Pages

Wednesday, February 13, 2008

சிலம்பு மடல் 35

சிலம்பு மடல் - 35:

குணவாயில் கோட்டம் என்பது கிழக்கு வாசல் கோட்டை அல்லது பாசறை என்பதற்கு ஆதரவாகக் கிடைக்கும் சான்றுகளும்
ஏரணங்களுமாக நான் காண்பவை:

35.1) சேர மாநிலத்திற்கு அரண வாசல்கள் நான்கு.
ஆய்நாட்டுக்குட்பட்ட காந்தளூர்ச் சாலை தெற்கு வாசல்.
குடமலை நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் இருக்கும் உதகை மண்டலம் வடக்கு வாசல். (திசை வட கிழக்கு என்ற போதிலும்).
அதனை "முதன்மை வடக்கு வாசல்" என்றும் கூறலாம்.
மேற்கு வாசல்கள் நீண்ட அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளன. அது வஞ்சி, விழிஞம் போன்ற துறைமுக நகர்களாக அமைந்திருக்கின்றன.

இந்த மூன்று வாசல்களும் இப்படியிருக்க,
பாண்டிய சேர நாட்டு எல்லையில் மதுரைக்கு
அண்மையில் இருக்கும் இந்தக் "குணவாயில்"
கிழக்கு வாசலாக அமைகிறது.

காந்தளூர்ச்சாலை சேர நிலத்திற்கு தென்பாண்டி
நாட்டுப் பகைக்கு அரணாக அமைகிறது.

உதகை கொங்கு நாட்டு வழிப் பகைக்கு
அரணாக அமைகிறது.

கடல் வழிப் பகைக்கு மேற்கு வாசல்கள்
அரணாக அமைகின்றன.

அது போல மதுரை வழிப் பகைக்கு
அரணாக அமைவது குணவாயில் என்கின்ற
கிழக்கு வாசற் கோட்டம்.

35.2) சேர மாநில அரண் அமைப்பு 35.1ல் கண்டது போல் இருக்க, சேர மாநிலத்திற்கு உட்பட்ட குடமலை நாட்டைப் பார்த்தோமானால் வஞ்சிக்குத் தெற்கே கோட்டயம் உள்ளது. இது ஒரு கோட்டை நகரம். அரண நிலம்.

இந்தக் கோட்டையம் குடமலை நாட்டின்
தெற்கு எல்லை அரண நிலமாக இருந்திருக்க
வாய்ப்புள்ளது.

அதேபோல வஞ்சிக்கு வடக்கே மலைப்புரத்திற்கு
அருகே கோட்டக்கல் (வைத்திய சாலை புகழ்)
என்ற சிற்றூர் உள்ளது. இந்தக் கோட்டக்கல்
வெள்ளையர் காலங்களில் அரண நிலமாக
இருந்துள்ளது. இது பழங்காலத்திலும் இப்படி
இருந்திருக்கும் என்ற கருதுகோள் கொண்டால்
இது குடமலை நாட்டிற்கு வடக்கு அரண நிலமாக
அமைகிறது. கோட்டக்கல் மலைப்புரம் பழைய வள்ளுவ நாட்டுத் தலைநகராக இருந்துள்ளதால் அதற்கு ஒரு 10 கல் தொலைவில் உள்ள கோட்டக்கல் (இதற்கு வெங்காளிக் கோட்டை என்ற பெயர் இருப்பதாக அறிகிறோம்)
அரண நிலமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இன்னொரு சேதி
என்னவென்றால் இந்தக் கோட்டக்கல்லுக்கு
நேர் கிழக்கே உதகை இருக்கிறது.
ஆகவே இந்த அடிப்படையில் இது குடமலை
நாட்டின் வடக்கு வாசலாகக் கருத இடமுண்டு.

கொங்கு நாடு குடமலைநாட்டோடு சேராது குடமலை நாடு தனித்து இருக்கையில், மேற்கு வாசல் வஞ்சியாகவும், வடக்கு வாசல்
கோட்டக்கல்லாகவும், தெற்கு வாசல் கோட்டயமாகவும் இருந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், குணவாயில் என்பது கிழக்குக் கோட்டயம் ஆக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் ஏரணங்களில் ஒன்றாகப் பார்க்க வேண்டும். கோட்டயம் என்றால் கோட்டைப் பகுதி என்ற பொருளில் இந்த ஏரணத்தை ஆதரவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சேரப் பேரரசு என்பது வேறு, குடமலை நாடு
என்பது வேறு. சேரப் பேரரசு பல நாடுகளை
உள் கொண்ட பரந்த மாநிலம். குடமலை நாடு
என்பது சேரத்தின் ஆணிவேர் போன்ற நாடு.
இந்த அச்சாணியின் மேல்தான் சேரப் பேரரசு
அமைகிறது. அந்தக் குடமலை நாட்டு அரசர்கள்தான் இமயவரம்பன், செங்குட்டுவன் போன்றோர். இவர்கள் இப்பகுதியில் இருந்து சேரமாநிலத்தை ஆண்டனர் என்பது வரலாறு. அந்த அடிப்படையில் குடமலை நாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் அரண்களையும் பார்க்கவேண்டும்.

அதோடு, கோட்டக்கல், கோட்டயத்திற்கு நேர் வடக்காகவும், குணவாயிலுக்கு நேர் மேற்காகவும் இருப்பது கவனிக்கத் தக்க ஒன்று.

ஆக, குடமலை நாட்டரணாகப் பார்த்தால், மேற்குக் கடல், வடக்குக் கோட்டக்கல், தெற்குக் கோட்டயம் என்ற இவற்றோடு குணக் கோட்டமும் அமைகிறது. (இவற்றை மூன்று கோட்டயங்கள் என்று நான் சொல்வேன்).

அதுதான் "குணவாயில் கோட்டம்".

35.3) அடுத்ததாக இந்த அரண வாசல்களின்
சில முக்கிய நிகழ்வுகளைச் சான்றாகச் சொல்லவேண்டும். அது இந்த அரணக் கோட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரியச் செய்யும்.

இராசராசச் சோழன் மாநிலம் கட்டுவதற்குத் துவங்கியது எங்கே? எப்படி? என்று பார்த்தால் அந்த சூக்குமம் புரியும்.

மதுரையையும் ஆய் நாட்டுக் காந்தளூர்ச் சாலையையும் ஏறத்தாழ சம காலத்தில்
பிடிக்கிறான். காந்தளூர் அரணத்திற்கு விழிஞம் வழியே கடல்வழி சென்று தாக்கிப் பிடிக்கிறான். இப்போது சேரத்தின் தெற்குப் பகுதியும் குடமலை நாட்டின் கிழக்குப் பகுதியான மதுரையும் சோழன் கையில்.

பின்னர் உதகையில் தன் தூதனைச் சிறை செய்துவிட்டான் என்று உதகையைப் பிடிக்கிறான். உதகையைப் பிடித்ததால் கொங்கு மண்டலம்
சோழன் கையில் விழுந்து விடுகிறது. கொங்கு நாடும் கொல்லி நாடும் தம்வயமானால்தான் தொண்டை நாட்டை செம்மையாகப் பிடித்து வைத்திருக்க முடியும்.

சேரத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு என்ற இந்த மூன்று வாசற் பரப்பையும் தன்னகப் படுத்திக் கொண்ட பின்னரே இராசராசன் வஞ்சி மீது
பாய்ந்து அதனைக் கைப்பற்றி மும்முடிச் சோழனாகிறான். வடக்கே மேலும் முன்னேறி கங்க நாடு, வய நாடு, துளுநாடு போன்ற நாடுகளையும் கைப்பற்றிப் பேரரசாக்குகிறான்.

இராசராசனின் இந்தப் போர்த் தந்திரமே, குறிப்பாக காந்தளூர்ச் சாலைப் போரே அதற்குப் பின்னரான 300 ஆண்டுகால சோழப் பெரும் பேரரசிற்கு அடிகோலியது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வது கவனிக்கத் தக்கது.

இராசராசன் அரண உத்தி மேற்கண்ட நான்கு
வாசல்களையுமே முறை வைத்து திட்டமிட்டு
பதம் பார்க்கிறது என்றால், அந்த நான்கு சேர வாசல்களும் முக்கியமானவை என்றும் அரணக் கோட்டங்கள் என்பதும் அறியக் கிடைக்கிறது.
அப்படி இருக்கையில் "குணவாயில் கோட்டம்"
என்பது கீழ்த்திசைக் கோயில் என்று சொல்வது
பொருந்தவில்லை.

இந்தக் கட்டுரை குணவாயில் கோட்டம்
என்பது குடநாட்டின் "கீழரண வாசல்" என்பதனை நிறுவுகிறது; "குணவாயில் கோட்டம்" என்ற இந்தச் சொற்களின் ஆட்சி எவ்வளவு இலக்கிய அழகு மிளிற அமைக்கப் பட்டிருக்கிறது என்பதனைச் சொல்வதாகவும் மேலும் சில அரணச் சான்றுகளோடும், தொடரும் மடல் அமையும். அதோடு முக்கியமான முடிச்சொன்றை அவிழ்க்கவும் அது ஏதுவாகும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: