Pages

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 9

31) மேற்சொன்ன ஒருங்குறிக் கிரந்தச் சிக்கல்களின் சுருக்கம்:



32) கிரந்தக் கலப்பு பற்றி நிலவுகின்ற தவறான புரிதல்:

கிரந்த நுழைவு பற்றிய ஒரு முக்கியமான புரிதல்
இங்கே அவசியமாகிறது. உலகில் உள்ள பல
இலக்கக் குறிகளை ஒருங்கு சேர்க்கும்
ஒருங்குறியில், தனியாக, “தமிழ் மொழியில்
கலக்காமல் கிரந்தக் குறிகளை தனிப்பாத்தியாக
துணைப்பன்மொழித் தளத்தில்” ஒருங்குறிச்
சேர்த்தியம் வைக்குமானால் அது பற்றி நாம்
கவலைப்பட ஒன்றுமேயில்லை.

தமிழ் எழுத்துக்களில் கிரந்தத்தை நுழைப்பதுவும்,
அதேபோல கிரந்தத்தில் தமிழைக் கொண்டு
போய் நுழைப்பதுவும் தான் மொழிப்படுகொலையாகும்.

ஒருங்குறியில் கிரந்தம் தனியாகக் குறியேற்றம்
செய்யப்பட்டால், அதையே தமிழிற்கு இருக்கும்
பாத்திகளில் கலப்பதாக எண்ணிச் சிலர்
கவலையுறுவதைக் காண முடிகிறது.
அந்தக் கவலை கைவிடப்பட வேண்டிய ஒன்று.

சீட்டுக்கட்டுக் குறிகள், இசைக்குறிகள்,
பழஞ்சின்னங்கள் போன்றவை தேடித் தேடிச்
சேர்க்கப்படும் இடத்தில் கிரந்தத்துக்கோ
வேறு எழுத்துக்களுக்கோ இடம்
ஒதுக்குவார்களெனின் அது தமிழ்நாட்டின்
கவலையாக இருக்க முடியாது.

அதைச் செய்யக் கூடாது என்று நாம்
மறுத்தால் அது அறியாமை என்று கருதப்பட்டு
நமது கருத்துக்கள் எதுவுமே செல்லுபடியாகாமல்
போய்விடும் பேராபத்து இருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவது ஒருபுறம்
தேவையெனினும் சூழ்க்குமாகவும்
அறிவுப்பூர்வமாகவும் அணுகவேண்டிய இடம் இது
என்று சொல்லவேண்டிய கடமையிருக்கிறது.

அதுமட்டுமல்ல நமது தமிழ்ப் பழஞ்சின்னங்கள்,
குறிகள் போன்றவற்றை வரும் காலங்களில்
ஒருங்குறியில் கொண்டுவரக் கோரும்
தார்மீகத் தகுதியை நாம் இழந்தவர்களாவோம்.
(17-தள சட்டகம் மற்றும் தளம் பற்றிய விளக்கங்களைக்
மீண்டும் காண்க)

அப்படியும் உணர்ச்சி மிகுதியால் யாரேனும்,
“தமிழில் கிரந்தம் கலக்கக் கூடாது;
கிரந்தம் தமிழில் கலக்கக் கூடாது” என்பது மட்டுமல்ல,
“கிரந்தமே ஒருங்குறித் தரப்பாட்டுக்குள் கொண்டு
செல்லப் படக் கூடாது” என்று போர்க்கொடி
தூக்குவார்களெனின்,

• அது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது
• தமிழர்கள் கிரந்தத்திற்கு உரிமையாளரா?

என்ற வினா வரும்! ஆம் என்று பதில் சொல்வோமெனின்
அது வெட்கக் கேடு; இல்லை என்று சொல்வோமெனின்
“உரிமை இல்லாதவர்களுக்கு இது பற்றிப்
பேச இடம் இல்லை” என்று சேர்த்தியம்
சொல்லிவிடும். இதுதான் நிலை.

ஆகவே, தமிழ்நாட்டரசும்,
“கிரந்தம் தமிழில் வந்து கலக்கக் கூடாது”,
“தமிழும் கிரந்தத்திற்குப் போய் கலக்கக் கூடாது”
என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கவேண்டுமே தவிர,
“ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்ளேயே
கிரந்தத்தை விடக்கூடாது” என்ற நிலை எடுக்கக் கூடாது.

(தொடரும்)

பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: