Pages

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 8

27) கிரந்தத்திற்கென தனிக்குறியீடு முன்மொழிவு வைக்கப்பட்டதா?

ஆம்; தமிழைக் கிரந்தத்திற்காக நீட்ட வேண்டும்
என்று சொன்ன திரு.சிறீரமணசர்மா,
அம்முன்மொழிவின், தாராள நீளல் பகுதியைக் காட்டி
68 கிரந்தக் குறியீடுகளுக்கு ஒரு தனிப்பாத்தி கேட்கும்
இன்னொரு முன்மொழிவைத் தனியாக ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு அனுப்பினார்.

ஆக, தமிழ் வடிவொத்து மீயெண்கள் போட்ட
26 கிரந்தங்களுக்கு (படம் 3.1) தமிழ் நீட்சி
முன்மொழிவாகவும், கிரந்தக் குறிகள்
அனைத்தையும் (68) அதன் இயல்வடிவத்தில்
உள்ளடக்கிய கிரந்த எழுத்துக்களுக்கு
(படம் 3.2ல் ET-L வரிசை) தனி கிரந்த ஒருங்குறி
ஒதுக்கீடும் கேட்கும் முன்மொழிவாகவும்
இரண்டு முன்மொழிவுகளை சிறீரமணசர்மா
அனுப்பியிருக்கிறார்.

இது இப்படி வரட்டும்; அது அப்படி வரட்டும்
என்ற இரட்டை உத்தி போலும்.

கிரந்தக் குறிகள் 68ற்கு தனி ஒருங்குறி கேட்ட
விதயத்தில் ஊன்றிக் கவனிக்க வேண்டியன:

1) இதனை, திரு.சிறீரமணசர்மா, வாழ்மொழி
எழுத்துக் குறிகளை வைக்கின்ற முதன்மைப்
பன்மொழித் தளத்தில் கேட்கவில்லை.
பழம் மொழிகள், வழக்கொழிந்த மொழிகள்,
அதிகம் பயன்படாத சின்னங்கள் குறிகள்
பெருமளவும் வைக்கப் படுகின்ற துணைப்
பன்மொழித் தளத்தில் வைக்கக் கேட்டிருக்கிறார்.

2) உலகில் உள்ள குறிகள் சின்னங்களையெல்லாம்
ஒருங்கக் கூட்டுகிற ஒருங்குறித் தரப்பாட்டில்
கிரந்தக் குறிகளுக்கும் இடம்பிடிப்பது என்பது வேறு;

அந்த ஒருங்குறித் தரப்பாட்டில்
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இருக்கும்
நமது தமிழ்மொழிக் குறியீட்டில்
கிரந்த எழுத்துக்களைப் புகுத்துவதும் நீட்டிப்பதும் வேறு.



படத்தில், ஆபத்தைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்தில்
இருப்பது கிரந்தக்குறிகளை தமிழின் பெயரில்
நீட்டிக்க, சேர்க்கப்படக் கோரிய பாத்தி.

“68 கிரந்தக்குறிப் பாத்தி” என்பது ஒருங்குறியில்
கிரந்தக்குறிகளை சேர்க்கும் பாத்தி.
திரு.சிறீரமணசர்மாவின் இரண்டாவது
முன்மொழிவு ஒருங்குறியில் கிரந்தக்
குறிகளுக்குத் தனி இடம் பிடிக்க மட்டுமே
கோருகிறது. தமிழில் கலப்படம் செய்யக்
கோரவில்லை.

பின்னர் எங்கிருந்து கிரந்தக் கலப்பு வருகிறது?
அதனை அடுத்து பார்ப்போம்.

28) கிரந்தத் தனிக்குறியீட்டின் நிலை என்ன?

கிரந்தத்துக்கென்று இதுவரைத் தனிக்குறியீடு
ஒருங்குறியில் இல்லை. கிரந்தத்துக்கென்று
68 குறிகள் உள்ளன என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.
அந்த 68 குறிகளைக் கொண்டு எந்தத்
தமிழாவணத்தையும் உருவாக்க முடியாது.
அந்த 68 கிரந்தக் குறிகளுக்குத் தனிக்குறியீடு
கேட்ட திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு
தள்ளி வைக்கப் பட்டது.

29) கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவு ஏன் தள்ளி வைக்கப்பட்டது?

திரு நா.கணேசன், 68 கிரந்தக் குறிகளோடு,
தமிழ் எழுத்துக்களான “எ”, “ஒ”, “ழ”, “ற”, “ன”
என்ற ஐந்தனையும், தமிழ் உயிர்மெய்க் குறிகளான
“எகர உயிர்மெய்க் குறி”, “ஒகர உயிர்மெய்க் குறி”
என்ற இரண்டனையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை
கிரந்தத்துக்குள் நுழைத்து, 75 குறிகளைக் கொண்ட
தமிழ்-கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்க
வேண்டும் என்று முன்மொழிவு வைத்திருந்தார்.

நா.கணேசனுக்கும், சிறீரமணசர்மாவுக்கும்
இடையில் ஏற்பட்ட விவாதத்தால்
குழம்பிப் போன ஒருங்குறிச் சேர்த்தியம்
கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவைத்
தள்ளி வைத்தது.

இரண்டு வேறுபட்ட வாதங்களுக்கு நடுவில்
ஓர் பொதுமையை யார் கொண்டுவர முடியும்
என்று அது தேட முனைந்தது. அதோடு,
திரு.சிறீரமணசர்மா வேண்டியது போல
வழக்கொழிந்த அல்லது குறைந்த குறிகள்
வைக்கப் படும் துணைப் பன்மொழித் தளத்தில்
வைக்கக் கூடாது என்றும்,
75 கிரந்தக் குறிப்பாத்தியை வாழ்மொழிகள்
வைக்கப்படும் முதன்மைப் பன்மொழித்
தளத்திலேயே வைக்க வேண்டும் என்ற
திரு.கணேசனின் முன்மொழிவு ஒருங்குறிச்
சேர்த்தியத்தை வியப்படையவேச் செய்தது.

30) நடுவணரசு ஏன் தமிழ் கலந்த கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவை வைத்தது?


திரு.சிறீரமணசர்மாவுக்கும் திரு.நா.கணேசனுக்கும்
இடையே கிரந்தத்துக்குத் தொண்டு செய்ய நடந்த
போட்டியில் ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்,
திரு.சிறீரமணசர்மா கேட்கும் 68 குறிகள் கொண்ட
தனிக் கிரந்தக் குறியீடை ஏற்படுத்துவதா?
அல்லது திரு.நா.கணேசன் கேட்கும்
தமிழைக் கலந்த 75 கிரந்தத் தனிக் குறியீடை
வைப்பதா? என்ற குழப்பம் ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு ஏற்பட, அவர்கள் அது பற்றி
இந்திய நடுவணரசின் உதவியை நாடினார்கள்.

“கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவை விட,
“தமிழைத் தாரை வார்த்துக்
கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவே
நடுவணரசை ஈர்க்க, திரு.நா.கணேசன்
முன்மொழிவில் சிறு சிறு மாற்றங்கள்
செய்து “மணிப்பிரவாள மொழிக்காகவும்,
சமற்கிருத மொழிக்காகவும்”
தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை
ஏற்படுத்துங்கள் என்று நடுவணரசே
தனது முன்மொழிவாக ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது.

நடுவணரசின் முன்மொழிவானது மேற்சொன்ன
75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் வைத்து
மொத்தம் 89 குறிகள் கொண்ட
"தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு" ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் கேட்கப் பட்டுள்ளது.

இந்த முன்மொழிவில், “இந்தக் குறியீடுகள்
வழக்கொழிநது வரலாறு ஆனவை அல்ல;
அவை முதன்மைப் பன்மொழித் தளத்திலேயே
வைக்கத் தக்கவை என்றபோதிலும்
முதன்மைப் பன்மொழித் தளத்தில்
போதிய இடமில்லாததால் துணைப்
பன்மொழித் தளத்தில் வையுங்கள்”
என்று நடுவணரசால் சொல்லப் பட்டிருக்கின்றது.
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம்
இருந்திருந்தால் அங்கேயே வைக்கச்
சொல்லி நடுவணரசு கேட்டிருக்கும்
என்பதையே இது காட்டுகிறது.

இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க
2010 நவம்பர் மாதம் முதல்வாரத்தில்
ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த
போதுதான், தமிழ் ஆர்வலர்களும்
அறிஞர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

சிக்கல்கள் நிறைந்த இவ்விதயத்தை
முனைவர் இராம.கி, பேராசிரியர் இ.மறைமலை,
திரு.திருவள்ளுவன் ஆகியோர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து
எடுத்துக் கூறினார்கள். ஆசிரியரின்
முயற்சியால் தமிழக அரசாங்கமும்
இவ்விதயத்தை ஆழ்ந்து கவனித்து
அவசரக் கூட்டம் நடத்தி அறிஞர்களின்
கருத்துக்களைக் கேட்டது.

அதன்படி, தமிழக அரசு நடுவணரசிடம்
கிரந்தக் குறியீடு குறித்து உடனடியாக
முடிவெடுக்கக் கூடாது என்றும்
தமிழக அரசு ஆராய்ந்து கருத்துச்
சொல்ல 3 மாத காலம் வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டதன் பேரில்
2011 பிப்பிரவரி 7 வரை
தமிழறிஞர்களுக்கும் யுனிக்கோடு அறிஞர்களுக்கும்
ஆராய நேரம் கிடைத்திருக்கிறது.

தமிழைக் கிரந்தத்துக்குத்
தாரை வார்த்துக் கொடுக்கும்
இதுவே மூன்றாவது இன்னல் ஆகும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: