Pages

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 7

23) ஒருங்குறிக்கு வந்த இரண்டாவது இன்னல் என்ன?

முதல் கிரந்த எழுத்து தமிழ் ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் நுழைந்து வழியேற்படுத்திக்
கொடுத்து, கிரந்த நேயர்களுக்கு ஊக்கமளிப்பதாக
அமைந்தது என்று சொல்லலாம். ஒருங்குறிச்
சேர்த்தியத்தின் மற்றொரு உறுப்பினரான
திரு.சிறீரமணசர்மா 26 கிரந்தக் குறிகளை
“ஒருங்குறித் தரப்பாட்டிற்குள் கொண்டு வந்து”
அதனை “தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்”
(Extended Tamil) என்று வழங்கவேண்டுமென
ஒரு முன்மொழிவை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு
அனுப்பினார். இதன் தேவை என்ன என்பதற்கான
விளக்கங்களில் மூன்றை திரு.சிறீரமணசர்மாவின்
மொழியிலேயே படித்தல் அவசியம்.

• “It is well known that the Tamil script has an insufficient character repertoire to represent the Sanskrit language. Sanskrit can be and is written and printed quite naturally in most other (major and some minor) Indian scripts, which have the required number of characters. However, it cannot be written in plain Tamil script….

• Finally I should say that I must also not forget the Saurashtra language, which also is written with Extended Tamil……….

• Therefore, an encoding of Extended Tamil as described above should also be able to support the writing of the Saurashtra language using Tamil characters.

மேலே திரு.இரமணசர்மா கூறுகின்ற கருத்துக்கள்
அவரின் தமிழ் நீட்டுக் குறிக்கோள்களை மேனிலையில்
புரியத் தருகிறது அல்லவா? சமற்கிருத, செளராட்டிர
மொழிகளுக்குத் தோதாகத் தமிழை நீட்டவேண்டும்
என்பதுதான் அவரின் வாதம்.

24) நீட்டித்த தமிழ் முன்மொழிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 26 கிரந்த எழுத்துக்களின் வடிவம் யாவை?


படம் 3.1 – 26 கிரந்த வடிவம்

பல கிரந்த ஓசைகளுக்கு இந்தப் படத்தில்
காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் போல
வடிவத்துடன் ஒருங்குறியில் இடம் கொடுத்து,
தமிழுக்கும் இவற்றுக்கும் தொடர்பே இல்லாத
நிலையில் இவற்றிற்கு நீட்டித்த தமிழ்
அல்லது தமிழ் நீட்சி என்று சொல்லவேண்டும்
என்பது அவர் பரிந்துரை. இந்த வகையான
எழுத்துக்கள் கிரந்தத்தில் முன்னர் பயனில்
இருந்ததாக அறிஞர் சொல்வர்.


25) நீட்டித்த தமிழை ஒருங்குறிச் சட்டகத்தில் எந்தத் தளத்தில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது?

(பகுதி-3 படம் 2.1 ஐயும் ஒருங்குறியின் உள்ளமைப்பில்
உள்ள தளங்களுக்கான விளக்கங்களையும் ஒத்து படிக்க.)

இன்ன தளத்தில் வைக்க வேண்டும் என்று
திரு.சிறீரமணசர்மா தன் முன்மொழிவிற்
பரிந்துரைக்கவில்லை. ஒருங்குறிச் சேர்த்தியத்தின்
வினவல் ஒன்று இப்படி வருகிறது:

“நீங்கள் பரிந்துரைக்கும் எழுத்துக்களை முழுமையாக
முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) வைக்கக்
கோருகிறீர்களா?”.

இந்த வினாவிற்கு “இல்லை” என்று பதிலளிக்கிறார்
திரு.சிறீரமணசர்மா. அந்த வினா-விடையை
அப்படியே கீழே காண்க:

After giving due considerations to the principles in the P&P document must the proposed characters be entirely in the BMP?
No.

முதன்மைப் பன்மொழித் தளம் (BMP) என்பது
வாழ்மொழிகளுக்கான இடம் என்று பார்த்தோம்.
துணைப் பன்மொழித் தளம் (SMP) என்பது
வழக்கொழிந்த அல்லது குறைந்த மொழி/ குறிகளுக்கான
இடம் என்றும் பார்த்தோம்.

அவரின் முன்மொழிவில் மூன்று கேடுகள்
அல்லது நெருடல்களை திரு.சிறீரமணசர்மா
ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

1) தமிழில் இல்லாத ஓசைகளுக்கு, தமிழல்லாத
குறிகளை(ஆனால் தமிழ் வரிவடிவத்தை ஒட்டியுள்ள
குறிகளை ) ஒருங்குறியில் சேர்க்கச் சொல்லி
அதற்குத் தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ் என்று
பெயர் கேட்பதே அடிப்படைக் கேடு.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று.
அடுத்தவர் முதலெழுத்தை ஒருவர் போட்டுக்
கொண்டு திரிவது போன்றதாகும்.

2) ஒருங்குறிச் சேர்த்தியத்தின் வினாவானது
வழுக்கலான வினா எனக் கருத இடம் இருக்கிறது.

அவர்கள் “இந்தக் குறியீடுகள் *முழுமையையும்*
முதன்மைத் தளத்தில் வைக்கக் கோருகிறீர்களா?
என்றவிடத்து, தேவைப்படுவனவற்றை விடுத்தோ
எடுத்தோ முதன்மைத் தளத்தில் வைக்கலாம் என்று
சேர்த்தியம் கருதினால் அதனைத் தடுக்குமாறு
யாதொன்றும் முன்மொழிவில் இல்லை.

அதுதவிர, திரு.இரமணசர்மா எங்கும் இன்ன
தளத்தில்தான் வைக்க வேண்டும்
என்று கூறவில்லை. அப்படியே கூறுவாரெனினும்
அதனைத் தமிழின் நீட்சி என்று சொல்வது புனைவாகும்.

3) மேற்சொன்ன கருத்து கருதப்படல் எதனாலெனின்,
நீட்டித்த தமிழை ஞாயப்படுத்த திரு.இரமணசர்மா
கையாண்டிருக்கும் அணுகுமுறையாகும்.
முதலிலே கிரந்தத்தோடு தமிழ்க்குறிகளை ஒப்பிட்டு,
பின்னர் நீட்டித்த தமிழ் எப்படி வேண்டும் என்று
இரண்டுவகையாகக் காட்டுகிறார்.

Extended Tamil – Liberal (ET-L),
Extended Tamil – Conservative (ET-C) என்று இரண்டு
வகையாகப் பிரித்து உரையாடலைச் செய்கிறார்
திரு.இரமணசர்மா. இவற்றை முறையே
இளகிய தமிழ் நீட்சி, இறுகிய தமிழ் நீட்சி என்று
சொல்லலாம். இளகிய என்பதற்குப் பதிலாகத்
தாராளத் தமிழ் நீட்சி என்றும் சொல்லலாம்.
இங்கே தாராளம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன்.

அதாவது கிரந்தக் குறிகளின் வடிவங்களை
அப்படியே எடுத்துக் கொண்டால் அதனைத்
தாராளத் தமிழ் நீட்சி என்றும், அப்படியில்லாமல்
தமிழ் எழுத்துக்கள் மேலே மீயெண்களைப் போட்டு
எடுத்துக் கொண்டால் அதனை இறுகிய-தமிழ் நீட்சி
என்றும் விளக்கம் தருகிறார் திரு.சிறீரமணசர்மா.
அந்த முன்மொழிவில் காணப்படுகிற தாராள,
இறுகிய நீட்சிகள் உள்ளடக்கியிருக்கும் அட்டவனைப்
படத்தினை இங்குக் காண்போம்.

படம் – 3.2: திரு.சிறீரமணசர்மாவின் தாராளத் தமிழ் நீட்சியும் இறுகிய தமிழ் நீட்சியும்

படம் 3.2ல் கிரந்தக் குறிகளின் பட்டியும், அவற்றைத்
தமிழ் நெடுங்கணக்கில் நீட்சியாக ஆக்கக் கோரி
தாராளத் தமிழ் நீட்சி (ET-L) பட்டியையும்,
இறுகிய தமிழ் நீட்சி (ET-C) பட்டியையும்
அளித்துள்ளமை காண்க.

இந்த அட்டவனை சொல்வது என்ன?
கிரந்தக் குறிகள் அப்படியே தாராள நீட்சியாக
வேண்டும் என்றாலும் கிரந்த வடிவங்களைப்
பிடிக்காதவர்கள் மறுக்கக் கூடும் என்பதால்
இறுகிய நீட்சியை இப்போது வழங்குக” என்பதே
திரு.சிறீரமணசர்மாவின் உளக்கிடக்கையாகும்.
அதனை அவர் மொழியாலேயே தெரிந்து கொள்தல்
அவசியமாகும்.

திரு.சிறீரமணசர்மா அவர்களின் கூற்று:
“This choice of ET-C-style glyphs would also avoid any problems
with those disliking Grantha-style glyphs being used in Tamil.”

மீயெண்களைப் போட்டு எழுதும் வடிவத்தைக்
காண்பித்து இது தமிழ் வடிவங்கள் போலவே
இருப்பதால் தமிழ் உலகம் தமிழின் நீட்சி
என்று ஏற்றுக் கொள்ளும் என்பதே
திரு.சிறீரமணசர்மாவின் எண்ணமாகும்.

படம் 3.1ல் இருக்கும் வடிவங்கள்தான் இவர்
சேர்க்க விரும்புவன என்றால் நீட்சியை
ஏன் தாராளம், இறுகல் என்று இரண்டாகப்
பிரிக்க வேண்டும் என்ற வினா எழுகிறதல்லவா?

அதுதான் திரு.சிறீரமணசர்மாவின் இருவழி உத்தியாக
இருக்கக் கூடும் என்று நமக்குத் தெரிகிறது.

அதாவது, இறுகல் நீட்சியை இந்த முன்மொழிவு
வழியாக அடையவேண்டும். அப்படி அடைந்து விட்டால்,
எழுத்துரு முறையில் கிரந்தக் குறிகளை அப்படியே
காட்டவும் முடியும்.

ஒரு வேளை இந்த முன்மொழிவு மறுக்கப்
பட்டுவிட்டால், மறுக்கப் பட்ட காரணத்தைக்
கொண்டே, ஒருங்குறிச் சேர்ந்த்தியத்திடம்
“இதோ பார் நான் இறுகிய நீட்சியைக் கேட்டேன்;
நீங்கள் தரவில்லை; அதனால் இந்தத் தாராள நீட்சியில்
இருப்பனவற்றைத் நீட்சியாகவோ அல்லது
தனிக் குறியீடுகளாகவோ தரவேண்டும்”
என்று பின் தொடரும் உத்தியையே
கையாண்டிருக்கிறார் என்பது திண்ணம்.

இதைத்தான் அவர் செய்திருக்கிறார்
என்று அறுதியிட்டுச் சொல்வது போலவே அமைகிறது
அடுத்த இன்னல். அதனைப் பின் வரும் பக்கங்களில் காண்போம்.

26) ஒருங்குறியில் தமிழ் நீட்டல் என்ற முயற்சியின் தற்போதைய நிலை என்ன?

2010 சூலை மாதம் 10 ஆம் தேதியிட்ட
திரு.சிறீரமணசர்மாவின் ”நீட்டித்த தமிழ்”
முன்மொழிவும் பிற இன்னல்களும்
கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார்
மற்றும் சிலரின் முயற்சியாலும் பலருக்கும்
தெரிய ஆரம்பித்து பொதுவிற்கு வந்தபோது
அகுதோபர் மாதத்தின் பிற்பகுதி ஆகியிருந்தது.

இந்த முன்மொழிவு பற்றிய கருத்துக்களை
தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் 25-10-2010
என்று அறியப்பட்ட போது அது பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியது. ஒருபுறம் தமிழ் ஆர்வலர்களும்
அறிஞர்களும் காலந்தாழ்ந்து எழுந்த போதிலும்
சடுதியில் தங்கள் கருத்துக்களையும்
மறுப்புக்களையும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு
அனுப்பினார்கள்.

மறுபுறம், யுனிக்கோடு அறிஞர்களான
மலேசியாவைச் சேர்ந்த திரு.முத்து நெடுமாறனும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.மணி.மு.மணிவண்ணனும்
நுட்ப வழியாக இதனை மறுக்க நுணுக்கமான
பணிகளைச் செய்தனர்.

திரு.முத்து நெடுமாறன், திரு.சிறீரமணசர்மா
வேண்டுவனவற்றை ஒருங்குறியில்
தமிழின் பெயரால் குறிகளை நீட்டாமலேயே
திரு.சிறீரமணசர்மா வேண்டுவனவற்றை
எப்படிச் செய்து கொள்ளலாம் என்று செய்து
காட்டினார்.

இப்படி, இவ்வளவு எளிதாகச் செய்யக் கூடுகையில்
எதற்குத் தமிழின் பெயரில் நீட்ட வேண்டும் என்று
விடுக்கப்பட்ட மறுப்பினை அடிப்படையாக வைத்து
ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் நீட்டல் என்ற அந்த
முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. இன்னும்
அது உறுதியான அலுவமுறையில் ஆவணப்
படுத்தப்படாவிட்டாலும் சேர்த்தியத்தை
அறிந்தவர்கள் இதனை நம்பலாம் என்றே
கூறுகிறார்கள்.

”தமிழ் நீட்டல்” என்ற சூழலை அறிந்த
விடுதலை ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள்
உடனடியாகச் செயல்பட்டு அரசினர்க்கு
விழிப்பை ஏற்படுத்தி அறிக்கையும் வேண்டுகோளும்
விடுத்திருந்தார். விடுதலை இதழிலும் அவரின்
அக்கறையும் உணர்வும் மிக்க அறிக்கை
வெளியாகி அனைவரையும் விழிப்படையச் செய்தது
காலத்தாற் செய்த ஒன்று. கிரந்த விதயத்தில்
அவரின் செயற்பாடு போற்றத்தக்கதாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: