Pages

Sunday, February 28, 1999

சிலம்பு மடல் 8

சிலம்பு மடல் - 8 பரத்தையின்கண் பிரிதல்!

புகார்:
அந்திமாலை:

பெண்மையை வியாபாரம் செய்யும் பரத்தையர் மரபில் பிறந்திருந்தாலும் தான் பெற்றவைகளையாவது
அதைவிடச் சிறந்த வாழ்க்கையில் வாழவைக்கவேண்டும் என்ற எண்ணம் எதுவும் தோன்றிடாமல் குலக்க
ல்வி யையே மாதவிக்கும் ஊட்டிய மாதவியின் தாயாருக்கும் ஒழுக்கமில்லை.

தான்பெற்ற அரசப்பரிசை விலை கொடுத்து வாங்கிய கோவலன் கண்ணகியின் காவலன் என்று தெரிந்தபி
றகும், அவனை நீங்கிட மாதவியும், மனதிலும் நினைத்தாளில்லை! அந்த ஒழுக்கத்தைச் சமுதாயமும்
அவளுக்கு போதித்திருக்கவில்லை!

பெருஞ்செல்வத்தின் மெத்தையில் மனைவியுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையுடன் நின்றுவிட அருமந்த க
ல்வியை அவன் கற்றான் இல்லை. அவனுக்குக் கசடறக் கற்பித்தாரும் இருந்திருக்க வில்லை!

கண்ணகியுடனான உறவில் உண்டான வாழ்க்கையெனும் நட்பிற்கு நயவஞ்சகம் செய்திடாப் பண்பையும்
அறிந்தானில்லை;

"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று" என்று வள்ளுவம் சொல்வதுபோல் பெருஞ்செல்வக் கோவலனின் பண்பில்லாக்
குற்றத்தால் அச்செல்வமும் தீவினையே விளைவித்ததன்றி நற்பயன் அளிக்கவில்லை!

கற்பின் பொருட்டாலல்லாவிடிலும் நட்பின் பொருட்டாலாவது "மிகுதிக்கண் மேற்சென்றிடிக்க" கண்ணகியும்
கோவலச்சேதி உடன் அறிந்தாளில்லை! பின்னாள் மாதவியுடன் முறிந்த பின்னர் அவனைச் சேர்த்துக் கெ
஡ண்ட கண்ணகி, முன்னாள் கோவலச்சேதி அறிந்தஉடன் அழைத்துக் கொள்ள முயன்றா ளில்லை!

தனிக்குடித்தனம் வைத்ததோடு மாசாத்துவானும், மாநாய்கனும் எம்கடமை தீர்ந்ததென்று எங்கோ போ
ய்விட்டது போல் தெரிகிறதே! நற்குடித்தனம் கோவலன் செய்திருந்தால் தனிக்குடித்தனத்தில் நுழையாப்
பெருந்தன்மையாளராக அவர்களைப் பார்த்திருக்கலாம்! ஆனால் கோவலமாதவி வாழ்விலும் இடை
ப்புகுந்து இடிக்காமையால் அறம்கற்றோராய் அவர்கள் தெரியவில்லை.

களவுக்கும் கற்புக்கும் வழி அமைத்து வகையிட்ட பெருமக்கள், பிரிவுக்கும் வகையிட்டது தமிழுக்குச் சி
றப்பெனினும், பிரிவில் ஒன்றாம் "பரத்தையின்கண் பிரிதல்", என்று தலைவன் தலைவியைப் பிரிதலுக்குப்
பெயர் சூட்டிவிட்டது பரத்தையர் குலத்தை ஏற்புடையதாக்கி, ஆணின் அதிகப்படியான தேவைக்கு நியா
யமும் கற்பித்துவிட்டார்கள்!

ஒழுக்க மீறல்களுக்கும் இலக்கணமிட்டுச் சென்றிருக்கிறார்கள்!

"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான" ( தொல்காப்பியம்)

பெண்ணுக்கு (தலைவிக்கு) மாதவிடாய்( பூப்பு) முடிந்த உடன் முதல் பன்னிரண்டு நாட்களில் தலைவன்
அவளை நீங்குதல் கூடாது! கரு உண்டாவதன் பொருட்டு!

இந்தப் பன்னிரண்டு நாட்கள் தவிர ஏனைய நாட்களில் கலந்தால் கரு ஏற்பட வாய்ப்பு இல்லை அல்லது
குறைவு என்று உடற்கூறு வழிநின்று இது எழுதப்பட்டிருக்கிறது.

மற்ற நாட்களில் பரத்தையுடன் புரள கட்டுப்பாடேதும் சொல்லப்படவில்லை.

சுயநலத்திற்காக, கற்பென்னும் சொத்தை மட்டும் பெண்ணுக்கே உரிமையாக்கிய ஆணாதிக்க சமுதாயத்
தின் ஆண்மை நீர்த்துத்தான் போயிருக்கிறது!

இரவுகளில் இணையோடு இருப்பதே இன்பம்! துணையில்லை என்றால் துன்பமே!

"கூடினார் பால்நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதவிழ்க்கும் கங்குல் பொழுது."

கூடிய நண்பரிடம் குளுமையையும், கூடாப் பகைவரிடம் கடுமையையும் காட்டும் அரசனைப்போல், இ
ரவிலே கண்ணகிக்கு வெப்பத்தையும், கோவலனைக் கூடிய மாதவிக்கு குளிர்ச்சியையும் கொடுத்தது வானி
லே முழுநிலவின் ஆட்சி!

"அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி ............"

மனிதவாழ்க்கையில் மனிதரோடு மட்டுமல்ல, மரம் செடியோடும், விலங்குகளோடும் மண்ணோடும் மண்ண
஡லான மாளிகையோடும் குச்சியாலான குடிசையோடும் உறவுகள் உண்டாகிவிடுகிறது! இதயம் இவற்றில்
இணைந்து விடுகிறது! சொந்த மண்ணை மறக்க முடிவதில்லை! சிறிது நாள் வாழ்ந்த மண்ணைப் பிரி
யமுடிவதில்லை! பழகிய மரம் செடிகொடி பூக்களையும் நினைக்கும் போது ஏங்காமல் இருக்க முடிவதில்ந
ல! வாழ்ந்த வீட்டை இழக்க முடிவதில்லை! மனிதனைச் சுற்றி இருக்கும் அசையும் அசையாப் பொருட்க
ளோடும் அதற்கு மேலாக நெருக்கத்தில் இருக்கும் மனிதரோடும் ஏற்படக் கூடிய உறவுகள் நட்பென்னும்
நல்லுணர்வை, அன்பென்னும் அருமந்த உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன! பிரிவில், துயருற்று வாடலே
நட்பையும், நேர்மையான அன்பையும், மென்மையான உணர்வுகளையும் வெளிக்காண்பிக்கிறது!

கோவலனைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணரசி, எண்ணெய் மறந்த கூந்தலுடன், அழகு நெற்றியில் திலகம் எ
ழுத மறந்து, அழகிய விழிகளில் அஞ்சனம் தீட்டாது, காதணி துறந்து, இடையில் அணியும் மேகலை நீங்கி,
காற்சிலம்பு அணியாது, அழகிய முலைகளில் குங்குமச் சாந்து பூசாமல், சுருங்கச் சொன்னால் மங்கல
அணி தவிர மற்றைய அணிகள் எதுவும் அணியாமல் வாடியிருக்கிறாள்.

நிலையாமையை அறிந்தவராய் பிணையல் பாம்புகள் போல் பின்னிப் பிணைந்துவாழ்ந்த காதல் வாழ்க்கை
மாறி 'காமத்தாலோ கலவியாலோ ஏற்படக்கூடிய சிறு வியர்வைத்துளிகள் எதுவும் இன்றி வாழ்கிறாள்'
என்று சொல்லப்படும்போது தலைவன் தலைவி பிரிதலினால் ஏற்படும் துயரத்தின் ஆழம் அளவற்றதாய்த்
தெரிகிறது.

கண்ணகி இப்படியிருக்க, மாதவி, 'கோவலன்பால் மிகுந்த ஆர்வத்துடன், விருப்பமிக்க நெஞ்சோடு
அவனுடன் இணைந்து இன்பமளித்தாள். அப்படி இன்பம் அளித்ததும் கலைந்துபோன ஆடைகளைத் தி
ருத்திக் கொண்டு மீண்டும் இன்பமளித்தாள்';

"இல்வளர் முல்லையொடு, மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி........."

கற்பு வாழ்க்கையில் கண்ணகியுடன் கோவலன் இன்பம் துய்த்த போது, அவர்களிருவரும் நிலையாமையை
உணர்ந்து, பின்னிப் பிணைந்ததாய் இளங்கோவடிகள் சொல்லும் போது இருமனம் கலந்த இன்ப வாழ்க்கை
கண்முன் விரிகிறது!

ஆனால் மாதவியோடு இன்பம் துய்த்தபோது 'மாதவி இன்பம் அளித்தாள்; ஆடை திருத்தி மீண்டும்
அளித்தாள்' என்று இளங்கோவடிகள் சொல்லி, Publish Postபொருள்கொடுத்து பெறும் பரத்தையின்பத்தை, கற்பில் கி
டைத்த இன்பத்தில் இருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டிப்போயிருக்கிறார்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
28-பிப்ரவரி-1999

No comments: