Pages

Saturday, December 15, 2001

டெங்கு காய்ச்சல

என்னயென்ன குளிர்கிறதே குளிக்க வேண்டுமா ?...
என்றஎன்னை நோக்கி என்னரசி சொன்னதுதான்,
'சாக்கு சொல்லாதே! மூக்குறிஞ்சி நிக்கிறதாய்

போக்கு காட்டாதே! போய்க் குளிப்பாயே! ';
உரசிச் சொல்லரசி சுரமா எனக்கு ?...
உரசச் சொல்லும் சரசெனக்குப் புரியாதா ?;
பள்ளி பறக்கும் பிள்ளைகளைப் பார்த்தீரா ?
தள்ளி செல்வீரே! தாண்டி செல்வீரே!
கையைக் காலை ஆட்டிக் காட்டி
தையலைக் காலை, நையச் செய்யாதீரே!
விடியலுக்கு வழிதெரிய விளக்கேற்றி வைத்துவிட்டு
வடிசலுக்கும் வழிவகைகள் முடிக்கையிலே,
பிடித்த ணைக்கப் பித்தானான் கணவன்என்று
பிடிகொடாப் போனாலும் புன்னகைதான் பூவிதழில்!
பூவிதழின் ஓரத்துப் புன்னகையின் நாட்டியத்தைப்
பூரித்துப் பார்த்துவிட்டு போர்வைக்குள் யான்போனேன்!.
போமுன் சொன்னேன்! போய்வருவாய் கண்ணேநீ!...

நோய்வருமே நெடுநேரம் தூங்கிடின்! எழுக!,
போய்வருவோம் பள்ளிநீர் போய்வருவீர் வேலைக்கு!
தாய்மதியையும் தான்பார்த்து சடுதியில் சொல்லிவிட்டு
சேய்களெல்லாம் பள்ளிக்குச் சென்றவுடன், சேதியென்ன
இன்றின்னம் தூங்குகிறீர் ? சிறுவிடுப்பா முழுவிடுப்பா ?
என்றன்னம் கேட்டதுமே 'உரசிப்பார் ' சிறு சுரமே!
என்றதுமே உரசியதில் பாதி சுரம்போக,
வென்றதுவே என்னுள்ளம் என்னில்லம்!; பெண்ணுள்ளம்
பத்திட்டு, படுக்கையிட்டு பாங்காய் போர்த்திட்டு
மத்திட்டு மையாக் கஞ்சி கடைஞ்சிட்டு
பெத்திட்ட பிள்ளைக்குப் புகட்டுபோல் புகட்டினாள்
பெத்திடா பிள்ளைக்கவன் அன்னையைப் போலே!
எத்தனைதான் உறங்கிடினும் வியர்க்கக் காணோம்!
அத்தனைக்கும் மாத்திரைகள் உண்டேன் அன்றோ!
மேலங்கே குளிர்கிறதே! மேலொன்றைப் போர்த்திட்டார்!
காலங்கே குதிக்கிறதே! காலையும் அமுக்கிட்டார்!
அய்யோ தலைவலி! அங்கே கால்வலி!
மெய்யோ முழங்கால்! மூட்டும் இருக்கா ?
முதுகின் நடுவில் முனகல் வருதே!
எதுஎன் சொல்வேன் மூச்சின் வேகம் ?
காய்கதிர்ச் செல்வ கருணை இலையோ
காய்ச்சல் காலம் நாளும் நீளுமோ ?
ஓய்ச்சல் வேண்டி வைத்தியம் நாடிப்
போய்ச் சேர்ந்தேன் பன்னாள் வைத்தியர்!

இளங்கோ இளங்கோ இந்தாப் பிடிங்கள்!
இவைதான் மருந்து! மொத்தம் மூன்று!
அடைபாய்டு இருந்தால் வெள்ளையில் போகும்!
மலேரியா வானால் சிவப்பில் போகும்!
எதுவா னாலும் மஞ்சளில் மறையும்!
மறையா நின்றால் மறுநாள் வருக!
இலையேல் உமக்கு இனிய மறுநாள்!
நன்றி அய்யா! நன்றி நன்றி!
ஒன்று ஒன்றாய் தின்பதைக் காட்டிலும்
இன்றே எனக்கு எல்லா மருந்தும்,
ஒன்றாய்க் கொடுத்த நீவீர் வாழி!
நன்றாய் இருந்தால் நாளை வேலை!
இன்றேல் நாளை மறுநாள் வருவேன்!

என்ன நோவிது ? என்ன நோவிது ?
இன்னமும் போகலை இரண்டு நாளாகியும்! ?
புறப்படு போகலாம் வைத்தியர் மனைக்கு
முறைப்படி அதுதான் அவர்செயச் சொன்னது!
மூன்றிலும் போகாக் காய்ச்சல் கொண்டார்!
மூன்றினும் மேலே இடெங்கென் றொண்டு!
பிடித்துத் தாரும் குவளைக் குருதி!
படித்துச் சொல்வேன் அதுவே அதுவா ?
அரைநாழி ஆய்ந்தார் அதுவே! அதுவாம்!
அதுதான் புதிய 'இடெங்கு 'க் காய்ச்சல்!
இளங்கோ நீங்கள் இடெங்கு கொண்டார்!
இதோ அணுக்கள் எண்ணிக்கை பாரீர்!
இருக்க வேண்டியவை இருநூ றாயிரம்!
இருப்பவை வெறுமே இருப தாயிரம்!
ஏற்றியில் ஏறிஇடப் புறம் திரும்புக
இருக்கும் அறையில் ஏறிப் படுக்க!;
எல்லா வசதியும் உண்டங்கே! ஆகும்
அய்ந்து நாள்களுக்கு மேலே! அறிக!
கோசு கொடுப்போம் ஊசி போடுவோம்!
குருதி வாங்கி பிளேட்லெட் பிரித்து
கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே ஏற்றி
அஞ்சு நாளில் ஆளைச் சரிசெய்வோம்!
அதுதான் இடெங்கு மருத்துவ மிங்கு!
அறிந்தேன் அய்யா வாழி நீவீர்!
இடெங்கு என்றால் என்ன அய்யா ?
சரியாய்க் கேட்டார் சொல்வேன் கேளீர்!
அறிவீர் அறிந்து சொல்வீர் பிறர்க்கும்!
ஊரில் நாட்டில் கொசுக்கள் மிதக்கும்!
மிதக்கும் கொசுக்கள் பரப்புதல் பலவே!
கழிவில் வளர்வது இரவில் கடிக்கும்!
இரவில் கடிப்பது மலேரியா கொடுக்கும்!
இப்படி இப்படி எத்தனையோ உண்டு!
அப்படி உள்ளதில் சிறுமாறு பாடு!
இந்தக் கொசுக்கள் நன்னீர்க் கொசுக்கள்!
இரவில் தீண்டா பகலில் மட்டும்!
பகலில் கடிக்கும் கொசுக்களை எல்லாம்
இகழ்தல் வேண்டாம் இடெங்கு வருமே!

சென்னையீரே சென்னையீரே பிறந்ததெல்லாம் தில்லியாம்!
பூத்திருப்பது சென்னைமுதல் பெரும்புதூர் வரையாம்!
பிள்ளைகள்தான் இடெங்குக் கொசுக்களுக்கு பிடித்தவையாம்!
பிடித்துவையும் அவர்களையே! பொல்லாதவை பகற்கொசுக்கள்!
பட்டதை நானும் சொல்லி விட்டேன்!
பகற்பொழு தினிலும் கொசுவோட் டுங்கள்!
பத்துநா பட்டது எல்லாம் போதுமய்யா!
பத்துநா பாத்துப் பாத்துப் போர்த்தியவள்
பித்தன் இன்று எழுதக் கண்டு
மஞ்சநீர் கலக்கி மண்டையிலும் தெளித்தாளே!
அன்புடன்

நாக.இளங்கோவன்


தமிழுலகம், திண்ணையில் எழுதியது

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு..!

Saturday December 15, 2001

'கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ' - ஒரு கடிதம்

நாக.இளங்கோவன்

அன்பின் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம்.

'கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ' என்ற தங்களின் கட்டுரையை திண்ணையில் கண்ணுற நேர்ந்தது. அது குறித்தே இம்மடல்.

கே.கே.சா போன்றோரைக் காட்டும் இக்கட்டுரை நீண்ட காலத்திற்கு முன்னெழுதியதன் மறுபதிப்போ ?

இருப்பினும் சில கருத்துகளை நான் எழுத விளைகிறேன்.

அடிப்படையில் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு பட்டதாயிருக்கும். பல கருத்துகள் வரும்; வர வேண்டும்; அதில் எனக்கு அணுவளவும் அய்யமில்லை. ஆனாலும் தங்களின் இந்தக் கட்டுரையில் கருத்துகள் பல இடறுகின்றன. அவை மாற்றுப் பார்வை என்பதை விட காற்றுப் பார்வை என்பதாய் எனக்குப் படுகின்றன.

1) 'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி ' என்று யாரோ எழுத, அதைக் கண்டு நீங்கள் 'சிறு குழந்தையிலே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள என்ன 24 மணி நேரமும் சட்டியைக் கழட்டாமல் இருக்கலாம் ' என்றவாறு எழுதியிருப்பது, கற்புநெறி என்ற உளநெறியை உடல்நெறியாய்க் கருதி எழுதியதாகத் தெரிவது அழகாக இல்லை. நீங்கள் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.

2) கண்ணகியும் கோவலனும் காதல் செய்து மணம் கொள்ளாமல் பெற்றோர் செய்து வைக்கும் மணம் என்பதால் என்ன தவறு இருக்கமுடியும் ? இது எப்படி 'கண்ணகிக்கு காதல் செய்து திருமணம் செய்து கொள்ளத் தகுதியில்லை ' என்பதுவாகும் என்று விளங்கவேயில்லை.

3) முதல் இரவிலேயே கோவலனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்று கூறுகிறீர்கள். அதோடு கொலைக்களக் காதை வரை கண்ணகி கோவலனுடன் நெருங்கி அளவளாவியதே இல்லை என்று கருத்துரைத்திருக்கிறீர்கள்!

மதுரைக்காண்டத்தை மிகவும் விரும்பி சிலம்பின் புகார்க்காண்டத்தைப் படிக்காமல் விட்டுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது :-)

புகாரில், மனையறம்படுத்த காதையின் இறுதியிலே, கோவல கண்ணகியரின் சில ஆண்டு இன்பவாழ்வை ஒரே செய்யுளில் அழகுற ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

'தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்

காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்

தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்

நிலையாமை கண்டவர்போல் நின்று.

இப்பா ஒப்பற்ற விளக்கங்கள் கொண்டது.

இதை நீங்கள் எப்படித் தவற விட்டார்கள் என்று தெரியவில்லை.

கண்ணகியின் மேல் இன்பமில்லை, அவளால் முடியவில்லை, அதனால் எல்லாம் முடிந்த மாதவியிடம் அவன் போகிறான் என்றவாறு நீங்கள் எழுதியுள்ளது தவறு.

அப்படியே ஒரு பெண்ணிடம் குறை இருந்திருந்தால், அதையே காரணமாய் வைத்து ஆடவன் பிற பெண்டிர் தேடுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? சிந்து பைரவி சிந்துவைப் பார்த்தவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொள்வதை சங்க இலக்கியத்தில் பார்த்து விட்டு நீங்கள் சற்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றே கருதுகிறேன்.

4) சோமகுண்டம், சூரிய குண்டம் இவைகளில் மூழ்குவது 'பீடன்று ' என்று கண்ணகி சொன்னது அருமையான இடம். அங்குதான் அவள் பெரியாரை விட பெருந்தாயாகத் தெரிகிறாள். ஆனால் நீங்கள் அவ்வாறு அவள் மூழ்கி எழாதது 'எங்கே மூழ்கி எழுந்ததும் கோவலன் வந்து விட்டால், தன் கற்பு நெறியை உலகுக்குக் காட்டமுடியாமல் போய் விடுமோ என்று கண்ணகி அஞ்சியதாகத் தெரிகிறது ' என்று நீங்கள் விளக்கியிருப்பது, 'கற்பு ' என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவாக எங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்கத் தூண்டுகிறது. 'கற்பு ' என்பது நீங்கள் கூறியது மாதிரி சட்டி போட்டு மறைக்கும் பொருளா ? உடல் நெறியா ? உள நெறியா ? கண்ணகியே, தான் தெய்வம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி எல்லாம் நடந்து கொண்டாள் என்ற தங்களின் கூற்றுக்கு ஆதார வலு இல்லை என்றே கருத ஏலுகிறது.

5) கோவலனின் சலன உள்ளம் பற்றி நீங்கள் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. அவன் உளநிலையை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அருமை.

குறை கூறல் என் நோக்கமல்ல. விளக்கம் அறியும் ஆவலே நோக்கமாகும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

திண்ணையில் எழுதியது்