Pages

Saturday, October 23, 2010

காஞ்சி காமகோடிப் பீடத்தின் ஆசியில் தமிழ்-யுனிகோடு படுகொலை

இணையத்தில் தமிழ் வளர்கிறது வளர்கிறது
என்ற பேதைத்தனமான போதையை ஏற்றி விட்டு
எத்தனைத் தமிழ்க் கேடுகளைச் செய்யமுடியுமோ
அத்தனையும் இணையத்தில் அரங்கேறுகின்றன.

தமிழக அரசும் இந்தப் போதையில் மயங்கிப் போய்,
ஏதோ தமிழ் இணையத்தில் நடக்கிறது என்று
பல இலட்ச உரூவாய் செலவில் தமிழ் இணைய
மாநாடு நடத்தவும் செய்தது. ஆனால் அந்த
மாநாடு முழுக்க அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட
4 அரங்கங்களும் 5 நாள்களிலும்
ஈயோட்டிக் கொண்டிருந்தன.
அமைச்சர்கள் கலந்து கொண்ட
உரைகளில் மட்டும் அவர்களோடு
வந்த கூட்டமே அரங்கத்தை நிறைத்தது.
இது குறித்து எழுதினால் நீளும். சுருக்கமாகச்
சொன்னால் “தமிழ் இணையம் என்ற பெயரில்”
தமிழக அரசாங்கம் ஏமாற்றப்படுவதுடன்
அரசாங்கத்தின் கண்களையும் கட்டிவிட்டு
பயங்கர தமிழ் மோசடிகள் நடக்கின்றன என்பதைப்
பலரும் அறிவர்.

இது கணி சார்ந்தது, இணையம் சார்ந்தது
என்பதால் அரசினர்க்கு இது பற்றி
அறிவிக்கும் நிலையில் உள்ளவர்கள்
செய்யும் ஏமாற்று வேலைகளால் மட்டுமே இந்த மோசடிகள்
நடக்கின்றன என்பது இன்னும் அரசு உணராமல் இருக்கின்றது.

அப்படிப் பட்ட மோசடிகளில் மிகப்பயங்கரமான
மோசடி நாம் அனைவரும் இணையத்தில்
பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும்
மோசடி. சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும்
தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத
எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று
செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu
எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?

அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே
யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட
இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட
இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும்.

தமிழக அரசு வழியாக இதைச் செய்ய முடியாது
என்று கொல்லைப்புறமாக நுழைகிறது சமசுக்கிருதம்.
யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக
யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும்
தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil"
என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும்,
“ஆகா தமிழ் என்று இருந்தது
இப்போது Extended என்ற சொல்லையும்
சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே
காட்டுகிறது” என்று மகிழ்வார்கள் அல்லது
மயக்கிவிடலாம் என்ற குறிக்கோளோடு
இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது.

யுனிகோடு சேர்த்தியத்தோடு நெருக்கத்தில்
இருக்கும் தமிழ் இணையம் சார்ந்த
சில அமைப்புகளின் உறுப்பினர்களும்
இந்தத் தமிழ்ப் படுகொலைக்கு உடந்தையாக உள்ளனர்
என்ற செய்திகள் கவலைக்குள்ளாக்குகின்றன.

இது பற்றிக் கவலைப்படுவது போல,
தமிழ் இணைய மாநாட்டினை, செம்மொழி மாநாட்டுடன்
நடாத்திய உத்தமம் (INFITT.org) என்ற குழு
காட்டிக் கொண்டாலும் யுனிகோடு சேர்த்தியத்துக்கு
ஒரு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டது.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட யுனிகோடுவிற்கு
விழப்போகும் மரண அடியை
தமிழக முதல்வர், தமிழக தகவல்+கணித்துறை
அமைச்சர், தமிழகக் கணித்துறைச் செயலர்
போன்ற யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்கள்
உத்தமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பலர்
சொல்கிறார்கள். தமிழகக் கணித்துறைச் செயலரோ, அல்லது
அமைச்சரோ ஒரு வரி மறுப்பை யுனிகோடு
சேர்த்தியத்திற்குச் சொன்னால் போதும்
இந்தப் பச்சைப் படுகொலை நிகழாது.

ஆனால் அரசாங்கம் யாரையெல்லாம்
கணித்தமிழ்க்காவலர் என்று எண்ணியுள்ளதோ
அந்த அதிகாரிகளும் ஆர்வலர்களும் அரசிடம்
இதனை எடுத்துச் சொல்லாமல்
மறைக்கிறார்கள் என்ற செய்திகள் இணையம்
பற்றியும் யுனிகோடு பற்றியும்
அறிந்த வல்லுநர்களைத் துயரமடையச் செய்கின்றன.

மரணப்பள்ளத்தாக்கில் இருக்கும் தமிழ்
யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக
அரசு அங்கீகரித்தது என்பது கவனிக்கத்தக்கது.
அணிமைய செம்மொழி மாநாட்டின் போதுதான்
தமிழக அரசு அங்கீகரிப்பை
வெளியிட்டது. ஆனால் அது முடிந்த
3 மாதங்களிலேயே யுனிகோடுவை
சமசுக்கிருதமயமாக்கும்
முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற
நிலையில் இருக்கின்றது கவலைப்பட
வைக்கும் விதயமாகும்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிய
பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்,
தமிழுக்கு ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களைப் பற்றி
விரிவாகப் பேசினார். அவரின் அச்சங்களை
உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது
இந்தப் பேராபத்து. Sanskritizing Tamil Unicode என்ற
பல்நோக்குத் திட்டத்தின் கீழ்
செயப்படும் இந்தச் சமசுக்கிருதமயமாக்கலின்
மூலக்கடிதம் (இணைப்பில் காண்க)
யுனிகோடு சேர்த்தியத்திற்கு எழுதப்பட்டதாகும்.
இதைத் தொடர்ந்து காஞ்சி காமகோடிப் பீடம்
தொடர்புடைய பல மேற்கோள்களும் ஆதரவாளர்களும்
இதற்குப் பெருகிவருகின்றன.

யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை
தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள்
25 அக்டோபர் 2010. அதற்குள் மறுப்பு போய்ச்
சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி,
Ja Jaa Ju Juu போன்ற எழுத்துக்கள்
இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா
சமசுக்கிருத எழுத்துக்களையும் உள்வாங்கி
அழியத் தொடங்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கும்.

தமிழக அரசால் வளர்க்கப்பட்ட யுனிகோடு,
அரசு அறியாமலேயே அழியத் துவங்குதற்கு
இன்னும் இருக்கின்ற நாள்கள் இரண்டு மட்டுமே.

http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n30/mode/1up

மேற்கண்ட சுட்டியில், அடையாளம் இன்னதென்று
தெரியாமல் இருக்கும் எழுத்துக்களைக் காண்க.
அவையெல்லாம் தமிழில் புகக் காத்திருக்கும்
அலங்கோலங்களில் சில.

கீழே இணைப்பில் இந்த முனையலின் ஆதாரக்
கடிதத்தைக் காண்க.

இப்பொழுது வேண்டும் என்றே விட்டு விட்டு
இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஆரியத்தைத்
திட்டி அரசியல் செய்வதற்குப் பதில் தமிழ்க்காவலர்கள்
விழித்துக் கொள்ளட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்