கு, இன்றைய அளவில், தமிழகப்பெருங்கவி, அல்லது வம்சத்து பெருங்கவி என்று ஓங்கிச்சொல்லப்படுவது மட்டுமே தகைமையை தந்துவிடுவதில்லை.

அதேபோல, ஆண்டாளின் படைப்புகளை ஆராய்ச்சி செய்பவர்கள், தற்கால பரபரப்புகளையே வாய்ப்பாகக்கொண்டு, ஆண்டாளுக்கு பருவ-உணர்வை உருவாக்கிந்தந்து, அதையே குறிக்கோளாய்க்கொண்டு ஆராய்ச்சி செய்வதையும், மிகச்சில வரிகளை மேற்கோள் காட்டி ஒரு முடிவை எடுப்பதையும் ஏற்றுக்கொண்டுவிட முடியாது. எடுத்துக்காட்டாக, https://maharasan.blogspot.in/2018/01/blog-post.html என்ற இந்தப்பதிவில் இருக்கும் சில கருத்துகளை சொல்லலாம்.

திருப்பாவையின் முதற்பாடலிலேயே, "சிறுமீர்காள்" என்று பெண்பிள்ளைகளை கூவி அழைக்கின்ற ஆண்டாள் என்ற சிறுமி, இறைவனோடு கலந்தபோது அவளுக்கு அகவை பதினைந்துதான்.

ஒரு 15 வயது சிறுமியின் ஞானவாழ்க்கையை, ஞானஉலகை புரிந்து கொள்வதில் ஏன் இன்றைய படிப்புலகிற்கு இத்தனை பெரிய தடுமாற்றம் என்று புரியவில்லை.

*யாரோ மண்டபத்தில் உட்கார்ந்து எழுதி* கோதையின் பேரை போட்டுவிட்டார்கள் என்று இராசாசியே சொன்னாலும், 3 வயதில் சிவனை பித்தன் என்று பாடிய அந்த ஞானக்குழந்தையின் நிழலில் அமர்ந்து கொன்டு அது பாடியதையே திரும்பப்பாடும் சிவநெறியாளரும் இராசாசியை ஒப்புக்கொள்ள மாட்டார். ஞானசம்பந்தரும் ஆண்டாளும் இம்மண்ணின் ஞானமரபின் வலிமையை சொல்லும் இலக்கணங்கள், குறியீடுகள்.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் ஆண்டாள் எழுதியபோது அவருக்கு 10 வயதா, 12 வயதா அல்லது 14, 15-ஆ என்று தெரியவில்லை. ஆனால், முற்போக்குகள், அந்தச்சிறுமியை, பாலியல் உணர்வுகளை மரபைத்தாண்டி வெளிக்காட்டி தன் உணர்வுகளுக்கு விடுதலை அளித்த புரட்சிக்காரியாக சித்திரிப்பதையும், நாச்சியார் திருமொழியை கொக்கோக நூலென்று சொல்வதையும், அந்தக்கால ஆணாதிக்கத்தை, பெண்ணுக்கெதிரான கட்டுப்பாடுடைகளை, தனது காம உணர்வுகளை எழுத்தில் பதித்ததன் மூலம், கட்டறுத்த, மீறிய பெண்ணியவாதி என்றெல்லாம் சொல்வதையும் எண்ணிப்பார்த்தால், அதிகமாக தலை சுற்றுகிறது; தலை என்றவொன்று ஏனிருக்கிறது என்று கூட தோன்றுகிறது.

கோதையை எண்ணும்போது, சீருடை அணிந்து பத்தாம் வகுப்பு படிக்க, பள்ளிக்கூடம் போகிற பிள்ளையொன்று நினைவுக்கு வருகிறது. அந்தப்பிள்ளை மாபெரும் படைப்பாளி, பத்தியின் அடையாளம், இறையின் இன்னொரு வடிவம் என்று பல காட்சிகளை காணத்தருகிறது. ஆனால், உள்ளங்கையை நீட்டு என்று, எல்லா பள்ளிக்கூடங்களின் (ஆத்திகம், நாத்திகம்...) இன்றைய ஆசிரியர்களும் பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்; சிலர் வரிசையாக, சிலர் கும்பலாக.

சிவநெறியை பற்றி நின்று, மால்நெறியை சிறிதும் அறியாதவனாயிருந்தாலும், பத்திமை என்பது எல்லா நெறிக்கும் பொதுமரபுதான்; அந்தப்பொதுமரபிலும், தமிழ்மரபிலும் நின்று ஓரிரு மடல்களை நான் எழுதினாலோ, அதிலேதும் பிழைத்தாலோ அன்னை ஆண்டாள் என்னைமட்டும் வெறுத்துவிடவா போகிறாள்?

(தொடரும்).

அன்புடன்
நாக.இளங்கோவன், 14/1/18

No comments: