Sunday, November 25, 2012
நெஞ்சினீங்கான் பிறந்ததுவே!
Friday, April 20, 2012
பாரதிதாசன் வாரம் 2012
Sunday, May 16, 2010
கருப்பு நாளல்ல
ஆளுக்கொரு கையை
பின்னால் நின்று பிடித்துக் கொள்ள
சீனத்தின் சதிக்கண்கள்
சீரிளைமையில் குறிவைக்க
சிங்களத்தின் கத்தி பல
குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை
திராவிடத்தின்
உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.
காப்பியமாம் மணிமுடியும்
கலைந்து சரியச் சரிய
காலணிந்த சிலம்போடு
சங்கிலிகள் தளையத் தளைய
வளையாத வளையின்று
நெரிய நெரிய
நெற்றிச் சூடுமணி
எற்றி அலைய அலைய
சிந்தாமணிகள்
சிதறச் சிதற
சிந்துகின்ற குடர்க்கீழே
மேகலையோ மறைய மறைய
ஓலமிட்டுக் கதறுகிறாள்
ஓடிவரக் கூவுகிறாள்
நாதியில்லை நானிலத்தில்
பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்
ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்
பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்
சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்
சுட்டுவிழி கொட்டக் கொட்டப்
பெற்றுவிட்ட பிள்ளைகளை
உற்று உற்றுப் பார்க்கின்றாள்.
ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்
சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்
எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்
எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்
வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்
சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு
சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்
பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!
சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்
சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்
கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்
நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்
பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;
பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;
எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி
நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!
மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ
கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த
இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து
இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!
இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!
------
கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்
...நாக.இளங்கோவன்
Wednesday, April 21, 2010
பாரதிதாசன் வாரம் - 2010
Sunday, April 20, 2008
பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2008
தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர வாரம் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளான இன்று துவங்குவது, எனக்கு எழுதிட மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கியது.
பாவேந்தரின் காலம்: 29-ஏப்ரல்-1891 முதல் 21-ஏப்ரல்-1964 வரை.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்
நினைவு கூர அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இன்று அவருக்கு நான் சூடும் தமிழ் மாலை இங்கே!
படிக்க! பாடுக!
தமிழாரம் உமக்கே!
அலைமேவு கரைஓரம் அனலாக நிமிர்ந்தே
... அலமந்த தமிழோர்க்குச் சுடராக விரிந்தாய்
மலைபோலுன் தமிழேந்திப் பகைமோதிப் பலநாள்
... முகமற்றப் பழையோரின் முதலாக மலர்ந்தாய்
வலைசூழ வகைமாறிப் பிழைபோன குடியோர்
... வழிஒன்றி வளமாக வளமார்த்த வளமே
தலைநீள நிலம்வாழ தமிழ்வாழ உழைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!
பிறபாடை குடைந்தாடி முறிவாகி நிலமும்
... பறிபோகப் பதைத்தோரின் பலமான பலமே,
அறநூலைப் புதைத்தாரின் அடையாளம் எழுதி
... அவக்காரம் அவைதீர விதையான விதையே,
மறமார்த்தக் குமுகாய மயக்காறு மடிய
... முடிவான முறையோதி முனையான முனையே,
திறலூற்றுத் திசைமேவி நெருப்பாக நிறைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!
---நாக.இளங்கோவன்
அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-2008
Saturday, July 21, 2007
நடிகர் திலகத்திற்கு நினைவாஞ்சலி
சிவனைக் காண இவனைக் கண்டார்!
வீரம் கண்டார் வீரம் கொண்டார்
ஈரம் கண்டார் விழிஈரம் கொண்டார்!
வலியனாய் வளவனாய் வள்ளளாய் வசந்தனாய்
எளியனாய் ஏருழவனாய் எழுச்சியாய் எள்ளலாய்
அரசனாய் ஆண்டியாய் அப்பனாய் அறிஞனாய்
வறியனாய் முடவனாய் வண்டமிழில் எல்லாமாய்
ஒப்பும் மிக்கும் உலகில் இல்லா
கூத்தன் அவனே! கூத்தும் அவனே!
நடிப்பு இலக்கணத்தின் நாடகம் முடிய,
நடித்த சிம்மம் நன்னிலம் பிரிந்து
அயரா துழைத்த அயர்வு தீர
இயற்கை அன்னை மடிமீது தலைசாய்க்க,
பார்த்த விழிகள் பார்த்தபடி பனித்திருக்க
கூத்துத் தமிழின் மூத்தமகன் பிரிகின்றான்!
அன்னைத் தமிழுக்கு அணிசெய்த அவள்மகன் வாழியவே!
தன்நிகர் இல்லாத் தமிழ்க் கூத்தன் வாழிய வாழியவே!
கண்கள் நீர்சொரிய கரங்கள் குவித்து
கும்பிட்டுக் கூறுகின்றேன் 'போய்வா' தமிழ் மகனே!
நாளை, கும்பிட்டுக் கூப்பிடுவேன், வருவாயா கலைமகனே!
கூத்துத் தமிழின் மூத்தமகனே,
வரமாட்டாய் நீ!
வாடுகிறேன்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/01
Friday, May 25, 2007
இரியால் மட்டுமா? - கவிதை
(அரபு நாட்டில் பல காலம் பணிபுரிந்தவர் தமிழகம் திரும்பும்போது பணத்தை மட்டும்தான் எடுத்துச் செல்ல இருக்கிறதா என்று வினவும்தலைப்பில் நடந்த
தலைமை வணக்கம்
பாடல்
எங்கனும் மேவிய ஈரம்இல் மண்ணின் இடுப்படியில்
அறிந்தனம் பொன்மணி அள்ளி முடிகையில், சிந்தைஒன்றிச்
பயிரைப் பிரிந்திட்டப் பாலைப் பொழுதினில் போர்த்தமுடி
விதைக்கும் வனங்கள் விளைகையி லெண்ணுவம் புண்பரங்கி
அணியும் உடைகள் அரபியன் பீடது சொல்கிறதே
பேசும் மொழியினில் வீசும் ஒளியினில் வாளரபி
முகமே முகத்தின் சுடரே சுடர்தரு நெஞ்சுடைய
(பாடல் நிறைவு)
இறைவணக்கப் பாடல்:
தலைமை வணக்கப் பாடல்:
சபைவணக்கப் பாடல்:
"அணியோர் அணிஅணி ஆனவர்கள்" என்றதுபெரிய கூட்டு/சங்கமாகவும், சிறு சிறு கூட்டு/அணி/சங்கம் ஆக சேர்ந்தோஅல்லது பிரிந்தோ பொதுவில் காணப்படும் அமைப்பினை, குறிப்பாக தமிழர்களின்பெருங்குழு, சிறுகுழுத் தன்மையைச் சொன்னது.
புற்றறு = புற்று + அறு: புற்றினை அறுதல் என்பது புற்றை விட்டு வெளிப்போதல்
ஈரம்இல் மண்ணின் = உலர்ந்த நீர் தங்காத பாலை மண்மங்கல மாதன = மங்கல மாது + அன = மங்கல மாதினை ஒத்த.அரபி மண்ணில் கால காலமாய் நித்தியக் கல்யாணிபோல் என்றும் காய்த்து வரும்பேரீச்சையை மங்கல மாதென்று சொன்னது.
ஈச்சு = பேரீச்சை
மாடதும் = மாடு + அதும்; மாடு = செல்வம், பரம்பரைச் சொத்து.(மாட்டுப் பெண் என்று சொல்லப்படும் வழக்கை நோக்குக)
ஒட்டம் = ஒட்டகம். (இந்த மண்ணின் பரம்பரைச் செல்வம் ஒட்டகம் என்று சொன்னது)
"வெளியினில் வெம்மை விதைப்பவர்" என்று சொன்னது, நமது நாட்டிலே வழி வகைஆராயாமல் நீர் வளம் இயற்கை வளம் பெருக்காமல், கண்போன படி விளை நிலங்களையும்வனங்களையும் வணிக, சொந்த, அரசியல் காரணங்களுக்காக அழித்து வரும் நம்மவரைப் பற்றியது.
போற போக்கில் "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்று நமது நிலமும்ஆகிவிடுமோ என்ற கவலையில் எழுதிய பாடல் இதுவும் அடுத்த சிலவும்.
செயிர் = நோய், அவலம், தவறு
"செயிர்செய் தமிழகம்" என்றது, நம்மூர் தவறுகளைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதாக/கொண்டதாக எண்ணுவது.
"சந்ததிகள் சீர்பெருக" என்றது நாம் அமைத்துக் கொடுக்கும் இயற்கைச் சூழலேநமது பின்னவர்களுக்கு நாம் தரும் நல்ல சீர்வரிசையாக இருக்கும் என்ற பொருளில்.
(இல்லாவிட்டால், வரும் தலைமுறைகளின் தலைமயிர் நம்மூர் வெயிலில்பொசுங்கும் வாடை அடிக்கும் நிலை வருமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது)
வளர்தரு நீழல் விதைத்திடுமே என்றது "நிழல் கொடுக்கும் பெரிய மரங்கள் கொண்ட காடுகள், வனங்கள், சோலைகள் எங்கும் வளர்ப்பதும் பெருக்குவதும்குறித்தது.
சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் படுவது, ஆங்கிலேயர்மருது பாண்டியரைக் கைது செய்ய, சிவகங்கைச் சீமைக்கு வளமாக விளங்கியமிகப் பெரிய காட்டைக் கொளுத்தி முழுவதுமாக அழித்து நாசப்படுத்தியதால். அன்று அவன் செய்த கொடுமையால் இன்று அந்தப் பகுதியில் துன்பம் மிகுந்து போய் இருக்கிறது. ஏறத்தாழ பாலையாகவே அதுவும் இருக்கிறது.இதனைப் பற்றிய மிக அருமையான வரலாற்றுக் கட்டுரையை முனைவர் இராம.கி அவர்கள்valavu.blogspot.com என்ற தனது தளத்தில் எழுதியிருக்கிறார். அனைவரும் படித்துப்பயன்பெற வேண்டியக் கட்டுரை அது.
அதன் நினைவு வர இந்தப் பாடலில் அதனைச் சேர்த்தேன். காடுகளை கண்மண்தெரியாமல் வெட்டி எறியும் நம்மவர்க்கு பட்டும் புத்தி வர மாட்டேன்கிறதே என்ற எண்ணத்தில் சொன்னது.
"அதையும் கடந்தோ அரபின் வறட்சி?" என்றது, அந்த வறட்சியில் துவண்டு பலர்அரபிய, மலேயப் புறங்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வருகிறார்கள். ஆகவே, அரபிப் பாலைவனத்தின் வறட்சியை விட நம்மூர் இராமநாதபுரம், சிவகங்கை வறட்சி அதிகம் என்று சொல்ல முனைந்த பாட்டு என்றறிக.
தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்கள் நீர்தர மறுத்து அயோக்கியத்தனம் செய்து வருகின்றன. இது போகப் போக நமது ஊரையும் பாலையாக்கிவிடும் என்ற கவலையில் சொன்னது.
"நறுக்கதன் நீளம் நதியிலா"; நறுக்கு = சிறு ஓலையில் கிள்ளியது அல்லது கீற்றினில் நறுக்கியது.
அரேபியாவில் "சொல்லிக் கொள்ளும்படியான" நீரோட்ட நிலைகள் இல்லை என்றுசொல்ல வந்தது; "பண்பிங்கே" என்றது, இதனால் பசுமைக் காட்சிகள் குறைந்திருக்கிறது என்று உணர்த்தச் சொல்லியது.
"செல்லும் அணியமைத்தே" என்றது, இயற்கை வளங்களில் அக்கறை கொண்டோருடன்மட்டும் நம்பிக்கை வைப்பது என்று சொல்லியது. "செல்லும்" என்றது செல்லுபடியாகிறஅணியம் என்ற பொருளில்.
அரபிய ஆடவரின் உடைகளில் இருக்கும் கம்பீரம் மற்றும் அதில் அவர்கள் அடையும்பெருமை குறித்துச் சொல்லியது.
"பணியும் பழைய அரபு" என்றது, இறைவனைப் பணிகின்ற அரபியர்; அவர்களின் பழையதலைப்பாகை மரபு நமது ஊரில் நாம் துண்டு அல்லது நீளத் துணியைத் தலையில்சுற்றிக் கட்டுவது போலாம். பண்டைய கால தமிழ மேற்கத்திய உறவுகளின் கலப்பா,அல்லது இயல்பா என்பது ஆயத் தக்க விதயம். அரபியாவில் நம்மூர் தலைப்பாகைமாதிரி அணிபவர்கள் சிலரைப் பார்த்திருக்கிரேன். இன்னும் செங்கடல் சுற்றிய பகுதிகளிலும் சூடானின் சில பகுதிகளிலும் வேட்டி, தலைப்பாகை அணியும் பழக்கம் இருப்பதாகச் சொல்லிதமது தந்தையார் படத்தைக் காட்டினார் ஒரு சூடானியர். அதனைக் காட்டாகச் சொல்ல வந்து,நமது மக்கள் வேட்டியையும், துண்டையும் ஏழைக்கும் பிச்சைக் காரனுக்கும் மட்டும்சொந்தம் போல எள்ளுவதை வருந்திச் சொன்னது இப்பாடல்.
மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ஆடை தரிப்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.ஆயினும் இகழாத பண்பும், பழம் மரபும் மனதில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்சொன்னது. இந்த வகையில் அரபிய ஆடவர் என்னைக் கவரவே செய்கிறார்கள்.
"பேசும் மொழியினில் வீசும் ஒளியினில் வாளரபி!"
வாளரபி = வாள் + அரபி; வாள் = ஒளிர்தல் (புற்றில் வாள் அரவும் அஞ்சேன் என்றமாணிக்கவாசகரின் வரியை கவனிக்கவும்).
தாய்மொழியைப் பேசும்போதும் அதனை மிகத் தூய்மையாக அவர்கள்பேசும்போது, ஒவ்வொரு அரபியும் பெருமிதத்தோடு ஒளிர்கிறார்கள் என்றுசொன்னது.
பலரும் மொழியின் தடம் மறந்து பேச்சிலும் எழுத்திலும் பொறுப்பற்றுக் கிடப்பதையும்அவர்கள் மொழி வீசுகிறது என்றும் சொன்னது. வீச்சம் என்றால்
"தேசுடைய இலங்கையர் கோன்" என்று சுந்தரர் பெருமான் சொல்வார்."தேசுடைய விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி" என்பார் மாணிக்கவாசகர்.
விள்ளோம் = சொல்லோம்; விள்ளுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள்.
பகம் + ஏ = பகமே;பகம் = பிரிவு, பகுப்பு, பிளவு.
அற்புதமான நமது தமிழையும் தமிழ்த் தொன்மங்களையும் அறியாதவர் மற்றும் அறிய மறுப்பவர், முக்கியமாக அதனை"அவமதிப்பவர்", "தமிழத்தில்" இருந்து விலகிப் போய்விடுவர்.
"பரமன் தரு தமிழே" என்றது, "பண் ஆர் இன் தமிழாய் பரமாயப் பரஞ்சோதி" என்றசுந்தரரின் மொழியால் என்று அறிக.
தொகமே = தொகுப்பு; தமிழ் என்பது மொழியாகவும், பண்பாடாகவும்,தொன்மமாகவும், நெறியாகவும், செம்மையாகவும், நமது முகவரியாகவும்,நமது முக ஒளிக்கும் பெருமைக்கும் நமது குமுக முன்னேற்றத்திற்கும்நமது அடிப்படைகளைப் பேணுவதில் இருப்பதால், பல் வேறு சாதி சமயவேறுபாடுகள் கொண்ட நமது நாட்டில் நம்மை இணைப்பதற்கும் தொகுத்துச்சேர்ப்பதற்கும் தமிழை விட்டால் வேறொன்றுமில்லை என்று அதன் உயர்வையும்உண்மையையும் சொல்லிப் பாடிய பாடல் இது.
இறுதியாக, இங்கே காணக்கூடிய மக்களின் அன்றாட வாழ்வில்பெருமிதமாகக் கருதுகிறார்கள் என்பதனை, நாம் மற்றும் நமது மக்களோடுஒப்பிட்டுப் பார்த்து நிறைகளைப் பற்றிச் சிந்திக்க இடம் நிறையவே இருக்கிறது என்று சொல்ல முனைந்த பாடல்கள் இவை.
Saturday, April 28, 2007
பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து
புதுவையில் பிறந்தவன் புலமையில்
புலன்களில் பழந்தமிழ்ப் பதித்தவனே!
புதுமையைப் புழங்கிடப் பொழிந்தனன்
புலர்தரு சுடரொளிக் கவிதைகளே!
புதுக்கிய தமிழினைப் பருகினர்
படர்ந்தனர் படையெனத் தமிழ்நிலமே!
புதுப்புதுக் கனவினைத் தொடக்கினை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!
மனிதரை மயக்கிய மடமைகள்
முழுதினை முகமற மிதித்தவனே!
குனிகொடு குணத்தினைக் குலத்தினில்
குலைத்திடக் குறைவறக் கொதித்தவனே!
இனிதுறு இயற்கையின் இயல்புகள்
இதமுடன் இலங்கிட இசைத்தவனே!
கனிமொழிக் களத்தினைக் கிளர்த்தனை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!
திரவிடம் தழைத்திடத் தமிழரைத்
திரட்டிய தமிழ்வழித் தளபதியே!
பரவியத் தமிழியம் பளிச்செனப்
பகைகளைப் பதைத்திடப் பழக்கினதே!
தரணியில் மகளிரைத் தடுக்கியத்
திரைகளை வெடுக்கெனத் துணித்தவனே!
திரவியக் குவியலை வெறுத்தனை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!
அன்புடன்
நாக.இளங்கோவன்
28/ஏப்ரல்/2007
Tuesday, April 03, 2007
தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...
குன்றி ரண்டு குறுகி மெல்ல
ஒன்றை ஒன்று ஒத்திக் கொள்ளும்
கொல்லி வனத்துக் கூட்டைச் சுற்றி
மல்லி நிறமா லையிடுமீ ரருவி!
தென்றலொடு சந்தமிடும் சாதித் தேக்கமரம்
கொன்றையொடு கைகுலுக்கிக் கூடவரும் மூங்கிலுடன்
சந்தனத்தை முத்தமிட தவமியற்றும் மருதமரம்,
எந்தவத்தோர் இளைப்பாறும் முக்கனிபெய் முதுமரங்கள்!
இத்துனையும் காவலென் கொந்தமலர்த் தோட்டத்தில்;
அத்துனையும் அசைந்தாடும், அவளோடு நான்வந்தால்!
வகிடிட்ட வாடாமல்லி வரப்பிட்டே னவள்நடக்க,
முகிலையும் வாவென்பே னவளுக்குக் குடைபிடிக்க!;
சுற்றிநின்ற சூரியகாந்தி சூரியனை வேவுபார்க்க,
முற்றிவிட்ட மல்லிகையோ முத்தமிடு மவளுக்கு!
பச்சைஇக் கிளிகளையேப் பயிரிட்டு, அவர்மேல்
இச்சைகொள சேர்த்தனவோ வெள்ளைநிறக் கொண்டைகள்?,
மெச்சிஎனைக் கொண்டாள் கண்டாள் தூய
துச்சமது இல்லாதத் தும்பைச் செடிகளைத்தான்!
மெல்லிடைதான் காட்டி மெல்லவேக் குனிந்தனள்
சொல்லியதால், தும்பைகள் சிந்தினவே தூமலர்கள்!
சின்னஞ்சி றுமலர்கள் சிந்தலையேத் தங்கிய
சின்னவ ளங்கைதான் சிவந்ததையே நானறியேன்!
ஒருதும்பை ஓட்டைக்குள் மறுதும்பை செருகியவள்
இருதும்பை மாலைகளை ஒருநாழியில் கோர்த்திட்டு
ஒருதும்பை மாலைதனை என்றனுக்கு சூட்டிவிட்டு
மறுதும்பை மாலைக்கென் மங்கையவள் குனிந்தாளே!
மங்கையை மணந்ததால் கோவித்த கொழுஞ்சிப்பூ
எங்கையை இழுத்திட்டு இருநொடிகள் தானழுக,
தன்கையை தவளவிட்டு அதனழுகை வடியவிட்டாள்
அங்கையை பற்றுதற் காசையுடன் நானெருங்க,
துள்ளியோடி னளேதொட்டாற் சினுங்கித் தோட்டத்துள்!
இருகாணி மொத்தத்தில் என்சினுங்கித் தோட்டம்!
ஒருமானின் வெருக்கனவே ஓடினாள் குறுக்காக
ஒருகையில் பாவாடை, மறுகையில் மாராப்பு,
வருவேனா வெனப்பார்க்கும் கெண்டைகளின் பரபரப்பு!
"விண்நீலம் மறைத்திடவே விரைகின்ற மேகம்போல்
என்தோட்டம் சினுங்கியதே அவள்சென்ற பாதையெலாம்!!"
என்னவொரு காட்சியிது என்றேநான் களித்திருக்க,
சின்னவளின் சீறடியில் கோவிக்கும் கொலுசோசை!!
இதுகாறும் கேட்கலையே இப்பொழுது எப்படியே,
அதுதேடி நானெருங்கி அப்படியே திகைத்தேன்!
விரைந்தோடிப் போகையிலும் ஒலிக்காத மெல்லியலாள்
"சினுங்கிகள் சினுங்கையிலே சீண்டினவா மவள்கொலுசை!!"
Thursday, October 05, 2006
மரபுகள் சமைக்க! (வெண்பா)
வெண்பாப் பட்டறையில் எழுதியது)
வெண்பா வரையும் கவிஞ, நிறைநண்ப!
அன்பால் வரைவன் சுவைத்தனனாய்;-புண்போல்ஆம்
தென்பால் வரைவில் மொழிக்கூட்டம்; முள்விலக்கி
தண்பா வரைதல் தலை!
(1)
மரபைச் சமைக்கவிஞ உந்தம் கவிதைச்
சரமென் மனத்தே மயக்கி - விரவி
விரல்களை ஈர்ப்பதேன்? நும்முயல்வே! மேல்நில்
தரஞ்சேர் தமிழே படை!
(2)
படிபடி பாரதி பாடிப் படிநீ
படிபடி பாரதி தாசன்! - படிக்கின்
படிப்படி ஏறிடும் சொல்லும் பொருளும்;
படித்தவர் சூக்குமம் கேள்!
(3)
திரிதிரி கோல்களைத் தூக்கித் திரிநீ
திரிதிரி பாக்களை யாப்புள் - கிரிபோல்
திரிதிரி தேனன கீதம் மறையே
திரிதிரி நுட்பமும் உள்!
(4)
நிகண்டொன்றை கையோடே நீகொள்வாய் அன்றேல்
அகராதி அக்குள் செருகி - புகழ்தக்க
மேகலையோ கம்பமோ ஒன்றில் நிலைத்திட
வேகமிகப் பாடுவாய் காண்!
(5)
மங்கையுடன் கூட்டத்தை மெய்மறந்தே யாத்திடவள்
அங்கையின் ஓர்வரியும் ஓர்பாட்டாம்! - நங்கையின்
கொங்கையும் நற்கொசுவம் உச்சிமயிர் ஒவ்வொன்றும்
உங்கவியில் ஏங்கிட வை!
(6)
ஆடவனின் தோள்வலியை ஆள்வலியைத் தீட்டுபெண்ணே!
கூடவரச் சாகசமேன் கேளுபெண்ணே! - வேடன்ஆய்
ஊடலையும் போக்குவித்த போகத்தை வார்க்கையிலுன்
வாடலையும் தேடலையும் சேர்!
(7)
குத்தாட்டம் போட்டாலும் கும்மாளம் போட்டாலும்
வித்தாகப் பாட்டில் தமிழேவை; - ஒத்திடுமோ
கொத்துக்குள் ஆங்கிலமும் ஆர்மொழியும்? அக்கூட்டை
பித்தமென்றே சொல்வர் நினை!
(8)
அரபிக் கவிதை, உருதுக் கதைகள்,
பரதேயப் பட்டாங்கும் செய்தமிழில் - ஊரர்
தரம்மேவு ஆக்கம் தலையிற் சுமந்தே
வரவேணும் தென்பாண்டி ஊர்!
(9)
கட்டுக்குள் கட்டுதலே கட்டல்ல! கட்டாக்கால்
கட்டிலிலே கட்டுதல்தான் கிட்டாதே! - கட்டுப்போல்,
கட்டிடுகக் கட்டிப்பொன் கொட்டுநிகர் கெட்டிப்பா;
கட்டினவர் கண்டார் சுகம்!
(10)
குறிப்பு: கிரி = மலை, அங்கை = உள்ளங்கை, பரதேயம் - பல/அயல நாடுகள்
பட்டாங்கு = சாத்திரம்/இயல்பு
அன்புடன்
நாக.இளங்கோவன்
01/அக்/06
கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு)
கதிரவனே!
என் மண்ணில் நீ தோன்றியபோதெல்லாம் தொழுத என் கரங்கள்,
அயல் மண்ணிலும் நீ தோன்றும் போது திகைத்து நிற்கின்றன!
தையிலே பொங்கலிட்டு நன்றியைத்தான் செய்து வைத்தேனே!
நன்றி மறந்துவிட்டு நாடு தோறும் கதிர்வீசும் கதிரவனே,
அயல் மண்ணைத் தொட்டதனால் நீயும் எனக்கு அயலவனே!
மேகத்தைக் காவலிட்டு காணாமல் போகிறாயோ? இல்லை
இருளை நீ ஏவி விட்டு இல்லாமல் போகிறாயோ?
நிலவை நீ நீந்தவிட்டு நில்லாமல் போகிறாயோ?
விண்மீன்கள் கண்சிமிட்டி சொல்வதெல்லாம் இதுதானோ?
வேரிலே நீரோடு, நிமிர்ந்துன்னை போற்றிடுமென்
பயிர்களும் உன்னைப் பழித்திடும் பகைவன் என்றே!
ஓடையிலே ஆடி முடித்து என் காதலிதன்
மேனியெல்லாம் பொன்னால் பூட்டிக் கொள்ளும் வரை
உன்முகம் விடியாமுகமாக இருக்கட்டும்! பொல்லாதவன் நீ!
கண்டு கொண்டேன் உன் செய்கை கடல் தாண்டி வந்ததுமே!,
ஓடிப்போ விழிக்காதே என் முகத்தில்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
கன்சாசு சிட்டி (அ.கூ.நா)
நவம்பர் 2000
(பழைய தொகுப்பில் இருந்து)
Thursday, September 21, 2006
மண்வாசனை!
தலைக்கனம் மிகுந்து சற்றும் வளையா
நெடுநெடு தென்னை என்னை நோக்க
கொடுகொடு என்றேன் தென்னந் தண்ணீர் !
இந்தாப் பிடிஎடுத் தேக்குடி என்றே
இரண்டு இளங்காய் போட்ட துகேளீர் !
பொன்நிறச் சதையால் போர்த்தியக் காயுள்
பொன்னி நதியில் திருடிய தண்ணீர் !
தாகம் தீர தண்ணீர் பருக
மேகம் மோது தென்னை விலகி
பாதை அருகே பந்தலில் குந்தி
காயைப் பாங்குடன் இருகை ஏந்தி
வாயுடன் காயின் வாயிடம் வைத்து
தானுண்ட நீரைத் தலையில் தந்த
தென்னை போற்றித் தண்ணீர் குடித்தேன் !
தென்னை பார்த்து நன்றி சொன்ன
என்னை ஈர்த்த அந்தப் படமோ
என்சிறு நாய்ந னைத்தத் தடமே;
தென்னை அடியில் ஈரமுக் கோணம் !
சிரித்துக் கொண்டே திரும்பிப் போக
எறிந்தது தென்னை இன்னொரு காயை !
சொன்னது காதில் "சொல்லாதே வெளியில்" !
பொன்னியில் திருடிய தண்ணீர் மறைக்க
என்னிடம் தந்தது சிறுகை யூட்டு !
செந்தமிழ்த் தாய்மண் வளர்ந்ததென் னையதே !
அன்புடன்
நாக.இளங்கோவன்
Saturday, September 09, 2006
Can I get a LIFT? - poem (Not for Contest)
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!
கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!
இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!
வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!
மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!
பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!
பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !
அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )
Friday, April 21, 2006
எழிற் கொள்ளை! (செங்காந்தள் மலர்) - (உரை வீச்சு)
கொல்லையிலே கையும் குலுக்கும்.
உன் வீடு நான் வந்தால்,
அங்கேயும் என்னை வரவேற்கும்;
சாலையிலே நான் போயின், அங்கங்கே,
தன்னை என்னிடம் காட்டிக் கொள்ளும்;
கோயிலுக்குப் போயந்தக் குமரனைக் கும்பிட்டால்,
கும்பிட்ட கைகளில் குமரன் தருவான் அதை;
அது அவனுடையதாம்!
ஆறுமுகன் அள்ளித்தருவதில்
கொள்ளை ஆசை ஆருக்கில்லை?
இந்தக் கோடைகாலத்தில் கூதிர்கால நினைவுகள்!
கண் எட்டிய தொலைவு வரை ஒரே நிறம்.
காணும் திசைகளிலே பூரிப்பின் பொரிப்பு.
பச்சை வண்ணத்தின் மச்சியிலே செவ்வடுக்கு.
அதைக் கொஞ்சி விடத் துடிக்கின்ற என் குருதி!
அவற்றின் உச்சி முகர்கின்ற
உள்ளங்களின் முகங்களில் விதவிதமான ஒளி!
காலையில் பிறந்து மாலையில் மறைவதல்ல!
ஏழு மாலை மாறா வாழ்க்கை, மென்மை, உறுதி!
என் காதலியின் கண்வரிகளில் யான் கண்டு
கொள்ளை போன அதே நிறம்.
என் தாய் என்னைச் சிந்தியபோது சிந்திய அதே நிறம்.
என் மண்ணின் மைந்தர்கள், மண்ணில் கொட்டிய அதே நிறம்!
அழியாத வரலாற்றில்,
அத்தி சூடியவன் சோழன்;
பனை சூடிய சேரன்;
வேம்பு சூடிய பாண்டியன்;
"கார்த்திகை அழகன் காந்தள் சூடினன்!"
தமிழ்ப் பூவே! தமிழர்ப் பூவே!, தமிழ் நிலத்தின் பூவே!
செங்காந்தள் பூவே!
கவர்ந்திழுத்த கார்த்திகைப் பூவே!!
அன்றவள் கண்வரிகளில் கண்டபோது
களவு போய்த் தொலைந்தேன் - சொன்னேனன்றோ?!
"இன்றிவர் விதைத்ததெலாம் முளைப்பது" சொல்ல
ஏழு மாலை எழுந்து நிற்கும் இக்குலத்தின் பூவே!,
பூப்பது மென்மை! பூத்து நிற்பது வீரம்!
உன் எழிலை இன்று கொள்ளை கொள்கின்றேன் -
உன்னிடம் சொல்லிவிட்டே!
என் நெஞ்சள்ளும் கொள்ளையை எது தடுக்கும்?
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே" என்றவன் பாவேந்தன்!
கார்த்திகை மலரே, காந்தள் குலமே,
"எங்கு பூப்பினும் எங்கும் நிறைகவே" என்றனன் கேள்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏபரல்-2004
பாரதிதாசனுக்கு என் வீரவணக்கம்! (உரை வீச்சு)
பாரதிதாசனே,
எமது சொற்களுக்கு சாணை பிடித்துக் கொடுத்தவன் நீ!
தமிழின் காலமெல்லாம் உன் காலம்.
எமது கொம்புகளுக்குக் கூர் சீவியவன் நீ!
அவற்றில் வண்ணம் தீட்டாமல் விட்டு வைத்தனையே! புரிகிறது.
எமது சுண்டிப் போன குருதியையும் சுழியிட்டு ஓட வைத்தவன் நீ!
மதகுகள் அதற்கு மணல் மேடு.
எமது திசைகள் நூறெனினும், உன் திசையில் ஒன்றச் செய்தவன் நீ!
காண்கிறது தமிழ் மண் அவ்வப்போது.
எமது அகத்துக்கு முகம் கொடுத்தவன் நீ!
அங்கு வாழ்வது தீ!
எமது சிந்தைக்கு செயல் கொடுத்தவன் நீ!
தெளிவு கொண்டோ ம் யாம்.
எமது கரங்களில் வாள் தந்து சென்றவன் நீ!
இன்னும் உறை போகவில்லை அது.
எமது அறிவிற்கு, பகை அறியும் பாடம் தந்தவன் நீ!
களை அரியவும் கற்றுக் கொண்டோ ம் யாம்.
உன்னைக் கசடறக் கற்றவர் கையளவு;
கற்க வேண்டியோர் தமிழளவு.
கற்போர் தமிழர்;
கற்பார் தமிழர்!
நிற்பார் தமிழர்!
நிற்கிறேன் உன் திசை தொழுது!
விரைத்த என் விரல்கள் என் நெற்றிப் பொட்டிலே;
வீர வணக்கம் சொல்கின்றேன் உன் நாளில்! ஏற்றுக் கொள்.
வாழ்க நின் புகழ். வளர்க தமிழகங்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-200
Sunday, March 05, 2006
கனவிலிது கண்டேன்!
பங்கு கொண்ட கவிதை. தன் கனவில், மங்கை ஒருத்தி கனவு, காண்பதான
கற்பனையில் எழுதியது. அய்ந்தாம் பாடல் மட்டும் கற்பனை அல்ல. பொங்கல் காலத்தில்
ஈழ மகளிர் இராணுவம் அணி வகுத்து நிற்க, அதில் ஒரு மகள் கரண்டியால் பொங்கலைப் பொங்குவது போன்று
படம் ஒன்று ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. அதையொட்டி எழுந்தது அய்ந்தாம் பாட்டு.
- நயனன்.
கனவிலிது கண்டேன்
-----------------
நித்திரையில் நினைந்திருந்து, வஞ்சமிலா
நெஞ்சில் விளைந்தன வெல்லாம்
சித்திரை முழுநிலவுத் திரையதனில்
செழுக்கமல முகநல்லாள் முறுவலித்து
எத்திரையும் கண்டிராக் காட்சியெலாம்
எழுதியோடல் கண்டாள்; கனவெனவே!
முத்திரையாய்ப் பதிந்ததுவே மனதிலிணை
மற்றிலாதென் கனவிலிது கண்டேன். (1)
கார்முகிலின் கன்னத்தில் முத்தமிட்டுக்
கூந்தலையும் கோதிவிட்டு மலையன்னை
கூர்முகடு பேறுபார்த்துக் கொட்டிவிட்டத்
தூய்வெள்ளித் துளியெல்லாம் கூட்டாகி
ஊர்முழுக்க ஓடிடினும் ஆறெல்லாம்
ஓர்கறையும் ஏறாமல் வெள்ளியேபோல்
ஆர்கடலில் அப்படியே அடைக்கலமே!
ஆரணங்கின் கனவிலிது கண்டேன். (2)
ஆழிபோன பாதையெலாம் குன்றுகுழி;
ஆடியாடி, கழுத்தெலாம் உறுத்திடவே
ஊழிஊழி வண்டியிழுத் தமாடெல்லாம்
ஓர்வலியும் இலாமலே, செந்தரையில்
வாழிவாழி சொல்லியே பார்முழுக்க
ஓடினபல் உந்துகளை முந்தியே!
தாழிநிறைத் தண்ணீர்போல் தழும்பாதத்
தாமரையாள் கனவிலிது கண்டேன். (3)
காளையவன் வந்துவிட்டான்; விழிக்கடைக்
காட்சியதில் தெரிகின்றான்; விழுங்கினள்
வேளையது வந்ததனை கால்விரலால்
வேல்விழியாள் கோலமிட்டுச் சுட்டுகிறாள்;
பாளையது பிரிந்துபூ வந்ததுபோல்
பூமகளும் கசிந்துநீர் பூக்கின்றாள்!
மூளையது மும்மழைக்கு முத்தமிட
மாமகளின் கனவிலிது கண்டேன். (4)
கண்டனன் என்கனவில் அவள்கனவை
கலங்கமிலாப் பொன்னொத்த மேனியையும்;
பெண்ஒருத்தி, தன்னைப்போல் தானிருந்தாள்;
பசுங்கொடியாள், நல்லாள்; கரமொன்றில்
விண்திரும்பு வாளொன்றை வைத்திருந்தாள்
விடுக்கென்று உறையிலே குத்திட்டு
மண்திரும்பி, பொங்கலே பொங்கினாள்!
மங்கலத்தின் கனவிலிது கண்டேன். (5)
கண்ணகிக்கும் மாதவிக்கும் பன்னிரண்டில்
கல்யாணம்; காப்பியமும் ஆனதுவே;
பெண்குலமே பகையறுக்கப் போர்முனையில்
பிறவியெலாம் நிற்கிறதே, கவலையின்றி
மண்மகிழும் மங்கையராய் அணிமணியும்
மனைமகிழ்வும் கல்வியும் துறந்துவிட்ட
திண்மனவர் திசைனோக்கித் தேம்புகிறாள்;
தாயிவளோ? கனவிலிது கண்டேன்! (6)
சாதிமத பேதமெலாம் தரித்திரமே
சோதிவந்து சொன்னதுவோ யாரறிவார்?
ஊதிவிட்டு ஒன்றுகூடி உழைக்கிறது
ஓர்குமுகம்; வஞ்சம்பொய் மதுவில்லை;
தேதிஒன்றும் தெரிகிறது தளையறுக்க!
தீதெல்லாம் திரள்திரளாய்த் தொலைகிறது;
மேதினியில் தலைநிமிர்ந்து நிற்கிறது!
மாதவத்தாள் கனவிலிது கண்டேன். (7)
எண்திசையும் எங்கேயும் எல்லாமும்
இன்தமிழே எழுதிக் கிடக்கிறது
விண்திசையில் ஒருகருடன் வியாழம்
வெள்ளிசனி கடந்து இனுமுயர
'அண்டப் பகுதியின் உண்டை'என்ற
அழகுமொழி அட்டையில் எழுதிநின்றார்;
பண்ணொப்ப சிரித்தார் மணிவாசகர்!
பண்மொழியாள் கனவிலிது கண்டேன். (8)
பணங்காய்ச்சிப் பொறியெல்லாம் எங்குமிலை
பாலோடு சோறோ தேனோ
மணமோடு கலந்துதர பரிப்பொறிகள் (பரி=free)
மண்ணெங்கும் முளைத்திருக்கும்; மாந்தர்
குணமோடு குடியிருப்பர் பொன்கூரைக்
குடிலுக்குள்; பச்சைவயல் பக்கத்தில்
கிணம்கிணமாத் தண்ணீரும் எண்ணெயும்!
குமரியவள் கனவிலிது கண்டேன். (9)
ஆதவனின் அகங்கண்டு அடங்கிப்போய்
அடைந்துகொள் வெண்மதித் திரைமறைய
மாதவளின் இமைகளுக்குள் நெளிந்து
மெதுவே உதிக்கின்ற விழிகள்;
போதவளும் எழுகின்றாள்; நிறைநீறு,
பெருந்திலகம்; போற்றி என்றேன்!
ஈதவளோ, தமிழன்னை நானென்றாள்;
யானும் மலர்ந்தேன்; வாழிஎன்றேன். (10)
- நயனன்
01-பிப்ரவரி-2006
Saturday, March 20, 2004
தரிசானாலும் தாயெனக்கு!
"தாலாட்டு"
கையேந்தி நின்றதில்லை காசேதும் பெற்றதில்லை
கைகூப்பி வந்தவரை கைதூக்கி விட்டமண்ணே!
உன்வயிற்றில் விளைகின்ற ஒப்பற்ற முத்தையெலாம்
என்குதிரில் கொட்டிவைத்த என்வயலே புவித்தாயே!
கதிரறுத்துக் கட்டையிலே, கீழிறைந்த நெல்பொறுக்கி,
குதித்தாடிக் கூத்தாடிக் கூட்டுக்குள் போகையிலே,
கண்ணாலே கண்டதெலாம் பொன்னான நெல்மணியே;
உன்னாலே நான்வளர்ந்தேன், ஓய்வெடுப்பாய் என்நிலமே! (1)
சாமிகிட்டப் போகையிலும் போட்டதில்லை காலணியை;
பூமியுன்னைத் தொடுங்காலும் போட்டதில்லை காலணியை;
உனைப்பணிந்து ஊன்றிவைத்த ஒவ்வோரு நாத்துக்கும்
உனைமறந்து ஊட்டுவியே உகப்பான எம்பாட்டால்;
கணியுலகில் கழனிக்குக் கழிநீரும் கிட்டவில்லை
குனிந்திங்கு கூவுகின்ற குள்ளரோட பூமியிலே!;
ஊழ்பிடித்த உலகத்தின் ஓலங்கள் உறங்கும்வரை
யாழ்இசைப்பேன் ஓய்வெடுப்பாய், என்மடியில் கண்வளர்வாய்! (2)
அடித்துக் குவித்தகளம் ஆதவனின் கண்பட்டு
வெடித்து வாய்பிளந்து வீணாகப் போகுதென்று,
தாய்வீட்டுச் சீதனமாய்த் தந்தனுப்ப நெல்லின்றி
வாய்விட்டு அழுகிறியே, வாடிவிட்ட என்கழனி!;
ஆடியிலே காவேரி ஓடிவந்து சேர்ந்திட்டால்
அய்ப்பசிக்கே கதிரறுத்துக் களமெல்லாம் குவித்திடுவேன்;
நாலாறு மாசமாக நாதியின்றிப் போனதாயே,
ஓராறும் போகட்டும், ஊங்காமல் கண்ணுறங்கு! (3)
ஏர்முகத்தைத் தான்சுமந்து ஏராலே கோதிவிட்டு
வேர்ஓடும் பாதையெல்லாம் காற்றோட வைத்தகாளை
போய்முடிஞ்ச அறுப்புக்குப் போரடிச்ச கையோடு
போய்ச்சேர்ந்த இடம்தேடி பதைபதைச்சுத் தேடுறியே!
கோதிவிட்ட காளையிங்கே மேயுதற்கும் வாராமல்
சேதியின்றி சென்றதனை சொல்லிநீ அழுகிறியோ ?
உழவனுக்கு வறுமையின்னா காளைகளும் நெல்லாகும்;
அழவேண்டாம் கண்ணுறங்கு, அப்படியே என்மடியில்! (4)
வெள்ளாமை இல்லாமல், வெண்சோறும் இல்லாமல்
பொல்லாத பூமியிலே போக்கிடமும் இல்லாதார்,
இல்லாத உனைத்தேடி ஈட்டியதோ எலிக்கறிதான்!
சொல்லேதும் ஆடாமல் சோகமுறும் என்தாயே!;
பரப்பைச் சொல்லுகிற, பாதையெலாம் பச்சைநிற
வரப்பை வகுந்துவிட்டு வாய்க்காலை மூடிவிட
பாதையை மறந்துவிட்ட பித்தாயிப் பெண்போலே
கோதை தவிக்கிறியே, கொஞ்சமெனுங் கண்ணுறங்கு! (5)
தண்ணீரே கிடைக்காமல் தரிசாகிப் போனதினால்
கண்ணீரும் காய்ஞ்சுவிட்ட கழனியம்மை உனக்காக,
கனகவிச யனைத்தான் கட்டியிங்கு வந்ததைப்போல்
கங்கையவள் கைபிடிச்சுக் கரகரன்னு இழுத்துவாரேன்;
ஈசனிடம் கேட்டிருக்கேன் ஈசுவரி பார்த்திருந்தா;
ஆசையுடன் முடியவிழ்த்து அனுப்பிடுவான் தென்னாடு;
கண்ணுறங்கு அதுவரைக்கும், கண்ணுறங்கு என்மடியில்;
உன்கனவில் நான்வருவேன் கங்கையுடன் கைபின்னி!. (6)
அன்புடன்
நாக.இளங்கோவன்
மார்ச்-2004
Thursday, January 15, 2004
நிலமகளே!
கட்டிஉறும் கரியடுக்கிக் கடுநெய்யைத் தேக்கிவைத்துக்
கண்ணேதும் காணாமல் மண்போட்டு அதைமறைத்து
முட்டிமோதி மேலேற முடியாமல் நின்வயிற்றில்
முடங்குதற்குக் கல்லாலே காவலிட்ட நிலமகளே!;
கொட்டிஉள்ளே கிடப்பதெலாம் கொடுநஞ்சென் றறியாமல்
கொடும்ஆசை தலைக்கேறக் கும்மாளம் போட்டபடி
வெட்டிவெட்டி அள்ளிவந்து வகைவகையாய்ப் பிரித்தெடுத்து
வெளியெல்லாம் அதைஎரித்து கரிகரியாய்க் கரித்துவிட்டோம்!
கன்னமிட்டுத் தங்கத்தைக் கவர்ந்துபோகு கள்வர்போல்
கல்நெய்யில் கண்வைத்துக் கைவைக்கக் காத்திருந்து,
நன்னலங்கள் யாவிருந்தும் நாணயத்தை ஒளித்துவிட்டு
நடுவுநிலை பிறழ்ந்திங்கு நகுதற்கே பொருளான
தன்னலத்தில் ஊறிவிட்ட தடித்தபல நாடுகளோ
தனதில்லா ஊர்களிலும் தன்கொடியை நடுவதெலாம்
நின்வயிற்றில் தீராமல் நெடுநாளாய் ஊறுகின்ற
நிலநெய்யை தான்கொண்டு நீள்நிலத்தை வெருட்டுதற்காம்!
கரிஅள்ளி நெய்அள்ளி வாயுவையும் தான்அள்ளி
கணக்கில்லா வண்டிகளை நிலமெங்கும் நீந்தவிட்டோம்!
கறிதின்ன, காளையெல்லாம் கொன்றுவிட்டு, உழவுஏரைக்
கல்நெய்யால் உயிரூட்டிக் கழனிதனை உழுகின்றோம்!
தறிகெட்டு ஓடிஓடித் தரணியிலே உழைத்தாலும்
தளராத வாழ்வினையே தழுவாது நிற்கின்றோம்!
வெறிகொண்டு, நாம்வாழ விரைவுமிகக் கூட்டுகையில்
வெறுஞ்செருக்கை வெள்ளமென வீதிஉலா விடுகின்றோம்!
வடித்தெடுத்த நெய்யெல்லாம் வண்ணவண்ணப் புகையாகி
வையகத்தைத் தனக்குள்ளே முடிந்துவைத்த வேதனையில்,
மடிதிறந்த மண்மாதா மூச்சுவிட முடியாமல்
மண்வாரி தூற்றுதியோ மங்காத சினத்தோடு ?
கொடியசைந்து, கூடவரும் குளிர்தென்றல் வழியின்றி
குழைத்துவரும் தூசியையும் கூடவே புகையையும்;
குடிபிழைக்கப் பொழிகின்ற மாமழையும் இந்நாளில்
கொடும்மாசு கண்டஞ்சி அண்டுதில்லை இம்மண்ணை!
மாட்டுவண்டி பூட்டிஅதை மைல்தொலைவு ஓட்டிப்போய்
மாசில்லா வயல்வெளியில் பயிரோடும் பச்சையோடும்
ஈட்டுகின்ற செயலிலெலாம் கால்நடையின் கூட்டுவைத்து
ஏச்சறியா பறவைகளின் ஏற்றமிகு நட்புகொண்டு
பாட்டுநல்ல ஆட்டுடனே பந்தமுடன் கும்மிகொட்டி
பாழான தூசுதள்ளி தூயஇடம் நானொதுங்கி
வாட்டுகின்ற பேரிரைச்சல் பேராசை போக்கிவிட்டு
வாழுகின்ற பெருவாழ்வு வேண்டுகிறேன்; அருள்தாயே!
மனையாட்டி மக்களுடன் நீர்வாங்கி நான்குடிக்க
மாசத்தில் காற்பவுனை செலவாகச் செய்கின்றேன்!
எனைநம்பி வருகின்ற எம்பசு,ப றவைகட்கும்
ஏருழுவும் காளைகட்கும் என்னபவுன் ஆகும்பார்!
அனைத்திற்கும் என்கணக்கில் ஆகுசெலவு ஓர்பவுனாம்;
ஆகட்டும்; காணிபயிர் தான்குடிக்கக் கணக்கைப்பார்!
நினைவேண்டி நிற்கின்றேன்; நீள்நிலத்தில் எந்நாளும்
நீரெல்லாம் பரிஎன்று நிலைத்திடவே நீதியிடு!
(வெண்பா)
ஞாலத்தின் செல்வமெலாம் தான்கொள்ளப் பூமாந்தர்
கோளத்தின் மேனியெலாம் மாசுபூச - காலத்தின்
கோலமெனக் காற்றும் குடிநீரும் காசுஆகி,
சீலமின்றி வாழும் உலகு.
குறிப்பு:- பரி = free = இலவயம் (நன்றி: முனைவர் இராம.கி)
அன்புடன்
நாக.இளங்கோவன்
Saturday, December 15, 2001
டெங்கு காய்ச்சல
என்றஎன்னை நோக்கி என்னரசி சொன்னதுதான்,
'சாக்கு சொல்லாதே! மூக்குறிஞ்சி நிக்கிறதாய்
போக்கு காட்டாதே! போய்க் குளிப்பாயே! ';
உரசிச் சொல்லரசி சுரமா எனக்கு ?...
உரசச் சொல்லும் சரசெனக்குப் புரியாதா ?;
பள்ளி பறக்கும் பிள்ளைகளைப் பார்த்தீரா ?
தள்ளி செல்வீரே! தாண்டி செல்வீரே!
கையைக் காலை ஆட்டிக் காட்டி
தையலைக் காலை, நையச் செய்யாதீரே!
விடியலுக்கு வழிதெரிய விளக்கேற்றி வைத்துவிட்டு
வடிசலுக்கும் வழிவகைகள் முடிக்கையிலே,
பிடித்த ணைக்கப் பித்தானான் கணவன்என்று
பிடிகொடாப் போனாலும் புன்னகைதான் பூவிதழில்!
பூவிதழின் ஓரத்துப் புன்னகையின் நாட்டியத்தைப்
பூரித்துப் பார்த்துவிட்டு போர்வைக்குள் யான்போனேன்!.
போமுன் சொன்னேன்! போய்வருவாய் கண்ணேநீ!...
நோய்வருமே நெடுநேரம் தூங்கிடின்! எழுக!,
போய்வருவோம் பள்ளிநீர் போய்வருவீர் வேலைக்கு!
தாய்மதியையும் தான்பார்த்து சடுதியில் சொல்லிவிட்டு
சேய்களெல்லாம் பள்ளிக்குச் சென்றவுடன், சேதியென்ன
இன்றின்னம் தூங்குகிறீர் ? சிறுவிடுப்பா முழுவிடுப்பா ?
என்றன்னம் கேட்டதுமே 'உரசிப்பார் ' சிறு சுரமே!
என்றதுமே உரசியதில் பாதி சுரம்போக,
வென்றதுவே என்னுள்ளம் என்னில்லம்!; பெண்ணுள்ளம்
பத்திட்டு, படுக்கையிட்டு பாங்காய் போர்த்திட்டு
மத்திட்டு மையாக் கஞ்சி கடைஞ்சிட்டு
பெத்திட்ட பிள்ளைக்குப் புகட்டுபோல் புகட்டினாள்
பெத்திடா பிள்ளைக்கவன் அன்னையைப் போலே!
எத்தனைதான் உறங்கிடினும் வியர்க்கக் காணோம்!
அத்தனைக்கும் மாத்திரைகள் உண்டேன் அன்றோ!
மேலங்கே குளிர்கிறதே! மேலொன்றைப் போர்த்திட்டார்!
காலங்கே குதிக்கிறதே! காலையும் அமுக்கிட்டார்!
அய்யோ தலைவலி! அங்கே கால்வலி!
மெய்யோ முழங்கால்! மூட்டும் இருக்கா ?
முதுகின் நடுவில் முனகல் வருதே!
எதுஎன் சொல்வேன் மூச்சின் வேகம் ?
காய்கதிர்ச் செல்வ கருணை இலையோ
காய்ச்சல் காலம் நாளும் நீளுமோ ?
ஓய்ச்சல் வேண்டி வைத்தியம் நாடிப்
போய்ச் சேர்ந்தேன் பன்னாள் வைத்தியர்!
இளங்கோ இளங்கோ இந்தாப் பிடிங்கள்!
இவைதான் மருந்து! மொத்தம் மூன்று!
அடைபாய்டு இருந்தால் வெள்ளையில் போகும்!
மலேரியா வானால் சிவப்பில் போகும்!
எதுவா னாலும் மஞ்சளில் மறையும்!
மறையா நின்றால் மறுநாள் வருக!
இலையேல் உமக்கு இனிய மறுநாள்!
நன்றி அய்யா! நன்றி நன்றி!
ஒன்று ஒன்றாய் தின்பதைக் காட்டிலும்
இன்றே எனக்கு எல்லா மருந்தும்,
ஒன்றாய்க் கொடுத்த நீவீர் வாழி!
நன்றாய் இருந்தால் நாளை வேலை!
இன்றேல் நாளை மறுநாள் வருவேன்!
என்ன நோவிது ? என்ன நோவிது ?
இன்னமும் போகலை இரண்டு நாளாகியும்! ?
புறப்படு போகலாம் வைத்தியர் மனைக்கு
முறைப்படி அதுதான் அவர்செயச் சொன்னது!
மூன்றிலும் போகாக் காய்ச்சல் கொண்டார்!
மூன்றினும் மேலே இடெங்கென் றொண்டு!
பிடித்துத் தாரும் குவளைக் குருதி!
படித்துச் சொல்வேன் அதுவே அதுவா ?
அரைநாழி ஆய்ந்தார் அதுவே! அதுவாம்!
அதுதான் புதிய 'இடெங்கு 'க் காய்ச்சல்!
இளங்கோ நீங்கள் இடெங்கு கொண்டார்!
இதோ அணுக்கள் எண்ணிக்கை பாரீர்!
இருக்க வேண்டியவை இருநூ றாயிரம்!
இருப்பவை வெறுமே இருப தாயிரம்!
ஏற்றியில் ஏறிஇடப் புறம் திரும்புக
இருக்கும் அறையில் ஏறிப் படுக்க!;
எல்லா வசதியும் உண்டங்கே! ஆகும்
அய்ந்து நாள்களுக்கு மேலே! அறிக!
கோசு கொடுப்போம் ஊசி போடுவோம்!
குருதி வாங்கி பிளேட்லெட் பிரித்து
கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே ஏற்றி
அஞ்சு நாளில் ஆளைச் சரிசெய்வோம்!
அதுதான் இடெங்கு மருத்துவ மிங்கு!
அறிந்தேன் அய்யா வாழி நீவீர்!
இடெங்கு என்றால் என்ன அய்யா ?
சரியாய்க் கேட்டார் சொல்வேன் கேளீர்!
அறிவீர் அறிந்து சொல்வீர் பிறர்க்கும்!
ஊரில் நாட்டில் கொசுக்கள் மிதக்கும்!
மிதக்கும் கொசுக்கள் பரப்புதல் பலவே!
கழிவில் வளர்வது இரவில் கடிக்கும்!
இரவில் கடிப்பது மலேரியா கொடுக்கும்!
இப்படி இப்படி எத்தனையோ உண்டு!
அப்படி உள்ளதில் சிறுமாறு பாடு!
இந்தக் கொசுக்கள் நன்னீர்க் கொசுக்கள்!
இரவில் தீண்டா பகலில் மட்டும்!
பகலில் கடிக்கும் கொசுக்களை எல்லாம்
இகழ்தல் வேண்டாம் இடெங்கு வருமே!
சென்னையீரே சென்னையீரே பிறந்ததெல்லாம் தில்லியாம்!
பூத்திருப்பது சென்னைமுதல் பெரும்புதூர் வரையாம்!
பிள்ளைகள்தான் இடெங்குக் கொசுக்களுக்கு பிடித்தவையாம்!
பிடித்துவையும் அவர்களையே! பொல்லாதவை பகற்கொசுக்கள்!
பட்டதை நானும் சொல்லி விட்டேன்!
பகற்பொழு தினிலும் கொசுவோட் டுங்கள்!
பத்துநா பட்டது எல்லாம் போதுமய்யா!
பத்துநா பாத்துப் பாத்துப் போர்த்தியவள்
பித்தன் இன்று எழுதக் கண்டு
மஞ்சநீர் கலக்கி மண்டையிலும் தெளித்தாளே!
அன்புடன்
நாக.இளங்கோவன்
தமிழுலகம், திண்ணையில் எழுதியது