Pages

Sunday, July 04, 1999

சிலம்பு மடல் 12

சிலம்பு மடல் - 12 இந்திரவிழா!
புகார்:
இந்திரவிழவூரெடுத்த காதை:

மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், இவற்றிற் கிடைப்பட்ட நாளங்காடி, ஆங்கோர் பூதம், மறமகளிரின் பூதவழிபாடு, வீரர்களின் பலிக்கொடை, சமுதாயத் தேவைகளுக்கான ஐவகை மன்றங்கள், அம்மன்றங்களில் உயிர்ப்பலிகள்;

புகாரின் முக்கிய அமைப்புகளில் நடைபெற்ற சடங்குகள் இந்திர விழாத் தொடக்கத்திற்கான ஆரம்ப நிகழ்ச்சிகளாக அமைய, விழாவோ யானைமேல் ஏற்றப்பட்ட மங்கலமுரசு, (இந்திரனின்) அய்ராவதம் (வெண்யாணை) நின்ற கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விழாத் தொடக்கமும் இறுதியும் முரசறைந்து தெரிவிக்கப்பட, அய்ராவதம் வரையப்பட்ட நெடுங்கொடி பறக்கவிடப்படுவதோடு விழா தொடங்குகிறது:
நகரம் விழாக் கோலம் பூணுகிறது!

"வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து:"

அய்ம்பெருங்குழு, எண்பேராயம், அரசச் சுற்றங்கள், பெருவணிக மாந்தர் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் வந்துகுழும, பரந்த இவ்வுலகத்தின் உயிர்களைக் காக்கும் தலைவர்களில் ஆயிரத்தெட்டு பேர் காவிரியின் பூந்தாது பொலிந்து கிடக்கும் சங்கமத்துறையிலிருந்து, பொற்குடங்களிலே குளிர்ந்த நீரை நிந
றத்து வந்து நிலவுலகோர் மருளவும், விண்ணுலகோர் வியக்கவும் இந்திரனைத் திருமுழுக்காட்டுகின்றனர்; எதற்கென்றால் "மாண்புமிக்க தம் மன்னன் எந்நாளும் வெற்றி கொள்வதற்காக"!

"ஐம்பெரும் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித் தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி;

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி,

மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி:"

இந்திரனுக்கு மட்டும் விழா செய்யப் படவில்லை!
அவ்வமயம் சிவன், முருகன், திருமால், வெள்ளையன் மற்றும்
'தனித்தனி தோற்றமுடைய வேறுவேறு கடவுளர்களுக்கும்
விழா ஆரவாரமாகச் செய்யப்பட்டன:

அத்துடன் வேதவழி தவறாது வேள்விகள் நடத்தப் பட்டன!

"நான்மறை மரபின் தீமுறை ஒருபால்"....

பிறசமயச் சாலைகள் (புத்த), மற்றும் இதர பிற அறச் சாலைகளிலும் திறமைசால் பெரியோர் கூறும் அறிவுரை நிகழ்ச்சிகள் (கிருபானந்த வாரியார் உரைகள் போல! ) நடக்க, இக்காலத்தில் சுதந்திர நாள் அல்லது முக்கிய விழாக்காலம் சிறைக்கைதிகள் வெளிவிடப்படுவது போல, அந்நாளில் இந்திர விழாக் காலத்தில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

(அரசனுக்கு எதிராக செயல்பட்ட வேற்றுநாட்டு அரசரின் அடிமைகள்/ஆட்கள் விடுவிக்கப் பட்டனர் )

"கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்".........

கூத்தும், பாட்டும், இசையும், முழவும் நிழச்சிகளாக நகரமெங்கும்
நடந்துகொண்டிருக்க, விழாக் களிப்பில் மக்கள் தம் சுற்றம் சூழ
மகிழ்ந்திருந்தனர். ஆங்கு பல்வேறு மணம் கமழும் மலர்களொடும், சுகமானவைகளாகக் கருதப்பட்ட யாவற்றுடனும், காமமொழிகள் கூறும் பெண்களொடும், இசை கூறும் பாணரொடும், நகரப் பரத்தொரொடும்
களித்துத் திரியும் கோவலனைப் போல பொதிகை புறப்பட்ட தென்றலும் இசை பாடும் வண்டுகளோடும், இனிய இளவேனிற் பருவத்தொடும் புகார் நகரவீதிகள் யாவையும்சுற்றி வந்தன. கவிஞர் இங்கே தென்றலின் சுகமான போக்கை கோவலப் போக்கென்று உவமையிட்டுக் காட்டுவது கவிஞர்களின் மனத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

"குரல்வாய்ப் பாணரொடு நகரப்பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்"

எங்கும் இன்பமும், இனிய விழாச் சூழலும், களிவெறியும் கரைபுரண்டு ஓடும் வேளைதானே கண்டவரை மயக்கும் பரத்தையர்க்கும் உகந்த நேரம்! மனையிருக்க, பார்வையில் மயக்கிடும் பரத்தையரைத் தொட்டுத்
தொய்ந்து போய் இல்லம் திரும்பிய கணவனை ஊடிச் சினந்த மனைவியர் முன் அவ்விதம் போன ஆடவர் நடுங்கிப் போய் நிற்பதுவும் ஆங்காங்கே!

இந்திரவிழாக் களிப்பின் உச்சத்தில் மாந்தர் களித்து மகிழ்ந்திருக்க, கோவலனைப் பிரிந்து அவனுடன் கூட்டம் இல்லாமையால் ஒளி இழந்த கண்ணகியின் கருங் கண்களில், இடக்கண் மட்டும் ஏனோ துடித்திட அவள் மனம், பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நலம் பயக்கும் என்ற நம்பிக்கையிலே சற்று புத்து
ணர்வு ஏற்படுகிறது;

கோவலனுடன் கூடிக் குதூகலித்தலால் பூரித்து வாழும் மாதவியின் ஒளி மிகுந்த செங்கண்களில், வலக்கண் துடிக்க, உள்ளம் பதைக்கிறாள் மாதவி! இன்னதென்று புரியவில்லை அவளுக்கு!

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்."

இந்திரவிழாவின் உச்சக் களிப்பில், கோவலனில் உறைந்து கிடந்த காலமே அவளின் இன்ப வாழ்வின் கடைசிக் காலம் என்பதை அந்த சிறு மங்கை நல்லாள் எப்படி எண்ணியிருக்க முடியும் ?

இதோ, இன்னும் சிறிது காலத்தில் இன்பம் அனைத்தையும் இழக்கப் போகிறோம் என்று ஒரு வேளை அவள் அறிந்திருந்தால் அவளின் மனித உள்ளத்தின் மானுடச் சுழல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
04-சூலை-1999

No comments: