Pages

Friday, April 21, 2006

பாரதிதாசனுக்கு என் வீரவணக்கம்! (உரை வீச்சு)

தமிழனே, எம் மூச்சோடு கலந்து போனவனே,
பாரதிதாசனே,

எமது சொற்களுக்கு சாணை பிடித்துக் கொடுத்தவன் நீ!
தமிழின் காலமெல்லாம் உன் காலம்.

எமது கொம்புகளுக்குக் கூர் சீவியவன் நீ!
அவற்றில் வண்ணம் தீட்டாமல் விட்டு வைத்தனையே! புரிகிறது.

எமது சுண்டிப் போன குருதியையும் சுழியிட்டு ஓட வைத்தவன் நீ!
மதகுகள் அதற்கு மணல் மேடு.

எமது திசைகள் நூறெனினும், உன் திசையில் ஒன்றச் செய்தவன் நீ!
காண்கிறது தமிழ் மண் அவ்வப்போது.

எமது அகத்துக்கு முகம் கொடுத்தவன் நீ!
அங்கு வாழ்வது தீ!

எமது சிந்தைக்கு செயல் கொடுத்தவன் நீ!
தெளிவு கொண்டோ ம் யாம்.

எமது கரங்களில் வாள் தந்து சென்றவன் நீ!
இன்னும் உறை போகவில்லை அது.

எமது அறிவிற்கு, பகை அறியும் பாடம் தந்தவன் நீ!
களை அரியவும் கற்றுக் கொண்டோ ம் யாம்.

உன்னைக் கசடறக் கற்றவர் கையளவு;
கற்க வேண்டியோர் தமிழளவு.

கற்போர் தமிழர்;
கற்பார் தமிழர்!
நிற்பார் தமிழர்!
நிற்கிறேன் உன் திசை தொழுது!

விரைத்த என் விரல்கள் என் நெற்றிப் பொட்டிலே;
வீர வணக்கம் சொல்கின்றேன் உன் நாளில்! ஏற்றுக் கொள்.
வாழ்க நின் புகழ். வளர்க தமிழகங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-200

No comments: