Pages

Tuesday, June 22, 1999

சிலம்பு மடல் 11

சிலம்பு மடல் - 11 கரிகாலனும் சித்திரமண்டபமும்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

சோழப்பேரரசை ஒருகாலத்தில் ஆண்ட கரிகாற்சோழன் எனப்பட்ட திருமாவளவன், தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் பகை கிட்டாமல் வருந்தி பகைதேடி வடக்கு செல்கிறான்; வடக்கிலனைவரையும் வென்றவனை
மேலும் வடக்கு நோக்கி செல்லமுடியாமல் இமயமலை தடுக்கிறது. அதனாற் சினந்து அவன் இமயத்தில் புலிக்கொடியை ஏற்றி விட்டு நாடு திரும்புகிறான்.

"இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் (நண்ணார்=பகைவர்)

மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்என"...........

அப்படித் திரும்பும் வழியிலே வடபுலத்து வச்சிர, மகத, அவந்தி நாட்டு அரசர்கள் முறையே முத்துப் பந்தல், பட்டி மண்டபம், தோரண வாயில் முதலியவைகளைத் திறையாக சோழனுக்குத் தருகின்றனர். வெவ்வெறு நாட்டினதாகிய இம்மூன்றையும் சோழன் புகாரிலே ஒரே இடத்தில் சேர்த்து அமைத்துக் கட்டிய மண்டபம் 'சித்திரமண்டபம்' எனப்பட்டது.

"மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்".........

உயர்ந்தோர் போற்றும் இந்த சித்திர மண்டபம் செய்யப் பெற்ற புகாரிலே வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் என்ற அய்ந்து வகை யான மன்றங்கள் இருந்தன.

வெள்ளிடை மன்றம் என்பது பொருள்களை சேமித்து அல்லது
பாதுகாத்து வைப்பதற்கான ஒரு இடம் அல்லது பண்டக சாலை. அதற்குக் காப்போர் இல்லை; கதவுகளும் இல்லை.

பொருள்களை அல்லது பண்டங்களைக் கள்வனிடம் இருந்து காக்கும் அவசியம் இல்லை; காரணம் இந்தக் கவர்வார் இல்லாத செல்வநிலையாகவே இருந்திருக்க வேண்டும். தற்போதும் வெளிநாடுகளில் வேந
லநேரம் முடிந்த பின் கடைகள் திறந்தோ, காவலில்லாமலோ அதிகப் படியான பாதுகாப்பு இல்லாமலோ இருக்கக் காண்கிறோம்.

அப்படித்தான் இந்தத் தமிழகமும் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ஒரு வேளை யாரும் கவர்ந்தால் அப்பண்டத்தை அவர்கள் தலையில் கடுமையாக சுமத்தி ஊரைச் சுற்றி வரச்செய்து கடுமையாக தண்டித்தனர்; (வெளிநாடுகளில் சிலவற்றில் குப்பையைக் கீழே போட்டால் ஊரைக் கூட்டச்
செய்யும் தண்டனை போல) ஆதலின் களவாட நினைப்போரை நடுங்கச் செய்யும் இந்த 'வெள்ளிடை மன்றம்'.

"வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்"........

(உள்ளுநர்=நினைப்போர்;கட்போர்=திருடர்)

'இலஞ்சி மன்றம்' என்பது ஒரு பொய்கையைக் கொண்டது. இப்பொய்கையில் முழுகி எழும், கூனர், குள்ளர், ஊமையர், தொழுநோயாளர் போன்றவர்களுக்கு உடற்குறைகள் உடன் மறைந்திடுமாம்!

'நெடுங்கல் மன்றம்' என்ற மன்றத்தில் நெடிய கல் ஒன்று நடப்பட்டிருக்க அக்கல்லைத் தொழுது சுற்றி வரும், பிறரால் வஞ்சனை மருந்து ஊட்டப்பட்டதால் வாடுவோர், (செய்வினை, முட்டை மந்திரித்தல்,
ஏவல் போன்ற செய்திகளை கிராமங்களில் கேட்கலாம்) அரவத்தால் தீண்டப்பட்டோ ர், பேயினால் பெருந்துன்பமுற்றோர் அனைவருக்கும் உடன் துயர்கள் நீங்குமாம்.

போலிச் சாமியார்கள், கணவனுக்கு துரோகம் செய்து பிற ஆடவருடன் கூடும் பெண்டிர், அரசனைக் காட்டிக் கொடுக்கும் அமைச்சர், பிறன் மனை விழைவோன், பொய்ச்சாட்சி சொல்வோர், புறங்கூறுவோர் போன்றவர்கள் "என் கையில் உள்ள
கயிற்றில் அகப்படுவர்" எனக் கடுங்குரலில் கூறி அவ்வாறு அகப்படுவோரை நிலத்தில் அடித்துக் கொன்று தின்னும் பூதம் இருந்த இடம் 'பூதச் சதுக்கம்' எனப்பட்டது! இந்த வகையான தீயவர்களை ஆசிரியர் அழகுபெயர்களால் அழைப்பது கற்கத் தக்கது!

"தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்"

(கரி=சாட்சி; பாசம்=கயிறு)

அரசின் கோல் தவறினாலும் அல்லது அறவோர் சபை வழுவினாலும் அதனால் பாதிக்கப்பட்ட மாந்தர் தம் துன்பத்தை வாயால் உரைக்காது கண்ணீரால் வெளிப்படுத்த ஒரு மன்றம்; அது பாவை மன்றம்; அய்ந்து வகை மன்றத்திலும் சிந்தனையைக் கவருவது இந்த பாவை மன்றம் என்றால் அது மிகையாகாது.

"அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழூஉம் பாவை மன்றமும்"...........

நாடெங்கும் அழுகுரலாகவே இருக்கும் என்பதால்தான் இந்நாள் இந்நாட்டில் பாவை மன்றங்கள் இல்லையோ ?

எங்கும் அழுவோர்க்கு எதற்குப் பாவைமன்றம் என்ற நிகழ்வா ?

அரசமன்றம் பாவமன்றமானபின் பாவைமன்றம்தான் எதற்கு ?

நீதிதேவதையின் நாவையும் வாங்கும் மாந்தர்முன் பாவைதான் எதற்கு ?

இந்த ஐவகை மன்றங்களிலும் இந்திரவிழாத் தொக்கத்தில் உயிர்ப்பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது!

அன்புடன்
நாக.இளங்கோவன்
22-சூன்-1999

No comments: