Pages

Sunday, July 11, 1999

சிலம்பு மடல் 13

சிலம்பு மடல் - 13 நெஞ்சில் வாழும் கானல்வரிகள்!

புகார்:
கடலாடுகாதை, கானல்வரி:

இந்திரவிழா உச்சத்திலே கயற்கண்களைத் துடிக்கவிட்டு அறிய இயலா கற்பனைகளை அம்மங்கையருக்கு அளித்துவிட்ட கவிஞர், கடலாடுகாதையிலும் அவ்விழா பொருட்டு மாந்தர் கடலாடுவதையும், நகரச் சி
றப்பையும், மாதவி வனப்பையும், கூத்துகளையும் அளவிடற்கரிய சொல்லில் விளக்குகிறார்; புகார் சிறப்புக்களைக் காலத்தினார் பின்னோர் நமக்கு சிலம்பென்ற பேழையில் செதுக்கி வைத்து சென்றிருக்கிறார்.
இந்திரவிழாவின் சிறப்பிலொன்றாம் கடலாடு கலைகளை காதையொன்றில் நிரப்பி வைத்திருக்கிறார்.

போதும் இந்த இன்பம்; போவோம் வரிகளுக்குள்!

தேனடையாம்! இந்த கவிக்கோ "படியுங்கள் பாடுங்கள்" என்று தந்த இவை, கவிஞர்களுக்கும் தமிழறிந்தோர்க்கும்!

இக்கவிதைகளின் பால் ஏற்பட்ட பொறாமையால் ஊமையாகின்றேன்!
வரிகளை வரிக்கும் வகையறியேன்!
வரித்தால் விரிக்கும்!
நான் விரித்தால் வெறிக்கும்!
ஆதலின் பருகுவோம் சிலவரிகளை அப்படியே!

பருகிடின்,
உணர்ச்சி மிக்கு உதிர்ப்பார் உண்மைக் கவிஞர்!
உதிர்த்தவராயிரம் உலகில்! இங்கே ஆரோ ?

நிலைவரி: தன்னெதிரே தனிமையில் எதிர்ப்பட்ட தலைவியைப் பார்த்து "வானில் இருக்கும் பாம்புகட்கு(இராகு, கேது) பயந்து, வெண்நிலவு பரதவர் வாழும் இந்தப் புகார் நகரத்தில் வாழ்கிறதோ? புகாரில் இறங்கிய முழுநிலவு தன்மேல் கயலொத்த கண்ணெழுதி, அதைச் சுற்றி வில்லெனப் புருவம் தீட்டி, கார்மேகக் கூந்தலையும் எழுதி விண்வாழ் பாம்புகளுக்கு மறைந்து பூமியில் வாழ்வது போல் தோன்றும் தலைமகளே" என வியந்து கூறுகிறான் அவளின் அழகில் மயங்கி!

"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர்! திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே."

முரிவரி: தலைமகன் தனக்கு வருத்தம் எதனால் உண்டானதென்று கேட்கப்பட, தன் காதலியின் இசையொத்த இனிய மொழியாலும், பூம்பொழில் தரும் நறுமணம் நிறைந்த மலர்களாலும், வார்த்தைகளால் எழுத இயலாத வனப்பு கொண்ட மின்னலொத்த அவளின் இடையாலும், வில்லையொத்த புருவத்தாலும், அழகிய
இணைந்த இளம் கொங்கைகளாலும், சுருண்ட கூந்தலாலும், வெண்பொன் பற்களாலும் தான் ஆட்கொள்ளப்பட்டு அந்த அழகின் அதிர்வுகளில் இருந்த மீள இயலாத இன்ப இடரை எடுத்துரைக்கிறான்.

"பொழில்தரு நறுமலரே, புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே, பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனைஇடர் செய்தவையே!"

"திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே, மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே!"

"வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே
தளையவிழ் நறுமலரே, தனியவள் திரியிடமே
முளைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே!"

தலைவியைக் கூடிவிட்டு நீங்க இயலாமல் நீங்கிவருகின்ற தலைவன் அவளருமை குறித்து தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்;

'செம்பவள உலக்கை கொண்டு வெண்முத்துக்களை குற்றும் இவளின் என்னைப் பார்க்கும் கண்கள், செவ்வரி ஓடிய குவளை மலரை ஒத்திருந்தாலும், பார்வையில் தெரியும் காதல், குவளை மலரின் மென்மை
போன்றதல்ல! மிகவும் கொடியது கொடியது!!

புலால் மணம் வீசும் கடலின் ஓரத்திலே, புன்னை மரங்களின் நிழலிலே, அன்னம் போல் நடை நடந்து அழகாய்ச் செல்லும் இவளின் கண்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கண்களாய்த் தெரியவில்லை. செவ்வரி ஓடிய அவை என் மேல் கொண்ட காதலால் என்னையே கொல்ல வரும் கூற்றே
அது! கூற்றே அது!.

மீன்வற்றல் திண்ண வரும் பறவைகளை, கையிலே தேன்சிந்தும் நீலமலரேந்தி கடிந்து விரட்டும் இவள் என்னைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம், இவளின் கண்கள் வெள்ளிய வேல்களாகக் கூட குற்றவில்லை!
குற்றுமந்த செவ்வரிப் பார்வை அதனினும் கொடியது! கொடியது!!

அழகு ததும்பும் அழகிய அன்னமே!, அன்ன நடையழகே நல்ல பெண்ணழகு! ஆயினும் அவளுடன் கடலோரம் நீ நடக்காதே! அவளின் நடையழகில் உன் அன்ன நடை குறுகிப்போகும்! கடல் சூழ்ந்த உலகில் அனைவரையும் தன் அழகால் கொன்று குவிக்கும் அவளின் அழகு நடைக்கு ஒப்பாய் உன்னால் நடக்க
இயலாது! இயலாது!!'

"பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல! கொடிய கொடிய!

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய! கூற்றம் கூற்றம்!

கள்வாய் நீலம் கையில் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல! வெய்ய வெய்ய!

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்!
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!"

காமம் மிக்க கழிபடர் கிளவி:காதலனைக் காணாமல் காமம் மிகுதலால் உண்டான துன்பத்தில் காதலி தான் கண்டவற்றுடன் பேசுகிறாள்;

"அன்னங்களே!, அடுப்பங்கொடிகளே! குதிரை பூட்டிய தேரில் வந்த நமை குளிர்வித்த தலைவர் என்னையும் நம்மையும் மறந்து விட்டார்; ஆயினும் நாம் அவரை மறவாதிருப்போம்!

நெய்தல் மலரே, அவரைக் கண்டு நாளானதால், கனவிலாவது காண்போம் என்றால், காமம் மிகுபட கண்கள் உறங்க மறுக்கிறதே! என் செய்வேன்?. நீயாவது நிம்மதியாய் உறங்குகிறாய்; உன் கனவிலாவது வந்து ஏதும் சொன்னாரா என் தலைவர்?

கடலே, கடலே! என் தலைவன் வந்து போன தேரின் சக்கரங்கள் சென்ற தடமெல்லாம் உன் அலைகளைக் கொண்டு அழித்துவிட்டாய்! என் ஆறுதலுக்கு அவையும் இல்லாமல் போக துடிக்கின்றேன் நான்! என் நிலை கண்டு தூற்றும் அயலாருடன் நீயும் சேர்ந்து எனைத் துன்புறுத்துகிறாயே! என் செய்வேன் நான்!.

"புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று என்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று என்செய்கோ?

நேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே!
பூந்தண் பொழிலே! புணர்ந்துஆடும் அன்னமே!
ஈர்ந்தன் துறையே! இதுதகாது என்னீரே!

நேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்!
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்று எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்!"

மயங்கு திணை நிலை வரி: தன் தலைவனின் துணையில்லாததால் மாலைப் பொழுது கண்டு தலைவி துன்புற்று, தோழியிடம் சொல்கிறாள் இரவின் இன்னலை!

"பகல் செய்யும் கதிரவன் மறைகிறானே, கருமையான இருள் சூழ்கிறதே! காவி மலரொத்த என் கண்கள் காமநோயால் கண்ணீர் சொரிகின்றனவே! என் காமத்தைத் தீர்க்கும் என் தலைவன் எப்போது வருவான்?
அவனுக்கு மட்டும் இந்த துன்பம் இருக்காதா? என் துன்பத்தை உணரமாட்டானா? என் இடத்தில் மறையும் கதிரவனும், சூழும் இருளும் அவனிருக்கும் இடத்திலும் இருக்காதா? அவனுக்கும் காமநோயைக் கொடுத்து
அவனை என்னிடம் வரச் செய்யாதா?"

"இளைஇருள் பரந்ததுவே! எல்செய்வான் மறைந்தனனே!
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே!
தளைஅவிழ் மலர்க்குழலாய்! தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை ?

கதிரவன் மறைந்தனனே! காரிருள் பரந்ததுவே!
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே!
புதுமதி புரைமுகத்தாய்! போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை ?

பறவைபாட்டுஅடங்கினவே! பகல்செய்வான் மறைந்தனனே!
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே!
துறுமலர் அவிழ்குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்த இம் மருள்மாலை ?


நண்பர்களே! நண்பர்களே!

இவ்வரிப்பாடல்களை ஒருமுறை படித்ததும், மீண்டும் படியுங்கள்! சத்தமிட்டுச் சொல்லிப் படியுங்கள்! கொட்டிக் கிடக்கும் கவிதை இன்பத்துக்காக மட்டுமே இவைகளை எடுத்து எழுதியிருக்கிறேன்!

ஒருமுறைக்கு சிலமுறைகள் படிப்பின் காதல் அலைகளால்,

கொதித்தார் காதலர்! கொதித்திலார் தீதுளர்!!
கொதித்தவர் பதிப்பர் கொஞ்சும் கவிதைகளை!
கொஞ்சல் அஞ்சுவர் நெஞ்சில் வஞ்சமுளர்!

கவிதையின்பத்தை, தலைவன் தலைவி காதலின்பத்தை இம்மடலில் முதலில் வைத்தது, கதையின்பம் சற்றுமாறி, துன்பத்திற்குத் தூது போவதால்!

கண்ணகியிடம் இருந்து கோவலன் கழன்று வந்ததொரு திருப்பமென்றால், மாதவியை மறப்பதுவும் திருப்பமாகிறது. காவிரிக்கரையில் கானல்வரியில் ஏற்படும் திருப்பமே பின்னால் கங்கைக்கரை தாண்டி இமயம் வரைச் செல்கிறது.

தூய்மையும் அமைதியும் நிறைந்த வேளையில் தோழி கொண்டுவந்து தந்த யாழைத் தொழுது அதை கோவலனிடம் கொடுக்கிறாள் மாதவி! மாதவி மனம் மகிழும் நோக்கோடு ஆற்றுவரி, கானல்வரிப்பாடல்களை
யாழிசைத்துப் பாடுகின்றான் கோவலன்.

"கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்."

மக்களைப் போற்றும் மன்னனைப் போற்றுவதே மண்ணைப் போற்றுதலாம்! நதியைப் பெண்ணாக்கி அப்பெண்ணை இறைவனோடு சேர்த்து வணங்குதலைக் கண்டிருக்கிறோம்; இங்கு கோவலக் கவிஞன் காவேரி, கங்கை, கன்னி (கன்னி=கடலால் கொள்ளப்பட்ட குமரியாறு) ஆறுகளைப் பெண்களாக்கி அவற்றை சோழமன்னனின் காதலிக- ளாக்குகிறான்.

காவேரி வாழ் சோழன் எல்லைகள் பல கடந்து வடக்கே கங்கையையும் எல்லையாக்கி, ஆட்சி செய்கிறான் என்ற கருத்தில், காவேரியே உன் கணவன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ வெறுத்து அவனை கைவிடாத பெருங்கற்புடைய மாதரசி என்கிறான்!

தெற்கே குமரியாற்றை எல்லையாக்கி சோழன் ஆட்சி செய்தாலும், காவேரியே நீமட்டும் அவனை மறுப்பதில்லை; அதற்கும் மாதரின் கற்பு நிலையே காரணமென்கிறான்!

"திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்!
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி!

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி!

உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி!
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி!"

கண்ணகியை மறந்து தன்னிடம் ஓடி வந்த கோவலன், மாதரார் கற்பு நெறிப் பேசுதலைக் கேட்டு ஐயுற்ற மாதவி, தனக்கும் கற்பை மட்டும் சொத்தாக்கி விட்டு வேறொரு மலருக்கும் தாவுகின்றானோ என்று சந்தேகிக்கிறாள்! அல்லது சிந்தித்தாளோ ?

ஆறுகளும் அவன் பாடல்களும் அந்த பாடல்வளங்களும் அவள் மனத்தை மகிழ்விக்கவில்லை!

கண்ணகி வாழ்வை மாதவி இடற, கங்கையும், கன்னியும், பொன்னியும் மாதவியின் மனத்தை இடறுகின்றனர்!

இடறும் மனத்துடன் இருந்தாளில்லை!

கற்பென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று இந்நூற்றாண்டில் பாரதி சொன்னது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிந்தித்த மாதவியைப் படித்ததினாலோ ?

எத்தனை மலர்கள் தாவுவான் இவன்? கற்பு பேசுபவன் பெண்ணுக்கு மட்டும் அதை விற்கிறானே? சிந்திக்கிறாள்! மனங்கொள்ளாமல் சினங்கொள்கிறாள் ?

பாரதிக்கும் முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கற்பைப் பொதுவென்று சிந்தித்த புரட்சிக்காரி மாதவி என்பேன் நான்!

அவள் கொண்டது சந்தேகம் என்கிறார் மாந்தர்; ஆசிரியரோ ஊழ்வினையில் உருத்ததென்று நழுவிப் போகிறார்; ஒப்பவில்லை நான்!

பெண்ணின் சிந்தனையைப் பொடியதென்று ஒதுக்கி விட்டுப் பாடியிருக்கிறார் கவிஞர்! ஒப்புக் கொண்டனர் அறிஞர், புலவர்! ஒப்ப மாட்டேன் நான்!

சினத்தை சிந்தையில் மட்டும் கொண்டு, செயலாக யாழைக் கோவலனிடம் இருந்து வாங்கி, தானும் ஒரு குறிப்பு கொண்டு, அதாவது தான் வேற்றொரு ஆடவனை மனதில் கொண்டு பாடுவதாக கோவலன் நினைக்க வேண்டும் என்ற வகையில் யாழ்மீட்டிப் பாடுகிறாள்! அதே காவேரியை நோக்கி!

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர்மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி!
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி!"

காவேரியே!, அழகான, இன்பமான இருகரைகளுட்பட்டு, நீ அழகாக நடந்து செல்வதெல்லாம், உன் தலைவனான சோழ மன்னனின் திருந்திய செங்கோல் வளையாதிருப்பதால்தான்! அங்கனம் நீ செல்வது அவன் ஆற்றலினால்தான்! நீ அவன் தலைவியாகி, நாட்டு மக்களுக்குத் தாய் ஆகி வளம் செய்வதெல்லாம்
அம் மன்னவனின் நடுவு நிலைமை பிறழாத தன்மையே!

என்று, மாதவி காவேரியின் சிறப்புக்கெல்லாம் காரணம் அவளைக் கட்டியவனின் சிறப்பும், ஆற்றலும், நேர்மையும் என்று பொருள் படப் பாட, கோவலன் கொதித்துப் போகின்றான்!

நான் நல்லவன் அல்லேன் என்கிறாளே!
என் ஆற்றலைக் குறை காண்கிறாளே!

ஆடும் பரத்தையர் குலத்தில் பிறந்த பாவை,
பாடும் பாடல்களில் நஞ்சம் வைக்கிறாளே!

என் பொருள் உண்டவள், பிறன் திறன் வியக்கிறாளே!
பிறன் பொருள், திறன் வேண்டி என்னை நீங்கிட நினைக்கிறாளோ ?

அய்யம் கொண்டான்! ஆண்மை என்றதன் அர்த்தம் தெரியாதவன் பெண்மை மேல் வெம்மை கொண்டான்!

சந்தேக அரவம் கழுத்தைச் சுற்ற, மாதவியின் கரங்களாக அதை நினைக்கிறான்!

பெண்ணாகப் பிறந்தவளின் சந்தேகம் பாட்டோ டு நின்று விட ஆணாகப் பிறந்தவனின் சந்தேகம் அவளுடன் அறுத்துக் கொள்கிறது!

கோவலன் மட்டுமா இப்படி ?

இதைத்தானே இராமனும் செய்தான் !

அந்நாளில் மட்டும்தானா ஆணின் சந்தேகம் அளவுகடந்தது ?

அந்நாளில் மட்டும்தானா ஆணுக்கு சந்தேகம் அனுமதிக்கப் பட்டது?

இந்நாளிலும்தான்!
"கள்ளோ காவியமோ" என்ற ஒப்பற்ற காவியம் அல்லது கதையிலே பேரறிஞரும் சான்றோருமான மு.வரதராசனாரும், அருளப்பர் என்ற தன் ஆண் நாயகனுக்கு மட்டும், மங்கை என்ற மனைவியை அவர் பிரிந்து சேர்கையில் சந்தேகத்தை அனுமதித்திருக்கிறார்!

இவள் நம்மைப் பிரிந்திருந்தபொழுது வேறொருவரை நினைத்திருப்பாளா என்று எண்ண வைத்து அதை மங்கையைக் குறிப்பால் அறிய வைத்து பதில் சொல்ல வைத்த, ஆணாதிக்க அசம்பாவிதத்தை மு.வரதராசனாரும் செய்திருக்கிறார்!

மங்கைக்கு அந்த அனுமதியை அவர் அளிக்காதது, அல்லது அருளப்பருக்கு மட்டும் அனுமதியை அளித்தது அவரும் ஆணணியே என்று அறிவித்துப் போயிருக்கிறார் அந்த மாபெரும் தமிழறிஞர்!

பிரிகிறான் மாதவியை! மருள்கிறாள் மாதவி! மாறுவான் என்று காத்திருக்கிறாள்!

கோவலன் உள்மனதில் வேறொரு பெண்ணை எண்ணிப் பாடியதாகத் தெரியவில்லை! அப்படியென்றால் அவள் பாடின பதிலில் தவறில்லை!

அவள் பாடினது தவறென்றால், இருவரின் நட்பும் ஆங்கு இருள்நட்பன்றோ ?

அவளும் குற்றம் பார்த்தாள்! அவனும்தான்!

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீராத இடும்பை தரும்"

சொல்லிப்போனாரே குறளப்பர்! தெரிந்திலார் இருவருமே!

இன்னும் அவன் படப்போகும் இடும்பைகளுக்காகத்தான்

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்"

என்ற குறளைக் கூட்டி வைத்தாரோ குறளப்பர்!?

நாட்டோ ர் நலம் வாழ நடந்த காவேரி, கோவலன், மாதவி இருவராலும் போற்றப்பட்ட காவேரி, இருவராலும் சோழனுடன் இணைக்கப் பட்ட கா
வேரி இருவரையும் பிரித்து வைத்தது சோகம் தானே!

கண்ணகியுடன் காவேரி கைகோர்த்துக் கொண்டதா?

எல்லோருக்கும் தண்ணீரைக் கொடுத்து விட்டு, மாதவிக்கு மட்டும் மண்ணைப் போட்டு விட்டதா காவேரி!

அறம் பிழைக்க இவரைப் பிரித்தாளா காவேரி ?

ஒட்டு மொத்த சமுதாயமும் பரத்தையர் நட்பு 'அறம் பிறழ்தல்' என்று ஆக்காமல் இருந்த போழ்து காவேரிக்கு மட்டும் அறம் பற்றி யாது தெரியும் ?

அல்லது, மனித அறம் வற்றிப்போனதால், ஆறு அறம் வளர்த்ததா ?

எந்த சிந்தனையும் இன்றி
ஒய்யார நடைபோட்டு காவேரி மட்டும்
கரைகளிடையே தான் போக,
கறைகள் படிந்த மனங் கொண்டு கோவலனும் மாதவியும்
கரைகள் மாறுகின்றனர்!

மனித வாழ்க்கையில் பழிச்சொல் இன்றி வாழ்ந்தவர் யார் ?
தொழிலின்றி வாழ்ந்தவர் யார் ?
வாழ்நாளில் துன்பமிடைத் துவளாதார் யார்?
வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார் ?

நாலடிகளில் கேட்கிறார் நாலடியார்!

"யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் ? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்?-யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார் ? யாஅர்
கடைபோக செல்வம்உய்த் தார்?"

கோவலனுக்கும் மாதவிக்கும் இது பொருந்துமன்றோ?


அன்புடன்
நாக.இளங்கோவன்
11-சூலை-1999

No comments: