Pages

Sunday, November 23, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #3/3)

நாம் செய்ய வேண்டியதென்ன?

நாமெல்லாம் எழுந்து போய் இரயில் மறியல்
செய்யப் போகிறோமா?
நாமெல்லாம் பட்டினிப் போராட்டம்
செய்ய வேண்டுமா?
நாமெல்லாம் தார்ச்சட்டியைத் தூக்கிக் கொண்டு
தெருத்தெருவாகச் சென்று தமிழ் அல்லாதவைகளை
அழிக்க வேண்டுமா?

அதெல்லாம் எதுவும் தேவையில்லை.

1) பிழைப்பிற்காக கற்ற கல்வி ஆங்கிலம்.
பிழைப்பதும் ஆங்கிலத்தால்தான்.
ஆனால் அந்த ஆங்கிலத்தை அலுவலகத்தோடு
வைத்துக் கொள்ள நம்மால் முடியாதா?

2) அலுவகம் சார்ந்த பணிகளில் தமிழுக்கு
எதிர்காலத்தில் இடம் முழுக்க இருக்கும் என்றாலும்,
தற்காலத்திலே முடியாத சூழல் தனியார் துறைகளிலும்
வெளிநாடுகளிலும் இருந்தாலும் தனிப்பட்ட
எழுத்துக்களை தமிழில் எழுத முடியாதா?

3) நமது நண்பர்கள், உறவுகளிடம்
தமிழில் பேச முடியாதா?

4) நம்மால் செய்ய முடிந்த இவற்றை நாம்
செய்யாததற்கு அரசியல்வாதிகளைத் திட்டித்
தீர்க்க வேண்டுமா? நமக்கு நேர்மை வேண்டாமா?

5) மிடையங்கள் தமிழைக் கொலை செய்கின்றன
என்பதால் நாமும் கொலை செய்ய வேண்டுமா?

6) எந்தத் தொலைக்காட்சிகளோ கேடு கெட்ட
தமிழைப் பேசினால் நமக்கென்ன?
நாம் என்ன அந்தத் தொலைக்காட்சியோடு
திரும்பப் பேசுகிறோமா? இல்லையே!!
அப்புறம் ஏன் அதைத் தடைக்கல்லாக
எடுத்துக் கொள்ள வேண்டும்?

7) எழுத்தாளர்கள் எல்லாம் செய்யும்
கலப்புத் தவறுகளை, கவிஞர்கள் செய்யும் தவறுகளை
நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

8) தமிழ் பேச சில பேருக்கு நாணமாக இருக்கிறது
இன்றையச் சூழலில். அந்த நாணத்தை அவர்கள் போக்கிக் கொள்வது எளிது.

9) கலப்புத் தமிழுக்கு ஞாயம்
கற்பிக்கிற ஆள்களையும்,
ஆங்கிலம் சரளமாகப் பேசுபவர்களையும்
நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

அவர்களிடம் சேக்சுபியரைக் கொண்டு கொடுங்கள்.
தாகூரைக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
தவிப்பார்கள் படிப்பதற்கே!

அவ்வளவு ஏன் கணித்துறையிலே இருக்கிற
சில பகட்டுப் பேர்வழிகளிடம் கொண்டு போய்
சி.யே.டேட் நூலைக் கொடுங்கள்!
பூச்சின் நூலைக் கொடுங்கள்!
எத்தனை பேரால் வேகமாகப் படிக்க முடிகிறது
பாருங்கள்? வேடிக்கையாக இருக்கும்.

ஆங்கிலத்திலும் அடிப்படைப் புலமை இல்லாமல்,
தமிழிலும் அடிப்படை இல்லாமல்
ஒரு வித பித்துக்குளித்தனத்தில்
இந்தக் குமுகம் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் மாறுவதற்கும், உணருவதற்கும்
தக்க வேளை தற்காலமே!

அதைத்தான் போரற்ற குமுக நிலையும்,
முன்னேறிய கல்வி நிலையும் காட்டுகின்றன.

"தமிழ் என்ன செய்தது என்று கேட்காதே!
தமிழுக்கு என்ன செய்தோம்? என்று எண்ணிப்பார்"!

விடையாக, நல்ல தமிழ் எழுதினேன்
என்று உள்ளம் சொல்லுமானால்
அதுவே உயர்ந்த தமிழ்ப்பணி.
அதுவே தேவையான பணியும் கூட.

நிறைவு.
நன்றி: பண்புடன் விழாக்குழுவினர் மற்றும் நண்பர் ஆசிப்

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, November 22, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி # 2


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம். கல்வி என்ற வகையிலே, கோணத்திலே பார்த்தோமானால், 1906-07ன் கணக்குப் படி இந்தியாவில் படித்தவர்கள் 2.2% பேர். ஆதாரம் நீயூயார்க் டைம்சு நாளேடு.

http://query.nytimes.com/gst/abstract.html?res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF

http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF&oref=slogin

இந்திய சராசரி புள்ளி விவரத்தையே தமிழகத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்.

2001ல் எடுக்கப் பட்ட புள்ளிக் கணக்குப் படி தமிழகத்திலே 76% பேர்.
அது தற்போதைக்கு 80% ஆகியிருக்கும்.

ஆக சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால் 2.2% ஆகவும்
தற்போது 80+ விழு. ஆகவும் இருக்கும் இந்த நிலை மிகவும்
வியத்தகு நிலை. (படம் - 2).


மொத்தம் படித்தவர்களில் 1900த்தில் 3%தான் பெண்கள். ஆனால்
இன்றைக்கெல்லாம் பள்ளித் தேர்வுகளில் பெண்களே அதிகம் தேர்வாகிறார்கள்.

1300க்கும் 1947க்கும் இடைப்பட்ட 650 ஆண்டு காலம்
மிகக் கொடுமையானது.

8 அயல்நாடுகள் அயல்மொழிகள் நம்மைத் தாக்கியிருக்கின்றன.
இப்படி அமைதியில்லா அந்தக் காலங்களில்தான்
நிலப் பண்னைத்துவம் என்று சொல்லப் படுகின்ற கிழாரியம் (feudalism),
வருணப் பிரிவினை செய்யும் சாதீயம் என்ற இரண்டும் இராகுவும் கேதுவுமாக தமிழ் நிலத்தையும் தமிழையும் இழி நிலைக்குத் தள்ளின.

ஆகவே, அந்த 2.2% விழுக்காடு கல்வி என்பது,
சாதிச் செழிப்பின், செல்வச் செழிப்பின்
கல்விச் செழிப்புதானே ஒழிய
குமுகச் செழிப்பின் வெளிப்பாடு அல்ல.

தற்போது பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு விட்டபோதிலும்,
பல குமுகத் தடைகள் உடைபட்டுப் போய், பீறிட்டுக் கிளம்பும்
மனித சக்தியின் வெளிப்பாடாய்த்தான் இன்றைய 80+% கல்வி நிலை
நமக்குத் தெரிகிறது.

2.2% படித்தவர்கள் இருந்த சூழலை விட, 80+% படித்தவர்கள்
இருக்கையில் மொழி வளம் என்பது சிறப்புற்றிருக்கத்தானே
வேண்டும்! படிப்பிற்கு தகுதி அதுவாகத்தானே இருக்க முடியும்?
படித்த குமுகாயத்திற்கு தாய்மொழியை செழிக்கச் செய்வதில்தான்
மதிப்பும், பெருமையும் கிடைக்கும், நிலைக்கும்.
(2.2% இருந்த பொழுதே நாம் 30-40 விழுக்காடு கலந்தோம்; இப்பொழுது
80% இருக்கையில் எங்களால் அதை விட அதிகமாகக் கலக்க முடியும் என்ற நிலை இருக்கிறதா? அல்லது தற்போது நிறைய பேர் பண்பட்டிருக்கிறோம்; ஆகையால் கலப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்ற நிலை இருக்கிறதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

3) மூன்றாவதாக, விடுதலைக்கு முன்னரும் பின்னரும்
மொழி நிலையைக் காண்போம்.

1714ல் அச்சில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் எனப்படும்
கிறித்துவ வேத நூல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

"சுதனாகிய சறுவேசுரனாயிருக்கிற ஏசுக்கிறீஷ்த்து
நாதரானவர் இந்தப் பூலோகத்திலே மனுஷனாய்ப் பிறந்த
விசேஷங்களையும் போதிவிச்ச ஞான உபதேசங்களையும்
செய்த அற்புதங்களையும் மனுஷருக்கு வேண்டி பாடுபட்டு
எல்லாரையும் மூண்டு ரெஷ்சித்தவத்த வானங்களையும்
உயிரோடே எழுந்திருந்து பரலோகத்திலே மகிமையாக
ஏறினத்தையும் அவருடைய சீஷர்களாகிற அப்போஷ்த்தல மார்கள் லோகமெங்கும்போய் இப்படிக்கொத்தச் சுவிவிசேஷங்களைச் சகலச்சனங்களுக்கும் பிறசங்கம் பண்ணினதையும் வெளிப்படுத்துகிறபுது
ஏற்பாட்டினுடைய முதலாம் வகுப்பாகிற அஞ்சுவேதபொஷ்தகம்
"
(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இதில் 10 வரிகளிலே 13 கலப்புச் சொற்கள்.
13/42 சொற்கள் கலப்பு: அதாவது 30%

1924ல் எழுதப்பட்ட வேதாந்த தீபிகை என்ற நூலிலே ஒரு
16வரிகளில் 31 கலப்புச் சொற்கள் இருக்கின்றன.
அதாவது, 32/72 சொற்கள் கலப்பு. இது 44.5% கலப்பு ஆகும்.

(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இந்த நூல்கள் மணிப் பிரவாளத்திலே எழுதப் பட்ட நூல்கள் அல்ல.
தமிழிலே எழுதப் பட்ட நூல்கள். மணிப்பிரவாள நூல்கள் என்றால்
இன்னும் கொடுமை - ஏறத்தாழ 70 விழுக்காடு கலப்பு.

தமிழும் சமற்கிருதமும் கலந்து எழுதுவதே உயர்ந்த செயல்
என்ற போக்கு அந்தக் கொடுங்காலத்தில் ஏற்பட்டது.
சமற்கிருத இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு
தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை எல்லாம்
சமற்கிருதம் கலந்து எழுதுவதே உயர்ந்த படிப்புக்கு அடையாளம்
என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதில் முன்னோடியாக இருந்தவர்கள்
நம்பூதிரிகள். அவர்களின் இந்தத் தீச்செயலுக்கு இரையானதுதான்
அன்றைய தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியான சேரநாடென்ற
இன்றைய கேரளம்.

மொழிக் கலப்பால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும்
ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக ஆகப்பெரிய இழப்பாக
வரலாறு வரைந்து வைத்திருப்பதெல்லாம் இந்த மலைநாடு
அந்நியமாகப் போய், ஏறத்தாழ எதிரியாகவும் போனதைத்தான்.

1440ல்தான் அவர்களின் முதல் இலக்கிய நூலான இலீலா திலகம்
வெளிவந்தது.

குறிப்பாக 1800களில் 1900களில் தமிழில் பேசுவது
நாகரிகக் குறைவாகவும், கீழ்ச்சாதியினரின் பேச்சாகவும்
கல்லாதவரின் மொழியாகவும் ஆக்கப் பட்டது.

சங்ககாலத்திலே கலப்பற்ற தூயதமிழ் இருந்த நாட்டிலே,
அதேமொழி கீழ்மொழியாக ஆக்கப் பட்ட கொடுமையை
நாம் உணர்ந்து கொள்ள நிறையவே இருக்கிறது.


மொழி மாறினால் முகவரி மாறிவிடும்! என்பதற்கு
கண்ணுக்கு முன்னே அங்கை நெல்லியாக கேரளம்
இருந்து கொண்டிருக்கையிலே, நாம் மேலும் மொழிக்கலப்பைச்
செய்வது படித்தவர்களின் செயலாக இருக்க முடியாது.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 80+% ஆகியிருக்கையில்
எழுத்தின் நிலை எப்படியுள்ளது. படித்தவர்கள் நேசிக்கும்
எழுத்தாளர் சுசாதாவின் எழுத்தில் மொழிக்கலப்பு எப்பொழுதும்
விரவியிருக்கும்.

1976ல் சுசாதாவின் கட்டுரை ஒன்றில் கமலகாசன் பற்றிய அவரின் எழுத்தைப் படித்த போது அதில் 24% விழுக்காடு ஆங்கில, சமக்கக் கலப்பு இருக்கிறதையும் காணமுடிகிறது. இதை விட அவரின் சில கதைகளில் ஆங்கிலம் கரை புரண்டு கலக்கும்.

விடுதலைக்கு முந்தைய விவிலிய, வேதாந்த நூல்களில் இரண்டு
மொழிகள் கலந்து கிடந்தன என்றால் விடுதலைக்குப் பின்னரான
தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் மும்மொழிக் கலப்பு
இருக்கிறது. தமிழ் எழுத்துக்களோடு, ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும்
வடமொழியை வடமொழியாகவும் கலக்கிற பாங்கினை அவர்
கடை பிடித்தார்.

இரு மொழிக் கலப்பு மும்மொழிக் கலப்பாக விடுதலைக்குப் பின்னர்
ஆகியிருக்கிறது என்பது உண்மை.


(சுசாதாவின் 76ஆம் ஆண்டு எழுத்து. ஆங்கிலமும், வடமொழியும்,
தமிழும் கலக்கப்படுவதைக் காண்க. சுசாதா மட்டுமல்ல
பலரும் இப்படித்தான்)

எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள், எழுத்தை ஆளாமல்
கருத்தை மற்றும் ஆண்டால் போதும் என்ற மாயையில்
விழுந்ததோடு அவர்களை வாசிக்கும் மற்றும் நேசிக்கும்
மக்களையும் அந்த மாயையில் சிக்க வைத்தது ஒரு
வருத்தமான உண்மை.

விடுதலைக்கு முன்னரும் பின்னருமான தமிழ்ச் சூழலை
குமுக அமைதி, கல்வி நிலை, மொழி நிலை என்ற மூன்று
தளங்களில் பார்க்கின்ற போது நமக்குக் காண கிடைப்பதெல்லாம்
"2300 ஆண்டுகள் வரலாற்றில் தமிழகம் சிறந்திருந்த காலத்தில்
இருந்ததைப் போன்ற ஒரு குமுக அமைதியை தற்போது
தமிழ்க் குமுகம் பெற்றிருக்கிறது. கல்வி நிலையில் மிகுந்த
ஏற்றம் பெற்றிருக்கிறது. கட்டற்ற கல்வி மற்றும் எழுத்து
சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மொழிச்
செழுமை, வளமை, தூய்மை ஆகியவற்றை இன்னும் தேடிக்
கொண்டே இருக்கிறோம்; சில நேரங்களில் அவற்றை
சாடிக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணும்படியாகவும்
சில அறிவுசீவர்களின் கருத்துக்கள் அமைகின்றன."

நாம் செய்ய வேண்டியதென்ன?

(தொடரும்)

Friday, November 21, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #1)


ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.

அதையே வெள்ளையன் எழுத்தில்
"If it is not Measured, it is not Managed" என்று
சொல்லப்படும்போது பல்வேறு துறைகளில் பணி புரியும்
நமக்கு இந்த "Manage by Metrics" என்ற சொல்லாடல்
கிளுகிளுப்பைத் தருவதாய் இருக்கும்.

"ஆகா, என்னமாச் சொன்னான்யா" என்று
நாமெல்லாம் பல தடவைகள் மெய்புளகம்
அரும்பித் ததும்பியது உண்டு!

"இந்திய விடுதலைக்கு முன்னரும்
அதற்குப் பின்னரும் தமிழ்" என்ற இந்த உரையும்
நமது நிலையை சற்று அளந்து பார்க்க உதவுமானால்
நானும் நாமும் மகிழ்ச்சியடையலாம்.

அண்மையில் கூட தமிழக முதல்வர் கலைஞர்
இந்த அளவைக்குக் காட்டாக ஒரு செய்தியைச் சொன்னார்.
"சிங்கம் ஒரு தொலைவு நடந்து போனதும்,
தான் எவ்வளவு தொலைவு
வந்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்குமாம்!"
விலங்குக்குக் கூட இந்த அளந்து பார்க்கும் குணம் இருக்கிறது
என்ற ஒரு செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.
இன்னொரு பார்வையில் சொன்னால்,
"அப்படி அளந்து பார்க்குந் தன்மை
இருப்பதால்தான் அது அரசராக,
ஆளுமையுடன் இருக்கிறது!".

அப்படியென்றால் அளந்து பார்த்தால்தான் ஆளமுடியும்
என்ற ஒரு உண்மை நமக்குப் புலப்படத்தான் செய்கிறது.
அதுமட்டுமல்ல, அண்மையில் நண்பர் எசென்.இராசா ஒரு
கூட்டத்தில் கென்யாவில் சிங்கங்களைப் பற்றித் தான்
அறிந்த செய்திகளைச் சொன்னார்.
அதில் ஒன்று சிங்கங்களுக்குத் தன்மானம்
அதிகம் உண்டு என்ற செய்தி.

ஆக, அளந்து பார்க்கும் தன்மையும், தன்மானமும்
பெருமையோடு வாழ அவசியம் என்று நாம் உறுதியாக
நம்பலாம்.

இந்தத் தலைப்பை ஒரு சிற்றுரை/கட்டுரை மூலமாக
நிறைவாகச் செய்து விட முடியுமா? என்றால்
வாய்ப்பேயில்லை என்பது உண்மை.

ஏனென்றால் அதற்கு மிகப் பல பரிமாணங்கள் உண்டு.
அத்தனையும் முடியாதெனினும் சிலவற்றை மட்டும்
இங்கே நான் எடுத்து வைக்கிறேன் நமது சிந்தனைக்காக.

1) கால, குமுகச் சூழல்
2) கல்விச் சூழல்
3) பிறமொழிகள்

என்ற இந்த மூன்று நிலைகளிலே நாம்
விடுதலைக்கு முன் காலத்தையும்
பின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்
ஆனால் நமக்கு அது
ஒரு தொடர்ச் சிந்தனையை
ஏற்படுத்தக் கூடும்.

விடுதலைக்கு முந்தைய காலத்தை பலவாறாகப்
பிரிக்கலாம். வரலாறு, இலக்கிய, அரசியல் ஆசிரியர்கள்
பலவாகப் பிரித்திருக்கிறார்கள்.

இங்கே நான் 5 போர்க் காலங்களாகப்
பிரித்துக் காட்டுகிறேன்.

போர்கள் குமுகத்தில் ஏற்படுத்தும்
தாக்கம் மிக முக்கியமானது.

சங்ககாலம் என்பது கி.மு 300க்கும் கி.பி 100க்கும்
இடைப்பட்ட காலம். என்ன இது ஆங்கிலேயர்
காலத்தைப் பேசச் சொன்னால் சங்ககாலத்திற்கு
ஓடுகிறானே என்று நீங்கள் எண்ணக் கூடும்.

இந்த 400 ஆண்டு காலம் வரலாற்றில்
நன்கு பதியப்பட்ட தமிழ் தமிழரின்
இயல்பு மாறாத உயர்ந்த
காலமாகும். அக்காலத்தை விடுத்து
தமிழ் என்று எதையும் பேசுவது
காற்றில் கத்தி வீசுவது போலவாகும்!

அந்த 400 ஆண்டுகளிலே தமிழகத்திலும்
தமிழகத்திற்காகவும் நடந்த போர்கள்,
வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆழப்
பதிவாகியிருக்கிற போர்கள் சுமார் 40.

(குறிப்பு: போர்கள் பற்றி செய்திகளுக்கு
ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டிருப்பது 
பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரின் 
"தென்னாட்டுப் போர்க்களங்கள்" என்ற
நூலை. சில போர்கள் மற்றும் செய்திகள் 
விடுபட்டுப் போயிருக்கக் கூடும் )

ஆக, கணித்துப் பார்த்தால் 400 ஆண்டுகளிலே
40 போர்கள் என்றால், 10 ஆண்டுக்கு ஒரு போர் வீதம்
நடந்திருப்பது தெரிகிறது அல்லவா?

அடுத்ததாக, கி.பி 101க்கும் கி.பி 900க்கும் இடையேயான
800 ஆண்டு காலம். 

இந்தக் காலத்தை இரண்டாவது
 போர்க்காலமாகப் பிரிக்கிறேன். 
இப்படி ஏன் நான் பிரிக்கிறேன் என்றால், 
இது சங்கம் மருவியகாலமும், 300 ஆண்டு இருண்ட
காலம் என்று சொல்லப்பட்ட 
களப்பிரர் காலமும், சோழப் பேரரசிற்கு
அடிகோலிட்ட அந்த 9 ஆம் நூற்றாண்டின் 
மத்தியப் பகுதியையும்
உள்ளிட்டதாகும். இவை முக்கியமான காலங்கள்.

இக்காலத்திலே 80 போர்கள் வரலாற்றிலே 
ஆழப் பதிந்திருக்கிறது. அதாவது 800/80 = மீண்டும் 10
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் நடந்திருக்கின்றது.

சோழப்பேரரசு 850களில் தழைக்கத் தொடங்கி 
ஏறத்தாழ 130 ஆண்டுகள் தழைப்பிற்குப் பின் பேரரசாக 
விரிந்து 300 ஆண்டுகாலம் நமக்குப் புகழ்
சேர்க்கிறது. 

ஆகவே கி.பி 901க்கும் சோழன் நலிந்த 1300க்கும்
இடைப்பட்ட காலமான அந்த 400 ஆண்டுகளை 
மூன்றாவது போர்க்காலமாகப் பிரித்துப் பார்த்தால் 
அங்கே அந்த 400 ஆண்டுகளிலே 
166 போர்கள் நிகழ்ந்துள்ளமை நமக்குக் காணக் கிடைக்கிறது. 
இது தமிழகத்தில் கொஞ்சமும், 
தமிழ் அரசு வடக்கே கங்கை, கிழக்கே கடாரம், 
மேற்கே சேரம், தெற்கே மாலத்தீவுகள் வரை 
எல்லை விரிப்பிற்கும் செய்யப் பட்டப்
போர்களின் எண்ணிக்கையாகவும் கிடக்கிறது. 
இவை தமிழர்களுக்கு
வலு சேர்த்த போர்கள் என்று எண்ணலாம்.

ஆக இந்தக் கால கட்டத்தில் 
400/160 = 2.5 ஆண்டுகளுக்கு ஒரு
போர் வீதம் நடந்திருப்பது ஒரு இன்றியமையாத 
புள்ளிவிவரம் அல்லவா?

நிரவலாக சராசரியாக 10 ஆண்டுகளுக்கு 1 போர்
என்று இருந்த போர்வீதம் திடீரென்று 2.5 ஆகக் 
குறையும் போது அதனால் குமுக கவனங்களின் 
மேல் தாக்கம் இருக்கும் அல்லவா?

நான்காவதாக, கி.பி.1301க்கும் 1750க்கும் 
இடைப்பட்ட 450 ஆண்டு காலம். 
தமிழகம் இந்தக் காலத்தைப் போல 
என்றைக்கும் அலைக்கழிக்கப் பட்டதில்லை 
என்று சொல்லக் கூடிய காலம்.

இக்காலத்தில்தான் மொகலாயர், மராட்டியர், 
தெலுங்கர், கன்னடர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், 
பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர் என்ற 8 வகையான 
கூட்டத்தின் தாக்கம் ஏற்பட்ட காலம். தமிழரசு
என்பது இல்லவே இல்லை. போதாதற்கு 
ஒய்சளர்கள் என்ற பிரிவினரும் வந்தனர்.

இக்காலத்தில் நடைபெற்ற போர்கள் 120.
சராசரியாக 3.75 ஆண்டுகளுக்கு ஒரு போர். 
இந்தப் போர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்லாது, 
இக்கூட்டங்களுக்கு இடையே நிகழ்ந்ததாகவும் 
நிறைய அமைந்திருக்கின்றன.

ஐந்தாவது போர்க்காலமாக,
1750க்குப் பின் ஏறத்தாழ இந்தியா 
பிரித்தானியரின் கீழ் அடங்கிவிட்டது;
1750க்கும் 1850க்கும் இடையேயான 
100 ஆண்டுகளில் மட்டும்
தமிழகம் 50 போர்களைக் காணுகிறது.

அதாவது 2 ஆண்டுகளுக்கு ஒரு போர் என்ற அளவில்.

1850க்குப் பின்னர் இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஓங்க
ஆரம்பித்து 1947 வரைக்கும் நீண்டது வேறு வகையினது.
அக்காலத்தினை இவ்வாய்வில் நான் விட்டு விடுகிறேன்.

ஆகவே மேற்சொன்ன இந்த 5 போர்க்காலங்களை 
ஓர்ந்து பார்க்க.

இப்பொழுது, 1947க்குப் பின்னர் தமிழகத்தை 
உள்ளிட்ட இந்தியா செய்துள்ள 
போர்கள் எத்தனை ?

பாக்கித்தானுடன் நான்கு போர்கள்,

48-49 - காசுமீரப் போர்
65 - கட்ச் போர்
71 - கிழக்கு வங்கப் போர்
99 - கார்கில் போர்

சீனாவுடன் 1 போர்
62 - இமயப் போர் / அருணாச்சலப் போர் - சீனாவுடன்

ஈழத்துடன் 1 போர்

87 - சிங்களச்சார்புப் போர்

தமிழ்நாடு இந்திய மாநிலங்களுள் ஒன்று என்பதால் இந்தியா
செய்கின்ற போர்களால் தமிழ்நாட்டு அரசியலுக்கும் பொருளியலுக்கும்
குமுகத்திற்கும் தாக்கம் உண்டு.

ஆக, விடுதலை அடைந்து இந்த 61 ஆண்டுகளிலே 
மொத்தம் 6 போர்களில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.

இங்கே சராசரிப் போர் வீதம் பார்த்தால் அது 10 என்கிறது!
Italic
கி.மு.300 இல் இருந்து இன்று வரை யில் நிகழ்ந்த 
போர்களின் வீதங்களை உற்றுப் பார்த்தால் 
அது 10-10-2.5-3.75-2-10 என்று இருக்கிறது. படம்-1 ஐக் காண்க.

இப்படத்தைப் பார்த்தால் குமுக அமைதியின் தன்மை விளங்கும்.
குமுக அமைதி என்பது ஒரு நாட்டின் பொருளியல்,
கலை, பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதது
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமக்குப் பல தரவுகள் அல்லது
செய்திகள் கிடைக்கின்றன.

அ) சங்ககாலத்தில் மொழிக் கலப்பு இல்லாமல் 
தமிழ் செழித்துச் சிறந்திருந்தது என்று சொன்னால், 
அதற்கு அப்போதிருந்த குமுக அமைதியும் ஒரு முக்கிய காரணம்

ஆ) சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த இரண்டாம் போர்க்காலத்தில்
தமிழ்நாடு சில இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த போதிலும்
மொழிச் சிதைவு திகைக்க வைக்கும் வகையில் ஏற்படவில்லை.
நன்றாகவே இருந்திருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் தமிழாகவே இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெருமை குன்றி விடவில்லை. 
அதற்குச் சான்றாக தேவார, பிரபந்த
இலக்கியங்களில் உள்ள தமிழின் செழுமையைச் சொல்லலாம்.

இ) சோழர்களின் காலத்தில் போர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருந்தது அரசியல் வலுவைக் கூட்டவே. ஆயினும்
மொழிச் சிதைவும் கலப்பும் இக்காலத்தில் ஏற்பட்டது
என்று சொல்லப்படுவதற்கு,
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம்
நடந்த குமுக அமைதியின் தன்மையும் ஒரு காரணம் என்பதைப்
புறம் தள்ளிவிடல் ஆகாது.

ஈ) 1300க்குப் பின்னரான கால கட்டங்களில் நடந்த போர்களின் வீதம்
நமக்கு சொல்வதெல்லாம் மொழியின் பேரழிவையே. இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் தமிழகத்திலும் தமிழகத்தைச் சுற்றியும்
நிகழ்ந்த போர்கள் தமிழ் மொழிச் சிதைவை, தமிழர் குமுக வேறுபாடுகளை அதிகப் படுத்திச் சீரழித்திருக்கிறதைக் காண முடிகிறது.
குன்றிய குமுக அமைதி தொடர்ந்து தமிழும் தமிழரும் கெட்டதையே
காட்டுகிறது.

இன்னொரு காரணம் என்னவென்றால் இக்கால கட்டங்களில் வலுவான தமிழ் அரசர் இல்லை. ஆளுகை முற்றிலுமாக தமிழர் அல்லாதவர்களிடம் சென்று விட்டது.

உ) சொல்ல வந்த கருத்தாக நான் இங்கு சுட்டிக் காண்பிக்க விழைவது
என்னவென்றால், "தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்த அதே
குமுக அமைதி, போரமைதி இந்திய விடுதலைக்குப் பின்னரான
தற்போதைய காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
படத்திலே, சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்களின் எண்ணிக்கையை
ஒட்டியே தற்போதைய போர்களும் எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன.
விடுதலைக்கு முன்னர் ஏறத்தாழ 1050 ஆண்டுகளில் இல்லாத
குமுக அமைதி தற்போது தமிழருக்குக் கிடைத்திருக்கிறது.

குறிப்பாக கி.பி 1300க்குப் பின்னர் போர் ஓலங்கள் 
குறைந்த அமைதியான குமுகச் செழிப்பைக் 
காண வேண்டுமானால் அதைத் தற்போதுதான் காண முடிகிறது."

பொருளியல் மற்றும் குமுகச் சூழலில் பல்வேறு சவால்களைச்
சந்திக்க வேண்டி இருந்தாலும், இந்த அமைதியான சூழலில்
நமது மொழியையும் பண்பாட்டையும் முழுமையாக மீட்டெடுக்க
வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. கடந்த பல நூறு
ஆண்டுகளில் சந்தித்த சறுக்கல்களை எல்லாம் இன்று செப்பனிட
வேண்டி உள்ளது.

அதற்குக் காலமும் துணையாயிருக்கிறது.

அதனால்தான் தமிழ்ச் சான்றோர்கள் மொழித் 
தூய்மையின் அவசியத்தையும், அதைச் செய்யவேண்டிய 
அவசரத்தையும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய தேசியத்தில் இணைந்திருக்கிற தமிழ்நாடு 
இந்தச் சூழலை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை 
என்றால், வறட்டு வாதங்களில் ஈர்க்கப் பட்டுப் 
போய்க் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் 
இக்குமுகம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத்
தேவையான வலுவை அறவே 
இழந்து போய் விடும். 

சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு சிறிய 
குமுகம் சேற்றில் புதைந்து மறைந்து போனது போல், 
தமிழ்நாட்டுக் குமுகமும் எதிர்காலத்தில்
தனது அடையாளத்தை காலமாற்றம் 
என்ற பெயரிலும், உலக மாற்றம்
என்ற பெயரிலும் புதைத்துவிட்டு 
ஏதோ ஒரு மொழியைப் பேசி
சார்புக் குமுகமாகிவிடக்கூடும்.

ஆகவே, குமுக அமைதி என்பது தமிழ் மக்களுக்கு
நிறையவே கிடைத்திருக்கிறது. அதில் ஆற்ற வேண்டிய
கடமைகள் எவ்வளவோ இருப்பினும், மொழியைக் காக்க
வேண்டிய அவசியமும் மீட்க வேண்டிய அவசியமும்
நிறையவே இருக்கிறது।


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம்।


(தொடரும்)

(15/08/2008 அன்று விடுதலை நாள் விழா ஒன்றில் 
ஆற்றிய உரையின் சாரம்/சில பகுதிகள். எழுத விட்டவையும் உண்டு.)