Pages

Tuesday, February 10, 2015

தோழர் சீமானுக்குப் பாராட்டு மடல்

முருகவேலொடு வீரத்தமிழர் முன்னணி என்ற இயக்கத்தைத்
தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டில்
தமிழ்த்தேசியச் சித்தாந்தம் தோற்றுத் தோற்றுத் துவண்டு போனதற்கு
முக்கிய காரணம், தமிழியத்தைத் தமிழ்நாட்டிற் தேடாமல், உலகில் இருக்கும்
மார்க்சியம், நாத்திகம், திராவிடம் உள்ளிட்ட பல இயங்களை
தோளிற் தூக்கிக் கொண்டு தமிழ்நாடு திரிந்ததுதான்.

தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று பேசுவோரெல்லாம் பின்பற்றுவது
தமிழ்நாட்டிற்குப் புறத்தே இருந்து வந்த "இயங்களைத்தான்".
வைதீகத்தை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்தியாவிலும் உலகத்திலும்
உள்ள எல்லா இயங்களுக்கும் காவடி தூக்கியவன் தமிழன் ஒருவனே.

உங்களையும் வீரமுன்னணியையும் கேலிபேசியிருக்கும் சுப.வீ
உள்ளிட்ட சிலரின் உளறலைப் பொருட்படுத்திவிடாதீர்கள்.
கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடப் பீடை தமிழகத்தின்
மானம், வீரம், கல்வி என்ற மூன்றையும் நாசமாக்கிவிட்டது.
1965ல் மொழிகாக்க தன்னிச்சையாய் திரண்ட தமிழ்க்குமுகம்
முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்ததே அதற்குச் சான்று.

எந்த ஒரு அரசியல் தலைவரும், அவர் இறைநம்பிக்கை
உள்ளவராயினும் தமிழ்க்கடவுளரைப் பொதுவில் பேசுவதற்கே
கூச்சப்படுகின்ற நிலையை ஏற்படுத்தியது திராவிட ஊழ்.
கடவுள் என்று வரும்போதெல்லாம் பொதுவாழ்வில் ஒரு
தாழ்வுமனப்பான்மை உண்டாகிப்போனது திராவிடம்
திட்டமிட்டுத் தீட்டிய நயவஞ்சகம்.

மனைவியை அருளாசி வாங்க கோயிலுக்கும், மடங்களுக்கும்
அனுப்பிவிட்டு, திராவிடத் தலைவர்கள் பேசிய மேடைநாத்திகத்தில்
மெய்மறந்தவர் சுப.வீ என்பதால், அவர் உங்கள் துணைவியார் பற்றி
அப்படித்தான் பேசுவார் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.

இருண்ட காலம் எனப்பட்ட வந்தேறி வடுகக் களப்பிரர் காலத்தின்
மிச்சம்தான் இந்தத் திராவிடக் காலம் என்பதை அடிக்கடி
நான் எடுத்துச் சொன்னதுண்டு. தமிழியத்தை, தமிழரின்
தொன்மையான அற்றுவிகத்தை (ஆசீவகம்) துடைத்தெறிந்தது
களப்பிரர் காலமே. களப்பிரர் காலக் கொடுமைகளினாலும்
அவர்கள் பின்பற்றிய தமிழ் மண்ணுக்கு ஒவ்வா சமயக் கொள்கையினாலும்,
செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னும் இருந்த தூய தமிழை
சமற்கிருதக் கலப்பைச் செய்து தமிழ் மொழியை நாசமாக்கியவர்களில்
முகன்மையானவர்கள் களப்பிரர்களே; இன்று ஆங்கிலத்தை வைத்து
திராவிடம் தமிழை அழிப்பது போல.

இந்த நிலையில் இருந்து தமிழ் மொழியை மீட்டு,
மறுமலர்ச்சியடையச் செய்தவர்கள் பக்தி இயக்கத்தினர்தான்.
ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பக்தி இயக்கத்திற்கு
வித்திட்டிருக்காவிடில் தமிழ் என்றோ சேர, சோழ, பாண்டிய
நாடுகளை விட்டுப் போயிருக்கும். அன்று தமிழகத்தில்
தோன்றிய பக்தி என்கிற தூயதமிழ் இயக்கம் தோற்றிய வீரமும், மானமும்தான்
பிற்காலச் சோழப்பேரரசை உருவாக்கியது.  அதேபோல இன்று நீங்கள்
தோற்றியிருக்கும் வீரத்தமிழர்  முன்னணியும் நல்லதொரு
தமிழகத்தை உருவாக்கட்டும். சோழர் அரசு உள்ளிட்ட யாவற்றையும்
திராவிடம் கேலிக்குள்ளாக்கி நம்மை இத்தனை நாள்
மயக்கத்தில் வைத்திருந்தது.

சம்பந்தரும், அப்பரும் தூயதமிழை மீட்டபோது,
தமிழியத்தை மீட்டபோது களப்பிரம் ஒருவரை
தீவைத்து எரிக்கப் பார்த்தது; இன்னொருவரை
சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்டது.
இறுதியில் தமிழியம்தான் வென்றது.
அதேபோல தமிழியத்தை மீட்க நினைப்போருக்கெல்லாம்
தீரா இடர்களையும் அடக்குமுறையையும் திராவிடம்
தொடர்ந்து தந்து கொண்டிருப்பது, அதே களப்பிரக் கலாச்சாரமாகும்.
தமிழையும் தமிழரையும் காக்க வந்த பரம்பொருள் தான்தானென
பரப்புரை செய்த திராவிடம், தமிழைக் கோயிலுக்கு
உள்ளே அனுமதிக்கவேயில்லை இன்றுவரை.

பழனி பற்றி சுப.வீ கிண்டலடிக்கிறார். அதேநேரத்தில்
"அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே
தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே!" என்று
சுப.வீ சொல்லும்போது நமக்கு இரண்டு விதயங்களைத் தெளிவாக்கி
விடுகிறார் அவரை அறியாமலேயே.
ஒன்று: பழனியின் சன்னதியில் இருந்த தமிழைத் துரத்தியடித்தவர்
வடுகரான திருமலை நாயக்கர். வடுகக் களப்பிரத்தின் பிற்காலத்
தொடர்ச்சிதான் நாயக்கர் ஆட்சி. மற்றொன்று: கோயில்களில் இருந்து,
திருமலை நாயக்கர் துரத்தியடித்த தமிழை,
கடந்த 50 ஆண்டு திராவிட அரசியல் கோயிலுக்குள் கொண்டு போகவே
இல்லை என்பது.  திராவிட அரசியல், அதே வடுகக் களப்பிரத்தின்
தொடர்ச்சி என்பதால் வெளியே வைதீகத்தைத் திட்டிக்கொண்டு,
அதேவேளையில் தமிழ் வளராமல் பார்த்துக்கொண்டது வரலாறு.

அம்பேத்கரின் பண்பாட்டுப் புரட்சியின் தேவை பற்றிய கருத்து
நல்ல கருத்து. பண்பாடு தமிழ்க்குமுகத்தை இணைக்கிற சங்கிலி.
கோயிலைப் பிடித்தவரெல்லாம் ஆட்சியைப் பிடித்த வரலாறு,
7ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் இருக்கிறது. பண்பாட்டுப்
புரட்சி என்பது அந்த 6-7-8 ஆம் நூற்றாண்டினைத் திரும்பிப்
பார்க்காமல் தமிழ்நாட்டில் உருவாக முடியாது. சுப.வீக்கு
இதெல்லாம் புரியவே புரியாது. அவரை, திருச்செந்தூர்
கோயிலுக்கு அழைத்துப் போய், கடலில் நீராட்டி, நாழிக்கிணற்றில்
குளிக்க வைத்து காலை 5.30க்கு முருகன் சன்னதியில் உட்கார
வையுங்கள். மொட்டையெல்லாம் போடத் தேவையில்லை.
அப்போது சுப.வீக்குப் புரியும் கடந்த 50 ஆண்டுகாலத்தில் எந்த மொழி
சன்னதியில் புழங்குகிறது என்றும், தமிழ் மொழி சன்னதிக்கு
வெளியே நின்று எப்படி அவமானப் படுகிறதென்றும் புரியும்.
தமிழ்க்கடவுளான முருகனுக்கு முன்னால் தமிழ் மந்திரங்கள்
ஓதப்படுவதில்லை திருச்செந்தூரில். ஒருவர் சன்னதிக்குப்
புறத்தே நின்று மறைந்து கொண்டு பாடுவார். நேராகப் பாடினால்
தீட்டு. வெறும் பார்ப்பன ஏச்சில் காலம் தள்ளிவிட்ட சுப.வீக்கு
வடுகப் பார்ப்பனீயத்திற்கும், தமிழ்ப் பார்ப்பனர்க்கும் வேறுபாடு
காணமுடியாது. அதை அறிஞர் குணாவிடம் இருந்து அவர்
கற்றுக் கொள்ளவும் தலைப்படமாட்டார். பாவாணர், குணா
போன்றவர்களையெல்லாம் தூற்றியதுதான் திராவிட வரலாறு.

கடந்த 50 ஆண்டுகளில், மிக மிகத் தேவையான பண்பாட்டுப்
புரட்சியை, தமிழன் இதுநாள்வரை நாணப்பட்ட பண்பாட்டுப் புரட்சியைத்
தயங்காமல் கையில் எடுத்திருக்கிறீர்கள். "நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணதுவாக" என்று மாணிக்கவாசகர் சொல்லுவார். இதற்காக
உங்களை மனமாரப் பாராட்டுவதோடு, இந்த முயற்சியைக் கையில்
எடுக்காமல் வேறு எவருமினி தமிழ் அரசியல் நடத்த முடியாது
என்ற நிலையும் தமிழகத்தில் உருவாக வேண்டும்.

உங்களது துணைவியாரின் தத்துவத்தை அரசியலாக்கிவிட்டீர்கள்
என்று சுப.வீ கிண்டலடிப்பது போல வேறு பலரும் செய்யக்கூடும்.
ஆனால், அவர்களுக்குச் சொல்லுங்கள், "பக்தி இயக்கம் என்ற பெயரில்
உருவான வீர இயக்கம்தான் தமிழகத்தைப் பல்லாண்டு காலம் காத்தது
என்றும், அந்த இயக்கத்தை உருவாக்கியவர்கள் சம்பந்தர் என்ற குழந்தையும்,
அப்பர் என்ற வீரத்துறவியும்தான் காரணம் என்றாலும், அவர்களுக்குத்
தூண்டுதலாக, ஆதரவாக இருந்தவர்கள் வணக்கத்துக்குரிய
பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார், அப்பரின் அக்கையாரான
திலகவதி அம்மையார் என்ற இரண்டு பெண்ணரசிகள்தான்.
அவர்களுக்கு முன்னால் இவர்கள் பேசும்
பகுத்தறிவும், மூடநம்பிக்கையும் பிழைப்பு அரசியலே தவிர
தமிழர்க்கான அரசியலாக இருக்க முடியாது.

இவற்றொடு, முருகனை முன்னிறுத்திவிட்டதால் பிள்ளையாரை
மறுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை. வாதாபியில்
இருந்து ஓர் ஆனைமுகன் வந்தார் என்பது உண்மையே ஆயினும்,
ஆனை என்பது தமிழர்களின் தொன்மையான தெய்வ வடிவம்.
அற்றுவிகத்தின் சின்னமே ஆனைதான். இன்றைக்கும் அதன்
தொடர்ச்சி தமிழகத்தில் உள்ளது. சில கோயில்களில் கொடிமரத்திற்குப்
பின்னால் நந்தி அல்லது மயில் இருக்கும் இடத்தில் ஆனையும் இருக்கின்றது.
நீங்கள் மணப்பாறை வழியே போகும்போது மணப்பாறை நல்லாண்டவர்
கோயிலில் இதனைக் காணமுடியும். சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதத்தை
ஆனைமுகன் என்று சொல்வர் அறிஞர். ஆனைமுகன் பற்றிய ஆய்வு
திராவிட அறிவுலகத்தில் மங்கிக் கிடக்கிறது. அதனால் அவசரப்பட்டு
ஆனையைத் தள்ளிவிடவேண்டாம். ஆய்வு செய்ய காலம் இருக்கிறது.
இன்றைக்கு, மிகத் தொன்மமான கருப்பண்ண சாமிக்கும் சமற்கிருத

மூலமந்திரமும், கருப்பண்ணர் காயத்திரி மந்திரமும் திரிக்கப்பட்டு
சமற்கிருதமயமாக்கல் நடைபெறுகிறது. பார்க்க https://www.facebook.com/photo.php?
fbid=10153064671917612&set=pcb.10153064720867612&type=1&theater
தமிழ்நாடு 50 ஆண்டுகாலமாக "எங்களுக்கு மதமில்லை சமயமில்லை யாதும் ஊர்
யாவரும் கேளிர் என்று உளறிக்கொண்டு"  கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து
இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தபோது அதன் கோவணம் வெளியே
தெரிந்ததைக் கவனிக்கவில்லை. அதுவே பல தமிழ் இழப்புகளுக்குக் காரணம்.
வீரத்தமிழர்முன்னணி விரைந்து கோயிலில் தமிழைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.
அங்கில்லாத தமிழ் எங்கும் வளராது. மீண்டும் உங்களுக்கும் உங்கள் அமைப்பினர்க்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்