இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!
இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html
1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.
2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.
3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.
5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.
6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.
இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.
7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.
கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Sunday, November 12, 2006
Friday, November 10, 2006
வாகரைப் படுகொலைகள்
தமிழ் ஈழத்தில், வாகரையில் மீண்டும் அப்பாவி அகதி மக்களின் மீது
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.
தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.
தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.
Thursday, October 05, 2006
மரபுகள் சமைக்க! (வெண்பா)
(சவுதித் தமிழர்களின் எழுத்துக்கூடம் என்ற மடற்குழுவில் நடைபெறும்
வெண்பாப் பட்டறையில் எழுதியது)
வெண்பா வரையும் கவிஞ, நிறைநண்ப!
அன்பால் வரைவன் சுவைத்தனனாய்;-புண்போல்ஆம்
தென்பால் வரைவில் மொழிக்கூட்டம்; முள்விலக்கி
தண்பா வரைதல் தலை!
(1)
மரபைச் சமைக்கவிஞ உந்தம் கவிதைச்
சரமென் மனத்தே மயக்கி - விரவி
விரல்களை ஈர்ப்பதேன்? நும்முயல்வே! மேல்நில்
தரஞ்சேர் தமிழே படை!
(2)
படிபடி பாரதி பாடிப் படிநீ
படிபடி பாரதி தாசன்! - படிக்கின்
படிப்படி ஏறிடும் சொல்லும் பொருளும்;
படித்தவர் சூக்குமம் கேள்!
(3)
திரிதிரி கோல்களைத் தூக்கித் திரிநீ
திரிதிரி பாக்களை யாப்புள் - கிரிபோல்
திரிதிரி தேனன கீதம் மறையே
திரிதிரி நுட்பமும் உள்!
(4)
நிகண்டொன்றை கையோடே நீகொள்வாய் அன்றேல்
அகராதி அக்குள் செருகி - புகழ்தக்க
மேகலையோ கம்பமோ ஒன்றில் நிலைத்திட
வேகமிகப் பாடுவாய் காண்!
(5)
மங்கையுடன் கூட்டத்தை மெய்மறந்தே யாத்திடவள்
அங்கையின் ஓர்வரியும் ஓர்பாட்டாம்! - நங்கையின்
கொங்கையும் நற்கொசுவம் உச்சிமயிர் ஒவ்வொன்றும்
உங்கவியில் ஏங்கிட வை!
(6)
ஆடவனின் தோள்வலியை ஆள்வலியைத் தீட்டுபெண்ணே!
கூடவரச் சாகசமேன் கேளுபெண்ணே! - வேடன்ஆய்
ஊடலையும் போக்குவித்த போகத்தை வார்க்கையிலுன்
வாடலையும் தேடலையும் சேர்!
(7)
குத்தாட்டம் போட்டாலும் கும்மாளம் போட்டாலும்
வித்தாகப் பாட்டில் தமிழேவை; - ஒத்திடுமோ
கொத்துக்குள் ஆங்கிலமும் ஆர்மொழியும்? அக்கூட்டை
பித்தமென்றே சொல்வர் நினை!
(8)
அரபிக் கவிதை, உருதுக் கதைகள்,
பரதேயப் பட்டாங்கும் செய்தமிழில் - ஊரர்
தரம்மேவு ஆக்கம் தலையிற் சுமந்தே
வரவேணும் தென்பாண்டி ஊர்!
(9)
கட்டுக்குள் கட்டுதலே கட்டல்ல! கட்டாக்கால்
கட்டிலிலே கட்டுதல்தான் கிட்டாதே! - கட்டுப்போல்,
கட்டிடுகக் கட்டிப்பொன் கொட்டுநிகர் கெட்டிப்பா;
கட்டினவர் கண்டார் சுகம்!
(10)
குறிப்பு: கிரி = மலை, அங்கை = உள்ளங்கை, பரதேயம் - பல/அயல நாடுகள்
பட்டாங்கு = சாத்திரம்/இயல்பு
அன்புடன்
நாக.இளங்கோவன்
01/அக்/06
வெண்பாப் பட்டறையில் எழுதியது)
வெண்பா வரையும் கவிஞ, நிறைநண்ப!
அன்பால் வரைவன் சுவைத்தனனாய்;-புண்போல்ஆம்
தென்பால் வரைவில் மொழிக்கூட்டம்; முள்விலக்கி
தண்பா வரைதல் தலை!
(1)
மரபைச் சமைக்கவிஞ உந்தம் கவிதைச்
சரமென் மனத்தே மயக்கி - விரவி
விரல்களை ஈர்ப்பதேன்? நும்முயல்வே! மேல்நில்
தரஞ்சேர் தமிழே படை!
(2)
படிபடி பாரதி பாடிப் படிநீ
படிபடி பாரதி தாசன்! - படிக்கின்
படிப்படி ஏறிடும் சொல்லும் பொருளும்;
படித்தவர் சூக்குமம் கேள்!
(3)
திரிதிரி கோல்களைத் தூக்கித் திரிநீ
திரிதிரி பாக்களை யாப்புள் - கிரிபோல்
திரிதிரி தேனன கீதம் மறையே
திரிதிரி நுட்பமும் உள்!
(4)
நிகண்டொன்றை கையோடே நீகொள்வாய் அன்றேல்
அகராதி அக்குள் செருகி - புகழ்தக்க
மேகலையோ கம்பமோ ஒன்றில் நிலைத்திட
வேகமிகப் பாடுவாய் காண்!
(5)
மங்கையுடன் கூட்டத்தை மெய்மறந்தே யாத்திடவள்
அங்கையின் ஓர்வரியும் ஓர்பாட்டாம்! - நங்கையின்
கொங்கையும் நற்கொசுவம் உச்சிமயிர் ஒவ்வொன்றும்
உங்கவியில் ஏங்கிட வை!
(6)
ஆடவனின் தோள்வலியை ஆள்வலியைத் தீட்டுபெண்ணே!
கூடவரச் சாகசமேன் கேளுபெண்ணே! - வேடன்ஆய்
ஊடலையும் போக்குவித்த போகத்தை வார்க்கையிலுன்
வாடலையும் தேடலையும் சேர்!
(7)
குத்தாட்டம் போட்டாலும் கும்மாளம் போட்டாலும்
வித்தாகப் பாட்டில் தமிழேவை; - ஒத்திடுமோ
கொத்துக்குள் ஆங்கிலமும் ஆர்மொழியும்? அக்கூட்டை
பித்தமென்றே சொல்வர் நினை!
(8)
அரபிக் கவிதை, உருதுக் கதைகள்,
பரதேயப் பட்டாங்கும் செய்தமிழில் - ஊரர்
தரம்மேவு ஆக்கம் தலையிற் சுமந்தே
வரவேணும் தென்பாண்டி ஊர்!
(9)
கட்டுக்குள் கட்டுதலே கட்டல்ல! கட்டாக்கால்
கட்டிலிலே கட்டுதல்தான் கிட்டாதே! - கட்டுப்போல்,
கட்டிடுகக் கட்டிப்பொன் கொட்டுநிகர் கெட்டிப்பா;
கட்டினவர் கண்டார் சுகம்!
(10)
குறிப்பு: கிரி = மலை, அங்கை = உள்ளங்கை, பரதேயம் - பல/அயல நாடுகள்
பட்டாங்கு = சாத்திரம்/இயல்பு
அன்புடன்
நாக.இளங்கோவன்
01/அக்/06
கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு)
கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு!)
கதிரவனே!
என் மண்ணில் நீ தோன்றியபோதெல்லாம் தொழுத என் கரங்கள்,
அயல் மண்ணிலும் நீ தோன்றும் போது திகைத்து நிற்கின்றன!
தையிலே பொங்கலிட்டு நன்றியைத்தான் செய்து வைத்தேனே!
நன்றி மறந்துவிட்டு நாடு தோறும் கதிர்வீசும் கதிரவனே,
அயல் மண்ணைத் தொட்டதனால் நீயும் எனக்கு அயலவனே!
மேகத்தைக் காவலிட்டு காணாமல் போகிறாயோ? இல்லை
இருளை நீ ஏவி விட்டு இல்லாமல் போகிறாயோ?
நிலவை நீ நீந்தவிட்டு நில்லாமல் போகிறாயோ?
விண்மீன்கள் கண்சிமிட்டி சொல்வதெல்லாம் இதுதானோ?
வேரிலே நீரோடு, நிமிர்ந்துன்னை போற்றிடுமென்
பயிர்களும் உன்னைப் பழித்திடும் பகைவன் என்றே!
ஓடையிலே ஆடி முடித்து என் காதலிதன்
மேனியெல்லாம் பொன்னால் பூட்டிக் கொள்ளும் வரை
உன்முகம் விடியாமுகமாக இருக்கட்டும்! பொல்லாதவன் நீ!
கண்டு கொண்டேன் உன் செய்கை கடல் தாண்டி வந்ததுமே!,
ஓடிப்போ விழிக்காதே என் முகத்தில்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
கன்சாசு சிட்டி (அ.கூ.நா)
நவம்பர் 2000
(பழைய தொகுப்பில் இருந்து)
கதிரவனே!
என் மண்ணில் நீ தோன்றியபோதெல்லாம் தொழுத என் கரங்கள்,
அயல் மண்ணிலும் நீ தோன்றும் போது திகைத்து நிற்கின்றன!
தையிலே பொங்கலிட்டு நன்றியைத்தான் செய்து வைத்தேனே!
நன்றி மறந்துவிட்டு நாடு தோறும் கதிர்வீசும் கதிரவனே,
அயல் மண்ணைத் தொட்டதனால் நீயும் எனக்கு அயலவனே!
மேகத்தைக் காவலிட்டு காணாமல் போகிறாயோ? இல்லை
இருளை நீ ஏவி விட்டு இல்லாமல் போகிறாயோ?
நிலவை நீ நீந்தவிட்டு நில்லாமல் போகிறாயோ?
விண்மீன்கள் கண்சிமிட்டி சொல்வதெல்லாம் இதுதானோ?
வேரிலே நீரோடு, நிமிர்ந்துன்னை போற்றிடுமென்
பயிர்களும் உன்னைப் பழித்திடும் பகைவன் என்றே!
ஓடையிலே ஆடி முடித்து என் காதலிதன்
மேனியெல்லாம் பொன்னால் பூட்டிக் கொள்ளும் வரை
உன்முகம் விடியாமுகமாக இருக்கட்டும்! பொல்லாதவன் நீ!
கண்டு கொண்டேன் உன் செய்கை கடல் தாண்டி வந்ததுமே!,
ஓடிப்போ விழிக்காதே என் முகத்தில்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
கன்சாசு சிட்டி (அ.கூ.நா)
நவம்பர் 2000
(பழைய தொகுப்பில் இருந்து)
Thursday, September 21, 2006
மண்வாசனை!
தென்றல் உலாவத் தென்னை சென்றேன்
தலைக்கனம் மிகுந்து சற்றும் வளையா
நெடுநெடு தென்னை என்னை நோக்க
கொடுகொடு என்றேன் தென்னந் தண்ணீர் !
இந்தாப் பிடிஎடுத் தேக்குடி என்றே
இரண்டு இளங்காய் போட்ட துகேளீர் !
பொன்நிறச் சதையால் போர்த்தியக் காயுள்
பொன்னி நதியில் திருடிய தண்ணீர் !
தாகம் தீர தண்ணீர் பருக
மேகம் மோது தென்னை விலகி
பாதை அருகே பந்தலில் குந்தி
காயைப் பாங்குடன் இருகை ஏந்தி
வாயுடன் காயின் வாயிடம் வைத்து
தானுண்ட நீரைத் தலையில் தந்த
தென்னை போற்றித் தண்ணீர் குடித்தேன் !
தென்னை பார்த்து நன்றி சொன்ன
என்னை ஈர்த்த அந்தப் படமோ
என்சிறு நாய்ந னைத்தத் தடமே;
தென்னை அடியில் ஈரமுக் கோணம் !
சிரித்துக் கொண்டே திரும்பிப் போக
எறிந்தது தென்னை இன்னொரு காயை !
சொன்னது காதில் "சொல்லாதே வெளியில்" !
பொன்னியில் திருடிய தண்ணீர் மறைக்க
என்னிடம் தந்தது சிறுகை யூட்டு !
செந்தமிழ்த் தாய்மண் வளர்ந்ததென் னையதே !
அன்புடன்
நாக.இளங்கோவன்
தலைக்கனம் மிகுந்து சற்றும் வளையா
நெடுநெடு தென்னை என்னை நோக்க
கொடுகொடு என்றேன் தென்னந் தண்ணீர் !
இந்தாப் பிடிஎடுத் தேக்குடி என்றே
இரண்டு இளங்காய் போட்ட துகேளீர் !
பொன்நிறச் சதையால் போர்த்தியக் காயுள்
பொன்னி நதியில் திருடிய தண்ணீர் !
தாகம் தீர தண்ணீர் பருக
மேகம் மோது தென்னை விலகி
பாதை அருகே பந்தலில் குந்தி
காயைப் பாங்குடன் இருகை ஏந்தி
வாயுடன் காயின் வாயிடம் வைத்து
தானுண்ட நீரைத் தலையில் தந்த
தென்னை போற்றித் தண்ணீர் குடித்தேன் !
தென்னை பார்த்து நன்றி சொன்ன
என்னை ஈர்த்த அந்தப் படமோ
என்சிறு நாய்ந னைத்தத் தடமே;
தென்னை அடியில் ஈரமுக் கோணம் !
சிரித்துக் கொண்டே திரும்பிப் போக
எறிந்தது தென்னை இன்னொரு காயை !
சொன்னது காதில் "சொல்லாதே வெளியில்" !
பொன்னியில் திருடிய தண்ணீர் மறைக்க
என்னிடம் தந்தது சிறுகை யூட்டு !
செந்தமிழ்த் தாய்மண் வளர்ந்ததென் னையதே !
அன்புடன்
நாக.இளங்கோவன்
Saturday, September 09, 2006
Can I get a LIFT? - poem (Not for Contest)
முல்லைப் பந்தரை முகர்ந்து பார்க்க
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!
கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!
இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!
வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!
மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!
பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!
பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !
அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!
கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!
இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!
வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!
மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!
பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!
பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !
அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )
Monday, August 14, 2006
நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்
முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!
கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!
ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!
கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!
முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.
அந்தக் கோரச் சாவுகள் விபத்து!
ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.
தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.
இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?
இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?
கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!
எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!
தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.
இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.
இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.
61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.
இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?
நயனன் :-(
சிங்களக் காடையன்!
கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!
ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!
கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!
முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.
அந்தக் கோரச் சாவுகள் விபத்து!
ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.
தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.
இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?
இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?
கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!
எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!
தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.
இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.
இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.
61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.
இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?
நயனன் :-(
Subscribe to:
Posts (Atom)