Pages

Friday, December 15, 2000

சிலம்பு மடல் 32

சிலம்பு மடல் - 32 கண்ணகி கோயில்!

வஞ்சி:
நடுகல் காதை, வாழ்த்துக் காதை;

முப்பத்திரண்டு திங்கள்கள் வீட்டையும் நாட்டையும் பிரிந்து பெரும்போர் செய்து வெற்றியோடும், சிலை வடிக்க கல்லொடும் வந்த சேரப்படையினரில், போர்க்களத்திலிருந்து வாராதவர் எத்தனை பேரோ ?

மீண்டு வந்தவர் வீட்டில் எல்லாம் மகிழ்ச்சி!

மாண்டு போனவர் வீட்டில் எல்லாம் துயரம்தான் ஆஇருந்திருக்கும்; இதோ வந்துவிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலேயே பலருக்கு சில நாட்கள் கழிந்திருக்கக் கூடும்! பின்னர் புரிந்திருக்கக் கூடும்.

மீண்டு வந்த ஆடவனை அணைத்துக் கொண்ட அவன் காதலியின் கொங்கைகள், அவன் விழுப்புண்களுக்கு ஒத்தடம் கொடுக்க அவ்வாடவனுக்கு அதை விட வேறு மருந்து என்ன வேண்டும்? இணைந்த காதலர்கள் இஆன்பத்தைக் கொண்டனர்! கொடுத்தனர்!

"வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர்
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டுஎழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பகமும்
மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுஉறீஆ...."

வஞ்சி திரும்பும் வழியில், தான் அடக்கிப் பிடித்து வந்த கனகனையும் விசயனையும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொண்டு காட்டச் சொல்லியிருந்தான் நீலன் என்பானிடம் சேரன்!

அரண்மனையும், நாடும் மகிழ்ச்சியில் களித்திருக்க, அரசவையிலே மன்னன் சேரன் செங்குட்டுவன்! அவன் முன் நீலன் என்பான்! அவனுடன் வந்தவன் மறையோன் மாடலன்.

சேரனின் வெற்றியை, கனக விசயர்களை இழுத்துக் கொண்டு சோழனிடமும் பாண்டியனிடமும், நீலன் சென்று கூற, அப்போது 'எதிர்த்து நின்று போராட வலுவில்லாமல், வாளையும் வெண்கொற்றக் குடையையும் போட்டுவிட்டு சாதலுக்கு அஞ்சி தவக்கோலம் கொண்டு உயிர்தப்பி ஓடிய இஆந்த ஆரியர்களைச் சிறைபிடித்து வந்தது சேரனின் பெரிய வீரமா?' இஆல்லை என்றான் சோழன்! நான் கேட்டது இல்லை; புதிது எனக்கு என்றான் பாண்டியன்! எள்ளி நகையாடினர் இருவரும்!

சேரனுக்கு சினம் ஏற்பட்டிருக்கலாம்! ஆனால் தமிழர்கள் என்று பார்க்கும்போது, சேரனுக்கும், சோழனுக்கும், பாண்டியனுக்கும், வடநாடும் அதன் ஆரிய அரசர்களும் ஒரு துரும்பாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்ற சேதியைத்தான் தமிழர்க்கு சிலம்பு சொல்கிறது.

தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்கு ஏற்பட்டபோது சேர சோழ பாண்டியர்கள் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை! இந்நாளில் தமிழர் என்று சொல்லிக்கொள்ளவே அய்யம் கொண்ட தமிழர் போல் அந்நாள் தமிழர் இஆல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

"அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க,
நீள்அமர் அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக்
கொல்லாக் கோலத்து உயிர்உய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றுஎனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்....

அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோ ர் தம்மேல்
கொதிஅழல் சீற்றம் கொண்டோ ட் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேல் செழியன்;என்று
ஏனை மன்னர் ஆருவரும் கூறிய..."

இதை நீலன் சேரனிடம் சொல்ல, சேரன் சினம் கொண்டான்! சோழ பாண்டியர்கள்பால் வெறுப்புற்றான்! வெறுப்பு போராக ஆகிடுமோ என்று அய்யுற்று, சினம் கொண்ட சேரன் சினம் தவிர்க்க, ஆட்சிக்கு வந்து அய்ம்பது ஆண்டுகள் ஆன சேரனே, மறக்கள வேள்வியிலேயே ஆண்டுகளைக் கழித்த சேரனே, அறக்களவேள்வியினைச் செய்வாயாக! சோழ பாண்டியர்கள் மேல் சினங்கொள்ளாதே! சினந்து மீண்டும் படையெடுக்காதே! வேண்டாம் விட்டுவிடு, என்று பலவாறு எடுத்துரைத்தான் மாடலன்.

"வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந்து ஆரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை!..."

அறிவுரைகள் பல கேட்ட மன்னன் சினம் தவிர்த்து அறவேள்விகள் செய்தான்! சிறையில் இருந்த ஆரிய அரசர்களை விடுவித்தான்! அவர்களுக்குப் பரிவுடன் ஆவன செய்தான் வில்லவன் கோதை கொண்டு! சிறையில் இருந்த வேறுபல கைதிகளையும் விடுவித்தான், கண்ணகிக்கு கோயில் கண்ட விழாவினிலே!

இந்நாளிலும், சில முக்கிய விழாக்களின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப் படுவதைப்போலே!

சிற்றரசர்கள் கப்பம் கட்ட வேண்டாம் என்று அறிவித்தான், அமைச்சர் அழும்பில் வேள் கொண்டு!

இக்காப்பியத்தில் சோழநாட்டில் இந்திரவிழா வின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், சேரநாட்டில் கண்ணகி கோயில் மங்கலம் செய்தபோது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், தமிழர்களின் மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ண ஓட்டத்தை அறியத்தருகிறது.

புறம்போகும் ஆடவரை முறை செய்யாவிடின் நாட்டில் கற்பு சிறவாது என்று சோழனுக்கும், செங்கோல் தவறின் உயிர் வாழாமை நன்று என்று பாண்டியன் மூலம் உலகிற்கும், தமிழர் பால் பழிகூறின் வஞ்சினம் தீர்க்காமல், குடிகாக்கும் மன்னவன் சினம் தீராது என்பதை குட்டுவன் மூலம் வடவருக்கும் உரைக்கக் கண்ணகி காரணமானதால் தெய்வமாகிறாள்!

அத்தெய்வத்திற்குப் பத்தினிக் கோட்டம் செய்தான் சேரன்! இமமலைக் கல் கொண்டு சிலை செய்து, கோயிலெடுத்து மங்கல விழாச் செய்தான், குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக வைத்து ஆண்ட இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் பட்டத்தரசி சோழமகள் நற்சோனைக்கும் மைந்தனாகப் பிறந்த செங்குட்டுவன்.

"வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறுஎன்...."

"குமரியொடு வடஆமயத்து ஒருமொழி வைத்து உலகுஆண்ட
சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன்மகள் ஈன்ற
மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்
பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்......."

கண்ணகிக்கு கோயில் கட்டி விழாச் செய்த மறுநாள், கோயில் விழாவுக்கு வந்திருந்த மன்னர்கள் செலுத்திய காணிக்கைகளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த குட்டுவனை, தேவந்தி சிலரொடு வந்து வணங்கி, கண்ணகியின் சிறப்பு பற்றி கூறி புலம்புகிறாள்!

அப்போது சேரன் செங்குட்டுவன் வியப்புற்று, உணர்ச்சி வயமாகிறான்!

பொன்னால் சிலம்புகட்டி, கொடியாய் மேகலை புனைந்து, வளைபூட்டி, வயிரத் தோடு அணிந்து, பொன்னாலும் பிறவாலும் அணிமணி கூட்டி, மின்னெலெனக் கண்ணகியார் வானில் உயர்ந்து, சேரனுக்குத் தெரிந்தாராம்!

சிரித்த முகத்தோடு சொன்னார் சேரனிடம், 'பாண்டியன் குற்றமற்றவன்! எனக்குப் புகழ் சேர்த்ததனால் நான் அவனுக்கு மகளானேன்!' என்று.

காலகாலத்துக்கும் புகழ்சேர்த்துவிட்ட பூரிப்பு அம்மைக்கு!; சேரப் பெண்களை,'திருமுருகன் குன்றினிலே, எப்போதும் விளையாட நான் வருவேன் தோழியரே! என்னோடு வந்தாடுக' என்று அழைத்தபோது!

"என்னேஆஇகது என்னேஆஇகது என்னேஆஇகது என்னேகொல்
பொன்னஞ் சிலம்பின் புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொந்தோட்டு நாவல்அம் பொன்ஆழைசேர்
மின்னுக் கொடிஒன்று மீவிசும்பில் தோன்றுமால்....."
(வானில் கண்ணகி கண்ட சேரனின் வியப்பு)

"தென்னவன் தீதுஆலன்; தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான்; நான் அவன் தன்மகள்;
வென்வேலான் குன்றில் விளையாட்டு யான்அகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்."
(கண்ணகியம்மன் கடவுளாய் சேரனுக்கும்
பெண்களுக்கும் கூறியது)

சேரனுக்குக் காட்சிதந்து சேரமகளிரை விளையாட அழைத்தும் விட்டு, சேரன் செங்குட்டுவனை நீடுழி வாழ வாழ்த்துரைக்கிறார் கண்ணகியார்!

"ஆங்கி, நீள்நிலமன்னர் நெடுவில் பொறையன்நல்
தாள்தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ்ஒளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள், நீடூழி
செங்குட் டுவன்வாழ்க என்று."

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-2000

No comments: