Pages

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 6

தொகுதி-3: கிரந்த இன்னல்கள்

17) தற்காலக் கிரந்த இன்னல் எப்பொழுது தொடங்கியது?

தற்காலக் கிரந்த இன்னல், ஒருங்குறி அல்லது
பிறவற்றில் தொடங்கியது என்று சொல்வதைவிட
எப்பொழுது தமிழக அரசாணை வழியே கிரந்த
எழுத்துக்களையும் தமிழ் நெடுங்கணக்கில்
சேர்த்தார்களோ அப்பொழுதே கிரந்த இன்னல்
கொஞ்சங் கொஞ்சமாய்த் தொடங்கிவிட்டது
என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
தமிழகத்தின் அறிவுலகமும் கல்வியுலகமும்
இதனைத் தடுக்க மறந்தது என்றே சொல்லவேண்டும்.

18) கணி எழுத்துருக்களிலும் தரப்பாடுகளிலும் கிரந்தம் எப்போது வந்தது?

HA, SA, JA, SSHA என்ற 4 கிரந்த எழுத்துக்களும்
ஒருங்குறி தோன்றியபோதே சேர்க்கப்பட்டு விட்டன.
அதேபொழுது, ஒருங்குறி பயனுக்கு வந்தது 2000மாம்
ஆண்டிற்குப் பின்னரேயாகும். ஒருவேளை, ஒருங்குறி
தோன்றிய போதே கிரந்தத்துடன் தோன்றியதற்குக்
காரணமாய் தமிழக அரசின் அரசாணை
இருந்திருக்கக் கூடும்.

ஒருங்குறிக்கு முன்னர் பயனில் இருந்த பிற
தரப்பாடுகளான தகுதரம் (TSCII), தாபு (TAB), தாம்(TAM)
என்ற எல்லாத் தரப்பாடுகளிலும் இந்த 4 எழுத்துக்கள்
இருந்தன. யாரும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்
என்று எண்ணியதாய்க் கூடத் தெரியவில்லை.

19) தமிழ்நாட்டில் அந்த 4 கிரந்த எழுத்துக்களின் புழக்கம்
அதிகமாக இருக்கிறதே – அதை எப்படித் தவிர்க்க முடியும்?

உண்மை. அவற்றை மெதுவேதான் நம் புழக்கத்தில்
தவிர்க்க முடியும். அப்படியே முடியாவிட்டாலும்,
அவற்றைத் தமிழக அரசு தன் அரசாணைக்குள்
கொண்டுவரவேண்டிய கட்டாயம் எதுவுமே இல்லை.
அரசின் அவ்வேற்பினால் இன்றைக்கு என்ன
சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று பார்த்தால்
ஒன்றும் இல்லை.

அரசாணையிலும் போட்டு பள்ளிக்கூடத்திலும்
சொல்லிக் கொடுத்துவிட்டு கிரந்தம் ஒழிக என்று
பாடிக்கொண்டு இருக்கும் நிலை புதிய
தலைமுறைக்குச் சற்றும் புரிவதில்லை.

ஆங்கிலத்தை அப்படியே எழுத மட்டுமே
அந்த எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றன.
வணிகப் பலகைகளைப் பார்த்தாலே இது புரியும்.
ஆக, கிரந்தத்தின் மூலக்கேடு அரசின் ஏற்பாகவே
இருக்க முடியும்.

20) ஒருங்குறியில் நிகழ்ந்த முதல் இன்னல் என்ன?

படத்தில் உள்ளது போன்ற
SHHHA என்ற ஓசையுடைய கிரந்த எழுத்து வலிந்து
நுழைக்கப் பட்டது. படத்தில் உள்ள இந்த வடிவத்தை
தமிழ்நாட்டு மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்
என்று தெரியவில்லை. ஒருங்குறியில்
வந்தபின்னர்தான், இப்படி ஒரு வடிவம் இருப்பதே
பலருக்கும் தெரிய வந்தது.

21) ஒருங்குறியில் இந்த முதல் இன்னல் எப்படி நிகழ்ந்தது?

கிரந்தத்தைத் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்;
அதனால் இந்த எழுத்து தமிழ் எழுத்துக்களோடு
அவசியம் சேர்க்கப்பட வேண்டும்” என்று ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு முன்மொழிவை அனுப்பியது
உத்தமம் அமைப்பாகும்.

இதற்குப் பெரிதும் தூண்டுதலாக இருந்தவர்களில்
முக்கியமானவர் திரு.நா.கணேசன் ஆகும்.
அப்படி முன்வைத்ததற்கு ஏதும் பெரிதாக மாற்றுக்
கருத்துக்கள் இல்லாததால் ஒருங்குறிச் சேர்த்தியமும்
ஏற்றுக் கொண்டு அதற்கு “TAMIL LETTER SHA”
என்று பெயரும் கொடுத்து U+0BB6 என்ற
குறியெண்ணையும் கொடுத்து, திருத்திய
தமிழ்த் தரப்பாட்டை வெளியிட்டு விட்டது.

22) இந்த “SHA அல்லது SHHHA” என்ற எழுத்தை யாரும் இணையத்தில் பயன்படுத்துகிறார்களா?

திரு.நா.கணேசன் பல நாள்களாக அரும்பாடு
பட்டு இதனை இணைய மடற்குழுக்களில்
பரப்புரை செய்ததன் பலனாக, அவரோடு மேலும்
ஒருவர் சேர்ந்து இவ்வெழுத்தை இணையத்தில்
அகமகிழ்வோடு பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

இந்த இருவரின் பயன்பாட்டுக்க்காக 7 கோடி
மக்களின் நெடுங்கணக்கு, ஒருங்குறியில்
மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த எழுத்தைப் புகுத்தி விட்ட பெருமையோடு,
மேலும் பலரைப் பயன்படுத்தச் சொல்லி
தொடர் பரப்புரைகளை திரு.நா.கணேசன்
செய்துவருகிறார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html

அன்புடன்
நாக.இளங்கோவன்



2 comments:

Anonymous said...

தன்னை யார் என்று தமிழ் கூறும் நல்லுகிற்கு காட்டிக்கொள்ளும் நா. கணேசன் போன்றோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது ! உலகின் 11- கோடி தமிழ் மக்களில் ஒரு சிலரே அறிந்த கிரந்த எழுத்தைப் புகுத்தி தமிழ்த்தாயின் தீரா சாபத்திற்கு ஆளாகிறார்
நா.கணேசன் !
தாய் மொழி அவருக்குத் தமிழ் மொழியே ? தன் தாயை பழிக்கும் நா. கணேசன் போன்றோர் தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் நல்ல செயலைப் புரிகிறார்.நன்றி சொல்வோம் அவருக்கு!

nayanan said...

அநாநி அவர்களுக்கு,

தமிழர்கள் ஒன்று படுவோம். எல்லா தமிழ்க்கேடுகளையும் களைவோம்.
இன்று களையாவிட்டால் எல்லாரும்
அழிவோம்; ஆகையால் ஒன்றுபடுவோம்.
கணேசன்களை அறிவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்