Pages

Thursday, May 15, 2014

தேர்தல்-2014: வரவேற்கப்படவேண்டிய தனிப்பெரும்பான்மை

மிகப்பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய நடுவணரசு தனிப்பெரும்பான்மையுடன் அமைகிறது. இது மிகவும்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதும்போது பா.ச.க
சுமார் 280 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. ஒரு வேளை சில
இடங்களால் பெரும்பான்மைக் குறை ஏற்பட்டாலும், அது பெரிய
விதயமாக இருக்காது.

1) கூட்டணி ஆட்சி என்ற போது பரவலான மகிழ்ச்சி இருந்த காலம் உண்டு. அது மாநில மக்களின் தேவைகளை நடுவணரசில் எடுத்து வைக்கும் என்று
வெகு எதார்த்தமாக சிந்தித்த அப்பாவி மக்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் - பெரிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்த மாநிலக் கட்சிகள், தமது மக்களின் உரிமைகளை, நலனை, மானத்தை முன்னெடுத்து வைப்பத்ற்குப் பதிலாக, பெரிய கட்சியின் எடுபிடியாக, அவர்கள் கைகளில் இருந்து சிந்தும்
எச்சிலுக்கு அலைந்த கதையைத்தான் காணமுடிந்தது.

2) இந்தியாவில் பெயர் சொல்லக்கூடிய 30 கட்சிகளேனும் இருக்கின்றன. இவற்றுள் ஒரு கட்சி பெரும்பாண்மை பெறும்போது, மீதி இருக்கும் கட்சிகள், ஆளுங்கட்சியின் தவறுகளை மிகவலுவாக எதிர்க்க முடியும். ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாமல், 15 கட்சிகளோடு கூட்டணி போடும்போது,
நடக்கும் எந்தத் தவறுகளையும், ஊழல்களையும் யாரும் தட்டிக் கேட்க முடியாமல் போனது. அனைத்து கட்சிகளும் கொள்ளையில் கூட்டணி போட்டு, இந்திய வளங்களை தங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்தன.
அப்படிக் கொண்டுபோகும் போது, சில கட்சிகளின் கைகளில் இருந்து நழுவி விழுந்தவை மாநிலங்களுக்குச் செய்த நன்மையாக அக்கட்சிகளால் சொல்லப்பட்டது.

இந்தக் கேவலமான நிலையை பா.ச.கவின் தனிப்பெரும்பான்மை மாற்றியிருக்கிறது.

பா.ச.கவின் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பது வேறு விதயம். ஆனால், அது தவறு செய்யும் வேளைகளில் தட்டிக் கேட்க, நிறைய கட்சிகள் இருக்கின்றன என்பதைத்தான் நான் மிகவும் வரவேற்கிறேன்.

ஆகவே, இதுகாறும் கூட்டணி போதையில், மாயையில் இருந்தவர்கள் மாற்றிச் சிந்திக்கத் துவங்குவார்கள் என்று கருத இடம் இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்


No comments: