Pages

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 10

தொகுதி-4: ஒருங்குறியின் பிற இன்னல்கள்

ஒருங்குறியில் தமிழுக்கு ஊறு தரும்
கிரந்தக் கலப்பை மட்டும் தற்போது கவனித்து
வருகிறோம். ஆனால் அதில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும்
அடிப்படைப் பிசகுகள் களையப்பட வேண்டும்.

ஒருங்குறியில் வைக்கப்படும் ஒவ்வொரு
எழுத்துக்கும் ஒரு குறியெண் கொடுக்கப்படும்
என்று பார்த்தோம். கூடவே அதற்கு ஒரு பெயரும்
உண்டு. ஒரு எழுத்துக் குறியை வரையறுத்துச்
சொல்வதற்கு, குறிப்பெயரையும் (Code Name),
குறிஎண்ணையும் (Code Point) சேர்த்துச் சொல்வது
ஒருங்குறி மரபு.

ஒருங்குறி சார்ந்த எல்லா ஆவணங்களிலும்
இப்படித்தான் எழுதுவார்கள். காட்டாக,
“U+0B95 TAMIL LETTER KA “ என்பது “க”
என்ற தமிழ் எழுத்துக் குறிக்கான அடையாளம் ஆகும்.


33) இடர்-1:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில் தற்போது
இடம் பெற்றிருக்கும் 5 கிரந்த எழுத்துக்களுக்கு
கொடுக்கப் பட்டிருக்கும் பெயர்களைப் படத்தில் காண்க.

கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்கள் என்று அடையாளமிட்டிருப்பதை ஏற்க முடியுமா?

அரசாணையில் வந்துவிட்டதால் அதனை யாராவது தமிழ் எழுத்துக்கள் என்று சொன்னால் அது சரியா?

எதிர்காலத்தில் தமிழக, நடுவ, பன்னாட்டுப் பிற மன்றங்களில் இவ்வெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று சொல்லமுடியுமா?

ஒரு புறம் கிரந்த எழுத்துக்கள் என்று
சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம்
தமிழ் எழுத்துக்கள் என்று ஆவணமாக்கி
விடுதல் பிழையல்லவா? மேலும்,
நடுவணரசு முன்மொழிந்திருக்கும்
கலவைக் குறியீட்டில் அதே கிரந்த
எழுத்துக்களை கிரந்த எழுத்துக்கள்
என்றே குறிப்பிட்டிருப்பதைக் கீழே காண்க.












34) இடர்-2:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில் பல்வேறு
குறிகள் என்ற தலைப்பிலே ஏற்படுத்தப்
பட்டிருக்கும் குறிகளைக் காண்க.

அனுசுவரா என்று, தமிழ் எழுத்துக் குறி
எதற்கும் பெயருண்டா?

இல்லை என்றால் இது எப்படி ஏற்பட்டது?

அந்தக் குறிக்குக் கீழே
“இது தமிழில் பயனாவது இல்லை”
என்று எழுதப் பட்டிருக்கிறது.
தமிழில் பயனாகாத குறியை தமிழ்
அட்டவனையில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?

அதே போல தமிழ் ஆய்தக் குறிக்குப் பெயர்
விசாருகாவா?

இல்லை என்றால் TAMIL SIGN AYTHAM
என்று எழுதாமல் ஏன் TAMIL SIGN VISARGA
என்று ஆவணப்படுத்தப் பட்டுள்ளது?

இவற்றை நாம் இப்படியே விட்டால்
ஒரு காலத்தில் எது தமிழ் எது கிரந்தம்
என்று தெரியாமற்போவது மட்டுமல்ல
நம்முடையதையெல்லாம் தவற விட்டுவிட்டுப்
பின்னர் சிந்திப்பவர்களாக மாட்டோமா?


35) இடர்-3:
விராமா எனறால் என்ன? விராமா என்பது
தமிழ் மெய்ப்புள்ளிக்கு இருக்கும் தமிழ்ப் பெயரா?
விராமா என்பது தமிழா?

இல்லாவிடில் அது எப்படி TAMIL SIGN VIRAMA
என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது?

தமிழின் அடிப்படைக் குறிகளுக்கு இப்படிப்
பெயரிடுவதால் வடமொழியில் இருந்துதான்
தமிழ் வந்தது, கிரந்தத்தில் இருந்துதான்
தமிழ் எழுத்துக்கள் வந்தன என்று யாரும்
சொன்னால் எப்படி மறுக்க முடியும்?

36) இடர்-4:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில்
காலியிடமாக வைப்பில் இருக்கும்
இரண்டு இடங்கள் எதற்காக
வைக்கப்பட்டிருக்கின்றன என்று படத்தில் காண்க.

தேவநாகரி தண்டாக் குறிக்கும்,
இரட்டைத் தண்டாவுக்கும் ஏன் தமிழ்ப் பாத்தியில்
இடம் வைப்பில் இருக்கிறது?

கிரந்தம் மட்டுமல்ல தேவநாகரியையும்
கலக்க ஏதுவாகாதா?

37) இடர்-5:

ஒருங்குறிச் சேர்த்தியம், உலகின் பல
மொழிகளையும் தொகுத்து அவற்றின்
வகைகளைக் கூறுகிறது.
அதன்படி எழுத்துக்களைக் கணியிலும்
அச்சிலும் தோற்றுவிக்கிறது.
அகரமுதலி வகை, அபுகிடா வகை,
அபுசாட வகை, படவகை என்று பலவகைகளில்
மொழிகளைப் பிரிக்கிறது.

பெரும்பிழையாக, தமிழை அபுகிடா வகையென்று
வகைப்படுத்தி இருக்கிறது. ஒருங்குறிப் பிழைகளில்
எல்லாம் ஆகப்பெரிய அடிப்படைப் பிழை இதுவேயாம்.

“சிங்களம் உள்ளிட்ட இந்திய எழுத்து
முறைகள் எல்லாமே தேவநாகரி
அடிப்படையிலான அபுகிடா எழுத்துமுறை”
என்று வகைப்படுத்தியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய இலக்கணப் பிழை,
மரபுப் பிழை என்பதைப் பற்றி
முனைவர் இராம.கி தனது வலைப்பதிவிலே
(http://valavu.blogspot.com) குறியேற்றங்கள் பற்றிய
கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.

பேராசிரியர் செல்வக்குமார்,
தமிழ் அபுகிடா வகையல்ல என்பது பற்றி
செம்மொழி மாநாட்டிலே வழங்கிய
தனது ஆய்வுக் கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.

தமிழ் எழுத்துக்கள் தோன்றும் முறையையே
தவறாகச் சொல்லியிருக்கும் ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு யார் சொல்லி சரி செய்வது?

மேற்கண்ட இடர்களால் அடிப்படைத்
துல்லியம் மறைந்து விடுகின்றது.
இது நாளடைவில் மொழிக்கு ஊறாக மாறும்.
அவற்றையும் களைய நாம் ஆவண செய்யவேண்டும்.

தற்போது முகன்மையான கிரந்தக் கலப்பை
மறுத்த கையோடு விட்டுவிடாது, ஏற்கனவே
ஏற்பட்டிருக்கும் கேள்வி கேட்பாரின்றி
ஏற்படுத்தப்பட்ட பிசகுகளைக் களைய வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html
பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html

அன்புடன்
நாக.இளங்கோவன்




No comments: